Thursday, March 9, 2017

பிரபாவதியின் புலம்பல்! பிரத்யும்னன் கிண்டல்!

அவளுக்கு எவ்விதமான அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் குறித்து அவளிடம் கேட்டு அவளை மனதளவில் துன்புறுத்த அவன் விரும்பவில்லை.  அவ்வப்போது அவள் சில பிரார்த்தனைகளைச் சொல்லிக் கொண்டிருப்பதை அவனால் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களின் குல தெய்வமான உமாதேவியைத் தான் அவள் பிரார்த்திக்கிறாள் என்றும் தெரிந்து கொண்டான்.  மிகவும் அதீதமான உணர்ச்சிப் பிரவாகத்தில் மூழ்கி அவள் அதில் திண்டாடித் திணறிக் கொண்டிருப்பதையும் பிரத்யும்னன் தெரிந்து கொண்டிருந்தான். அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தன. அவள் ஏதோ ஓர் முடிவை விரைந்து எடுக்கப் பிரயத்தனப் பட்டு முடிவையும் எடுத்திருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டான்.

பிரபாவதி அவனைப் பார்த்தாள். தன் கைகளை அவன் மேல் வைத்தவள் என்ன நினைத்தாளோ அப்படியே அவனை இழுத்துத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். “என்ன செய்வேன் நான்? என்ன செய்வேன் நான்?” இதுவே அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அவளுடைய ஒவ்வொரு நாடித் துடிப்பிலும் இதுவே  அவளுக்குக் கேட்டது.  சிந்தித்துச் சிந்தித்து அவளுக்குத் தன் முன்னே இருக்கும் ஒரே வழி பிரத்யும்னனைத் தியாகம் செய்வது தான் என்றே தோன்றியது. அதன் மூலமே அரசனின் கொடுங்கோன்மையிலிருந்து தப்பிக்கலாம். அவள் மேல் அவன் தன் கடுமையைக் காட்ட மாட்டான். அவள் குடும்பமும் தப்பிக்கும்.  உடனடியாக அவள் தன் மனதைத் தேற்றிக் கொண்டாள்.  பிரத்யும்னனுக்கு அவளுடைய முடிவு என்னவாக இருக்கும் என்பது புரிந்து விட்டது. ஆனாலும் ஓர் பச்சைக் குழந்தையைப் போல அவன் தன்னை அவளுடைய அணைப்பில் ஈடுபடுத்திக் கொண்டு அவளைத் தேற்றினான்.

அவளும் ஓர் நிராதரவான நிலையில் தான் தன்னை அணைத்துக்கொண்டு தொங்குகிறாள் என்பதையும் கண்டான்.  அவள் எந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காலம் கடத்துகிறாள் என்பது புரியாமல் அவனும் காத்திருந்தான். அவள் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அவள் மடியில் தலை வைத்துப் படுத்தான். அவள் முகத்தையே பார்த்தான்.  அவள் என்ன முடிவு எடுத்திருக்கிறாள் என்பதை அறியக் காத்திருந்தான்.  அப்போது அவனுக்குத் திடீரென ஓர் நினைவு வந்தது. வஜ்ரநப் அவனிடம் பேசுகையில் சொன்னதை அவன் இப்போது நினைவு கூர்ந்தான்.  வஜ்ரநபி சொன்னது என்னவெனில் அவர்கள் தானவ குலத்துப் பெண்கள் தாங்கள் அருமையாகக் காதலிக்கும் ஆண்களை மன்னனின் கட்டளையின் பேரில் கொல்லத் தயங்க மாட்டார்கள் என்பது தான்! அவர்கள் இருவரும் பேசிக்கொள்கையில் வஜ்ரநப் இதைச் சொல்லி இருந்தான்.  அதிலும் இம்மாதிரி மடியில் தலை வைத்துப் படுக்கும் கணவனையோ/ காதலனையோ அந்தச் சந்தர்ப்பத்தில் தான் கொல்வார்கள் என்றும் சொல்லி இருந்தான்!

இப்போது பிரத்யும்னனுக்கு எல்லாமும் புரிந்து விட்டது. அவள் அவனைக் கத்தியால் குத்திக்கொல்லத் திட்டமிட்டிருக்க வேண்டும். அதற்காகத் தன்னை அவள் தயார் செய்து கொண்டிருக்கிறாள். அவன் இப்போது எவருடைய உதவியும் இல்லாமல் தனிமையில் அவள் மடியில் படுத்துக் கொண்டிருக்கிறான்.  அவன் தன் நிலையை எண்ணித் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான். அவள் மனதின் எண்ணவோட்டம் எப்படி இருக்கும் என்பதையும் புரிந்து கொண்டான்.  அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தன் உதடுகளைக் கடித்துக் கொண்டாள்.  தன் தலையில் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்துக் கொண்டாள். அந்த ஆயுதத்தின் மூலமே அவள் தனக்கிடப்பட்டிருக்கும் அரசாணையை நிறைவேற்ற வேண்டும்.

பிரத்யும்னன் அவள் மடியில் தன் கைகளைப் பரவ விட்டான். அவள் தன் கண்களை மூடிக் கொள்கிறாளோ என்று அவன் நினைத்தான். அவள் மீண்டும் மீண்டும் தன் உதடுகளைக் கடித்துக் கொண்டாள். தனக்குத் தானே அவள் பேசிக் கொள்வதை அவன் கேட்டான். “இல்லை, இல்லை, என்னால் இதைச் செய்ய இயலாது!.......ம்ஹூம், இல்லை, இல்லை, நான் கட்டாயம் செய்ய வேண்டும்! ஆம் கட்டாயமாய்!.......”இவ்வாறு அவள் தனக்குள்ளாகப் புலம்பிக் கொண்டிருந்தாள். அவள் தனக்கிடப்பட்டிருக்கும் ஆணையை நிறைவேற்றப் போகிறாள் என்னும் எதிர்பார்ப்பில் பிரத்யும்னன் தன் கண்களைத் திறந்து அவளைப் பார்த்தான் சிரித்தான். கத்தியைப் பிடித்திருந்த அவள் கையைத் தானும் பிடித்துக் கொண்டான்.  அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பிரத்யும்னன் அவள் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு கையிலிருந்த கத்தியைப் பிடுங்கினான். பிரபாவதி வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட பயத்திலும் ஆச்சரியத்திலும் மூழ்கினாள். கத்தி அவளையும் அறியாமல் கீழே விழ, “என்னால் முடியாது! என்னால் முடியாது!” என்று புலம்பினாள் பிரபாவதி!

1 comment:

ஸ்ரீராம். said...

அடுத்த பகுதிக்காய் ஆவலுடன்...