Sunday, January 15, 2017

கண்ணன் வருவான், எட்டாம் பாகம் குருக்ஷேத்திரம்!

ராஜசூய யாகம் முடிந்து பூர்ணாஹுதியும் முடிந்த பின்னர் பாண்டவர்கள் ஐவரும் கிருஷ்ணனை இந்திரப் பிரஸ்தத்தில் சில நாட்கள் தங்கிச் செல்லும்படி கேட்டுக் கொண்டனர்.  அந்த அரச குடும்பத்தில் அனைவரும் சிறியவர் முதல் பெரியவர் வரை கிருஷ்ணன் பால் மாறாத அன்பு கொண்டிருந்தனர். கிருஷ்ணன் அங்கே இருக்கையில் மிக மோசமான ஒரு நிகழ்வு நடந்து விட்டது.  ஷால்வன் என்னும் மிலேச்ச அரசன் சௌராஷ்டிரத்தை முற்றுகை இட்டு துவாரகையை வீழ்த்தினான். உத்தவனால் அனுப்பப்பட்ட தூதுவன் இந்தச் செய்தியைக் கொண்டு வந்ததோடு மேலும் அச்சமூட்டும்படியாகப் பலவிதமான பேரழிவுகளைச் சொன்னதோடு கிருஷ்ணனை உடனே துவாரகைக்குத் திரும்புமாறு உத்தவன் கூறியதாகவும் சொன்னான். தூதுவன் மேலும் கிருஷ்ணனை வணங்கிவிட்டுக் கூறியதாவது!

“பிரபுவே! ஷால்வன் லவனிகா நதியைத் தாண்டி வந்து விட்டான். சௌராஷ்டிரம் முழுவதும் அவனால் பீதியுடன் உறைந்து போயிருக்கிறது. யாதவர்களின் மாளிகைகளும், கிராம மக்களின் குடிசைகளும் சாம்பலாகி விட்டன. பெண்கள், குழந்தைகள் என எவரையும் விட்டு வைக்கவில்லை.  ஷால்வனின் படை வீரர்கள் துவாரகையை நெருங்குவதைக் கண்டு வ்ருஷ்ணி குலத்து யாதவத் தலைவர்கள் அனைவரும் அவனை எதிர்த்துப் போராட முடிவு செய்தனர். முதல் முதல் நடந்த மோதலில் ஷாம்பன்   ஷால்வனின் அமைச்சரும் படைத்தலைவரும் ஆன க்ஷேமவ்ருத்தியைத் தாக்கினான். ஷாம்பனின் வில் வித்தைத் திறமைக்கு முன்னால் நிற்க முடியாமல் அவன் போர்க்களத்தை விட்டே ஓடினான்.”

“அதன் பின்னர் வேகாவன் என்னும் ஷாம்பனின் முக்கியப் படைத்தலைவன் ஷாம்பனை எதிர்கொண்டான். ஷாம்பன் அவன் மேல் சுழலும் தண்டாயுதத்தை ஏவி விட அதில் தாக்குண்ட அவன் கீழே விழுந்தான். அதன் பின்னன் விவினிதா என்னும் பிரபலமான தானவன் உங்கள் மகன் சாருதேஷ்னாவை எதிர்கொண்டான்.  கோபத்துடன் அவன் சாருதேஷ்னா தாக்கிய தண்டாயுதத்தை எதிர்கொள்ள முடியாத அவனும் இறந்து விழுந்தான். தன்னுடைய படை வீரர்களும், படைத்தலைவர்களும் தாக்கப்பட்டு விழுந்ததாலும் படைவீரர்களின் ஒழுங்கு முறை கெட்டுப் போனதாலும் ஷால்வன் வேறு வழியின்றித் திரும்பினான். அதன் பின்னர் இளவரசர் பிரத்யும்னர் விரைந்து சென்று போரைத் துவங்கினார். இருவருக்கும் நடுவே ஒரு கடுமையான யுத்தம் மூண்டது. இளவரசர் ஒரு பயங்கரமான அம்பால் தாக்கினார். ஷால்வன் கீழே விழுந்து உணர்விழந்தான். அவனுடன் தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் அங்கிருந்து ஓடினார்கள்.”
சிறிது நேரம் கழித்து தூதுவன் மீண்டும் தொடர்ந்தான். “உணர்வு மீண்டதும் ஷால்வன் இளவரசன் பிரத்யும்னன் மேல் அம்புகளை ஏவினான். பிரத்யும்னன் மயக்கமுற்றுக் கீழே விழுந்தான். அவனுடைய ரதசாரதி அவனை அங்கிருந்து அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றான். ஷால்வன் அவனுடைய படை வீரர்கள் அங்கிருந்து ஓடி விட்டதை அறிந்து கொண்டு அவன் மனம்  உடைந்து அவனுடைய ரதத்தில் ஏறிக் கொண்டு புகை மண்டலத்தில் அங்கிருந்து மறைந்து சென்றான். அதன் பின்னர் பிரத்யும்னன் அங்கிருந்த மற்ற யாதவர்களுடன் அடர்ந்த காட்டுக்குள் ஓடி மறைந்தான். “

“ம்ம்ம், அப்படியா? மற்ற ஸ்ரோத்திரியர்கள், பெண்கள், குழந்தைகள் சுகமாகவும் சௌகரியமாகவும் இருக்கின்றனரா?” என்று கிருஷ்ணன் கேட்டான். அதற்கு தூதுவன் பதில் சொன்னான்.”அவர்கள் அனைவரு கிரிநகர் கோட்டையில் புகலிடம் தேடிச் சென்றடைந்திருக்கின்றனர். கிரிநகர்க்கோட்டை மிகப் பாதுகாப்பானதாகவும் எல்லாவிதமான வசதிகளும் நிறைந்தும் இருக்கிறது!”

“மாட்சிமை தாங்கிய அரசர் உக்ரசேனர் பாதுகாப்பாக இருக்கிறாரா? அரச குடும்பத்துப் பெண்டிர்?”

“ஓ, அவர்கள் அனைவரும் கப்பல்களில் பிருகுகச்சாவுக்கு அனுப்பப்பட்டு விட்டனர்.”

“ம்ம்ம்ம், என் தந்தை, மாட்சிமை பொருந்திய வசுதேவர் எப்படி இருக்கிறார்?”

தூதுவனால் பதில் சொல்ல முடியவில்லை. தயங்கினான்.  சிறிது நேரம் மேலும் கீழும் பார்த்தான். அதன் பின்னர் மெதுவாகத் தொண்டையைச் செருமிக் கொண்டான். பின்னர் மெல்ல மெல்லச் சொன்னான். “மாட்சிமை பொருந்திய வசுதேவர் ஷால்வனால் கடத்தப்பட்டு சௌபதேசத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.”

“ஆஹா! என் அருமைத் தந்தை!........... அப்படிப்பட்டப் புனிதமான என் தந்தை மேல் கை வைத்துவிட்டானா அந்த ஷால்வன்?” என்ற கிருஷ்ணன் சற்று நேரம் கடுமையான மௌனத்தில் ஆழ்ந்தான். கிருஷ்ணன் சௌராஷ்டிரத்தை முற்றுகை இட்டதை ஓர் சவாலாக எடுத்துக் கொண்டான். தான் தர்மத்தைக் காப்பாற்றும் முயற்சியில் தனக்கிடப்பட்ட சவாலாகவே எண்ணினான். தன்னுடன் அங்கு வந்த யாதவ வீரர்களை அழைத்து உடனே கிளம்பத் தயாராகும்படி ஆணையிட்டான்.  படை வீரர்கள் தயாரானதும் கிருஷ்ணன் தன் அத்தை குந்தி மற்றும் பாண்டவர்கள், திரௌபதி ஆகியோரிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.  அர்ஜுனன், நகுலன் அல்லது சஹாதேவன் ஆகியோரை உதவிக்கு அழைத்துச் செல்லும்படி யுதிஷ்டிரன் கிருஷ்ணனிடம் கேட்டுக் கொண்டான். ஆனால் கிருஷ்ணன் மறுத்து விட்டான். “மூத்தவனே, எனக்கு நன்றாகத் தெரியும். பீமன், அர்ஜுனன்,நகுலன், சஹாதேவன் ஆகியோர் என்னுடன் வந்தால் மிகவும் உதவியாக இருப்பார்கள் தான். ஆனால் அந்த எதிரி ஷால்வன் இருக்கிறானே அவனுக்கு அந்தப் பகுதியின் ஒவ்வொரு அங்குலமும் மிக நன்றாக அறிவான். ஆகையால் அவன் எங்கே ஒளிந்தாலும் கண்டு பிடிக்க எனக்கோ, உத்தவனுக்கோ அல்லது சாத்யகிக்கோ தான் முடியும். அந்தப் பாலைவனத்தின் அடர்ந்த புதர்க்காடுகளில் மறைந்திருப்போரைக் கண்டு பிடிக்கப் புதியவர்களால் இயலாது. அன்னியர்களால் முடியாது. ஆகவே பீமனோ, அர்ஜுனனோ, நகுலனோ, சஹாதேவனோ வந்தால் அவர்களுக்குப் பிரச்னை தான்!” என்றான்.

“அத்துடன் இல்லாமல் இப்போது நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. இது வெறும் சௌராஷ்டிரத்தை முற்றுகையிடுவது மட்டுமல்ல. மேலும் என்னுடைய தந்தையை விடுவிப்பது மட்டுமே என் முக்கிய நோக்கமும் அல்ல. இது தர்மத்திற்கே விடப்பட்டிருக்கும் ஓர் சவால்! இந்தச் சவாலை நான், நாம் ஏற்காவிடில் நாம் அத்தோடு அழிந்தோம். நாம் என்ன செய்தாலும் சரி, எப்படி நடந்தாலும் சரி! அதெல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விடும்.  மேலும் இது தற்காப்புக்காகவோ, எங்களைப் பாதுகாத்துக் கொள்ளவோ செய்யப் போகும் யுத்தம் அல்ல. இது ஓர் முழு யுத்தம்! நிச்சயமாய்ச் சொல்கிறேன்! பார்த்துக் கொண்டே இரு!” என்றான்.

No comments: