Tuesday, November 30, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!


 உத்தவன் மனம் திறக்கின்றான்!

உத்தவனின் சிரிப்பும் சரி, வலுக்கட்டாயமாய் வரவழைத்துக்கொண்ட தொனியிலும் சரி கண்ணன் நிம்மதி அடையவில்லை.  ஏதோ மறைக்கிறான் உத்தவன், நம்மிடமா? என்று வேதனையுடன், “இல்லை உத்தவா, ஒருவேளை நான் செய்வது எல்லாம் உனக்குச் சம்மதம் என்பதாலேயே உனக்குப் பிடிக்காத ஏதோ ஒன்றை நான் செய்கிறேனோ எனத் தோன்றுகிறது. அந்த விஷயம் உனக்குப் பெரும் தொந்திரவாயுஅம் இருக்கிறது.”  உத்தவன் கண்களைப் பார்த்துக்கொண்டே பேசிய கண்ணன் கண நேரம் அதில் தோன்றி மறைந்த மின்வெட்டைக் கவனித்துக்கொண்டான். “சொல், என் அருமை சோதரா, சொல்.” என்றான்.  கொஞ்சம் யோசனையுடன், மேலும், “இரு, இரு, உனக்குப் புரிய வைக்க முயல்கிறேன்.  நாம் கரவீரபுரத்துக்கு வரும்வரைக்கும் நீ எப்போதும்போலவே இருந்தாய்.  அங்கிருந்து கிளம்புவதற்குள் உனக்குள் ஏதோ நேர்ந்துவிட்டது.  அதன் பின்னரே உன்னிடம் மாற்றம்.  இதுவரை உனக்கு ஏற்படாத ஏதோ ஒரு நிகழ்வு, அதிசயமான சம்பவம், என்னவெனப் புரியவில்லை, அதனால் மாறி விட்டாய்!”

“ஓ, கண்ணா, எனக்கு ஒன்றும் ஆகவில்லை அப்பா.  நான் எப்போதுமெ உன்னுடனே இருந்து வந்திருக்கிறேனே!” மீண்டும் முகத்தில் மலர்ச்சியை வலுக்கட்டாயமாய் வரவழைத்துக்கொண்டான் உத்தவன்.  கிருஷ்ணன் விடவில்லை, “அப்படியா?? நான் உன்னுடனேயே இருக்கும்போதும் உனக்கு என்ன குறை?? என்ன துன்பம் நேரிட்டுவிட்டது?? ஓ, ஓ,ஓ, என் அருமை உத்தவா, என்னால் உன்னை உணர முடிகிறது.  நீயும், நானும் பிறந்ததிலிருந்து ஒன்றாய் இருந்து வருகிறோமே, உன்னுடைய ஒரு நிறைவேறாத ஆசையை, அதன் இழப்பை, ஏன் நீயே உன்னிடம் தோல்வி அடைந்துவிட்டாயோ என நீ எண்ணுகிறாய் என்பதையும், நீ என்னிடம் மறைக்கிறாய் அப்பனே!  அப்படி நீ எதில் தோல்வி அடைந்து விட்டாய் என்று தான் எனக்குப் புரியவில்லை.  இதற்கு முன்னரெல்லாம் நீ இப்படி எதையோ பறி கொடுத்தாற்போல் நடந்து கொண்டதில்லையே?? என்னிடம் மறைக்காதே உத்தவா, உண்மை வெளிவரட்டும்!” கண்ணனின் இந்த வார்த்தைகள் உத்தவனின் நெஞ்சில் அம்பைப் போல் தாக்கின என்றாலும் அதிலிருந்து துன்பமாகிய ரத்தம் சொட்டுச் சொட்டாகக் கசிந்தது.  அந்தக் காயத்தைத் தாங்க முடியாத உத்தவன் தன் நெஞ்சை அமுக்கிப் பிடித்துக்கொண்டான்.  கசிய ஆரம்பித்த ரத்தம் அவன் கண்களின் வழியே கண்ணீராக வர ஆரம்பித்தது.

சற்றே தயங்கிய அவன், பின் ஒரு பெருமூச்சுடன் தன்னைச் சமாதானம் செய்து கொண்டு, பேச ஆரம்பித்தான்.  ஆனாலும் அவன் குரல் நடுங்கியது.  இனம் புரியாத பயம் அவனை ஆட்டுவிப்பது கண்ணனுக்குப் புரிந்தது.  நடுங்கிய குரலில் அவன், “உனக்குத் தெரியவேண்டுமா?? என்ன தெரியவேண்டும்?? இதோ சொல்கிறேன் கேள்! அலுத்துவிட்டது எனக்கு! ஆம், கண்ணா, இந்த வாழ்க்கை, இதன் உல்லாசம், இதன் வெற்றி, தோல்விகள் அனைத்துமே எனக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது.  இந்த வாழ்க்கையைத் துறந்து தொலைத்துவிட்டு இமயச் சாரலில் பதரிகாசிரமத்தில் சென்று தவம் செய்து அமைதியாக வாழ விரும்புகிறேன்.   பரபரப்பும், சூழ்ச்சியும் ஒருவரை ஒருவர் அடிக்கச் சமயம் பார்த்துக்கொண்டிருப்பதுமான இந்த வாழ்க்கை எனக்கு மிகவும் அலுத்துவிட்டது என் சகோதரா!”

 கண்ணன் அவனையே இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். “ஏன் அப்பா, ஏன் துறவியாக நினைக்கிறாய்?? ஏன் உனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை?? இந்த வாழ்க்கையை நன்கு நல்ல முறையில் தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்து தர்மத்தை நிலைநாட்டவே, வாழ்க்கையின் உந்நதத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டவே, அது எல்லாவற்றிலும் உயர்ந்த தர்மத்தைக் கடைப்பிடிக்கவேண்டிய ஒன்று என்பதைச் சொல்லவே நாம் இங்கிருக்கிறோம்.  வெறும் சாதாரண வாழ்க்கை வாழ்ந்துகழிக்க அல்ல! அதை நீயும் நன்கு அறிவாயல்லவா?”

“ஓஓ, கண்ணா, அதெல்லாம் நீ பார்த்துக்கொள் அப்பா.  உனக்குத் தான் அதெல்லாம் சரியாய் இருக்கும். நீ ஒரு கடவுள் என்று எல்லாரும் சொல்கின்றனர்.  ;யார் கண்டார்கள்? உண்மையிலேயே நீ தான் அந்தப் பரவாசுதேவனோ என்னமோ?? நீ வாழ்க்கையை உன் விருப்பத்திற்கேற்ப வளைத்துக்கொண்டு வாழப் பிறந்திருக்கிறாய்.  உன்னிடம் வாழ்க்கை கைகட்டிச் சேவகம் செய்யும்.  காலம் உனக்கு ஊழியம் செய்யக் காத்திருக்கிறது.  உனக்கு இதெல்லாம் சரியாய் இருக்கும்.  எனக்கு அப்படி இல்லை! நான் ஒரு சாதாரண மானுடன்.” என்றான் உத்தவன்.  

“ஆஹா, இது என்ன சொல்கிறாய் உத்தவா?? வாழ்க்கை வாழ்வதற்கே! நல்லமுறையில் வாழ்ந்து காட்டவே நாம் பிறந்திருக்கிறோம். வாழ்க்கையை எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்து காட்டி மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கவேண்டும்.  ஆசாரியர் பரசுராமரும் நம்மிடம் கோமந்தக மலையில் அதையே சொன்னாரல்லவா?  மறந்துவிட்டாயா?? இதுவரையிலும் நீயும், நானும் அப்படித் தானே வாழ்ந்து வந்திருக்கிறோம்?”

“என்னால் இனி இயலாது கண்ணா, தயவு செய்து மேலும் மேலும் பேச்சுக் கொடுத்து என்னை எதாவது உளற வைத்துவிடாதே.  நான் துறவு மேற்கொள்ளத் தீர்மானித்துவிட்டேன்.  “ அவன் கண்களின் பிடிவாதம் கண்ணனுக்கு இனி என்னை ஒன்றும் கேட்காதே என அறிவுறுத்தின.  “உத்தவா,  உன்னுடைய துன்பத்தை என்னுடன் பகிர்ந்துகொள்வதே உனக்குத் துன்பமளிக்கும் விஷயம் என்றால் வேண்டாம்!”  சட்டென எழுந்து உத்தவனைத் தன்னோடு சேர்த்து அணைத்து ஆறுதலளிக்க விரும்பிய கண்ணனுக்கு மனதில் ஏதோ பொறிதட்டியது.  உடனே உத்தவனைப் பார்த்து, “ உத்தவா, நீ எங்கேயானும் அந்த ஷாயிபாவிடம் உன் மனதைப் பறி கொடுத்துவிடவில்லையே?” என்று சந்தேகத்தோடு வினவினான். 
குரல் தழுதழுக்க, “கண்ணா, என்னை எதுவும் கேட்காதே!” என்ற உத்தவன் கண்ணன் தோள்களில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டான். “ஆஹா, எவ்வளவு பெரிய முட்டாள் நான், கடைசியில் அந்த மன்மதனின் கணைகள் உன்னையும் தாக்கிவிட்டனவா??உத்தவா, உன்னுடைய உணர்வு என்னவாயிருக்கும் என்பதை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது!”  கண்ணன் வருத்தத்துடன் மேலும் கூறினான்.  “அவள் ஸ்வேதகேதுவுக்கென வாக்குக்கொடுக்கப்பட்டவள். இருவரின் யாரேனும் ஒருவர் விரும்பாமல் இருந்தால் தவிர நீ அவர்கள் இருவரிடையிலும் புகுந்து அவளை உன்னவளாக்கிக்கொள்ள இயலாது.  ஆனால் உனக்கு இப்போது அவள் மேல் அன்பும், ஆசையும் அளவுக்கதிகமாய்ப் போய்விட்டது.  அவளில்லாமல் உன்னால் இப்போது உயிர் வாழமுடியாது.  அவளோ உனக்குக் கிடைப்பது அரிதிலும் அரிது.  ஆஹா, இப்போது புரிகிறது, நீ ஏன் துறவு மேற்கொள்ள விரும்பினாய் என்று.”

“வேண்டாம், கண்ணா, வேண்டாம், மேலும் மேலும் பேசாதே! உன் அன்பினாலும், ஆதரவினாலும் என்னைக் கொல்கிறாயே!  நான் உனக்கு உண்மையான நண்பனாக, சகோதரனாக நடந்து கொள்ளவில்லையே; இன்னொருவருக்கு எனப் பேசப்பட்ட பெண்ணை நினைத்துக்கொண்டு பாவம் செய்துவிட்டேனே.  எனக்குப் பைத்தியம் தான் பிடித்துவிட்டது. “ உத்தவன் இப்போது விம்மி விம்மி அழவே ஆரம்பித்தான்.  “முட்டாள் மாதிரிப் பேசாதே உத்தவா! இது இயற்கை. உன்னால் மட்டுமல்ல, ஞாநிகளும், ரிஷி, முனிவர்களாலுமே தடுக்க இயலாத ஒன்று.  உனக்கு நீயே கடுமையாகத் தண்டனை விதித்துக்கொள்ளாதே.  இந்தப் பெண்ணாசை இருக்கிறதே, அது மட்டும் வந்துவிட்டால் ஒவ்வொரு ஆணும் நெருப்பாகத் தன்னை எரித்துக்கொள்வான்.  காமனின் கணைகளால் இவன் தாக்கப்பட்டிருக்கிறான் என்பதை ஒரு மாபெரும் அடையாளமாக இந்தப் பெண்கள் மாற்றிவிடுகிறார்கள்.  இதிலிருந்து எவரும் தப்பியதில்லை.” என்றான் கண்ணன்.

“நான் அந்த நெருப்பால் எரிக்கப் படுவதையோ, வெறும் அடையாளச்சின்னம் பெறுவதையோ விரும்பவில்லை கண்ணா, முழுதும் எரிந்து சாம்பலாகவே விரும்புகிறேன்.  உனக்கு என்ன தெரியும்?? என்னுடைய உணர்வுகளை நீ புரிந்து கொள்வாயோ மாட்டாயோ?? கோகுலத்திலும் , விருந்தாவனத்திலும்  உன்னை விரும்பியவளை எந்தவிதக் கஷ்டமும் இல்லாமல், ஒரு சிணுக்கம் கூடக் காட்டாமல் விட்டுவிட்டு நீ வந்துவிட்டாய்.  என்னால் அப்படி எல்லாம் முடியாதப்பா!”

“தப்பு உத்தவா, நீ சொல்வது தவறு.” என்றான் கண்ணன்.  அவன் குரல் அமைதியாகவும் நிதானமாகவும் வந்தது.  உத்தவன் அவனை ஆச்சரியத்தோடு பார்த்தான்.

Wednesday, November 24, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

உத்தவனின் மாற்றமும், கண்ணனின் கலக்கமும்!

ரேவதியையும், அவள் வீரத்தையும் உயர்வாகப் பேசி எவ்வகையிலாவது குக்குட்மின்னின் மனதைச் சமாதானம் செய்ய பலராமன் முயற்சித்தான். ஆனால் ரேவதியும் பலராமன் தன்னைக் குழந்தைபோல் நடத்துவதாய்க் கருதினாள். தோல்வியுற்று ஓடி வந்து தான் அழுவதற்கு பலராமன் கூறும் சமாதானம் என நினைத்தாள். கோபத்தோடு பலராமனைப் பார்த்துக் கத்தினாள். பலராமன் என்ன சொல்வதென்று தெரியாமல் மெளனமாய் இருந்தான். “போ, வெளியே!” திட்டவட்டமாய்க் கூறினான் குக்குட்மின். சட்டெ ன்று பலராமனுக்கு அவர்கள் மீது இருந்த பரிதாப உணர்ச்சி மறைந்தது. அதுவரையிலும் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தவன், இப்போது தூக்கத்திலிருந்து விழித்தவன் போல் சுயநினைவுக்கு வந்தான். “சும்மாக் கத்தாதீர்கள் இருவரும்! அரசே, உங்கள் மகள் நன்கு பயிற்சி அளிக்கப் பட்டிருந்தாலும் அவள் ஒருத்தியால் மட்டுமே குஷஸ்தலையை வென்று மீட்க முடியாது. “ இப்போது குக்குட்மினின் முகத்தில் கோபம் கொந்தளித்தது. ஆனால் பலராமன் விடாமல், “கேட்கிறீர்களா இல்லையா? உங்கள் போர்த்தந்திரங்கள் இந்தக் காலத்துக்குச் சற்றும் பொருந்தாதவை. உங்கள் போர்முறையில் சண்டையிட்டு குஷஸ்தலையை வெல்ல முடியாது. “ பலராமன் இப்போது வற்புறுத்திக் கூறினான்.

“போ, வெளியே,” மீண்டும் கத்தினான் குக்குட்மின். ரேவதியோ பலராமனை வெறுப்புடன் பார்த்தாள். கோபத்தில் அவள் உடலே நடுங்கியது. “போகமுடியாது!” அழுத்தம் திருத்தமாய்க் கூறிய பலராமன், “ நான் உங்களுடன் வந்து குஷஸ்தலையை உங்களுக்காக மீட்டுத் தருகிறேன். கத்துவதை நிறுத்துங்கள். நான் வசுதேவனின் மகன். எல்லாம் வல்ல பரம்பொருளின் மீது ஆணையிட்டு, ஆகாசவாணி, பூமாதேவி சாக்ஷியாகக் கூறுகிறேன். நீங்கள் மீண்டும் குஷஸ்தலைக்கு மன்னனாவதை நான் என் கண்களால் காணுவேன்! இது உறுதி! என் சபதம்!” என்றான். செயலிழந்து அவனைப் பார்த்தான் குக்குட்மின். ரேவதியோ புதியதொரு பார்வையுடன் பலராமனைப் பார்த்தாள். “கேளுங்கள், நான் உங்கள் குமாரிக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப் போகிறேன். அதுவும் உண்மையான யுத்தத்தில் எப்படிச் சண்டையிடவேண்டுமோ, அவ்வாறு கடினமான பயிற்சி அளிக்கப் போகிறேன். “தீர்மானமாய்க் கூறிய பலராமன் மேலும் தொடர்ந்தான்.
“அவள் பயிற்சியை எடுத்துக்கொண்டு வரப் போகிறாள். ஆகவே நீர் சண்டையிட வரவேண்டாம். உங்கள் மகளுக்கு நான் பயிற்சி கொடுத்துத் தயாராக்குகிறேன். புண்யாஜன ராக்ஷஸர்களை ஒருத்தர் பாக்கி இல்லாமல் அனைவரையும் குஷஸ்தலையில் இருந்து விரட்டி அடிக்கிறேன். இந்தப்பழைய ராக்ஷஸர்களின் குஷஸ்தலையை எரித்துச் சாம்பலாக்கிவிட்டு உங்களுக்குப் புதியதொரு அற்புதமான குஷஸ்தலையை உருவாக்கித் தருகிறேன். தேவலோகத்து அமராபுரிக்குப் போட்டியிடும் வண்ணம் அழகான நகரை உருவாக்கித் தருவேன். மீண்டும் ஒரு முறை என்னை வெளியே போ என்று சொன்னீர்கள் என்றால் உங்கள் இருவரையுமே இந்த சிப்ரா நதியில் மூழ்கடித்துவிடுவேன். பின்னர் நான் மட்டும் தனியாக் குஷஸ்தலை செல்லவேண்டும். இப்போது சொல்லுங்கள், நான் போகவேண்டுமா? அல்லது நீர் என்னுடனும், என் சகோதரன் உத்தவனுடனும் வந்து செளராஷ்டிராவின் குஷஸ்தலைக்குச் செல்லலாமா? அதுவும், நாளை மறுநாளே!”
ரேவதி பெரியதொரு ராக்ஷஸன் போல் நின்று கொண்டிருந்த பலராமனைப் பார்த்துவிட்டுத் தன் தந்தை என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்துக்கொண்டு அவர் பக்கம் திரும்பினாள். எல்லாவற்றையும் கேட்ட குக்குட்மின் நீண்ட ஆலோசனைக்குப் பின்னர், “வசுதேவகுமாரா, அந்தக் கடவுளே உன்னை என்னிடம் அனுப்பி வைத்திருக்கிறார். உன் கருத்துக்கு நான் உடன்படுகிறேன். நாம் போகலாம்.” என்று கூறினான். அவன் குரலில் புதியதொரு நம்பிக்கை உதயமாகி இருந்தது தெரிந்தது.
************************************************************************************


அந்த இரவில் கிருஷ்ணன் உத்தவனை நினைத்து நினைத்து மிகவும் கவலைப்பட்டான். உத்தவனுக்கு ஏதோ ஆகிவிட்டது. கண்ணன் பிறந்ததில் இருந்து கோகுலத்துக்கு அனுப்பப் பட்ட உத்தவன் கண்ணனோடு சேர்ந்தே வளர்ந்தான். இத்தனை வருடங்களில் உத்தவனை இப்படி ஒரு நிலையில் கண்ணன் பார்த்ததில்லை. தன்னிடம் கூட ஏதோ மறைக்கிறானே?? அதோடு கூட நினைவெல்லாம் எங்கேயோ இருக்கிறது, வித்தியாசமாய் நடந்து கொள்கிறான். எப்போதுமே பேச்சுக் குறைவு தான். என்றாலும் வெளிப்படையாய் உள்ளத்தில் உள்ளதை ஒளிக்காமல் பேசும் வழக்கம் கொண்டவன். மென்மையான சுபாவம் படைத்தவன். அதிர்ந்தே பேசமாட்டான். கண்ணன் தாமகோஷனுடனும், பலராமனுடனும் முதல் ரதத்தில் பிரயாணம் செய்து கொண்டு வந்தான். ஷாயிபாவும், அவள் தோழிகளும் அடுத்த ரதத்திலும், ஆசாரியர்கள் மற்ற ரதங்களிலும் பின் தொடர்ந்து கொண்டிருந்தனர். உத்தவன் இந்தப் பிரயாணத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்திக்கொண்டிருந்ததால் பெரும்பாலும் குதிரையிலேயே பயணம் செய்து கொண்டிருந்தான். இரவுகளில் வழக்கம்போல் கண்ணன் இருக்கும் இடம் தேடி வந்து படுத்துக்கொள்கிறான் தான். இருவரும் அருகருகே படுத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக்கொண்டு அன்றைய சம்பவங்களையும், அதைப் பற்றிய அவர்கள் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் இந்தப் பிரயாணம் ஆரம்பித்துச் சிறிது காலத்திலேயே கிருஷ்ணன் உத்தவனிடம் மாற்றத்தை உணர்ந்தான். முதலில் சரியாகத் தெரியவில்லையாயினும், உத்தவனுக்குள் ஏதொ புதியதொரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ம்ம்ம்ம்ம்?? இந்தக் கடைசி இரு தினங்கள், உத்தவன் வேண்டுமென்றே கிருஷ்ணனின் அருகில் வருவதைத் தவிர்த்து வருகிறான். இன்னும் சொல்லப் போனால் பகல்வேளைகளில் கூடக் கண்ணனின் முகத்தை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்க்கிறான்.

உத்தவா? இது நீ தானா??

அன்று கண்ணன் மிகவும் வற்புறுத்திக் கூறியதன் பேரில் உத்தவன், கண்ணனோடு படுக்க வந்தான். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்த நண்பர்கள் பின்னர் தூங்கலாம் என படுத்தார்கள். எப்போதும்போல் பலராமன் படுத்ததுமே உறங்கி விட்டான். கண்ணனுக்குத் தூக்கம் வரவில்லை. கண்ணன் எப்போதுமே படுத்த அடுத்த நிமிடமே உறங்குபவன் தான். ஆனால் இன்று உத்தவன் திரும்பித் திரும்பிப் புரண்டு படுப்பதைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். சற்று நேரம் பொறுத்த கண்ணன் மெல்லத் தன் கைகளை உத்தவன் மேல் வைத்தான். தூக்கிவாரிப்போட்டுக்கொண்டு எழுந்த உத்தவன் அருகே அமர்ந்து தன்னைக் கனிவோடும், கருணையோடும் பார்த்துக் கொண்டிருந்த கண்ணனைக் கண்டதும், என்ன சொல்வதென்று புரியாமல் பார்த்தான். கண்ணன் அவனிடம், “உத்தவா, நான் உன்னுடன் பேசவேண்டும்!” என்றான். உத்தவன் பதிலே பேசவில்லை. வானில் நேரம் கழித்து வந்த சந்திரன் மங்கிய நிலவொளியைக் கொடுத்துக்கொண்டிருந்தது. உத்தவன் எதுவுமே பேசாமல் கண்ணனோடு நடந்தான். இருவரும் ஒரு அடர்ந்த மரத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்த ஒரு மேடைக்கு வந்து அமர்ந்தார்கள். கண்ணன் உத்தவனையே சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். உத்தவன் சங்கடத்தோடு நெளிந்தான்.


“உத்தவா, இப்போதெல்லாம் நீ மிகவும் மாறிவிட்டாய்!”
“நானா? மாறியா விட்டேன்? அதெல்லாம் ஒன்றும் இல்லை கண்ணா!”

“உத்தவா, உண்மையைச் சொல், நான் என்ன கேட்கிறேன் என்பது உனக்குப் புரிகிறதல்லவா?? நம்மிருவருக்கும் இடையே ஏதோ தடை இருப்பதை நான் உணர்கிறேனே?? அது உனக்குத் தெரியவில்லையா?? நான் ஒருவேளை உன்னை அவமதித்துவிட்டேனோ?”

உத்தவன் கண்களில் கண்ணீர் ததும்பா, “அவமதிப்பா? கண்ணா, உனக்கு யாரையுமே அவமதிக்கத் தெரியாதே? என்னை நீ எவ்வாறு அவமதிப்புச் செய்வாய்?? மேலும் நீ என்னை என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் எனக்குச் சம்மதமே! அப்படி இருக்கையில் உனக்கு என்ன சந்தேகம் கண்ணா?”

Thursday, November 18, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

கண்ணனின் உதவி!

கிருஷ்ணனின் தந்திரம் பலராமனுக்குப் புரிந்துவிட்டது. ஓங்கிக் கண்ணன் முதுகில் அன்போடு ஒரு அடி அடித்தான். “கவலைப்படாதே சகோதரா! சில சமயங்களில் நான் இல்லாமலும் எவ்வாறு வாழ்வது என நீயும் புரிந்து கொள்ளவேண்டாமா??” சிரித்தான் பலராமன். சந்தோஷம் அவனைத் திக்குமுக்காட வைத்தது. கண்ணன் ஏற்கெனவே குஷஸ்தலையைப் பிடிக்கத் திட்டம் தயாரித்திருந்தான். இப்போது அவன் கவனம் எல்லாம் அவன் சிற்றப்பன் மகனும், நெருங்கிய தோழனுமான உத்தவன் பற்றியது தான். கொஞ்ச நாட்களாகவே விசித்திரமாய் நடந்து கொள்கிறான். அவனைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நாளை இரவு அவன் என்னோடு படுக்க வரும் வேளையில் அதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். பலராமனுக்கு அவன் பலத்தையும், வீரத்தையும் தெரிந்து கொள்ள இப்போது ஒரு சந்தர்ப்பம் அளிக்கப் பட்டது போல் உத்தவனுக்கும் தேவை எனில் ஒரு சந்தர்ப்பம் கொடுத்து அவனையும் உற்சாகப் படுத்தவேண்டும். சூழ்நிலைகளில் மாற்றங்களும், தான் செய்யும் செயல்களில் ஒரு தன்னிறைவும் ஏற்பட்டால் உத்தவன் சரியாகிவிடுவான். ஏன் ஒவ்வொரு மனிதனுக்கும் இது தேவையானது தானே?? கெட்டிக்காரனும், விசுவாசியுமான உத்தவன் அருகிலிருந்தால் பலராமன் கட்டாயம் குஷஸ்தலையை வென்று மீட்டு விடுவான்.

“நல்லது அண்ணா, ஒரு மாவீரனைப் போல் பேசுகிறாய். வெற்றியோடு திரும்பி வா! ம்ம்ம்ம்ம்?? உன் இடத்தில் நான் இருந்தால் உத்தவனைத் துணைக்கு அழைத்துக்கொள்வேன். பிக்ருவை நினைவிருக்கிறதல்லவா உனக்கு? பாஞ்சஜனா கப்பலின் மாலுமி?? அவனையும் அவன் துணை மாலுமிகளையும் உத்தவன் நன்கு அறிவான். நீ செல்லப் போவதோ ஒரு துறைமுகம். அங்கே ஒரு கப்பலின் துணை கட்டாயம் வேண்டும் உனக்கு. யோசி!” அவ்வளவில் இருவரும் அவர்கள் இருப்பிடம் திரும்பிவிட்டனர். மறுநாள் குரு சாந்தீபனியின் சீடர்களுக்குள் போட்டி ஆரம்பித்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தங்கள் திறமையைக் காட்டி வந்தார்கள். கண்ணன் சீக்கிரமே போட்டியிலிருந்து விலகினான். பலராமனோ முழு உற்சாகத்தில் இருந்தான். ரேவதியைப் பார்க்கும்போதெல்லாம் அவன் இதயம் படபடவென அடித்துக்கொண்டது. அதுவும் அன்று ரேவதி புலித்தோலால் ஆன ஒரு உடையைப் போட்டிக்கெனச் சிறப்பாகத் தயாரிக்கப் பட்டதை அணிந்து வந்திருந்தாள். அவளைப் பார்க்கும்போதே ஒரு பெண்புலியைப் பார்ப்பது போல் இருந்தது பலராமனுக்கு.

ரேவதி சற்றும் தயக்கமில்லாமல் பலராமனை நேருக்கு நேர் பார்த்தாள். அவளுக்குள் முழு உற்சாகமும், வீரமும் பொங்கிக் கொண்டிருந்தது. ஆகவே மிகவும் தைரியமாக பலராமனை எதிர்கொண்டு அவனோடு போட்டிக்குத் தயாரானாள். பலராமனோ முதலில் அவளை ஒரு பெண் என்பதால் மிகவும் சாதாரணமாகவே சண்டை போட்டான். ஆனால் ரேவதியின் வீரத்தையும், பலத்தையும் பார்த்துவிட்டு அவன் எண்ணத்தை மாற்றிக்கொள்ள நேர்ந்தது. தான் ஒரு துடிப்பும், வீரமும், நுட்பமும் நிறைந்த எதிரியோடு போட்டியிடுகிறோம் என்பதை உணர்ந்தான். ஆகவே போகப்போகத் தான் போட்டியிடுவது யாரிடம் என்பதையும் மறந்து முழு வீரத்தோடு போட்டியிட்ட பலராமன் சீக்கிரமே ரேவதியின் கதையைத் தன் கதையால் வீழ்த்தி அவளைத் தோற்கடித்தான். ரேவதியின் கதை விண்ணில் பறக்க, அவள் கண்ணிலோ கண்ணீர் வெள்ளம். அன்று வரையிலும் அந்த குருகுலத்தில் கதை வைத்துச் சண்டை போடுவதில் அவளை மிஞ்ச எவரும் இல்லை. ஆனால் இன்றோ?? சுத்தமாக அவளை ஒன்றுமில்லை என ஆக்கிவிட்டான் பலராமன். தோல்வியின் கனத்தைத் தாங்க முடியாதவளாய் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு அழுதவண்ணமே அங்கிருந்து சென்றாள் ரேவதி.

அப்போது தான் தன்னிலைக்கு வந்த பலராமன் தன்னை ஒரு முட்டாள் போல் உணர்ந்தான். அவன் மனதில் வருத்தம் மேலோங்கியது. போட்டி மும்முரத்தில் யாருடன் போட்டி போடுகிறோம் என்பதையும் மறந்து தான் செய்த செயலை நினைத்து வருந்தினான். என்ன இருந்தாலும் அவள் என்னைவிடவும் அநுபவம் குறைந்தவள், சிறியவளும் கூட. மேலும் ஒரு அழகான, புத்திசாலியான பெண்ணும் கூட. பலராமன் யோசித்துக்கொண்டே நிற்க, கண்ணன் நிலைமை மோசமாவதற்குள் அண்ணனை உசுப்பி விட்டான். “அண்ணா, ஏன் தயங்குகிறீர்கள்? போய் அவளைச் சமாதானம் செய்து இந்தக் கலையைத் தாங்கள் அவளுக்குக் கற்பிப்பதாய்க் கூறுங்கள். இதில் உள்ள ரகசியங்களை எல்லாம் சொல்லிக் கொடுப்பதாயும் கூறுங்கள். புதிய புதிய உத்திகளைக் கற்பிப்பதாய்ச் சொல்லுங்கள். அப்படியே, உங்கள் இதயத்தையும் தருவதாய்க் கூறுங்கள். இதுவே நல்ல சமயம். விட்டுவிடாதீர்கள்.” பலராமனை ரேவதி சென்ற திசையில் தள்ளிவிட்டான் கண்ணன். பலராமனும் என்ன செய்வது என அறியாமலும் ரேவதியிடம் எப்படிச் சொல்வது எனப் புரியாமலும் அவளைப் பின் தொடர்ந்து அவளும், அவள் தகப்பனும் வசிக்கும் குகைக்குச் சென்றான்.

அங்கே ரேவதி தன் தகப்பன் மடியில் சாய்ந்து இதயமே வெடிக்கும்படியாக அழுது கொண்டிருந்தாள். தான் ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் போய்விட்டதாயும், தந்தையை ஏமாற்றி விட்டதாயும், அவரின் முயற்சிகள் பலனற்றுப் போனதாயும் கூறி வருந்தினாள். குக்குட்மின் அவளைச் சமாதானம் செய்யும் விதமாய் அவள் தலையைக் கோதிக்கொடுத்துக் கொண்டிருந்தான். ரேவதியின் பின்னாலேயே வந்த பலராமன் இந்த உருக்கமான காட்சியைப் பார்த்துவிட்டுத் தான் உள்ளே நுழையும் சமயம் எது எனப் புரியாமல் திகைத்துக்கொண்டே, குக்குட்மின்னைப் பார்த்துவிட்டு, “மன்னியுங்கள் அரசே, நான் தவறு செய்துவிட்டேன்” என்றான். அவனைப் பார்த்துக் குக்குட்மின், “போ வெளியே!” என்று தன் கடினமான குரலில் கூறினான். ஆனால் பலராமன் விடாமல், “ரேவதி ஒரு சிறந்த வீரப் பெண்மணி!நன்றாய் வீரத்தோடும், விவேகத்தோடும் சண்டையிட்டாள்." என்று பாராட்டும் குரலில் கூறினான்.

Saturday, November 13, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

 அண்ணனுக்கு உதவும் தம்பி!



பலராமன் ரேவதியின் தந்தையைப் பார்த்தே தீருவது எனத் தீர்மானித்தான். அரசன் குக்குட்மின் நல்ல உயரமாய் இருந்தான். சொல்லப் போனால் பலராமனே உயரமான இளைஞன். அவனையும் விட அதிக உயரமாய் இருந்தான். குக்குட்மின் வசித்த குகைக்கு குரு சாந்தீபனியோடு கண்ணனும், பலராமனும் வந்தார்கள். குக்குட்மின் அசையாமல் விறைப்பாக அமர்ந்திருந்தான். சாந்தீபனி இருவரையும் அறிமுகம் செய்து வைத்தபோதும் அவன் முகம் உணர்வுகள் அற்றே காணப்பட்டது. இருவரையும் சற்று வெறுப்புடனே பார்த்தான். மனிதர்களைக் கண்டாலே பிடிக்காமல் போய்விட்டது அவனுக்கு. சாந்தீபனி சகோதரர்கள் இருவரின் சாகசங்களையும் பற்றி அவனுக்குக் கூறினார்.

குக்குட்மின் கண்களில் அவ்வப்போது தெரிந்த ஒளியைத் தவிர வேறு உணர்ச்சிகளை அவன் வெளிக்காட்டவில்லை. ரேவதி அப்போது உள்ளே வந்து தந்தையின் கட்டளைக்குக் காத்திருந்தாள். பலராமன் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தபோது அவளோ தன் தந்தையை மிகவும் மதிப்போடும், மரியாதையோடும், அதே சமயம் கனிவு தெரியப் பார்த்துக்கொண்டிருந்தாள். கிருஷ்ணனுக்குப் பலராமனுடைய மனதில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் நன்கு புரிந்தது. இதுவரைக்கும் பலராமன் பார்த்த பெண்கள் எவரும் அவனுடைய பிரம்மாண்டமான உருவத்திற்கும், பலத்துக்கும், தோற்றத்துக்கும் பொருந்திவரவில்லை. பொம்மைகள் போல் காட்சி அளித்தனர்.

அந்தப் பெண்களால் தனக்கு மகிழ்ச்சி கிட்டாது என பலராமன் நினைத்தான். இப்போதுதான் முதல் தடவையாக பலராமன் அவனுடைய உயரத்துக்கும், பலத்துக்கும் பொருந்தி வரக்கூடிய ஒரு பெண்ணைப் பார்த்திருக்கிறான். அதுவும் மிக அழகியும் கூட. ஓர் இளவரசியும் ஆவாள். கண்ணன் இதுவரைக்கும் அவன் அண்ணன் பலராமன் இப்படி ஒரு பெண்ணை விடாமல் உற்று நோக்கியதைக் கண்டதே இல்லை. இதுவே முதல்முறை. தனக்குப் பொருத்தமான ஜோடியை பலராமன் கண்டுகொண்டான் என்பது கண்ணனுக்குப் புரிந்தது. ஆனால் அந்தப் பெண்??? கண்ணன் ஒரு தீர்மானத்துக்கு வந்தான். இதுவரையிலும் அவர்கள் அடைந்த அனைத்து வெற்றிகளுக்கும் கண்ணன் ஒருவனையே பொறுப்பாளியாகவும், காரணகர்த்தாவாகவும் ஆக்கிவந்தனர். பலராமனுக்குக் கண்ணனிடம் துளிக்கூடப் பொறாமையோ, துவேஷமோ ஏற்பட்டதில்லை. இத்தனைக்கும் பின்னணியில் இருந்து செயல்பட்டிருக்கும் பலராமனின் வீரமும், பலமும் இப்போதாவது வெளிப்படவேண்டும். அவன் மனதில் கொஞ்சமாவது இதனால் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டிருந்தால் அத விலகவேண்டும். பலராமன் எதற்கும், எவருக்கும் குறைந்தவன் இல்லை. அதை நிரூபிக்கவேண்டும். கண்ணன் குக்குட்மின்னைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான்.

“மாட்சிமை பொருந்திய அரசே, நாளை குருதேவரின் தேர்ந்தெடுத்த சீடர்களுக்குள் ஒரு போட்டி நடக்கப் போகிறது. உங்கள் குமாரி அனைத்திலும் தேர்ச்சி பெற்றிருப்பதாய் குருதேவர் கூறினார். அவளும் எங்களுடன் கலந்து கொள்வாள் என எதிர்பார்க்கிறேன்.” என்றான் கண்ணன்.

ரேவதிக்குத் தூக்கிவாரிப் போட்டது. விளையாட்டுக்குச் சொல்கின்றனரா?? கண்ணன் இதைக் கவனித்துவிட்டு, மீண்டும் குக்குட்மினிடம் வற்புறுத்தினான். “இம்மாதிரிப் பயிற்சிக்கான சண்டைகளில் எல்லாம் ரேவதி கலந்துகொள்ளமாட்டாள். சமயம் வரும்பொழுது உண்மையான சண்டையிலேயே ஈடுபடப் போகிறாள்.”தீர்மானமாக வந்தது குக்குட்மினின் குரல். கண்ணனோ விடவில்லை. “என் பெரிய அண்ணன் கதையை எப்படி உபயோகிப்பது என்பதையும் அதில் உள்ள சில நுணுக்கங்களையும் உங்கள் குமாரிக்குச் சொல்லிக் கொடுப்பார். கதையை வைத்துச் சண்டை போடுவதில் அவர் நிபுணர்.” பலராமனின் இதயம் படபடத்தது. ரேவதி என்ன சொல்லப் போகிறாளோ? என்றாலும் அவன் வாய் திறக்காமல் காத்திருந்தான். குக்குட்மினின் மனம் சிறிது மாறியது. உடனே ரேவதியைப் பார்த்து, “குழந்தாய், புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வது நன்மை தரும். நீயும் சென்று வா. “ என்று கூறினான்.

“தங்கள் விருப்பம் தந்தையே!” என்றாள் ரேவதி.

கண்ணனும் பலராமனும் தங்கி இருந்த அரண்மனைக்குத் திரும்பினார்கள். கண்ணன் பலராமனிடம், “அண்ணா, பாவம் அந்த அரசர், மிகவும் நல்லவராய் இருக்கிறாரே? அவர் இப்படி அனைத்தையும் இழந்து நிற்பது வருத்தம் அளிக்கிறது. அவரிடம் எதிர்பார்ப்பு எதுவும் இல்லை, ஆனால் ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது. தந்தைக்கும், மகளுக்கும் இடையில் உள்ள அருமையான உறவின் பிணைப்பைப் பார்த்தாயா?? அருமை! அற்புதம்!” என்றான் கண்ணன்.

“பாவம், எப்படித் திரும்பக் குஷஸ்தலையை மீட்கப் போகின்றனரோ?? அந்தப் பெண்ணை நினைத்தால் மிகவும் வருத்தமாய் உள்ளது.” பலராமன் கூறினான்.

கிருஷ்ணன் புன்னகையோடு, “நாம் உதவி செய்தால் நன்றாக இருக்கும், ஆனால் நாமோ உடனே மதுராவுக்குச் செல்லவேண்டுமே? அங்கே நமக்காகக் காத்திருக்கின்றனரே? ம்ம்ம்ம்??? நீ மதுரா சென்றாயானால், நான் செளராஷ்டிரா போய் அங்கே எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு வருவேன்.” என்றான் கண்ணன் சற்றே கபடமாக. பலராமனின் முகம் பிரகாசம் அடைந்தது. உடனே அவன் வேகமாய்ப் பேச ஆரம்பித்தான்:” கண்ணா, என்னை விட உன்னைத் தான் மதுராவில் அதிகம் எதிர்பார்ப்பார்கள். வேண்டுமானால் நான் போகிறேனே செளராஷ்டிராவுக்கு. குக்குட்மினுக்கு நான் உதவுகிறேனே?”

“ஓ, அண்ணா, உனக்குப் புரியவே இல்லையே?? மதுராவுக்கு நான் மட்டும் தனியாகப் போய் என்ன செய்யமுடியும்? நீ இல்லாமல் என்னால் எதுவும் இயலாது. “ கண்ணன் மறுத்துப் பேசினான்.

“ரொம்பவே பணிவைக் காட்டாதே தம்பி. இதையே வேறுவிதமாய்ச் சொன்னால்?? “நான் என்ன செய்யமுடியும் நீ இல்லை எனில்??” யோசி தம்பி, யோசி! பலராமன் கூறக் கண்ணன் நீண்ட பெருமூச்சு விட்டான். “எதிர்காலத்தில் நமக்குக் குஷஸ்தலை போல் ஓர் இடம் தேவைப்படும். எப்போதுமே கோமந்தகமலைத் தொடரில் பத்திரமாய் இருக்கலாம் என நினைக்க முடியாது. “

“நல்ல யோசனை தம்பி, குஷஸ்தலை குக்குட்மினின் கைகளுக்கு வந்துவிட்டால் நமக்கு அங்கே எப்போதும் நல்வரவு கிடைக்கும்.”

“அதே, அண்ணா, அதே! நீ குக்குட்மினுக்கு உதவினாய் எனில் நிச்சயமாய் அவருக்குக் குஷஸ்தலை கிடைத்துவிடும். ஆனால் நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்??”

Friday, November 5, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

பலராமன் தன்னை மறக்கிறான்.

கரவீரபுரத்தை விட்டுச் செல்லும் அந்த வண்டிகள் சகல வசதிகளும் நிரம்பிய ஒரு சிறு வீடாய்க் காட்சி அளித்தது. சமையலுக்குத் தேவையான உபகரணங்கள், மற்றும் மனிதர்களுக்குத் தேவைப்படும் உடைகள், பழங்கள், பான வகைகள் எனத் தேவையான பொருட்கள் நிரப்பப் பட்டிருந்தன. குடிநீருக்கு எனப் பலவகைப்பட்ட மண்பானைகளில் சேகரிக்கப் பட்டது. ஆங்காங்கே நதிகள், குளங்கள், ஆறுகள் போன்றவற்றில் பிடித்து வந்து சேகரிக்கவும் காலிப் பானைகள் வைக்கப்பட்டிருந்தன. திடமான உறுதியான காளைகள் வண்டிகளில் பூட்டப் பட்டிருந்தன. இவற்றைத் தவிர ராணி பத்மாவதி கண்ணனுக்குப் பரிசாய் அளித்திருந்த தங்கமும் குவியலாய் இருந்தவை தக்க பாதுகாப்புடன் ஆயுதமேந்திய வீரர்களின் மேற்பார்வையில் வைக்கப்பட்டன. சில குதிரைகளையும், ஆயுதங்களையும் கூடப் பரிசளித்திருந்தாள் ராணி பத்மாவதி. கிருஷ்ணன், தாமகோஷன், பலராமன், ஷாயிபாவும், அவள் தோழிகளும் அவர்களுக்கெனப் பிரத்தியேகமாய் ஏற்பாடு செய்யப் பட்ட ரதங்களில் ஏறிக்கொண்டனர்.

உத்தவன் சாமான்கள் ஏற்றிச் செல்லும் வண்டிகளின் பாதுகாவலை ஏற்றுக்கொண்டு, எல்லாருக்கும் முன்னால் ஒரு அழகான, கம்பீரமான குதிரையில் ஏறிக்கொண்டிருந்தான். விடை பெறும் நேரம் வந்துவிட்டது. இளம் அரசன் ஆன ஷக்ரதேவன் தனது புதிய குருவான புநர்தத்தனோடும், மற்றும் கரவீரபுரத்தின் முக்கிய அதிகாரிகள், பிரஜைகளோடும் வந்து கண்ணனுக்கும், அவனுடைய பரிவாரங்களுக்கும் விடை கொடுத்தான். அனைவர் கண்களிலும் கண்ணீர் மழை பொழிந்தது. பத்மாவதி தனது துயரத்தை அடக்கிக்கொண்டு சகோதரர்களை ஆசீர்வதித்தாள். புநர்தத்தன் தன் நண்பர்களைக் கட்டித் தழுவி விடை கொடுக்க, இளம் அரசன் கண்ணன் கால்களிலும், மற்றப் பெரியவர்கள் கால்களிலும் விழுந்து எழுந்து ஆசிகள் வாங்கிக்கொண்டான். ஷாயிபாவை ராணி பத்மாவதி ஆசீர்வதிக்க வந்து அவள் தலையில் தன் கையை வைத்ததும், ஷாயிபா தன் முகத்து வெறுப்பாலேயே அவளைச் சுட்டெரித்தாள். எனினும் பத்மாவதி அதைப் பொறுத்துக்கொண்டே அவளையும் முழு மனதோடு ஆசீர்வதித்தாள். ஷாயிபாவுக்கு அனைத்துமே திட்டமிடப் பட்ட ஒரு நாடகமாய்த் தெரிந்தது. தான் விட்டுச் செல்லும் கரவீரபுரத்து நபர்களையும் அவளுக்குப் பிடிக்கவில்லை. தன் விருப்பத்துக்கு விரோதமாய்த் தன்னை அழைத்துச்செல்லும் கண்ணனையும், அவன் பரிவாரங்களையும் அவளுக்குப் பிடிக்கவில்லை. வெறுத்தாள்.
அனைவரையும் விட வயதில் மூத்தவன் ஆன தாமகோஷன் கரவீரபுரத்து முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் ஆசிகளைத் தெரிவித்தான். இளம் கருடன் விநதேயனுக்குத் தன் துயரத்தை அடக்க முடியவில்லை. கண்ணனோடு சேர்ந்து செல்லவே ஆசைப்பட்டான். ஆனால் அவன் தந்தையின் உடல்நலம் சீர் கெட்டிருப்பதாய்ச் செய்தி வந்திருந்ததால் அவன் கோமந்தக மலைக்குத் தன் குடியிருப்புக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்தான். மேலும் அவன் தான் அடுத்த வாரிசு, கருட மக்கள் அனைவரும் விநதேயனையே நம்பி இருந்தனர்.

நல்ல நேரம் வந்ததும், முறைப்படியான வழிபாடுகள் நடக்க, வேதமந்திரங்கள் உரக்க ஒலிக்க, நற்சகுனங்கள் கிடைக்கவும், பிரயாணம் ஆரம்பம் ஆனது. ஏற்கெனவே தேர்ந்தெடுத்த தூதுவர்கள் இங்கு நடந்த முக்கியச் செய்திகளைத் தெரிவிக்க அனுப்பப்பட்டிருந்தனர். அவர்கள் தாங்கள் செல்லும் வழியெல்லாம் கண்ணனின் வீரதீரப் பராக்கிரமங்களைக் கதையாகச் சொல்லிக்கொண்டே சென்றனர். ஏற்கெனவே கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்கியதும், காலியனைக் காலால் மிதித்தே அடக்கியதையும், திரிவக்ரையின் கோணலை நிமிர்த்தியது, குவலயாபீடத்தை அடக்கியது, கம்சனையும் சாணுரனையும் கொன்றது என அனைத்தையும் கேள்விப் பட்டு அவனைக் கடவுள் என்றே மனமார நம்பிய மக்கள் இப்போது இந்தச் செய்திகளைக் கேட்டதும், இன்னும் பிரமிப்பில் ஆழ்ந்தார்கள். அதிலும் புதிய ஆயுதமான சக்ராயுதம் எதிரிகளை அழித்துவிட்டு மீண்டும் கண்ணன் கைகளுக்கே வந்துவிடுகிறது என்பதைக் கேள்விப்பட்டு, இத்தகைய அதிசயத்தை நிகழ்த்த அந்தப் பரவாசுதேவனால் மட்டுமே முடியும் என்று பேசிக்கொண்டார்கள். நம்மை உய்விக்க ஒரு கடவுள் பிறந்துவிட்டான். அவன் வந்தேவிட்டான். இதோ நம் எதிரே ரத்தமும், சதையுமாக நம்மில் ஒருவனைப் போல் நடமாடிக்கொண்டே நமக்கு உதவிகள் செய்கிறான். ஒவ்வொரு வாயாகப் போன இந்தச் செய்தி, வீடு வீடாக, தெருத்தெருவாக, ஊர் ஊராக, நகரம், நகரமாக, நாடு நாடாகப் போனதோடு காடுகளுக்கும் சென்று அங்குள்ள ஆசிரமங்களையும் போய் அடைந்தது.

கண்ணன் இவை அனைத்தையும் சர்வ சாதாரணமாக நடத்திவிட்டு மதுராவுக்குத் திரும்பும் செய்தியும், அவனுடைய பரிவாரங்கள் வருவதையும் மக்கள் அறிந்துகொண்டனர். கால்நடையாகவும், குதிரைகளின் மீதும், மாட்டு வண்டிகளிலும் அவர்கள் கிளம்பிக் கண்ணன் வரும் பாதையை அறிந்து கொண்டு அங்கே தங்கினார்கள். அவர்கள் கொண்டு வந்திருந்த உணவுப் பொருளை வைத்துச் சமைத்துச் சாப்பிட்டுவிட்டுக் கண்ணன் வருகைக்குக் காத்திருந்தன.ர் கண்ணன் வந்ததும், ஓடிப் போய் அவனையும், பலராமனையும் தரிசித்தனர். கால்களில் விழுந்தனர். ஸ்ரீகிருஷ்ணனுக்கு ஜயம், வாசுதேவ கிருஷ்ணனுக்கு மங்களம்! என்ற கோஷங்கள் எழுப்பினார்கள். கண்ணன் காலடி மண்ணைப் பிரசாதமாய் எண்ணித் தங்கள் உச்சியில் தரித்துக்கொண்டனர். கண்ணன் மந்தகாசமான வதனமும், சிரிக்கும் கண்களும், அதில் பொங்கி வழியும் அன்பும், கருணையும் தன்னிரு கைகளையும் உயர்த்தி மக்களை அங்கீகரித்த பாவனையும், அவன் அணிந்திருந்த மஞ்சள் நிறப் பீதாம்பரமும், கழுத்தில் அணிந்திருந்த மாலைகளின் சுகந்தமும், தலையில் கீரீடத்தின் மேல் அணிந்திருந்த மயிலிறகும் அவர்களைக் கவர்ந்தன. இவை அனைத்தும், அவர்கள் நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்து என்றென்றும் மறக்கமுடியாத நினைவாக ஆகியது. குழந்தைகளுக்கும் கண்ணனைக் கண்டதும், தங்கள் அருமைத் தோழனைப் பார்ப்பது போல் சந்தோஷம், பூக்களையும், பழங்களையும் வாரி இறைத்துக் கண்ணனை வரவேற்றார்கள். ஒரு குழந்தை விடாமல் கண்ணன் அனைவரையும் தன் கைகளால் தட்டிக்கொடுத்தான். இளம்பெண்கள் தங்கள் கடைக்கண்களால் கண்ணனைக் கண்டு மகிழ்ந்தனர். அவன் வீரத்தைக்குறித்துப் பெருமிதம் கொண்டு தங்கள் காதலர்களிடமும், மணாளர்களிடமும், அவர்களும் அத்தகைய வீரனாய் இருக்கத் தாங்கள் விரும்புவதாய்த் தெரிவித்தனர்.

பிரயாணத்தின்போது தாமகோஷன் கண்ணனின் விருப்பங்களையும், அவன் தன் நடவடிக்கைகளை எவ்வாறு ஒழுங்காயும், நேரம் பிசகாமலும் அமைத்துக்கொண்டான் என்பதையும் கண்டு வியந்தான். அதிகாலையில் எழும் கண்ணன் காலையிலேயே தன் நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்துக்கொண்டு ஆசாரியர்களோடு சேர்ந்து வேதகோஷங்களை அப்யசிப்பதையும், யாகங்களில் பங்கு கொள்வதையும், சற்றும் சுருதி பிசகாமலும், வார்த்தைகள் பிறழாமலும் வேத மந்திரங்களை உச்சரித்த பாங்கும், அதன் பின்னர் அவர்களோடு ஆயுதப் பயிற்சிகளும், உடல் பயிற்சிகளும் மேற்கொண்டதும், காலை உணவிற்குப் பின்னர் க்ஷத்திரிய தர்மத்தை ஒட்டி வேட்டைகளுக்குச் சென்றதும், தன்னை நாடி வரும் மக்களைச் சந்திப்பதும், அவர்கள் குறைகளைக் கேட்டு இனிய வார்த்தைகளால் அவர்கள் மனதைத் தேற்றுவதும், எல்லாவற்றுக்கும் மேல் வாகனங்களைக் கவனிக்கவும், குதிரைகள், யானைகள், மாடுகள் போன்றவற்றைக் கவனிக்கவும் நியமிக்கப் பட்டிருந்த தொழிலாளர்களோடு தானும் ஒருவனாய்ச் சென்று அனைத்தையும் கவனித்துத் தேவைப்படும்போது அவர்களுக்குத் தன் உதவியைச் செய்வதும், குதிரைகளைத் தட்டிக்கொடுத்து உற்சாகப் படுத்தி, அவற்றுக்கு உணவளிப்பதுமாகக் கண்ணன் தன் பொழுதை ஒரு கணமும் வீணாக்காமல் கழிப்பதை எண்ணி வியந்தான். ஒரு மாபெரும் சக்கரவர்த்திக்குரிய லக்ஷணங்கள் பொருந்தி இருக்கும் கண்ணனைப் பார்த்து அவன் வியப்பின் எல்லைக்கே சென்றான். மதியம் உணவருந்தும் முன்னரும், ஆசாரியர்களோடு சேர்ந்து வைதீகச் சடங்குகளில் பங்கு பெறுவதும், மதிய உணவின் பின்னர் பலராமனுடனும், தன்னுடனும் அமர்ந்து கொண்டு இனி நடக்கவேண்டியவைகளைப் பற்றிப் பேசிக்கொண்டே ருத்ராசாரியாரிடம் தர்ம சாஸ்திரங்களில் உள்ள சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவதும், மாலையிலும் திரும்ப ஆசாரியர்களோடு சேர்ந்து மாலை நேரத்து அர்க்யங்களை அளிப்பதும், இரவு உணவின் பின்னர் ஆசாரியர்கள் அனைவரையும் வணங்கிவிட்டே தன் படுக்கைக்குச் செல்வதுமாய் நியமம் கடைப்பிடித்து வருவதைக் கண்டு வியந்தான். கண்ணனின் சகலகலாவல்லமையைக் கண்டு பூரித்துப் போனான் என்று சொன்னாலும் மிகையில்லை. ஒரு அந்நியனைக் கூட அந்நியன் என உணராமல் தன்னில் ஒருவன் என உணர வைக்கும் கண்ணனின் அந்த அந்நியோந்நியமான நடத்தை எவரிடத்திலும் இதுவரை கண்டிராத ஒன்று. தாமகோஷன் தன் மனைவியின் சகோதரனுக்குப் பிறந்திருக்கும் இந்தப் பிள்ளை நிஜமாகவே அபூர்வமானதொரு முத்து என்பதை உணர்ந்தான்.

உத்தவனின் மேற்பார்வையில் பிரயாணம் நடந்து கொண்டிருந்தது. மெல்ல மெல்ல அது உஜ்ஜயினியை அடைந்தது. அங்கே குரு சாந்தீபனியின் நடமாடும் பல்கலைக்கழகம் முகாமிட்டிருந்தது. ஆகவே அவரும், மன்னன் ஜயசேனன் தன்னிரு குமாரர்களான விந்தனும், அநுவிந்தனும், தொடரக் கண்ணனையும், பலராமனையும் அவர்கள் பரிவாரங்களையும் வரவேற்றனர். குண்டினாபுரத்திலிருந்து திரும்பிய அநுவிந்தன் கண்ணனின் பெருந்தன்மையான போக்கை நேரே கண்டு அதன் பலனைப் பூரணமாய் அநுபவித்துவிட்டிருந்தபடியால் இப்போது அவன் பார்வை முற்றிலும் வேறாக இருந்தது. கண்ணனிடம் நன்றி உணர்ச்சியால் அவன் நெஞ்சம் விம்மியது. குரு சாந்தீபனியின் ஆசிரமத்தைக் கண்ட கண்ணனும், பலராமனும், உத்தவனோடும், விந்தன் அநுவிந்தனோடும் தாங்கள் கழித்த குருகுல நாட்களை நினைவு கூர்ந்து அங்கே தங்கி தங்கள் நினைவுகளைப் புதுப்பித்துக்கொள்ள விரும்பினர். புநர்தத்தனைக் கண்ணன் மீட்டு வந்த அதிசயக் கதையைப் பற்றிப் பேசிப் பேசிப் பொழுதைக்கழிக்க ஆசைப்பட்டனர். ஆனால் உத்தவன் கரவீரபுரத்தில் கிளம்பும்போது சாந்தீபனியின் ஆசிரமத்தில் தங்கிச் செல்வதை மிகவும் விரும்பியவனாய்த் தெரிந்தான். இப்போது தான் அங்கே தங்கவில்லை என்றும், பிரயாணம் மேற்கொண்டும் தொடர இருப்பதால் தான் அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கச் செல்வதாயும் கூறிவிட்டான். கண்ணனுக்கு இது மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஒரு நிமிஷம் கிடைத்தாலும் கண்ணனோடு செலவிட விரும்பும் உத்தவன் இவ்வாறு கூறியது ஆச்சரியமாய் இருந்தாலும், உத்தவனை ஒரு நாளேனும், ஆசிரமத்தில் தங்கித் தங்களோடு பொழுதைக் கழிக்கும்படி வேண்டினான் கண்ணன். ஒருவாறு உத்தவன் ஒத்துக்கொண்டான். குரு சாந்தீபனி தன் சீடர்களுக்கு நேர்ந்த பல்வேறுவிதமான ஆச்சரிய அநுபவங்களைக் கேட்டுப் பெருமிதம் கொண்டார். ஏற்கெனவே கண்ணன் தனக்குக் குரு தக்ஷிணையாகத் தன் மகனையே அளித்ததையும், அதற்கு அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளாலும் மனம் பூரித்திருந்த சாந்தீபனி வழக்கத்துக்கு மாறாகத் தான் கண்ணனின் திருவடிகளில் விழுந்து வணங்குவதுதான் முறை என உள்ளூர எண்ணினார். இவன் சாதாரண மனிதனல்ல, கடவுளர்க்கெல்லாம் மேலான பரம்பொருள்! இவனே அனைத்து உயிரிலும் நிறைந்திருப்பவன் என்றெல்லாம் தோன்றிற்று அவருக்கு.

பலராமன் தன் கலகலப்பான பேச்சுக்களால் அனைவரையும் மகிழ்வித்தான் என்றாலும், அவன் மனம் மகிழும்படியான குறிப்பிட்ட பானம் அவனுக்கு இங்கேயெல்லாம் கிடைக்காமல் போனது மாபெரும் குறைதான். மேலும் இது குருகுலம். குருவின் ஆசிரமம். இங்கே எங்கே நமக்கு உற்சாகம் அளிக்கும் அந்தப் பானம் கிடைக்கும்? அப்போது அங்கே இரு பெண்கள் வந்தனர். அனைவருக்கும் குடிக்கக் குளிர்ந்த நீர் அளித்தார்கள். ஒரு பெண் நளினமாயும், அழகாயும், மெல்லிய உடலோடும் இருந்தாள். இன்னொரு பெண்ணோ ஆஜாநுபாகுவாய் உயரமும், பருமனுமாய், அதே சமயம் ஈடு இணையில்லா அழகோடும், பெண்மை பொங்கித் ததும்பக் காட்சி அளித்தாள். அவள் பெரிய கண்களில் குறும்பு கொப்பளித்தன. தன்னுடைய வீரப் பிரதாபங்களைப் பற்றி நகைச்சுவை ததும்பப் பேசிக்கொண்டிருந்த பலராமன் அந்தப் பெண்ணைக் கண்டதும் பேச்சை இழந்தான். தன்னை மறந்து அந்தப் பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் முகத்தில் இனங்காணாததொரு உணர்வு, அதோடு ஆச்சரியமும் கலந்து இருந்தது. ஓரக் கண்களால் இதைக் கண்ட சாந்தீபனி சிரித்தார்.

“பலராமா, இந்த மெல்லிய தேகத்தை உடைய பெண் வசந்திகா, ஸ்வேதகேதுவின் சகோதரி. இன்னொரு பெண் என்னுடைய மாணாக்கர்களிலேயே சிறந்த பயிற்சி உடைய பெண் ஆவாள். இவளுக்குத் தெரியாத ஆயுதப் பயிற்சியே இல்லை எனலாம். மேலும் எல்லாப் போட்டிகளிலும் என்னுடைய சிறந்த ஆண் மாணவர்களை இவள் ஒருத்தியே வெற்றி கொண்டிருக்கிறாள். இவள் குதிரைச் சவாரி செய்யும்போது பார்! இவளை விடச் சிறப்பாக எந்த அரசனாலும் குதிரையை நடத்த முடியாது!” என்றார். பலராமன் வாய் திறந்து எதுவும் பேசாவிட்டாலும் அவன் பார்வை அந்தப் பெண்ணின் மீதே பதிந்திருந்தது. வைத்த கண்களை எடுக்கவில்லை அவன். அவள் அங்கிருந்து மறையும்வரை அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அதைக் கண்ட கண்ணன், பலராமனுக்கு உதவும் நோக்கத்தோடு,”ஆசாரியரே, அந்தப் பெண் யார்?? ஏன் ஆயுதப் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறாள்?” என்று கேட்டான்.

கிருஷ்ணா, குழந்தாய், அவள் பெயர் ரேவதி. அவள் வாழ்க்கையே துயரம் மிகுந்த ஒன்று. குஷஸ்தலை பற்றிக் கேள்விப் பட்டிருப்பாய் அல்லவா? பிரபாச தீர்த்தத்தின் அருகே இருக்கும் நாடு. ஒரு துறைமுகம் அது. வியாபாரிகளுக்கும், வியாபாரம் செய்பவர்களுக்கும் கேந்திரஸ்தானம். பல வருடங்கள் முன்னால் புண்யாஜனா ராக்ஷஸர்கள் குஷஸ்தலைக்கு வந்தபோது அதன் மீது கடும் தாக்குதல் நடத்தினார்கள். குடிமக்களைத் தங்கள் வாளால் வெட்டிக்கொன்றார்கள். குஷஸ்தலையின் அரசன் ரேவதாகுகுட்மின் என்பவன் எப்படியோ அங்கிருந்து தப்பினான். அவனுடைய முப்பது சகோதரர்களும், ஏழு குமாரர்களும் அந்தச் சண்டையில் கொல்லப் பட்டார்கள். மேலும் அவனுடைய மனைவிமார்களின் மானம் பறிக்கப் பட்டு அவர்கள் துன்புறுத்தப்பட்டனர். ராக்ஷஸர்கள் அந்தப் பெண்களை அநுபவித்தனர். அந்தப் பெண்கள் ஒன்று தற்கொலை செய்துகொண்டனர் அல்லது ராக்ஷஸர்களால் கொல்லப் பட்டனர். தன்னுடைய பச்சிளம் பெண்குழந்தை ஒன்றோடு அவன் தன் நம்பிக்கைக்கு உரிய சில ஊழியர்களோடு தப்பினான், மலைகளில், மலைக்காடுகளில் சென்று மறைந்து கொண்டான்.”

பலராமனும் உன்னிப்பாய் இதைக் கேட்டுவந்தான். அந்த இளம் அழகான ராக்ஷசியை அவனால் மறக்க முடியவில்லை. சாந்தீபனி தொடர்ந்தார்:”ஆனால் குக்குட்மின் ஒரு கடுமையான தீர்மானத்துக்கு வந்தான். அவன் தன்னுடைய குலதெய்வமான பிரமனின் முன்னால் குஷஸ்தலையை எவ்விதமேனும் திரும்பக் கைப்பற்றுவதாய்ச் சபதம் செய்தான். அதன் பின்னர் ஒவ்வொரு இடமாய்ச்சுற்றினான். எங்கேயும் நிரந்தரமாய்த் தங்க முடியாமல் தனக்கு உதவி செய்கிறவர்கள் எவரேனும் கண்ணில் படுகின்றனரா எனப் பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் எவரும் முன்வரவில்லை. அவனுடைய உறவினர் அனைவரும் கொல்லப் பட்டனர். அவனுடன் வந்த சில ஊழியர்களுக்கு வயது ஆகிக்கொண்டிருந்தது. அவனுக்கு எந்த வழியும் புலப்படவில்லை. ஆர்யவர்த்தத்தின் தொன்மையான குடியான ஷர்யாதா என்னும் குடும்பத்தைச் சேர்ந்த குக்குட்மின்னுக்கு அவன் குலத்தில் எந்த உறவினர்களும் உதவிக்கு இல்லை. “

என்றாலும் அவன் தன் நோக்கத்திலிருந்து மாறவில்லை. தன் லக்ஷியத்தை எவ்விதமேனும் நிறைவேற்றிக் கொண்டு தன் நாட்டைத் திரும்பப் பெற நினைத்த அவனுக்கு ஒரே பற்றுக்கோல் அவனுடைய பச்சிளம் குழந்தையான அந்தப் பெண்குழந்தை ஒன்றே. அந்தக் குழந்தைக்கு ரேவதி எனப் பெயர் சூட்டினான். அவளைச் சிறு வயது முதலே மிகவும் தைரியசாலியாகவும், பலசாலியாகவும் எதற்கும் அஞ்சாதவளாயும் வளர்த்து வந்தான். இவள் மூலமே தன் லக்ஷியம் நிறைவேறும் என மனப்பூர்வமாய் எண்ணினான். கடுமையான பயிற்சிகளைக் கொடுத்து அவள் உடலை வலிமையாக்கினான். ஒரு ஆண்மகன் கூட அவ்வளவு கடுமையான பயிற்சிகளைத் தாங்கி இருப்பானா என்பதே சந்தேகம் தான். அதன் பின்னர் ஷூர்பரகா சென்று ஆசாரியர் பரசுராமரிடம் சென்று தன் மகளை ஒரு மகன் போல் எண்ணிக்கொண்டு அவளுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்குமாறு வேண்டினான். பரசுராமரால் பயிற்சி அளிக்கப் பட்ட அவளைக் கண்டு மகிழ்ந்த பரசுராமர், தற்கால நவீன ஆயுதங்களில் பயிலவேண்டுமெனில் சாந்தீபனியின் ஆசிரமத்திற்குப் போகவேண்டும் என்று சொல்லி அவளை இங்கே என்னிடம் அனுப்பி வைத்தார். தன் தந்தையோடு இங்கே வந்த ரேவதி இங்கே உள்ள அனைத்துப் பயிற்சிகளையும் முடித்துவிட்டாள். குக்குட்மின்னின் ஒரே நம்பிக்கை நக்ஷத்திரம் அவள்.” என்று முடித்தார் சாந்தீபனி.

“அவளால் குஷஸ்தலையை மீட்க முடியவில்லை எனில்?? என்ன நடக்கும்??” பலராமன் கேட்டான்.

“அப்படி நடந்தால் தந்தை, மகள் இருவருமே அக்னிப் பிரவேசம் செய்துவிடுவதாய் உறுதி பூண்டிருக்கின்றனர்.” சாந்தீபனி தெரிவித்தார்.

“கடவுளே, என் கடவுளே, என்ன தந்தை அவர்?? மிகவும் பயங்கரமான ஆசாமியாய் இருப்பார் போலிருக்கே? அவர் வேண்டுமானால் அக்னிப் பிரவேசம் செய்யட்டுமே! கூடவே மகளையும் எதற்குப் பிராணத் தியாகம் செய்யச் சொல்கிறார்?” பலராமனால் அவனை அடக்கமுடியவில்லை. சாந்தீபனியோ சிரித்துக்கொண்டே, “அவள் மிகவும் நல்ல குழந்தை. கீழ்ப்படிதலுள்ள குழந்தை. தன் தந்தையின் நோக்கத்தைப் பூரணமாய் நிறைவேற்றுவதொன்றையே தன் கடமையாகக் கொண்டிருக்கும் அபூர்வக் கதாநாயகி. குஷஸ்தலையை வென்று மீட்க முடியவில்லை எனில் இறந்து போவேன் எனச் சபதம் செய்திருக்கிறாள். ஆனால் இவர்கள் இருவராலும் மட்டுமே அது நடக்குமா என்பதே என் கவலை, சந்தேகம் எல்லாமே! இவர்களுக்குத் துணையாக யார் இருப்பார்கள்?”
கண்ணன் உடனே அரசன் குக்குட்மின்னைப் பார்த்துத் தங்கள் வந்தனங்களைத் தெரிவிக்கவேண்டுமென்று விரும்பினான். சாந்தீபனியும் அவர்களை அழைத்துச் செல்வதாயும், குக்குட்மின் சிப்ரா மலைக்குகையில் வசிப்பதாயும் கூறினார். கூடவே, குக்குட்மின் தன் அருமைப் பெண்ணைத் தவிர வேறு எவரும் தன்னைச் சந்திப்பதை விரும்பமாட்டார் என்றும் எச்சரிக்கை செய்தார்.

Tuesday, November 2, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்

ருக்மிணியின் மனம் நெகிழ்ந்தது. தன் விளையாட்டை மூட்டை கட்டி வைத்துவிட்டு, “இதோ பார், அண்ணி, நான் உன்னை என் மூத்த தமக்கை போலவே கருதி வ்ந்திருக்கிறேன். உன்னை மிகவும் நேசிக்கிறேன். நீ தான் எப்போதுமே என்னிடம் கோபமாகவும், குறை கண்டு பிடித்துக்கொண்டுமே இருக்கிறாய்!” என்றாள். “ஓஓ, உன் அதிகப் பிரசங்கித்தனமான நடவடிக்கைகள் என்னை அவ்விதம் தூண்டிவிட்டன. “ என்றாள் சுவ்ரதா. “ம்ம்ம்ம்?? அப்படியா?? என்னை நான் காப்பாற்றிக்கொள்ளவேண்டும் அல்லவா?” மீண்டும் கிண்டலாய் ஆரம்பித்த ருக்மிணி தன்னைச் சுதாரித்துக்கொண்டு, “அண்ணி, நீ எப்போதுமே ருக்மிக்குச் சாதகமாய்ப் பேசிக்கொண்டு என்னை ஒதுக்கிவிட்டதோடு, எனக்கு எதிராயும் இருந்தாய்!” என்று ஆழ்ந்த வருத்தத்தோடு கூறினாள். “அதை அவ்வாறு எண்ணாதே! நான் அவ்விதம் குறுக்கிடவில்லை எனில் உன் அண்ணன் உன்னிடம் மிக மோசமாய் நடந்து கொண்டிருப்பான். உனக்கு அவனைப் பற்றித் தெரியாதா என்ன?” என்றாள். சுவ்ரதாவின் குரலில் இருந்தே அவள் ஆத்திரமும், ருக்மியிடம் அவள் கொண்டிருந்த கசப்பும் தெரிய வந்தது.

ருக்மிணி கொஞ்சம் ஆச்சரியத்தோடே சுவ்ரதாவின் இந்த மாற்றத்தைக் கவனித்துக்கொண்டாள். “உண்மைதான் அண்ணி, நீ இல்லை எனில் ருக்மி என்னை உண்டு இல்லை என்று ஒரு வழி பண்ணி இருப்பான். என்ன இருந்தாலும், நீயும் நானும் எல்லாவிதத்திலும் ஒன்றாய்த் தான் இருக்கிறோம்.” என்று தன் கட்சிக்கு அவள் ஆதரவைத் தேடிக்கொண்டாள் ருக்மிணி. இதற்குப் பதிலாய் சுவ்ரதாவின் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன. அவள் துக்கத்தைப் புரிந்து கொண்ட ருக்மிணி, “உன் இடத்தில் அந்த மகத நாட்டுப் பெண் வந்து அமர விடுவேனா நான்?? பார்ப்போமே அதையும்! அவள் ஒரு அசிங்கமான, விகாரமான மனைவியாய்த் தான் இருக்க முடியும்! சீச்சீ! இந்த மகத நாட்டுக்காரங்க எல்லாருமே காட்டுமிராண்டிகள். இருந்திருந்து ருக்மிக்கு உன்னைப் போன்றதொரு சகலவிதத்திலும் உயர்ந்த மனைவி கிடைத்ததே தப்போனு நினைக்கிறேன். உனக்கு அவன் சிறிதும் பொருத்தமில்லை அண்ணி!” ருக்மிணியின் குரலில் மட்டுமில்லாமல் கண்களும் சுவ்ரதாவின் மேல் அன்பை வர்ஷித்தன. அவள் குரலும் மிகவும் மென்மையாகவும், மிருதுவாகவும், இனிமை பொங்கவும் அன்பு தெரியும்படியும் ஒலித்தது.

“ஓ, ருக்மிணி, உன் அண்ணனை அந்தச் சக்கரவர்த்தியின் பேத்தியைத் திருமணம் செய்து கொள்வதிலிருந்து தடுக்க உன்னால் முடியுமா என்ன?? முடியாது ருக்மிணி, முடியாது. உன் அண்ணன் எவ்வளவு ஆவலோடு இருக்கிறான், பார்த்தாயல்லவா?”
“மனதைத் தளர விடாதே அண்ணி. சீக்கிரம் இதற்கு ஒரு வழி கண்டு பிடிக்கலாம். “ ருக்மிணி, சாதுரியமாகப் பேசினாள். ஆனால் அவள் மனதில் ஏற்கெனவே ஒரு திட்டத்தைப் போட்டுவிட்டாள். அதை நிறைவேற்ற அவளுக்கு இப்போது ஒரு துணை வேண்டும். உதவி செய்பவர் தேவை. இந்நிலையில் இருக்கும் அண்ணியை விடவும் சிறந்த துணை வேறு எவராயிருக்க முடியும்?

ஆனால் சுவ்ரதாவோ மிகுந்த மனக்கசப்போடு, “ம்ஹும், எந்த வழியையும் கண்டுபிடிக்க முடியாது. நிச்சயமாய்த் தெரியும் எனக்கு. உன் அண்ணன் ஒரு மாபெரும் சக்கரவர்த்தியின் குடும்பத்துக்கு மாப்பிள்ளையாகப் போகப் போகும் இந்த அரிய சந்தர்ப்பத்தை ஒரு நாளும் தவற விடமாட்டார்.”

“ஆஹா, அண்ணி, என்னை என்னவென நினைத்துவிட்டாய்?? என்னால் முடியும். என் அண்ணன் மகத நாட்டு மாப்பிள்ளையாவது அவ்வளவு சுலபம் இல்லை. நான் சிசுபாலனைத் திருமணம் செய்து கொண்டால் அல்லவோ அவன் மகத நாட்டு மாப்பிள்ளையாக முடியும்?? சிசுபாலன் என்னைத் திருமணம் செய்து கொள்ளவில்லை எனில்??? உனக்குப் போட்டியாக இன்னொருத்தி உன் வாழ்வில் குறுக்கிட மாட்டாள்.”

“இது என்ன விந்தை?? சேதி நாட்டுக்கு அரசியாகப் பிடிக்கவில்லையா உனக்கு?” உண்மையான ஆச்சரியத்தோடு கேட்டாள் சுவ்ரதா.

“உன்னைச் சந்தோஷப் படுத்த, உனக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன் அண்ணி. அதைப் புரிந்து கொள், “ இவ்வாறு கூறிக்கொண்டே அண்ணியைத் தழுவிக்கொண்டாள் ருக்மிணி. அவள் அன்பும், ஆதரவும் அந்த அணைப்பில் தெரிந்தது. மேலும் கூறினாள்,” நான் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறேன். “

“அற்புதம், ருக்மிணி, அற்புதம், நீ அதிசயமான பெண்! உன்னை என் எதிரி என நினைத்தது என் முட்டாள் தனமே.”

ருக்மிணியின் மனதுக்குள்ளே அவள் பேசிய வேகத்தை விடவும் வேகமாய் எண்ணங்கள் ஓடின. கிருஷ்ணன் உயிருடன் இருப்பது அவளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், அந்த உயிரைக் கொடுத்தது அவள் அண்ணன் ருக்மியும், அவன் நண்பர்களும் என்பது அவள் மனதைப் புண்ணாக்கியது. அது அவளுக்குச் சிறிதும் மகிழ்வை அளிக்கவில்லை. ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். இந்த ஆண்களே இப்படித்தான். எந்த விஷயத்தில், எப்படி, எவ்விதம் ஏமாற்றுவார்கள் எனத் தெரிவதில்லை. எல்லாருமே ஒரே மாதிரியானவர்களே. கிருஷ்ணன் மட்டும் எப்படித் தனித்திருப்பான்?? எல்லா ஆண்களையும் போல் அவனும் என்னை ஏமாற்றிவிட்டான். ருக்மிணிக்கு வருத்தம் மேலோங்கியது.

மறுநாள் அவள் தன் வழக்கப்படி தன் அருமைத் தாத்தாவும், அருமை நண்பரும் ஆன கைசிகனைக் காண அவர் அரண்மனைக்குச் சென்றாள். அங்கே அவளுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. கைசிகனோடு பேசிக்கொண்டிருந்தவரை அவள் இதற்கு முன்னர் கண்டதில்லை. மிகவும் அந்தரங்கமான பேச்சு வார்த்தைகள் என்றும் தெரிந்து கொண்டாள். அவளைக் கண்டதுமே கைசிகனின் முகம் பிரகாசமடைந்தது. சந்தோஷமாய்ச் சிரித்தவண்ணம் அவளைத் தன் அருகே வந்து அமரச் சொன்னார் கைசிகன். புதிய மனிதர் பார்க்கக் கம்பீரமாய்க் காட்சி அளித்தாலும் இளவயதினராகவே இருந்தார். ருக்மிணிக்குத் தன் வணக்கங்களைச் சமர்ப்பித்தார். “ருக்மிணி, இவர் யார் தெரியுமா?” கைசிகன் கேட்டார். ருக்மிணி தெரியாதெனத் தலையசைத்தாள். “இவர் ஆசார்ய ஸ்வேதகேது. குரு சாந்தீபனியின் முதன்மைச் சீடர் ஆவார். மேலும் அவந்தி நாட்டின் இளவரசர்கள் ஆன விந்தனுக்கும், அநுவிந்தனுக்கும் பாடம் கற்பித்தார். அநுவிந்தனின் நெருங்கிய நட்புக்கு உரியவர். “

“ஓஹோ!” ருக்மிணியின் குரலில் ஒரு விசித்திரம் தென்பட்டது.

கொஞ்சம் கபடமாய்ச் சிரித்துக்கொண்டே கைசிகன், “இவன் உத்தவனின் நண்பனும் கூட!” என்று இழுத்தவண்ணம் கூறியவர், ருக்மிணியின் முகத்தைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே, “மேலும், மேலும்…….. கிருஷ்ண வாசுதேவனுக்கும் நெருங்கிய நண்பர்!” என்று முடித்தார்.
“ஓ” ருக்மிணி இப்போது கொஞ்சம் கவனமாய்க் கேட்க ஆரம்பித்தாள்.
இவர் கரவீரபுரத்திலிருந்து கிருஷ்ண வாசுதேவன் அனுப்பி வந்திருக்கிறார்.”

“கிருஷ்ண வாசுதேவர் எப்படி இருக்கிறார்?” ருக்மிணியால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை. இப்போது கைசிகனுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. பெரிதாய்ச் சிரித்துக்கொண்டே தன் பேத்தியைப் பார்த்து, பயமுறுத்துவது போல் சுட்டுவிரலை ஆட்டியவண்ணம், “விதர்ப்ப தேசத்தின் ராஜகுமாரி , அதுவும் திருமணமாகாத ஓர் இளம்பெண், ஒரு மாட்டிடையனைப் பற்றி இவ்விதம் கவலைப்படுவதும், விசாரிப்பதும் அழகா? சரியா? அல்ல, அல்ல!” என்றான்.

“ஓஓ, பாட்டனாரே, என்னைக் கேலி செய்வதை நிறுத்துங்களேன்!” பாதி கொஞ்சலாகவும், மீதி கெஞ்சலாகவும் வேண்டினாள் ருக்மிணி. “நான் கிருஷ்ண வாசுதேவனைப் பற்றி எல்லாச் செய்திகளையும் கேட்டுத் தெரிந்து கொள்கிறேனே!” என்றாள்.

அதன் பேரில் ஸ்வேதகேது கோமந்தக மலையில் கிருஷ்ணன் கழித்த நாட்களையும், ஜராசந்தனும், அவன் ஆட்களும் கிருஷ்ணனை வேட்டையாட வந்தபோது நடந்த நிகழ்ச்சிகளையும், கடைசியில் கண்ணனால் மன்னிக்கப்பட்டு, உயிர்ப்பிச்சை அளிக்கப் பட்டு ஜராசந்தன் தப்ப வைக்கப் பட்டதையும், இதற்கு தாமகோஷன் மறைமுகக் காரணமாய் அமைந்ததையும் விளக்கமாய்க் கூறினான். அதன் பின்னர் கரவீரபுரத்து நிகழ்வுகளையும் ஸ்ரீகாலவன் கொல்லப் பட்டதையும், அனைத்து ஆசாரியர்கள், ரிஷி, முனிவர்கள் விடுவிக்கப் பட்டு கரவீரபுரத்தில் நல்லாட்சி நிறுவப் பட்டதையும் கூறினான். கைசிகனிடம் இதை எல்லாம் தெரிவிக்க வேண்டிக் கண்ணனால் தான் அனுப்பப் பட்டதாயும் கூறினான்.
ஆஹா, கதைகளிலும், காவியங்களிலும் வர்ணிக்கப் படும் வீரம் மிகுந்த கதாநாயகனுக்கு ஒப்பானதொரு சாகசத்தையும், வீரத்தையும் கண்ணன் அநாயாசமாயும், எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களும் ஆரவாரமும் இல்லாமல் காட்டி இருக்கிறானே! ருக்மிணியின் கண்கள் விரிந்தன. அவள் வியப்பு மாறவே இல்லை. அவள் இதயம் வெற்றி கீதத்தைப் பாட ஆரம்பித்தது.

கடைசியில் அவளுடைய கதாநாயகன் உண்மையிலேயே ஒரு பெரிய மாவீரன் மட்டுமல்லாமல் அதிசயிக்கத் தக்க நிகழ்ச்சிகளை அநாயாசமாய் நடத்தி வைக்கும் வல்லமையும் பெற்றிருக்கிறான். அவனைக் கடவுளா என எல்லாரும் சந்தேகிக்கின்றனரே! அவன் கடவுளே தான். இவ்வுலகில் உள்ள மக்களுக்கு வாழ்க்கையைப் பற்றியும், வாழவேண்டிய நெறிமுறைகள் பற்றியும் எடுத்துரைக்கப் பிறந்திருக்கிறான். ஷாயிபாவை அவன் எவ்விதம் சமாளித்தான் என்பதையும், கண்ணனின் பெருந்தன்மையான போக்கையும் அறிந்த ருக்மிணிக்குக் கண்களில் இருந்து கண்ணீர் வருவதைத் தடுக்க முடியவில்லை.
கைசிகனோ, எந்தக் கதையிலும், காவியத்திலும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைத் தான் படித்ததுமில்லை, கண்டதுமில்லை, கேட்டதுமில்லை என்றதோடு, “எவராலும் வெல்லமுடியாது என்று பெருமை அடித்துக்கொண்டிருந்த ஜராசந்தன் , இரு இளைஞர்களிடம், அதுவும் எந்தவிதமான பாதுகாப்பும், துணையும், ஆயுதபலங்களும் இல்லாதவர்களிடம் தோற்றுப் போய் உயிர்ப் பிச்சை அளிக்கப் பட்டு ஓடி வந்திருக்கின்றான்.

ஆஹா, இது ஆர்யவர்த்தத்துக்கே பெருமை அளிக்கக் கூடியதொரு செயலன்றோ?? சரித்திரத்தில் என்றென்றும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டிய சாகசமன்றோ? ஜராசந்தன் முப்பது வருடங்களுக்கும் மேல் கட்டிய இந்த சாம்ராஜ்யம், ஒரே நாளில் மண்ணோடு மண்ணாகி விட்டது. கேள் ருக்மிணி, நீ பிறக்கும் முன்னர் ஜராசந்தனால் நம் படைகளும், நாடும் நாசமாக்கப் பட்டது. நம் அருமை விதர்ப்பம் ஒரு அடிமை நாட்டைப் போல் நடத்தப்பட்டது. நானும், என் குடிமக்களும் ஜராசந்தனின் மகத சாம்ராஜ்யத்தின் அடிமைகள் என்பதைச் சொல்லாமல் சொன்னான். என் மனம் நொந்து போய் நான் அரியணையை விட்டுக்கீழே இறங்கி, உன் தகப்பனிடம் ஆட்சியை ஒப்படைத்தேன். இன்று தான் என் மனம் நிம்மதி அடைந்தது. என்னுடைய அவமானத்துக்குப் பழிவாங்கப் பட்டது. உத்தவன் சொல்வது போல், நினைப்பது போல் அந்தக் கிருஷ்ண வாசுதேவன் சாதாரண மனிதனே அல்ல. நிச்சயமாய்க் கடவுளே தான் அவன்!”

“ஷாயிபாவை எப்படி வசப்படுத்தினான் என்பதை என்னால் மறக்கவே முடியவில்லை. “ ஸ்வேதகேது கூறினான். “ஓ, அவன் கடவுள் தான், முட்டாள்தனமாய் நான் நம்பிக்கொண்டிருந்த ஸ்ரீகாலவனைப் போன்ற கடவுள் அல்ல, உண்மையாகவே கிருஷ்ண வாசுதேவன் கடவுள் தான். ஆனால் அவனுக்குத் தான் அது தெரியவில்லை. “
“ம்ம்ம்ம்ம்ம்ம், என்ன இருந்தென்ன?? அவன் ஒரு அரசனாகவோ, அல்லது ஒரு நாட்டின் இளவரசனாகவோ இருந்திருக்கலாம் என்றே நான் நினைக்கிறேன். அவன் அவ்வாறு இருந்திருக்கவேண்டும் என என் மனம் விரும்புகிறது!” நீண்டதொரு பெருமூச்சுடன் ருக்மிணி கூறினாள்.

“ஆமாம், ஆமாம், அப்போது தானே அவன் உன்னுடைய சுயம்வரத்துக்கு அழைக்கப் படுவான்!” கைசிகன் ஒரு சிரிப்போடு கூறினான். “குழந்தாய், அந்த மாடு மேய்க்கும் இடைச்சிறுவனைப் பற்றியெல்லாம் நினைக்காதே! நீ ஒரு அரசகுமாரி. உனக்குத் தகுந்த மணமகனாக இன்னொரு அரசனோ, அல்லது இளவரசனோ தான் இருக்க முடியும்.”
ருக்மிணியின் மனம் வேதனை அடைந்தது. தன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருக்கப் பாடுபட்டாள். கஷ்டப் பட்டு சம்பாஷணையை வேறு திக்கில் திருப்பினாள். “ஆசாரியரே, இன்னொரு முறை ருக்மியை கிருஷ்ண வாசுதேவன் போரில் நடத்திய விதம் பற்றிக் கூறுங்கள். நான் எல்லாவற்றையும் அவனிடம் கூறுகிறேன்.” என்றாள். ருக்மிணி பேசும்போதே கனவுலகிலிருந்து பேசுவது போல் தோன்றினாள். அவள் கண்ணெதிரே கண்ணனின் அந்தக் கருநீல நிற வடிவம் தோன்றியது. ஒரு போர்வீரனைப் போல் உடை தரித்திருந்தான். ருக்மியை அடக்குகிறான்; ஜராசந்தனைக் காப்பாற்றித் தப்பி ஓட வைக்கிறான்; ஸ்ரீகாலவனைக் கொன்று அழிக்கிறான்; ரிஷி, முனிவர்களைக் காக்கிறான்; ஷாயிபாவைச் சமாதானம் செய்து தன் தாயிடம் அனுப்பி வைக்கிறான். என்றாலும் ஷாயிபாவை நினைக்கும்போதே ருக்மிணியின் மனதில் அவள் மேல் பொறாமை தோன்றியது.

தினந்தோறும் அவளால் கண்ணனைப் பார்க்க முடியும். அவனுடைய மந்தகாசச் சிரிப்பைக் காணமுடியும். கண்ணனோடு பேசமுடியும். ஆனால் எனக்கு?? என்னால் அவனைக் காண முடியாது, அவன் சிரிப்பைப் ப்பார்க்க முடியும். என்றாலும் நான் அவனைத் தினமும் காண்கிறேனே. இரவும், பகலும், ஒவ்வொரு நிமிடமும் அவன் என்னோடு இருப்பதை உணர்கிறேன். ம்ஹும், அவன் ஒரு இடைச்சிறுவனாமே! இருந்திருந்து ஷூரர்களின் தலைவனான வசுதேவனின் குமாரன் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் நான் ஒரு நாட்டின் அரசகுமாரி. அவன் எவ்வளவு அற்புதமானவனாக இருந்தாலும், வீரனாக இருந்தாலும், அன்புள்ளம் படைத்தவனாக இருந்தாலும், நான் ஒரு அரசனின் குமாரி. அவனை நான் மணந்து கொள்வது பற்றிக் கனவு கூடக் காண முடியாதே! மேலும் என்னைத் தான் என் சம்மதம் கேட்காமலேயே சேதிநாட்டு இளவரசன் சிசுபாலனுக்கு என நிச்சயம் செய்திருக்கிறார்களே! ம்ம்ம்ம்., அவள் திருமணம் செய்துகொள்ளவென சுயம்வரம் ஏற்பாடு செய்யப் போகின்றனர். ஆனால் அதில் அரசகுமாரர்களும், அரசர்களும் மட்டுமே அதுவும் ஜராசந்தனால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.

பின் என்ன?? ஜராசந்தன் இஷ்டப் படியே ஒரு நாடகம் நடந்து முடியும். சிசுபாலனால் குறிப்பிடப் பட்டதொரு வீரச் செயல் ஏதேனும் நடத்தி முடிக்கப் பட்டு அனைவரும் ஆச்சரியமடைவார்கள். வேறு யாரும் அதை வெல்ல முடியாதபடிக்கு ஜராசந்தன் பார்த்துக்கொள்வான். அனைத்து அரசர்களும், அரசகுமாரர்களும் அதற்கு ஒத்து இசைந்து போவார்கள். சிசுபாலன் வெற்றி பெற்றதாய் அறிவிக்கப் பட்டு அவளைக் குதிரைச் சந்தையில் பிடித்த பெண்குதிரையாக நினைத்துக்கொண்டு அழைத்துச் சென்றுவிடுவான். “சீச்சீ, நான் ஏன் ஒரு அரசகுமாரியாகப் பிறந்தேன்?? நானும் ஓர் இடைச்சிறுமியாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்??” மனம் நொந்தாள் ருக்மிணி.
ஜராசந்தனும் மற்ற அரசர்கள், அரசகுமாரர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். ஆனால் ஸ்வேதகேது மட்டும் குண்டினாபுரத்திலேயே தங்கினான்.

கைசிகன் குண்டினாபுரத்தில் படைத்தலைவர்களை ஸ்வேதகேதுவிடம் ஆயுதப் பயிற்சி எடுத்துக்கொள்ள வைத்தார். சாந்தீபனி போன்ற தேர்ந்த ஒரு குருவின் முதன்மைச் சீடனான ஸ்வேதகேதுவின் பயிற்சி தன் நாட்டு வீரர்களுக்கு அவசியம் என்பதை உணர்ந்தார். பீஷ்மகனும், ருக்மியும் கூட இதற்கு ஆக்ஷேபணை தெரிவிக்கவில்லை. ருக்மிணி ஆசாரியன் ஸ்வேதகேதுவை தன் அண்ணியான சுவ்ரதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். ஸ்வேதகேதுவின் மூலம் நடந்த விஷயங்களை அறிந்து கொண்ட சுவ்ரதாவால் அவளை அடக்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு நாள் ருக்மி தன் வீர தீரப் பிரதாபங்களை அவளிடம் நூற்றி எட்டாவது முறையாக சொல்லிக் கொண்டிருந்தபோது, அவள் பட்டென்று தன் கணவனைப் பார்த்து, அவன் பொய் சொல்வதைத் தான் அறிந்து விட்டதாயும், உண்மையில் கிருஷ்ணனால் அவர்கள் உயிர் பிழைத்து வந்ததையும், கிருஷ்ணனுக்கு அவர்கள் அனைவருமே கடமைப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டவே, ருக்மிக்குக் கோபம் மேலோங்கியது. இருவருக்கும் மாபெரும் வாக்குவாதம் நடந்தது.

சுவ்ரதா சளைக்கவில்லை. கிருஷ்ணனிடம் நன்றி பாராட்டாத ருக்மி அவன் எதிரியான ஜராசந்தனின் பேத்தியை மணக்க இருப்பதைத் தன்னால் ஒத்துக்கொள்ள முடியாது என்று சொன்னாள். அவள் கேள்விகளும், அவளின் தீர்மானங்களும் சாட்டையடியாக விழுந்தன ருக்மிக்கு. ருக்மி இனி அவளுடன் தான் எப்போதுமே பேசப் போவதில்லை என்று கோபமாய்க் கூறிவிட்டு வெளியே செல்ல சுவ்ரதாவும் அதை ஆமோதித்தாள். தானும் ருக்மியிடம் பேச இஷ்டப் படவில்லை என்று அறிவித்தாள்.

மெல்ல மெல்ல அனைவருக்கும் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பரவ ஆரம்பித்தன. கோமந்தக மலையில் நடந்ததும், கரவீர புரத்தில் நடந்ததும், அங்கே இருந்த சில வியாபாரிகள், புனித யாத்ரீகர்கள், ஊருக்கு ஊர் சென்று பாடம் கற்பிக்கும் ஆசிரியப் பெருமக்கள், சிற்றரசர்களின் தூதுவர்கள், ஊர் சுற்றிப் பார்க்கச் சென்று மேற்கண்ட நிகழ்ச்சிகளில் அவர்களையும் அறியாமல் பங்கு பெற்றவர்கள் என ஒவ்வொருவராய் கண்ணனின் சாகசங்களை எல்லாம் ஒரு கதை போல் எடுத்துச் சொன்னார்கள். உண்மையாகவே வாசுதேவன் உதயமாகிவிட்டான். இவன் அந்தப் பரவாசுதேவன் அல்லாமல் வேறு எவரும் இல்லை. பல கொடுமைகளுக்கும் ஆளான யாதவர்களை மீட்டுவிட்டான்.; காட்டுவாசிகளான கருட இனத்தவர்களைத் தன் வசப்படுத்திக்கொண்டுவிட்டான்; எல்லாவற்றுக்கும் மேல் கடலரசனையே தன் உத்தரவுக்கு அடி பணிய வைத்தான்; கோமந்தக மலைத் தொடர்களை இதன் மூலம் காப்பாற்றினான்; எவராலும் வெல்லமுடியாதவன் எனப் பெயர் பெற்ற ஜராசந்தனைத் தன் உயிருக்குப் பயந்து ஓட வைத்தான்; கரவீரபுரத்தின் கொடுங்கோல் அரசனான ஸ்ரீகாலவ வாசுதேவனை அழித்துவிட்டு, அவனால் கொடுமையான நரகம் போன்ற சிறையில் தள்ளப் பட்டிருந்த ஆசாரியர்களை விடுவித்துவிட்டான். ஒவ்வொருத்தர் வாய் மூலமும் பரவிய இந்தச் செய்திகளானது, நாளாக, நாளாக கூட இன்னமும் சில அதிசயங்களைச் சேர்த்துக்கொண்டு காட்டுத் தீயைப் போல நகரங்களுக்கும், நாடுகளுக்கும், ரிஷிகளின் ஆசிரமங்களிலும் பேசப்பட்டு மதுரா வரைக்கும் சென்றது. இதைப் போன்ற நூற்றுக்கணக்கான விதங்களில் இந்தக் கதை பேசப்பட்டுக் குண்டினாபுரத்தின் பட்டத்து இளவரசன் கண்ணனிடம் தோற்றான் என்ற செய்தி குண்டினாபுரத்தின் மக்கள் வாய் மூலம் எங்கும் பேசப்பட்டது.

குண்டினாபுரத்தின் அரண்மனைக்கும், அந்தப்புரத்துக்கும் இந்தச் செய்தி கிட்ட ருக்மிணி சந்தோஷத்தில் என்ன செய்வது எனப் புரியாமல் ஆடிப்பாடினாள். அவள் மனம் இப்போது ஒரு காவிய நாயகனிடமோ, ஒரு அரசனிடமோ செல்லவில்லை. அனைவராலும் கடவுளாய் மதிக்கப் படும் ஒருவனிடம் சென்றுவிட்டது. ஸ்வேதகேதுவைத் திரும்பத் திரும்பக் கண்ணனின் அற்புத சாகசங்களைக் கூற வைத்துக் கேட்ட அவள், தான் மட்டுமல்லாமல் கண்ணனின் நண்பர்களும் அவனை மிகவும் நேசிப்பதை உணர்ந்தாள்.
ருக்மிணிக்கு மீண்டும் தான் அரசகுமாரியாய்ப் பிறந்திருப்பதை எண்ணி எண்ணி மனம் வேதனைப்பட்டது. இந்தத் திரிவக்ரை எவ்வளவு சுலபமாய்க் கண்ணனோடு பேச முடிகிறது. நானும் அவளைப் போன்றதொரு சாமானியப் பெண்ணாய் இருந்தால்?? ம்ம்ம்??? ஓர் இடைப்பெண்ணாய் இருந்தால்??? அவளை அறியாமலேயே அரண்மனைக்கு அருகே இருந்த கோசாலையில் அவள் பார்வை பதிந்தது. அங்கிருந்த பசுக்களிடம், ஓர் இடைப்பெண், அதுவும் இடையனுக்கு நிச்சயிக்கப் பட்ட மணப்பெண் எப்படி நடந்து கொள்வாள்? என்று கேட்டாள் ருக்மிணி.

ருக்மிணியின் மனச் சஞ்சலங்களை அறியாதவன் போலவே ருக்மி சிசுபாலனைக் கண்டு சுயம்வரத்திற்கு அழைக்கத் தானே நேரில் சென்றான். ருக்மிணிக்கு அவன் செல்லும் காரணம் தெரியும். அவன் திரும்பியதுமே அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசர்களுக்கும், அரசகுமாரர்களுக்கும், சுயம்வரத்தில் பங்கு பெற அழைப்புச் சென்றது. சுயம்வரம் எந்த மாதத்தில் பெளர்ணமி திதியும் மிருகசீர்ஷ நக்ஷத்திரமும் சேரும் நாள் வருமோ அன்றைய தினமாய்ப் பார்த்து நிச்சயிக்கப் பட்டிருந்தது. ருக்மிணிக்குத் திடீரென ஒரு யோசனை தோன்றியது. மிகவும் துணிச்சலாயும், திறமையுடனும் அந்தத் திட்டத்தைப் பற்றி யோசித்தாள் ருக்மிணி.

ருக்மி திரும்பியதும், அவனை படைத்தலைவர்களும், அமைச்சர்களும், மற்ற ஊர்ப் பெரியவர்களும், தன் தகப்பனும் நிறைந்த சபையில் அவமதித்தாள் ருக்மிணி. தன் அண்ணனை ஒரு கோழை என்றும், ஜராசந்தனின் கைகளில் உருட்டப் படும் பகடைக்காய் எனவும் பரிகசித்தாள். தன்னைச் சேதி நாட்டு அரசகுமாரனுக்குப் பேசியதன் மூலம், தனக்கு ஆதாயமாக ஜராசந்தனின் பேத்தியை மணந்து கொள்ள ருக்மி பேரம் பேசி முடித்திருப்பதாயும், தன் திருமணத்தை ஒரு வியாபாரமாக்கி விட்டதாயும் குறை கூறினாள். புயலைப் போல் அந்த சபையில் பிரவேசித்த ருக்மிணி அனைத்தையும் கூறிவிட்டு எரிமலையைப் போல் பொங்கினாள். கண்ணீரும் விட்டாள். பின்னர் தன்னை சிசுபாலனை மணந்து கொள்ளும்படி ருக்மி வற்புறுத்தினால் தற்கொலை செய்து கொள்வதாய்ப் பயமுறுத்தினாள். ஆனால் அவள் குரலில் உறுதி தெரிந்தது. மேலும் ஸ்வேதகேதுவிடம் பேசி ஆலோசனைகள் கேட்டுக்கொண்டு, அந்தப்புரத்தின் ஒரு பாகத்தின் தன்னைத் தானே சிறைப்படுத்திக்கொண்டு தனிமையில் இருந்தாள். எவரையும் காண மறுத்தாள்.

ம்ம்ம்ம், நான் ஒரு இடைச்சிறுமியாக இருந்திருந்தால் கண்ணனை மணந்துகொண்டு நானும் ஒரு கடவுளாக ஆகியிருப்பேனே?? எப்படி முடியும்?? கடவுளே எப்படி??” சில நாட்கள் கழித்து ஸ்வேதகேது ஏற்கெனவே தனக்கென நிச்சயிக்கப்பட்ட ஷாயிபாவைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாய்ச் சொல்லிவிட்டு மதுராவுக்குக் கிளம்பினான். ஆனால் இதில் பாதி உண்மைதான் இருந்தது. என்னதான் ஷாயிபாவை ஸ்வேதகேதுவால் மறக்க முடியவில்லை என்றாலும் தயக்கமும் இருந்தது அவனுக்கு. மேலும் இங்கே, ருக்மியின் திட்டமும், அதை எதிர்த்து ருக்மிணியின் பிடிவாதமும் முதலில் குண்டினாபுரம் முழுதும் பரவிப் பின்னர் விதர்ப்ப நாடு முழுவதும் இதே பேச்சு. இளவரசன் ருக்மி தன் அருமைத் தங்கையை சிசுபாலனைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகிறானாமே?? அதுவும் அவன் ஜராசந்தனின் பேத்தியை மணக்கவேண்டும் என்பதற்காகவாம். ருக்மிணிக்குப் பிடிக்கவில்லையாம் இது, அதனால் ருக்மி அவளைச் சிறையில் தள்ளி விட்டானாம். ஏற்கெனவே கைசிகனின் ஆட்சியில் ஜராசந்தனின் கொடுமைகளை அநுபவித்திருந்த விதர்ப்ப மக்களுக்கு அவன் பேரில் அப்படி ஒன்றும் மதிப்போ, பயமோ இல்லை. ஆகவே ருக்மி இப்போது செய்வதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்தப் பிரசாரத்தால் மனம் நொந்த ருக்மி தான் தன் தங்கையைச் சிறையில் தள்ளவில்லை என்று மக்களிடம் பிரசாரம் செய்வதற்கெனத் தனியாக ஆட்களை நியமிக்கவேண்டி வந்தது.