Monday, May 30, 2016

ஹஸ்தினாபுரத்தில் த்வைபாயனர்!

த்வைபாயனர் புன்னகையுடன், “எனக்கு அந்த மந்திரங்கள் அனைத்தும் நன்றாகவே தெரியும். மஹா அதர்வ ரிஷி அவற்றை முதலில் நதிக்கரையில் பைலருக்காக ஓதிய போதும் பின்னர் இங்கே வந்தும் ஓதியபோதும் அவற்றை நன்கு கவனித்துப் பாடமாக்கிக் கொண்டு விட்டேன்.” வாடிகா ஆச்சரியத்துடன் தன் கண்களை விரித்தாள். “நீ மிகவும் அற்புதமான இளைஞன். எப்படிப்பட்ட நினைவு சக்தி உனக்கு இருக்கிறது! எனக்கு மட்டும் உன்னுடைய ஞாபக சக்தி இருந்தால்!” என்று தன்னையும் மீறிச் சொன்னாள்.

“அது சரி வாடிகா! நான் எப்படி இந்த இரவு நேரத்தில் வெளியேறுவது? இங்கிருந்து எங்கு செல்வதற்கும் ஆன வழி எனக்குத் தெரியாது. அதோடு உடல்நலமில்லாமல் இருக்கும் என் நண்பன்! அவனை எப்படி இங்கு விட்டுச் செல்வது?”

“ஓ, அவனைக் குறித்துக் கவலைப்படாதே, த்வைபாயனா! அவன் இன்னும் சில வாரங்கள் இப்படித் தான் மயக்கத்தில் ஆழ்ந்து இருப்பான். ஆனால் தந்தை அவன் சரியாகி விடுவான் என்று சொல்லி இருக்கிறார். நாங்கள் அவனைப் பார்த்துக் கொள்கிறோம். இப்போது என்னுடன் வா. நாங்கள் உன்னை மலை அடிவாரத்துக்கு அழைத்துச் செல்கிறோம். நக்ஷத்திரங்களின் உதவியோடு அடிவாரம் செல்வது எளிதாக இருக்கும். விரைந்து வா!” என்றாள் வாடிகா. அவர்களுடைய மரக்கட்டையால் செய்யப்பட்டுத் தோல் வார் பொருத்தப்பட்ட நடையன்களை அவர்கள் அணிந்து கொண்டனர். பக்கவாட்டுக் கதவைத் திறந்து கொண்டு வேகமாக வெளியேறினார்கள்.

அவர்கள் மூவரும் மலை அடிவாரத்தை அடைந்த போது த்வைபாயனர் அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார். சுமாந்துவின் பக்கம் திரும்பிய அவர், “சுமாந்து, குருதான் சீடர்களை ஸ்வீகரித்துக் கொள்வார். ஆனால் என் விஷயத்தில் நான் உன் தந்தையை என் குருவாக ஸ்வீகரித்துக் கொண்டிருக்கிறேன். மஹா அதர்வ ரிஷி ஜாபாலி அவர்கள் என்னுடைய குரு. ஆகவே நாம் குரு வழிச் சகோதரர்களாகி விட்டோம். உன்னைக் கட்டித் தழுவி விடை பெறுகிறேன்.” என்ற வண்ணம் சுமாந்துவை ஆவலுடனும், அன்புடனும் கண்களில் நீர் வழியக் கட்டித் தழுவிக் கொண்டார். பின்னர் வாடிகாவைப் பார்த்துக் கைகளைக் கூப்பிய வண்ணம்,” வாடிகா, சகோதரி, உன்னுடைய அன்பையும், கருணையையும் நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன். நான் விரைவில் திரும்பி வருவேன். உன் தந்தையின் ஆசிகளைப் பெறுவேன். நாம் அனைவரும் சேர்ந்து தர்மக்ஷேத்திரத்தை மீட்டெடுப்போம்.” என்று கூறி விடை பெற்றார்.

வேதங்கள் மூன்றா அல்லது நான்கா என்பது குறித்து அந்தக் கால கட்டத்தில் வேத விற்பன்னர்களிடையே பெரும் வாக்குவாதங்கள் இருந்து வந்தன. அதர்வ வேதம் அவ்வளவு எளிதாக எவராலும் ஒத்துக்கொள்ளப்படவில்லை. மெல்ல மெல்ல நாளாக ஆகவே அது பழக்கத்துக்கு வந்ததாகத் தெரிகிறது. முக்கியமான இடத்தைப் பெற்றதாகவும் தெரிய வருகிறது. அதர்வ வேதத்தை நன்கறிந்தவர்கள் அதை வேதத்திலேயே மிக உயர்ந்ததொரு பிரம்ம வித்யை என்றே சொல்லி வந்தனர்.  இந்தப் பின்புலத்தை நினைவில் கொண்டு மேலே படிக்கவும்.  இப்போது நாம் த்வைபாயனரைப் பின் தொடர்வோம்.

த்வைபாயனர் ஹஸ்தினாபுரம் வந்தடைந்தார். அதில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் தர்மக்ஷேத்திரத்தைப் புனர் நிர்மாணம் செய்ய ஆவலுடன் இருக்கும் அவருக்கு இந்த ஹஸ்தினாபுரத்து மக்களின் இசைவு முக்கியத் தேவை என்பதோடு இந்நகரைச் சுற்றியே அனைத்து மாற்றங்களையும் ஏற்படுத்தவும் வேண்டி இருக்கும். இதை ஆண்டு வந்த குரு வம்சத்தின் சக்கரவர்த்தி ஷாந்தனு குருவம்சத்தினரைப் போரிலும், சமாதானத்திலும் ஈடுபடுத்தி ராஜ்யத்தை விஸ்தரித்திருந்தான். ஷாந்தனுவுக்கு இருபது வயது முடிவதற்கு முன்னரே அவன் அரியணை ஏறி விட்டான். அக்கம்பக்கத்து ஆரியர்களைத் தவிரவும் கூட்டம் கூட்டமாக வந்த ஹைஹேயர்களை முறியடிப்பதிலும் பல காலம் செலவிட்டிருந்தான். வருடக் கணக்காக யுத்தம் நடந்தது. ஒருவழியாக அவர்களை ஒழித்திருந்தான். தன்னுடைய இடைவிடா முயற்சியாலும், நல் ஆலோசனைகளாலும், மன உறுதியாலும் ஆர்யவர்த்தம் முழுமைக்கும் தன்னுடைய அதிகாரம் செல்லும்படி ஆக்கியதோடு பிரஜைகளுக்கும் அமைதியான வாழ்க்கையை நடத்தும்படியான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்திருந்தான். இப்போது 56 வயது ஆகும் ஷாந்தனு, கடந்த முப்பத்தைந்து வருடங்களில் பல்வேறு சாகசங்களையும் செய்து சாதனைகளைப் படைத்துத் தன்னைச் சக்கரவர்த்தியாக நிலைநாட்டிக் கொண்டிருந்தான். இதற்கு முன்னர் அவனின் முன்னோர்களில் பிரபலமான பரதச் சக்கரவர்த்தி தான் ஆர்யவர்த்தத்தின் சக்கரவர்த்தி என அறியப்பட்டிருந்தான்.

இந்த யுத்தம் ஏற்படுத்திய மாபெரும் குழப்பத்தில் ஆரியர்கள், நாகர்கள் மற்ற இனத்தவர்கள் அனைவருமே தங்கள் தங்கள் இனங்களையும் வேறுபாடுகளையும் மறந்துவிட்டு ஒன்றாகக் கூட்டுச் சேர்ந்து பொதுப்பகைவனை அழித்தொழித்தார்கள். அவர்களுக்குள்ளாகத் திருமண பந்தங்களும் ஏற்பட்டன. இதன் காரணமாக ஆரியக் கடவுளரின் கோயில்களில் மெல்ல மெல்ல மற்ற தெய்வங்களுக்கும் இடம் கொடுக்கப்பட்டன. இந்த யுத்தம் நடந்த சமயங்களில் அனைத்துப் பழமையான குருகுலங்களும் அழிக்கப்பட்டிருந்தன. அதிலும் தர்மக்ஷேத்திரம் ஒரு காலத்தில் வளத்தோடும் நிறைய ஆசிரமங்களாலும், குருகுலங்களாலும், பழைமையான பல ரிஷி, முனிவர்களாலும் அவர்களின் சீடர்களாலும் சிறப்பாகத் திகழ்ந்து வந்தது. உலகுக்கே தர்மத்தின் வழிகாட்டியாகத் திகழ்ந்தது என்றால் மிகை இல்லை. தர்மக்ஷேத்திரத்தின் ரிஷி, முனிவர்கள் சொல்லும் வாக்கையே வேத வாக்கு என்றும் அவற்றுக்கு மறு வாக்கு இல்லை என்றும் மக்கள் நம்பி இருந்தனர். ஆனால் அவை எல்லாம் இன்று பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் ஆகிவிட்டது. இப்போது நினைக்கையில் மனதில் வேதனையும் வலியுமே மிஞ்சுகிறது.

ஒவ்வொரு ஆரியனின் வீட்டிலும் எரிந்து கொண்டிருந்த அணையா நெருப்பு என்பது இப்போது தன் முக்கியத்துவத்தை இழந்து விட்டது. பல சமயங்களிலும் வருடக்கணக்காக நடக்கும் யாகங்கள், யக்ஞங்கள் ஆகியன நூற்றுக்கணக்கான ஸ்ரோத்ரியர்களால் மிக விமரிசையாகவும் விரிவாகவும் நடத்தப்பட்டு வந்தவை எல்லாம் இப்போது மாறி விட்டது. ஒரு மாபெரும் பல்கலைக் கழகம் போலத் திகழ்ந்த தர்மக்ஷேத்திரத்தின் புகழ் மங்கி விட்டது. ஆனால் ஷாந்தனு மெல்ல மெல்ல இவற்றை எல்லாம் மாற்றி வருகிறான். தாற்காலிகமாக இவை எல்லாம் மீண்டும் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அக்கம்பக்கத்து நாடுகளின் அரசர்கள் அனைவரும் இவற்றை ஆதரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஷாந்தனுவும் தன் பங்குக்கு மிகவும் தாராளமாகவே ரிஷி, முனிவர்களுக்காகச் செலவு செய்தான். ரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் மற்றத் துறவிகளுக்கும் தன் அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களின் நிலங்களை தானமாக எடுத்துக் கொள்ள வைத்தான். ஆனாலும் அவர்களுடைய பழைய கலாசாரம் முற்றிலும் ஒழிந்தும் போகாமல், புதியதொரு கலாசாரத்துக்கு மாறவும் மாறாமல் குழப்பமானதொரு கலாசாரமே நிலவி வந்தது. ஒரு சிலர் வயது வந்தோர் முன் காலத்தில் வாழ்ந்து வந்த மூத்த ஆசாரியர்கள் சொல்லிப் போயிருந்த சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் விடாமல் பின்பற்றி வந்தனர். மற்றவர்கள் அநேகமாக சிவனை வழிபட ஆரம்பித்திருந்தார்கள். சிவன் பயப்படுத்தும் கடவுளாக இருந்தாலும் அனைவருக்கும் நிறைய வரங்களையும் அதன் மூலம் பல பரிசுகளையும் கொடுத்தார்.

மற்றவர்கள் தங்களுக்குள்ளாக ஒரு நீதியை ஏற்படுத்திக் கொண்டனர். அதற்கெனத் தனி விதி ஏதும் இல்லை. சுயக் கட்டுப்பாடோ, ஆன்மக் கட்டுப்பாடோ இல்லாமல் இருந்தது. எந்தவிதமான மத்திய அதிகார வர்க்கமும் அவர்கள் மேல் எவ்விதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கவோ, அவர்களின் நடத்தைகளை ஒழுங்கு செய்யவோ அவர்களை ஒன்று சேர்த்து ஒரே விதமான நடத்தைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தவோ முயலவில்லை. ஆனாலும் அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்த ஒரே ஒரு விஷயம் என்னவெனில் அது வேதம் தான். வேதம் காட்டிய வழியில் செல்ல வேண்டும் என்னும் ஒரே எண்ணமே அவர்களை ஒருங்கிணைத்தது. வேத விற்பன்னர்கள் அவற்றை நன்கு கற்றுச் சீடர்களுக்கும் கற்பித்து அது சொல்லும் வழியில் தர்மத்தின் பாதையில் தங்களை நடத்தும் என மனமார நம்பினார்கள்.




No comments: