Wednesday, November 19, 2014

பீஷ்மர் போடும் திட்டம்!

திருதராஷ்டிரன் காந்தார நாட்டு இளவரசி காந்தாரியை மணந்து பல குழந்தைகளைப் பெற்றெடுத்தான். அவர்களில் பலரும் குழப்பங்களையே ஏற்படுத்தினார்கள்.  பெரியவர்களிடம் மரியாதை இன்றியும் நடந்து கொண்டனர். சுய விருப்பம் மிகுந்து தன்னலமே பெரியதாய் நடந்து கொண்டனர்.  தர்மத்தைக் குறிப்பாக அரச தர்மத்தை மதிப்பதே இல்லை.  அவர்களில் மூத்தவன் ஆன துரியோதனன் பாண்டவர்கள் ஐவரில் பெரியவன் ஆன யுதிஷ்டிரனை விடச் சிறியவன்.


பீஷ்மப் பிதாமகருக்கும் வயது ஆகிக் கொண்டே இருந்தது.  ஆனால் அவர் தந்தையின் ஆசிகளாலும் மஹாதேவன் அருளாலும் அவர் நினைத்தபோது உயிரை விடலாம் என்னும் வரம் அவருக்கு இருந்தது.  என்றாலும் முதுமை அவரை வாட்டத் தொடங்கி இருந்தது.  அந்நிலையிலும் அவர் தன் பொறுப்பை மறக்காமல் தன் தம்பியின் பிள்ளைகளான பாண்டுவுக்கும், திருதராஷ்டிரனுக்கும் பிறந்த குழந்தைகளை வளர்த்தார்.  அவர்களைத் தக்க வயதில் குருகுலத்தில் சேர்த்தார்.  அவர்கள் அனைத்துக் கலைகளிலும் வல்லவர்களாக இருத்தல் வேண்டும் என்பதற்காக அரச குரு கிருபாசாரியாரிடம் கலந்து ஆலோசித்து கிருபரின் மைத்துனன் ஆன துரோணாசாரியாரைத் தன் பேரப்பிள்ளைகளுக்கு ஆசான் ஆக்கினார்.  துரோணர் பரசுராமரின் நேர் சீடர் ஆவார்.


ஐந்து சகோதரர்களும் தங்கள் குருகுல வாசத்தை முடித்ததும் பீஷ்மர் யுதிஷ்டிரனை ஹஸ்தினாபுரத்தின் யுவராஜாவாக நியமித்தார்.  யுதிஷ்டிரனும் தன் பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்றி வந்தான்.  அதோடு இல்லாமல் திருதராஷ்டிரன் பட்டம் ஏற முடியாமல் பாண்டுவே அரசனாக இருந்ததாலும் முறைப்படி யுதிஷ்டிரனுக்கே அந்தப் பதவி கிடைக்க வேண்டும் என அனைவரின் விருப்பமாகவும் இருந்தது.  தன் வயதுக்கு மீறிய விவேகமும், புத்திசாலித் தனமும் கொண்ட யுதிஷ்டிரனோ தன் யுவராஜா அதிகாரத்தைச் சரியான முறையிலேயே பயன்படுத்தி வந்தான்.  ஹஸ்தினாபுரத்து மக்களாலும், மற்றும் அரண்மனை ஊழியர்களாலும் மிகவும் நேசிக்கப்பட்டான்.  ஆனால் இது தொடர முடியாமல் கௌரவர்கள் என அழைக்கப்பட்ட திருதராஷ்டிரனின் மக்கள் தொந்திரவு கொடுத்தனர்.



பாண்டுவின் புத்திரர்கள் நாட்டுக்கு அழைத்து வரப் பட்ட நாளில் இருந்தே அவர்களுக்கும் கௌரவர்களுக்கும் ஒருவருக்கொருவர் பிடிக்காமல் போய் விட்டது.  பாண்டவர்களைத் தங்கள் எதிரிகளாகவும், தங்கள் உரிமையைப் பறிக்க வந்ததாகவும் கௌரவர்கள் நினைத்தனர். ஆகவே அவர்களை மனமார வெறுத்ததோடு அவர்களைப் பல விதத்திலும் சிரமங்களுக்கும் உள்ளாக்கினார்கள்.  அவர்களை எப்படியேனும் கொன்றுவிடவும் சதியாலோசனை செய்தார்கள்.  இது தெரிந்த பீஷ்மர் பாண்டவர்களின் உயிரையானும் காப்பாற்ற வேண்டியும் அவர்களை இந்த மாபெரும் அரசியல் பிரளயத்திலிருந்து காக்க வேண்டியும் சிறிது காலத்துக்காக அவர்களைப் பிரிக்க எண்ணினார்.  ஆகவே வாரணாவதத்துக்கு அவர்களை அனுப்பி வைத்தார்.  ஆனால் துர் நோக்கம் கொண்ட துரியோதனன் அங்கேயும் அவர்களை நிம்மதியாக இருக்க விடாமல் மாளிகையை அரக்கினால் கட்டி அதில் ஓர் குறிப்பிட்ட நாளில் நெருப்பையும் வைக்க ஏற்பாடுகள் செய்திருந்தான்.



இதை அறிந்த விதுரர் மிகவும் ரகசியமாக பூமிக்குக் கீழே சுரங்கப் பாதை கட்டி அதன் மூலம் பாண்டவர்களையும், குந்தியையும் காப்பாற்றி வெளியேற்றினார்.  தப்பிப் பிழைத்த பாண்டவர்கள் தங்கள் தாயுடன் துரியோதனனின் எல்லைக்கு வெளியே ராக்ஷச வர்த்தம் சென்று மறைந்து வாழ்ந்தனர்.  பாண்டவர்களை வெளியேற்றும்போதே அரை மனதாக அனுப்பி வைத்த பீஷ்மருக்கு அவர்கள் வாரணாவதத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்னும் செய்தி முதலில் கலக்கத்தையே கொடுத்தது.  ஆனால் பின்னர் அவர்கள் தப்பிய செய்தியும், ஆனால் ராக்ஷசவர்த்தத்தில் பல்வேறு இடையூறுகளுக்கிடையே வாழ நேர்ந்ததும் அவர் மனதை மிகவும் புண்ணாக்கி விட்டது.



மீண்டும் தன் அருமைப் பேரப் பிள்ளைகளைப் பார்ப்போமா என்றிருந்த பீஷ்மருக்கு பாண்டவர்கள் ராக்ஷசவர்த்தத்தை விட்டு வெளியேறி காம்பில்யம் வந்ததும், அங்கே அர்ஜுனன் சுயம்வரப் போட்டியில் கலந்து கொண்டு திரௌபதியை வென்றதும், பின்னர் ஐவரும் திரௌபதியை மணக்க நேரிட்ட செய்தியும் மிக்க மகிழ்வைத் தந்தது.  பாண்டவர்கள் கௌரவர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று குரு வம்சத்தினருக்கு அன்று வரை ஏற்பட்டிருந்த மாபெரும் களங்கம் மறைந்ததை எண்ணி மகிழ்ந்தார்.  அர்ஜுனன் ஆர்யவர்த்தத்தின் சிறந்த வில்லாளி, இந்தப் போட்டியில் வென்றதும் அவருக்கு மகிழ்வைத் தந்தது. இந்தச் செய்தி அவரை வந்தடைந்ததும், கர்வத்திலும் பெருமிதத்திலும் மூழ்கிப் போனார்.  தற்கால மரபுக்கு ஒவ்வாத போதிலும் திரௌபதி பழங்கால மரபை ஒட்டி ஐந்து சகோதரர்களையும் மணந்து கொண்டதிலும் அவருக்கு மகிழ்ச்சியே.



இதன்மூலம் குரு வம்சத்தினருக்கும் பாஞ்சால நாட்டுக்கும் நட்பு உருவாகும். அதோடு இல்லாமல் யாதவர்கள் இப்போது பணபலம், படைபலம் மிகுந்து காணப்படுகின்றனர்.  அவர்களின் ஒப்பற்ற தலைவன் ஆன ஶ்ரீகிருஷ்ணனோ பாண்டவர்களுக்கு நட்பு ரீதியிலும், அரசியல் ரீதியிலும் பல உதவிகள் புரிந்து வருகிறான். யாதவப் படைகளே பாண்டவர்கள் பின்னால் நிற்கின்றன.  ஆம், இது தான் தக்க தருணம்.  யுதிஷ்டிரனை இப்போது தான் ஹஸ்தினாபுரம் வரவழைத்தாக வேண்டும்.  அவனுக்கு அரச மகுடம் சூட்ட வேண்டும்.  இதை விட்டால் வேறு தருணம் இல்லை.  பீஷ்மர் முடிவெடுத்தார். இதன் மூலம் துரியோதனனின் யுவராஜப் பட்டத்தைப் பறிக்க வேண்டாம்.  அவன் அப்படியே யுவராஜாவாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அப்படி அவனுக்கும் ராஜ்யம் ஆளும் ஆசை இருந்தால் ஸ்வர்ணப்ரஸ்தமோ, பானிப்ரஸ்தமோ ஆளட்டும்.  அவனுடையை ஆசையையும் தீர்த்து விட்டாற்போல் ஆகும்.  யுதிஷ்டிரன் அமர வேண்டிய இடம் பரதனுக்குப் பின்னர் பரம்பரையாக குரு வம்சத்தினர் ஆண்டு வந்த இந்தச் சிம்மாதனமே.  அவனுக்கே இது உரியது.



இதன் மூலம் அரச நீதியும், தர்மமும் நிலை நிறுத்தப்படும்.  அதோடு இல்லாமல் துரியோதனனின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்க வேண்டும்.  யுதிஷ்டிரனிடம் பொறுப்பை ஒப்படைத்தாலோ அதன் பின்னர் நமக்கு வேறு கவலைகள் வேண்டாம்.  எல்லாவற்றையும் அவன் திறமையாகக் கையாளுவான்.  நமக்கும் வயதாகி விட்டது.  பொறுப்புக்களை இளம் தோளில் சுமத்திவிட்டு ஓய்வு எடுக்க வேண்டும்.  உடனே விதுரனை அழைத்த பீஷ்மர் அவரிடமும் கலந்து ஆலோசித்துவிட்டு விதுரரை உடனே காம்பில்யத்துக்கு அனுப்பி வைத்தார்.  சகோதரர்கள் ஐவரையும், குந்தியோடும், திரௌபதியோடும் ஹஸ்தினாபுரம் வரும்படி அழைப்பு விடுத்தார்.  இப்போது அவர்கள் ஐவரும் வருகின்றனர்.  வந்து கொண்டிருக்கின்றனர்.  யாதவப் படைவீரர்கள் தவிர கிருஷ்ணனும், பலராமனும் கூட அவர்களோடு வருகின்றனர்.  சுநீதனும், விராடனும் மற்றப் பல அரசர்களும், சிற்றரசர்களும் ஹஸ்தினாபுரத்தின் நட்பு நாடுகளின் அரசர்களும் அவர்களோடு வருகின்றனர்.  அவர்களை வரவேற்க வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து முடித்தாயிற்று.

4 comments:

ஸ்ரீராம். said...

கிருபாச்சாரியாரின் மைத்துனர் என்று அறியும் முன்னரே துரோணரை வேறு வழியில் பீஷ்மர் முன்னரே சந்தித்திருப்பார்தானே?

படிச்சாச்சு.

Vasishta said...

கீதாம்மா அவர்களே,

மிகவும் சுவாரசியமான உணர்வுபூர்வமான தொடராக உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி.

மேலும் இங்கு திரு. முன்ஷியின் இந்த எழுத்தின் நடை, கண்ணனை மிகவும் சாதாரண மனிதனைப் போல் காட்டுகிறது. ஆனால் பாகவதம் கண்ணனை சர்வ சக்தி படைத்த கடவுளாக காட்டுகிறது.

உதாரணமாக பாகவதத்தின் படி குரு சாந்தீபனியின் குமாரனை எமலோகம் சென்று எமதர்மனிடமிருந்தே கண்ணபிரான் மீட்டு வந்தார். ஆனால் இங்கு முன்ஷி வைவஸ்தபுரி என்ற தேசத்திலிருந்து எமன் என்னும் சாதாரண அரசனிடமிருந்து மீட்டதாக குறிப்பிடுகிறார்.

இவற்றில் எது உண்மை? அல்லது ஏன் இந்த முரண்பாடு? முக்கியமான சந்தேகம். தயவு செய்து பதிலளிக்கவும்.

sambasivam6geetha said...

வசிஷ்டருக்கே சந்தேகமா? இதில் சந்தேகப்பட ஏதுமில்லை வசிஷ்டரே, கிருஷ்ணனால் சாதிக்க முடிந்தது என்பதை தர்க்கரீதியாகச் சொல்கிறார் முன்ஷி. அவ்வளவே. வியாசரைப் படித்தவர்களுக்கு ஒரு மனிதனாகப் பிறந்தவனால் முடியுமா என்னும் கேள்வி எழும். அதற்கான விடைகளை இதில் சொல்கிறார்.

sambasivam6geetha said...

நன்றி ஶ்ரீராம், ராஜராஜேஸ்வரி.