Friday, November 27, 2015

சாத்யகன் பெருமை! சத்ராஜித் சிறுமை!

“உன்னுடைய இந்தக் கோரிக்கைக்கு அவன் என்ன பதில் சொன்னான்?” உக்ரசேனர் கேட்டார். “அரசே, சத்ராஜித் இவ்வாறு பதில் கூறினார்:”இந்த ச்யமந்தகமணிமாலை சூரியதேவனால் எனக்கு அளிக்கப்பட்டது. என் நன்மைக்காகவும், என் குடும்ப நன்மைக்காகவுமே இது அளிக்கப்பட்டது. இதை நான் ஒருக்காலும் பிரிய மாட்டேன்.” என்று கூறினார். பின்னர் நான் கூறினேன், “மேற்கண்ட பேரங்களை எல்லாம் விட்டுவிடுவோம். உங்கள் சொந்த நன்மைக்காக நீங்கள் ச்யமந்தக மணிமாலையை அக்ரூரரிடம் கொடுத்துத் தான் ஆகவேண்டும்.” என்றேன். அதற்கு அவர் மிகக் கோபம் கொண்டார். ஆனால் எனக்குச் சிறிதும் கவலையோ, பயமோ ஏற்படவில்லை. அவரின் கோபத்தை நான் ரசிக்கவே செய்தேன். அவர் எந்த நிமிடமும் என்னைத் தாக்கும் மனோநிலையில் இருந்தார்; அதை நான் கவனிக்கவே இல்லை. அவர் ஆசனத்திலிருந்து குதித்து எழுந்ததும், நான் அவரிடமிருந்து ச்யமந்தகமணிமாலையைப் பிடுங்கப் போகிறேன் என எண்ணி அவர் மிக எரிச்சல் அடைந்தார். ஆகவே உடனடியாகத் தன் கைகளை என் தோள்களின் மேல் வைத்து என்னை ஆசனத்திலே அப்படியே பின்னால் அழுத்தினார். அப்படியே அழுத்தியவண்ணம் என் கழுத்தை நெரிக்க முயன்றிருக்கலாம். அது அவர் எண்ணமாக இருந்திருக்கலாம். நான் அவர் என்ன தான் செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்தேன். அவரைத் திரும்பத் தாக்கவேண்டும் என்னும் என் எண்ணத்தை மிகக் கஷ்டத்தோடு அடக்கிக் கொண்டு காத்திருந்தேன். என்னைக் காத்துக்கொள்ளவும் முயலவில்லை!”

“இம்மாதிரியான கீழ்த்தரமான நடவடிக்கைகளுக்கு ஏன் பேசாமல் இருந்தாய் கிருஷ்ணா? ஒரே குத்தில், ஒரே அடியில் நீ அவனை வீழ்த்தி இருக்கலாம் அல்லவா?” என்று உக்ரசேனர் கேட்டார்.

“அவர் கோபமும், ஆங்காரமும் இன்னும் எவ்வளவு தூரம் போகிறது என்பதைப் பார்க்க விரும்பினேன்.” என்றான் கிருஷ்ணன். கிருஷ்ணனைப் பெருமிதம் பொங்கப் பார்த்தார் சாத்யகர். பின்னர், “ கோவிந்தா, நீ இத்தனை கடினமான வேலையில் இறங்கி இருக்கக் கூடாது. உன் உயிருக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலையில் நீ தனியாகவும் அங்கே சென்றிருக்கக் கூடாது. என் நிலையை நீ நியாயப்படுத்தி இருக்கவும் தேவை இல்லை. சத்ராஜித் ஒருக்காலும் என்னை மன்னிக்கமாட்டான். அவன் பெண்ணை நான் மருமகளாக ஏற்க மறுத்ததோடு அல்லாமல் இங்குள்ள யாதவர்கள் அனைவரையும் தங்கள் சொத்திலிருந்து பங்கைக் கொடுக்கச் செய்ததும் நான் தான் அல்லவா? அதன் மூலம் இப்போது அவன் தன்னுடைய பங்கைக் கொடுக்க வேண்டிச் சொத்தைப் பிரியவேண்டி நேரும் அல்லவா?”

“நீங்கள் சொத்தை மட்டும் பிரியவில்லை சித்தப்பா சாத்யகரே! அதற்கும் மேல் நீங்கள் அவனுக்குப் பாடம் புகட்டி இருக்கிறீர்கள். ஒரு மனிதனின் பெருந்தன்மையும், எதையும் விட்டுக் கொடுக்கும் போக்கும், தர்மத்திற்காக எதையும் தியாகம் செய்யும் மனப்பான்மையுமே அவனை மனிதரில் சிறந்தவனாக ஆக்குகிறது என்பதைப் புரிய வைத்து விட்டீர்கள்!” என்றான் கிருஷ்ணன்.

“நான் அப்படி எல்லாம் நினைத்து எதையும் செய்யவில்லை, கோவிந்தா!” என்று அவையடக்கத்துடன் சொன்ன சாத்யகர், “நான் தர்மம் என்னவோ அதைக் கைவிடாமல் பின்பற்ற நினைக்கிறேன். எனக்குத் தெரிந்தவரை பின்பற்றுகிறேன். நீ எங்கள் சார்பில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற எங்கள் உயிரைக் கூடக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.”

“பிரியமான சித்தப்பா, உங்கள் பெருந்தன்மை மட்டும் இல்லை என்றால் பாண்டவர்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதியைச் சிறிதும் நிறைவேற்றி இருக்க இயலாது. உங்களிடம் இருந்த அனைத்தையும் அல்லவோ கொடுத்திருக்கிறீர்கள்!” என்று கிருஷ்ணன் மிகுந்த விநயத்துடன் சொன்னான். “ஆனால், கோவிந்தா, நீ எனக்காக சத்ராஜித்துடன் சண்டை போட்டிருக்கக் கூடாது! அதைத் தவிர்த்திருக்கலாம்.” என்றார் சாத்யகி.

“ஐயா, அது சத்ராஜித் அவர்களோடு உங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட சண்டை எதுவும் இல்லை! அது என்னுடனான சண்டையே! அல்லது சத்ராஜித் தர்மத்திற்கு எதிராகச் செயல்படுவதை எதிர்த்துச் செய்யும் போர் என்றும் சொல்லலாம்.” என்றான் கிருஷ்ணன்.

“ஆனால் இதன்மூலம் நீ என்னை ஒரு தர்மசங்கடமான நிலையில் கொண்டு விட்டிருக்கிறாயே, கிருஷ்ணா! அவன், அதாவது சத்ராஜித் ச்யமந்தகமணிமாலையைப் பிரியும் பட்சத்தில் நான் அவன் மகளை எனக்கு மருமகளாக ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். யுயுதானா சாத்யகியின் மனைவியாக ஆக்க வேண்டும். ஆனால், அந்த இளம்பெண்ணோ! உயர்குடிப் பிறப்புக்கு உரிய லட்சணங்கள் ஏதும் இல்லாமல், அவற்றைப் பின்பற்றாமல், அவற்றைப் பொருட்படுத்தாமல் செல்வச் செழிப்பில் அலட்சியமாக வளர்ந்தவள். அவளுக்கு என் மகன் மூலம் பிறக்கும் என் பேரக்குழந்தைகள் பின்னர் க்ஷத்திரிய தர்மம் என்றால் என்ன என்பதையே மறந்துவிடுவார்கள். அப்படிப்பட்ட பேரக்குழந்தைகள் எனக்கு வேண்டாம்! என் முன்னோர்களின் ஆசிகளும் எனக்கும், என் குடும்பத்துக்கும் கிடைக்காது!”

“ஆஹா, என்னை மிக மிக மன்னியுங்கள் சித்தப்பா அவர்களே!” என்ற வண்ணம் கிருஷ்ணன் மன்னிப்புக் கேட்கும் பாவனையில் சாத்யகியைப் பார்த்துத் தன்னிரு கரங்களையும் கூப்பினான். “ஆனால் சத்ராஜித் ச்யமந்தகமணிமாலையைப் பிரியவே மாட்டான் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்!” என்றும் கூறினான்.

“ஒருவேளை அவன் அதைப் பிரிந்துவிட்டான் எனில்? பின்னர் என்ன செய்வது?” சாத்யகிக்குக் கவலை வந்தது. “அப்படி எனில் அவன் மீண்டும் புதிதாய்த் தான் பிறக்கவேண்டும் ஐயா! அப்போது தான் அது நடக்கும். அவருடைய சுயநலத்துக்காகவும், அகந்தைக்காகவும், தற்பெருமைக்காகவும் அவர் சேர்த்த பொருட்கள் அனைத்தையும் பிரிவதன் மூலமாக அவர் தன்னைத் தானே புனிதப் படுத்திக் கொள்ளலாம் அல்லவா?” என்றான் கிருஷ்ணன். பின்னர் உக்ரசேனரைப் பார்த்து ஒரு புன்னகையுடன், “உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், பிரபுவே! யுயுதானா சாத்யகியை சத்ராஜித்தின் மகளை மணம் செய்து கொள்ளச் சம்மதிக்கச் சொல்லுங்கள். அப்போதாவது அவள் தந்தை தான் செய்த பாவங்களிலிருந்து விடுதலை பெறட்டும். இது தான் அவர் செய்த பாவங்களுக்குச் சமன் செய்யும் ஒரே விஷயமாகவும் இருக்கும்.”

பலராமனுக்குப் பொறுமை போய்க் கொண்டிருந்தது. “இந்த விஷயங்களைப் பேசுவதனால் என்ன பலன் ஏற்படப் போகிறது? இப்போது எதற்கு இந்தத் தேவையற்ற விஷயங்களைப் பேச வேண்டும்? கோவிந்தா, உன்னைக் கொலை செய்யும் அளவுக்குத் தாக்கிய சத்ராஜித்தை நான் நொறுக்கித் தூள் தூளாக்கப் போகிறேன்.”என்றான். அவனைப் பார்த்துத் தன் காந்தக் குரலில்கிருஷ்ணன் சொன்னான்.” அண்ணா, தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள். என்னிடம் நீங்கள் வைத்திருக்கும் அளப்பரிய அன்பினால் தான் உங்களால் சத்ராஜித் என்னிடம் நடந்து கொண்ட முறையைப் பொறுக்க முடியாமல் அவரைத் தாக்கவேண்டும் என நினைக்க வைக்கிறது. அதை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் தாற்காலிகமாக உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தி வையுங்கள். இதை நான் மிகவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நானே அவனை என் முறையில் பார்த்துக் கொள்கிறேன்.”

“கோவிந்தா, சத்ராஜித்துக்கும் அவன் நண்பர்களுக்கும் யாதவர்கள் நீதி, நியாயம் செய்வதில் மோசமானவர்கள் அல்ல என்பதைப் புரிய வைக்கவேண்டும்!” என்று சாத்யகி கூறினார்.

“ஆமாம், சித்தப்பா! நீங்கள் சொல்வது சரியே! ஒரே அடியில் என்னால் சத்ராஜித்தை வீழ்த்தி இருக்க முடியும் தான்! அவ்வளவு ஏன்? அவரைக் கொன்றிருக்கவும் முடியும். ஆனால் நான் சத்ராஜித் என்னும் தனி மனிதனோடு போராட விரும்பவில்லை. அவர் அகந்தையைத் தான் அழிக்க நினைக்கிறேன். அவர் கொடுங்கோலராக இருப்பதால் நானும் ஒரு கொடுங்கோலனாக இருக்கவும் விரும்பவில்லை.” என்றவன் திரும்பி உக்ரசேனரைப் பார்த்து, “ என்னை அவர் தாக்கியபோது அவர் மகள் வந்து குறுக்கிட்டாள், பிரபுவே! அப்போது நீங்கள் அவர் முகத்தைப் பார்த்திருக்க வேண்டுமே! அவர் பெருமை எங்கோ போய்விட்டது. அகந்தை வீழ்ந்தது! அவர் வாழ்நாளிலேயே முதல்முறையாகத் தான் அதிகாரங்களையும், ஆணைகளை இடுவதையும் இழந்துவிட்டோம் என்பதை அவர் புரிந்து கொண்டிருப்பான். மீண்டும் தன் தான் தன்னுடைய தன்னம்பிக்கையைப் பெற முடியாது என்பதையும் அவர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அவரால் மீண்டும் தன்னம்பிக்கையைப் பெறவே இயலாது!” என்றான் கிருஷ்ணன்.

Monday, November 23, 2015

கிருஷ்ணன் செய்த பேரம்!

சத்ராஜித்தால் கண்ணன் தாக்கப்பட்டதை அறிந்த பலராமன் கோபத்தின் உச்சியில் இருந்தான். அவனால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. பலராமன் இயல்பாக மிகப் பெருந்தன்மை படைத்தவன். அவனிடம் பொறாமை என்பதே சிறிதும் இல்லை. ஆகவே தன் இளையோன் இந்தச் சிறிய வயதில் சாதித்த அற்புதங்கள், அதிசயங்களால் அவன் கண்ணனிடம் மிகவும் பிரியமும், பெருமையும் கொண்டிருந்தான். கண்ணனைப் பொதுமக்கள் ஒரு கடவுளாக வணங்குவதை நினைத்தும் அவன் பெருமை கொண்டிருந்தான். அதில் அவனுக்கு உள்ளார்ந்த கர்வமும் உண்டு. ஆகவே பெரியவனான தான் கண்ணனை ஒரு தந்தையின் இடத்தில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்தில் அவனைப் பாதுகாத்து வந்தான். இப்போது இதை அவனால் தாங்க முடியவில்லை. யோசித்த பலராமன் தன் தந்தையிடம் சென்றான்.

சத்ராஜித்தின் இந்த முறையற்ற செயலுக்கு அவனைத் தண்டித்துத் திருத்த வேண்டும் என்னும் எண்ணத்துடன் வசுதேவரிடம் தான் சத்ராஜித்தைப் பார்க்கப் போவதாகத் தெரிவித்தான். வசுதேவரோ நிதானம் உள்ளவர். அவசரப் படமாட்டார். ஆகவே பலராமனிடம் கண்ணனின் நேரிடையான வாக்குமூலம் வரும்வரை அவசரப் பட வேண்டாம், பொறுமையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதற்குள்ளாக அவர் யாதவகுலத்து மற்றப் பெரியோர்களை அங்கே வரவழைக்கச் சொல்லிச் செய்திகளை அனுப்பினார். அக்ரூரர், சாத்யகன், யாதவர்களின் குலகுருவான கர்காசாரியார் அனைவரையும் உக்ரசேனரின் மாளிகைக்கு வரும்படி அழைப்பு அனுப்பினார். அதே போல் கிருஷ்ணனுக்கும் உடனே அவரை வந்து சந்திக்கும்படிச் செய்தியை அனுப்பினார். ஏற்கெனவே துவாரகை முழுவதும் கிருஷ்ணனை சத்ராஜித் தாக்கிய செய்தி பரவி இருந்ததால் யாதவ குலத்தலைவர்கள் மட்டுமின்றி அனைத்து யாதவர்களும் சொல்ல முடியா வருத்தத்தில் ஆழ்ந்து போயிருந்தனர்.

கிருஷ்ணன் மேல் ஒருவன் கை வைத்தான் என்பதையே தாங்க முடியாமல் இருக்கையில் அவனைக் கொல்லப் பார்த்தான் என்பது அவர்களால் சற்றும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாமல் இருந்தது. ஆகவே அனைவரும் கூட்டம் கூட்டமாக உக்ரசேனரின் மாளிகை வாயிலில் குவிந்து கொன்டிருந்தனர். உண்மை என்ன என்பதை அறிய விரும்பினார்கள். அவர்கள் உக்ரசேனரின் மாளிகை நிலாமுற்றத்தில் கூடி இருக்கையில் கிருஷ்ணனே அங்கே வந்தான். அவனைப் பார்த்தால் சற்றும் சங்கடத்தில் ஆழ்ந்தவன் போல் தெரியவே இல்லை. எந்தவிதத் தடுமாற்றங்களும், சங்கடங்களும் இல்லாமல் வெகு இயல்பாக நன்றாக அலங்கரித்துக் கொண்டு வழக்கமான புன்னகை ததும்பும் முகத்தோடு மக்களைப் பார்த்துத் தன் கைகளை ஆட்டித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்த வண்ணம் வந்து கொண்டிருந்தான். அதைப் பார்த்த மக்கள் தங்களையும் அறியாமல், “வாசுதேவக் கிருஷ்ணனுக்கு ஜெய மங்களம்!” என்று கோஷித்ததோடு இல்லாமல் முன்னணியில் இருந்த சிலர் அவனை நெருங்கி அவன் பாதங்களிலும் பணிந்தனர்.

அனைவரையும் நட்பாகப் பார்த்துச் சிரித்துத் தலையை அசைத்து அந்த வரவேற்பை ஏற்றுக் கொண்டான் கிருஷ்ணன். ஒரு யாதவன் மிக தைரியமாக, “பிரபுவே, என்ன நடந்தது?” என்று கேட்டும் விட்டான். அதற்குக் கிருஷ்ணன் சிரித்தவாறே, “கவலைப்படும்படி எதுவும் இல்லை. நீங்கள் அனைவரும் உங்கள் வீடுகலுக்குச் செல்லுங்கள்!” என்றான். அதற்குள்ளாக இன்னொருவன், “சத்ராஜித் உங்களைத் தாக்கினான் என்கிறார்களே? அது உண்மையா? கொல்லப் பார்த்தானாமே?” என்றும் கேட்டான். “என்னைப் பார்த்தால் யாரேனும் தாக்கி இருப்பார்கள் என்றா நினைக்கத் தோன்றுகிறது?” என்று கேட்ட கிருஷ்ணன் மீண்டும் சிரித்தான். அதைப் பார்த்த மக்களும் சிரிக்க, இதுதான் சமயம் எனக் கிருஷ்ணன் மாளிகை உள்ளே சென்று விட்டான். உள்ளே உக்ரசேன மகாராஜாவுடன், வசுதேவர், அக்ரூரர், சாத்யகன், கர்காசாரியார். பலராமன் ஆகியோர் கிருஷ்ணனின் வரவுக்குக் காத்திருந்தனர். அனைத்துப் பெரியோருக்கும் தன் நமஸ்காரங்களைத் தெரிவித்த கண்ணன் அவனுக்காகப் போட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டான்.

“கிருஷ்ணா! என்ன நடந்தது என்பதை விளக்கமாகச் சொல்!” என்று வசுதேவர் ஆணையிட்டார். கிருஷ்ணன் சிரித்துக் கொண்டே, “அது மிகவும் ருசிகரமான விஷயம்! சுவாரசியமாக இருக்கும்.” என்ற வண்ணம் தொடர்ந்தான் கிருஷ்ணன். “ சத்ராஜித் முதலில் தன் சொத்துக்களை என்னிடம் காட்டினார். அவருடைய பண்ணை, அவருடைய கால்நடைச் செல்வங்கள், குதிரைகள், இந்தக் குதிரைகளை அவர் அஸ்வமேத யாகத்துக்காகப் பயிற்சிகள் கொடுத்து வருகிறாராம். விரிவில் யாகத்தை நடத்தப்போகிறாராம்.” என்று நிறுத்தினான். “என்ன! அஸ்வமேத யாகமா?” என்று வியந்த சாத்யகன் ஏளனம் பொங்க, “அவன் என்ன மகாசக்ரவர்த்தியாக முயல்கிறானா?” என்றும் கேட்டான். கிருஷ்ணன் அதற்கு ஏதும் பதில் அளிக்காமல் தன் பேச்சைத் தொடர்ந்தான்.

“பின்னர் அவர் நான் அவரைச் சந்திக்க வந்திருக்கும் காரணத்தைக் கேட்டார். நான் யாதவத் தலைவர்கள் அனைவரும் சத்ராஜித்துடன் நட்பாக இருக்கவே விரும்புவதைத் தெரிவித்தேன். அமைதியான முறையில் உறவு தொடர விரும்புவதையும் தெரிவித்தேன். அதோடு இல்லாமல் அவர் பங்குக்குக் கொடுக்க வேண்டியவற்றை இப்போதாவது கொடுத்து யாதவர்களின் பற்றாக்குறை நிலைமையை நீக்கும்படியும் கேட்டுக் கொண்டேன்.”

“அதற்கு அவன் என்ன சொன்னான்?”

“அவர் பேரம் பேசும் மனோநிலையில் இருந்தார். அவர் கூறினார்:சாத்யகர் அவர்கள் தன் மகனுக்கு சத்ராஜித்தின் மகள் சத்யபாமாவை மனைவியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். அப்படி நடந்தால் வரதக்ஷணையாகத் தன்பங்குச் சொத்தைத் தருவதாய்க் கூறினார். சாத்யக மாமா அவர்களே! மேலும் சத்ராஜித் சொன்னது என்னவென்று தெரியுமா? நீங்கள் அவரை அவமானப்படுத்தி விட்டீர்களாம்! அவர் மகளை மறுத்ததன் மூலம் அவருக்கு அவமானம் நேரிட்டு விட்டதாம். அப்போது அவருக்கு நான் நன்றாக விளக்கிக் கூறினேன். சத்யபாமாவின் பணத்தைப் பார்த்துப் பொறாமையிலோ அல்லது உங்கள் செல்வத்தின் மேல் கொண்ட வெறுப்பினாலோ சாத்யகர் உங்கள் மகளை மருமகளாக ஏற்க மறுக்கவில்லை. சாத்யகரின் குடும்பம் வீரதீர சாகசங்கள் செய்வதில் ஆர்வம் கொண்ட குடும்பம். அனைவரும் மாபெரும் வீரர்கள். க்ஷத்திரிய தர்மத்தைக் கைவிடாதவர்கள். அப்படிப்பட்டதொரு குடும்பத்திற்குச் செல்வத்திலும், சுகபோகங்களிலும் திளைந்த உங்கள் பெண் சிறிதும் பொருந்த மாட்டாள். அதனாலேயே அவளைத் தன் மகனுக்கு மனைவியாக ஏற்க மறுத்துவிட்டார் என்பதை எடுத்துச் சொன்னேன். அப்படி வற்புறுத்தித் திருமணம் செய்திருந்தால் சத்யபாமாவும் மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டாள். சாத்யகிக்கும் மன நிறைவு கிட்டி இருக்காது!” என்று கூறினேன்.

“நன்றாகச் சொன்னாய், குழந்தாய்! உண்மையும் அதுதானே! சாத்யகனைப் போன்றதொரு வீரன், மாபெரும் வீரன் இந்த ஆர்யவர்த்தம் முழுதும் தேடினால் கூடக் கிடைக்க மாட்டான். க்ஷத்திரிய தர்மத்தை விடாது கடைப்பிடித்து வருகிறான்.” என்று தன் முழுமனதோடு பாராட்டினார் உக்ரசேன ராஜா! சாத்யகர் அடக்கத்துடன் தலை குனிந்து கொண்டு மௌனத்தைக் கடைப்பிடித்தார். கிருஷ்ணன் மீண்டும் பேச ஆரம்பித்தான். “அப்போது நான் திரும்ப ஒரு மாற்று பேரத்தைக் கொண்டு வந்தேன். சத்ராஜித் அக்ரூரரின் பொறுப்பில் இருக்கும் உக்ரசேன ராஜாவின் கஜானாவிற்கு ச்யமந்தக மணியைக் கொடுத்தாக வேண்டும். அப்படி அவர் கொடுத்துவிட்டால் அது தான் அனைத்து யாதவர்களுக்கும் நன்மை பயக்கும். ஆகவே அப்படி நடந்தால், நான் சத்யபாமாவை சாத்யகி மணப்பதற்கு உதவுகிறேன்.” என்று சொல்லிவிட்டேன். “ என்று முடித்தான் கிருஷ்ணன்.

Saturday, November 21, 2015

தவிக்கும் பாமா! ரகசிய வேலையில் சத்ராஜித்!

ஒரு வழியா சுபத்ரா சமாதானம் ஆனதும் சத்யபாமா அவளிடம், ஒரு வீரனுக்குப்போருக்குச் செல்லும்போது விடை கொடுக்கையில் மனைவியரால் பாடப்படும், “பிரியாவிடை”ப் பாடலின் சில வரிகள் அவளுக்கு நினைவில் இல்லை எனவும், சுபத்ராவுக்குத் தெரிந்தால் அதைப் பாடிக்காட்டும்படியும் வேண்டினாள். மறந்து போன வரிகளை அவள் நினைவில் கொள்ள வசதியாக இருக்கும் எனக் கெஞ்சினாள். அவள் மிகவும் வேண்டிக்கொண்டதின் பேரில் சுபத்ரா அந்தப் பாடலைப் பாடினாள். பாடுகையிலேயே பாமா அந்த வரிகளைத் தன் மனதுக்குள் சொல்லிப்பார்த்துக் கொண்டு மனப்பாடம் செய்து கொண்டாள்.

“என் தலைவா, என் பிரபுவே! போர்க்களம் உங்களை அழைக்கிறது!
தர்மத்தின் பெயரால் அழைக்கிறது! தர்மத்தை ரக்ஷிக்க அழைக்கிறது!
சென்று வாருங்கள்! நான் தடுக்க மாட்டேன்! உங்களை என்னருகில் இருக்கும்படி வற்புறுத்த மாட்டேன்! சென்று வாருங்கள் என் பிரபுவே!
என் சுயநலத்திற்காக உங்களை நான் என்னிடம் தக்க வைத்துக் கொண்டால்,
உங்கள் நண்பர்கள் எதிரில் நீங்கள் கேலிக்கு ஆளாவீர்கள்!
அதோடு மட்டுமா! உயர்குலத்துப் பெண்மணிகளின் ஏளனமான பார்வைக்கும், கேலிக்கும் ஆளாவீர்கள்! உங்களை ஏறெடுத்துக் கூடப்பார்க்க மாட்டார்கள்!
என் பிரபுவே, என் தலைவா! உங்கள் மனமெல்லாம் மகிழ்ச்சி நிலவி இருக்கட்டும்!
ஒரு க்ஷத்திரியனாக நீங்கள் வீரத்தின் விளைநிலமாக விளங்குகிறீர்கள்!
போர்க்களத்தின் முன்னணியில் நின்று பொருதுவதே உங்களுக்குத் தகும்! அதில் தான் உங்கள் புகழ் அடங்கி இருக்கிறது!
உன்னதமான உயர்குடிப்பிறப்பில் பிறந்த உங்கள் சகிப்புத் தன்மைக்குச் சோதனை வந்தால், என்றென்றும் அழியாத தர்மத்திற்குச் சோதனை வந்தால்
அதற்காகத் தாங்கள் போர்க்களம் சென்றே ஆகவேண்டும்.
ஒரு வேளை இப்படி ஒரு சமயம் வாய்க்கலாம். நீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் போர்க்களத்தில் எதிரிகள் கணக்கில்லாமல் இருக்கலாம். ஆனால் என் அன்பே, அதற்காகவெல்லாம் நீங்கள் அஞ்சாதீர்கள்!
ஏனெனில் சூரியன் ஒன்றே’:சந்திரன் ஒன்றே; ஆனால் கணக்கற்ற நக்ஷத்திரங்கள் உள்ளன!
நக்ஷத்திரங்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதாலா இருள் விலகுகிறது! இல்லை என் தலைவா! அந்த ஒரே ஒரு சூரியனாலோ, அல்லது சந்திரனாலோ அல்லவா இருள் அகல்கிறது! அதுவன்றோ வெளிச்சத்தைத் தருகிறது!
என் பிரபுவே! பெறற்கரிய பெருஞ்சிறப்புப் பெற்ற நீங்கள் வெற்றிகளையே கொண்டு வருவீர்கள்! விஜயலக்ஷ்மி உங்கள் பக்கம் தான் இருப்பாள்!
இத்தகைய பெரும் சிறப்புப் பெற்ற நீங்கள், வீராதி வீரரான நீங்கள் போர்க்களத்தில் துவண்டு போய்ப் பின் வாங்கவே மாட்டீர்கள்! முன் நின்று எதிர்த்துப் போராடுவீர்கள்! போர்க்களத்திலிருந்து தோற்றுப் பின் வாங்கி நீங்கள் ஓடி வருவதை நான் பார்த்ததும் இல்லை; இனியும் பார்க்க மாட்டேன்!
ஒருவேளை நம் கோட்டை, கொத்தளங்கள் எதிரிகளால் தகர்க்கப்பட்டு நம் மக்கள் அனைவரும் பூண்டோடு அழிய நேரலாம்!
உங்களை என்னால் திரும்பப் பார்க்க முடியாமலும் போகலாம்.
இறைவன் சித்தம் அப்படி இருந்தால், என் பிரபுவே! எனக்காக நீங்கள் ஒருசொட்டுக் கண்ணீர் கூட உகுக்காதீர்கள்!
உங்கள் எதிரிகள் உயிருடனும், கண்ணீருடனும் என்னைத் தூக்கிச் சென்று என் சுதந்திரத்தை, என் நாயகனை என்னிடமிருந்து பிரிக்க முடியாது! அப்படி அவர்களால் செய்ய இயலாது! என் பிரபுவே! அதற்குள்ளாகவே நான் உயிரிழந்து விட்டிருப்பேன்!
இதை மட்டும் நன்றாக நினைவு கூருங்கள் என் பிரபுவே!
இன்னொரு மனிதன் வீட்டில், அவன் நாட்டில் எவ்வளவு தான் பணக்காரனாக இருந்தாலும், அவனுடைய இருப்பிடத்தில் என்னால் வசிக்க இயலாது! அதை விட என் உயிரை விடுவேன்!
அவனுக்காக நான் எவ்விதத்திலும் உழைக்க மாட்டேன்! குடிநீர் கொண்டு வரும் வேலை கூடச் செய்ய மாட்டேன்!
நிச்சயமாக நான் அழுது கொண்டிருப்பேன்; அதில் சந்தேகமில்லை; ஆனால் அது எனக்காக அல்ல, என் தலைவா!
நீங்கள் என்னிடம் கடைசிவரை காட்டிய அன்பை நினைந்து நினைந்து அந்த அன்பில் உருகி என் உயிரை உங்களுக்காக ஆகுதி செலுத்த வேண்டி உருகி உருகி அழுது கொண்டிருப்பேன். அந்தக் கண்ணீராகிய தாரையில் என் அன்பை உங்களுக்காக அர்ப்பணம் செய்வேன்!
என் தலைவா! அப்படி ஒருவேளை போர்க்களத்தில் நீங்கள் வீர மரணம் எய்திவிட்டால்! இல்லை, இல்லை! ஆனால் அப்படியும் ஒருவேளை நடந்துவிட்டால்! அதை மற்றொருவர் சொல்லும் வரைக்கும் என்னால் காத்திருக்க இயலாது! இன்னொரு பெண் அதை எனக்குச் சொல்ல வேண்டாம்! ஆம், என் தலைவா! உன் கணவன் இறந்து பட்டான் என்பதை இன்னொரு பெண் மூலம் அறிவிக்க நான் காத்திருக்க மாட்டேன்!
உங்களுடைய சிதையே எனக்கு மலர்ப்படுக்கை! ஆம், என் தலைவா! உங்களுடன் எப்படி உங்கள் படுக்கையைப் பகிர்ந்து கொண்டேனோ அதே போல் சிதையையும் உங்களுடன் நான் பகிர்ந்து கொள்வேன்! உங்களால் கூட அதைத் தடுக்க இயலாது!
என் பிரபுவே! அப்போது உங்கள் கரத்தை என் கரங்களுக்குள்ளாக வைத்துப் பொத்திக் கொள்வேன். உங்கள் கரங்களைப்பிடித்தபடியே நாம் மேலுலகம் சென்று கடவுளரிடம் செல்வோம். இல்லை, இல்லை முதலில் யம தர்ம ராஜாவிடம் செல்வோம்! சந்தோஷமாகச் செல்வோம்! அதைப் பார்த்து யமன் கூட அதிர்ச்சியில் ஆழ்வான்! ஆஹா! இவர்கள் திருமணத்தில் நடந்த சப்தபதியின் போது ஏழு அடி எடுத்து வைக்க எப்படிச் சேர்ந்தே சென்றார்களோ அப்படியே இப்போதும் வந்திருக்கின்றனரே என ஆச்சரியத்துடன் பார்ப்பான்!
என் தலைவா! சென்று வாருங்கள்! வென்று வாருங்கள்!”

அங்கிருந்து கிளம்பிய சத்யபாமாவின் மனதில் உற்சாகமே இல்லை! விவரிக்க இயலா சோகம் அவளை அப்பிக் கொண்டிருந்தது! அவள் குடுமப்த்தின் உறுப்பினர்கள் அனைவரும் மௌனத்தையே கடைப்பிடித்தாலும் உள் மனதில் வியாகூலத்துடனே இருப்பதும், அனைவரும் ஏதோ ஒரு வகையில் தர்மசங்கடமான மனோநிலையில் இருப்பதும் தெரிந்தது. அவள் தந்தையோ வழிபாட்டு அறைக்குள்ளே புகுந்தவர் உள்பக்கம் தாழ்ப்பாளிட்டுக் கொண்டு வெளியே வரவே இல்லை! அன்றிரவு வீட்டின் பிரதான வாயிலில் காவல் அதிகரிக்கப்பட்டதோடு இல்லாமல் வீட்டைச் சுற்றிலும் பலத்த காவல் போடப்பட்டது! ஏதோ ஒன்று நடக்கப் போகிறது! ஏதோ ஒன்று! நல்லதோ, கெட்டதோ! அல்ல, அல்ல! கடவுளரின் கடுங்கோபம் இந்த வீட்டைத் தாக்கப் போகிறது! அந்த இரவு அனைவருக்கும் தூங்கா இரவாக இருந்தது.

உதயத்திற்குச் சற்றே முன்னர் சத்யா ஊரி அவளுடைய பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு கட்டிலில் இருந்து குதித்து இறங்குவதைக் கவனித்தாள். ஏதேனும் எலி இருப்பதை மோப்பம் பிடித்திருக்கிறதோ என பாமா நினைத்தாள். ஆனால் இந்தச் சமயம் அப்படி இல்லை என்பதை ஊரியின் நடவடிக்கையிலிருந்து பாமா புரிந்து கொண்டாள். ஊரி நேரே தாழ்வாரத்தின் பக்கம் சென்று மிகக்கோபத்துடன், குரலெடுத்து, “மியாவ், மியாவ்!” என்று கத்திக் கொண்டே இருந்தது. தாழ்வரையில் இருந்த எவரோ அதை விரட்டுவதும் பாமாவுக்கு இங்கிருந்தே கேட்டது. ஆனால் பாமாவின் மனதில் ஏதோ நடக்கக் கூடாத ஒரு விஷயம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது என்னும் உணர்வு ஏற்பட்டது. ஆகவே அவள் தன் கட்டிலில் இருந்து இறங்கினாள். மெல்ல மெல்லத் தன்னை ஒளித்துக் கொண்டு திருட்டுத் தனமாகத் தாழ்வாரத்தில் இருந்த ஒரு பெரிய தூணின் பின்னால் போய் நின்றாள். மறைந்து கொண்டிருந்த அஸ்தமனச் சந்திரனின் சோகையான வெளிச்சத்தில் அவளால் இரு நபர்களைக் காண முடிந்தது. அவர்களை பாமா உடனே அடையாளமும் கண்டு கொண்டாள். ஒருவர் அவள் தந்தை! இன்னொருவர் அவள் சிறிய தந்தை பிரசேனர்!

அங்கே ஒரு மட்டக்குதிரை பிரயாணத்துக்குத் தயாராகக் காத்திருந்தது. சற்று தூரத்தில் இன்னொரு மட்டக் குதிரையும் பிரயாணத்துக்குத் தயாராக இருப்பதை பாமா கவனித்தாள். அந்தக் குதிரையைத் தன் கையிலுள்ள கயிறுகளால் அடக்கிப் பிடித்த வண்ணம் குதிரை லாயத்தைச் சேர்ந்த ஒரு வீரன் நிற்பதையும் பாமாவால் பார்க்க முடிந்தது. இத்தனை அதிகாலையில் இவர்களுக்கு இங்கே என்ன வேலை! என்ன செய்கிறார்கள்? அல்லது செய்யப் போகிறார்கள்? சத்யபாமாவால் சிறிதும் ஊகிக்க முடியவில்லை. பொறுமையாகக் காத்திருந்தாள். என்ன தான் நடக்கிறது! கடைசிவரை பார்த்துவிடுவோம்!

அவள் தந்தையுடன் மெதுவாகக் கிசுகிசுவெனப் பேசிக் கொண்டிருந்தார் அவள் சிற்றப்பன் பிரசேனன். பின்னர் விடைபெற்றுக் கொண்டு குதிரையின் மேல் ஏறிக் கொண்டு அதை விரட்டினார். குதிரையும் வேகமாகக் கிளம்பியது! குதிரை லாயத்தைச் சேர்ந்த வீரனும் உடனே தன் கையிலிருந்த கயிற்றால் குதிரையை விரட்டிக் கொண்டு தானும் அந்தக் குதிரையின் மேல் ஏறி அமர்ந்தவண்ணம் பிரசேனனைத் தொடர்ந்தான். பின்னர் அவள் தந்தை தான் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குத் திரும்பியதை பாமா கவனித்துக் கொண்டாள். அவளுக்கு நன்றாக நினைவில் இருந்தது. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் அவள் தந்தை காட்டில் உள்ள ஏதோ ஓர் இடத்துக்குச் செல்வார் என்பதும் அந்த இடம் உஜ்யந்த மலைகளால் சூழப்பட்டது என்பதும், அங்கே தான் ச்யமந்தக மணி முதன் முதலாக அவள் தந்தைக்கு சூரிய பகவானால் அளிக்கப்பட்டது என்பதும், அதிலிருந்து ஒவ்வொரு பௌர்ணமிக்கும் அங்கே சென்று சூரிய பகவானுக்கு வழிபாடுகளை அவள் தந்தை செய்கிறார் என்பதும் நினைவில் வந்தது. ஆனால்! ஆனால்!

ஒரு போதும் சூரிய உதயத்துக்கு முன்னரோ, விடிகாலையிலே இத்தனை ரகசியமான முன்னேற்பாடுகளுடன் அவர் கிளம்பிச் சென்றதே இல்லை! இப்போது நடப்பது மிகவும் விசித்திரமாக இருக்கிறது! ஆனால் இதில் ஏதோ தப்பாகவும் ரகசியமாகவும் இருக்கிறது! அது நிச்சயம்! இரவு கழிந்து விடியும் முன்னரே அவள் சிற்றப்பன் இத்தனை ரகசியமாகக் காட்டுக்கு ஏன் கிளம்பிச் செல்ல வேண்டும்? பாமா திரும்பத் தன் படுக்கைக்குச் சென்று படுத்துக் கொண்டாள். ஆனால் அவளுக்குத் தூக்கம் வரவில்லை!

Wednesday, November 18, 2015

பாமாவின் தனிமை!

சத்யபாமா படுக்கையை விட்டு எழுந்ததும், தன் வழக்கம் போல் கோயிலுக்குச் செல்வதற்காக அலங்கரித்துக் கொள்ள ஆரம்பித்தாள். அங்கிருந்து அவள் தன் தாயின் சகோதரியைச் சந்திக்கவும் திட்டமிட்டிருந்தாள். அவள் கிருதவர்மாவின் தாய். தன்னை அலங்கரித்துக்கொள்ளும்போதே, காலை நடந்தவை எல்லாம் அவள் கண் முன்னே திரும்பத் திரும்ப வந்து போயிற்று.அவள் தந்தை கிருஷ்ணனைப் பார்த்துக் கத்தியது, “சூரிஅ பகவானின் சாபம் உன்னைச் சும்மா விடாது!” என்று சொல்லிக் கொண்டே கிருஷ்ணனை அவன் அமர்ந்திருந்த ஆசனத்திலே சேர்த்து அழுத்திக் கொல்ல முயன்றது! அப்போது கிருஷ்ணனின் தோள்கள் ஆசனத்தின் பின்னே சாய்ந்திருந்த விதம், அவன் தன்னிரு கரங்களால் ஆசனத்தின் கைப்பிடியை இறுகப்பிடித்திருந்த முறை! அவன் உடல் விறைப்பாகக் காணப்பட்டது! சத்ராஜித்தைத் தாக்கவேண்டும் என்னும் தன் மனோநிலையை அவன் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்த விதம்! ம்ம்ம்ம்ம்ம்…….. எப்படிப்பட்ட மனிதராலும், ஏன்! கடவுளரால் கூட இப்படியான சந்தர்ப்பங்களில் தன் மனோபலத்தால் தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமா என்பது சந்தேகமே! அதுவும் அவன் சத்ராஜித்தின் கரங்களால் கொல்லப்பட இருக்கையில்! நிச்சயமாய் இது எவராலும் சாத்தியமே இல்லை!

அவள் மனதின்/மூளையின் மூலை, முடுக்குகளில் எல்லாம், “ச்யமந்தகத்தை நானே எடுத்துக்கொண்டுவிடுவேன்!” என்று கண்ணன் கூறியது எதிரொலித்துக் கொண்டிருந்தது. அவன் குரலே திரும்பத் திரும்ப அவள் காதுகளில் மோதியது! என்ன செய்யப் போகிறான் கிருஷ்ணன்? ச்யமந்தகத்தைத் தன் தந்தையிடமிருந்து பிடுங்கப் போகிறானா? அல்லது திருடப் போகிறானா? அப்போது அவளுக்குத் திடீரென ஓர் எண்ணம் தோன்றியது. அது மிகவும் சிறந்தது என்றும் அவள் நினைத்தாள். அதாவது வழிபாட்டு அறைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் ச்யமந்தகத்தை அவளே எடுத்துச் சென்று கண்ணனிடம் கொடுத்துவிட்டால்? இந்த நினைப்பு அவளுக்குச் சிரிப்பை வரவழைத்தது. ஆனால் அவளால் இதைச் செய்ய முடியாது! ஏனெனில் அவள் தந்தை பகல் முழுவதும் அதை அணிந்து கொண்டிருப்பார்; இரவானதும் அதை வழிபாட்டு அறையில் வைத்துவிட்டு அந்த அறைக்குச் செல்லும் வழியிலேயே உள்ள ஓர் அறையில் தான் படுத்துத் தூங்குகிறார். ஆகவே அவருக்குத் தெரியாமல் அவளால் எதுவும் செய்ய இயலாது. கோயிலுக்குச் செல்லும் முன்னர் தந்தையை விசாரிக்கும் தோரணையில் அவள் அவருடைய அறைக்குச் சென்றாள். அவளுக்கு என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆவல்!

அவள் தந்தை ச்யமந்தக மணிக்குத் தன் வழிபாடுகளை நடத்திக் கொண்டிருந்தார். அங்கிருந்த ஓர் சிறுமேடையின் மேல் அது வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்துத் தந்தையையும் விசாரித்த பின்னர் அவள் கோயிலுக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து கிருதவர்மாவின் வீட்டிற்குச் சென்றாள். செல்லும் வழியெல்லாம் ஆங்காங்கே நிறைய மனிதர்கள் காணப்பட்டனர். தெருவோரங்களிலும், அவரவர் வீட்டின் உள்ளேயும், தாழ்வாரங்களிலும் காணப்பட்ட அவர்கள் தங்களுக்குள்ளாக ஏதோ ஆச்சரியமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அவளுக்கு அவர்கள் என்ன பேசிக் கொள்வார்கள் என்பது தெரிந்தே இருந்தது. அதே சமயம் அவளைப் பார்த்ததுமே அவர்களின் பேச்சு நின்றது. அவளையே முறைத்துப் பார்த்த வண்ணம் அனைவரும் அமைதியானார்கள். அவர்களை எல்லாம் தாண்டிக் கொண்டு கிருதவர்மாவின் வீட்டை அடைந்தாள் சத்யபாமா!

அங்கே சென்றதுமே கிருதவர்மாவின் வீட்டு மனிதர்கள் பாமாவைச் சுற்றிக் கொண்டனர். காலையில் அவள் வீட்டில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மையா என விசாரித்தனர்! கிருஷ்ணன் அவர்கள் வீட்டிற்கு வந்தானா? அவள் தந்தையைச் சந்தித்தானா? மற்ற யாதவர்கள் இழந்த சொத்திற்கான நஷ்ட ஈட்டைக் கேட்டுப் பெறுவதற்காக வந்திருந்தானா? சத்ராஜித் கொடுக்க வேண்டிய பங்கைக் கேட்டானா? அவற்றை எல்லாம் மறுத்து சத்ராஜித் கிருஷ்ணனைக் கொல்ல முயன்றானா? அது உண்மையா? அப்போது பாமா உள்ளே புகுந்து தலையிட்டாளா? அதுவும் உண்மையா? சத்ராஜித்தின் தாக்குதலில் இருந்து கண்ணனை பாமா தான் காப்பாற்றினாளா? அப்போது அங்கிருந்து செல்லும் முன்னர் கிருஷ்ணன் சத்ராஜித்திடம் அவன் தானாகவே முன் வந்து ச்யமந்தக மணிமாலையை அக்ரூரரிடம் ஒப்படைக்கச் சொன்னானா? அது உண்மையா? நாளை சூரிய அஸ்தமனத்திற்குள் கொடுத்தாகவேண்டும் என்று கெடு வைத்திருப்பதும் உண்மையா?

சத்யபாமாவால் பேசவே முடியவில்லை. ஏனெனில் அனைத்தும் கசக்கும் உண்மை! நடந்தது என்னவோ உண்மை தானே! அவற்றை அவளால் மறுக்க இயலவில்லை. இதைக் கேட்டதும் கிருதவர்மா கோபத்தில் ஆழ்ந்தான். அவன் தாய்க்கும் கோபம் தான் என்பது அவள் முகத்திலிருந்து தெரிந்தது. சத்ராஜித் செய்த மன்னிக்க முடியாத குற்றம் அது என்பதை பாமா ஏற்கெனவே புரிந்து கொண்டிருந்தாள். யாதவர்களின் வீரதீரக் கதாநாயகனும், அவர்களின் கண்ணின் கருமணி போன்றவனும் ஆன கிருஷ்ணனை சத்ராஜித் தாக்க முயன்றது மிகவும் மன்னிக்க முடியாக்குற்றம்!  யாதவர்கள் அனைவரின் இந்த மனோபாவத்தை அறிந்து கொண்ட சத்யபாமாவால் பேசவே முடியவில்லை. அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கிருதவர்மாவின் வீட்டிலிருந்து விரைவில் வெளியேறிய அவள் தன் வீட்டுக்கு வந்ததும் தன் வீட்டு மனிதர்களின் போக்கைக் கண்டு திகைத்தாள். அனைவரும் கூடிக் கொண்டு மெல்லக் கிசுகிசுப்பான தொனியில் பேசிக் கொள்வதையும் ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டாற்போன்ற அவர்கள் நடவடிக்கையையும் பார்த்த அவளுக்குப் பேச்சே வரவில்லை. ஏதோ பிரளயம் வந்துவிட்டாற்போல் அவர்கள் நடந்து கொண்டனர்.

இரவை சத்யபாமா எப்படிக் கழித்தாள் என்றே கூறமுடியவில்லை. இரவு முழுவதும் குளிரால் நடுங்குவது போல் நடுங்கிக் கொண்டிருந்தாள். மிகவும் விரக்தி அடைந்து போயிருந்தாள். காலையில் நடந்த சம்பவங்களினால் அவளுடைய கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் செத்து விட்டது. இவ்வளவிற்குப் பிறகும் கிருஷ்ணன் அவளைக் கல்யாணம் செய்து கொள்வான் என்னும் நம்பிக்கை அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டது. இப்போது இருக்கும் நிலையில் அவளுக்கு உதவக் கூட யாருமில்லை! ஆலோசனைகள் சொல்லவும் எவருமில்லை! தனியாக விடப்பட்டிருக்கிறாள் அவள் நம்பிக்கை, அவள் ஆசை, அவள் கனவு, அவள் வாழ்க்கை அனைத்தும் பொடிப் பொடியாகச் சுக்குச் சுக்காகச் சிதறிப் போய்விட்டது! எல்லாம் யாரால்? அவள் தந்தையால்! அவருடைய அசிங்கமான மோசமான நடவடிக்கையால்!

மறுநாள் இந்த வதந்தி கை, கால்கள் முளைத்துக் கொண்டு அருமையான விகிதாசாரத்தில் துவாரகை முழுவதும் பரவி இருந்தது. அவளுடைய சேடிப்பெண் மூலம் அவள் சுபத்ராவுக்கு ஓர் செய்தி அனுப்பி இருந்தாள். சுபத்ராவைக் கிருதவர்மாவின் வீட்டில் சத்யபாமா சந்திக்க விரும்புகிறாள். இது தான் அந்தச் செய்தி! மதியம் போல் அவள் கிருதவர்மாவின் வீட்டிற்குச் செல்கையில் சாலை முழுவதும் சிறு சிறு குழுக்களாக மனிதர்களைக் கண்டாள். அனைவரும் ஏதோ போருக்கு ஆயத்தமாவதைப் போல் ஆயுதபாணிகளாகக் காட்சி அளித்தனர். அனைவர் கண்களிலும் போர் வெறி தெரிந்தது. அதோடு இல்லாமல் யாதவர்களின் முக்கியத் தலைவர்களில் சிலர் உக்ரசேனரின் மாளிகை நோக்கி  நடந்து கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் தன் தந்தையின் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கச் சொல்லி வற்புறுத்தவே சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதையும் பாமா புரிந்து கொண்டாள். எப்படியோ ஒருவாறாக அவள் கிருதவர்மாவின் வீட்டை அடைந்தாள். அங்கே சுபத்ரா அவளுக்காகக் காத்திருந்தாள்.

ஆனால் சுபத்ராவின் முகத்தில் கோபம் கூத்தாடியது. எப்போதும் சிரித்துப் பேசி வேடிக்கையும், விளையாட்டுமாக இருக்கும் சுபத்ரா அன்று கோபத்தின் உச்சியில் இருந்தாள். மிக மிகக் கடுமையான கோபத்தில் இருந்த சுபத்ராவைக் கண்டதுமே பாமாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதோடு இல்லாமல் சுபத்ரா சொன்னதைக் கேட்ட பாமாவுக்கு உயிரையே விட்டு விடலாம் என்றே தோன்றியது. சுபத்ரா பாமாவின் முகத்தைக் கூடப் பார்க்க விரும்பவில்லை என்றும் அவள் இப்போது வந்ததின் காரணமே அவள் தந்தையால் அவள் அருமைச் சகோதரன் கொல்லப்பட இருந்ததைத் தவிர்க்க வேண்டியே வந்ததாகவும் தெரிவித்தாள். பாமா சுபத்ராவைச் சமாதானம் செய்ய முயன்றாள்.

Friday, November 13, 2015

பாமாவுக்குக் குழப்பம்!

சத்யபாமா தன் தந்தையின் அருகிலேயே அவர் கைகளை ஆதரவாகப் பற்றிய வண்ணம் அமர்ந்திருந்தாள். தந்தையின் கைகள் நடுங்குவதை அவளால் உணர முடிந்தது. எழுச்சியுற்ற மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் அவன் தவிப்பதையும் உணர்ந்தாள். அவன் மனதிலிருந்த கொலை வெறி குறைந்து வருவதை அவன் கண்கள் காட்டியது. ஆனாலும் அவன் இன்னமும் குழப்பமானதொரு மனோநிலையிலேயே இருந்தான். அவன் மனம் இன்னமும் தெளிவுறவில்லை. சத்யபாமாவின் சிற்றன்னைமாரும், அவர்களின் பெண்களும் அங்கே கூடி இருந்தனர். ஆனால் அவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. பேச்சில்லாமல் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். தெளிவற்றதொரு அச்சம் அவர்களைப் பீடித்திருந்தது. சற்று நேரம் அப்படியே அமைதியாய்ச் சென்றது.

திடீரென சத்ராஜித் கெட்ட கனவு கண்டு விழித்தவன் போலத் தூக்கிவாரிப்போட்டு நிமிர்ந்து அமர்ந்தான். தன்னைச் சுற்றிலும் ஒரு முறை பார்த்தான். அவனையும் அறியாமல் அவன் கைகள் ச்யமந்தக மணிமாலையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டது. பழக்கவசத்தினால் அவன் கைகள் தானாக அந்த மாலையை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டன. சற்றே கரகரத்த குரலில் பாமாவைப் பார்த்து, “சத்யா, என்னைக் கோவிலுக்கு அழைத்துச் செல்! உடனே!” என்றான். “சரி, தந்தையே!” என்ற சத்யா எழுந்து நின்றாள். அவள் தோள்களின் மேல் தன் கைகளை வைத்த வண்ணம் எழுந்து நடந்தான் சத்ராஜித். அவர்களுக்கு என்றிருந்த தனி வாயில் வழியாக சத்யபாமா அவனைக் கோயிலுக்கு வழி நடத்திச் சென்றாள். அங்கே போனதும் தன்னை கர்பகிரஹத்தினுள் அழைத்துச் செல்லச் சொன்னான் சத்ராஜித். பாமா அப்படியே செய்தாள். அங்கு வழிபாடுகள் செய்வதற்கென இருந்த பூஜாரிகளை வெளியேறச் சொன்னான் சத்ராஜித். அவர்கள் அங்கிருந்து அகன்றதும் பாமா கதவுகளை மூடினாள்.

அரண்மனையிலிருந்து வரும்போதிலிருந்து அப்போது வரை மெல்லிய குரலில் காயத்ரி மந்திரத்தைத் திரும்பத் திரும்பப் பாராயணமாகச் சொல்லிக் கொண்டே வந்தான் சத்ராஜித். இப்போதும் அதை நிறுத்தவில்லை. தொடர்ந்து சூரியனை வழிபட்டுக் கொண்டே இருந்தான். கதவுகள் மூடப்பட்டதும், அங்கே கல்லால் செதுக்கப்பட்டிருந்த சூரிய பகவானின் சிற்பத்திற்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். சூரிய பகவான் தன்னுடைய ஏழு குதிரைகளையும் ஓட்டிக் கொண்டு பயணிப்பது போல் அந்தச் சிற்பம் செதுக்கப் பட்டிருந்தது. கீழே விழுந்து வணங்கிய சத்ராஜித் பின் தன் மகளைப் பார்த்து அவளையும் வெளியேறுமாறு தன் கை அசைவில் சொன்னான். சத்யபாமாவும் அங்கிருந்து வெளியேறினாள். சுமார் அரைமணி நேரம் சென்றது. சத்ராஜித் கர்பகிரஹத்திலிருந்து வெளியே வந்தான். அவன் முகத்தில் காணப்பட்ட குழப்பம் காணாமல் போயிருந்தது. மெல்ல மெல்லத் தன் இயல்புக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் அவன்.

“பாமா, வா, நாம் இப்போது உணவு உண்ணச் செல்லலாம்!” என்று அவளை அழைத்தான். சத்யபாமா தன் தந்தை தன்னியல்பு நிலைக்குத் திரும்பி விட்டதைப் பெரிதும் விரும்பினாள். அதற்காக சந்தோஷம் அடைந்தாள். ஆனால் அவனிடம் தன்னம்பிக்கை குறைந்திருந்தாற்போல் தோன்றியது அவளுக்கு. முன்னிருந்த தன்னம்பிக்கை இப்போது அவனிடம் காணப்படவில்லையோ என நினைத்தாள். சாப்பாட்டுக் கூடத்தை அடைந்தார்கள் இருவரும். அங்கு கூடி இருந்த பிராமணர்களைப் பார்த்துக் கைகூப்பி வணங்கினான் சத்ராஜித். மற்றும் உணவு உண்ணக் கூடி இருந்த குடும்பத்து ஆண் நபர்களையும் பார்த்து வரவேற்கும் முறையில் வணங்கினான். ஆனால் எங்கும் பேச்சே இல்லை. அசாதாரணமான மௌனம் அங்கே சூழ்ந்திருந்தது. காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் தாக்கம் அனைவர் மனதிலும் இன்னமும் இருந்தது. உணவுக்குப் பின்னர் சத்யபாமா தன்னறைக்குச் சென்றாள். அவள் சிற்றன்னையின் மகள்கள் மூவர் அவளுடன் அந்த அறையைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். இன்றைக்குத் தன் எஜமானி தன்னுடன் சரியான நேரத்துக்கு உணவு உண்டதில் தானும் வயிறும், மனமும் நிறைய உண்டிருந்த ஊரி தன் எஜமானியின் பின்னேயே சென்றது. அறைக்குப் போனதும் ஊரியை வழக்கம் போல் நன்கு குளிப்பாட்டினால் சத்யபாமா! பின்னர் தன்னோடு அதை அணைத்த வண்ணம் மத்தியானக் குட்டித் தூக்கத்துக்காகத் தன் படுக்கைக்குச் சென்றாள் பாமா.

அவளால் தூங்க முடியவில்லை. அவளருகே நெருக்கமாய்ப் படுத்துக் கொண்டது ஊரி. அதைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள் பாமா. பின் மெல்லிய குரலில் அதன் காதில் கிசுகிசுப்பாகப் பேச ஆரம்பித்தாள்.  “ஊரி, ஊரி, உனக்கு சுயநலம் அதிகம் ஆகிவிட்டது. நீ மட்டும் அவனை வழி அனுப்பி வைக்கப் போனாய்! கூடவே என்னையும் அழைத்துப் போவதற்கென்ன? முட்டாள் பெண்ணே!” என்றாள். சொல்லிக் கொண்டே பூனையின் காதைப் பிடித்து இழுக்கத் தன் எஜமானியின் மனநிலையைப் புரிந்து கொண்ட அந்தப் பூனையும், “மியாவ்” என்று கத்தித் தன் சந்தோஷத்தைத் தெரிவித்துக் கொண்டது. சத்யபாமா தொடர்ந்து கிசுகிசுப்பான குரலில் பேசிக் கொண்டிருந்தாள். “ இதைக் கேள் ஊரி! முட்டாள் பெண்ணே! அவன் என்ன சொன்னான் தெரியுமா? நான் நல்ல அழகான இளம்பெண்ணாம். நீ என்ன சொல்கிறாய் ஊரி? என்ன நினைக்கிறாய்? ஆஹா! நான் மெய் சிலிர்த்துப்போனேன் தெரியுமா ஊரி? எப்போது என்கிறாயா? அவன் தோள்களில் இருந்து தகப்பனாரின் கைகளை விலக்குகையில் அவன் தோளின் மேல் என் கைகள் பட்டன. அந்த ஸ்பரிசம்! ஆஹா! ஊரி! ஊரி! அந்த ஸ்பரிசம்!”

“ஆனால் ஊரி! நீ என்ன செய்தாய்? அவனை உனதாக்கிக் கொண்டாய்! திடுமென உள்ளே நுழைந்து அவனைப் பார்த்து உன்னுடையவனாக்கிக் கொண்டு விட்டாய்! எவ்வளவு சுயநலம் உனக்கு! அவனும் உன்னை ஆக்ஷேபிக்காமல் உன் முதுகில் தட்டிக் கொடுத்து உன்னைத் தன் சிநேகிதியாக்கிக் கொண்டு விட்டானே! ஆனால் என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை! பேச எதுவும் இல்லையா என்ன? என்னிடம்பேசவே இல்லை! ம்ம்ம்ம்ம்? இல்லை….இல்லை. அவன் என்னிடம் பேசினான் அன்றோ! ஆம், பேசினான். என்னிடம் கூறினான். தங்கப் பானைகளை எடுத்துக் கொண்டு நான் வரவேற்பு நிகழ்ச்சிக்குப் போயிருக்கக் கூடாது என்று சொன்னான். ஆம்! அது என் தவறு தான்! எங்களுடைய செல்வத்தை இப்படி எல்லாம் நான் வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கக் கூடாது! கோவிந்தன் சொன்னது சரிதான்! ம்ம்ம்ம்ம்… அவன் கூறிய அந்தப் பாடல்! என்னால் அந்தப் பாடலின் முழு வரிகளையும் நினைவு கூர முடியவில்லை. ஒரு வீரக் கதாநாயகனின் மனைவி பாடும் அந்தப்பிரியாவிடைப் பாடல்கள்! ம்ம்ம்ம்ம்? நினைவில் இல்லை!”

“ஊரி, நாம் இன்னமும் நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். க்ஷத்திரிய தர்மத்தைக் கைவிடாமல் கடைப்பிடிக்கும் க்ஷத்திரியர்களின் மனைவிகளைக் குறித்து அறிய வேண்டும். நான் இவ்வளவு நாட்களாக ஒரு முட்டாளாக இருந்திருக்கிறேன். வீரம் செறிந்த நாயகர்களின் நீதியையும், நேர்மையையும் குறித்து அறியாமல் போய்விட்டேன். அவர்களின் கடமைகளைக் குறித்துத் தெரிந்து கொள்ளவே இல்லை. ஊரி, ஊரி! நானும் அப்படி செயற்கரிய வீரச் செயல் ஒன்றைச் செய்ய வேண்டும். ஆனால் என்ன செய்வது! அதை எப்படிச் செய்வது என்பது ஒன்றும் புரியவே இல்லை!”தன்னையும் அறியாமல் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டாள் சத்யபாமா. “ஊரி, ஊரி! எனக்கு நம்பிக்கையே இல்லை. நான் திறனற்றுச் செயலற்றுப் போய்விட்டேன்! நான் அவனுக்கு இவ்வுலகத்தில் உள்ள சந்தோஷங்கள் அனைத்தையும் காட்ட வேண்டுமென நினைத்தேன். இதுவரை அவன் யாரிடமும் பெற்றிராத சுகத்தையும் பெறவேண்டும் என எண்ணினேன். எவராலும் கற்பனை செய்ய முடியாததொரு ஆனந்த வாழ்க்கையைக் காட்ட நினைத்தேன். ஆனால்……. ஆனால்…….அவன் சுகத்தையும் சௌக்கியத்தையும், ஆடம்பர வாழ்க்கையையும் விரும்பவில்லை. வெறுக்கிறான். அதைக் கண்டனம் செய்கிறான். நான் இவ்வளவு மோசமானதொரு பெண் என்பதை நான் இன்று வரை அறியவே இல்லை, ஊரி!”

Thursday, November 12, 2015

கண்ணனுக்கு ஆபத்து!

கிருஷ்ணனின் அமைதியான பேச்சும், சாந்தமான சிரிப்பையும் கண்ட சத்ராஜித்தின் கோபம் கொதித்தது. ஆங்காரம் அதிகம் ஆனது.அவனால் தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தன் கை முஷ்டிகளைக் குவித்தும், விரித்தும், ஓங்கிக் குத்தும் பாவனையில் முஷ்டியை ஓங்கியும் ஏதேதோ செய்தான். விரல்களைப் பிரித்துப் பிரித்து விரித்தான். கண்கள் சிவந்து விட்டன. அவனை அப்போது பார்க்கவே பயமாக இருந்தது. எனினும் கிருஷ்ணன் சிறிதும் அஞ்சவில்லை. திடீரெனத் தன் ஆசனத்தில் இருந்து குதித்து எழுந்தான் சத்ராஜித். தன் கைகளைக் கிருஷ்ணன் தோள்பட்டையின் மேல் வைத்த வண்ணம் அவனை எழுந்திருக்க விடாமல் ஆசனத்தில் அழுத்தியபடியே அவனைப் பார்த்து உறுமினான். உறுமிய வண்ணம் அவனை அப்படியே ஆசனத்தில் பின்பக்கமாக அழுத்திச் சரித்தான். “என் ச்யமந்தகமணிமாலையை என்னிடமிருந்து பிடுங்கி விடுவாயா நீ?” என்ற வண்ணம் கிருஷ்ணனை வேகமாக அழுத்திய வண்ணம், “என் ச்யமந்தகத்தையா என்னிடமிருந்து பிடுங்க நினைக்கிறாய்? சூரிய பகவானின் சாபம் உன்னைச் சும்மா விடாது!” என்று கூறினான். சத்யபாமா வெளியே இருந்து அனைத்தையும் பார்த்தவளுக்குப் பயம் மேலிட்டது. அவள் தந்தை செய்வதை அவள் சிறிதும் ரசிக்கவில்லை. அவள் தந்தை மிகவும் வலுவும், பலமும் பொருந்தியதொரு மனிதர். கோபம் அதிகரித்தால் அவர் என்ன செய்வார் என்றே சொல்ல முடியாது. சமயம் வாய்க்கையில் ஒரு மனிதனைத் தன் வெறும் கரங்களாலேயே கழுத்தை நெரித்துக் கொல்லக்கூடிய வலு வாய்ந்தவர். சில நாட்களுக்கு முன்னர் தான் ஒரு ஊழியன் சொன்னபடி செய்யவில்லை என்பதற்காக அவனைக் கழுத்தை நெரித்துத் தூக்கி எறிந்ததை பாமா நேரிலேயே பார்த்திருக்கிறாள். அதோடு இல்லாமல் எப்போதுமே அவர் இடுப்பில் அரைக்கச்சையில் மெலிதாக இருந்தாலும் கூர் வாய்ந்ததொரு குத்துவாள் மறைந்திருக்கும்.

ஆகவே சிறிதும் தாமதிக்காமல் அவள் அறைக்கதவைப் படீரெனத் திறந்து கொண்டு உள்புகுந்தாள். அவள் தந்தையின் கண்களில் தெரிந்த கொலை வெறியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள். ‘க்ரீச்’சிட்டுக் கத்தினாள். அவள் உடல் அனைத்தும் நடுங்கியது. ஒவ்வொரு பாகமும் துடித்தன. அவளையும் அறியாமல், “அப்பா, அப்பா, தந்தையே, வேண்டாம். வேண்டாம்!” என்றாள். ஆனால் இதை அவள் சொன்னாளா இல்லையா என்பது கூட அவளுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஏனெனில் அந்த அறையில் அவளின் கூக்குரலே எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. பயத்தில் அலறினாள் சத்யபாமா! மாபெரும் வித்தகன் ஆன கோவிந்தன், கம்சனைக் கொன்று யாதவர்களைக் காத்து ரக்ஷித்தவன், எவராலும் தவிர்க்க முடியாத போர் வீரன், யாதவர்களின் கண்ணின் கருமணி போன்றவன், சாம்ராஜ்யங்களின் சச்சரவுகளைத் தீர்த்து வைத்து நன்மை செய்யும் நடுநிலை தவறாத மனிதன், தர்மத்தின் காவலன், இப்படிப்பட்ட வாசுதேவக் கிருஷ்ணன், இதோ இப்போது அவள் தந்தையின் கரங்களால் மடியப்போகிறான். பாமாவுக்கு மயக்கமே வந்துவிட்டது.

தன்னையும் அறியாமல் கிருஷ்ணன் என்ன செய்கிறான் என்று பார்த்தாள். அசையாமல் அமர்ந்திருந்தான் கிருஷ்ணன். அவன் தோள்பட்டைகள் கடினமாக உறுதிப்பட்டிருந்தன. சற்றே சாய்ந்த வண்ணம் அமர்ந்திருந்த கிருஷ்ணன் தன்னிரு கைகளாலும் ஆசனத்தின் கைப்பிடிகளை இருபக்கமும் பிடித்த வண்ணம் அமர்ந்திருந்தான். ஆனால் அவன் தனக்கு உதவிக்காக மட்டும் அப்படிப் பிடித்திருக்கவில்லை. அவ்வாறு தன் கரங்களை அவனே கட்டுப்படுத்தவில்லை எனில் எந்த நேரமும் தான் சத்ராஜித்தைத் தாக்கி விடுவோம் என்னும் எண்ணம் தான் காரணம்.எவ்விதமான கஷ்டமும் படாமல் வெகு இயல்பாக சாதாரணமாக அமர்ந்திருந்தான். அவன் முகம் எவ்விதக் கஷ்டத்தையும் சிறிதும் காட்டவில்லை. இன்னும் சொல்லப் போனால் சத்ராஜித்தின் இந்த நடவடிக்கையின் அவன் சிறிது கூட ஆச்சரியப்பட்டதாகவோ, உணர்ச்சி வசப்பட்டதாகவோ காட்டிக் கொள்ளவே இல்லை. அப்படியே அமர்ந்திருந்தவன் சத்ராஜித்தின் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அவன் கண்களில் பயமோ, திகிலோ, உயிர் போய்விடுமோ என்ற அச்சமோ சிறிதும் காணமுடியவில்லை. ஒளிவீசிப் பிரகாசித்தன அவன் கண்களின் மணிகள். சற்றும் மாறாமல் விழிகளைச் சிறிதும் அசைக்காமல் சத்ராஜித்தையே அவை பார்த்தன.

அவன் தொண்டைக்குழியில் சிறியதொரு அசைவு அவ்வப்போது ஏற்பட்டதை சத்யபாமா பார்க்கவில்லை எனில் அவனைச் சிலை என்றே சொல்லலாம். அவன் முகத்திலும் மிக மிக மெலிதான ஓர் சிரிப்புக் காணப்பட்டது. விளையாட்டின் போது குறும்புச் சேட்டை செய்த குழந்தை கையும் களவுமாகப்பிடிபட்ட போது பெரியவர்களுக்கு ஏற்படும் ஆனந்தச் சிரிப்பு! அதை அனுபவித்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணன். பாமாவுக்குப் புரிந்து விட்டது. கிருஷ்ணனின் அசையாத உடல் நிலையும், இரு கைகளாலும் மிக இறுக்கமாக ஆசனத்தின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டிருந்த அவன் நிலையையும் பார்த்ததுமே இது தன்னைத் தானே மிக லாகவமாகச் சுயக்கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துவிடும் ஒரு மனிதனின் நிலை என்பதையும் இவன் சாதாரணமானவன் இல்லை; அசாதாரணமானவன் என்பதையும் உடனே புரிந்து கொண்டு விட்டாள். அவளுக்கு பயத்தில் வியர்த்தது. கிருஷ்ணன் மனதுக்குள் நினைத்து முடிவும் எடுத்து விட்டான். அவள் தந்தையின் கொலை வெறியைத் தன் வலிமையாலோ உடல் பலத்தாலோ அடக்கக் கூடாது; அது கூடாது என்பதைப் புரிந்து கொண்டு செயலாற்றுகிறான் என்பதை பாமா புரிந்து கொண்டு விட்டாள்.

ஆகவே ஓடோடித் தன் தந்தையின் பக்கம் சென்றாள். தன்னால் இயன்ற மட்டும் வலுவாக முயன்று அவர் கைகளைக் கிருஷ்ணன் தோள்களிலிருந்து நீக்க முயன்றாள். “அவரைத் தடுக்காதே, பாமா! என்னை அவரிடமிருந்து நீ காக்க வேண்டாம்!” என்றான் கிருஷ்ணன். மீண்டும் அவன் இதழ்களில் புன்னகை மிளிர்ந்தது. பாமாவுக்குக் கிருஷ்ணன் சொன்னதை உடனே செய்ய வேண்டும் என்று தோன்ற அப்படியே அவள் தன் கைகளைத் தந்தையிடமிருந்து நீக்கினாள். கிருஷ்ணன் அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தான். அவனையே பார்த்த சத்ராஜித் தன் கரங்களைக் கிருஷ்ணன் மேலிருந்து விலக்கிக் கொண்டான். ஆனால் அவையோ அவனுக்குக் கட்டுப்படாமல் தொய்ந்து விழுந்தன. ஆசனத்தின் கைப்பிடிகளை இறுகப் பிடித்திருந்த கிருஷ்ணனின் கைகள் மேல் மீண்டும் அமுக்கப் பார்த்த அந்தக் கரங்கள் திடீரென வலுவிழந்து தொய்ந்தன. அதோடு இல்லாமல் சத்ராஜித்துமே தன் பலம் முழுதும் இழந்தவன் போல் தன் ஆசனத்தில் தொப்பென்று அமர்ந்தான். அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவன் என்னமோ இன்னமும் கிருஷ்ணனைக் கொல்லத் தான் நினைக்கிறான். ஆனால் இயலவில்லை.

அப்போது சத்யபாமாவைத் தொடர்ந்து அந்தத் தாழ்வரைக்கு வந்திருந்த பாமாவின் செல்லப் பூனை ஊரிக்கு அங்குள்ள மாறுபட்ட சூழ்நிலையைக் கண்டதும் என்ன தோன்றியதோ தெரியவில்லை. மூவரும் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகே சென்றதும் நேரே கிருஷ்ணனின் ஆசனத்தின் அருகே சென்று அவனையே பார்த்துக் கொண்டு அமர்ந்து விட்டது. அதன் பச்சைநிறக் கண்கள் ஒருவித ஜொலிப்புடன் கிருஷ்ணனையே பார்த்தன. கிருஷ்ணனும் அந்தப் பூனையைப் பார்த்தான். தன் கரங்களால் அதைத் தடவிக் கொடுத்தான். தன் ஜன்மமே சாபல்யம் பெற்றுவிட்டாற்போல் ஊரி ‘மியாவ்’ என்றது. சந்தோஷத்தில் வாலையும் ஆட்டியது. சில நிமிடங்களில் அந்த அறைக்கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டு அரண்மனையின் பெண்கள் அனைவரும் அங்கே கூடி விட்டார்கள். அங்கே அசையாமல் அமர்ந்திருக்கும் மூவரையும் பார்த்துத்திகைத்து நின்றார்கள். சத்யபாமா தன் தந்தையின் அருகே அமர்ந்திருந்தாள். உடலின் வலுவை எல்லாம் இழந்தாற்போல் களைத்துச் சோர்ந்து அமர்ந்திருந்த அவர் கைகளின் ஒன்றைத் தன் கரங்களுக்குள் வைத்து ஆறுதலாகத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அந்தக்கையானது அவள் கரங்களுக்குள்ளாக நடுங்கியது என்பதை அவளால் உணர முடிந்தது. அவன் களைத்துச் சோர்ந்திருப்பதை அவன் முகம் காட்டியது. உடல் முழுக்க வியர்வையில் நனைந்திருந்தான். நெற்றிப் பொட்டில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் தென்பட்டன.

சத்யபாமா வீரிட்டுக் கத்திய குரலைக் கேட்ட பங்ககராவும் ஷததன்வாவும் உடனே ஓடோடி வந்திருந்தனர். என்ன நடந்ததோ என்ற ஐயம் அவர்களுக்கும் இருந்தது. யாகம் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தமையால் அதை நடத்தி வைத்த வேத பிராமணர்களில் ஒரு சிலருக்கும் என்னவோ ஏதோ என்னும் அச்சத்தால் ஓடோடி வந்திருந்தனர். வந்தவர்கள் பங்ககராவுக்கும் ஷததன்வாவுக்கும் பின்னால் மறைந்து கொண்டு சத்ராஜித்தையே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். கிருஷ்ணனிடம் அவன் நடந்து கொண்டிருந்த முறை அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தது. சற்று நேரம் அங்கே ஆழ்ந்த அமைதி நிலவியது.பின்னர் திடீரெனக் கிருஷ்ணன் பேச ஆரம்பித்தான்.

“மாட்சிமை பொருந்திய சத்ராஜித் அவர்களே! நீங்கள் சொல்வது சரி எனினும் அது உங்கள் அறியாமையின் எல்லைக்குட்பட்டே இருந்தாக வேண்டும். உங்கள் அறியாமை விலகும்போது உங்களுக்கு க்ஷத்திரிய தர்மம் என்னவெனப் புரியும். அப்போது நீங்கள் தானாகவே ஒப்புக் கொள்வீர்கள். நல்லதொரு வாழ்க்கையை வாழ வேண்டுமானால் க்ஷத்திரிய தர்மம் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் அதன் மூலம் வாழ்க்கையின் மேம்பாடுகள் கிடைக்கும் என்பதை நீங்களாகவே ஒப்புக் கொள்வீர்கள்.” கிருஷ்ணன் தன் ஆசனத்திலிருந்து எழுந்து தன் தலைப்பாகையைச் சரி செய்து கொண்டான். அது அவன் தலையிலிருந்து நழுவிக் கீழே விழுந்திருந்தது. சத்ராஜித் பேச முயற்சித்தான். ஆனால் அவனால் பேச முடியவில்லை. அவன் முகத்தில் இன்னமும் குரோதம் தெரிந்தது.

“மாட்சிமை பொருந்திய சத்ராஜித் அவர்களே, இப்போது நான் விடை பெறுகிறேன். உங்கள் உணர்ச்சிகள் சமன் அடைந்ததும், நான் சொன்னதில் உள்ள நியாயமும், நீதியும் உங்களுக்குத் தானாகவே தெரிய வரும். நாளை மாலை சூரிய அஸ்தமனத்துக்குள்ளாக ச்யமந்தகமணிமாலை அக்ரூரரின் கஜானாவிற்கு வந்துவிட வேண்டும். இல்லை எனில்! நானே அதை எடுத்துக் கொள்வேன்!” என்று சற்றும் இரக்கமே தெரியாத குரலில் சொன்ன கிருஷ்ணன், தன் கரங்களைக் கூப்பி விடைபெற்றுவிட்டு தாழ்வரையை நோக்கி நடந்தான். பங்ககரா அவனை வழி அனுப்பி வைக்கக் கூடவே நடந்தான். ஊரியும் அவர்களைத் தொடர்ந்தது. பிரதான நுழைவாயிலில் கிருஷ்ணன் விடைபெற்றுச் செல்கையில் ஊரியைத் தடவிக் கொடுத்துவிட்டுச் சென்றான். ஊரியும் சந்தோஷமாக, “மியாவ்” என்று அதை வரவேற்றுத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டது.

Sunday, November 8, 2015

ச்யமந்தக மணியைக் கொடுத்துவிடு!

சத்ராஜித்தின் கோபத்தைப்பார்த்துக் கிருஷ்ணன் அவனை எரிச்சலூட்டும் விதத்தில் ஒரு விசித்திரச் சிரிப்புடன், “ கோபம் அடையாதீர்கள், சத்ராஜித் அவர்களே! நீங்கள் உங்கள் விருப்பத்தைச் சொன்னீர்கள்! நான் அதை நிராகரித்துவிட்டேன். இப்போது என் முறை! நான் என் விருப்பத்தைச் சொல்லி இருக்கிறேன். உங்களுக்கு விருப்பமிருந்தால் ஒத்துக்கொள்ளுங்கள் இல்லை எனில் நிராகரிக்கலாமே! கோபம் ஏன்?” என்றான் கிருஷ்ணன் நிதானமாக. “என்ன நடந்தாலும் சரி! நான் ஒரு போதும் ச்யமந்தக மணியை விட்டுப் பிரிய மாட்டேன். அது கடவுளால் எனக்கு அளிக்கப்பட்டது! எனக்கு மட்டுமே உரியது!அதைப் பிரிய நான் சம்மதிக்க மாட்டேன்!” என்று குரலை உயர்த்திப் பேச ஆரம்பித்தான் சத்ராஜித்.

“சத்ராஜித் அவர்களே! இப்போது சற்று முன்னர் தான் நீங்கள் உங்கள் மகள் சத்யபாமாவை மிகவும் விரும்புவதாகச் சொன்னீர்கள். அதோடு மட்டுமில்லாமல் உங்கள் அருமை மகள் சாத்யகனுக்கு மருமகளாக விரும்புவதையும் கூறினீர்கள். சாத்யகன் குடும்பத்தின் மருமகளாக உங்கள் மகள் செல்ல வேண்டுமெனில் அதற்குச் ச்யமந்தகம் ஒரு சிறு பரிசு தான். சிறிய விலை தான்! சாத்யகன் குடும்பத்தின் மதிப்பைக் குறித்து நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாம் என எண்ணுகிறேன். நம் யாதவ குலத்திலேயே மிகவும் அருமையான மனிதர் அவர்.”

“ச்யமந்தகம், ச்யமந்தகம்!” திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தான் சத்ராஜித். அவனால் இன்னமும் கிருஷ்ணன் ச்யமந்தகத்தைக் கேட்டதை நம்பவே முடியவில்லை. தன்னிடம் வந்து கூட ஒருவனால் இப்படி எல்லாம் கேட்க முடியுமா என்னும் வியப்பு அவனை விட்டு மறையவில்லை. “இல்லை, ஒருக்காலும் இல்லை! என்னால் ச்யமந்தக மணியைப் பிரிய இயலாது!” என்று மீண்டும் தனக்குத் தானே கூறிக்கொள்வது போல் கூறினான். “அப்படி எனில் நான் கேட்ட விலையைக் கொடுக்க நீங்கள் தயாராக இல்லை! என் விருப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது! அல்லவா?” என்றான் கிருஷ்ணன். “நான் சொல்வது சரிதானே?” என்றும் கேட்டான்.

“வாசுதேவ கிருஷ்ணா! உன் யோசனை மிகவும் அபத்தமானது! இதை எனக்குக் கொடுத்தது சூரிய பகவான் ஆகும். யாதவர்கள் அனைவருக்கும் என்று சொல்லிக் கொடுக்கவே இல்லை! அதை முதலில் புரிந்து கொள். சூரிய பகவானுக்கு நான் கடமைப் பட்டிருக்கிறேன். எனக்கும் சில பொறுப்புகள் இருக்கின்றன.” என்று மிகக் கோபமாகச் சொன்னான். இதை ஒரு வேடிக்கையாக எடுத்துக் கொண்டவன் போல் கிருஷ்ணன் பரிகாசச் சிரிப்புச் சிரிக்க சத்ராஜித்தின் கோபம் அதிகம் ஆனது. ஆனால் கிருஷ்ணன் விடாமல், “எந்தக் கடவுளும் ஒரு தனி மனிதனின் பயன்பாட்டுக்கு மட்டுமே என எதையும் கொடுப்பதில்லை; ஒரு தனிமனிதனின் ஆடம்பர வாழ்க்கைக்காக எதுவும் கொடுப்பதில்லை; இவ்வுலகத்து மாந்தர் அனைவருக்குமாய்த் தான் கொடுக்கிறார்.” என்றவன் தொடர்ந்து, “நாங்கள் உன்னை உன் பொறுப்புக்களிலிருந்து விடுவிக்கிறோம்.” என்றும் கூறினான்.

அதற்கு சத்ராஜித் கிருஷ்ணனை அவமதிக்கும் குரலில், “என் பொறுப்புக்களை நானே சுமக்கிறேன்; அதிலிருந்து விடுபட நான் விரும்பவே இல்லை!” என்றான். கருணையுடன் சிரித்தான் கிருஷ்ணன். “அதனால் பரவாயில்லை, சத்ராஜித் அவர்களே! நீங்கள் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் நான் உங்களை உங்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்போகிறேன்.” என்றான். மேலும் தொடர்ந்து, “உங்கள் நன்மைக்காகவும் சொல்கிறேன். மற்ற யாதவர்களின் நன்மைக்காவும் சொல்கிறேன். ச்யமந்தமணிமாலை இருக்க வேண்டிய இடம் உக்ரசேன மஹாராஜாவின் கஜானாவில் அக்ரூரரின் பாதுகாப்பில் மட்டுமே! அது இருக்க வேண்டிய இடம் அது தான்!” என்றான் தீர்மானமாக!

“ஹா! ஹா! எப்படி அதை என்னிடமிருந்து எடுத்துச் செல்வாய்? உன்னால் அது முடியுமா? உன்னைத் தானே எல்லோரும் கடவுள் என்று சொல்கின்றனர்? நீ எடுத்துவிடுவாயா? நான் சவால் விடுகிறேன்! எவரால் இயலும் அது? ச்யமந்தக மணியை என்னிடமிருந்து பிரிப்பதற்காகவே நீ கடவுளைப்போல் நடிக்கிறாய்! உன்னால் ஒருக்காலும் இயலாது!” என்றான் சத்ராஜித். “அதை நீங்களாகவே கொடுத்துவிடுவீர்கள்! அது சரி, உக்ரசேன மகாராஜாவின் ஆணை கிடைத்தால்? அப்போது என்ன செய்வீர்கள்? ச்யமந்தகத்தைக் கொடுக்க மாட்டேன் என்று உக்ரசேனரிடம் சொல்வீர்களா?”

“கேட்டுப் பார்க்கச் சொல் அவரை!” வெடுக்கென்று பதில் சொன்ன சத்ராஜித் தன் குரலை உயர்த்தி, “ச்யமந்தகம் உங்களுக்கு வேண்டுமென்று நீங்கள் அனைவரும் விரும்பினால், நான் ஒவ்வொரு யாதவனுடனும் போரிடுவேன். ச்யமந்தகத்தை மீட்கப் போரிடுவேன். கடைசியில் பணபலமும், படைபலமும் உள்ள நானே வெற்றி பெறுவேன்.” என்றான்.

“நான் சொல்வது உங்கள் காதுக்கும், கருத்துக்கும் இனிமையானதாக இருக்காது சத்ராஜித் அவர்களே! உங்கள் சொந்த நன்மைக்காகவே சொல்கிறேன்! ச்யமந்தகத்தை அக்ரூரரிடம் கொடுத்துவிடுங்கள். இந்த ஆபரணம் மெல்ல மெல்ல உங்களை அழித்துவிடும்!” என்றான் கிருஷ்ணன். “என்னை அழிக்குமா? வாசுதேவ கிருஷ்ணா! இதைக் கேள்! நீ ஆர்யவர்த்தத்தில் பெற்றதாகச் சொல்லப்படும் வெற்றிகள், ஆனால் எனக்கு இதைக் குறித்து சந்தேகம் இருக்கிறது! உண்மையாகவே நீ வெற்றி பெற்றிருப்பாயா? தெரியவில்லை! அப்படி ஒரு வேளை வெற்றிகளை அடைந்திருந்தாயானால் அவற்றால் உன் கர்வம் அதிகம் ஆகிவிட்டது. அவை உன் தலையை அதன் இடத்தில் வைக்க மறுக்கிறது. தலை தெரியாமல் நீ ஆடுகிறாய்!” என்று சத்தமாகக் கூவின சத்ராஜித் தன் ஆசனத்திலிருந்து எழுந்து நின்றான்.

ஒரு குழந்தையைப் போல் அவனை வேடிக்கை பார்த்த கிருஷ்ணன், “என் தலை என் உடம்பில் இருக்கிற இடத்திலேயே இருக்கும்! அதைக் குறித்து நீங்கள் கவலைப்படாதீர்கள். நீங்கள் கவலை கொள்ள வேண்டியது உங்களைக் குறித்து! உங்கள் தலையைக் குறித்து! அதை நீங்கள் இழக்காதிருக்க வேண்டுமானால் ச்யமந்தகத்தைக் கொடுத்தே ஆக வேண்டும்!” என்றான் கிருஷ்ணன்.

“ஹா, ஹா, என்னைக் கொன்றுவிடுவதாகப் பயமுறுத்துகிறாயா? வாசுதேவா?”

“இல்லை, ஐயா, இல்லை!நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். இதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்: ச்யமந்தகத்தை விரும்பினால் நானே எடுத்துக் கொண்டிருப்பேன். இப்படிக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டேன் ஆகவே நீங்களாகவே கொடுத்துவிடுங்கள்!”

Friday, November 6, 2015

கண்ணன் கேட்ட விலை! சத்ராஜித் அதிர்ச்சி!

“மிகச் சரியாகச் சொல்கிறீர்கள். சரியான ஊகமும் கூட! இப்படிப்பட்ட ஒரு அசாதாரண சூழ்நிலையில் சாத்யகி மாட்டிக் கொள்ள வேண்டாம் என்றே அவனைத் தப்புவிப்பதற்காக மாட்சிமை பொருந்திய சாத்யகர் இம்முடிவை எடுத்திருக்கிறார்.” என்றான் கண்ணன். “இதோ பார் வாசுதேவா! அவள் மிகவும் நல்ல பெண். என் குழந்தைகள் அனைவரிலும் இவளே மிகப் பிடித்தமானவள். மற்றக் குழந்தைகளை விடவும் இவளை நான் அதிகம் நேசிக்கிறேன்.” என்றான் சத்ராஜித்.

“அப்படியா? நீங்கள் சத்யபாமாவை மிகவும் அதிகமாக நேசிக்கிறீர்களா? அப்படி எனில் நீங்கள் உங்கள் ஆடம்பரத்துக்காகவும், தற்பெருமைக்காகவும் அவளை சாத்யகிக்குத் திருமணம் முடிக்க நினைப்பதை அவள் அறிய நேர்ந்தால்? அவள் மனம் வருந்த மாட்டாளா? இதை ஏற்றுக்கொள்வாள் என்று நினைக்கிறீர்களா? இதைக் குறித்து யோசித்துப் பார்த்தீர்களா?”

அதற்கு சத்ராஜித் மிகவும் கர்வத்துடனும், அகந்தையுடனும், “என் குழந்தைகள் திருமணம் அவர்களின் நன்மைக்காகவே நான் ஏற்பாடு செய்கிறேன். என் பணபலத்தையோ, தற்பெருமையையோ நிலை நாட்ட அல்ல!” என்றான். பின்னர் என்ன நினைத்தானோ மேலும் கூறினான்:”வாசுதேவா, நாம் பேச நினைத்த விஷயத்திலிருந்து வெகு தூரம் நாம் விலகி வேறு மார்க்கத்தில் பேச ஆரம்பித்துவிட்டோம். இப்போது மீண்டும் கேட்கிறேன். என் கேள்விக்கு என்ன பதில்? நான் கேட்ட விலையைக் கொடுக்க நீ சம்மதிக்கிறாய் அல்லவா?” என்று கேட்டான்.

“ஐயா, இதன் முக்கியத்துவம் குறித்து நான் நன்கு அறிந்துள்ளேன். நீங்கள் சாத்யகரைப் பயமுறுத்த நினைக்கிறீர்கள். அல்லது இதன் மூலம் மற்ற யாதவத்தலைவர்களான எங்கள் அனைவரையும் மிரட்டி அடிபணிய வைக்க நினைக்கிறீர்கள்.’ சத்யபாமா மூச்சு விடக்கூட மறந்து அங்கே நடந்த பேச்சு வார்த்தையைக் கேட்டாள். அவள் இதயம் “தட், தட்” என்று மிகப் பலமாக சப்தித்தது. எங்கே அந்த சப்தம் உள்ளிருந்தவர்களுக்குக் கேட்டுவிடுமோ என்று பயப்படுபவள் போல் அவள் தன் நெஞ்சின் மேல் கையை வைத்து அழுத்திக் கொண்டு மேலும் உன்னிப்பாகக் கேட்டாள்.

“நான் மிரட்ட நினைக்கவில்லை, வாசுதேவா! இந்த உலகில் எல்லாவற்றுக்கும் ஓர் விலை உண்டு. அதைக் கொடுத்தே ஆகவேண்டும். ஏன்! நீ நிலைநாட்டுவதற்கு முயலும் அந்த தர்மம்! அதற்கும் ஓர் விலை உண்டு! அதைக் கடைப்பிடிக்கவும் உரிய விலையைக் கொடுத்தே ஆகவேண்டும்!” ஏளனம் பொங்கச் சிரித்தான் சத்ராஜித்!

“பேரம் பேசியே அனைத்தையும் வாங்கி விடலாம்! அதுவும் உங்கள் பணபலத்தினால் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்! ஆனால் இவ்வுலகில் என்ன விலை கொடுத்தாலும் கிடைக்காத சில நல்ல விஷயங்கள் உண்டு! அவற்றை நம்மால் பணத்தைக் காட்டி வாங்கவோ, விற்கவோ முடியாது!” என்றான் கிருஷ்ணன். வெளியே பாமாவின் இதயம் குதூகலத்தில் ஆழ்ந்தது. “விரைவில் என் உதவிக்கு வா கோவிந்தா! எனக்கு உதவி செய்! நான் என் வாழ்நாள் முழுவதும் உன் அடிமையாக இருப்பேன்! உனக்கே சேவைகள் செய்வேன்!” என்று தன் மனதிற்குள்ளாகப் பிரார்த்தித்தாள் சத்யபாமா.

“நீ வெளிப்படையாகப் பேசுவதாக நீ தான் சொல்லிக் கொண்டாய்! ஆகவே நானும் அப்படியே பேசினேன்! பேசுவேன்! இந்த ஈரேழு பதினாலு உலகங்களிலும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை இருக்கத்தான் செய்கிறது. அதை எவராலும் மறுக்க இயலாது!” என்றான் சத்ராஜித். கிருஷ்ணன் சற்று நேரம் தான் பேச வேண்டியது என்ன என்று சிந்திப்பவன் போல் மௌனம் காத்தான். அதன் பின்னர் அவன் எவ்விதப் பற்றுதலையும் பேச்சில் காட்டாமல் பேச ஆரம்பித்தான்.” மாட்சிமை பொருந்திய சத்ராஜித் அவர்களே! நீங்கள் ராஜா உக்ரசேனரை அவமதிக்கிறீர்கள் என்பதை உணரவில்லையா? அதோடு மட்டுமில்லாமல் மற்ற யாதவத் தலைவர்களையும் அவமதிக்கிறீர்கள். அவர்களை அவமானம் செய்கிறீர்கள். உங்கள் கால்நடைச் செல்வங்களையும், குதிரைகள், ரதங்கள் போன்றவற்றையும் உங்கள் பண்ணைகளையும் மற்றும் உங்கள் அளப்பரிய செல்வங்களையும் காட்டிப் பிரமிக்க வைத்து உங்களுக்கு அடி பணிய வைக்க நினைக்கிறீர்கள். உங்கள் பங்கைக் கொடுக்காமல் ஏமாற்றியதன் மூலம் மற்ற யாதவர்களை ஏழையாக்கினீர்கள். ஐந்து சகோதரர்களுக்கும் தேவையான நேரத்தில் உதவி செய்ய மறுத்து விட்டீர்கள். அப்படியும் உங்களுக்குத் திருப்தியாக இல்லை. இப்போது மீண்டும் உங்கள் செல்வ வளத்தின் மூலம் அனைத்து யாதவர்களையும் பயமுறுத்த நினைக்கிறீர்கள். உங்கள் அடியாட்களைக் காட்டி மிரட்ட எண்ணுகிறீர்கள். இந்த வீரர்கள், குதிரைகள், ரதங்கள் அனைத்தையும் வைத்து ஒரு சிறுபடையைத் திரட்டி வைத்து இதன் மூலம் ஒரு மாபெரும் சிக்கலை உண்டாக்க நினைக்கிறீர்கள். வீரர்களுக்கும் மோதலை உருவாக்க எண்ணுகிறீர்கள்.   சாத்யகர் தன் மகனுக்கு உங்கள் மகளை மணமுடிக்க மறுத்ததன் மூலம் உங்கள் கௌரவத்திற்குப் பங்கம் ஏற்பட்டுவிட்டதாக எண்ணுகிறீர்கள். அதற்காகவே, அதைச் சரி செய்வதற்காகவே மீண்டும் உங்கள் மகளை வியாபாரப் பொருளாக்கி அவளை சாத்யகிக்கு மணமுடிக்க நினைக்கிறீர்கள். அதன் மூலம் இழந்த கௌரவம் மீண்டும் வந்துவிடும் என்று எண்ணுகிறீர்கள்!” கிருஷ்ணன் சற்றே நிறுத்தினான்.

“வாசுதேவா, சில சமயங்களில் நீ மிகவும் புத்திசாலியாக இருக்கிறாய்! எனக்கு அப்போது உன்னை மிகவும் பிடிக்கிறது. நீ எல்லாவற்றையும் மிக நன்றாக அலசி ஆராய்ந்திருக்கிறாய்! உண்மையை நன்கு புரிந்து கொண்டுள்ளாய்!” என்று ஏளனமாகச் சொன்னான் சத்ராஜித்!  “ஆமாம், நான் உண்மையை நன்கு புரிந்து கொண்டுள்ளேன்! எல்லாவற்றையும் கவனமாகப் பார்க்கிறேன். உங்கள் பார்வையில், உங்கள் நோக்கத்தில் ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை உண்டு. அந்த விலையைக் கொடுத்து அதை வாங்கிவிடலாம்!” என்றான் கிருஷ்ணன். சத்ராஜித் மௌனமாகத் தலையை அசைத்தான்.

மீண்டும் சற்று யோசித்த கிருஷ்ணன் மெல்லப் பேச ஆரம்பித்தான். அவன் முகத்தில் ஒரு விசித்திரமான புன்னகை விரிந்தது. “ உங்கள் எண்ணங்களின் தாக்கம் என்னிடமும் வந்துவிட்டது போல் தெரிகிறது! மாட்சிமை பொருந்திய சத்ராஜித் அவர்களே! நானும் இப்போது ஒரு சின்ன பேரம் செய்யப் போகிறேன். எனக்கும் இப்போது அதற்கான சமயம் வந்திருப்பதாகவும் தோன்றுகிறது. மனமும் அதை விரும்புகிறது!” என்று புன்னகை மாறாமலேயே சொன்னான். அவன் புன்னகையைப் பார்த்தால் மிகவும் வெகுளித்தனமாகக் கண்ணன் பேசுவதாகவே தோன்றியது. சத்ராஜித் அவனைப் பார்த்து, “என்னவானாலும் கேள், கிருஷ்ணா! உன்னுடைய பேரம் என்ன? அதை வெளிப்படையாகச் சொல்! அப்போது தான் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள இயலும்!” என்றான்.

“நீங்கள் உங்கள் மகள் சாத்யகியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் அல்லவா? ரொம்ப நல்லது! அதற்கு நான் இப்போது கேட்கப் போகும் விலையைத் தர நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?”

“ஆம், தயாராகவே இருக்கிறேன். சாத்யகியை என் மருமகனாக அடைய நான் என்ன விலையைக் கொடுக்க வேண்டும்? சும்மாவானும் வெட்டிப் பேச்சுப் பேசாமல் விஷயத்துக்கு வா!” என்றான் சத்ராஜித்!

“பொறுமை, பொறுமை! சத்ராஜித் அவர்களே! அவசரம் வேண்டாம்! நீங்கள் தான் பேரத்தை ஆரம்பித்து வைத்தீர்கள். அதனால் தான் நான் இப்போது பேரம் பேசவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்.”

சத்யபாமா மனம் உடைந்து நைந்து போனாள். கிருஷ்ணன் அப்படி என்னதான் கேட்கப் போகிறான்? “கிருஷ்ணா, கிருஷ்ணா, கோவிந்தா! என் தந்தை என்னை அவருடைய பணத் திமிரில் விற்கும்படி செய்து விடாதே! என்னைக் காப்பாற்று! அவருடைய கௌரவம் இதன் மூலம் திரும்பி வரும் என அவர் நினைப்பதைப் பொடிப்பொடியாக்கு! கிருஷ்ணா! என்னைக் காத்தருள்வாய்! கோவிந்தா! நீயே சரணம்!” அதற்குள்ளாக அங்கே சத்ராஜித் பொறுமை இழந்து மீண்டும் கேட்டான்.”என்ன விலை கேட்கிறாய்? சீக்கிரம் சொல்!” என்று அவசரப் படுத்தினான்.

கிருஷ்ணன் சாந்தமாகத் தன் சுட்டுவிரலை சத்ராஜித்தின் கழுத்தின் மேல் சுட்டினான். அவன் கைவிரல் சத்ராஜித்தின் ச்யமந்தக மணிமாலையைச் சுட்டியது. சத்ராஜித்தின் முகத்தின் கோபம் அந்த மணிமாலையிலும் பிரதிபலித்தது போல் அதுவும் தன் சிவந்த கதிர்களை அந்த அறை முழுதும் பரப்பி அறையையே ஒரு கோபாகிருகமாக மாற்றிக் கொண்டிருந்தது. “சத்ராஜித் அவர்களே! உங்கள் ச்யமந்தக மணிமாலையை மாமா அக்ரூரரிடம் கொடுத்துவிடுங்கள். அது இருக்க வேண்டிய இடம் உக்ரசேன மஹாராஜாவின் கஜானா ஆகும். அக்ரூரர் தான் அரசனின் பொக்கிஷங்களைப் பாதுகாக்கும் பொக்கிஷாதிகாரியாக இருக்கிறார்! ஆகவே அவரிடம் கொடுங்கள்!” என்றான். சத்ராஜித்திற்கு அவன் காதுகளை அவனாலேயே நம்ப முடியவில்லை. அவன் முகம் கோபத்தில் சிவந்தது. கிருஷ்ணனையே முறைத்துப் பார்த்தான். அவன் கண்கள் கோபத்தில் அங்குமிங்கும் உருண்டன.

“என்ன? என் ச்யமந்தக மணிமாலையையா நீ கேட்கிறாய்?”கோபத்தில் உறுமினான் சத்ராஜித்!