Tuesday, October 26, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

ஜராசந்தனின் திட்டமும், ருக்மிணியின் கலக்கமும்

ஆனால் ருக்மியோ தன் தங்கைக்கு சிசுபாலனை விடவும் சிறந்த மாப்பிள்ளை கிடைக்காது என்றும் தனக்கு இதில் முழு சம்மதம் எனவும் கூறினான். பீஷ்மகன் திட்டவட்டமாய் அதை மறுத்து ருக்மிணி தன் சுயம்வரத்தில் சிசுபாலனைத் தேர்ந்தெடுத்தாளானால் தனக்கு அதில் ஆக்ஷேபணை எதுவும் இல்லை என்று கூறினான். ஜராசந்தன் பீஷ்மகனைப் பார்த்து, “இதோ பாரும் பீஷ்மகரே! சுயம்வரம் தானே! நீர் ஏற்பாடு செய்யும். நடக்கட்டும். சிசுபாலன் கட்டாயம் அதில் பங்கு பெறுவான். வெற்றியும் பெறுவான். நான் கவனித்துக்கொள்கிறேன் அந்த விஷயத்தை. அவனும் ஒரு மாவீரன் என்பதை மறந்தீரோ? அவன் சுயம்வரத்தில் என்ன நிபந்தனை இருந்தாலும் அதை வென்றுவிட்டு உங்கள் மகள் ருக்மிணியின் கரம் பிடிப்பான். சிசுபாலனைத் தவிர வேறு எவரும் அந்தப் போட்டியில் வெல்லாதபடிக்கு நான் கவனித்துக்கொள்கிறேன். நீர் அந்த விஷயத்தை என்னிடம் விட்டுவிடும்.” என்றான். ருக்மியும் ஜராசந்தனுக்கு இசைவாகப் பேசினான். “தந்தையே, நீர் ஒன்றும் கவலைப்படவேண்டாம். பெரும்பாலான அரச குடும்பங்களில் சுயம்வரம் என்பதைப் பெயருக்குத் தான் நடத்துகிறார்கள். ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட அரசகுமாரனோ, அரசனோ வெல்வதற்கு இசைவாக மற்றவர்கள் ஒத்துப்போவதும் வழக்கம் தான். ஆகவே நானும், சக்கரவர்த்தியும் அதைக் கவனித்துக்கொள்கிறோம். தாங்கள் சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்!” என்றான்.

அரை மனதாக பீஷ்மகன், “சரி, பின்னர் அந்த விஷயத்தை நான் உங்கள் இருவரிடமும் விட்டுவிடுகிறேன்.” என்றான். ஜராசந்தன் அதற்கு, “இந்த விஷயம் நமக்கு மட்டும் தெரிந்ததாய் இருக்கவேண்டும். நான் சிசுபாலனிடம் முதலில் பேசிவிடுகிறேன். சிசுபாலன் சொன்னால் தாமகோஷனுக்கு மறுக்கவும் முடியாது. மகனின் விருப்பத்தைத் தந்தை எப்படி மறுக்க முடியும்?? அதற்குள் நீர் இந்த மழைக்காலம் முடிந்ததும், எல்லா அரசர்களுக்கும் சுயம்வரத்தைப் பற்றிய அழைப்பிதழை முறையாக அனுப்பி வையுங்கள். ஆனால் அந்த அரசர்கள் நாம் தேர்ந்தெடுத்தவர்கள் மட்டுமே. அதைத் தவிர மற்றவர்க்கு அனுப்ப வேண்டாம்!” என்றான். பீஷ்மகன் யோசனையுடன், “ம்ம்ம்ம்ம்???? எனில் உம் பேத்திக்கும், என் மகன் ருக்மிக்கும் திருமணம் நடக்கவேண்டும் என்று சொன்னீர்களே, அது பற்றி என்ன முடிவெடுத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டான். ஜராசந்தன் அதற்கு மகத நாட்டில் சுயம்வர முறைப்படி மணமகனைப் பெண்கள் தேர்ந்தெடுப்பதில்லை என்று கூறிவிட்டு. ருக்மிணிக்கும் சிசுபாலனுக்கும் விவாஹம் முடிந்ததுமே அனைவரும் கிரிவ்ரஜத்துக்கு வந்து ருக்மிக்கும் தன் பேத்திக்கும் நடக்கவிருக்கும் திருமணத்தில் கலந்து கொள்ளும்படி ஏற்பாடுகள் செய்யப் படும் என்றான். ருக்மி ஆநந்தத்தின் உச்சியில் இருந்தான். ஆனால் அவன் மனைவியோ?????

மாளிகையின் மேல் மாடியில் ஒரு மண்டபத்தில் ஜராசந்தனும், அவனுடன் வந்த மற்ற அரசர்களும் பீஷ்மகனோடு பேசிக்கொண்டிருந்தனர். அந்த மண்டபத்திற்கு அடுத்து அதை ஒட்டியே ஒரு சிறு தாழ்வாரமும், அதை ஒட்டி ஒரு உப்பரிகையும் இருந்தது. உப்பரிகைக்குக் காற்று வாங்க அரசகுடும்பத்துப் பெண்கள் வருவது வழக்கம் என்பதால் அந்தப் பக்கம் இவர்கள் பார்வையே போகவில்லை. அதே சமயம் அரச குடும்பத்துப் பெண்கள் அங்கே இருக்கலாம் என்ற யோசனையும் எவருக்கும் எழவில்லை. அங்கே இருந்தது, மேற்கண்ட சம்பாஷணைகளின் மூலம் பாதிக்கப் படப்போகும் ருக்மிணியும், ருக்மியின் மனைவியான சுவரதாவும். சுவ்ரதாவின் முகம் இறுகிக் கிடந்தது. தன் மனதில் தோன்றிய உணர்ச்சிகளை அடக்கிக்கொள்ள அவள் படாத பாடு பட்டாள்.

ஏற்கெனவே அவளுக்கு கோமந்தக மலைத் தொடரில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி ருக்மி கூறியதில் முரண்பாடுகள் தெரிந்தன. வேறு ஏதோ நடந்திருக்கவேண்டும், அதை ருக்மி தன்னிடம் மறைக்கிறான் என்ற வரையில் அவளுக்கு நிச்சயம் இருந்தது. சாதாரணமாய்ப் பெண்களுக்கு என இருந்த ஆவலோடு மட்டுமில்லாமல் தன் கணவனும் சம்பந்தப் பட்டிருப்பதால் அவளுக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள ஆவல் இருந்தது. ஆகவே, அவள் மெதுவாய் ஒருவரும் அறியாமல் இந்த உப்பரிகைக்கு வந்தாள். அவள் செல்வதை எப்படியோ பார்த்த ருக்மிணியும் அவளோடு சேர்ந்து கொள்ள ருக்மிணியைத் தடுக்க முடியாத சுவ்ரதா அவளையும் அழைத்துச் சென்றாள். ருக்மிணிக்கோ கண்ணனைப் பற்றிய தகவல்கள் ஏதும் தெரியாமல் மிகவும் கவலையாக இருந்தது.

சஹ்யாத்ரி மலைக்குப் போய்ச் சேர்ந்தானா, அங்கே என்ன நடந்தது என்பதை அறிவதற்குள் ஜராசந்தன் அவள் தமையன் ருக்மியையும் அழைத்துக்கொண்டு கண்ணனை வேட்டையாடக் கிளம்பிவிட்டான். கண்ணனுக்காக அவள் இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்தித்துக்கொள்வதைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை அவளுக்கு. மேலும் தன் தமையனும், அவனுடைய தோழர்களும் இந்த வேட்டையில் தோல்வி அடைந்தால் பல விரதங்களையும், பிரார்த்தனைகளையும் பூர்த்தி செய்வதாயும் உறுதி பூண்டிருந்தாள். ஆகவே அவள் தமையன் வந்து சொன்ன கதையைக் கேட்ட அவள், கண்ணன் உயிரோடு இருக்கிறான் என்று தெரிந்து சந்தோஷம் கொண்டாலும், கண்ணன் தன் தமையனாலும், ஜராசந்தனாலும் மன்னிக்கப்பட்டு தப்பி ஓடிவிட்டான் என்பதை ஏற்கவே முடியவில்லை. அவள் அதில் ஏமாற்றமே அடைந்தாள். மேலும் அவள் தமையன் கண்ணனை எந்த அளவுக்கு வெறுக்கிறான் என்பது ருக்மிணிக்கு நன்கு தெரியும். ஆகவே தன் தமையனும் கண்ணனைத் தப்பி ஓட விட்டான் என்பது அவளுக்கு ஆச்சரியத்தையே அளித்தது.

அவளால் இதை நம்பவே முடியவில்லை. இவ்வளவு பெருந்தன்மையுள்ளவனா ருக்மி?? ம்ஹும் இருக்கவே முடியாது. ம்ம்ம்ம்ம்??? வேறு ஏதோ பெரிய விஷயமாக நடந்திருக்கிறது. ஆனால் எவரும் அதைப் பற்றிப் பேச மறுக்கின்றனர். எல்லாருமே அதை மறைக்கின்றனர். ஆகவே இப்போது தன் அண்ணியோடு ஒத்துப் போய்த் தான் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். சாமர்த்தியமாக சுவ்ரதாவுடன் சேர்ந்து கொண்ட ருக்மிணி தானும் போய் மந்திராலோசனையில் பேசிக்கொண்டதை எல்லாம் கேட்டாள்.


இருவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகவே பேசினார்கள். ருக்மிணிக்குத் தன் கல்யாணம் சிசுபாலனோடு நிச்சயிக்கப் படுவது அதிர்ச்சியைத் தந்தது. சுவ்ரதாவோ, தனக்கு இளையவள் ஒருத்தியை அதுவும் பெரியதொரு சாம்ராஜ்யச் சக்கரவர்த்தியின் பேத்தியைத் தன்னைவிடப் பல விதங்களிலும் உயர்ந்த ஒரு ராஜகுமாரியைத் திருமணம் செய்து கொள்ளப்போகும் தன் அருமைக் கணவனின் பச்சைத் துரோகத்தை எண்ணி மனம் நொந்தாள். அவள் முகம் பார்க்கச் சகிக்கவில்லை. அவள் துயரத்தைக் கண்ட ருக்மிணி இதுதான் சமயம் என எண்ணித் தன் அண்ணியை இப்போது தன் பக்கம் திருப்பித் தனக்கு அந்தரங்க சிநேகிதியாக ஆக்கிக் கொள்வதே சிறந்த வழி என்று தீர்மானித்தாள். தீர்மானிப்பதும், அதைக் காரியத்தில் நிறைவேற்றுவதும் ருக்மிணிக்கு ஒன்றே. ஆகவே உடனே அதை அமுலாக்கினாள்.

பரிகாசமும், குறும்பும் கலந்த சிரிப்போடு, “ என் அருமை அண்ணி, உன்னை இப்போது ஜராசந்தனின் பேத்தி முந்தப் போகிறாள். எனக்கு ரொம்ப சந்தோஷம் என்னவென்றால் உனக்கு ஒரு அருமைத் தோழி கிடைக்கப் போகிறாள். ஆனால் அவள் என்னையும் உன்னையும் போல் எப்போதும் சண்டை போடமாட்டாள். உன்னுடன் ஒத்துப் போவாள் பாரேன்!” என்றாள்.

சுவ்ரதாவின் கோபம் எல்லை மீறியது. “பேசாதே! ருக்மிணி, நான் பிறந்ததுமே இறந்திருக்கவேண்டும்! ஏன் பிறந்தேன்?” சுவ்ரதாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடி அவள் சேலையை நனைத்தது. "ஓஓஓஓ, என் அருமை அண்ணி, உனக்கு வயதாகிவிட்டதல்லவா?? அதுதான் என் அண்ணன் இளமையான இன்னொரு பெண்ணைத் தேடிக்கொள்கிறான் போலும்!" என்றாள் ருக்மிணி. சுவ்ரதா, "உனக்கோ, உன் அண்ணனுக்கோ என்னிடம் உண்மையான பாசமோ, அன்போ சிறிதும் இல்லை. நான் அறிவேன்." என்றாள் சுவ்ரதா. ருக்மிணி இப்போது தன் சிரிப்பை நிறுத்திக்கொண்டு, "அண்ணி, அப்படி எல்லாம் எதுவும் இல்லை, நான் உன்னுடன் சிறிது விளையாடினேன். எப்போதுமே உன்னை என் சிநேகிதியாகவே நான் எண்ணி வந்திருக்கிறேன். தாயற்ற எனக்கு உன்னிடம் மிகவும் பாசமும் உண்டு. அன்பும் உண்டு. ஆனால் நீ இதுவரையிலும் என்னிடம் உன் அன்பைக் காட்டவே இல்லையே?? எப்போதுமே என்னுடன் கோபமாகவே இருந்து வந்திருக்கிறாயே?" என்று உண்மையான வருத்தம் தொனிக்கச் சொன்னாள்.

Sunday, October 24, 2010

கண்ணன் வ்ருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

திருமணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன!

ஸ்வேதகேது அநுவிந்தனைப் பார்த்து, “நான் கரவீரபுரத்தில் இருந்த சமயம் நீ கிளம்பிவிட்டாய் என்ற செய்திகிடைத்தது. அங்கே கொலைகார ஆதிவாசிகள் இருக்கின்றனர். கோமந்தகமலைக் காடுகளை அவர்களே ஆக்கிரமித்துள்ளனர். உனக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருக்குமோ என அஞ்சினேன். ஸ்ரீகாலவனின் படைகளை வழிநடத்திக்கொண்டிருந்த எனக்கு அவர்களோடு சிறிது பரிச்சயம் உண்டு. உன்னை எவ்வகையிலேனும் காக்க எண்ணினேன். ஆனால் நல்லவேளையாய் நீ கிளம்பிவிட்ட செய்தி கிடைத்தது. உடனே ஓடோடியும் வந்தேன். உன்னையும், விந்தனையும் இங்கே பார்த்ததும் மனதுக்கு நிம்மதி!” என்றான். அநுவிந்தனுக்குக் கண்ணீரே வரும்போல் இருந்தது. நன்றியினால் அவன் நெஞ்சம் விம்மியது. ஜராசந்தனுக்கும், மற்றவர்களுக்கும் தன் ஆசார்யன் ஸ்வேதகேதுவை அறிமுகம் செய்து வைத்தான். ருக்மி ஸ்வேதகேதுவைப் பார்த்து, “நீ கிருஷ்ண வாசுதேவனைப் பார்த்தாயா?” என வினவினான்.

“நான் ஸ்ரீகாலவன் கிருஷ்ண வாசுதேவனைச் சந்திக்க நகருக்கு வெளியே சென்றதைப் பார்த்தேன்.” நிதானமாயும் அமைதியாகவும் எவ்வித உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமலும் பதிலளித்தான் ஸ்வேதகேது. ருக்மி அநுவிந்தனின் கோரிக்கையான குண்டினாபுரத்துக்கு ஸ்வேதகேதுவும் வரவேண்டும் என்பதை நிறைவேற்றச் சொல்லி வற்புறுத்தினான். ஸ்வேதகேது எதையும் வெளிக்காட்டவில்லை. அவர்களோடு சென்றான். போகும்போதே கோமந்தகமலையில் கண்ணன் அடைந்த வெற்றிகளைப் பற்றி அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டான். ஸ்வேதகேதுவுக்குக் கரவீரபுரத்தில் நடந்தவை எல்லாம் கண்முன்னே தோன்றின. ஷாயிபாவின் மோகத்திலிருந்து தன்னைக் கண்ணன் விடுவித்ததை எண்ணி ஆச்சரியம் அடைந்தான்.

மேலும் ஷாயிபாவின் துர் ஆங்காரத்தையும் அவள் கண்ணனைப் பழிவாங்க வந்தும், அதற்குச் சற்றும் கலங்காமல் கண்ணன் அதை அமைதியாக எதிர் கொண்டு அவளைச் சமாளித்ததையும் எண்ணி எண்ணி வியப்புற்றான். கண்ணனின் அளவுக்கு மீறிய கருணையால் அவள் தாங்க முடியாமல் அழுததையும் எண்ணிப் பார்த்தான். இதை எல்லாம் எண்ணும்போதே அவன் மனம் துயரத்திலும் ஆழ்ந்தது. இவற்றை எல்லாம் நினைத்துப் பார்க்கக் கூட அவன் விரும்பவில்லை. ஷாயிபா எப்படியோ போகட்டும், இனி கண்ணன் பாடு, அவள் பாடு! கண்ணன் எவ்வகையிலேனும் அவளைச் சமாதானம் செய்து கொள்ளட்டும்.

சில நாட்கள் பிரயாணத்தின் பின்னர் அவர்கள் குண்டினாபுரத்திற்கு வந்து சேர்ந்தனர். அரசன் பீஷ்மகன் அனைவரையும் அன்போடும், மரியாதையோடும் வரவேற்றுத் தக்க மரியாதைகளைச் செய்தான். ஜராசந்தன் நிலையில் வேறொருவர் இருந்தால் அவமானத்தால் மனம் புழுங்கிச் செத்தே போயிருப்பார்கள். ஆனால் ஜராசந்தன் கண்ணனைப் பழிவாங்க வேண்டித் தன்னைச் சமாளித்துக்கொண்டான். அவன் தன் கதையை ஒரு மாதிரியாகத் தேவையான விஷயங்களை மட்டும் சொல்லி பீஷ்மகனை அதையே உண்மை என நம்ப வைத்தான். பல சம்பவங்கள் மறைக்கப் பட்டன. ஆனால் மறக்காமல் சேதி நாட்டரசன் தாமகோஷனின் நல்லெண்ணத்தையும், அவனுடைய விசுவாசத்தையும், பெருந்தன்மையையும் தன்னையும் கண்ணனையும் ரத்தம் சிந்த வைக்காமல் காப்பாற்றியதையும் கூறினான். பாவம் வசுதேவன், தன்னுடைய அருமைக் குமாரர்கள் இருவரையும் இழந்திருப்பான். தாமகோஷனின் நல்லெண்ணத்தைத் தான் புரிந்து கொண்டு அந்த இரண்டு இடைச்சிறுவர்களையும் பெருந்தன்மையோடு மன்னித்து விட்டு விட்டதாயும் கூறினான். அவன் அவ்வாறு செய்யவில்லை எனில் அவன் சக்கரவர்த்தி என்பதற்கு என்ன பொருள்??? இம்மாதிரியான சிறுபிள்ளைத் தனமான வேலைகளில் ஈடுபடும் சிறுவர்களை ஒரு சக்கரவர்த்தியான தான் மன்னிக்கவோ, மறக்கவோ செய்யாமல் தண்டிப்பது அழகல்லவே! நல்லவேளையாக தாமகோஷன் சரியான சமயத்துக்கு இதைச் சுட்டிக் காட்டினான். அவன் இல்லை எனில் தானும் தவறு செய்திருக்கலாம்.

ஜராசந்தன் இந்தக் கதையைச் சொன்ன விதத்திலும், அதை அவன் திரும்பத் திரும்பக் கூறிய விதத்திலும், ருக்மிக்கே நடந்தது இதுதான் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. மேலும் ஜராசந்தன் பீஷ்மகனைப் பார்த்து, “பீஷ்மகா, கண்ணனோ, பலராமனோ அரசர்கள் அல்ல. குறுநில மன்னர்கள் கூட இல்லை. ஷூரர்களின் தலைவன் ஆன வசுதேவனின் பிள்ளைகள். அவர்களோடு பொருதுவது நம் சாம்ராஜ்யத்தின் பெருமைக்கு இழுக்கன்றோ?? நாம் அந்த விஷயத்தை மறந்துவிட்டு வேறு உருப்படியான காரியங்களைக் கவனிக்கலாம்.” என்று ரொம்பவே பெருந்தன்மை குரலில் தொனிக்கக் கூறினான். கூறும்போதே அவன் மனம் பதறியது. உடலே எரிந்தது. ஆனால் பீஷ்மகனோ அவற்றை உண்மை என்றே நம்பி, “மாமன்னரே, நாம் இப்போது என்ன செய்யலாம்?? எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்?” என்று ஆலோசனை கேட்டான். “நாம் மன்னர்கள், மாமன்னர்கள், சாம்ராஜ்யச் சக்கரவர்த்திகள், குறுநில மன்னர்கள் அனைவரும் ஒற்றுமையாக வலிமையானதொரு சமூகத்தை உருவாக்கவேண்டும். அந்த இடைச்சிறுவர்களின் பின்னால் போய் அவர்களை வேட்டையாடுவதை நிறுத்த வேண்டும்.”

ஜராசந்தன் சிரித்துக்கொண்டே இதைச் சொன்னதைக் கேட்டதும், அவனோடு கூட வந்திருந்த மன்னர்களும், இளவரசர்களும், அவனுடைய வற்புறுத்தலின் பேரிலேயே தாங்கள் அனைவரும் ஜராசந்தனுக்குத் துணை போய் சஹ்யாத்ரி மலைத் தொடரில் கண்ணனையும், பலராமனையும் வேட்டையாட நேர்ந்தது என்பதை மறப்பதைத் தவிர வேறு வழியில்லை என நினைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பீஷ்மகன், “நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதற்கு இப்போது அவசியமும் ஏற்பட்டுள்ளது. கம்சன் இறந்ததன் மூலம் மதுரா நகரம் சக்கரவர்த்தி ஜராசந்தனின் ஆட்சியிலிருந்து விலகிச் சென்று விட்டதை நாம் அறிவோமே?” என்றான். “ஓஓ, அது ஒன்றும் பிரமாதம் இல்லை, வெகுநாட்களுக்கு அவர்களால் மதுராவைக் காக்க முடியுமா?? கவலை வேண்டாம், பீஷ்மகரே, நான் சொல்ல வந்த விஷயமே வேறு. நாம் நம் குடும்பங்களை உறவு கொள்ள வைப்பதன் மூலமே நம்மிடையே உள்ள பந்தத்தை இறுக்கிக் கொள்ள முடியும். எனக்கு ஒரு பேத்தி இருக்கிறாள். அவளை ருக்மிக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன். “ என்றான் ஜராசந்தன்.

ருக்மிக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது என்றாலும் இந்த வேண்டுகோள் அவனுக்குத் திருப்தியை அளித்தது. கம்சன் எவ்வாறு முக்கியத்துவம் பெற்றிருந்தானோ அதைவிடக் கூட முக்கியத்துவமும், அதிகாரமும் தனக்குக் கிடைக்கும் என மகிழ்ச்சி அடைந்தான். பீஷ்மகனோ வெளிப்படையான இந்த வேண்டுகோளால் அதிர்ச்சியே அடைந்தான். ஒருவேளை தாமகோஷன் தன் குமாரன் சிசுபாலனுக்கு ருக்மிணியைக் கேட்டிருந்தால் இவ்வளவு அதிர்ச்சி ஏற்பட்டிருக்காதோ? அதை ஒருவாறு ஏற்கலாம். ஜராசந்தன் எங்கே? நம் குமாரனுக்கு அவனுடைய மகன் வயிற்றுப் பேத்தியைத் திருமணம் செய்து வைப்பதாவது?? பீஷ்மகன் வெளிப்படையாகவே ஜராசந்தனிடம், “உங்கள் பேத்தியை வேறு சக்தி வாய்ந்த மன்னருக்கோ, இளவரசனுக்கோ திருமணம் செய்து வைப்பீர்கள் என்றல்லவோ எண்ணினேன்?” என்று கூறினான். அவனால் இன்னமும் உறுதியாக இந்த வேண்டுகோளை ஏற்கமுடியவில்லை. ஜராசந்தன் உண்மையைத் தான் சொல்கிறானா என நிச்சயம் செய்து கொள்ள விரும்பினான்.

ஜராசந்தன் மெல்ல, மெல்லத் தன் திட்டத்தை வெளியிட்டான்.

“பீஷ்மகரே, தாமகோஷனின் மகன் சிசுபாலனுக்கு உங்கள் அருமை மகள் ருக்மிணி மிகப் பொருத்தமாய் இருப்பாள். என் பேத்தியை உங்கள் குமாரனுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன். ஆகவே மேற்கே சிசுபாலன், மத்தியில் நீர், கிழக்கே நான் மூவரும் சமமான அந்தஸ்துப் பெற்று அவரவர் சாம்ராஜ்யத்தை நிலை நாட்டிக் கொள்ளலாம். நம் உறவு பலப்பட இதுதான் சரியான தீர்வு. நாம் மூவரும் நெருங்கிய உறவு பூண்டிருந்தோமானால் நம்மை எதிர்க்க நினைப்பவர் அஞ்சுவார்கள்.” இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்த செளப நாட்டு அரசன் ஷால்வனுக்கு ஜராசந்தனின் திட்டம் வெள்ளிடை மலையெனத் தெரிய வந்தது. தாமகோஷன் ஜராசந்தனோடு உறவு பூண இருந்தது அவனுக்குத் தெரியும். இப்போது கண்ணனோடு சேர்ந்து நம்பிக்கைத் துரோகம் செய்திருக்கிறான் தாமகோஷன். அவன் நம்பிக்கைத் துரோகம் என வெளிப்படையாய்க் காட்டிக்கொள்ளாவிட்டாலும், ஜராசந்தனும் அதை மூடி மறைத்தாலும் உண்மை என்னவோ அதுதான். ஆகவே தாமகோஷன் ஜராசந்தனின் பேத்தியைத் தன் மகனுக்குத் திருமணம் செய்து வைக்க மாட்டான்.

மேலும் தாமகோஷனின் மனைவி, ஷ்ருதஷ்ரவா, வசுதேவருக்கு சொந்தத் தங்கை. அவள் தன் தமையனைக் கொடுமை செய்த கம்சனின் மாமனார் வீட்டுப் பெண்ணைத் தன் மருமகளாய் ஏற்பாளா என்பதும் சந்தேகமே. மேலும் அண்ணன் மகன் என்பதால் இயல்பாகவே கண்ணனிடம் பாசம் இருக்கும். ஆகவே தன் பேத்தியை ருக்மிக்குக் கொடுத்து சிசுபாலனுக்கும் ருக்மிணியைத் திருமணம் முடிக்கச் சொல்வதன் மூலம், சேதி நாட்டரசனைத் தன் கையை விட்டுப் போகாதபடிக்கு ஜராசந்தன் பார்த்துக்கொள்ளப் போகிறான். அந்த ருக்மிணியின் அழகும் எல்லா அரசவைக் கவிஞர்களும் கவிகளால் பாடுகின்றனராமே? அவ்வளவு அழகாம், சாமர்த்தியசாலியாம், புத்திசாலியாம், ஆனால் கொஞ்சம் துடுக்குக்காரி என்கிறார்கள். இருந்தால் என்ன?? ஜராசந்தன் நினைத்தால் நினைத்தது தான். இனி விடமாட்டான். சிசுபாலனுக்கும் ருக்மிணிக்கும் திருமணம் நடந்தே தீரும். ம்ம்ம்ம்ம்ம் சிசுபாலனுக்கு அதிர்ஷ்டம் தான்.

ருக்மிக்கும் இந்தத் திட்டம் பிடித்திருந்தது. ஷால்வனைப் போல் அவன் ஆராயாவிட்டாலும் சிசுபாலனுக்குத் தன் தங்கையைத் திருமணம் செய்து கொடுக்கும் எண்ணத்தை முழுமனதோடு ஆதரித்தான். அவனை விடப்பொருத்தமான இளவரசன் ருக்மிணிக்குக் கிடைக்கமாட்டான் என்றும் கூறினான். ஜராசந்தனும் அதை ஆமோதித்தான். ஆனால் பீஷ்மகன் அவ்வளவு எளிதில் சம்மதம் சொல்லவில்லை. தன் தகப்பன் கைசிகனுக்கு இது பிடிக்காது என்று வெளிப்படையாகச் சொன்னதோடு, விதர்ப்ப அரசகுமாரிகள் அனைவருமே சுயம்வரத்தின் மூலமே தங்கள் கணவனைத் தாங்களே தேர்ந்தெடுப்பார்கள் என்றும், இம்மாதிரியான நிபந்தனைத் திருமணங்களை, அரசியல் காரணங்களுக்காக ஏற்க மாட்டார்கள் என்றும் கூறினான். மணமகனின் வீரத்தையும், அவன் செல்வாக்கையும் பார்த்தே விதர்ப்ப அரசகுமாரிகள் மாலையிடச் சம்மதிப்பார்கள் என்றும் கூறினான்.

Wednesday, October 20, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்

ஜராசந்தனின் திட்டமும், ஸ்வேதகேதுவின் வருகையும்

எவ்விதமேனும் அந்தக் கண்ணனையும், அவன் கூட்டத்தையும் அடியோடு ஒழிக்கவேண்டும். என்ன செய்யலாம் அதற்கு?? ஜராசந்தன் மேலும் யோசித்தான். கூடியவரைக்கும் தன் நண்பர்களைத் தக்க வைத்துக்கொள்ளவேண்டும் எனவும் விரும்பினான் ஜராசந்தன். முக்கியமாய் சேதி நாட்டரசன் தாமகோஷனையும், விதர்ப்ப நாட்டின் பீஷ்மகனையும் எவ்வகையிலேனும் நம் பக்கம் இருக்குமாறு செய்திடவேண்டும். ஆஹா, இப்போது இந்தக் கிருஷ்ண வாசுதேவனால் இழந்த என் கெளரவத்தையும், மதிப்பையும் எவ்வகையிலேனும் மீட்டுவிடவேண்டும். யோசித்து, யோசித்து, திட்டங்கள் போட்டு, அவை சரிவராதென மீண்டும் திட்டங்கள் போட்டு, இப்படியே நேரம் சென்றது ஜராசந்தனுக்கு. கடைசியில் அவன் கண்ணெதிரே ஒளிக்கீற்றுத் தோன்றியது. அநுவிந்தனிடம் சொல்லி ரதத்தை நிறுத்தச் சொல்லித் தன்னைப் பின் தொடரும் மற்றவர்களுக்காக அங்கேயே காத்திருக்க முடிவு செய்தான். அவசரம் அவசரமாகப் போடப் பட்ட கூடாரத்தினுள் தங்கிய ஜராசந்தனுக்கு ஓய்வு எடுக்கவே மனமில்லை. அங்குமிங்கும் நடந்துகொண்டே பலவிதங்களிலும், பல விஷயங்களையும், பல திட்டங்களையும் யோசித்துக்கொண்டிருந்தான். கடைசியில் ருக்மி வந்து சேர்ந்துகொள்ளும்வரை அந்த இடத்திலிருந்து கிளம்பவேண்டாம் என முடிவெடுத்தான். அன்று இரவும் போய், மறுநாள் பொழுது புலர்ந்தும் வராமல் அன்றைய மாலையிலேயே வந்து சேர்ந்தனர் மற்றவர்கள் அனைவரும். அவர்கள் ஜராசந்தன் இங்கே தங்கி இருப்பான் என எதிர்பார்க்கவில்லை ஆதலால் அவனைக் கண்டதும் குழம்பினார்கள். மேலும் ஜாசந்தன் தோல்வியின் துக்கத்தில் ஆழ்ந்திருப்பான் என எதிர்பார்த்தும் ஏமாந்தனர். இதற்குள்ளாகத் தன்னைச் சமாளித்துக்கொண்ட ஜராசந்தன் எதுவுமே நடவாதது போல் அமைதி காத்தான். தன்னுடைய கம்பீரத்தை விட்டுக் கொடுக்கவில்லை.

அங்கேயே இரண்டு நாட்கள் தங்கிய அவர்கள், மெல்ல மெல்ல நிதானத்துக்கு வந்தனர். அனைவருக்கும் தேவையான உணவு, குடிக்க மது எல்லாம் தாராளமாக விநியோகிக்கப் பட்டது. மதுவும், உணவும் வயிற்றுக்குள் சென்றதுமே அவர்களால் தங்கள் அவமானத்தையும், தோல்வியையும் மறக்க முடிந்தது. அனைவரும் தாமகோஷன் செய்த துரோகத்தைப் பற்றிப் பேச ஆரம்பிக்க, ஜராசந்தனோ தாமகோஷனை ஆதரித்துப் பேசினான். எல்லாருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அதோடு தாமகோஷன் தலையிடவில்லை எனில் ருக்மிக்கும், தனக்கும் என்ன நேர்ந்திருக்கும் என்றே சொல்லமுடியாது எனவும், அவன் தலையீட்டினாலேயே தாங்கள் இருவரும் தப்பிப் பிழைத்ததாயும், தாமகோஷன் நேர்மையாகவும், உண்மையாகவும் பாடுபட்டதாயும் புகழ்ந்தான். மேலும் பதினாறே வயது நிரம்பிய அந்த இரு இடைச்சிறுவர்களும் இவ்வளவு வீரமும், விவேகமும், சாதுர்யமும் நிறைந்திருப்பார்கள் என்பதையும் எவரும் எதிர்பார்க்கவில்லை என்றும் வசுதேவனின் குமாரர்களின் அதிசய சக்தியாலேயே, முக்கியமாய்க் கண்ணனுக்குள் ஏதோ அபூர்வ சக்தி ஒளிந்திருப்பதாலேயே இவ்விதம் நடந்திருக்கக் கூடும் எனத் தான் நம்புவதாயும் கூறினான். இல்லை எனில் சரியான சமயத்துக்கு எவ்வாறு கடல் வந்து கோமந்தக மலையைச் சூழ்ந்துகொள்ள முடியும்?? நிச்சயமாய் இதில் கண்ணனின் அதிசய சக்தி தான் காரணம்.

ஜராசந்தன் இரட்டை வேடம் போடுவதில் வல்லவன். மிக மிகச் சாமர்த்தியமாய்த் தன்னை ஒரு நியாயவான் போலவும், தோல்வியைத் தான் ஒப்புக்கொள்வதில் பின்வாங்காதவன் போலும், நீதியை மதிப்பவன் போலும், தர்மத்திற்குக் கட்டுப்படுபவன் போலும் காட்டிக் கொண்டான். ஆகவே தவறு பூராவும் தன்மேலேயே என்பது போலக் காட்டிக்கொண்டான். தாமகோஷனையும், கண்ணனையும் அவனும் அவதூறாய்ப் பேசவில்லை. வேறு எவரையும் பேசவும் அநுமதிக்கவில்லை. அவனுடைய இந்தக் கபட நாடகம் நன்கு பலித்தது. மெல்ல மெல்ல அவனுடைய நண்பர்களான வேற்று நாட்டரசர்களும், இளவரசர்களும் ஜராசந்தனின் பெருந்தன்மையிலும், மன்னிக்கும் மாபெரும் மனத்தையும் கண்டு மனம் நெகிழ்ந்தனர். இவ்வளவு மாபெரும் தோல்விக்குப் பின்னும், தன்னைத் தோற்கடித்தவனின் வீரத்தையும், விவேகத்தையும் புகழ்ந்து துதிக்கும் இத்தகையதொரு மாமன்னன் நமக்கு நண்பனாய்க் கிடைத்ததே தாங்கள் அனைவரும் செய்த பெரும்பேறு என அனைவரும் நினைத்தனர். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ஜராசந்தனை அவர்கள் புதிய கண்ணோட்டத்தோடு பார்த்ததோடு அல்லாமல், அவன் மேல் பெரும் மதிப்பையும், மரியாதையையும் காட்டினார்கள். தோல்வியின் வீழ்ச்சியினால் துவண்டு கிடந்த தங்கள் மனத்தையும் இத்தகையதொரு மாபெரும் பெருந்தன்மையைக் கண்டு தேற்றிக்கொண்டார்கள்.

அடுத்த நாள் அனைவரும் அருகே இருந்த ஒரு சிறிய நாட்டில் தங்க நேர்ந்தது. அந்தச் சிற்றரசன் திடீரெனக் கூட்டமாய் வந்த பேரரசர்களைக் கண்டு ஒரு பக்கம் திகைத்தாலும், மறுபக்கம் அவர்களுக்கு வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தான். அனைவரும் அங்கேயே நான்கு நாட்கள் தங்கி அந்தச் சிற்றரசனின் விருந்தோம்பலிலும், அங்கே உள்ள காடுகளில் வேட்டையாடியும் பொழுதை மகிழ்வோடு கழித்தனர். நான்காம் நாள் மாலை நேரத்தில் தூரத்தில் ஒரு புழுதிப் புயல் தென்பட்டது. சமீபத்தில் புழுதிப் புயல் எங்கேனும் அடித்ததா?? அனைவரும் அந்தத் திசையையே பார்த்துக்கொண்டிருந்தனர். கரவீரபுரம் இருக்கும் திசையிலிருந்து அந்தப் புழுதிப் புயல் வந்து கொண்டிருந்தது. மெல்ல, மெல்ல அவர்கள் பக்கம் நகர்ந்த அந்தப் புழுதிப் புயல் வெகு விரைவில் ஒரு ரதமாய்த் தெரிந்தது. அதை ஓட்டி வந்தவன் தேர்ந்த ரத சாரதி என்பதும் புலப்பட்டது. யார் இந்த மஹாரதன்?? ஆஹா, வேறு யாருமே இல்லை! ஸ்வேதகேது! ஆம் ஸ்வேதகேது தான் கண்ணனைப் பிரிந்ததில் இருந்து நிற்காமல், இரவு, பகல் பாராமல் ரதத்தை ஓட்டிக்கொண்டு இங்கே வந்து சேர்ந்திருக்கிறான். அதுதான் இவ்வளவு விரைவிலும் வந்திருக்கிறான் போலும்!
விந்தனும் அநுவிந்தனும் தங்கள் குருவைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

Saturday, October 16, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்

ஜராசந்தன் கொதிக்கிறான்!

ஸ்ரீகாலவனுக்காகப் பதின்மூன்று தினங்கள் துக்கம் அநுஷ்டிக்கப் பட்டு, அது முடிந்து இளவரசன் ஷக்ரதேவன் அரசனாகப் பட்டம் சூட்டப் பட்டான். ருத்ராசாரியார் அரசவையின் தலைமை குருவாக நியமிக்கப் பட்டார். ருத்ராசாரியாரும் பலத்த ஆலோசனைகளுக்குப் பின்னர் அதை ஏற்றுக்கொண்டார். அவருடைய பேரன் புநர்தத்தனை இளவரசனுக்குச் சகல வித்தைகளையும் கற்பிக்குமாறு பணித்தார். ராணி பத்மாவதி இவ்வளவும் சுபமாகவும், எந்தவிதமான ஆக்ஷேபங்கள் இன்றியும் நடந்ததுக்குக் கண்ணனுக்கு மனமார நன்றி கூறினாள். ஸ்வேதகேதுவும், தாமகோஷனும், கண்ணனும் நீண்ட ஆலோசனைகளை நெடுநேரம் நடத்தினார்கள். பலத்த வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர் ஸ்வேதகேது ஜராசந்தன் சென்ற பாதையில் அவனைத் தொடர்ந்து வேகமாய்ச் சென்றான். அவந்தியின் இளவரசர்கள் ஆன விந்தனுக்கும், அநுவிந்தனுக்கும் ஸ்வேதகேது ஒரு சமயம் குருவாக இருந்தது இதற்கு அநுகூலமாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். கண்ணனால் ஓட அநுமதிக்கப்பட்ட ஜராசந்தன் என்ன ஆனான் என ஒரு எட்டு போய்ப் பார்ப்போமா?? ஜராசந்தன் இப்போது இருக்கும் நிலையில் அவனுக்குத் தெரியாமலேயே நாம் போய்ப் பார்க்கவேண்டும். தெரிந்தால் தொலைந்தோம்.

அநுவிந்தனின் குதிரைகள் என்னமோ அதிக வேகம் ஓடக் கூடியவையே. ஆனாலும் கண்ணனால் மன்னிக்கப்பட்டு ஓட அநுமதிக்கப்பட்டதாலோ என்னமோ ஜராசந்தனின் மனம் ஒரு நிலையில் இல்லை. அதோடு குதிரைகள் ஓடும் வேகமும் அவனுக்குப் போதவில்லைதான். என்றாலும் அந்த வேகத்தால் உள்ளே அமர்ந்திருந்த ஜராசந்தன் ரதத்தின் இருபக்கமும் தூக்கி எறியப் பட்டான். ஆனாலும் அது கூட அவனைப் பாதிக்கவில்லையோ என்று எண்ணும்படி மூடிய கண்களைத் திறக்கவில்லை அவன். எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி, எப்போதும் வெற்றி. இதுதான் இவ்வளவு வருடங்கள் அவன் கண்டது. ஜராசந்தன் என்ற பெயரைக்கேட்டாலே அழுத பிள்ளை வாயை மூடும். பிறக்க இருக்கும் குழந்தை அழாமலேயே பிறக்கும். அப்படி ஒரு சக்தி அவனுக்கு இருந்தது. ஆனால்?? ஆனால்??? தற்போது??? ஜராசந்தனின் உள்ளத்துக்குள்ளே ஒரு பூகம்பமே நடந்து கொண்டிருந்தது. எரிமலை வெடித்து அக்னிக்குழம்பு ஆறாக ஓடியது. மனதினுள் வெடிக்கும் பூகம்பத்தின் வேகம் தாங்காமல் அவன் தன் நெஞ்சை அமுக்கிக் கொண்டான். தலையை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டான். போதாது, போதாது, இது போதாது, வேகம், வேகம், இன்னும் வேகம். அந்தக் கண்ணனின் குரலோ, அல்லது அவன் உருவமோ கண்ணுக்கு மட்டுமல்ல மனதையும் எட்டாத வெகு தூரத்திற்குச் சென்றுவிட வேண்டும்.

அவனுடைய பிறப்பு நினைவில் வந்தது அவனுக்கு. காசி ராஜனின் இரு பெண்களையும் அவன் தந்தையான மகத நாட்டரசர் திருமணம் செய்து கொண்டார். குழந்தைப் பேறு வேண்டி பிரார்த்தித்தவருக்குக் குலகுருவின் மூலம் மந்திரிக்கப் பட்ட ஒரு மாம்பழம் கிடைக்க அதைத் தன் மனைவியரிடம் கொடுத்து இருவரில் எவரேனும் ஒருவரைச் சாப்பிடச் சொல்லுகிறார். ஆனால் அந்தப் பெண்களோ தங்கள் இருவருக்குமே குழந்தை வேண்டும் என இருவருமே ஆளுக்குப் பாதியாகச் சாப்பிட இருவரும் கர்ப்பமுற்றார்கள். குழந்தையும் பிறக்கிறது சரிபாதியாக. பயந்த இளவரசிகள் குழந்தையின் இரு கூறுகளையும் காட்டில் கொண்டு போய்ப் போடச் சொல்லிக் கட்டளையிடுகிறார்கள். காட்டில் போடப் பட்ட குழந்தைக் கூறு தனித்தனியே கிடக்கிறது. அங்கே வசித்துக்கொண்டிருந்த ஜரா என்னும் அரக்க குலத்துப் பெண்ணின் கண்களில் விசித்திரமான இந்தக் குழந்தை பட, அவள் ஆர்வ மிகுதியால் எடுத்துக் குழந்தையின் கூறுகளை ஒன்றாக்கி நேராய்ச் சேர்க்கக் குழந்தையும் தன் முதல் குரலைக் கொடுத்து அழுகிறது. குழந்தையின் அங்க லக்ஷணங்களை வைத்து அரசகுமாரனாய் இருக்குமோ எனச் சந்தேகித்த அவள், குழந்தையைப் பத்திரமாய்ப் பாதுகாத்து வருகிறாள். காட்டிற்கு வேட்டையாட வந்த மகத நாட்டு அரசனிடம் தனக்குக் குழந்தை ஒன்று கிடைத்த கதையைக் கூறக் குழந்தையைக் கண்ட அவர் அது தன் குழந்தைதான் என்பதையும் நிச்சயம் செய்து கொள்கிறார். அந்தக் குழந்தையை அரண்மனைக்கு எடுத்துச் சென்று வளர்க்கவும் ஆசை கொள்கிறார்.

குழந்தையை அரக்கியிடமிருந்து வாங்கிக் கொள்கிறார். அவள் பெயரோடு சேர்ந்தே வரும்படிக்குக் குழந்தைக்கு ஜராசந்தன் என்னும் பெயரைச் சூட்டி வளர்த்து வருகிறார். உரிய பருவம் வந்ததும் ஆட்சி ஜராசந்தன் கைகளுக்குச் செல்கிறது. அதன் பின்னர் அவன் திரும்பியே பார்க்கவில்லை. எங்கும் ஜெயம், எதிலும் ஜெயம், எப்போதும் ஜெயம்தான். முதலில் அவன் தந்தையின் ஆட்சிக்காலத்தில் பிரிந்து கிடந்த மகதத்தை ஒன்று சேர்த்து மாபெரும் சாம்ராஜ்யமாக்கித் தனக்குக் கீழே கொண்டு வந்தான். பின்னர் தன் சாம்ராஜ்யத்தின் கரங்களை மெல்ல மெல்ல வெளியேயும் கொண்டு வந்தான். அதற்குத் தான் அவன் எத்தனை விதமாய்ப் பாடுபட வேண்டி வந்தது. யுத்த தந்திரங்களைக் கடைப்பிடிக்க வேண்டிய சமயத்தில் அவற்றைக் கடைப்பிடித்தும், சிலரைத் தட்டிக்கொடுத்து நண்பராக்கியும், சிலரை வஞ்சகமாய் ஏமாற்றியும், (ம்ம்ம்ம் பெரும்பாலும் இதுதான் அவன் சாமராஜ்ய விரிவுக்கே காரணமாய் இருந்திருக்கிறது) சூது, வாதுகளின் மூலமும், தந்திரமான, நயந்த பேச்சுக்கள் மூலமும் ஒவ்வொருவரையும் தனக்குக் கீழே கொண்டு வந்தான். இந்த தாமகோஷன்! அவனோடு எவ்வளவு சண்டை போட்டு அவனைத் தோற்கடித்துத் தன்னை அவனுக்கு மேற்பட்ட சாம்ராஜ்யாதிபதியாக ஒப்புக்கொள்ள வைக்க நேர்ந்தது! இதே போல்தான் பீஷ்மகன். விதர்ப்ப தேசத்து அரசன் ஆன அவன், தன் தந்தையால் இழந்த நாட்டை மீட்க வேண்டும் எனப் போரிட்டான். பின்னால் இருக்கிறதைக் காப்பாற்றிக்கொண்டாலே போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டான். அவன் மகன் ருக்மி தான் நம்மை ஒரு சாம்ராஜ்யச் சக்கரவர்த்தி என எடுத்த எடுப்பிலேயே ஒப்புக்கொண்டதோடு அல்லாமல், நமக்கு உதவியாகவும் இருந்து வருகிறான். இத்தனை வருடங்களாக என்னுடைய பெயரும், புகழும் உச்சத்திலேயே இருந்து வந்திருக்கிறது. ஒரு நாளும் கீழிறங்கியதில்லை.

தன்னைப் போலவே மன உறுதியும், வீரமும் படைத்தவன் என்ற காரணத்துக்காகவே, கம்சனைத் தனக்கு நண்பனாக்கிக்கொண்டு தன்னிரு பெண்களையும் அவனுக்கே திருமணம் செய்து வைத்தான் ஜராசந்தன். கம்சனும் அதற்கு ஏற்பவே இறுதிவரை நடந்து வந்திருக்கிறான். இவ்வளவும் எதற்கு?? மதுராவை நமக்குக் கீழே கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே அன்றோ?? ஆர்யவர்த்ததின் முக்கியமான நகரம் மதுரா. அதை யாதவர்கள் ஆட்சி செய்து வருகிறார்கள். பலம் பொருந்திய யாதவர்களை முறியடிக்கக் கம்சனின் துணை வேண்டியிருந்தது. மேலும் அஸ்வமேத யாகம் செய்வதன் மூலமும் என் சக்கரவர்த்திப் பதவியைத் தக்க வைத்துக்கொள்ளலாம். மேலும், மேலும் ராஜ்யங்கள் நம்முடன் சேரும் என்று தானே கம்சன் நமக்கு அவ்வளவு உதவி செய்தான். ஆஹா, மாப்பிள்ளை என்றால் அவனல்லவோ மாப்பிள்ளை! நம் படைகளை நடத்திச் சென்று கடைசியில் அஸ்வமேத யாகக் குதிரையை ஒப்படைக்கும் வரை எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறான்??

ம்ம்ம்ம் ஆனாலும் பாஞ்சாலத்துத் திரெளபதனும், அஸ்தினாபுரத்துக்குருட்டு அரசன் திருதராஷ்டிரனும், தென் மேற்கை ஆண்டு வரும் காலயுவனனும் நம்மை ஒரு சாம்ராஜ்யச் சக்கரவர்த்தியாக ஒப்புக்கொள்ளவே இல்லை. பாஞ்சாலத்துத் திரெளபதனுக்குக் கர்வம் அதிகம். நம்மை ஒரு பொருட்டாகவே மதிக்கிறதில்லை. அஸ்தினாபுரத்துக் குருட்டு அரசனோ, அவன் பெரியப்பன் ஆன கிழவன் பீஷ்மனின் துணையில் அதிகாரம் செய்து வருகிறான். அந்த பீஷ்மனை எவராலும் வெல்ல முடியாதாமே! பலம் பொருந்தியவனாய்த் தனி ஒருவனாகவே அந்த பீஷ்மனை மாபெரும் படையையே எதிர்கொள்வானாம். காலயுவனன், அவனுடைய மக்களை நினைத்தாலே கலக்கமாய் இருக்கிறது. பின்னால் பார்த்துக்கொள்வோம். இந்த திரெளபதனையாவது அடக்கலாம் என்றால் கம்சன் இந்தச் சமயம் பார்த்துக் கொல்லப் பட்டான். மாபெரும் வீழ்ச்சிக்கு அதுவே வித்திட்டு விட்டது. இப்போதோ அவமானம்! எவ்வளவு பெரிய அவமானம்! ஒரு இடைச் சிறுவனால் மன்னிக்கப் பட்டுத் தப்பி ஓட அநுமதிக்கப் பட்டிருக்கிறேனே! இந்த அவமானமான நிகழ்வுகள் ஜராசந்தனின் இதயத்தை முட்கள் போல் குத்தின . ம்ம்ம்ம் எவனை நம் நண்பன் என எண்ணினோமோ அந்த தாமகோஷன் இன்று நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டான். எவ்வளவு முறை காப்பாற்றி இருக்கிறேன் அந்த தாமகோஷனை! அவன் எனக்குச் செய்த பிரதி உபகாரம் இதுதானா??? இல்லை, இல்லை, தாமகோஷன் தலையிடாவிட்டால், அந்தக் கண்ணன், கிருஷ்ண வாசுதேவன், என்னைக் கொன்றே போட்டிருப்பான். ஆம், ஆம், தாமகோஷன் மேல் எந்தத் தவறும் இல்லை.
ஆஹா, என்னால், என் அருமை சாம்ராஜ்யத்துக்கு நிகழ்ந்திருக்கும் இந்த அவமானத்தை எவ்விதம் போக்குவேன்?? ஏதேனும் செய்து இந்த அவமானத்தை ஈடு கட்டவேண்டும்! என்ன செய்யலாம்??? என் வாழ்நாள் பூராவும் செலவு செய்து மிகவும் கஷ்டப்பட்டு நான் கட்டிய இந்த சாம்ராஜ்யக் கோட்டையைத் தக்க வைத்துக்கொள்ளும் வழியைத் தேடவேண்டும். ஏமாற்றத்திலும், அவமானத்திலும் முழுகிப் போகாமல் நான் எழுந்து நிற்கவேண்டும். என்னுடைய கர்வத்தை நான் மறந்து, பெருமையை விழுங்கிவிட்டு மீண்டும் புத்துயிர் பெற்றவனாய்த் தொடரவேண்டும். அந்த வசுதேவனின் குமாரர்கள் ஒரு மாபெரும் சக்தியாக உருவாவதைத் தடுக்க வேண்டும். எவ்விதமேனும் தடுக்க வேண்டும். அது அவ்வளவு சுலபமாக இருக்கப் போவதில்லை. பொறுமையாகத் தான் ஒவ்வொரு காயாக நகர்த்த வேண்டும். தக்க தருணம் வரும்பொழுது ஒரே வீச்சில் இருவரையும் திரும்ப எழுந்திருக்க முடியாதபடிக்கு வீழ்த்த வேண்டும்.

Monday, October 4, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2ம் பாகம்

ஷாயிபாவின் துயரம்!


கண்ணன் மேலும் தொடர்ந்து கூறினான்: “ஸ்வேதகேது! ஒரு பெண்ணின் அழகில் மயங்கியது உம்முடைய பலவீனமான மனதை அன்றோ சுட்டிக் காட்டுகிறது? என்றோ ஓர் நாள் அவள் உம்மை மணப்பாள் என எதிர்பார்ப்பிலே இருந்தீர் அன்றோ?? இப்போது அவள் நிலையைப் பாரும்! அவள் அனைத்தையும் இழந்தவளாய், ஓர் அபலையாய் நிற்கிறாளே? தன் அன்புக்கும், வணக்கத்துக்கும் உகந்த பெரியப்பனை இழந்தாள், அதன் மூலம், அவளுடைய இறைவன், அவளுடைய நம்பிக்கைகள், ஆசைகள், எதிர்காலம் அனைத்துமே நாசமாய்ப் போயிற்று அன்றோ?? இப்போது நீர் அவளுக்கு ஆறுதல் அன்றோ கூறவேண்டும்?? ஒருவேளை அவள் மனம் மாறி உம்மை நாடலாம்! அவளை நன்கறிந்தவர் என்ற முறையிலே இப்போது நீர்தான் இருக்கிறீர்! ஆகவே அவளுக்கு ஆறுதல் கூறி அவள் மனப்புண்ணை ஆற்ற முயலுங்கள்!”

“வாசுதேவகிருஷ்ணா! அவளுக்கு மன வருத்தமா?? இல்லை, இல்லை இதயமே இல்லாத ஒருத்திக்கு எங்கனம் வருத்தமும், துக்கமும் ஏற்படமுடியும்?? என்னை ஒரு பகடைக்காயாகவே அவள் தன் ஆட்டத்தில் பயன்படுத்தி வந்திருக்கிறாள். “

“ஸ்வேதகேது! பெண்கள் அனைவருமே அவர்களின் பிரியத்துக்கு உகந்த ஆண்களைத் தங்கள் சதுரங்க ஆட்டத்தின் காய்களாகக் கருதி அவர்கள் இஷ்டத்துக்கு நகர்த்தி வருகின்றனர். இதற்கு ஷாயிபா விதிவிலக்கு இல்லை! நாம் அனைவருமே அவர்களின் பகடைக்காய்கள் தான்! சற்று முன் ஷாயிபா பேசினதைக் கேட்டீர் அல்லவா?? அவளுடைய வாழ்க்கையின் அடித்தளமே, நொறுங்கி விட்டதென்று நினைக்கிறாள். இதை உம்மால் சரி செய்ய இயலும் என நான் நம்புகிறேன். முடிந்தால் அவளைப் பலவந்தமாகவாவது இங்கிருந்து அழைத்துச் சென்று அவளைச் சமாதானம் செய்ய முயற்சி செய்யும்!”

ஷாயிபா ஒரு விதமான பிரமிப்போடு கண்ணனையே பார்த்துக்கொண்டு செய்வதறியாது நின்று கொண்டிருந்தாள். அவள் இதயத்தின் ஆழத்துக்குள்ளே கண்ணனின் வார்த்தைகள் சல்லடைக்கண்களாகத் துளைத்துக்கொண்டு சென்றன. தன்னை நன்கு அறிந்தவனும் தன்னைக் காதலித்தவனும் ஆன ஸ்வேதகேதுவைத் தவிர வேறு யாரும் நமக்கு இப்போது உதவ மாட்டார்கள் என்ற உண்மை அவள் நெஞ்சைப் பிளந்தது. அப்போது கண்ணன் அவளை நேருக்கு நேர் பார்த்து, “ஷாயிபா, ஸ்வேதகேது குண்டினாபுரம் செல்லப் போகிறார். நீ விரும்பினால் அவருடன் அவரது மனைவியாகச் செல்லலாம். உனக்கு அதில் விருப்பமில்லை எனில் என்னுடன் மதுராவுக்கு வா. அங்கே சிலகாலம் தங்கினால் காலம் உன் மனப்புண்களை ஆற்றும். உன்னால் உன் பெரியப்பனை மறக்க முடியாது. ஆனால் எப்படி இருந்தாலும் நீ இங்கே தங்க முடியாது. ராணி பத்மாவதிக்கு நீ இழைத்த கொடுமைகளை அவள் மறந்திருக்கமாட்டாள். “

“கொலைகாரா! கொடுமையான கொலைகாரா!”

“உண்மைதான். உன் பெரியப்பனை நான் கொன்றேன். ஆனால் அதில் பாதிதான் உண்மை! அவரைக் கொல்லவேண்டும் என்ற எண்ணம் எனக்குக் கொஞ்சம் கூடக் கிடையாது. கொடூரமான எண்ணம் படைத்தவன் அல்ல நான். நிச்சயமாய் ஸ்ரீகாலவனை என்னால் உனக்குத் திரும்பக் கொடுக்க இயலாது. ஆனால், ஒரு அருமையான தாயை உனக்கு என்னால் கொடுக்க முடியும். என் தாய் தேவகி, என்னைப் பெற்றெடுத்தவள் உன்னைத் தன் அருமை மகள் போலவே நடத்துவாள். நீ அவளைத் தாயாக ஏற்றால் நானும், என் அண்ணன் பலராமனும் உன் சகோதரர்கள் போலவே உன்னிடம் பிரியத்துடனும், பாசத்துடனும் இருப்போம். ஆனால் அதை ஏற்பது உன் விருப்பத்தைப் பொறுத்தது. அல்லது ஸ்வேதகேதுவை நீ மணக்க விரும்பினால் , இன்னமும் ஸ்வேதகேதுவுக்கு உன் மேல் ஆசை இருக்கிறது என நம்புகிறேன். நீ அவரை மணந்து கொண்டு அவருக்கும் மகிழ்ச்சியை அளிப்பதோடு நீயும் மகிழ்வாய் இருக்கலாம். “

ஸ்வேதகேது ஒரு தர்மசங்கடமான நிலையில் இருப்பது போல் உணர்ந்தான். அவனால் கண்ணனை மறுத்தும் பேசமுடியவில்லை. கண்ணன் சொல்வதை ஏற்கவும் முடியவில்லை. கண்ணன் மீண்டும் ஷாயிபாவைப் பார்த்து, “எழுந்திரு ஷாயிபா, உன் முகத்தைக் கழுவிக்கொள். ஆஹா, எவ்வளவு அழகான முகம்?? எத்தனை பெரிய கண்கள்? அழுது அழுது அவை உன் முகத்தையே கோரமாக்கிவிட்டதே?” கண்ணன் குனிந்து கீழே ஸ்வேதகேதுவால் உட்கார்த்தி வைக்கப் பட்டிருந்த ஷாயிபாவைத் தன்னிரு கரங்களால் தூக்க முயன்றான்.

“துரோகி, பச்சைத் துரோகி! உன்னைக் கிழித்து உன் கண்களிலிருந்து அந்த விழிகளைப் பிடுங்கப் போகிறேன்.” ஷாயிபா ஆத்திரத்துடன் மீண்டும் கண்ணன் மேல் பாய்ந்தாள்.

“ஓஹோ, ஷாயிபா, அந்தப் புலி நகங்களை என்னைத் தாக்குவதற்குப் பயன்படுத்தாதே! உன் கணவனாக வரப் போவது ஸ்வேதகேது எனில் அவனுக்காகப் பத்திரமாய் அதைப் பாதுகாத்து வைத்துக்கொள். என்னிடம் உன் பலத்தைக் காட்டாதே! தேவகி அம்மா மதுராவில் காத்திருக்கிறாள். எழுந்திரு! தைரியமாய் இரு! கிளம்பலாம்!”
வாசுதேவன் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டதால் நீயும் வாசுதேவன் ஆகிவிடுவாயா?? பொய்யான வாசுதேவனே!”

கண்ணன் முகத்தில் இளநகை தெரிந்தது. கண்களும் குறும்பில் பளிச்சிட்டன. “நீ என்னைவிட ஓரிரண்டு வயது மூத்தவளாய் இருப்பாயோ?? இருக்கும்! ஆனால் என் சின்னக் குட்டித் தங்கை கூட உன்னை விடப் புத்திசாலித்தனமாய்ப் பேசுவாளே! வா, வா, வந்து மதுராவில் நீயே நேரில் பார்ப்பாயாக! என் தந்தை வசுதேவரையும் பார்க்கலாம், தேவகி அம்மாவையும் பார்க்கலாம். அவர் சொல்லுவார், நான் ஏன் வாசுதேவன் என அழைக்கப் படுகிறேன் என்பதை. அவர் வசுதேவர் என்றால் வசுதேவரின் பிள்ளையான நான் வாசுதேவன் ஆகமாட்டேனா?? எப்படிப் பொய்யான வாசுதேவன் ஆவேன்?? உனக்கு விருப்பம் இருந்தால், நீ முழு மனதோடு சம்மதித்தால் நீயும் அவருக்கு இன்னொரு குமாரியாகலாம்.”

“நான் மதுராவுக்கெல்லாம் வரப்போவதில்லை!’ தீர்மானமாய்ச் சொன்னாள் ஷாயிபா.

“எனில் ஸ்வேதகேதுவை மணந்து கொண்டு அவனோடு குண்டினாபுரம் செல்! இங்கே ராணி பத்மாவதியோடு இருக்க விரும்புகிறாயா?”

ஷாயிபாவிற்குத் தன் நிராதரவான நிலைமை ஒருவாறு புரிந்தது. அவள் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. ஸ்ரீகாலவன் சொல்லியும், அவன் சொல்லாமலும் ராணி பத்மாவதிக்கு அவள் இழைத்த கொடுமைகள் அவள் கண் முன்னே அணி வகுத்தன. ஒரு காலத்தில் அவள் அடிமையைவிடக் கேவலமாக நடத்திய ராணி பத்மாவதி இன்று முழு அதிகாரமும் படைத்த ஒரு பெண்மணி. இவளுக்குக் கீழே இவள் உத்தரவை எதிர்பார்த்து ஷாயிபா நடந்துகொள்ளவேண்டுமா?? ஒருகாலும் நடக்காது. ஆனால் பின் அவள் எங்கே போவாள்? ஷாயிபா மனம் உடைந்து போனாள். கண்ணன் பரிதாபம் கலந்த பார்வையோடு அவளைப் பார்த்து, “அழாதே, அழுகையை நிறுத்து. நான் உன்னை மதுராவுக்கு அழைத்துச் செல்கிறேன். யாருக்குத் தெரியும்?? ஸ்வேதகேது தன் மனதை மாற்றிக்கொண்டு உன்னை மணக்க வந்தாலும் வருவான். ஆகவே நீ அவன் வரவுக்காகக் காத்திருக்கலாம். உன் கூரிய இந்த நகங்களையும் அவனுக்காகப் பாதுகாத்து வைத்துக்கொள்! ஸ்வேதகேது எத்தனை பெரிய வில்லாளி என நீ அறிவாயா?? அவன் வைத்த குறி தப்பாமல் ஒரே அம்பில் அனைத்தையும் வீழ்த்தும் வல்லமை படைத்தவன். எப்போது எனக் கேட்கிறாயா? உன்னை அவன் சந்திக்கும் வரை அத்தகையதொரு வல்லமை படைத்திருந்தான்! அப்படிப்பட்டவன் இப்போது இப்படி ஆகிவிட்டான்! ம்ம்ம்…. போகட்டும், உத்தவா, நீதான் இந்தப் பெண்ணை அழைத்துச் சென்று அந்தப்புரத்தில் விட்டு வா!”

உத்தவன் கீழே அடம் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த ஷாயிபாவைப் பிடித்து எழுப்ப முயன்றான். ஷாயிபாவைத் தொட்டதுமே உத்தவனின் உடல் சிலிர்த்தது. நாடி, நரம்புகளில் எல்லாம் ரத்தம் சூடாகப் பாய்ந்தது. உத்தவனின் முகமும் உணர்வுகளில் சிவந்து கன்றிப் போனது. அவன் உடல், உள்ளம் அனைத்திலும் இனம் காணமுடியாததொரு நெருப்புக் கொழுந்து விட்டு எரிந்தது.