Friday, May 27, 2011

உத்தவனும், ஷ்வேதகேதுவும் போட்டியிடுகின்றனர், கண்ணன் தொடர்

தன்னைத் தானே மிகச் சிரமப் பட்டுக் கட்டுப்படுத்திக்கொண்டான் உத்தவன். என்றாலும் அவன் மனதின் வேதனையானது கண்களின் வழியே எந்நேரமும் கொட்டத் தயாராக இருந்தது. ஷ்வேதகேதுவோ, “உத்தவா, எனக்கு நன்றாய்த் தெரியும். என் பொருட்டு நீயும், ஷாயிபாவும் உங்கள் மனதைக் கட்டுப் படுத்திக்கொள்கிறீர்கள். இருவருமே அதில் சாமர்த்தியசாலியாகிவிட்டீர்கள். ஆனால் மன்மதனின் பாணங்களுக்கு முன் யார்தான் என்ன செய்ய இயலும்? நான் உனக்காக ஷாயிபாவை விட்டுக்கொடுக்கிறேன். பூரண மனதோடு முழு மனமொப்பி அவளை உன்னிடம் ஒப்படைக்கச் சித்தமாயிருக்கிறேன்.” ஷ்வேதகேது வெளிக்கு இதைச் சொல்லும்போது கம்பீரமாய்த் தோன்றினாலும் உள்ளுக்குள்ளாக சுக்குநூறாக உடைந்து போயிருந்தான். எங்கே அந்த உடைந்த பாகங்கள் வெளியே சிதறி விடுமோ எனக் கஷ்டப் பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டிருந்தான். உத்தவனுக்கு ஆச்சரியம் எல்லை கடந்தது.

விழி பிதுங்குவது போல் ஷ்வேதகேதுவைப் பார்த்தான். அவன் இதயமே படபடவென அடித்துக்கொண்ட வேகத்தில் உத்தவன் தன் காதுகளே அந்தச் சப்தத்தால் செவிடாகிவிடுமோ என நினைத்தான். அத்தனை வேகமாய் அடித்துக்கொண்டது அவன் இதயம். ஆஹா, ஆஹா, இது உண்மையா? ஷாயிபா எனக்கே எனக்கா? கடைசியில் என் நண்பனும் குருவுமான ஷ்வேதகேது மாபெரும் தியாகம் ஒன்றைச் செய்து ஷாயிபாவை என்னிடம் ஒப்படைக்கிறானா? இது நன்மைக்கா? தீமைக்கா?? புரியவே இல்லையே? நன்மை, தீமை ஒருபக்கம் இருக்கட்டும். இது நியாயமான ஒன்றா?? ஷாயிபாவை அவ்வளவு தீவிரமாய்க் காதலித்த ஷ்வேதகேது, அவளுக்கும், அவனுக்கும் நிச்சயமே முடிந்த பின்னர் அவளை நான் என் சொந்தமாக்கிக் கொள்வது நான் பிறந்த இந்த ஆரிய குலத்திற்கு உரியதொரு தர்மம் ஆகுமா?

அவன் மனதைப் படித்தவன் போல ஷ்வேதகேது பேசினான்:”அவ்வளவு மனதொடிந்து போகாதே. ஒன்றும் நடக்கவில்லை. நான் ஷாயிபாவை மனமார விரும்பியதும், திருமணம் செய்து கொள்ள நினைத்ததும் உண்மைதான். ஆகவே இதன் மூலம் எனக்கு ஏமாற்றம் கிடைக்குமே என யோசிக்கிறாய் போலும். ஆனால் என்னை விட நீ அவளுக்கு ஒரு சிறந்த கணவனாக அமைவாய். தேவபாகனின் மகனான உன்னை மணப்பதன் மூலம் ஷாயிபா என்றென்றும் ஒரு இளவரசியாகவே இருந்து வருவாள். அவள் தகுதியில் சற்றும் மாற்றம் இருக்காது. அதோடு அவளின் உயர்நிலைக்கு என்னைப் போன்றதொரு ஏழை பிராமணகுருவை, பிற மன்னர்களையும், அரசர்களையும் அண்டிப் பிழைப்பவனை ஏற்றால் நிச்சயமாய் அவள் துன்புறுவாள். அவள் ஆசைகள், கோரிக்கைகள் எதையும் என்னால் நிறைவேற்ற இயலாது. “

“உன்னைப் பற்றியே நீ நினைக்கவில்லையா ஷ்வேதகேது?? உன் ஆசைகள், உன் குறிக்கோள்கள், இவை என்ன ஆகும்?? நீ எப்பாடுபட்டேனும் உயர்நிலைக்கு வர எண்ணியது ஷாயிபாவுக்காகத் தானே? அவற்றுக்கு என்ன நேரிடும்? உன்னுடைய வாழ்க்கையை நீ தியாகம் செய்து எனக்கு ஷாயிபாவை அளிக்கிறாயா?” உத்தவன் வருந்தினான்.

“என் பக்கத்தை நினையாதே. என் பக்கம் என்ன நியாயம் இருந்தாலும் அதை மற. எனக்கு ஷாயிபாவின் மேல் எவ்வளவு அன்பும், பாசமும் இருக்கிறதோ அத்தனை அன்பும், பாசமும் உன்னிடமும் உள்ளது. ஆகவே என் அன்புக்குரியவர்களுக்கு நான் செய்யும் ஒரே உதவி இதுதான். உங்கள் இருவரின் சந்தோஷத்துக்காக எதுவும் செய்யத் தயாராகிவிட்டேன்.” ஷ்வேதகேது கூறினான்.

“ஷ்வேதகேது, ஒரு உண்மையை இப்போது நான் சொல்லட்டுமா? சற்றே பொறுமையுடன் கேளும். உம் வாழ்நாளில் மிகவும் விரும்பிய ஒன்றை எனக்காக விட்டுத்தர நீர் நினைக்கிறீர். அதையே உமக்காக நான் எப்போதோ விட்டுக் கொடுத்துவிட்டேனே! என்னை நீர் எடுத்துக்கொள்ள விரும்பும் ஒன்றை நான் எப்போதோ உமக்காக என விட்டு விட்டிருக்கிறேன் என்பதை நீர் அறிய மாட்டீரா? உம்முடைய நெஞ்சம் வடிக்கும் ரத்தக்கண்ணீரால் உம் முகமும், மார்பும், தோள்களும், கை,கால்களும் எப்படித் துடிக்கின்றன பாரும். உம்மால் உம் நெஞ்சு வடிக்கும் ரத்தக்கண்ணீரை மறைக்கக் கூட இயலவில்லையே! என்ன பரிதாபம்!”

“ஐயா, ஒரு காலத்தில் என் நெஞ்சும் ரத்தக்கண்ணீர் வடித்தது. ரத்தமே கொட்டியது. உண்மைதான். ஆனால் அந்தக் காயம் மெல்ல மெல்ல ஆறி வருகிறது. இப்போது மேலே காய்ந்து பொறுக்குத் தட்ட ஆரம்பித்துள்ளது. உம்முடைய துன்பத்தில் என் எதிர்காலத்தை நான் ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. அதில் எனக்கு எந்த சந்தோஷமும் கிட்டாது. இம்மாதிரியான எண்ணங்களை விட்டொழிக்கவேண்டும், மறக்கவேண்டும் என என்றோ நான் முடிவு செய்துவிட்டேன். எனக்கும், என் அருமை சகோதரனும், நண்பனும் ஆன கிருஷ்ணனுக்கு இவை உகந்தவை அல்ல. இதை கிருஷ்ணன் என்னிடம் பேசியபோதே நான் புரிந்து கொண்டு விட்டேன். அவன் என்னிடம் என்ன கூறினான் தெரியுமா?”

“பூகம்பமே நேர்ந்தாலும், ஆழிப்பேரலையே ஏற்பட்டாலும் கலங்காமல் திடகாத்திரமாய் இருப்பவனே மனிதருக்குள் உயர்ந்த மனிதன் ஆவான். அவனை உலகம் போற்றுவதோடு அன்றி, எந்தவிதமான குறைகளும் இன்றி இருப்பதால் அவன் பலமும் வலிவும் பெற்றுத் திகழ்வான்.”

“ஓ, நாம் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களே அல்ல உத்தவா. ஆனால் நீ ஒரு க்ஷத்திரியன். கண்ணனின் அருமை நண்பன். இணைபிரியாத் தோழன். உன் மனதை நான் நொறுக்கி அதில் இன்பம் காண மாட்டேன். நானோ ஒரு பிராமணன். என் தர்மமோ என்னை அதிகம் ஆசைப்படாதே என்றே கூறுகிறது. ஆகவே இவ்வுலகத்தின் இந்த ஆசைகளாகிய மாயைகளின் பிடியிலிருந்து நான் என்னைக் கட்டறுத்துக்கொண்டாலே நான் நினைத்த பிராமணத்துவத்தை அடைய முடியும்.”

அருகிலிருந்து ஓர் புதரில் ஏதோ சலசலப்புக் கேட்க இருவரும் திரும்பினார்கள். அங்கே இருந்து வெளியே வந்தாள் திரிவக்கரை.

Tuesday, May 24, 2011

ஷ்வேதகேதுவும், உத்தவனும்! கண்ணன் வருவான், 2ஆம் பாகம்

உத்தவனைப் போன்றவன் கிடைப்பது அரிது. அவன் பேச்சிலும், செயலிலும் மாறுபாடே காண இயலாது. அவனைப் போன்ற தெளிவான சிந்தனை உள்ளவர்கள் அரிதாகவே காணமுடியும். மேலும் தன் நண்பனுக்காகவும், குருவான எனக்காகவும், தன் காதலைத் தியாகம் செய்யக் கூடத் தயாராக இருந்தான். தியாகமும் செய்துவிட்டு அதைக் குறித்து நினையாமல் இருக்கிறான். இல்லை…… இல்லை…… அது தவறு. உத்தவன் ஷாயிபாவைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் செய்து கொள்ளட்டும். அதன் மூலம் ஷாயிபாவிற்கும் மனம் மகிழ்வு அடையுமெனில் நல்லது தானே! உத்தவன் யார்?? என் இளைய சகோதரனைப் போன்றவன். மேலும் என்னைப் போலவே அவனும் கண்ணனிடம் மாறாத அன்பும், பாசமும் காட்டி வருகிறான். என்னை விடக் கூடுதலாகவே காட்டுகிறான். என் வாழ்க்கையில் எத்தனை தினங்களை நான் இழந்துவிட்டேன்! ஒரு ஆசாரியனாக, நல்லதொரு குருகுலத்தை நிர்மாணம் செய்யவேண்டும் என்றிருந்த என் குறிக்கோளை இந்த ஷாயிபா என்ற ஒரு பெண்ணை அடைய நினைத்ததன் மூலம் சர்வ நாசம் செய்துவிட்டேனே! என் இழந்த வாழ்நாட்களை, இழந்த கெளரவத்தை நான் எவ்வகையில் மீட்க இயலும்?? கடைசியாக நான் செய்தது ஒன்றே ஒன்றுதான். ஸ்ரீகாலவ வாசுதேவனைக் கண்ணன் அழிக்க அவனுக்கு உதவி செய்துவிட்டு ஒதுங்கி இருந்தது ஒன்றே நான் செய்த ஒரே நல்ல காரியம். என்றாலும் ஒரு ஆசை இருந்தது. ஜராசந்தனைக் கண்ணன் அழிக்கத் துணை செய்ய வேண்டும், அதுவும் ஷாயிபாவின் உதவியோடு கண்ணனுக்கு உதவவேண்டும் என நினைத்தேன். அனைத்தும் மண்ணோடு மண்ணாகிவிட்டது. அதனால் என்ன??

நான் ஒரு பிராமணன். எனக்குத் தெரியாத அஸ்திர, சஸ்திர வித்தைகளே இல்லை. வேத, வேதாந்தங்களிலும் எனக்கு நல்ல புலமையும், ஞானமும் இருக்கிறதே. இந்த வறண்ட வாழ்க்கையை இனியாவது மீட்டெடுக்கலாம். என்னுடைய பிராமணத்துவத்தை நான் மீட்டெடுத்தால் தான் தலை நிமிர்ந்து நானும் ஒரு ஆசாரியன் என்று சொல்லிக் கொள்ள முடியும். ம்ம்ம்ம்ம் எவ்வளவு நாட்கள் ஜபங்கள்? தவங்கள் செய்தேன்! அத்தனையையும், அதன் பலாபலன்களையும் ஸ்ரீகாலவனை நான் ஆதரித்ததன் மூலம் இழந்துவிட்டேனே. சேச்சே! நான் ஒரு பிராமணனாகவும் இல்லை; ஒரு க்ஷத்ரியனாகவும் இல்லை; ஷாயிபாவின் கடைக்கண் பார்வைக்காகவும், அவளின் ஒரே ஒரு புன்னகைக்காகவும் அனைத்தையும் தொலைத்து விட்டேன். ஆஹா, இன்னமும் எதுவும் கெட்டுப் போகவில்லை. இனியாவது நான் விழித்துக்கொள்ளவேண்டும். ஒரு பிராமணனான நான் என் தர்மம் என்னவோ அதைக் காக்க வேண்டிய அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும். கண்ணனோடு சேர்ந்து ஜராசந்தன் அழிய அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். எனக்கும், கண்ணனுக்கும் குருவான சாந்தீபனியின் முதன்மை சீடனான ஷ்வேதகேது பெண்ணாசையால் தன் தர்மத்தை விட்டு விலகினான் என்ற அவப் பெயரை என் குருவுக்குத் தேடித் தரமாட்டேன். எனக்குரிய தர்மத்தைத் தவிர வேறெதையும் இனி நான் சிந்தித்துக்கூடப் பார்க்க மாட்டேன்.

முதலில் உத்தவனின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு தெரிந்து கொண்டு அதற்கேற்பச் செயலாற்றவேண்டும். உத்தவனை அழைத்துக்கொண்டு ஷ்வேதகேது யமுனைக்கரையின் ஒரு பக்கம் இருந்த காட்டின் ஒரு மூலைக்கு வந்தான். உத்தவனுக்கு எதுவும் புரியவில்லை. ஷ்வேதகேது உத்தவனைப் பார்த்து, “உத்தவா, உன்னால் எனக்கு ஓர் உதவி தேவையாக இருக்கிறது.” என்றான்.

“உதவி! ஷ்வேதகேது அவர்களே! நீரும் எனக்கு ஒரு குருவே ஆவீர் அன்றோ! கட்டளை இடுங்கள்; காத்திருக்கிறேன். எப்போதும் உம்முடைய சேவையில் நான் தன்யனாகிறேன்.” என்றான். அவனுக்கு ஷ்வேதகேதுவின் இந்த நடவடிக்கைகள் கொஞ்சம் ஆச்சரியமாய் இருந்தது. “உத்தவா, நீ பழையபடி மாற வேண்டும்; கரவீரபுரத்திற்கு வரும் முன்னர் எவ்வாறு துடிப்புடனும், சுறுசுறுப்புடனும், வாழ்க்கையின் அதீத பற்றோடும் இருந்தாயோ அவ்வாறு இருத்தல் வேண்டும்.” ஷ்வேதகேது இறைஞ்சினான்.

“ஓஓ, எனக்கு என்ன ஆகிவிட்டது? நண்பரே! உம்முடைய வேண்டுகோள் ஆச்சரியமளிக்கிறதே!” உத்தவன் தன் பற்களைக் கடித்துக்கொண்டான். என்ன முயன்றாலும் அவனுடைய உணர்வுகளைச் சாமர்த்தியமாக மறைக்க முடியவில்லை அவனுக்கு.

“உத்தவா!” ஷ்வேதகேதுவின் குரல் மென்மையாக ஒலித்தது. “இதோ, பார், நமக்குள் எந்தவிதமான ஒளிவு, மறைவும் வேண்டாம். கொஞ்ச காலமாக நீ கொஞ்சம் வித்தியாசமாக நடந்து கொள்கிறாய். அதற்குக் காரணம்…….காரணம்…..”ஷ்வேதகேது தயக்கத்துடன் கூறினான். “ஷாயிபா!”

“ஷாயிபா” எதிரொலித்தான் உத்தவன். அவன் குரலில் ஆச்சரியம் மிகுந்திருந்தது.
“ஓ, எனக்கு ஒன்றுமே தெரியாதென நினைத்தாயா உத்தவா?? நீ ஷாயிபாவை மணக்க விரும்பினாய் அல்லவா?? ஷாயிபாவும் விரும்பி இருப்பாள்; எனக்கு நன்றாய்த் தெரியும். உன் போன்ற ஓர் இளைஞனை எந்த இளம்பெண் மறுப்பாள்? ஆனால் நீ ஓர் ஆரியனாக இருப்பதால் உன் குலதர்மத்திலிருந்து பிறழாமல் இருக்கும்பொருட்டு, இன்னொருவருக்கு நிச்சயிக்கப் பட்ட பெண்ணை மணக்க வேண்டாம் என விலகிவிட்டாய் அல்லவா? ஷாயிபாவுக்கும் அதே தான் காரணம்! ஏற்கெனவே எனக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் அல்லவா? அதனால் அவளும் வெளிப்படையாக ஒன்றும் சொல்லவில்லை என நினைக்கிறேன்.”

“ஆனால் யார் சொன்னது இதை எல்லாம் உங்களுக்கு?? இம்மாதிரியான எண்ணங்களைக் குறித்து எவர் உம்மிடம் பேசினார்கள்?” இந்த விஷயமாக உத்தவனின் நெஞ்சில் ஏற்கெனவே இருந்த மாபெரும் காயம் ஆறாமல் மேலே பொருக்குத் தட்டி இருந்தது. இப்போது ஷ்வேதகேதுவின் இந்தப் பேச்சுக்களால் அந்தக் காயம் குத்திக்கிளறிவிடப் பட்டு அதிலிருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது.

Tuesday, May 17, 2011

ஷ்வேதகேதுவும் யோசிக்கிறான். கண்ணன் வருவான், 2-ம் பாகம்!

திரிவக்கரை தன் சாமர்த்தியமான பேச்சின் மூலம் ஷாயிபாவைப் பற்றிய முக்கியச் செய்திகளையும் கேட்டறிந்ததோடு உத்தவனிடம் அவள் அழகைப்புகழ்ந்தும் பேசினாள். ஆனால் உத்தவனிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. இருவரையும் சந்திக்க வைக்க முயன்றாள். ஆனால் உத்தவனோ ஷாயிபாவுடனான சந்திப்பையே அறவே தவிர்த்தான். அவள் பக்கமே திரும்பவில்லை. திரிவக்கரை தவித்தாள். இந்த ஷாயிபாவின் அழகில் கண்ணன் எங்கேயானும் மயங்கிவிட்டானெனில்?? என்ன செய்வது? எப்படியானும் உத்தவனை ஷாயிபாவுக்குத் திருமணம் செய்து வைத்துவிடவேண்டும். அதற்காக உத்தவனைத் தயார் செய்யவேண்டும். திரிவக்கரை முடிவு செய்துவிட்டாள். கண்ணனை இந்த ஷாயிபாவின் பிடியில் இருந்து முழுமையாகக் காக்கவேண்டுமெனில் வேறு வழியே இல்லை. அரண்மனையிலும் உத்தவனின் திருமணம் குறித்த பேச்சுக்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. இந்த உத்தவன் அங்கங்கே ஊர் சுற்றிக்கொண்டிருப்பதால் யாராலும் உடனடியாக உத்தவன் திருமணம் குறித்து எந்த முடிவையும் செய்ய முடியவில்லை.

திரிவக்கரை தன் அதிசாமர்த்தியமான பேச்சுக்களினால் உத்தவன் குறித்து ஷாயிபா என்ன நினைக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டாள். ஷாயிபாவுக்கு உத்தவன் மேல் எந்தக் கோபமும் இல்லை. அவன் திறமைசாலி, வீரன், கருணை நிறைந்தவன். அவன் மட்டும் எனக்கு வழித்துணையாக வரவில்லை எனில் நான் வழியிலேயே இறந்திருப்பேன். என்னை அவ்வளவு கவனமாகப் பார்த்துக்கொண்டான்.” இதெல்லாம் ஷாயிபா உத்தவன் குறித்துச் சொன்ன கருத்துக்கள். இதிலிருந்து உத்தவனிடம் ஷாயிபாவுக்குக் கோபம் எதுவும் இல்லை என்பது திரிவக்கரைக்குத் திருப்தியை அளித்தது.

அதோடு குக்குட்மின்னை விட்டு உத்தவன் திரும்ப மதுரா வந்ததும் ஷாயிபாவுக்குப் பிடிக்கவில்லை. இங்கே வந்ததும் உத்தவனுக்குக் கண்ணனின் ஆட்டுவித்தலுக்கு ஏற்ப ஆடத் தான் சரியாய் இருக்கும், என்றும், என்னைத் திரும்பிக் கூடப்பார்க்க மாட்டான் என்றும் திரிவக்கரையிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். திரிவக்கரையைப் பொறுத்தவரையில் இது போதும் எனத் தோன்றினாலும் உத்தவன் தரப்பில் இருந்து எந்தவிதமான ஆமோதிப்பையும் காணமுடியவில்லை. அதோடு உத்தவனுக்கு அடுத்தடுத்து வேலைகள் இருந்து கொண்டே இருந்தன. வேலைகளைச் சாக்கிட்டுக் கொண்டு அவன் ஒரு நாளில்பாதி நேரம் வீட்டை விட்டோ, நகரத்தை விட்டோ வெளியே இருந்து கொண்டிருந்தான். எல்லாம் நம் கைகளைமீறிவிடுமோ எனத் திரிவக்கரை நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கையில் ஷ்வேதகேது அங்கே வந்தான். வந்தவன் ருக்மிணியிடம் இருந்து திரிவக்கரைக்கும் செய்தி கொண்டு வந்தான். மேலும் ஷ்வேதகேதுவுக்கு ஷாயிபாவை மணக்கும் ஆசையும் இருந்ததைப் புரிந்து கொண்டாள். வெகு விரைவில் ஷ்வேதகேது எப்படி ஷாயிபாவின் வலையில் வீழ்ந்தான் என்பதையும் புரிந்து கொண்டுவிட்டாள்.

உத்தவனிடம் ஒரு நாள் பேச்சுவாக்கில் ஷ்வேதகேது ஷாயிபாவை மணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் இருப்பதைக் குறித்துக் கேட்டாள். தனக்கு இது குறித்து எந்த விதமான ஆவலும் இல்லை என்பதைப்போல் உத்தவன் காட்டிக்கொண்டாலும், அவன் மனதில் இது போய்த் தாக்கியது என்பதை திரிவக்கரை உணர்ந்து கொண்டாள். உத்தவன் மனதில் மறைத்து வைத்திருக்கும் ஆசையை ஷ்வேதகேது புரிந்து கொண்டிருக்கிறானா என்பதை வெகு சாமர்த்தியமாக திரிவக்கரை சோதித்துப் பார்த்தாள். ஷ்வேதகேதுவுக்கு உத்தவன் துரோகம் செய்ய விரும்பவில்லை என்பதையும் புரிந்து கொண்டாள். ஆனால் ஷ்வேதகேதுவுக்கு உத்தவனின் ஆசை குறித்து அறிய நேர்ந்த போது அவனுக்குப்பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஷாயிபாவை அவன் ஒரே மனதாகக் காதலித்து வந்தான். அவளை ஒரு மனிதப் பெண்ணாக அல்லாமல், தன் இஷ்ட தெய்வத்தைப் போல் வழிபட்டு வந்தான். அவளை மணந்து கொண்டு அவள் உதவியுடன் ருக்மிணி கண்ணனை மணக்க உதவி செய்ய வேண்டும் என்று கனவுகள் கண்டும் வந்தான். அவனுக்கு உத்தவனின் இந்த ஆசை குறித்து அறிய நேர்ந்தபோது அது ஓர் பேரிடியாக இருந்தது. மெல்ல, மெல்ல உத்தவன் மேல் அவனுக்குப் பொறாமையும் ஏற்பட்டது. இருந்திருந்து இத்தனை நாட்களுக்கும் மேல் காத்திருந்தது ஷாயிபாவை உத்தவனிடம் ஒப்படைப்பதற்கா?

இது ஓர் பேரிடியாக இருந்தாலும் இதன் நன்மை, தீமைகள் குறித்து அலசி ஆராயும் அளவுக்கு ஷ்வேதகேதுவிற்கு தாராள மனம் இருந்தது. ஷாயிபாவின் அழகும், அறிவும், வீரமும் யாரை வேண்டுமானாலும் அவள் பக்கம் ஈர்க்கும். மன்மதனின் பாணங்களைச் சாதாரண மனிதரால் தடுக்க இயலுமா?? ஆணோ, பெண்ணோ ஓர் காலத்தில் காதல் வயப்பட்டே ஆகவேண்டி உள்ளதே. இதற்கு உத்தவன் விதிவிலக்கா என்ன?? ஹூம், அதுவும் ஷாயிபாவை நான் ஏமாற்றி விட்டேனே. கரவீரபுரத்தில் அவள் என் மேல் வைத்திருந்த நம்பிக்கையைத் தூள்தூளாக்கிவிட்டேனே. ஆனால் உத்தவன் அப்படி அல்லவே. அவன் தன்னம்பிக்கை மிகுந்தவன், நிதானம் உள்ளவன், விவேகி, அறிவாளி, நல்ல வீரன். அப்படி ஷாயிபாவிற்கு உத்தவனைத் திருமணம் செய்து கொள்ள ஆசைஇருந்தால் அதைத் தடுக்க நான் யார்?? ஹா, மன்மதனின் கிரணங்களால் உத்தவன் மட்டும் தாக்கப் படக் கூடாதா என்ன?? ஒரு வேளை…. ஒரு வேளை…… அதுவே எல்லாம் வல்ல அந்த மஹாதேவனின் விருப்பமாகவும் இருக்கலாம். உத்தவன் ஷாயிபாவிற்கு மிகவும் பொருத்தமானவனே. நான் ஷாயிபாவை விரும்புவது உண்மையெனில், மனப்பூர்வமாக அவள் மகிழ்ச்சியை மட்டும் விரும்புகிறேன் எனில், அவள் யாரை மணந்து கொண்டால் மகிழ்வுடன் இருப்போம் என எண்ணுகிறாளோ, அவர்களைத் தான் மணக்கவேண்டும். ஷ்வேதகேதுஒரு தீர்மானத்திற்கு வந்தான்.

Tuesday, May 10, 2011

திரிவக்கரையின் கலக்கம்! கண்ணன் வருவான் 2ஆம் பாகம்!

திரிவக்கரை அந்த அரசமாளிகைகளில் சும்மா வாசனைத் திரவியங்களை மட்டும் கொடுத்துக்கொண்டு சென்றுவிடும் சாதாரண வியாபாரப் பெண்ணாக இருக்கவில்லை. அரண்மனை வளாகத்தினுள் நுழைந்ததுமே தன் கண்களையும், காதுகளையும் தாராளமாய்ப் பயன்படுத்தினாள். அவள் கண்களில் இருந்து எந்தச் சம்பவமும் தப்பியதில்லை. அதே போல் அவள் காதுகள் கேட்காத செய்திகளும் இல்லை. அவள் மூக்குக் கூட இப்படியான செய்திகளை மோப்பம் பிடித்து உணரும் சக்தியைப் பெற்றிருந்தது என்றே சொல்லலாம். அவள் நாக்கோ எனில் தேவைப்பட்டால் சாட்டையாகவும் சுழலும், தேவை இல்லை எனில் வெண்ணையாகக் குழையும். பட்டுப் போன்ற மிருதுவான சொற்களும் வரலாம்; கர்ணகடூரமான குரலில் அவள் வசைபாடுவதையும் கேட்கலாம். அதே நாக்குச் சில முக்கியமான சமயங்களில் அவள் ஊமையாகிவிட்டாளோ என்னும்படிக்கு அமைதியாகவும் இருந்ததுண்டு. தற்சமயம் அவளுக்கு அளிக்கப் பட்டிருந்த முக்கியமான பொறுப்புக்கள் நிறைந்த வேலையில் அவள் பெருமை அடைந்திருந்தாள். தேவகி அம்மாவின் வலக்கை போல் செயல்பட்டு வந்தாள். வசுதேவரைத் தலைவராய்க் கொண்ட அந்த மஹாப் பெரிய குடும்பத்தில் வசுதேவரின் ஐந்து சகோதரர்கள், அவர்களின் மனைவிகள், குழந்தைகள், பேரன், பேத்திகள், வசுதேவரின் சகோதரிகளின் வருதல், போதல், மற்றும் மற்ற உறவின் முறைகளின் வருகை, அவர்களை அண்டி இருக்கும் ஏழைகளின் விருப்பங்கள் அனைத்தையும் அறிந்திருந்தாள். யார் யாருக்கு எந்தச் சமயங்களில் எந்த உதவியை எப்போது எவ்வாறு செய்து முடிக்கவேண்டும் என்பதையும் நன்கு அறிந்திருந்தாள். அதற்கேற்றவாறு தேவகி அம்மாவின் கண்ணசைவிலும், வசுதேவரின் விருப்பத்தைப் புரிந்து கொண்டும் நடந்து வந்தாள்.

திரிவக்கரையின் முக்கியமான நோக்கம் எல்லாம் கண்ணனைச் சுற்றியே, கண்ணனுக்காகவே என்றே இருந்தாலும், கண்ணனால் அழைத்துவரப்பட்ட ஷாயிபாவை அவள் முழுமனதோடு வெறுத்தே வந்தாள். அவளுடைய அசர அடிக்கும் அழகு, திரிவக்கரையைக் கவரவே இல்லை. இந்த வீட்டிலே பல இளைஞர்கள் திருமணமே ஆகாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு நடுவே இப்படி ஒரு அழகான மணமாகாத இளம்பெண்ணா?? பஞ்சு மூட்டைகளுக்கு நடுவே அகல்விளக்கை ஏற்றினாலே பஞ்சிலே எப்போது வேண்டுமானாலும் பிடித்துக்கொள்ளும். இதுவோ காட்டுத் தீயாகவன்றோ இருக்கிறது? அதிலும், அவளும், அவளின் மனப்போக்கும்! சீச்சீச்சீ, திரிவக்கரை ஷாயிபாவின் கடுமையான, கோபமான மனப்போக்கை அறவே வெறுத்தாள்; தேவகி அம்மா மிக மிக மென்மையாகப் பேசுபவர். அவர் இருக்குமிடமே தியானமண்டபத்தில் இருப்பது போன்ற அமைதியைத் தரும் இடமாகத் தோன்றும். அப்படிப் பட்ட கோயில் போன்ற இல்லத்தில் இவளைப் போன்ற ஒருத்திக்கும் இடம் கொடுத்துவிட்டானே இந்தக் கண்ணன்? அதோடு கண்ணனை அவள் மிகக் கடுமையாக நிந்தனை செய்ததும் திரிவக்கரைக்குப் பிடிக்கவே இல்லை. இவள் என்ன அழகாய் இருந்தால் தான் என்ன?? இந்தக் கருநிற அழகி உடல் மட்டும் கருமை இல்லை; உள்ளமும் கருமைதான். இவள் கண்ணனை இந்தப் பாடு படுத்தி எடுக்கிறாளே?

ம்ம்ம்ம்?? ஆனால் இந்தக் கண்ணனும் சும்மாவே இருக்கிறான். கம்சனைக் கொல்லக் கண்ணன் மதுராவுக்கு வந்தபோது தானே ருக்மிணியைக் கண்டான்?? ஆம், ஆம், நானும் அப்போது தான் ருக்மிணியை முதன் முதல் கண்டேன். விதர்ப்பநாட்டு இளவரசியான அவளே கண்ணனுக்கு மிகப் பொருத்தமான ஜோடி ஆவாள். ருக்மிணியோடு அறிமுகம் ஆனதில் இருந்தும், ருக்மிணியின் மனதைப் புரிந்து கொண்டதில் இருந்தும் திரிவக்கரை எப்போது ருக்மிணிக்கு ஆதரவாகவே நடந்து வந்தாள். எப்போதுமே கண்ணனைக் குறித்து மிக உயர்வாகப் பேசியும், ருக்மிணி கண்ணனை விரும்புவதை வெளிப்படையாக ஆதரித்தும், கண்ணன் செய்து வந்த வீரதீரப் பிரதாபங்களைப் பற்றி ருக்மிணியோடு விவாதித்தும், பலவகைகளிலும் அவள் ருக்மிணிக்கு ஆதரவாகவே இருந்தாள். இப்படி எல்லாம் கூடி வந்த இந்தச் சமயத்தில் இந்தக் கரவீரபுரத்தின் இளவரசி ஒரு பிசாசு போல் எங்கிருந்தோ வந்து விட்டாளே? இது ஒரு நல்ல செய்தியாகத் தோன்றவில்லை திரிவக்கரைக்கு. இந்த ஷாயிபாவின் அழகு மிக மிக ஆபத்தான ஒன்று. இவள் எப்போவும் கண்ணனை நிந்தித்து வந்தாள் என்பதும் உண்மைதான். ஆனால்…… ஆனால்….. பெண்களுக்கே உரிய சூக்ஷ்ம புத்தி திரிவக்கரையை எச்சரிக்கையாக இருக்கச் செய்தது. இவ்வளவு கோபமும், வன்மமும் உள்ளார்ந்த அன்பை, காதலை, தன்னையே எப்போதும் கவனத்தில் இருத்த வேண்டும் என்ற எண்ணத்தை மறைக்கும் ஒரு முகமூடி என்றே நினைத்தாள். புரிந்தும் கொண்டாள். மேலும்……மேலும்……. இந்தக் கண்ணன் நடந்து கொள்வதும் சரியில்லை. ஷாயிபாவையே எப்போதும் தனியாகக் கவனித்து வருகிறான். அவளைச் சந்தோஷப்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்துகிறான். தினந்தோறும் ஷாயிபாவைச் சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளான்; அவள் கோபத்தையும், கத்தலையும் சாதாரணமாக எடுத்துக்கொள்வதோடு, ஒரு புன்னகையால் மட்டுமே பதிலளிக்கிறான். இறந்து போன தன் பெரியப்பாவை நினைத்துக்கொண்டு பழிவாங்கத் துடிக்கும் இந்தக் கொடூரமனம் கொண்ட பெண்ணிடம், அன்பான வார்த்தைகள் அல்லவோ கூறுகிறான். ஹூம், போகிற போக்கைப்பார்த்தால் ஷாயிபா கண்ணனின் மனைவியாக ஆகிவிடுவாளோ?? இதற்கு ஏதேனும் செய்தாகவேண்டும்.

தீவிரமாய்ச் சிந்தித்தாள் திரிவக்கரை. உத்தவன் மதுராவுக்கு வந்தபோது அவன் ஷாயிபாவிடம் பழகும் விதத்தை உன்னிப்பாய்க் கவனித்துக்கொண்டாள். மிகக் கஷ்டப்பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளுகிறானோ என்று தோன்றியது திரிவக்கரைக்கு. மேலும் ஷாயிபாவின் கண்களை நேருக்கு நேர் சந்திக்க உத்தவன் மறுத்தான். அவளைப் பார்க்கும் சந்தர்ப்பங்களை அறவே தவிர்த்தான். ஒரு நாள் பேச்சுவாக்கில் திரிவக்கரை ஏதோ சொல்லப்போகக் கண்ணன் அதற்குக் கொடுத்த மறுமொழியின் மூலம் உத்தவனுக்கு இருந்த சங்கடமான சூழ்நிலை தெள்ளத் தெளிவாய்ப் புரிந்தது திரிவக்கரைக்கு. நடந்தது இதுதான்;


சாதாரணமாக ஒருநாள் பேசுகையில், “உத்தவன் இப்போதெல்லாம் வேற்றாளாய்த் தெரிகின்றானே பிரபு,” என்று கண்ணனிடம் சொன்னாள் திரிவக்கரை. அதற்குக் கண்ணன்,”அதைக் குறித்துச் சிந்திக்கவேண்டியதில்லை. அவன் விரைவில் தானே சரியாகிவிடுவான்.” என்று கூறினான். இதன் மூலம் கண்ணன் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கை புரிந்தாலும் உத்தவனின் மனநிலையும் புரிந்தது திரிவக்கரைக்கு. அதோடு உத்தவனிடமும் பேச்சுக் கொடுத்துப் பார்த்தாள். ஷாயிபா எவ்வாறு மதுரா வந்தாள், கரவீரபுரத்தில் நடந்தது என்ன எனப் பலவகையிலும் கேட்டுப் பார்த்தாள். ஷாயிபாவைக் குறித்துப் பேசுவதையே உத்தவன் தவிர்த்தான்.

Saturday, May 7, 2011

ஷாயிபாவின் பழி தீர்க்கும் படலம், கண்ணன் வருவான் 2-ம் பாகம்

என்ன இது?? இது எங்ஙனம் சாத்தியம்?? நான் தேவகி அம்மாவின் உடலைப் பார்த்தேனே. ஆனால் தேவகி அம்மாவோ இங்கே வாசுதேவா, வாசுதேவா எனக் கதறிக்கொண்டிருக்கிறார்களே?? அந்தக் குழந்தைக்கிருஷ்ணன் சிலையை வழிபடுகையில் எவ்வாறு முழு ஈடுபாட்டுடன் கூறுவார்களோ அப்படியே கூறினாலும் இதில் உள்ள இனம் தெரியாத சோகம் என் நெஞ்சத்தைப் பிழிந்து எடுக்கிறதே. வாசுதேவன் எங்கே இருக்கிறான்?? அவன் தான் போய்ச் சேர்ந்துவிட்டானே! இந்த அவலக் குரலுக்கு என்ன பதில் சொல்லுவது?? இருக்க இருக்க அதிகமாகிக்கொண்டு வருகிறதே! ஷாயிபா அங்கிருந்து ஓட்டமாய் ஓட, குரல் அவளைத் துரத்தியது. எங்கு சென்றாலும் தேவகி அம்மாவின் குரல் வாசுதேவா, வாசுதேவா, என் கிருஷ்ணா, வாசுதேவக் கிருஷ்ணா! என்றே எதிரொலித்தது. ஷாயிபாவுக்கு அவளையும் அறியாமல் மனதில் இனம் தெரியாத பயம் சூழ்ந்தது. அவள் வாய்விட்டுக் கத்த விரும்பினாள். அந்தக் குரலின் ஓலத்தை அடக்க விரும்பினாள். ஆனால் என்ன இது?? அவளுக்குக் குரலே எழும்பவில்லையே?? பேசவே வரவில்லையே?? வார்த்தைகளையும் சேர்த்துக் கண்ணனோடு கொன்றுவிட்டேனா?? என் குரல்! என்ன ஆயிற்று?? தொண்டையில் என்ன அடைக்கிறது?? பாறாங்கல்லா?? இல்லை, இல்லை, கல்லெல்லாம் இல்லை. நான் பேச வேண்டிய வார்த்தைகள் தான் தொண்டையில் சிக்கிக்கொண்டிருக்கின்றன. வெளிவரமுடியாமல் தவிக்கின்றன. அவற்றை எவ்வாறு வெளிக்கொண்டு வருவேன்?? அப்படியே சரிந்து அமர்ந்தாள் ஷாயிபா. தன் கண்களைத் தேய்த்துவிட்டுக்கொண்டாள். தொண்டையைச் சரி செய்ய முயன்றாள். குரல்வளையைத் தடவிக் கொடுத்தாள். மெல்ல மெல்ல, “வாசுதேவா!” என்று கூப்பிட முயன்றாள். ஆனால்,…….ஆனால்……… ம்ஹும், அவளுக்குக் குரலே வரவில்லை.


“நான் உன்னைப் பயமுறுத்திவிட்டேனா ஷாயிபா?” எங்கிருந்தோ கேட்ட குரலில் தூக்கிவாரிப் போட்டது ஷாயிபாவுக்கு. யார் குரல் இது?? அடிக்கடி கேட்டிருக்கிறோமே! ரொம்பவே தெரிந்த நபரின் குரல் தான். ஆனால்….. ஆனால்…… எங்கிருந்து வருகிறது? அந்தக் குரல் அங்கேயே அப்படியே நிலைபெற்று நின்று விட்டிருப்பதாய் ஷாயிபாவுக்குத் தோன்றியது. திடீரென ஒரே மெளனம். குரல் அடங்கிவிட்டதா?? எங்கே இருக்கிறேன் நான்?? தன் கண்களைச் சிரமப்பட்டுத் திறந்தாள் ஷாயிபா. அவளுக்குத் தான் இருக்குமிடம் எதுவெனப் புரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தாள். மாலை அஸ்தம சூரியன் தன் செங்கிரணங்களோடு கொஞ்சம் தங்கக் குழம்பையும் சேர்த்து வார்த்து அந்த இடத்தை ஒரு சொப்பனபுரியாக மாற்றிக்கொண்டிருந்தான். சிவப்பும், மஞ்சளும் கலந்து காட்சி அளித்த அந்த அதி அற்புத ஒளியிலே அவள் கண்கள் எதிரே ஒரு மஞ்சள் பட்டாடை தான் முதலில் தெரிந்தது; பின்னர் விருந்தாவனத்துத் துளசி மாலை! மயில் பீலி; அதோ, அந்த அளவான மெல்லிய அதே சமயம் உறுதியான உடல். சரியான கட்டமைப்புடன் கூடிய அந்த உடல், கைகள், கால்கள்; என்றும், எப்போதும், எந்தச் சந்தர்ப்பத்திலும் மறையாதிருக்கும் அந்த இளமுறுவல்; உன் துன்பம் என்னவென எனக்குப் புரிகிறது; நான் இருக்கிறேன்; கவலை வேண்டாம்; என உறுதியளிக்கும் சிரிக்கும் கண்கள். உலகத்திலுள்ள அனைத்து மாந்தர்களுக்கும் கொடுத்தாலும் உனக்கும் என்னிடம் கருணை மீதமுள்ளது; கவலைப்படாதே எனச் சொல்லாமல் சொல்லின அந்தக் கண்கள். அவன் தோள்களில் சவாரி செய்து கொண்டிருந்தாள் அவன் அன்புத் தங்கை சுபத்ரா! கண்ணனுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தான் ஷ்வேதகேது.

“கிருஷ்ணா!” மிக மிக மெதுவாக வந்தது ஷாயிபாவின் குரல். அவளுக்கே கேட்குமா என்னும்படி மெதுவாக வந்த அந்தக் குரலில் கொஞ்சம் பயம் மீதி இருந்தாலும் பெருமளவு நிம்மதியே தெரிந்தது. ஷாயிபாவின் தலை சுற்றியது போல் இருந்தது அவளுக்கு. தன்னிரு கரங்களாலும் தலையை அமுக்கிப் பிடித்துக்கொண்டாள்.

“சகோதரி! சொல், என்ன வேண்டும் உனக்கு?”

கண்ணன் குரல் கேட்டது ஷாயிபாவுக்கு. அவளால் அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. முதலில் இது கனவா அல்லது நினைவா?? சிறிது நேரத்திற்கு முன் கண்டவை எல்லாம் கனவா? நனவா? பிரமையா?? அவள் கால்கள் நடுங்கின. எது கனவு, எது நனவு என்பதே அவளுக்குப் புரியவில்லை. மெல்ல எழுந்திருக்க முயற்சித்தாள். ஆனால் அவள் கால்கள் அவளை ஏமாற்றின. நடுங்கித் தொலைத்தன அந்தக் கால்கள். “ஓ, கண்ணனை நான் கொன்றேன் அல்லவோ?” அவளுக்கு இப்போது எல்லாமே நினைவில் வந்து தொலைத்தது. ஆனால்……ஆனால்………இதோ கண்ணன், கிருஷ்ண வாசுதேவன். ரத்தமும், சதையுமாக சிரிப்பும், கிண்டலுமாக, கருணையையும் அன்பையும் அளவில்லாமல் காட்டிக் கொண்டு தான் பிறப்பெடுத்திருப்பதே ஷாயிபாவின் துன்பங்களைத் தீர்க்கவே என்பது போல் நடந்து கொண்டு…. இதோ எதிரே கண்ணன்! இவனால் இப்படித் தான் இருக்க முடியும்,. வேறு மாதிரி இவனால் இருக்க இயலாது. இதுதான் இவன் இயல்பு. யதார்த்தம், உண்மை! இவன் நடிக்கவில்லை; நான் நினைத்தது எல்லாம் தப்பு!

“ஷாயிபா, எழுந்திரு, விழித்துக்கொள்! நான் கிருஷ்ணன் வந்துவிட்டேன்! விழித்துக்கொண்டு என்னைப் பார்!” குரலில் தொனித்த உறுதியும், நிச்சயமும் அவன் உயிரோடு தான் இருக்கின்றான் என்பதைப் பறை சாற்றின. அகல விரிந்த கண்களோடு எழுந்த ஷாயிபா கண்ணனையே சற்று நேரம் விழித்துப் பார்த்த வண்ணம் நின்றாள். சட்டென்று என்ன தோன்றியதோ, அப்படியே கண்ணன் பாதத்தில் சரிந்தவள், அந்தப் பாதங்களைப் பிடித்துக்கொண்டு தன் கண்ணீரால் அவற்றிற்கு அபிஷேஹம் செய்தாள். “ஓஹோ, ஷாயிபா, என்ன இது?? நீ தைரியமான பெண்மணி அல்லவோ?? குழந்தையாக மாறிவிட்டாயே! அழாதே, அழுகையை நிறுத்து. நான் இங்கே தான் இருக்கிறேன்.” கண்ணன் அவளுக்கு உறுதியளித்தான். சுபத்ராவைக் கீழே இறக்கிவிட்ட கண்ணன், அவளருகே அமர்ந்தான். அவள் தலையைத் தூக்கி அவள் முகத்தை மறைத்த அவள் தலைமயிரை அகற்றிவிட்டு அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். அவள் கண்ணீரைத் துடைத்தான். அவள் தலையைத் தன் கரங்களால் தடவிக் கொடுத்தான். “ஷாயிபா, அழாதே, அழுகையை நிறுத்து. நான் சொல்கிறேன். அழுகை வேண்டாம். உன்னை எவரும் கட்டாயப் படுத்த மாட்டார்கள். அதுவும் நான் இருக்கையில். உனக்கு எப்போது திருமணம் செய்து கொள்ள விருப்பம்?? அதை மட்டும் சொல்லு!” கண்ணன் குரலின் கருணையும், பரிவும் ஷாயிபாவை ஆட்டி வைத்தது. அவள் நெஞ்சத்தினுள்ளே மறைந்திருந்த வஞ்சத்தைச் சுக்கு நூறாக்கியது. அவளைக் கண்டு அவளே வெட்கமடைந்தாள்.

சுபத்ரா தன் தளிர்நடையால் அவளிடம் ஓடி வந்து அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டு, “ஷாயிபா அக்கா” என்று தன் மழலையால் இனிமையாக மிழற்றினாள். ஷாயிபாவால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. “கோவிந்தா, கோவிந்தா,” பெருத்த விம்மல்களோடு வெளி வந்தன இவ்வார்த்தைகள். ஷாயிபா பொங்கும் விம்மல்களோடு பேசமுடியாமல் தவித்துக்கொண்டே, “ கோவிந்தா, கோவிந்தா, இப்போது என்னை எதுவும் கேட்காதே! உன்னை மிகவும் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து பொறுத்துக்கொள். நீ என்னை என்ன செய்யவேண்டுமெனச் சொல்கிறாயோ அப்படியே செய்கிறேன். நீ சொல்கிறபடி நடந்து கொள்கிறேன்.” திக்கித் திணறி வெளி வந்தன வார்த்தைகள். அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் தோள்களில் சாய்ந்து கொண்டு தன் துக்கத்தையெல்லாம் வெளிப்படுத்தினாள் ஷாயிபா. சுபத்ராவைச் சமாதானம் செய்யும் அதே கனிவோடு கண்ணன் அவளையும் சமாதானம் செய்தான். “உன்னை ஒருவரும் வற்புறுத்த மாட்டார்கள் ஷாயிபா. நன்கு ஆலோசித்து முடிவு எடுத்துக்கொள். எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் யோசி. அதன் பின்னர் உனக்கு யாரைத் திருமணம் செய்து கொள்ள இஷ்டமோ அவரைத் திருமணம் செய்து கொள். உன் விருப்பம் தான் முக்கியம்.” என்றான் கண்ணன்.

“என் கடவுளே, என் கடவுளே, இத்தனை நாட்களாக உன்னை நான் அறியவில்லையே!” ஷாயிபாவுக்கு அழுகையும் சிரிப்பும் கலந்து வந்தது. கண்ணன் காலடிகளில் மீண்டும் வீழ்ந்தாள்.

Wednesday, May 4, 2011

கண்ணன் வருவான், 2ஆம் பாகம், தேவகியின் துன்பம்!

திரும்பிப் பார்த்தாள் ஷாயிபா. நகரமும், கோட்டையும், அதன் ஒவ்வொரு செங்கல்லையும் மெல்ல மெல்ல இழந்து கொண்டிருந்தாற்போல் இருந்தது அவளுக்கு. அந்தச் செங்கல் குவியலில் இருந்து குரல் கேட்டாற்போலும் தோன்றியது. கடுமையான, ஆனால் அதே சமயம் குதூகலம் நிரம்பிய குரல். ஷாயிபாவின் உள் மனம் யாருடைய குரல் என்பதைச் சொல்லிவிட்டது. ஆம், அவனே தான். ஜராசந்தன்! வெற்றியின் சிகரத்தில் இருந்தான் ஜராசந்தன். தர்மம் அழிந்தது. மீண்டும் கூறினான். அந்தக் குரல் உலகின் அனைத்து பாகங்களில் இருந்தும், அதல, சுதல, பாதாளத்திலிருந்தும் எதிரொலித்ததாய்த் தோன்றியது ஷாயிபாவுக்கு. இடிபாடுகள் குவியலாய்க் கிடக்க ஷாயிபா அதன் ஏதோ ஒரு உச்சியில் நின்று கொண்டிருக்கிறாள். அதுவும் தன்னந்தனியாக. ஒரு காலத்தில் இது மதுரா நகரம் எனப்பட்டது. இன்று அடியோடு வீழ்த்தப்பட்டு இடிபாடுகள் நிறைந்த கற்குவியலாக ஆகிக்கிடக்கின்றது. அதோ அவர்கள் யார்?? ஆஹா! ஆசாரியர்கள்!

ஆம், ஆம், கர்காசாரியாரில் இருந்து சாந்தீபனி வரை அனைத்து ஆசாரியர்களும் கைவிலங்கிடப் பட்டு இழுத்துச் செல்லப் படுகின்றனர். மெல்ல மெல்ல சோகமான முகபாவத்தோடு அவர்கள் நடக்கின்றனர். என்றாலும் அவர்கள் கண்களில் உண்மையின் ஒளி, சத்தியத்தின் ஒளி, தர்மத்தின் ஒளி ஜொலிக்கிறது. எவ்வளவு மோசமான நிலையிலும், எப்படி அவமரியாதையாக நடத்தினாலும், எங்கள் தர்மத்திலிருந்து பிறழ மாட்டோம் என அந்தக் கண்களின் ஒளி சொல்லாமற் சொல்லிற்றோ? ஷாயிபா உடலைச் சிலிர்த்துக்கொண்டாள். ஆஹா, இது தானே என் பெரியப்பா வேண்டிக்கொண்டது. இது தான் அவருடைய ஆக்ஞை. இப்போது அவர் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருப்பார். என்னால் இயன்றதைச் செய்துவிட்டேன். அவருடைய ஆன்மா என்னுடைய இந்தச் செயல்களாலும், ஒரு கொடூரமான கொலைகாரனைக் கொன்றதன் பின்னர் கிட்டிய அவனுடைய ரத்தத்தினாலும் புனிதமடைந்திருக்கும். ஆனால் அவளுக்கு என்னமோ தெரியவில்லை. இந்த வெற்றி வெற்றியாகவே தோன்றவில்லை. மனம் சந்தோஷமாக இல்லை. நெஞ்சை அடைத்துக்கொண்டு மூச்சுத் திணறிற்று. கண்கள் காரணமின்றி நீரைப் பொழிந்தன. கிருஷ்ணன் எங்கே?? அவள் ஏதோ ஒரு மோசமான காரியத்தைச் செய்தே விட்டாள். அந்தவரையிலும் அவளுக்கு நினைவில் இருக்கிறது. ஆனால் அது என்ன?? என்ன செய்தேன்??

அதோ, அங்கே, அங்கே ஒரு உடல் எரிந்து கொண்டிருக்கிறதே! அதன் புகை விண்ணையும் தொடும்போல் இருக்கிறதே! கடவுளே, இது என்ன?? யார் இந்தப்பேரழகி?? ஒரு அரசகுமாரி போல் இருக்கிறாளே? என்ன அழகாக மணப்பெண் போல் சிங்காரித்துக்கொண்டிருக்கிறாள். நெற்றியின் சிந்தூரமே தீ நாக்குப் போல் சுடர் விட்டு ஒளிர்கிறது. ஆனால் அந்த அழகான முகம், அதில் தெரியும் சோகம், இனங்காணமுடியா துக்கம். அட இது என்ன?? இந்தச் சிதையின் மேல் ஏறுகிறாளே? கடவுளே அதில் குதித்துவிடப் போகிறாளே! யார் இவள்?? நான் இவளை ஒரு நாளும் கண்டதில்லையே??............ஆனால் எனக்கு இவளை எப்படியோ தெரியும் எனத் தோன்றுகிறது. எப்படித் தெரியும்?? ஆம், எனக்கு இந்த அரசகுமாரியை நன்றாய்த் தெரியுமே. அவள் பெயர் என்ன?? அட, அதை மறந்துவிட்டேனா? ம்ம்ம்ம்ம்??? அன்று ஒருநாள், ஒருநாள், பல யுகங்களுக்கு முன்னேயா?? தெரியவில்லை, ஒரு நாள் யாரோ நம்மிடம் இவளைக் குறித்துச் சொன்னார்கள் அல்லவா?? இவள் கண்ணனைத் தவிர வேறு யாரையும் மணக்கப்போவதில்லை என சபதம் ஏற்றிருப்பதாய்ச் சொன்னார்களே! ஆம், ஆம், இப்போது நினைவில் வந்துவிட்டது. ஷ்வேதகேது தான் சொன்னான். இவளுக்கும், கண்ணனுக்கும் திருமணம் நடக்க உதவிகள் செய்யவேண்டும் என்று கூடக் கேட்டான் அல்லவோ? ஆஹா, கண்ணனை நான் கொன்றுவிட்டதால், அவனைத் தவிர வேறு எவரையும் மணக்க இஷ்டப்படாத இவள் இந்தத் தீயில் புகுந்து உயிரை விடப் போகிறாளா? இதுவும் நான் செய்த செயலின் விளைவா?

எல்லாருமே கிருஷ்ணனை விரும்புகின்றனர். தங்கள் உயிரினும் மேலாக அவன் மேல் ஆசை வைத்திருக்கின்றனர். அவன் இல்லாவிட்டால் இவர்களால் இருக்க முடியாது என்ரே நினைக்கிறார்கள். ஆனால்…….. ஆனால்………ஆனால்…… கண்ணன் ஒரேயடியாகப் போய்விட்டானே! இப்போது அவனுடன் சேர்ந்து ஷ்வேதகேதுவும் போய்விட்டான். இன்னும் அநேகர் உயிரை விட்டுவிட்டனர். நான் மட்டும் இருந்து என்ன செய்யப் போகிறேன்?? ஹும்,. நான் செய்த இந்தச் செயலால் என்னை விரும்பிய ஒருவனையும் இழந்தேன். எனக்கு சகோதரனாக இருப்பேன் என்பவனையும் இழந்தேன். இந்தக் கொடுஞ்செயலைச் செய்தது நான் தான். ஆம், நானே தான். கண்ணனைக் கொன்றதோடு அவனோடு சேர்ந்து தர்மத்தையும் கொன்றுவிட்டேனா?

ஆம், ஆம், அப்படித்தான், இந்த என் கரங்களால் அன்றோ கண்ணனைக் கொன்றேன்?? ரத்தம் சொட்டும் கைகள் என் கைகள். ரத்தம் படிந்துவிட்டன. இந்தக் கறையை அகற்றவே முடியாதா? அவள் தொண்டையை அடைத்துக்கொண்டது. ஆனால் அதையும் மீறி அவள் அழ விரும்பினாள். ஆனால் அவளால் அழமுடியவில்லை. அவள் உடலின் ஒவ்வொரு அணுவும் துடித்துக்கொண்டிருந்தது. அவள் காதுகளில் ஒரு வழிபாட்டுப் பாடல் ஒலித்தது. யாருடைய குரல்?? தேவகி அம்மாவின் குரல். என்ன இது?? தேவகி அம்மாதான் இறந்திருந்தாளே? அப்புறம் எப்படி அவள் குரல் மட்டும் கேட்கிறது? அவள் குரலில் வாழ்கிறாளா?

ஹே நாதா, கிருஷ்ணா, நாராயணா, வாசுதேவா! தேவகி அம்மாவின் குரலேதான்.

Monday, May 2, 2011

கண்ணன் வருவான், 2-ம் பாகம்! ஷாயிபாவுக்கு பயம்

ஆஹா, பரம்பொருளே, ஸ்ரீகாலவ வாசுதேவரே, இது என்ன?? சுபத்ராவின் குரல் போல அன்றோ உள்ளது? கண்ணன் மேல் மிகவும் பாசம் வைத்திருப்பவள் ஆயிற்றே. எந்நேரமும் கண்ணனின் கைகளை ஊஞ்சலாக்கி அதில் ஏறிக்கொண்டு ஆடி மகிழ்வாளே! இனி என்ன செய்யப்போகிறாள்? இருதயமே பிளக்கும் அளவுக்கு அல்லவோ அவள் அழுகைக் குரல் கேட்கிறது. நமக்கே இப்படி இருந்தால் அவளுக்கு இதயமே சுக்குச் சுக்காகி இருக்குமே. ஷாயிபா செய்வதறியாது குனிந்து பார்த்தாள். எங்கு நோக்கினும் உடல்கள் உடல்கள் உடல்கள்! இது என்ன?? இங்கே உத்தவன் கிடக்கிறானே! அதிர்ச்சியில் இறந்துவிட்டானோ? ஷ்வேதகேது தன்னைத் தானே மாய்த்துக்கொண்டு விட்டான் போலும். அவள் அறிவாள் ஏன் இப்படிச் செய்து கொண்டான் என. மெல்ல மெல்ல அவன் அருகே சென்றாள் ஷாயிபா. திடீரென ஷ்வேதகேது தலையைத் தூக்கி அவளையே உற்று நோக்கினான். அதே பார்வை. அவள் மேல் அவன் வைத்திருந்த மாறாக் காதல் கொஞ்சமும் குறையவே இல்லை. “ஷாயிபா, ஷாயிபா, நீயா?? நீயா? இவ்வாறு செய்தாய்?? நீ இப்படிச் செய்யலாமா? உன்னிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவே இல்லையே! என் அருமை கிருஷ்ணனை நீ கொன்றுவிட்டாயே, அதன் மூலம் என்னையும் அல்லவோ கொன்றுவிட்டாய்! உன் ஒரு கொலை எத்தனை கொலைகளுக்கும் தற்கொலைகளுக்கும் காரணமாய் அமைந்துவிட்டது!”

ஓட்டமாய் ஓடினாள் ஷாயிபா. அங்கிருந்து தூரமாய், வெகு தூரமாய் ஒருவர் கண்ணுக்கும் தெரியாதபடிக்குத் தொலை தூரமாய் ஓடினாள். யாரோ அவளைப் பின்னிருந்து துரத்துவது போன்ற வேகத்தோடு ஓடினாள். சொல்லத் தெரியாத பயம் அவள் மனதில் புகுந்து கொண்டது. நூறு, ஆயிரம், இல்லை, இல்லை, கோடி, கோடி இனம் தெரியாத ஆவிகளும், பேய்களும் அவளைத் துரத்துவது போல் தோன்றிற்று. ஓட்டமாய் அங்கிருந்து மாளிகையை நோக்கி ஓடினாள். எப்படியேனும் மாளிகையை அடைந்துவிட்டால் பாதுகாப்புக் கிடைக்கும் என்பது அவள் எண்ணம். ஆனால், ஆனால், இது என்ன?? மாளிகையின் மேல்மாடத்துக்குச் செல்லும் வழி அடைக்கப்பட்டுவிட்டதா? இல்லை, இல்லை, உக்ரசேனரும் அவருடைய ஆட்களும் சர்வாயுதபாணியாக ஒரு யுத்தத்திற்குத் தயாராவது போய் தயாராகக்காத்திருக்கின்றனரே! இங்கே சென்றால் இவர்கள் கைகளில் மாட்டிக்கொள்வோம். புலிக்கூட்டத்தின் நடுவே தன்னந்தனியாக மாட்டிக்கொண்ட புள்ளிமானைப்போலச் சுற்றும் முற்றும் பார்த்தாள் ஷாயிபா.

யமுனைப் படித்துறைக்குச் செல்லும் வழி கண்களில் பட்டது. அந்தப் பக்கமாய் ஓடினாள். இந்த யமுனையில் தான் கண்ணன் தினமும் நீச்சலடித்துக் குளிப்பான். இப்போது,இப்போது தன் குழந்தையைத் தொலைத்த தாயைப் போல் யமுனை பொங்கிக் கொண்டிருப்பாளோ! அலை ஓசை போல் பெரும் சப்தம் கேட்டது ஷாயிபாவுக்கு. சற்று நிதானித்துக்கொண்டு உற்றுக்கவனித்தாள். மதுராவின் மக்கள் அனைவரும் அங்கே ஓவென்று அலறி அழுது கொண்டு இருந்தனர். அனைவரும் மார்புகளில் ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டனர். பெண்கள் தங்கள் தலைகளில் அடித்துக்கொண்டனர். எல்லாருமே அலறி அழுது கொண்டிருந்தனர். அனைவரின் துக்கமும் பெருகிக்கொண்டிருந்த வேளையில் அனைவருமே ஒரே முகமாக ஷாயிபாவுக்கு சாபத்தை அளித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் வாழ்க்கையின் ஒரே நம்பிக்கை நக்ஷத்திரம், அவர்களின் ரக்ஷகன், பாதுகாவலன், கண்ணின் கருமணி போல் அவர்கள் நினைத்த கண்ணனை இந்தப் பெண்ணரசி கொன்றுவிட்டாளே. இனி அவர்கள் கதி என்ன?? அங்கிருந்தும் ஓடிவிட நினைத்த ஷாயிபா கம்சாவின் கரங்களில் சிக்கிக் கொண்டாள். அப்பாடா! ஆசுவாசப் பெருமூச்சு விட்டாள் ஷாயிபா. கம்சாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். அதிர்ச்சி அடைந்தாள். இது என்ன?? கம்சா சிரித்துக்கொண்டு சந்தோஷமாய் இருப்பாள் என எதிர்பார்த்தால் விவரிக்க ஒண்ணாத சோகத்தோடு, கோபமும், வலியும் காணப்படுகிறதே அவள் முகத்தில். ஷாயிபா திணறினாள்.

அதோ, அங்கே பலராமன், பெரியண்ணா என அனைவராலும் அழைக்கப்படுபவன் தன்னுடைய கலப்பையைத் தூக்கிக் கொண்டு நின்று கொண்டு இருக்கிறான். அவன் முகத்தில் துக்கத்தை விட வெறுப்பும், கோபமும் மண்டிக் கிடக்கிறதே. அவன் கண்களால் அவளைப் பார்த்த பார்வையில் அவளைச் சுட்டெரித்துவிடுவான் போல்தெரிகிறதே. அந்தப் பார்வையின் தகிப்பைத் தாங்கமுடியாத ஷாயிபா அங்கிருந்தும் ஓடினாள். வழியெல்லாம் சின்னஞ்சிறு சிறார்கள், கண்ணா, கண்ணா, எங்கள் அன்புத் தோழா! நீ இல்லாமல் நாங்கள் எங்கள் துக்கத்தை எல்லாம் யாரிடம் பகிர்ந்து கொள்வோம்?? எங்கே இருக்கிறாய் நீ?” என அலறும் குரல்கள். வயது முதிர்ந்த பெரியோரோ, “ஏ, வாசுதேவா, பரமாத்மா, பரம்பொருளே, ஏ நாதா, எங்கள் ப்ரபு! எங்கேயப்பா சென்றாய்?” எனத் தேடினார்கள். அனைவரின் குரலிலும் அக்ரூரரின் அவலக் குரல் தனித்துத் தெரிந்தது.

பாலைவனமாகிவிட்டனவா மதுராவின் தெருக்கள்? ஷாயிபா ஓடின வழியெல்லாம் மனித நடமாட்டமே இல்லை. பெயரே தெரியாததொரு பயங்கரமான சாபத்தில் இருந்து தப்ப வேண்டி இலக்குத் தெரியாமல் ஓடினாள் ஷாயிபா. அவள் கால்கள் களைத்துவிட்டன. மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது அவளுக்கு. தூரத்தில் தொலைதூரத்தில் வானும், பூமியும் சேரும் தொடுவானத்தில் சின்னதாய்ச் சிவப்புப் பொட்டு ஒன்று தெரிய ஆரம்பித்து வர வரப் பெரிதாகிக்கொண்டே வந்தது. கால்கள் தடுமாறின ஷாயிபாவுக்கு. சற்று நேரத்தில் எல்லா வீடுகளிலேயும் அக்னிதேவன் குடி வந்தானோ என்னும்படியாக வீடுகளெல்லாம் சிவந்த வண்ணம் பெற்றுத் திகழ்ந்தன. ஆஹா, இது தான் மஹா ப்ரளயமோ?? அந்த மஹாதேவர் தன்னுடைய மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணைத் திறந்து பூமியை எரிக்க ஆரம்பித்துவிட்டாரோ?? ஏனெனில் கண்ணன் தர்மத்தைக் காக்க வந்திருப்பதாய்க் கூறுவான். இப்போது அவன் இறந்துபட்டதால் தர்மமும் வீழ்ச்சி அடைந்து கடைசியில் கடைசியில் அந்த ஊழிக்காலமே வந்துவிட்டதா?? ஷாயிபாவுக்குக் கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. அப்போது எங்கிருந்தோ வந்த குரல் ஒன்று,

“ஒழிந்தான் கண்ணன், அவனுடன் தர்மமும் அழிந்தது!” எனக் குதூகலமான குரலில் கூறிற்று.