Monday, August 31, 2015

தோன்றியது இந்திரப்ரஸ்தம்! நான்காம்பாகம் முடிவு!

சற்று நேரத்தில் அனைவரும் யமுனையில் நீராடிக் களித்த குதூகலத்தோடு மேலே நடந்தனர். காண்டவப்ரஸ்தம் கண்களில் பட்டது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்குக் காடு அடர்ந்து காணப்படவில்லை. ஏனெனில் கிருஷ்ணனின் முன்னேற்பாட்டின்படி நாகர்களின் தலைவன் ஆன மணிமான் தன் ஆட்களோடு அங்கே வந்து காட்டைத் திருத்தி ஓரளவுக்கு ஒழுங்கு செய்து அனைவரும் சில நாட்கள் தங்கும்படியாக மாற்றி அமைத்திருந்தான். ஆங்காங்கே சிறிய, பெரிய கூடாரங்கள் காணப்பட்டன. ஓலைகளால் வேய்ந்த குடில்களும் காணப்பட்டன. மண்ணால் எழுப்பட்ட குடிசைகளும் கூரையாகப் பச்சைப் புல்லால் வேய்ந்து காணக் கிடைத்தன. அசைந்து அசைந்து வந்த அந்த மாபெரும் நகரம் அங்கே தங்கித் தங்கள் வேலைகளை உடனே கவனிக்கும்படியாகக் காண்டவப்ரஸ்தம் தயார் நிலையில் காணப்பட்டது. வந்தவுடனேயே பீமனின் யானைகள் பெரிய பெரிய மரங்களை வேரோடு பெயர்த்து எடுத்து அவற்றை வழிநடத்திய இடத்திற்குக் கொண்டு சென்றன. தங்கள் தேவைக்கேற்ற குடிசைகள், குடில்கள், கூடாரங்களை வந்த மக்களின் குடும்பங்கள் எடுத்துக் கொண்டு அங்கே தங்குவதற்கான ஆயத்தங்கள் செய்ய ஆரம்பித்தனர். கோபு மிகுந்த உற்சாகத்தில் அங்குமிங்கும் ஓடி ஓடிச் சென்று வேலைகள் செய்தான்.

தெருக்கள் எங்கே அமைய வேண்டும், சதுக்கங்கள், மைதானங்கள், நிலாமுற்றங்கள், மாளிகைகள் அமைய வேண்டிய இடங்கள், கடைத்தெருக்கள் அமைய வேண்டிய இடம், அரச மாளிகைகள், மற்றத் தனி நபர்களுக்கான வீடுகள் என ஒவ்வொருவருக்கும் பொருந்தும்படியான இடங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை அமைக்க வேண்டிய மாபெரும் திட்டத்தை வரைய ஆரம்பித்தான். கைவினைக்கலைஞர்களையும், தச்சர்கள், கொல்லர்கள், ஆசாரிகள், கொத்துவேலை செய்வோர் போன்றோருக்குத் தக்க ஆணைகள் பிறப்பித்து அவர்களை மேற்பார்வை செய்யும் வேலையையும் கோபு தன்னுடன் வைத்துக் கொண்டு தன் நண்பர்களையும் அதில் இணைத்துக் கொண்டான்.

நகுலன் குதிரைகளைக் கவனிக்க ஆரம்பித்தான். குதிரைகளுக்கான லாயங்கள், உணவு, மருத்துவம் போன்றவற்றைக் கவனித்ததோடு அவற்றைத் தனித்தனியாக மேற்பார்வை பார்க்கத் தக்க ஆட்களையும் நியமித்தான். பிராமணர்கள் அவரவர் படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்பத் தங்கள் மாணாக்கர்களைத் தேர்ந்தெடுத்துத் தக்க பாடங்களைப் போதிக்க ஆரம்பித்தனர். தௌம்யர் அனைத்து பிராமணர்கள் மற்றும் அவர்களின் சீடர்கள் போன்றோரை மேற்பார்வை பார்த்துத் தக்கபடி கட்டளைகளைக் கொடுத்து வந்தார். இத்தகைய சாகசமான அனுபவங்கள் அனைவருக்கும் புதியவை என்பதால் எல்லோரும் பேரார்வத்தோடு இதில் பங்கு கொண்டனர். சில நாட்களில் பருவ மழை தொடங்கியது. அதற்குள்ளாக அங்கே வந்திருந்த அனைவருக்கும் தங்குமிடம் கிடைத்து விட்டது. யாரும் மழையில் கஷ்டப்படவில்லை.


நிலம் இல்லை என்றோ போதவில்லை என்னும்படியாகவோ யாரும் சொல்லவில்லை. அவரவருக்குத் தேவைப்பட்ட நிலத்தை அவர்களே ஆர்ஜிதம் செய்து கொண்டு தங்களுக்குத் தேவைக்கேற்ப அதைப் பயன் படுத்திக் கொண்டனர். இந்திரனுக்காக அங்கே சிறப்பு வழிபாடு ஒன்று செய்யப்பட்டது. அடிக்கடி பெருமழையும் புயலும் வந்து புதிய நகர நிர்மாணத்தைச் சீரழிக்காமல் இருக்கப் பிரார்த்தனைகள் செய்து கொள்ளப்பட்டன. இந்த யாகத்தை வியாசரே தலைமை தாங்கி நடத்திக் கொடுத்தார். அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டுக் கொண்டது போல் அந்த வருஷம் பருவ மழை தப்பாமல் பெய்தாலும் பெரிய அளவில் வெள்ளமொ, புயலோ இல்லாமல் தப்பினர்.

கிருஷ்ணன் மனம் நெகிழ்ந்தது. இந்திரனுக்குச் செலுத்தும் நன்றிக்கடனாக நகரின் பெயரைக் காண்டவப்ரஸ்தம் என்பதில் இருந்து இந்திரப்ரஸ்தம் என்று மாற்றும்படி யுதிஷ்டிரனுக்குக் கிருஷ்ணன் ஆலோசனை கூறினான். (இப்போதைய டெல்லியும் அதன் சுற்றுப்புறங்களும் இந்திரப்ரஸ்தம் ஆகும்.) இந்த பூவுலகிலேயே இது மிக அழகான அற்புதமான ஓர் இடமாக மாறும் என்றும் கிருஷ்ணன் கூறினான். அவன் தீர்க்கதரிசனம் சீக்கிரம் உண்மையாயிற்று. தேவர்களின் தச்சன் ஆன விஸ்வகர்மாவை வேண்டிக் கொண்டு அவரின் ஆசிகளோடும் துணையோடும் கோபு விரைவில் தன்னுடன் வந்திருந்த தொழிலாளிகளோடு நகர் நிர்மாணக்கட்டுமான வேலையை ஆரம்பித்தான்.

மெல்ல மெல்ல அற்புத நகரம் உருவாயிற்று. தூர, தூரங்களில் உள்ள மக்களுக்கெல்லாம் இந்தச் செய்தி போய்ச் சேர்ந்து அனைவரும் இந்த அதிசய நகரைப் பார்க்க வேண்டிக் கூட்டம் கூட்டமாக வந்தனர். மழை நின்று குளிர்காலம் ஆரம்பம் ஆயிற்று. உத்தவனும் துவாரகையிலிருந்து பாண்டவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பரிசுகளை எல்லாம் சுமந்து கொண்டு வந்து சேர்ந்தான். வியாசர் ஓரளவு நிலைமை சீராகிவிட்டதால் தானும் விடைபெறுவதாகக் கூறிக் குருக்ஷேத்திரத்தில் உள்ள தன்னுடைய ஆசிரமத்திற்குச் சீடர்களோடு பயணம் ஆனார். மெல்ல மெல்ல நகரம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டு அனைவரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப ஆரம்பித்தார். கிருஷ்ணன்  தானும் பலராமனும் துவாரகைக்குத் திரும்புவதாகக் கூறினான். யுதிஷ்டிரன் மிகவும் வருத்தம் அடைந்தான். கிருஷ்ணனைப் பிரிய வேண்டும் என்பது மிகவும் கஷ்டமான ஒன்றாக இருந்தது அவனுக்கு.

“கிருஷ்ணா! எங்களை நீ மிகவும் ஆதரித்துக்காத்து வருகிறாய். எங்கள் குலதெய்வம் நீயே தான்! எங்கள் தந்தையை விட நீயே எங்களை நன்றாகக் காப்பாற்றி வருகிறாய். தந்தையை விட நீ மேலானவனாக இருக்கிறாய். நீ இல்லை எனில் நாங்கள் பாஞ்சால இளவரசியைக் கைப்பிடித்திருக்க இயலாது. அது நடந்திருக்கவே நடந்திருக்காது. அதே போல் நீ  இல்லை எனில் இந்த இந்திரப்ரஸ்தம் எங்கே! உன்னால் அல்லவோ இந்த நேர்மையும், தூய்மையும் உருவெடுத்த அற்புத நகரம் உருவாயிற்று!” என்று தழதழத்த குரலில் கூறினான்.

“வருந்தாதே யுதிஷ்டிரா! நான் எங்கே இருந்தாலும், உங்கள் ஐவரைக்குறித்துத் தான் சிந்திப்பேன். உங்கள் நலனுக்காகவே வாழ்கிறேன். நீ தர்ம சாம்ராஜ்யத்தின் அரசன், இளவரசன் அனைத்தும் ஆவாய்! உனக்கு எப்போது என் உதவி தேவைப்படுமோ அப்போதெல்லாம் நான் நிச்சயமாய் வந்துவிடுவேன். சுழிக்காற்றை விட வேகமாகப் பயணப்பட்டு உன்னை வந்தடைவேன்! இது நிச்சயம்!” என்றான். அடுத்து அர்ஜுனன் கிருஷ்ணனுக்குப் பிரியாவிடை கொடுக்க அவனை அணைத்துக் கொண்ட போது அவனால் தன் விம்மலை அடக்க முடியவில்லை. அவனுடைய உள்ளார்ந்த சோகத்தைப் புரிந்து கொண்டான் கிருஷ்ணன். அவன் முதுகில் தட்டிக் கொடுத்துச் சமாதானம் செய்தான். “துவாரகைக்கு வா! என் சார்பாக அன்பின் அடையாளத்தை உனக்குக் காட்டுகிறேன்.” என்றான். கிருஷ்ணனும், பலராமனும் அதன் பின்னர் குந்தி தேவி, திரௌபதி மற்றப் பாண்டவ சகோதரர்கள் ஆகியோரிடமும் பிரியாவிடை பெற்றனர்.

அனைவரும் சேர்ந்து கலங்கிய மனதுடனும், கண்ணீர் பொங்கும் விழிகளுடனும் கிருஷ்ணனுக்கு விடை கொடுத்து அனுப்பியதும் கிருஷ்ணன் தன் ரதத்தில் ஏறிக் கொண்டான். சாரதியிடமிருந்து குதிரைகளின் கயிற்றைத் தன்னிடம் வாங்கிக் கொண்டவன் பாண்டவர்கள் பக்கம் திரும்பினான். அனைவரும் கண்களில் கண்ணீருடன் காட்சி அளித்தனர்.  கண்ணன் அனைவரையும் திரும்பத் திரும்பப்பார்த்து சூரியனின் கதிர்களைப் போன்ற பிரகாசமானதொரு புன்சிரிப்பை அவர்களுக்குப் பரிசாகத் தந்தான். ஆம், அவன் போக வேண்டும்! அவனுடைய நகரத்துக்கு, அவனுடைய சொந்த மக்களிடையே போக வேண்டும்; அனைவரையும் பார்க்க வேண்டும். ஆனால் அவன் மனம் என்னமோ இந்த ஐந்து சகோதரர்களிடம் தான் இருந்தது. தர்ம சாம்ராஜ்யம் அமைக்கப்பாடுபடும் இந்த தைரியமான, துணிச்சல் மிகுந்த சகோதரர்கள் ஐவருக்கும் அவன் உதவி தேவை தான். ஆனாலும் அவன் போயாக வேண்டும். உடனேயே திரும்பிய கிருஷ்ணன் தன் கைகளிலிருந்த கயிற்றைச் சுண்டி விட்டுக் குதிரைகளை விரட்டினான். தேவலோகத்திலிருந்து வந்த இந்திரன் கருமேகங்களுக்கிடையே மறைவது போல் தன் பின்னே பெரும் புழுதிப் புயலைக்கிளப்பி விட்டுவிட்டுக் கிருஷ்ணனின் குதிரையும் ஓடி மறைந்தது.

நான்காம் பாகம் முடிந்தது. இனி ஐந்தாம் பாகம் தொடரும். படித்து ஆதரவு காட்டும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

Sunday, August 30, 2015

காண்டவப்ரஸ்தம் நோக்கிய பயணம்! பின்னுரை தொடர்கிறது!

பீமன் ஒரு பெரிய யானையின் மேல் அமர்ந்திருந்தான். அவனோடு கிருஷ்ணனும் காணப்பட்டான். குரு வம்சத்து முக்கியஸ்தர்களில் பலரும் பீமனைத் தொடர்ந்து யானை மேல் வந்தனர். அந்த மாபெரும் ஊர்வலத்தையே பீமன் தான் தலைமை தாங்கி நடத்துவது போல் இருந்தது. யானைகள் செல்லும்போதே தங்கள் உணவுக்காகவும், செல்லும் வழிக்காகவும் வழியெங்கும் காணப்பட்ட பெரிய மரங்களைப் பெயர்த்தெடுத்தன. உண்ணக் கூடியவற்றை உண்டு விட்டு மிச்சத்தை வழியிலேயே போட்டுவிடும்படி யானையைப் பழக்கி இருந்தனர் யானைப் பாகர்கள். அதனால் பின் தொடர்பவர்கள் வழி தவறிப் போகாமல் பின் தொடர வசதியாக இருக்கும் அல்லவா! யானைகளுக்குப் பின்னர் அதிரதர்களும், மஹாரதர்களும் வந்தனர்.  அவர்களுக்குப் பின்னால் வேத வியாசர் தன் குழுவினருடன் வந்தார். அவர்கள் அனைவரும் கால்நடையாகவே வந்தனர். யுதிஷ்டிரனும் பலராமனும் அவர்களுக்குத் துணையாக அவர்களுடனே வந்தனர்.

எல்லாவற்றுக்கும் பின்னால் மாட்டு வண்டிகள் தானியங்களையும், தங்கங்களையும், மற்றப் பொருட்களையும் சுமந்து கொண்டு வரிசையாக வந்தன. கௌரவர்களிடம் பாகப்பிரிவினையில் பெற்ற தங்கத்தோடு கூடத் தங்கள் மாமனார் ஆன துருபதன் அளித்த தங்கத்தையும் எடுத்துக் கொண்டு வந்தனர் பாண்டவர்கள். ரதங்களில் அரசகுல மகளிர் பயணித்தனர். அவர்களில் குந்தி தேவியும் திரௌபதியும் காணப்பட்டனர். மற்ற சாமானியப் பெண்மணிகள் அவரவர் தகுதிக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப மாட்டு வண்டிகளிலோ, கால்நடையாகவோ பயணித்தனர். அனைவரும் தங்கள் சிறிய குழந்தைகளைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு பெரிய குழந்தைகளின் கைகளைப் பிடித்த வண்ணம் விழாக்காலப் பாடல்களைப் பாடிக் கொண்டு வந்தனர்.

இவர்களுக்கெல்லாம் பின்னால் மற்றவர்கள் வந்தனர். தங்கள் குடும்பத்தினருடன் வந்தனர். வண்டிகளிலும், குதிரைகள் மேலும், மாட்டு வண்டிகளிலும்,  கோவேறு கழுதைகள் மேலும், ஒரு சிலர் பல்லக்குகளிலும் பயணித்தனர். இரு பக்கங்களிலும் கால்நடைச் செல்வங்கள் அவற்றின் எஜமானர்கள் அவற்றைக் கவனிக்கப் பயணித்தன. மல்லர்கள் அங்குமிங்கும் போய் வந்து அனைவரையும் உற்சாகப்படுத்தி வந்தனர். கால்நடைகளைக் கவனிப்போரிடம் சென்று அவர்களுக்கு வேண்டிய தேவைகள் எல்லாம் சரிவரக் கிடைக்கின்றனவா என்று கேட்டு உறுதி செய்து கொண்டனர். இசைக்கருவிகள் முழக்குவோரும் இந்த மாபெரும் ஊர்வலத்தில் கலந்து கொண்டு தங்கள் இசைக்கருவிகளை முழக்கிய வண்ணம் வந்தனர். அந்த சப்தத்தால் சுற்று வட்டாரமே அதிர்ந்தது. பாடகர்கள் அருமையான பாடல்களை இசை அமைத்துப் பாடியபடி வந்தனர். செல்லும்போதே வேத பிராமணர்கள் தங்கள் சீடர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்த வண்ணம் வந்தனர்.

இந்த நகரும் நகரமானது ஒவ்வொரு நாளும் விடிகாலையில் மாடுகள் கறக்கப்பட்டவுடன், அனைவரும் காலை அநுஷ்டானங்களை முடித்தவுடன் கிளம்பும். ஒரு யோஜனை தூரம் அல்லது இரண்டு யோஜனை தூரம் வரை தொடர்ந்து செல்வார்கள். (ஒரு யோஜனை என்பது கிட்டத்தட்டப் பத்துமைல்) கிட்டத்தட்ட 20 மைல் தூரம் சென்றதும் சூரியன் உச்சிக்கு வருவதற்கு ஒரு நாழிகை முன்னர் சாத்யகியால் ஏற்கெனவே குறிப்பிட்டு அமைக்கப்பட்டிருக்கும் தங்குமிடத்திற்குச் சென்று தங்குவார்கள். அங்கே சென்று அந்த அசை நகரம் தங்கியதும், வேத வியாசர் யாகத் தீயை மூட்டுவார். யாகங்கள் செய்யப்பட்டு அர்க்கியங்கள் கொடுக்கப்பட்டு யாக அக்னிக்கு அவிர்பாகமும் கொடுக்கப்படும். அதன் பின்னர் அந்த மாபெரும் மக்கள் கூட்டத்தில் உடல்நலம் சரியில்லாதோரைக் கவனிப்பார் வியாசர். தன் ஆசிகளையும் மந்திரிக்கப்பட்ட பாலையும்குடிக்கக் கொடுப்பார். அதன் பின்னர் அனைவரும் மதிய உணவை முடிப்பார்கள்.

கற்றறிந்த வேத பிராமணர்களும் மற்றவர்களும் வேத வியாசரைச் சூழ்ந்து கொள்ள அவர்களின் சந்தேகங்களுக்குப் பதில் அளிப்பார் வியாசர். அதன் பின்னர் ரிஷி, முனிவர்களால் சித்தி அடைவதைக் குறித்தும் தன்னைத் தான் அறிதலைக் குறித்தும் வாத விவாதங்கள் நடைபெறும். தவங்கள் செய்யவும், சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதைக் குறித்தும் விவாதிக்கப்படும். அங்கிருக்கும் மக்களில் சிலர் இந்த வாத, விவாதங்களைக் கேட்பதோடு மட்டுமில்லாமல் வியாசரின் ஆசிகளையும் கோரிப் பெறுவார்கள். தினந்தோறும் பெரிய அளவில் கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து வியாசரிடம் பேசி அவர் ஆசிகளைப் பெற்றுச் செல்வார்கள். அவருடைய வழிகாட்டுதலின் படி அங்கு வந்திருந்த ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு பிராமணரைத் தங்கள் குடும்ப ஆசாரியனாக ஏற்றுக் கொண்டனர். அவரவர் குடும்ப வழக்கப்படி சடங்குகள்,சம்பிரதாயங்களை செய்ய வைத்தார். குழந்தைகளுக்குக் கல்வியும் கற்பிக்கப்பட்டது.

ஒவ்வொரு குடும்பமும் தங்களுக்கு வேண்டிய மதிய உணவைத் தாங்களே தயார் செய்து கொண்டனர். பீமனின் மேற்பார்வையில் அரச குடும்பத்தினருக்கான சமையலறையில் பெரிய அளவில் உணவுப் பதார்த்தங்கள் தயாரிக்கப்பட்டு  யாருக்கெல்லாம் சமைக்க முடியவில்லையோ அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டது. மதிய வேளையில் குழந்தைகள் விளையாட, வயதானவர்கள் ஓய்வு எடுத்துக் கொள்வார்கள். பெண்கள் கூடி அமர்ந்து தங்களுக்குத் தெரிந்த பாடல்களைப் பாட, ஆண்கள் அதற்கேற்ப இசைக்கருவிகளை முழக்குவார்கள். க்ஷத்திரியர்களில் சிலர் வேட்டைக்கும் சென்றனர். மல்லர்கள் தங்கள் மல்யுத்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து அனைவருக்கும் காட்சி விருந்து அளித்தனர். கூடிய கூட்டத்தினரின் உற்சாகத்துக்கும், அவர்களின் வரவேற்புக்கும் இடையே கிருஷ்ணனும், பலராமனும் கூட அர்ஜுனனுடன் அந்த மல்யுத்தப் பயிற்சியில் ஈடுபட்டுச் சிறிய அளவில் போட்டிகள் நடத்தி அனைவரையும் மகிழ்வித்தனர். சூரிய அஸ்தமனம் ஆகும் சமயம் மாலை நேர அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு இரவு உணவை முடித்துக் கொண்டு அனைவரும் உறங்கச் செல்வார்கள்.

அர்ஜுனன் தலைமையில் அங்கிருந்த மக்களை எல்லாம் க்ஷத்திரியர்களும், மற்றப் படை வீரர்களும் அரண் போல் பாதுகாத்துக் காட்டு மிருகங்களிடமிருந்தும் வழிப்பறிக் கொள்ளைக்காரரிடமிருந்தும் பாதுகாத்தனர். ஒவ்வொரு நாளும் பகல் முழுவதும் கிருஷ்ணன் ஒவ்வொரு குழுவாகச் சென்று பார்த்து அனைவரையும் அறிமுகம் செய்து கொண்டான். அவன் தரிசனத்தை வேண்டியவருக்கு தரிசனம் அளித்ததோடு அல்லாமல் பெண்களை மரியாதையுடனும் நடத்தினான். அவ்வப்போது கேலி செய்து கொண்டும், பரிகாசமாகப் பேசிச் சிரித்துக் கொண்டும், குழந்தைகளைக் கொஞ்சிக் கொண்டும் இருந்தான். மல்லர்களுடன் மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்டான்.  குழந்தைகளுக்குப் பல்வேறு விளையாட்டுக்களைக் கற்றுக் கொடுத்ததோடு படித்தறிந்த ஆன்றோரின் விவாதங்களையும் மௌனமாகக் கவனித்துக் கொண்டான். தேவைப்பட்ட நேரத்தில் விவாதங்களிலும் கலந்து கொண்டான்.

ஒரு நாள் காலை நேரம்! அசை நகரம் பயணப்பட்டுக் கொண்டிருக்கையில் அனைவர் காதுகளிலும் “சோ”வென்ற சப்தம். சில்லென்ற காற்று வேறு! அனைவரும் ஆவலோடு மேலே நடந்தனர். சற்று தூரத்தில் யமுனை பொங்கிப் பிரவாகம் எடுத்து ஓடிக் கொண்டிருந்தாள். பரந்து விரிந்திருந்த யமுனையின் அகலத்தையும் விசையுடன் ஓடிக் கொண்டிருக்கும் வேகத்தையும் கண்டவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். தாங்கள் தங்கள் இடத்திற்கு வந்து விட்டோம் என உணர்ந்தனர். அனைவரும் பெரு மகிழ்வுடனும், களிப்புடனும் ஓட்டமாக ஓடி யமுனையில் மூழ்கினர். தங்கள் கைகளால் நீரை அடித்து மகிழ்ந்தனர்.


பின்னுரை நாளை முடியும்.

Saturday, August 29, 2015

நான்காம் பாகத்தின் பின்னுரை// காண்டவப்ரஸ்தம் நோக்கிய பயணம்!


அடுத்த நாளே பீமனுக்கு யுவராஜாவாகப் பட்டாபிஷேஹம் செய்யப்பட்டது. அதன் பின்னர் சுஷர்மாவும், ஜாலந்திராவும் காசிக்குத் திரும்பிச் சென்றனர். விராட அரசனும், சுநீதனும் கூட அவரவர் நாட்டிற்குத் திரும்பினார்கள். அக்ரூரரும் உத்தவனும் பல யாதவ அதிரதர்களுடன் கூட துவாரகை திரும்பினார்கள். பல யாதவர்களும் தங்கள் இருப்பிடம் செல்ல ஆவலாகவே இருந்தனர். என்றாலும் அனைவரும் போக முடியவில்லை. மேலும் கிருஷ்ணன் அளித்த வாக்குறுதியின்படிப் பொன்னும், பொருட்களும் கால்நடைச் செல்வங்களும் துவாரகையிலிருந்து கொண்டு வர யாரேனும் போக வேண்டுமல்லவா? ஆகவே அதற்காகவும் அக்ரூரரும், உத்தவனும் மற்ற யாதவர்களுடன் திரும்ப வேண்டி இருந்தது. மணிமானும், தன் நாட்டில் இருந்து கைவினைக்கலைஞர்களை அழைத்துவருவதற்காக நாக நாட்டிற்குக் கிளம்பினான். காண்டவப்ரஸ்தத்தில் அவர்களின் கைத் திறமையில் அனைத்தும் அமையவேண்டும் என்பது அவன் விருப்பம். ஐந்து சகோதரர்களுக்கும் தங்கள் திறமையைக் காட்டி நட்பை நீடிக்கச் செய்யவே ஆவல் கொண்டனர் அவர்கள்.

தன்னுடைய புயல் வேகப் பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை பீமன் செய்ய ஆரம்பித்தான். கூடவே கிருஷ்ணனையும் மேற்பார்வைக்கு அழைத்துக் கொண்டான். அர்ஜுனனும், சஹாதேவனும் குரு வம்சத்து மற்ற மக்களிடம் பேசித் தங்களுடன் காண்டவப்ரஸ்தம் வரத் தயார் ஆக இருக்கிறவர்களைத் தங்களுடன் வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இதற்காக அவர்கள் குரு வம்சத்தினரிடம் மட்டுமில்லாமல் மற்ற க்ஷத்திரியர்கள், வைசியர்கள், மஹாஜனங்கள், படை வீரர்கள் என அனைவரிடமும் பேசி ஆக வேண்டி இருந்தது. சற்றும் குற்றம் கண்டு பிடிக்காத வகையில் விதுரரால் பிரித்துக் கொடுக்கப்பட்ட தங்கம், நகைகள், ஆபரணங்கள், ரத்தினங்கள், தானியங்கள், குதிரைகள், யானைகள், ரதங்கள், படைக்கலங்கள், ஒட்டகங்கள் ஆகியவற்றைச் சரிபார்த்துப் பாதுகாக்கும் பொறுப்பை நகுலன் ஏற்றுக் கொண்டான். பாண்டவர்களின் ஆதர்ச குருவான தௌம்யர் மற்ற வேத பிராமணர்களிடமும், முனிகள், ரிஷிகளிடமும் பேசி அவர்கள் குருகுலத்தைக் காண்டவப்ரஸ்தத்திலோ அல்லது அதற்கு அருகிலோ ஏற்படுத்துமாறு வேண்டிக் கொண்டனர். காண்டவப்ரஸ்தம் வருவதற்கு ஆவலுடன் இருப்பவர்களை ஏற்பாடுகளைச் செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர்.

சாத்யகியும் மற்ற யாதவ அதிரதர்களும் பாண்டவர்களும் மற்ற பரிஜனங்களும் வரும் முன்னரே அங்கு சென்று வழியில் அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்க வேண்டிய இடம், மற்றும் காண்டவப்ரஸ்தம் சென்றதும் தங்க வேண்டிய இடம் ஆகியவற்றைச் சரியானபடி தேர்ந்தெடுக்க வேண்டி முன்னரே கிளம்பினார்கள். துஷ்சாசனன் மல்லர்களில் இருவரைக் கொன்ற அன்று மல்லர் தலைவன் ஆன பலியா பீஷ்மரிடம் பேசி இதற்கொரு நியாயம் எனில் அது தாங்கள் தங்கள் தாய்நாடான குந்திபோஜனின் அரசுக்குத் திரும்புவதே ஆகும் என்றும் அங்கே தாங்கள் திரும்பிப் போக அனுமதி வேண்டும் எனவும் கேட்டிருந்தான். ஆனால் இப்போது யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுரத்தை ஆளப் போகிறான் என நினைத்திருந்தபோது அதைக் கொஞ்சம் தள்ளிப் போட்டனர். இப்போதோ முற்றிலும் நிலைமை மாறிவிட்டது. பாண்டவர்கள் காட்டுக்கு நாடு கடத்தப்பட்டிருக்கின்றனர். இந்த நிலைமையில் மொத்த மல்லர்களும் அவர்களின் துணைக்கும், உதவிக்கும் தேவைப்படும். ஆகவே பலியா அனைத்து மல்லர்களையும் காண்டவப்ரஸ்தம் சென்று பாண்டவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுமாறு கட்டளையிட்டான். அதன்படியே அவர்களும் கிளம்பினார்கள்.

ஆனால் ராணிமாதாவுக்கும், பீஷ்மபிதாமஹருக்கும் கவனிக்க ஆட்கள் இல்லாமல் போய்விடுமே! இதை நன்கு யோசித்து சோமேஸ்வரையும் அவன் மனைவியையும் மற்றச் சில மல்லர்களுடன் அங்கேயே தங்கி இருந்து ராணிமாதா சத்யவதிக்கும், பீஷ்மபிதாமஹருக்கும் வேண்டிய சேவைகளைச் செய்யுமாறும் கட்டளை இட்டான் பலியா. இரு வாரங்களுக்குப் பிறகு ஒரு நன்னாளில், ஐந்து சகோதரர்களும், கிருஷ்ணனும், பலராமனும் உடன் வர, ஹஸ்தினாபுரத்துக்கும் குருவம்சத்து மற்ற மூத்தவர்களுக்கும், தங்கள் சித்தப்பாவான விதுரருக்கும் தங்கள் பிரியாவிடையைக் கொடுத்து விட்டுக் காண்டவப்ரஸ்தம் நோக்கிக் கிளம்பினார்கள். வழியெங்கும் ஹஸ்தினாபுரத்தில் தங்கி இருக்கும் மக்கள் கூட்டம் அணிவகுத்து நின்று பாண்டவ இளவரசர்களுக்குப் பிரியாவிடை கொடுத்தது. அதிசயத்திலும் அதிசயமாக, அங்கிருந்த மூத்தோர் அனைவருக்கும் மிகவும் புதுமையாக ராணிமாதா தன் மாளிகையிலிருந்து வெளியே வந்தார். தன் கண்களில் கண்ணீருடன் குந்தி, திரௌபதி மற்றும் பாண்டவர்கள் ஐவர் ஆகியவர்களை அணைத்துக்கொண்டு உச்சி முகர்ந்து தன் ஆசிகளைத் தெரிவித்தாள். மனம் நிறைய வருத்தத்துடன் அவர்களுக்குப்பிரியா விடை கொடுத்தாள்.

கடினமான மனம் படைத்த பீஷ்மர் கண்களில் கூட அன்று கண்ணீர் நிரம்பி இருந்தது. சகோதரச் சண்டை என்னவோ நிறுத்தப்பட்டு விட்டது; அது உண்மை தான். ஆனால்!!!!!! துரியோதனனா ஹஸ்தினாபுரத்தை ஆளுவது? இது சரியா? முறையா? தர்மமா? ஆனால் அவரால் பாண்டவர்களுடன் செல்ல இயலாது. ஏனெனில் அவர் தந்தை ஷாந்தனுவுக்கு ஹஸ்தினாபுரத்தைக் காப்பேன் என்று உறுதிமொழி கொடுத்துள்ளார். என்ன ஆனாலும் அவர் வாழ்க்கை கடைசி வரை இந்த ஹஸ்தினாபுரத்தில் தான். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஹஸ்தினாபுரம் ஒன்றே அவர் இலக்கு. இதை விட்டு அவர் செல்ல முடியாது.

தன் தாய் சத்யவதியை வேத வியாசர் கீழே விழுந்து நமஸ்கரித்தார். அங்குள்ள மற்றவர்களை ஆசீர்வதித்த அவர் தன் சீடர்களுடன் காண்டவப்ரஸ்தம் நோக்கிப் பயணித்தார். அங்கிருந்த மக்களுக்குப் பார்க்கையில் ஒரு மாபெரும் நகரமே இடம் பெயர்ந்து அங்கிருந்து செல்வது போல் தோன்றியது. ஆம், காண்டவப்ரஸ்தத்தை நோக்கி ஹஸ்தினாபுரத்தில் பாதி சென்று கொண்டிருந்தது. அங்கு எவர் இல்லை? பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், குரு வம்சத்தின் வாரிசுகளில் பலர், மஹாஜனங்கள், மல்லர்கள், வில்லாளிகள், அதிரதர்கள், மஹாரதர்கள், படை வீரர்கள், கைவினைக்கலைஞர்கள், என அனைவரும் தங்கள் குடும்பங்களுடனும் தங்கள் பொருட்களுடனும் காண்டவப்ரஸ்தம் நோக்கிப் பயணித்தனர்.  அதில் சில ஏழை மக்களும், தாங்கள் காண்டவப்ரஸ்தம் போயாவது தங்களுக்கெனச் சொந்தமாகச் சிறு அளவிலாவது நிலம் பெற்றுப்பயனடையலாம் எனத்தங்கள் குடும்பங்களுடன் வாழ்க்கையின் விடியல் நோக்கிப் பயணப்பட்டனர்.

Friday, August 28, 2015

வாக்குறுதிகளை நிறைவேற்றிய வாசுதேவன்!

அனைவரும் காத்திருக்கக் கிருஷ்ணன் தன் பரிசு அறிவிப்பைச் செய்தான். “எங்களிடம் இருக்கும் தங்கத்தில் ஐந்தில் ஒரு பாகம் தருகிறோம். அதே போல் தான் கால்நடைச் செல்வங்கள், ரதங்கள், குதிரைகள், யானைகள் போன்றவற்றையும் தருகிறோம். யாதவர்களில் விரும்பும் ஐந்தில் ஒரு பாகத்தினரும் பாண்டவர்களுக்குச் சேவை செய்ய வருகின்றனர். திறந்த வாய் திறந்தபடி இருக்க அனைவரும் ஸ்தம்பித்துப் போனார்கள்.  யாதவர்களால் இவ்வளவு மாபெரும் பரிசை அளிக்க முடியும் என்று அங்கிருந்த எவரும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.  சற்று நேரம் கடும் அமைதியில் இருந்த சபையில் திடீர் என யாரோ, “வாசுதேவக்கிருஷ்ணனுக்கு மங்களம்!” என்று உரத்த குரலில் கூவ அனைவரையும் இது தொற்றிக் கொண்டது. அனைவருமே கிருஷ்ணனுக்கு மங்கள வாழ்த்துகள் சொல்லியும், கிருஷ்ணனுக்கு ஜயம் என்று சொல்லியும் வாழ்த்தத் தொடங்கினார்கள்.

சாதாரணமாகக் கடுமையே காட்டும் பீஷ்மர் கூட இந்த அறிவிப்பினால் நெகிழ்ந்தும், மகிழ்ந்தும் போயிருந்தார் என்பது அங்கு கூடி இருந்த அரசர்கள் செய்த கைதட்டல் ஒலியில் கலந்து கொண்டதில் இருந்து தெரிந்தது. அங்கிருந்த மன்னர்களும் அதுவரையிலும் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் தங்கள் கருத்தைச் சொல்லாமல் மௌனம் காத்தவர்கள் இப்போது ஏகோபித்துக் கிருஷ்ணனின் அறிவிப்புக்குத் தங்கள் மகிழ்வைத் தெரிவித்தனர். யுதிஷ்டிரன் கண்களில் கண்ணீர் ததும்பியது. நன்றிக்கடனில் மூழ்கினான் யுதிஷ்டிரன். அவனால் பேசமுடியவில்லை.  அப்போது கூட்டத்தில் அமைதியை மீண்டும் நிலை நாட்டக் கிருஷ்ணன் தன் கைகளை உயர்த்தினான். அப்போது தான் அவன் இன்னும் பேசி முடியவில்லை என்பதை சபையினர் புரிந்து கொண்டனர். “மேலும் என் மூத்த அண்ணாரும், ரோஹிணி அன்னையின் மகனுமான பலராமர், உங்களுடன் வருகிறார். அவரோடு தேர்ந்தெடுத்த யாதவர் குல அதிரதர்களுடன் நானும் வருகிறேன். மாட்சிமை பொருந்திய யுதிஷ்டிரரே! காண்டவபிரஸ்தத்துக்கு நாங்கள் அனைவரும் உங்களுடன் வந்திருந்து புதிய நகரை நிர்மாணிக்க உதவிகள் செய்கிறோம்.”

அதற்கு மேல் பீமனால் பொறுக்க முடியவில்லை. சபையில் வயதிலும் அறிவிலும், தகுதியிலும் மூத்தவர் பலர் இருக்க அவர்கள் முன் வாயடக்கம் வேண்டும் என்னும் நினைவே அற்றவனாய்த் தன் உரத்த குரலில் முழக்கமிட ஆரம்பித்தான். "ஜெய கிருஷ்ண வாசுதேவா!” என்று உரத்த குரலில் கூவினான். சபை மொத்தமும் அவனுடன் சேர்ந்து  கொண்டது. பின்னர் கிருஷ்ணன் வியாசர் பக்கம் திரும்பினான். “முனி சிரேஷ்டரே! பாண்டவர்களை அவர்கள் நிர்மாணிக்கப் போகும் நகரில் பல்லாண்டு வீற்றிருந்து நல்லாட்சி தர வேண்டும் என ஆசீர்வதிக்க வேண்டுகிறேன். அது மட்டுமல்ல, குருதேவா! நீங்களும் எங்களுடன் காண்டவபிரஸ்தம் வந்திருந்து எங்கள் புதிய நகரம் நிர்மாணம் ஆகப் போகும் இடத்தையும் பார்த்து நல்லாசி கூறியருள வேண்டுகிறேன்.”

“வாசுதேவா! நிச்சயமாய் நான் வருகிறேன்.” என்று சிரித்த வண்ணம் கூறிய வியாசர் தன் வலக்கையை உயர்த்தி யுதிஷ்டிரனுக்கு ஆசிகளைத் தெரிவித்தார். பின்னர் உரத்த குரலில் வேத மந்திரங்களை ஓதி அதன் மூலமும் கடவுளரின் ஆசிகளை வேண்டினார். வேத பண்டிதர்கள் அவருடன் கலந்து கொண்டனர்.

“ஏ இந்திரா, தேவர்களின் அரசனே! உன் கருணை மழையை இந்த அரசன் மேல் பொழிவாய்!
இவனுக்கு நீண்ட ஆயுளைக் கொடுப்பாய்!
அனைத்துச் சிறப்புக்களையும் இவனுக்குக் கொடுத்து ஆசீர்வதிப்பாய்!
மனிதருக்குள் இவன் தலைசிறந்தவனாக இருக்கவும், இவனே அனைவருக்கும் தலைவனாக இருக்கவும், இந்தப் பரந்த பூமியில் பிரபுவாகத் தலைமை தாங்கி வழிநடத்தவும் ஆசீர்வதிப்பாய்!
அனைத்து மக்களின் ஆசைகளையும் இவன் பூர்த்தி செய்ய ஆசீர்வதிப்பாய்!
மனிதர்களுக்குப் புதியதொரு உலகைக் காட்டி அவர்களை நல்வழிப்படுத்த் ஆசீர்வதிப்பாய்!
சூரியக் கடவுளைப் போல், அவன் ஒளிபொருந்திய கதிர்களைப் போல் இவனும் பிரகாசிக்க அருளுவாய்!
நூற்றுக்கணக்கான வசந்தங்களை இவன் கண்டு நீண்ட நாட்கள் வாழ்வாங்கு வாழ ஆசீர்வதிப்பாய்!

இவை முடிந்ததும் மந்திராக்ஷதைகளால் யுதிஷ்டிரனுக்கு வியாசரும் மற்ற பிராமணர்களும், ரிஷி, முனிவர்களும் ஆசீர்வதித்தனர். அப்போது ராஜசபையில் இருந்த அனைவரும் இடி முழக்கம் போல் தங்கள் கைகளைத் தட்டித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். அந்தச் சபையின் அனைத்து நியதிகளையும் சம்பிரதாயமான சடங்குகளையும் உடைத்துக்கொண்டு அனைவரும் ஒரே குரலில், ஒரே மனிதனின் உரத்து ஒலிப்பது போல், “முனி சிரேஷ்டரின் ஆசீர்வாதங்கள் அனைத்தும் உண்மையாகட்டும்! கிருஷ்ண வாசுதேவனுக்கு ஜெயம்! யுதிஷ்டிரனுக்கு ஜெயம்! குருவம்ச சிரேஷ்ட்ரான யுதிஷ்டிரனுக்கு மங்களம்!” என்று முழங்கினார்கள்.

சிறிது நேரத்தில் அங்கிருந்த பெரியோர் அனைவரும் பக்கவாட்டுக் கதவின் வழியே வெளியேறினார்கள். அவர்கள் வெளியேறியதுமே மற்ற மக்களும் முக்கிய வாயில் வழியாக வெளியேற ஆரம்பித்தனர். அப்போது பீமன் சிறிது கூட சம்பிரதாயம் குறித்துக் கவலை கொள்ளாமல் குதித்து ஓடி வந்தான். கிருஷ்ணனை ஆரத் தழுவிக் கொண்டான். பின்னர் அவனை அப்படியே உயரத் தூக்கிச் சுற்றினான். அங்கிருந்த அனைவரும் இதைப் பார்த்து ரசித்தனர். பீமன் பின்னர் கிருஷ்ணனைத் தரையில் இறக்கிவிட்டு விட்டு அவன் தோள்களின் மேல் தன் கையை வைத்த வண்ணம் பக்கவாட்டுக் கதவை நோக்கி நகர்ந்தான். கிருஷ்ணனைப் பார்த்து, “நீ மிகப் பொல்லாதவன்!” என்று கூறிச் சிரித்தான். சிரிப்புச் சப்தம் கேட்காதவாறு கிருஷ்ணன் சிரித்தான். “ஆம், நான் பொல்லாதவன் தான். இல்லை எனில் நான் அளித்த நான்கு உறுதிமொழிகளையும்  எவ்வாறு காப்பாற்றுவேன்? அவற்றில் மூன்று ஏற்கெனவே என்னால் மீட்கப்பட்டது தான்!”

“என்ன, நான்கா?” பீமன் கேட்டான்!

“ஒன்று திரௌபதிக்குக் கொடுத்த வாக்குறுதி! அவளுக்கு நல்ல கணவனைத் தேடித்தருவேன் என்று சொல்லி இருந்தேன். ஒருவனுக்குப் பதிலாக ஐந்து நல்ல கணவர்கள் அவளுக்குக் கிடைத்திருக்கின்றனர். இரண்டாவது வாக்குறுதி பானுமதிக்குக் கொடுத்தது! துரியோதனன் மட்டுமே ஹஸ்தினாபுரத்தை ஆளவேண்டும் என்பது அது! விரைவில் அவன் ஹஸ்தினாபுரத்துக்கு அரசனாக முடிசூட்டப்படுவான்! மூன்றாவது நான் உனக்குக் கொடுத்தது! நீ யுவராஜாவாக ஆவாய், உன்னை யுவராஜா ஆக்குவேன் என்று! ஆம், விரைவில் நீயும் யுவராஜா ஆகிவிடுவாய். குரு தேவர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து விரைவில் உன்னை யுவராஜா ஆக்குவார் என நம்புவோம்.”

“நான்காவது?”

“ஆம், நான்காவது இன்னும் மிச்சம் இருக்கிறது. அது பூர்த்தி ஆவதும், ஆகாததும் உன்னிடம் தான் இருக்கிறது. உன் கையில் தான் இருக்கிறது!”

“என்ன என்னிடமா?” ஆச்சரியத்துடன் கேட்டான் பீமன்.

“ஆம், ஜாலந்திராவிடம் அவளுக்கு நல்லதொரு கணவனைத் தேடித்தருவதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன்.” கிருஷ்ணன் சிரித்தான்.


இத்துடன் நான்காம் பாகம் முடிவடைந்தது. பின்னுரையைத் தொடர்ந்து ஐந்தாம் பாகம் விரைவில் தொடரும். நன்றி. வணக்கம்.

Wednesday, August 26, 2015

யாதவர்களின் பரிசு!

அதற்குள்ளாகக் கிருஷ்ணன் மெல்ல மெல்ல தன் அடுத்த அஸ்திரத்தைப் பிரயோகித்தான். பீஷ்மரைப் பார்த்து, “தாத்தா அவர்களே! ஒருவேளை இங்குள்ள சில படித்த வேத பிராமணர்கள், மல்லர்கள், படை வீரர்கள், தச்சர்கள், வைசியர்கள், குருவம்சத்தின் பிரதானிகளில் சிலர், க்ஷத்திரியப் பெருமக்களில் சிலர், கைவினைஞர்கள் என்று சிலர் ஆகியோர் அவர்கள் குடும்பத்துடன் ஐந்து சகோதரர்களுடன் சேர்ந்து காண்டவபிரஸ்தம் போக நினைக்கலாம். ஆகவே அவர்கள் செல்லவேண்டிய ஏற்பாடுகளையும் கவனிக்க வேண்டும்.” என்றான். கூட்டம் அசையாமல் கேட்டுக் கொண்டிருந்தது. இதை அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. இப்போது கிருஷ்ணன் சொன்னதைக் கேட்டது, அவர்களுக்கு மனதில் பெரும் நிம்மதி ஏற்பட்டது. ஆஹா, துரியோதனனின் கொடுங்கோன்மையிலிருந்து தப்ப இப்படி ஒரு வழி இருக்கிறதா என்று சந்தோஷமும், மகிழ்ச்சியும் அடைந்தார்கள். அதுவரை அவர்கள் மனதில் ஏற்பட்டிருந்த அச்சம் மறைந்தது. அனைவரும் சாது! சாது! என்று கோஷித்துத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

இந்தச் செய்தி இடி போல் இறங்கியது துரியோதனனுக்கு! அவன் இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் இதை எதிர்த்துப் பேச நினைத்தும் அவனால் பேச முடியவில்லை. கிருஷ்ணனின் இருப்பு அந்த சபையையே ஒரு மந்திரக் கயிறால் பிணைத்திருப்பது போல் அவனையும் பிணைத்திருந்தது. அதிலிருந்து அவனால் வெளிவர முடியவில்லை. தன்னுடைய எதிரிப்பைக் காட்ட நினைத்தாலும் அவனால் இப்போது என்ன சொல்ல முடியும்? துஷ்சாசனனின் கொடூரமான பார்வையைக் கண்ட ஷகுனி மெல்லக் குனிந்து அவன் காதுகளில், “தந்திரக்கார இடையன் இவன்!” என்று கூறினான். பீஷ்ம பிதாமகருக்குக் கிருஷ்ணனின் சாதுரியம் புரிந்தது. ஆகவே அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்தார். சில நொடிகளில் பாண்டவர்களுக்கு திருதராஷ்டிரன் அளித்த வனவாசத்தைக் கிருஷ்ணன் மாற்றி விட்டானே! இப்போது அவர்களால் குரு வம்சத்தினரின் இன்னொரு புத்தம்புதிய நகரமும், அதைச் சார்ந்ததொரு சாம்ராஜ்யமும் உருவாகப் போகிறது! இது குரு வம்சத்தினருக்கு மட்டுமல்ல; பாண்டவர்களுக்கும் ஒரு வகையில் மாபெரும் வெற்றியே!

கிருஷ்ணனைப் பார்த்து அவர், “வாசுதேவா! நான் உனக்கு என்னுடைய வாக்குறுதியை அளிக்கிறேன். இந்த ஹஸ்தினாபுரத்திலிருந்து எவர் செல்ல நினைக்கின்றனரோ அவர்களைப் பாண்டவர்களுடன் செல்ல அனுமதி கொடுக்கிறேன். அவர்கள் செல்கையில் அவர்கள் செல்வங்களை எல்லாம் கூடவே எடுத்துச் செல்லட்டும். தங்கமும், ரத்தினங்களும், வைரமும் மட்டுமில்லாமல் கால்நடைச் செல்வங்கள், அவர்களுடைய குதிரைகள், பசுக்கள் மற்றும் அவர்கள் வைத்திருக்கும் மாட்டு வண்டிகள், ரதங்கள் இன்னும் என்னவெல்லாம் வைத்திருக்கின்றனரோ அனைத்தும் எடுத்துச் செல்லட்டும். மேலும் அவர்களுக்குத் தேவைப்பட்டால் ஹஸ்தினாபுரத்தில் அவர்கள் விட்டுச் செல்லும் சொத்துக்களுக்கு ஈடான பணத்தை துரியோதனன் அளிப்பான்.”

“சாது! சாது!”

கிருஷ்ணன் அப்போது எழுந்து சென்று பலராமன் அருகே சென்று அவன் காதுகளில் மெதுவாக ஏதோ சொன்னான். ரகசியமானதொரு சம்பாஷணை இருவருக்கும் நடந்தது. உடனே அர்ஜுனன் அருகே அமர்ந்திருந்த அக்ரூரரை அழைத்த கிருஷ்ணன் அவரையும் உடன் வைத்துக் கொண்டு மேலும் பலராமனோடு ஏதோ ஆலோசனை செய்தான். ராஜசபை முழுவதும் அசையாமல் அப்படியே சித்திரங்கள் போல் அமர்ந்திருந்தது. ஆச்சரியத்தால் அகன்று விரிந்த விழிகளுடன்  பெருமிதம் பொங்க அமர்ந்திருந்த பலராமனையும் அவனுடன் சற்றும் மரியாதை குறையாமல், பாங்குடன் விநயத்துடன் பேசிக் கொண்டிருந்த கிருஷ்ணனின் அகன்ற கண்களில் கண்ட கருணையையும் பார்த்து வியந்து கொண்டிருந்தார்கள். தன் சகோதரனைக் கிருஷ்ணன் மிகுந்த மரியாதையுடன் நடத்துவதைக் கண்டு அதிசயித்தார்கள்.

கிருஷ்ணன் இதோ, இங்கே, இப்போது ஓர் அதிசயத்தைச் செய்து விட்டான். அற்புதம் ஒன்று நடந்திருக்கிறது. துரியோதனன் வெட்கத்தாலும் அவமானத்தாலும் தலை குனிந்து இருக்க வேண்டும். திருதராஷ்டிரனுக்கும் அப்படியெ. அவனுடைய பாரபட்சமான நடவடிக்கையே அவனுக்கு ஓர் தண்டனை ஆகி விட்டது. கிருஷ்ணனும், அக்ரூரரும் தங்கள் இடங்களுக்குத் திரும்பினார்கள். பலராமன் தன் தலையை உலுக்கிக் கொண்டு தன்னுள் இருந்த மயக்க நிலையை அகற்றினான். பின்னர் எழுந்து நின்று தன் கம்பீரமான குரலில் பேசத் தொடங்கினான். சபை முழுவதும் கவனமாக அவன் பேச்சைக் கேட்டது.

“சக்கரவர்த்தி ஷாந்தனுவின் அருமை மைந்தரே! காம்பில்யத்தில் பாஞ்சால இளவரசிக்கு நடந்த சுயம்வரத்தில் பங்கெடுக்கவே நாங்கள் யாதவ அதிரதர்கள் அனைவரும் இங்கே வந்தோம். அப்போது பாண்டவர்களால் பாஞ்சால இளவரசி வெல்லப்படுவாள் என்பதை நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. நாங்கள் ஆர்யவர்த்தம் வந்த சமயம் இங்கே நடைபெற்ற இரு வேறு புனிதமான, மங்களகரமான நிகழ்வுகள் நடைபெற்றதில் நாங்கள் மகிழ்கிறோம். ஒன்று பாஞ்சால இளவரசி பாண்டவர்கள் ஐவரையும் கரம் பிடித்து மணந்தது, இன்னொன்று பாண்டவர்களில் மூத்தவன் ஆன யுதிஷ்டிரன் குரு வம்சத்துச் சக்கரவர்த்தியாக முடி சூட்டப்பட்டது. எங்கள் அத்தையின் மக்கள் ஐவருக்கும் பொருத்தமானதொரு பரிசை நாங்கள் துவாரகையின் யாதவர்கள் கொடுத்தே ஆக வேண்டும். அது எங்கள் கடமை! இப்போது அந்தப் பரிசை எங்கள் மன்னரான உக்ரசேனரின் சார்பில் வாசுதேவக் கிருஷ்ணன் இந்த சபையில் அறிவிப்பான். எங்கள் தந்தையான வசுதேவரின் சார்பிலும் மற்றும் துவாரகையின் யாதவர்கள் அனைவரின் சார்பிலும் இந்தப் பரிசை கிருஷ்ணன் அறிவிக்கிறான்.” அங்கே அதுவரை ஏற்பட்டிருந்த இறுக்கமானதொரு சூழ்நிலையை பலராமனின் பேச்சும், அவனின் சிரிப்பும் ஏற்படுத்தியது. அங்கே மெல்ல மெல்ல உயிரோட்டம் ஏற்பட்டது. திருதராஷ்டிரன் பேச்சால் ஏற்பட்டு இருந்த இறுக்கம் தளர்ந்து அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

மீண்டும் சபை முழுவதும் எதிர்பார்ப்பில் ஆழ்ந்தது. கிருஷ்ணன் அறிவிக்கப் போகும் பரிசு என்னவாக இருக்கும் என்று அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு ஆவலுடன் காத்திருந்தனர். கிருஷ்ணன் அப்போது எழுந்து, “குரு வம்சத்துச் சக்கரவர்த்தியாரே! மாட்சிமை பொருந்திய என் தமையன் பலராமன் அனுமதியுடன், உங்கள் அனைவருக்கும் யாதவர்கள் சார்பில் ஒரு சிறு பரிசை அளிக்கிறேன்.” என்று கூறி நிறுத்தினான். அனைவரும் மூச்சுக்கூட விட மறந்து காத்திருந்தனர்.

Tuesday, August 25, 2015

யுதிஷ்டிரன் பெற்ற பேறு!

யுதிஷ்டிரனின் மனநிலையைப் புரிந்து கொண்டவராக வியாசர் அவனையே ஒரு பரிதாபமான பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனாலும் யுதிஷ்டிரனுக்கு அவருடைய கண்கள் தனக்கு அளித்த கட்டளை என்னவெனத் தெளிவாகப் புரிந்தது!”தர்மத்தின் பாதையை விட்டு வழுவாதே மகனே!” இது தான் அந்தக் கண்கள் சொன்ன செய்தி! அவன் மனமாகிய குகையில் இதைக் குறித்து ஏற்கெனவே அவர்கள் பேசிய பேச்சுக்கள் எல்லாம் எதிரொலித்து அடங்கின. தன் பெரியப்பனை நிமிர்ந்து பார்த்தான். தன் கைகளைக் கூப்பி அவனை நமஸ்கரித்தான். பின்னர் தலையையும் மரியாதை காட்டும் பாவனையில் குனிந்த வண்ணம் பேச ஆரம்பித்தான்.

“குரு வம்சத்திலேயே மாட்சிமை பொருந்திய மன்னரே! உங்கள் முடிவை நான் சிரமேற்கொண்டு ஏற்கிறேன். இந்த முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன்.” இதைக் கூறுவதற்குள் அவன் குரலில் அப்பிக் கொண்ட சோகமானது, அடுத்து அவன் கூறியவற்றைக் கேட்க விடாமல் செய்தது.” என் ஐந்து சகோதரர்கள் சார்பாக நான்…………” யுதிஷ்டிரன் மேற்கொண்டு என்ன சொன்னான்?

அனைவரும் தங்கள் மூச்சை அடக்கிக் கொண்டு காத்திருந்தனர். இந்த வாக்குறுதி, சத்தியம் ஆகியவற்றின் முடிவு தான் என்ன? இது எங்கே போய் முடியப் போகிறது? ராஜசபை மொத்தமும் காத்திருக்கையில் அந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு கிருஷ்ணனின் குரல் ஒலித்தது. என்ன சொல்லப் போகிறான் கிருஷ்ணன்? மாயங்களையும்,, அதிசயங்களையும் எளிதாக நிறைவேற்றும் கிருஷ்ணன் இப்போதும் ஏதேனும் மாயத்தை நிகழ்த்தப் போகிறானா? ஐந்து சகோதரர்களையும் இதை ஏற்கச் செய்வானா? அல்லது இதற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தச் சொல்லப் போகிறானா? அல்லது இப்போது யுதிஷ்டிரன் எடுத்திருக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பானோ? என்னதான் நடக்கப் போகிறது?”

“கங்கையின் மைந்தரே! மாட்சிமை பொருந்திய குரு வம்சத்து பிதாமகரே! என்னை இங்கே இந்த சபையில் பேச அனுமதி கொடுங்கள்!” பீஷ்மரின் பக்கம் திரும்பி அனுமதி வேண்டினான் கிருஷ்ணன். பீஷ்மரும் தன் தலை அசைவால் அனுமதியைக் கொடுத்தார். முற்றிலும் தெளிவாக அனைவருக்கும் காதில் விழும் வண்ணம் அதே சமயம் மெதுவாகக் கிருஷ்ணன் பேச ஆரம்பித்தான்.

“குருவம்சத்தில் சிறந்தவரே!” என திருதராஷ்டிரனை விளித்த கிருஷ்ணன், அவனைப் பார்த்து, “நீங்கள் மிகவும் நன்றாகவும், பாண்டித்தியத்துடனும், விவேகத்துடனும் பேசினீர்கள்.” ராஜசபை ஆச்சரியத்தில் திகைத்துப் போயிருக்க எவருக்கும் எதுவும் சொல்லத் தோன்றவில்லை. அனைவர் முகத்திலும் ஆச்சரியம் கப்பி இருக்க, அதிகம் ஆச்சரியம் அடைந்தது யுதிஷ்டிரனே என்று சொல்ல வேண்டியது இல்லை. அர்ஜுனனுக்கும், நகுலனுக்கும் கோபம் வந்தாலும் தங்களை அடக்கிக் கொண்டனர். ஹூம்! கடைசியில் வாசுதேவக் கிருஷ்ணன் இந்த அநியாயத்திற்குத் துணை போகிறான்! இந்தப் பாரபட்சமான போக்கை ஆதரிக்கிறான். சஹாதேவன் முகம் உணர்ச்சிகளற்ற கல்லைப் போல் காட்சி அளித்தது. அவன் தரையைப் பார்த்த வண்ணம் சிலையைப் போல் குனிந்து உட்கார்ந்திருந்தான்.

“விசித்திரவீரியனின் புத்திரரே! நீங்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் பேசினீர்கள். நீங்கள் இந்தக் குரு வம்சத்து மாபெரும் சாம்ராஜ்யத்தைச் சரியாகவும் உங்கள் குமாரர்கள் மற்றும் தம்பியின் குமாரர்கள் ஆன பாண்டவர்களுக்கும் இடையில் சமமாகவும் பிரித்திருக்கிறீர்கள். “கிருஷ்ணன் குரலின் சந்தோஷம் அனைவரையும் ஆச்சரியப் பட வைத்தது. “இனியாவது குரு வம்சத்தினரிடையே அமைதியும் ஒற்றுமையும் நிலவும் என நம்புவோம்.” என்று சொன்ன கிருஷ்ணன் சுற்றிலும் அனைவரையும் பார்த்தான். இந்த ராஜசபை இதை எதிர்பார்க்கவில்லை! அதுவும் கிருஷ்ணனிடமிருந்து நிச்சயமாக இதை எதிர்பார்க்கவே இல்லை. பாண்டவர்கள் ஐவருக்கும் அத்தை மகனும் ஒரு நண்பனுக்கு மேல் மேலானவனாகவும் இருக்கும் வாசுதேவக் கிருஷ்ணன் இப்படி அவர்கள் ஐவரும் நாடு கடத்தப்பட்டு காட்டுக்கு அனுப்பப்படுவதை ஆதரிக்கிறானே!

ஆனால் யுதிஷ்டிரன் அமைதி அடைந்தான். அவனுக்குள் நிம்மதி வந்தது. கிருஷ்ணனுக்கே இது சம்மதமா? தர்மத்தைக் காப்பதற்கும் தர்ம சாம்ராஜ்யம் நிலைநாட்டவுமே பிறப்பெடுத்திருக்கும் கிருஷ்ணனுக்கே இது சம்மதம் எனில்! யுதிஷ்டிரன் இதை ஒத்துக் கொண்டதின் மூலம் தவறு ஏதும் செய்யவில்லை! கிருஷ்ணன் மேலும் பேசினான்.

“மாட்சிமை பொருந்திய குரு வம்சத்து அரசே! உங்கள் முடிவு உங்கள் தர்ம நியாயங்களை அலசிப்பார்க்கும் போக்கையும் பெருந்தன்மையையும் காட்டுகிறது. இந்தக் குலத்தின் அருமையான வாரிசும் நீதிமானும், நேர்மையானவனுமான யுதிஷ்டிரன் தன் தம்பிமார்கள் நால்வருடனும் சேர்ந்து உம் மக்கள் நூற்றுவருடனும் இந்த தேசத்தைப் பகிர்ந்து கொள்ளச் சம்மதம் தெரிவித்து விட்டான். இப்போது இங்கு உள்ள தானியங்கள், தங்கம், கால்நடைச் செல்வங்கள், குதிரைகள், ரதங்கள், யானைகள், படை வீரர்கள் மற்றும் படைக்கலங்கள் ஆகியவற்றையும் இவ்வண்ணமே சரிசமமாகப் பிரிக்க வேண்டும். இல்லையா? மாட்சிமை பொருந்திய அரசே! என்ன சொல்கிறீர்கள்? நான் சொல்வது சரிதானே?” என்று கம்பீரமாகக் கேட்டான் கிருஷ்ணன். அவன் குரலில் ஒரு வசீகரத் தன்மை இருந்தது.

துரியோதனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஆஹா! இந்த முடிவின் மூலம் நாம் நம் செல்வத்தை வளத்தையும் பங்கிட்டாக வேண்டும் போலிருக்கிறதே! முடியாது! முடியாது! இதைச் சொல்ல நினைத்து வாயைத் திறந்தான் துரியோதனன். ஆனால் அவன் குரலே அவனை மோசம் செய்து விட்டது. அதற்குள்ளாகக் கிருஷ்ணன் மேலும் பேசினான்.” ஒரு வேளை மரியாதைக்குரிய பிதாமகர் பீஷ்மர் இவற்றை எல்லாம் யோசித்து முடிவு செய்திருப்பார்.” என்ற வண்ணம் பீஷ்மர் பக்கம் திரும்ப, அவரும் மிக மிக அவசரமாகவும், வேகமாகவும் “ஆம், ஆம், நிச்சயமாக!” என்ற வண்ணம் கிருஷ்ணன் சொல்வதை ஆமோதித்தார். இந்தச் சூழ்நிலைக்கு ஏற்பப் பேசியாக வேண்டும் என்னும் எண்ணம் அவருள் உதித்தது.

திருதராஷ்டிரனுக்கோ இதை எல்லாம் யோசித்துப் பார்க்கக் கூடிய அளவுக்கு அறிவுத் திறன் இல்லை. இப்போது இவற்றை எல்லாம் கேட்டதும் அவனுக்குத் தலை சுற்றியது. ஆனால் அவனால் செய்யக் கூடியது அப்போது ஒன்றே ஒன்றுதான். “ஆம் வாசுதேவா! ஆம், நீ சொல்வது சரியே!” என்பது மட்டுமே அவனால் சொல்ல முடிந்தது. வியாசர் முகம் புன்னகையில் விரிந்தது. கிருஷ்ணன் குறிப்பிட்டவற்றின் உட்கருத்தைப் புரிந்து கொண்ட அவர், வெளிப்படையாக, “மகனே திருதராஷ்டிரா, நன்றே சொன்னாய்!” என்று அவனைப் பாராட்டினார்.

திருதராஷ்டிரன் தோள்களின் மேல் தன் கைகளை வைத்துக் கொண்டு கிருஷ்ணன் மேலும் பேசினான். “விசித்திர வீரியனின் மகனே! குரு வம்சத்து அரசே! பரதனால் ஆளப்பட்ட இந்தப் பரந்த பாரத வர்ஷத்தின் பாரம்பரியமான நடவடிக்கைகளிலிருந்து நீங்கள் பிறழாமல் அவற்றைப் போற்றிப் பாதுகாப்பது மனதுக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. பரத வம்சத்துப் பாரம்பரியம் தழைத்து ஓங்கட்டும்!” என்றான். பின்னர் பீஷ்மரைப் பார்த்து, “மாட்சிமை பொருந்திய தாத்தா அவர்களே! இப்போது நாங்கள் யாதவர்களில் சில தலைவர்கள் இங்கே வந்திருக்கிறோம். நாங்கள் அனைவரும் பாண்டவர்கள் ஐவரோடு காண்டவப்ரஸ்தத்துக்குச் சென்று அவர்களுக்கு உதவிகள் செய்ய விரும்புகிறோம். அதற்கு உங்கள் அனுமதியை வேண்டுகிறோம்! கிடைக்குமா?” என்று கேட்டான்.

“ஆஹா! இதற்கு என் அனுமதி தேவையா? நீ நிச்சயமாக அவர்களுடன் சென்று உதவி செய்ய வேண்டும் வாசுதேவா! இது என் கோரிக்கை! “ என்று பீஷ்மர் கூறினார். அவருடைய கடுமை பொருந்திய முகத்தில் எப்போதேனும் தோன்றும் புன்னகை மலர்ந்தது. யுதிஷ்டிரனோ அங்கேயே அப்போதே கிருஷ்ணன் கால்களில் விழுந்துவிடுவான், போல் இருந்தான். வயது மட்டும் தடை செய்யவில்லை எனில் கிருஷ்ணனை நமஸ்கரித்திருப்பான். இப்போது மிகுந்த வணக்கத்துடன் கிருஷ்ணனைப் பார்த்தான் யுதிஷ்டிரன். கிருஷ்ணன் அவர்களுடைய ரக்ஷகன், புரவலன், அவர்களைப் பாதுகாப்பவன். இப்போது புதிய இடம் செல்கையில் கூடவே வந்து உதவவும் போகிறான். இதைவிடப்பெரும்பேறு வேறென்ன வேண்டும்?


Monday, August 24, 2015

யுதிஷ்டிரனின் கலக்கம்!

யுதிஷ்டிரன் முகம் வெளுத்தது. அவன் அதிர்ச்சியில் உறைந்து போனான். அவனுக்குத் தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது. கீழே எந்நேரமும் விழுந்துவிடுவானோ எனப் பயந்த அவன் அங்கிருந்த அரியணையின் இருபக்கங்களையும் தன் கைகளால் இறுகப் பற்றிக் கொண்டான். இதை அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை; ஆம் எதிர்பார்க்கவே இல்லை! அவனுக்கும் அவன் சகோதரர்களுக்கும், அவனுடைய புது மனைவிக்கும் மாபெரும் வரவேற்பை நல்கியபோது அவன் எவ்வளவு சந்தோஷப்பட்டான்! ஆனால் அந்த வரவேற்பின் பின்னே இத்தகையதொரு வஞ்சக எண்ணம் ஒளிந்திருந்ததா? அப்படி ஒரு வரவேற்பை அளித்த பெரியப்பாவால் இப்படியும் ஓர் அநியாயத்தைச் செய்ய முடியுமா? செய்து விட்டாரே! அவர்கள் ஐவரையும் காட்டுக்கு அன்றோ அனுப்புகிறார்! துஷ்ட மிருகங்கள் சூழ்ந்திருக்கும் காடு! நகரத்தின் நாகரிகத்தையே கண்டறியாத இடம்! வாரணாவதத்துக்கு அவர்களை நாடு கடத்தியதை விட இது மோசமானது ஆயிற்றே! பேசாமல் நாடு கடத்தி இருக்கலாம்.

அது மட்டுமா? யுதிஷ்டிரன் தன் பெரியப்பாவின் முடிவுக்குக் கட்டுப்படுவதாகச் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறான். இதே ராஜசபையில் அனைவர் முன்னும் சத்தியம் செய்திருக்கிறான். ஆனால் இப்போது என்ன நடந்திருக்கிறது! யுதிஷ்டிரன் தன் முட்டாள் தனமான முடிவினால் தம்பிகள் நால்வரையும் அன்றோ ஏமாற்றி வஞ்சித்து விட்டான்! அவர்கள் எதிர்காலத்தை அன்றோ பாழாக்கி விட்டான்! அவன் சகோதரர்கள் நால்வரும் அவனை மன்னிக்கவே மாட்டார்கள். ஏன்! அவனை அவனாலேயே மன்னிக்க முடியாது! அவ்வளவு பெரிய மாபெரும் குற்றத்தை அன்றோ அவன் செய்துவிட்டான்! அதோடு அவனுள் இன்னொரு பயமும் கிளர்ந்து எழுந்தது. இதோ, இப்போது பீமன் துள்ளி எழப்போகிறான். இந்த மாபெரும் சபையினரின் கண்கள் முன்னர் துரியோதனனைத் தாக்கப் போகிறான். இத்தனைக்கும் காரணம் ஆன தன்னையும் திருதராஷ்டிரனையும் தாக்கப் போகிறான். வார்த்தைகளால் சாடப் போகிறான். அப்படி அவன் செய்தால்!............. அது நிச்சயம் தவறாகாது. அவன் தம்பிமாரை அவன் எங்கனம் நிமிர்ந்து பார்க்கப் போகிறான்! அவனால் முடியவில்லை. யுதிஷ்டிரனின் தொண்டை அடைத்துக் கொண்டது.

வேறு ஒன்றும் செய்யத் தோன்றாத யுதிஷ்டிரன் தன் கண்களை மூடி மௌனமாகப் பிரார்த்தித்தான். ஆம். அவனுக்கு அப்போது இதைத் தவிர வேறு வழியில்லை. அவ்வளவிலும் அவனுக்குத் தான் பெற்ற அதிர்ச்சியை விட தர்மத்தின் குரல் தான் கேட்டது. அவன் காதுகளில் தர்மத்தின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. “நீ வாக்குறுதி கொடுத்திருக்கிறாய், யுதிஷ்டிரா! உன் வாக்கைக் காப்பாற்று!” என்னும் குரல் கேட்டது. ஆம், எப்பாடுபட்டேனும் அவன் தன் வாக்கைக் காப்பாற்றியே ஆகவேண்டும். அதிலிருந்து அவன் பிறழக் கூடாது. அப்போது அவனுக்குக் காசி தேசத்து அரசனாக வெகு காலம் முன்னர் இருந்த ராஜா ஹரிச்சந்திரனின் நினைவு வந்தது. உண்மைக்காகவும், கொடுத்த வாக்குறுதிக்காகவும் அவன் போராடியதெல்லாம் யுதிஷ்டிரன் நினைவில் வந்தன. வாக்கைக் காக்க வேண்டி அவன் அரியணை இழந்தான்! அது மட்டுமா! அவன் மனைவி, மகன் என அனைத்தையும் இழந்தான். அப்படியும் அவன் உறுதி தளரவே இல்லை. தன் உயிரே போனாலும் சரி, தான் சத்தியத்திலிருந்து தவறாமல் இருக்க வேண்டும் என்னும் கொள்கையைக் கடைசி வரை கடைப்பிடித்தான்.

மெல்லத் தன் பார்வையை சபையினரின் பக்கம் திருப்பினான். அவன் கண்களில் அவனுடைய ஆசிரியரும் குருவுமான துரோணர் பட்டார். அவர் முகத்தில் ஆச்சரியம் இருந்தாலும் கூடவே ஓர் அமைதியும் தெரிந்ததை உணர்ந்தான் யுதிஷ்டிரன். ஆம் ஏன் இருக்காது! அவர் தன்னுடைய ஒரே மகனை இனி பிரிய வேண்டாமே! அவன் ஹஸ்தினாபுரத்திலேயே இருப்பான். அவருடனேயே இருப்பான். ஆனால் அதே சமயம் தௌம்யரால் தன் காதுகளை நம்ப முடியவில்லை என்பதையும் யுதிஷ்டிரன் கண்டான். மற்ற அமைச்சர்களும் சங்கடத்தில் ஆழ்ந்திருந்தனர். ஆனால் ஞானவான் ஆன விதுரரோ முகத்தில் எவ்வித உணர்ச்சிகளையும் காட்டவில்லை. இளமுறுவலுடன் சாந்தமாக அமர்ந்திருந்தார். அது கொஞ்சம் ஆறுதலை அளித்தது யுதிஷ்டிரனுக்கு. ஏனெனில் துறவியைப் போன்ற பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்து வரும் விதுரர் யுதிஷ்டிரன் தன் தர்மத்தை நிலைநாட்ட என்ன செய்தாலும் ஆதரிப்பார். அதைப் பாராட்டுவார். மற்றவர்களைப் போல் குற்றம் சாட்ட மாட்டார். ஏற்றுக் கொள்வார்.

ஆனால் அடுத்த கணமே யுதிஷ்டிரனுக்குள் சந்தேகம்! “ஆஹா, நாம் ஏன் மற்றவர்களின் ஒப்புதலை எதிர்பார்க்கிறோம்? மற்றவர்கள் ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் நான் என்னுடைய தர்மத்திலிருந்து வழுவாமல் இருக்க வேண்டும் அன்றோ! அதை விடுத்து யார் ஒப்புவார்கள் என எப்படி எதிர்பார்க்கலாம்? இதன் மூலம் எனக்குக் கிடைக்கும் புகழையோ, கண்டனங்களையோ பொருட்படுத்தாமல் அல்லவோ இருக்க வேண்டும்!”

அவனுடைய நெருங்கிய நட்பை விரும்பும் மற்ற அரசர்கள் மற்றும் பலராமனுக்கும் இது பிடிக்க வில்லை என்பது அவர்கள் முகங்களிலிருந்து தெரிந்தது. ஒரு வேளை அவர்கள் இப்படி நினைக்கலாமோ?” தர்மத்தின் பாதையிலேயே செல்லும் இந்த யுதிஷ்டிரன், இப்போது என்ன செய்யப் போகிறான்? தான் கொடுத்த வாக்கைக் காப்பானா? அல்லது உறுதிமொழியை உடைத்தெறிந்து விடுவானா? அவனுடைய அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்? நாடு கடத்தலை விட மோசமான இந்தத் தண்டனையை அவன் ஏற்கப் போகிறானா? இல்லையா?” எதுவாக இருந்தாலும் அது அவர்களுக்குத் துன்பத்தையே அளிக்கும்.

மீண்டும் சபையினரைப் பார்த்தான் யுதிஷ்டிரன். அனைவரும் மனம் கலங்கிப் போயிருந்தனர். அவன் பெரியப்பாவின் பாரபட்சமான நடவடிக்கையால் அனைவரும் ஆடிப் போயிருந்தனர் என்பது உறுதியாகத் தெரிந்தது. திருதராஷ்டிரன் மகன்களுக்கும், ஐந்து சகோதரர்களுக்கும் இருந்து வந்த பகை இப்போது இதன் மூலம் மேலும் புதுப்பிக்கப்பட்டு விட்டது. அவர்கள் அனைவரின் முகத்திலிருந்தும் ஒரு விண்ணப்பம் தெரிவதாக யுதிஷ்டிரனுக்குத் தோன்றியது. அவர்கள் இப்படி நினைக்கிறார்களோ! “இளவரசே, துரியோதனனின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் எங்களை விட்டு விட்டு நீங்கள் சென்றுவிடாதீர்கள்!” என்கிறார்களோ! ஆம் அப்படித் தான் இருக்க வேண்டும். ஹூம், வயதான அவன் தாய் குந்தியும், இளமையுடன் காட்சி அளிக்கும் அவன் அழகிய மனைவி திரௌபதியும் இனி அவனுடன் அந்தக் காட்டிற்கு வந்து வாழ வேண்டி இருக்கும். இத்தனையும் யாரால்? அவனால்! அவன் கொடுத்த ஓர் உறுதி மொழியினால்! ஆனால் அவன் தன் சத்தியத்தை உடைத்தெறிந்து விட்டு இங்கேயே இருந்தான் எனில் அவன் தாயும், அவன் மனைவியும் அவனை முன்னைப் போல் நேசிப்பார்களா? சந்தேகமே!

பீமனைப் பார்த்தான். அவன் பாட்டுக்குச் சிரித்துக் கொண்டும் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டும் உட்கார்ந்திருந்தான். இந்தப் பாரம்பரியமான அரியணையை விட்டுக் கொடுத்ததின் மூலம் அவன் யுதிஷ்டிரன், தன் சகோதரனுக்கு நன்மையையா செய்திருக்கிறான்? அவன் நியாயமாக நடந்து கொண்டானா? இந்த மனிதன் மேல் எத்தனை எத்தனை சோதனைகளைச் சுமத்தி வருகிறேன் நான்! என்னை மன்னிக்க முடியுமா? பீமன் தான் என்னை மன்னிப்பானா? அல்லது அவன் இப்போது சிரித்துக் கொண்டு சாதாரணமாக அமர்ந்திருப்பதால் ஏற்கெனவே என்னை மன்னித்துவிட்டதாக அறிவிக்கிறானா?  ம்ஹூம்! எது நடந்தாலும் நடக்கட்டும். யுதிஷ்டிரன் அவன்ன் கொடுத்த வாக்குறுதியிலிருந்து ஒருக்காலும் பிறழ மாட்டான். எப்பாடு பட்டேனும் அதை நிறைவேற்றியே தீருவான்.

Saturday, August 22, 2015

இனி காண்டவப்ரஸ்தமே உங்கள் நாடு!

சற்று நேரம் பழைய நினைவுகளில் ஆழ்ந்த பீஷ்மர், தன்னைச் சுதாரித்துக் கொண்டு, உரத்த குரலில் பேச ஆரம்பித்தார். ஆனால் அவர் குரலில் உணர்ச்சிகள் மிகுந்திருந்தன. இதைக் கண்டோருக்கும், பீஷ்மரின் சொற்பொழிவுகளை ஏற்கெனவே கேட்டிருப்போருக்கும் ஆச்சரியம் அளித்தது. எதற்கும் கலங்காத இரும்புப் பாறை என அனைவரும் நினைத்திருந்த பீஷ்மரா இவ்வளவு உணர்ச்சிகரமாகப் பேசுகிறார்! அனைவரும் கூர்ந்து கவனித்தனர்!

“என் அருமைக் குழந்தாய்! யுதிஷ்டிரா! இதே சபையில் உன் தந்தையையும் பல வருடங்கள் முன்னர் இந்த ஹஸ்தினாபுரத்தின் சக்கரவர்த்தியானதற்கு என் ஆசிகளைத் தெரிவித்தேன். இப்போது அந்த மஹாதேவன் அருளாலும், கடவுளரின் ஆசிகளாலும் இதே ராஜ சபையில் நீ அரியணை ஏறுவதைப் பார்க்கும் மகிழ்ச்சியும், உன்னை ஆசீர்வதிக்கும் பெரும்பேறும் எனக்குக் கிடைத்திருக்கிறது. இது என்னை உவகை கொள்ள வைக்கிறது. மாபெரும் சக்கரவர்த்தியான பரதன் ஆண்ட இந்த நீண்ட பாரம்பரியம் கொண்ட ராஜ வம்சத்தில் உன்னைப் போன்ற தர்ம, நியாயத்துக்குக் கட்டுப்பட்ட இளவரசன் அரியணை ஏறுவது சாலப் பொருந்தும்.”

“என் குழந்தாய்! உன் முன்னோர்கள் எப்படி தர்மத்திற்கும் நியாயத்திற்கும் கட்டுப்பட்டு அரச தர்மங்களையும் அரசனுக்குரிய கடமைகளையும் மறவாமல் ஆட்சி புரிந்து இந்த குரு வம்சத்திற்குப் பெருமை சேர்த்தனரோ அவ்வாறே நீயும் இந்த அரியணையில் நீண்ட காலம் அமர்ந்திருந்து நல்லாட்சி தரப் பிரார்த்திக்கிறேன். உன் ஆட்சியில் தர்மம் ஓங்கிச் செழித்து வளரட்டும்!”

“உன் மூதாதையரைப் போலவே நீயும் ராஜசூய யாகம், அஸ்வமேத யாகம் போன்ற மாபெரும் யாகங்களை மேற்கொண்டு நடத்திப்பெருமை பெறுவாயாக!”

“வீசும் தென்றல் காற்றில் சுகந்த மணமுள்ள பூக்களின் நறுமணம் நானாதிசைகளிலும் அதுவாகச் சென்று பரவுவது போல உன் பெயரும், புகழும், பெருமையும் இந்தப் பரந்த பாரத வர்ஷத்தின் நானாதிசைகளிலும் பரவுவதாக!”

“இறைவன் கருணையினாலும், அவன் அருளினாலும் நீ நல்ல செயல்களையே செய்ய வேண்டும் என்றும், நல்ல யோசனைகளையே யோசிக்க வேண்டும் என வேண்டிப் பிரார்த்திக்கிறேன். இந்தக் குரு வம்சத்தின் புகழை நீ நிலைநாட்ட வேண்டுமென்றும் இந்த சாம்ராஜ்யத்தின் ஒவ்வொரு வீட்டிலும் தர்மம் நிலவ வேண்டும் என்றும் குரு வம்சத்தினருக்கும், இந்த நாட்டு மக்களுக்கும் உன் செயல்கள் அனைத்தும் பெரும் சிறப்பைக் கொண்டு வர வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்.”


எங்கும் வெற்றி முழக்கமும், “சாது, சாது!” என்னும் கோஷமும் கிளம்பின. அப்போது திருதராஷ்டிரனுக்குப் பின்னர் நின்றிருந்த அவன் அமைச்சரான சஞ்சயன், திருதராஷ்டிரன் காதுகளில் ஏதோ கிசுகிசுக்க, உடனே திருதராஷ்டிரன் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசத் தயார் செய்து கொண்டான். அவையில் இருந்த சப்தம் குறைந்து எங்கும் நிசப்தம் நிலவியது. திருதராஷ்டிரன் மிகவும் முயற்சி செய்து பேச ஆரம்பித்தான். எனினும் அவனுக்கு வார்த்தைகளே வரவில்லை. தடுமாறினான்.

யுதிஷ்டிரனைப் பார்த்து, “குரு வம்சத்து மஹாராஜா! என்னுடைய மகன்களை விட அதிகம் எனக்குப் பிரியமானவனே! என்னுடைய ஆசிகளையும் ஏற்றுக் கொள்வாய்! பரிசுத்தமான நம்முடைய நினைவுகளில் என்றென்றும் தங்கி இருக்கும் நம் முன்னோர்களைப் போல் நீயும் சகல விதத்திலும் மாட்சிமை பொருந்தி பல்லாண்டு ஆட்சி புரிவாயாக!”

திருதராஷ்டிரன் மீண்டும் தடுமாறினான். அவனுக்குப் பேச்சு வரவில்லை. மீண்டும் மீண்டும் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச முயற்சி செய்தான். அவன் உதடுகள் நடுங்கின. மிகவும் உணர்ச்சிவசப் பட்டிருக்கிறான் என்பது பார்ப்போருக்கு எளிதில் புரிந்தது.

“நீ பல வசந்தங்களைக்கண்டு ஆட்சி புரிவாய்! என்னுடைய அருமைச் சகோதரனும், உன் தந்தையுமான  பாண்டு பெற்றிருந்த புகழைப் போல் நீயும் புகழ் பெறுவாயாக!” மீண்டும் நிறுத்திக் கொண்டு தன் வலுவை எல்லாம் சேர்த்துக் கொண்டான் திருதராஷ்டிரன். “……… உன்னால் இந்த நாட்டில் அமைதி நிலவ வேண்டும்……………… சாந்தி நிலவ வேண்டும்…………… மிக மிக மெதுவாக இதைச் சொன்னான் திருதராஷ்டிரன். அவையோருக்கு இது சரியாகக் காதில் விழாததால் உன்னிப்பாய்க் கேட்டனர். “உன்னுடைய இந்தப் பட்டாபிஷேஹ நிகழ்வால் குரு வம்சத்தில் என்றென்றும் அமைதியும், சாந்தியும் நிலவட்டும்.” என்ற திருதராஷ்டிரன் விண்ணை நோக்கித் தன் குருட்டுக் கண்களைத் திருப்பினான். மேலே உள்ள கடவுளரின் ஆசிகளை வேண்டுவது போல் தன் கைகளை விரித்தான். “மேலும்…………..மேலும்………… என் மகன்கள் நூற்றுவர்……………….. அதாவது உன் பெரியப்பன் வழிச் சகோதரர்கள்…………………………….திருதராஷ்டிரனின் தொண்டை அடைத்துக் கொண்டது.

தர்மசங்கடமான அமைதி அங்கே நிலவியது. துரியோதனனையும், அவன் சகோதரர்களையும் இந்த நேரம் சொல்லி இருக்கக் கூடாதோ என்னும் வண்ணம் அனைவரும் சங்கடத்தில் ஆழ்ந்தனர். ஆனால் திருதராஷ்டிரன் மீண்டும் பேச ஆரம்பித்தான். “மாட்சிமை பொருந்திய யுதிஷ்டிரா! நீ எனக்கு ஒரு மாபெரும் பொறுப்பைச் சுமத்தி விட்டாய்! துரியோதனனுக்கு எந்தப் பகுதியை அளிப்பது! உனக்கு எந்தப் பகுதியை அளிப்பது! என்பதை எல்லாம் நீ என்னையே முடிவு செய்யச் சொல்லி விட்டாய்! இதன் மூலம் என் பொறுப்பும், சுமையும் அதிகரித்து விட்டது. உனக்கு எதைக் கொடுப்பேன்? துரியோதனனுக்கு எதைக் கொடுப்பேன்?” திருதராஷ்டிரன் திகைத்தாற்போல் நிறுத்தினான்.  ராஜசபையே நெருப்பின் மீது நிற்பது போல் தத்தளித்தது.

ஆனால் திருதராஷ்டிரன் மீண்டும் தன் சக்தியை எல்லாம் சேர்த்துக் கொண்டு பேசத் தயார் செய்து கொண்டான். அவன் என்ன சொல்ல நினைத்தானோ அதைச் சொல்லியே தீருவான் என அனைவரும் புரிந்து கொண்டனர். “ நம்முடைய சாம்ராஜ்யம் யமுனைக்கரை வரை பரவி விரிந்துள்ளது. காண்டப்ரஸ்தம் யமுனையின் கரையில் உள்ளது, அது தான் ஒரு காலத்தில் நம்முடைய தலைநகரமாக இருந்தது. அங்கே தான் நம் முன்னோர்களான பூருரவஸ், நகுஷன், யயாதி ஆகியோர் ஆட்சி புரிந்தனர். “ இப்போது திருதராஷ்டிரன் குரல் மீண்டும் மெலிந்து நைந்தது. “அது நம்முடைய பூர்வீக முன்னோர்கள் ஆட்சி புரிந்த நகரம். அங்கே சென்று நீங்கள் உங்கள் ஆட்சியைத் தொடரலாம்!”

மெதுவாகச் சொல்லி முடித்தான் திருதராஷ்டிரன். ராஜசபையில் சிறிது நேரம் வரை நிசப்தமே மேலோங்கியது. அனைவரும் திகைத்துப் போய்ப் பேச்சே வராமல் அமர்ந்திருந்தனர். காண்டவப்ரஸ்தமா? அந்தக் காட்டிலா? கடவுளே! காட்டை அழித்தல்லவோ நகரை நிர்மாணிக்க வேண்டும்! நாகரிக வாழ்க்கை வாழும் ஆரியவர்த்தத்தின் எல்லைக்கப்பால் அல்லவோ உள்ளது! அங்கே தானே ராக்ஷசர்களால் பாதிக்கப்பட்டவர்களும், நர மாமிசத்தை இரையாகத் தேடும் கொடிய காட்டு மிருகங்களும் வசிக்கின்றன. மனித நாகரிகமே அங்கே இல்லையே! ஆஹா! இதற்குப் பாண்டவர்களை நாடு கடத்தி இருக்கலாமே! இது அதைவிடக் கொடிய தண்டனையாகவன்றோ இருக்கிறது! ம்ம்ம்ம்…… அப்போது ஹஸ்தினாபுரத்தை துரியோதனனா ஆளப் போகிறான்! இது என்ன கொடுமை!

துரியோதனன் துஷ்சாசனனைப் பார்த்தான். அவன் முகத்திலும் வெற்றிப் புன் சிரிப்பு. இருவரும் தாங்கள் அடைந்த வெற்றியைப் புன்சிரிப்புடன் பரிமாறிக் கொண்டனர். மொத்த சபையும் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்பதற்குக் காத்திருந்தது. இந்தப் பட்டாபிஷேஹம் கடைசியில் சகோதரச் சண்டையில் முடிந்து விடுமோ? அதோ! அங்கே வேதவியாசரும் வியப்பினால் அகன்று விரிந்த கண்களோடு உட்கார்ந்திருக்கிறார். இந்தத் திடீர் மாற்றத்திற்குக் குறிப்பிட்ட காரணம் என்னவென்று தனக்குள் யோசிக்கிறார். ஒரு கணம், ஒரே கணம் பீஷ்மர் சொல்லவொண்ணா ரௌத்திரம் அடைந்தார். அவர் கண்களின் மின்னல் வெட்டு அதை நிரூபித்தது. இந்தக் குருட்டு அரசன் இவ்வளவு வருடங்களாக அவர் பாடுபட்டு வந்ததை எல்லாம் ஒன்றுமே இல்லை என்று ஆக்கி விட்டானே! என்ன கொடுமை இது!

Thursday, August 20, 2015

யுதிஷ்டிரனுக்குப் பட்டாபிஷேஹம்!

சற்று நேரத்தில் யுதிஷ்டிரன் அந்த ராஜசபைக்குள் நுழைந்தான். அவன் ஒரு பக்கம் வேத வியாசரும் இன்னொரு பக்கம் பீஷ்மரும் கூடவே வந்தனர். அவர்களுக்குப் பின்னர் தௌம்யரும், சோமதத்தரும் பின் தொடர்ந்தனர்.  யுதிஷ்டிரன் யுவராஜாவுக்கான கிரீடத்தை அணியவில்லை. தலையில் ஏதும் அணியாமலேயே வந்தான். சிவப்பு நிறப் பீதாம்பரத்தை உடுத்தி இருந்தான். தங்கத்தில் கற்கள் பதிக்கப்பட்ட பல்வகையான ஆபரணங்களை அணிந்திருந்தான். தலை நிமிர்ந்து அனைவரையும் பார்த்து மரியாதையும், அன்பும் ததும்பச் சிரித்தவண்ணம் இயல்பாகவே வந்த ராஜநடையுடன் சென்ற அவனைப் பார்க்கையிலேயே தர்மதேவதையே மண்ணில் இறங்கி நடமாடுவது போல் இருந்தது.

அவன் உள்ளே நுழையும்போதே ஒலிக்க ஆரம்பித்த எக்காளங்கள் இன்னமும் ஒலித்துக் கொண்டிருந்தன. அரசன் வரவை அறிவிக்கும் வண்ணமாகச் சங்கங்கள் முழங்கின. அங்கு குழுமி இருந்த ஆயிரக்கணக்கான மல்லர்களும் சங்குகளை முழங்கித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று, “குரு வம்சத்தினருக்கு மங்களம்! குருவம்சத்தினர் நீடூழி வாழ்க!” என்றெல்லாம் முழக்கமிட்டனர்.  சபாமண்டபத்தின் மைய மேடையில் சிங்காதனத்திற்கு அருகே அவர்கள் வந்ததும், தௌம்யர் சந்தனத்தை யுதிஷ்டிரன் தலையிலும் கன்னங்களிலும் பூசி அக்ஷதைகளைத் தூவி அவனை ஆசீர்வதித்தார். அந்தப் பெரிய மேடையின் ஒரு பக்கம் விதுரன் தன் கைகளில்  கிரீடத்தையும் ஷாந்தனு மஹாராஜா பயன்படுத்தி வந்த வில்லையும், அம்புகளையும் வைத்துக் கொண்டு காத்திருந்தார். யுதிஷ்டிரன் தன் தலைமயிரைச் சேர்த்துக் கட்டி இருந்த முடிச்சை அவிழ்த்து விட்டான். பீஷ்மர் விதுரர் கைகளில் இருந்த கிரீடத்தை வாங்கி யுதிஷ்டிரன் தலையில் வைத்தார். விதுரரிடமிருந்து வில்லையும், அம்புகளையும் வாங்கி யுதிஷ்டிரன் கைகளில் கொடுத்தார். இதன் மூலம் குரு வம்சத்தினரை தனக்களிக்கப்பட்டஅதிகாரங்களுக்கு உட்பட்டு யுதிஷ்டிரனே தலைமை வகிப்பான் என்பதை உறுதி செய்தார். யுதிஷ்டிரனும் அந்த வில்லுக்கும், அம்புக்கும் மரியாதை செய்யும் விதமாக அவற்றை வாங்கித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டு அரியணையில் வைத்தான்.

யுதிஷ்டிரன் தலை குனிந்து அரியணைக்கு எதிரே கைகளைக் கூப்பிய வண்ணம் நிற்க வேத வியாசரும் மற்ற வேத பிராமணர்களுமாக நன்மைகளை வேண்டியும், ஆசீர்வாதங்களை அளிக்கும் விதமாகவும் மந்திர கோஷங்களைச் செய்ய ஆரம்பித்தனர். பாண்டுவின் மறைவுக்குப் பின்னர் சுருட்டி வைக்கப்பட்டிருந்த வெண்கொற்றக் குடையானது இப்போது சோமேஸ்வரால் பிரிக்கப்பட்டு அவன் தன் வயதான தந்தையுடன் சேர்ந்து அரியணைக்குப் பின்னால் குடையைப் பிரித்துப் பிடித்தபடி நின்று கொண்டான். அரியணையில் அமரும் முன்னர் முதலில் வியாசரையும் பின்னர் தாத்தா பீஷ்மரையும் நமஸ்கரித்தான் யுதிஷ்டிரன். பின்னர் முறையே திருதராஷ்டிரன், பலராமன், துரோணர், கிருபர், தன் மதகுருக்களான தௌம்யர், சோமதத்தர் ஆகியோரையும் தன் தாய் குந்தியையும் நமஸ்கரித்தான். பின்னர் கிருஷ்ணன் பக்கம் திரும்பிய யுதிஷ்டிரனைத் தன் இருகரங்களையும் நீட்டி வரவேற்றான் கிருஷ்ணன். அவனை அப்படியே அணைத்துக் கொண்டான் யுதிஷ்டிரன். பின்னரே அரியணையில் அமர்ந்தான். ஒவ்வொரு ஆசனத்திற்கும் பின்னர் நின்று கொண்டிருந்த சேடிப் பெண்கள் அதுவரை பதுமைகள் போல் அசையாமல் நின்று கொண்டிருந்தனர். இப்போது யுதிஷ்டிரன் அமர்ந்ததும் உயிர் பெற்றவர்கள் போல் தங்கள் கரங்களில் இருந்த சாமரங்களை வீச ஆரம்பித்தனர்.

சபையில் கொஞ்சம் கசமுசவென்ற சப்தம் எழுந்திருந்தது. பீஷ்மர் தன் கைகளை உயர்த்திக் காட்டி அமைதியை நிலைநாட்ட முயன்றார். பீஷ்மர் மிகவும் உணர்ச்சி வயப்பட்டிருப்பது அனைவருக்கும் பார்க்கும்போதே புரிந்தது. எத்தனை வருடங்கள்! எத்தனை வருடங்கள்! இந்தக் குரு வம்சத்தினரின் இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை தனி ஒருவராக எத்தனை வருடங்களாக பீஷ்மர் கட்டிக் காத்து வருகிறார்! எதற்காக! எல்லாம் இத்தகையதொரு அருமையான தருணத்துக்காகவே! ஆம்! இப்படி ஓர் சர்வ வல்லமையும் பெற்ற இளைஞன் இந்த அரியணையில் அமர வேண்டும்; ஆட்சி புரிய வேண்டும். இங்கே தர்மத்தின் ஆட்சி நிலைபெற்று ஓங்க வேண்டும் என்பதே அவர் விருப்பமாக இருந்தது. கடைசியில் அது நிறைவேறும் தருணம் நெருங்கி விட்டது. இத்தனை வருடங்களாகத் தனி ஒருவனாக அவர் தூக்கிச் சுமந்த பாரத்தை எல்லாம் இறக்கி வைக்கும் நேரம் நெருங்கி விட்டது. தன் வயதான தோள்களினால் சுமக்க முடியாமல் சுமந்து வரும் இந்த மாபெரும் சாம்ராஜ்ய பாரத்தை யுதிஷ்டிரனின் இளந்தோள்களில் இனி சுமத்தலாம். ஆஹா! எத்தகைய அரிய தருணம் வாய்த்துள்ளது! ஆனாலும்!!!!! பீஷ்மரின் மனம் பல்லாண்டுகள் பின்னோக்கிச் சென்றது. பாண்டுவுக்கு ராஜ்ய பட்டாபிஷேஹம் செய்து வைத்த அந்த நாளை அவர் நினைவு கூர்ந்தார். இதே சபாமண்டபத்தில் அதுவும் நடந்தது!
 

Monday, August 17, 2015

பட்டாபிஷேஹ ஏற்பாடுகளில் ஹஸ்தினாபுரம்!

பட்டாபிஷேஹ விழாவை முன்னிட்டு ஹஸ்தினாபுரத்தில் பல நிகழ்ச்சிகள் நடந்தன. யுதிஷ்டிரன் பட்டம் ஏற்கப் போகும் நாளுக்கு முன்னால் வந்த ஒன்பது நாட்களுக்கும் தொடர்ச்சியாக பட்டாபிஷேஹ சம்பந்தமாக நடைபெறும் சம்பிரதாயமான சடங்குகள் நடைபெற்றன. அவை அனைத்தும் பட்டாபிஷேஹம் நடைபெறும் மணிமண்டப அறைக்கு எதிரே இதற்கென நிர்மாணிக்கப்பட்டதொரு பெரிய மண்டபத்தில் நடைபெற்றன. வேத வியாசர் தலைமை தாங்கி அனைத்தையும் ரிஷிகள், முனிவர்கள், வேத பிராமணர்களின் உதவியோடு நடத்தி வைத்தார். மிக விமரிசையாகவும் விரிவாகவும் சாஸ்திர ரீதியான சடங்குகள் நடைபெற்றன. அக்னி தேவனை வழிபட்டுப் பற்பல ஆஹுதிகளும் வழங்கப்பட்டன. தெய்வீகத் தாவரம் ஆன சோமனை வழிபட்டனர். சோம ரசம் பிழியப்பட்டு அங்கிருந்த அதிகாரபூர்வமான மதகுருக்களாலும் மற்றும் வேதபிராமணர்களாலும், அருந்தப்பட்டு யுதிஷ்டிரனுக்கும் அளிக்கப்பட்டது.

மக்கள் கூட்டம் பெருமளவில் கூடி அனைத்து நிகழ்வுகளும் அவர்களால் பங்கெடுக்கப்பட்டது.  நற்குணங்களும், இனிமையான பேச்சுக்களும் நிறைந்த யுதிஷ்டிரன், தர்மத்திலிருந்து சிறிதும் வழுவாத யுதிஷ்டிரன் தங்கள் மன்னன் ஆகப் போவதை உணர்ந்து ஹஸ்தினாபுரத்து மக்கள் ஆனந்தத்தில் ஆழ்ந்திருந்தனர். அக்கம்பக்கம் உள்ள கிராமங்களிலிருந்தும், நகரங்களிலிருந்தும் மக்கள் கூடினர். ஆங்காங்கே இசைக்கச்சேரிகள் நடைபெற்றன. மேள வாத்தியங்கள் முழங்கின. எக்காளங்கள், சங்குகள் முழங்கின. ஆலாட்சி மணிகள் ஒலித்த வண்ணம் இருந்தன. வந்திருந்த அனைவருக்கும் சிறப்பான உணவு அளிக்கப்பட்டது. உணவு அருந்த மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடிய வண்ணம் இருந்தனர். ஏழை, பணக்காரர், வலியோர், எளியோர் என்ற வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் சரிசமமாக உணவு அளிக்கப்பட்டது. வேத மந்திரங்களின் கோஷம் சுற்று வட்டாரத்தையே நிறைத்தது. அனைவர் மனதிலும் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது.

ஹோம குண்டங்களிலிருந்து எழும்பிய புகை விண்ணைத் தொட்டது. விண்ணிலிருக்கும் கடவுளரிடம், பூமியில் தர்ம சாம்ராஜ்யம் எழும்பப் போகிறது. யுதிஷ்டிரன் தான் தர்மராஜாவாக ஆளப் போகிறான் என்னும் செய்தியை அந்தப் புகைமண்டலம் சொல்வது போல் இருந்தது. ஒவ்வொரு சடங்குகளாக நடைபெற்று கடைசியில் ஒன்பதாம் நாள் அவை முடிவுக்கு வந்தன. எல்லாம் முடிவடைந்ததும் யுதிஷ்டிரன் வேதவியாசர், பீஷ்ம பிதாமகர், குருவும் ஆசாரியர்களும் ஆன தௌம்யர் மற்றும் சோமதத்தர் புடைசூழ, தங்கள் குல தெய்வமும் தங்கள் முன்னோர்களில் ஒருவர் ஆன பிரதீப அரசனின் பெயரால் வழங்கப்படுபவரும் ஆன பிரதீபேசுவரரைச் சென்று குல வழக்கப்படி வழிபட்டான். ராஜ சபைக்கு வரக்கூடிய உரிமை படைத்தவர்கள் அனைவரும் சபையில் கூடி தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடங்களில் அமர்ந்து கொண்டனர்.

சபாமண்டபத்தின் நடுவில் இருந்த மேடையில் போடப்பட்டிருந்த சிங்காதனங்கள் இப்போது மாற்றி அமைக்கப்பட்டிருந்தன. மான் தோலால் மூடப் பட்டிருந்த வேத வியாசர் அமரும் ஆசனப் பலகை முன்னர் சிங்காதனங்களில் இரு வரிசைக்கும் நடுவில் அமைக்கப்பட்டிருந்தது. இப்போது வலப்பக்கமாகப் போடப்பட்டிருந்தது. நடுவில் உள்ள இடத்தில் இப்போது ஒரு அழகான அலங்கரிக்கப்பட்டிருந்த ரத்தினங்கள் பொதிந்த கிரீடம் வைக்கப்பட்டிருந்தது. புதிய அரசனைக் குறிப்பிடும் விதமாக கிரீடத்தின் நடுவில் ஒரு சிங்க முகம் வாய் திறந்து கர்ஜிக்கும் பாவனையில் செதுக்கப்பட்டு அதில் சிவப்பு நிறக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. கண்களுக்கு நீல நிறக் கற்கள், சுற்றிலும் சிவப்பு. கருமணிக்கண்களால் செக்கச் சிவந்த முகத்தோடு பார்த்து உறுமும் பாவனையில் சிங்கம் வடிக்கப்பட்டிருந்தது.

அரசனின் அரியணைக்கு வலப்பக்கமாக பீஷ்மபிதாமகர் அமரும் ஆசனம் போடப்பட்டிருந்தது. அரசனுக்குச் சரிசமமாக அவர் ஆசனமும் காணப்பட்டது. பீஷ்மரை அடுத்து பலராமன், விராடன், சுநீதன் என அனைவரும் அவரவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆசனங்களில் வந்து அமர்ந்தனர். அரியணையின் இடப்பக்கம் போடப்பட்டிருந்த ஆசனத்தில் திருதராஷ்டிரனை அழைத்து வந்து அமர வைத்தனர். திருதராஷ்டிரனுக்கு அடுத்துக் கிருஷ்ணனும், மணிமானும் அமர்ந்தனர். வலப்பக்கம் போடப்பட்டிருந்த வெள்ளியால் ஆன சிங்காதனத்தில் துரியோதனன் அமர்ந்திருந்தான். அவன் தன்னை யுவராஜாவாக அறிவிக்கப் போகும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.  இந்த நிகழ்ச்சி எப்படி நடந்து முடியப் போகிறது என்னும் எதிர்பார்ப்பிலும் அவன் காத்திருந்தான். ஏதோ நடக்கப் போகிறது என எதிர்பார்த்தான். யுதிஷ்டிரன் அரியணை ஏறினால்? கிருஷ்ணன் பானுமதிக்குச் செய்து கொடுத்திருக்கும் சத்தியத்தை எப்படிக் காப்பாற்றுவான்? என்ன செய்யப் போகிறான் கிருஷ்ணன்? துரியோதனனுக்கு யோசித்து யோசித்து மூளை குழம்பியது.  ஹூம், பானுமதி மட்டும் உயிரோடு இருந்தால்? இந்தக் கிருஷ்ணன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டாவது அவள் உயிரோடு இருந்திருக்கலாம். இந்த மாட்டிடையன் என்ன செய்யப் போகிறனோ? ஒன்றுமே புரியவில்லை!

இடப்பக்கம் கடைசியில் போடப்பட்டிருந்த வெள்ளிச் சிங்காதனம் பீமனால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. தன் கண்களில் தெரிந்த இனம் புரியாததொரு ஒளியோடு காணப்பட்ட பீமன் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு தன் நீண்ட மீசையை முறுக்கிக் கொண்டும் தடவிக் கொடுத்துக் கொண்டும் அமர்ந்திருந்தான். அவன் மனம் முழுதும் நிறைவாக இருந்தது. இங்குள்ள அனைவரும் அவன் கைப்பொம்மைகள். அவன் ஆட்டுவிக்கும்படி ஆடப் போகிறவர்கள். அவன் தான் தன் கைகளில் வைத்திருக்கும் கயிறுகளால் இந்தப் பொம்மைகளை பொம்மலாட்டம் ஆட வைக்கப் போகிறான். கயிறு அவன் கையில். இதழ்களில் புன்னகையுடனும், முகத்தில் தெரிந்த மன அமைதியுடனும் அங்கு அமர்ந்திருந்த வாசுதேவக் கிருஷ்ணனை அடிக்கொரு முறை பார்த்துக் கொண்டான் பீமன்.

 

Saturday, August 15, 2015

பீமன் ஹஸ்தினாபுரம் திரும்புகிறான்!

“ஹா, கிருஷ்ணா! அவருக்கு என்ன? சந்தோஷமே அடைவார். அதோடு எங்களைக் காட்டுக்கு அனுப்புவதிலும் அவருக்குப் பெரு விருப்பம் இருக்கும். சந்தோஷமே அடைவார்!” என்றான் பீமன்.  “அப்போது, நாம் அவர்களின் மாபெரும் படையில் இருக்கும் குதிரைகள், ரதங்கள், மற்றும் கால்நடைச் செல்வங்கள், கஜானாவின் தங்கங்கள், வைரங்கள்,நவரத்தினங்கள் என அனைத்திலும் சரி பாதி பிரித்துக் கொடுக்கச் சொன்னால்?  அதாவது நாம் காட்டிற்குச் சென்று விட்டோமானால் இவ்வளவையும் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கலாம்!” என்றான் கிருஷ்ணன். இதைக் கேட்ட பீமனுக்குள் ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன. அவன் கிருஷ்ணனிடம் “இதெல்லாம் நடக்காது, கிருஷ்ணா! என் பெரியப்பாவைப் பற்றி நீ அறிய மாட்டாய்! அவர் இதற்கெல்லாம் ஒப்புக் கொள்ள மாட்டார்!” என்றான்.

“இல்லை, பீமா! நிச்சயமாய் அப்படி எல்லாம் நடந்து கொள்ள மாட்டார். தன் மக்களுக்கு ஹஸ்தினாபுரம் கிடைக்கப் போகிறது என்றால் அதற்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார்.” என்று கிருஷ்ணன் முழு நம்பிக்கையுடன் பேசினான். மேலும் அவன் கூறினான். “பின்னர் நாமும் அவரிடம் கேட்கலாம். நம்முடன் வரச் சம்மதிக்கும் படை வீரர்கள், ரத சாரதிகள், சேடிப் பெண்கள், சேவகர்கள், காலாட்படையினர், பெருந்தனக்காரர்கள், பிரபுக்கள், மல்லர்கள் மற்றும் வில்லாளிகள் ஆகியோரில் யார் நம்முடன் வரச் சம்மதிக்கின்றனரோ அவர்களை நம்முடன் அனுப்பி வைக்குமாறும் நாம் கேட்டுக் கொள்வோம். அது மட்டும் போதாது. வணிகர்களும் தங்கள் செல்வங்களோடு நம்முடன் வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வோம். வணிகர்கள் இல்லாமல் வியாபாரங்கள் நடைபெறாது.”

“ஹா, உனக்கு என் பெரியப்பாவைப் பற்றி இன்னும் புரியவில்லை. அவர் இதற்கெல்லாம் ஒத்துக்கொள்ளவே மாட்டார்.”

“முயன்று தான் பார்ப்போமே!”


“அதில் நாம் தோல்வி அடைந்தோமானால்?”

“அப்படி இல்லாமல் அவர் நாம் சொல்வதற்கெல்லாம் ஒத்துக்கொண்டாரெனில்? காண்டவப் பிரஸ்தத்துக்கு நம்மோடு நாம் விரும்பும் மக்கள் அனைவரையும் அனுப்பி வைக்கச் சம்மதித்தாரெனில்?”

“அப்படி மட்டும் நடந்தால்!! கிருஷ்ணா! உன்னுடைய யாதவர்களின் துணையுடனும், மணிமான் மற்றும் நாகர்களின் துணையோடும் நாம் அனைவருமாகச் சேர்ந்து காண்டவப் பிரஸ்தத்தை ஒரு அழகான நகரமாக மாற்றிவிடலாம். ஓரிரு வருடங்களில் இதைச் செய்து முடிக்கலாம்.”

“அது தான் நான் சொல்வதும்! அதன் பின்னர் ஓரிரு வருடங்களில் இவை எல்லாம் முடிந்த பின்னர் நீயும் காசி தேசத்து இளவரசியின் சுயம்வரத்தில் பங்கு பெறச் செல்ல முடியும்.”
பீமனுக்கு இவை எல்லாம் நடக்குமா என்னும் பிரமிப்புத் தோன்றியது. அது மாறாமலேயே அவன், “கிருஷ்ணா! நாம் நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோமா? இந்த மாபெரும் முயற்சியில் நாம் தோல்வி அடைந்தோமெனில்? என்ன ஆவது?”

“இந்த உலகமே என்னைப் பார்த்துத் தான் சிரிக்கும். நாம் தோல்வி அடைந்தால் அது என் தனிப்பட்ட தோல்வி. இதோ பார் சகோதரா! பீமா! நன்றாகக் கேள். நாம் செய்யாத மடத்தனங்களே இல்லை. நிறைய முட்டாள்தனமான வேலைகளைச் செய்திருக்கிறோம். அவற்றோடு இதுவும் ஒன்றாக இருந்துவிட்டுப் போகட்டுமே! இந்த ஒரு முட்டாள் தனத்தால் ஒன்றும் பெரிதாக மாறிவிடப் போவதில்லை.” கிருஷ்ணன் ஒரு சிறுபிள்ளை விஷமம் செய்யும்போது பிடிபட்டால் எப்படிச் சிரிப்பானோ அவ்வாறே சிரித்தான். பீமனும் அவனுடன் கூடச் சேர்ந்து சிரித்தான். “கிருஷ்ணா! திருதராஷ்டிரர் ஒரு கஞ்சன் என்பதை நீ நன்கறிவாய்!  நாம் கேட்பதை எல்லாம் அவர் கொடுக்க மறுத்தால்? அப்போது நாம் என்ன செய்வது?”

“நாம் நம் கோரிக்கையை வெளிப்படையாக வைத்த பின்னரும் திருதராஷ்டிரன் அதற்குச் செவி சாய்க்க மறுத்தார் எனில், இவ்வுலகமே அவரைப் பார்த்து நகைக்கும். அவரைத் தான் பழி கூறும். அவரைக் கண்டிக்கும். இதை திருதராஷ்டிரன் நன்கறிவார். ஆகவே நீ இதைக் குறித்துக் கவலைப்படாதே! இதை மறுத்துத் தன் பெயரைக் கெடுத்துக் கொள்ள அவர் சம்மதிக்க மாட்டார்.  அப்படி மறுத்தால் பிதாமகர் பீஷ்மரும் சரி, ராணிமாதா சத்யவதியும் சரி அவரை மன்னிக்கவே மாட்டார்கள். அதை அவர் விரும்ப மாட்டார். சரி, அது போகட்டும்! நான் இப்போது ஹஸ்தினாபுரம் சென்று இதைச் சோதித்துப் பார்க்க விரும்புகிறேன். செல்லலாமா?”

பீமன் உற்சாகத்துடன், “நல்லது கிருஷ்ணா! கேட்கவே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நீ ஓர் அற்புதமான, அதிசயமான மனிதன்.” என்றான். அப்போது ஏதோ முக்கியமான அதே சமயம் கடினமான விஷயம் ஒன்று நினைவுக்கு வந்தது போல் கிருஷ்ணன் பீமனின் மணிக்கட்டை இறுகப் பிடித்தான். “ஆஹா! இதை மறந்தே விட்டேனே! பீமா, பீமா! முக்கியமான விஷயத்தை எப்படி மறந்தேன்! அடக் கடவுளே! மஹாதேவா!” என்று கூவினான். அவன் குரலில் கவலையும், கைவிடப்பட்ட தொனியும் தெரிந்தது.

“என்ன?” என்று கேட்டான் பீமன்.
வருத்தத்துடன் தலையை அசைத்தான் கிருஷ்ணன். “இதோ பார் பீமா! இப்போது நான் தனியாக எப்படி ஹஸ்தினாபுரம் செல்வது? நீ இல்லாமல் சென்றேன் ஆனால், யுதிஷ்டிரன் தான் ஓர் அரசனாக விரும்பவே மாட்டான்; குந்தி அத்தையும் உண்ணாவிரதம் இருந்து உயிரை விடத் தீர்மானிப்பார்.  திரௌபதியோ பாஞ்சாலத்திற்கே திரும்பி விடுவாள். ஜாலந்திராவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். தன் நாக்கை அறுத்துக் கொண்டு என் காலடியில் உயிரை விட்டு விடுவாள். அடக் கடவுளே, கடவுளே, மஹாதேவா! இந்த பீமன் இல்லாமல் நான் இவற்றை எல்லாம் எப்படி எதிர்கொள்வேன்? ஒன்றுமே புரியவில்லையே!”

“நீ ஓர் ஏமாற்றுக்காரன், வஞ்சகன், கபடநாடகம் ஆடுபவன். ஆரம்பத்திலிருந்து என்னை ஹஸ்தினாபுரம் அழைத்துச் செல்லவே நீ தீர்மானத்துடன் வந்திருக்கிறாய்! வேறு எண்ணங்கள் எதுவும் உன்னிடம் இல்லை!”

“அது சரி அப்பா! ஆனால் நீ மட்டும் இப்போது என்னுடன் ஹஸ்தினாபுரம் வரவில்லை எனில்! நாம் கனவு கண்டு கொண்டிருக்கும் அருமையான புனிதமான கடவுளரின் நகரம் என்பது வெறும் கனவளவிலேயே இருக்கும். அதற்கு மாபெரும் ஆபத்து ஏற்படும். ஆனால் நீ மட்டும் ஹஸ்தினாபுரம் வந்து திருதராஷ்டிரனிடம் நேரில் பேசினால்! எல்லாமும் மாறிவிடும். உன்னுடைய பெருந்தன்மையான போக்கை அவர் புரிந்து கொண்டு நீ கேட்பதை எல்லாம் ஒத்துக் கொண்டு கொடுத்துவிடுவார்.”

“நான் நன்கறிவேன் கிருஷ்ணா! அந்தக் குருட்டு அரசனை நான் மட்டும் நேரில் வந்து சந்தித்து என் தேவைகளைச் சொன்னேன் எனில் அவர் கட்டாயம் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பார். நான் கேட்பதை மறுக்குமளவுக்கு மனோ தைரியம் அவரிடம் கிடையாது.”

“எனக்குத் தெரியும் பீமா! உன்னால் மட்டும் தான் இது முடியும்!”

“கிருஷ்ணா, இப்படியான எண்ணங்கள் உனக்கு எங்கிருந்து கிளம்புகின்றன?” பீமன் சிரித்த வண்ணம் குறும்பு கொப்பளிக்கக் கிருஷ்ணனை அன்புடன் அணைத்த வண்ணம் கேட்டான்.

“ஓ, அது மிக எளிது! உன்னுடன் சேர்ந்து இருந்தால் இவை எல்லாம் தானாகவே தோன்றுகின்றன, வ்ருகோதர அரசே!”
“ஹா, என்னை, “வ்ருகோதர அரசன்” என அழைக்காதே! அப்படி அழைத்தால் எனக்குக் காஷ்யா, ஜாலந்திராவின் நினைவு வந்துவிடுகிறது. பின்னர் என் இதயம் மிக வேகமாய்த் துடிதுடிக்கிறது.”

“எனக்குத் தெரியும் பீமா! அதனால் தான் நான் என்ன சொல்லவேண்டுமோ அதை உன்னிடம் சொன்னேன். வா, வா விரைந்து வா! கிளம்பு! சீக்கிரமாய் நாம் செல்லவில்லை எனில் அவள் ஏதேனும் செய்து கொண்டு விடுவாள். கங்கையில் போய் விழுந்தாலும் விழுந்து விடுவாள்.”

கோபுவின் பக்கம் திரும்பிய பீமன் அவனை ரதத்தை விரைவில் தயார் செய்யச் சொன்னான். தாங்கள் திரும்பி ஹஸ்தினாபுரம் செல்லப் போவதாகவும் தெரிவித்ஹ்டான். கோபுக்கு அதிர்ச்சியாக இருந்தது. “ஹஸ்தினாபுரமா! ஆஹா! என்ன என் எஜமானுக்கு என்ன ஆயிற்றென்றே தெரியவில்லையே! நாம் நிர்மாணிக்கப் போகும் நகரத்தின் மாதிரியை இதோ கட்டிப் பூர்த்தி செய்து வைத்திருக்கிறேன். எவ்வளவு அருமையாக இருக்கிறது என்று பாருங்கள்!” என்றான்.

“ஹூம், வெறும் கூழாங்கற்களால் ஆன நகரங்கள் நமக்குத் தேவையில்லை.” கோபு கட்டி இருந்த் கூழாங்கற்களால் ஆன நகர மாதிரியைக் கலைத்த வண்ணம் பீமன் பேசினான். “நாம் உண்மையாகவே அழகான ஓர் நகரத்தை நிர்மாணிக்கப் போகிறோம்.”

“நீங்கள் தொந்திரவை விலைக்கு வாங்கிக் கொள்கிறீர்கள், எஜமான்!” என்ற வண்ணம் தரையில் அமர்ந்த கோபு பீமன் கலைத்து விட்ட கூழாங்கற்களையும் தான் கட்டிய மாதிரி நகரத்தையும் வருத்தத்துடன் பார்த்தான். தன் தலையில் கைவைத்துக் கொண்டு சோகத்துடன் அமர்ந்தான்.

“இல்லை, கோபு, நாம் சங்கடங்களிலிருந்து விரைவில் விடுதலை பெறுகிறோம்.”

“பிரபுவுக்குத் தன் நிலைமை புரியவில்லை. அவர் செயலற்றவராகி விட்டார்.” கோபு தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டான். அவனைத் தன் கரங்களால் தூக்கிய பீமன், “இதை விடப் பெரியதொரு நகரை நாம் உண்மையாகவே நிர்மாணிக்கப் போகிறோம். இப்போது எழுந்திரு!” என்றான்.

தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட கோபு, “என்னால் நம்பமுடியவில்லை!” என்றான். “கோபு, கிருஷ்ணா எதற்கு வந்திருக்கிறான் தெரியுமா? அந்தப் பெரிய கனவு நகரை நமக்காக நிர்மாணித்துத் தரத்தான். நமக்கு அதில் உதவி செய்யத் தான் வந்திருக்கிறான். நாம் திரும்ப ஹஸ்தினாபுரம் செல்வோம். அங்குள்ள மக்களில் சிலரும் உதவி செய்ய நாம் நம் கனவு நகரை நிர்மாணிப்போம்.”

“பிரபுவே, நிச்சயமாக ஒன்று கூறுகிறேன். மிக, மிகத் தவறான முற்றிலும் தவறான ஒரு நிகழ்வு விரைவில் நடைபெறப் போகிறது. அதை நான் இன்று அதிகாலையில் மாட்சிமை பொருந்திய வாசுதேவக் கிருஷ்ணன் வந்ததுமே உணர்ந்துவிட்டேன்.  பிரபு, பிரபு, நீங்கள் மீண்டும் சங்கடங்களில் மாட்டிக் கொள்ளப் போகிறீர்கள்!”

“முட்டாளே, விரைந்து வா! அப்படி எல்லாம் நடக்காது!”