Monday, September 27, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

கண்ணன் பேசுகிறான்!

ஸ்ரீகாலவனின் உடல் அனைவரின் பார்வைக்காக வைக்கப் பட்டிருந்த சமயம், அதைக் காண வந்த ஷாயிபா நடந்தவற்றை முற்றிலும் நம்பாதவளாய்த் தான் வந்தாள். ஆனால் இறந்த தன் பெரியப்பனைக் கண்டதும், அவனைக் குறித்துப் பாடப்பட்ட துதிப்பாடல்களை அழுதுகொண்டே புலம்பியதோடு, மார்பில் அறைந்து கொண்டும், தலையைப் பிய்த்துக்கொண்டும் தன் நிலை மறந்து கதறினாள். அவன் உடல் மீது விழுந்து கதறி அழுதவளைப் பிரிப்பதற்கு அனைவரும் பெரும்பாடு பட்டனர். ஒருவழியாக அவளை அழைத்துச் சென்றதும் உடல் எரியூட்ட எடுத்துச் செல்லப் பட்டது. அதன் பின்னர் இப்போது இங்கே கண்ணனைக் காண ஷாயிபா வந்திருக்கிறாள். என்ன நடக்கப் போகிறதோ? கண்ணனைக் கண்டதுமே அவள் அவனை நோக்கிப் பல சாபங்களை மழையெனப் பொழிந்தாள். அவள் நாக்கைச் சுழற்றிய வேகத்தில் சாபங்கள் தவிர வேறு மாதிரி அவளால் பேசமுடியுமா என்னும் அளவுக்குக் கண்ணனுக்குச் சாபங்களை தாராளமாய் வழங்கினாள்.

"கொலைகாரா, மனிதர்களிலேயே மிக மிக மோசமானவன் நீ! உன் குலத்துக்கே சாபம் கொடுக்கிறேன்." இவ்வாறு கூறிய ஷாயிபா தன் இடுப்பில் இருந்து ஒரு கத்தியை உருவினாள். அனைவரும் தங்களைச் சுதாரித்துக்கொள்வதற்குள் கத்தியோடு கண்ணனை நோக்கிப் பாய்ந்தாள். அப்போது ஸ்வேதகேது சட்டென எழுந்து அவள் பின்னால் சென்று அவள் தோள்களைப் பிடித்துக்கொண்டு அவளைத் தடுத்தான். அப்படியே கத்தியையும் அவள் கையிலிருந்து பிடுங்க யத்தனித்தான். அடிபட்ட பெண்புலியாகச் சீறிக்கொண்டிருந்த ஷாயிபா திரும்பி அதே கத்தியால் ஸ்வேதகேதுவைக் குத்த முயன்றாள். அவனையும் தன் வாய்க்கு வந்தவாறு திட்டினாள்! "நீ ஒரு மிருகம், புழுவை விடக் கேவலமானவன்! இங்கே நீ வந்தது என் மூலமாக. உனக்கு இங்கே ஒரு மரியாதையான பதவி கிட்டியதும் என்னால் தான். என் இதயத்தையே உனக்குத் தரவிருந்தேன். நீ என்னை ஏமாற்றிவிட்டு எனக்குத் துரோகம் செய்ததுமல்லாமல் அனைவருக்கும் இதய தெய்வம் போன்றிருந்த என் பெரியப்பனின் சாவுக்கும் காரணமாய் இருந்திருக்கிறாய். அவரைக் கொன்ற இந்தக் கொலைகாரனக் கொல்லவும் உனக்கு இன்னும் தயக்கமாய் இருக்கிறதே! இதை விடக் கேவலம் வேறு இல்லை!"

ஷாயிபா நின்றிருந்த கோலமும், அவள் முகமும், கண்களும் அவள் தன் நிலையில் இல்லை என்பதையும், கிட்டத்தட்ட சுய உணர்வை இழந்திருந்தாள் என்பதையும் சுட்டிக் காட்டியது. என்றாலும் அவளால் பின்னப் பட்ட மாயவலையிலிருந்து வெளி வந்திருந்த ஸ்வேதகேதுவுக்கு அவள் நடந்து கொண்ட விதம் கண்டு இன்னும் ஆத்திரம் அதிகமாயிற்று. தன் முழு பலத்தையும் காட்டி அவள் கைகளை முறுக்கி அவள் கையிலிருந்து கத்தியைக் கீழே விழச் செய்தான். நடுவில் தன்னைத் தடுக்க வந்த உத்தவனையும் அப்பால் தள்ளிவிட்டான். பின்னர் அவளை அடித்துக் கீழே தள்ளினான். அவள் செய்வதறியாது குத்துக்காலிட்டு உட்கார்ந்து திக்பிரமை பிடித்தவள் போல் "ஓ"வென்று பெருங்கூச்சலுடன் அழ ஆரம்பித்தாள்.

வெறுப்போடு அவளைக் கண்ட ஸ்வேதகேது இவ்வளவு நாள் தனக்குள் அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தை அடக்க முடியாமல் தவித்தான். அவனையும் மீறிச் சொற்கள் வெளியே வந்தன! "சூனியக் காரி! நீ என்னை இங்கே அழைத்து வந்தாயா?? என்னை மயக்கி, என் அறிவைக் கெடுத்து என் குருநாதரிடம் இருந்து பிரித்தாயே! என் கடமையையும், என் தர்மத்தையும் என்னை மறக்க வைத்தாயே! முட்டாளும், அறிவீனனும் ஆன ஒரு அரசனைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்த நீ என்னையும் அவ்வாறு செய்வதற்காகவும், அவனுக்கு அடிமையாக இருக்கவுமே என்னை இங்கே அழைத்து வந்தாய்! அதற்காக உன் அழகை,இனிமையான பேச்சை, சாமர்த்தியத்தைப் பயன்படுத்திக்கொண்டாய்! என்னையும் அந்த முட்டாளைப் போற்றிப் பாடி வணங்கும்படி செய்தாய்!"

"ம்ஹும், நானும் முட்டாள் தான்! அதனால் அன்றோ இங்கே வந்ததும் நீ என்னை மணந்துகொண்டு என் மனைவியாவாய் என எதிர்பார்த்து வந்தேன்! ஆனால்..... ஆனால்.... என்ன நடந்தது?? உனக்கு மட்டுமல்ல, முட்டாள் அரசனுக்கும் நான் அடிமையானேன். அவனுடைய வீரர்களுக்கு என் விலைமதிப்பற்ற ஆயுதப் பயிற்சியைக் கற்றுக் கொடுத்தேன். அந்தப் பயிற்சியின் மூலம் என் அருமை நண்பர்களையே அடிமையாக்கினான். உண்மையில் நீயன்றோ உன் பெரியப்பன் மூலம் அனைவரையும் ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்தாய்? பாவம் அந்தப் பரிதாபத்துக்கு உரிய ராணி பத்மாவதி! அவளை என்ன பாடு படுத்தி இருக்கிறாய் நீ? உன்னுடைய அத்தனை கொடுமைக்கும் உன் பெரியப்பனின் ஆதரவு உனக்குக் கிட்டியது. போதாதென்று இளவரசன் ஷக்ரதேவனையும் அடிமைப்படுத்த முயன்றாய்! என் வாழ்க்கையை நீ கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டாய்!"

"ஆனால் என்னால் இயன்றவரை இளவரசன் ஷக்ரதேவனையாவது என்னால் சீக்கிரம் காப்பாற்ற முடிந்தது. ராணி பத்மாவதி கடைசிக்காலத்தை நிம்மதியாய்க் கழிக்கலாம். இத்தனைக்குப் பின்னரும் உனக்குத் திருப்தி கிடைக்கவில்லையா?? என் அருமை நண்பனும், ஜராசந்தனை ஓட ஓட விரட்டியவனும் ஆன கிருஷ்ண வாசுதேவனை என் மூலமே கொல்ல எண்ணுகின்றாயா?? என் அருமையான வாழ்க்கையில் உன்னை நான் பார்த்து மோகம் கொண்ட அந்த நாள் ஒரு கொடுமையான விபத்து ஏற்பட்ட , பேரழிவு ஏற்பட்ட நாளாகும்!"

இத்தனையும் பேசியும் ஸ்வேதகேதுவின் கோபம் அடங்கியதாய்த் தெரியவில்லை. அவன் இன்னமும் ஷாயிபாவின் கைகளை இறுகப் பிடித்து அவளை அடக்கிக் கொண்டிருந்தான். ஆனால் அவளோ, தன் பற்களால் ஸ்வேதகேதுவைக் கடித்துக் காயம் உண்டாக்கிக் கொண்டிருந்தாள். அவனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவும் பெருமுயற்சி செய்தாள். கண்ணன் எழுந்து, ஸ்வேதகேதுவின் கைகளை அவள் உடல் மீதிருந்து எடுத்தான். "ஸ்வேதகேது, அவளைக் குற்றம் சொல்லி என்ன பயன்?? அவளிடம் மயங்கியது நீர் அல்லவோ? உம்முடைய பலவீனம். நீர் பொறியில் சிக்கிய எலி போல் அவளிடம் மாட்டிக் கொண்டீர். உம்மை வலை வீசிப் பிடித்தார்கள். நீரும் பலவீனத்தால் அதில் மாட்டிக் கொண்டீர்! மேலும் இங்கு வந்து நீரும் ஸ்ரீகாலவனை வணங்க ஒப்புக் கொண்டு தானே அவனுக்கு ஊழியம் செய்தீர். உமக்குப் பதவியும், அதிகாரமும், அதன் மூலம் விளைந்த ஆடம்பரங்களும் தேவைப்பட்டது அன்றோ? அதற்கெனப் பெரும் விலையும் கொடுத்தீர் அன்றோ? என்றோ ஒரு நாள் ஷாயிபா உம்மை மணப்பாள் என எதிர்பார்த்து, உம் பரம்பரைகளில் உம் குலத்தில் காலம் காலமாய் வணங்கி வந்த அனைத்துக் கடவுளரையும் மறந்தீர், தர்மத்தை மறந்தீர், உம் வித்தையை மறந்தீர், உம் குருவை மறந்தீர்!"

Saturday, September 25, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

ஷாயிபாவின் ஆவேசம்!

ஸ்ரீகாலவனும் ஸ்வேதகேதுவின் மூர்க்கமான பதிலால் ஆச்சரியம் அடைந்தான். அதோடு கிருஷ்ண வாசுதேவனை ஸ்வேதகேது முன்னமே அறிவான் என்பதும் அவனுக்குப் புதிய செய்தியாக இருந்தது. ஸ்வேதகேதுவைப் பார்த்து, “கிருஷ்ண வாசுதேவன் எவ்வாறு உன் சிநேகிதன் ஆனான்?” என வினவ, ஸ்வேதகேதுவும், சாந்தீபனியின் ஆசிரமத்தில் இருவரும் இருந்ததையும், தான் வேதங்கள் கிருஷ்ணனுக்குக்கற்பித்து வந்ததையும் நினைவு கூர்ந்தான். மேலும் கிருஷ்ணனைத் தான் தன் உயிருக்கும் மேலாய் நேசித்ததையும் கூறி, இன்னமும் அவ்வாறே கிருஷ்ணனை நேசிப்பதாயும் அதில் சிறிதும் மாற்றமில்லை எனவும் கூறினான். “ஆஹா, அவன் உனக்கு இன்னமும் நண்பனா?? எனில் அவனுடன் சேர்ந்து நீயும் மரணத்தைத் தழுவுவாய்!” என்றான் ஸ்ரீகாலவன்.

தன் வீரர்களைப் பார்த்து, “இந்த்த் துரோகியை இழுத்துச் சென்று நரகத்தில் தள்ளுங்கள்!” என ஆணையிட்டான். வீர்ர்களிடம் தன் ஆயுதங்களை ஒப்படைத்த ஸ்வேதகேது அவர்களைப் பின் தொடர்ந்தான். ஷாயிபாவின் தொண்டையிலிருந்து ஓர் அவலக்குரல் எழும்பி அடங்கியது. அதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்த ஸ்வேதகேது தன் கண்களாலேயே அவளுக்குத் தன் எதிர்ப்பைக் காட்டினான். அந்த நிமிடமே ஷாயிபா தன்னைச் சுற்றிப் பின்னியிருந்த மாயவலை பட்டென அறுந்து அவள் தன் மேல் செலுத்தி வந்த ஆதிக்கத்திலிருந்தும் முழுமையாய்த் தாம் மீண்டுவிட்டோம் என்றும் புரிந்து கொண்டான் ஸ்வேதகேது.

ஸ்ரீகாலவன், ஆணவத்துடன், “நல்லது. நாம் நம்முடைய இந்தப் புனிதமான திருக்கரங்களாலேயே அந்த மாட்டிடையனுக்கு மரணத்தைத் தருவோம். வேறு வழியில்லை. எங்கே ரத சாரதி?? சாரதி, என்னுடைய மிகச் சிறந்த போர் ரதத்தைத் தயார் செய்து கொண்டுவாரும்! ஆயுதக் களஞ்சியக் காவலரே! மிகச் சிறந்த வில்லாயுதத்தையும் அதற்கேற்ற அம்புகளையும் தயார் செய்யுங்கள். இந்த மூவுலகுக்கும் ஒரே உற்ற கடவுளான நாம் இப்போது மரணக் கடவுளான யமனாகவும் மாறவேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. அந்த யாதவகுல இடைச்சிறுவனுக்கு மரணம் நெருங்கிவிட்டது! “ என்றான்.

சீக்கிரமே ஒரு அழகான மாய, மந்திரங்களில் சிறந்த ரதம் ஒன்று வந்தது. முழுக்க முழுக்கத் தங்கத் தகடுகளால் வேயப்பட்ட அந்த ரதம் இரண்டு குட்டையான , அதே சமயம் வலுவான குதிரைகளால் இழுக்கப் பட்டு வந்தது. ரத சாரதிகளும் இருவர் இருந்தனர். இருவருமே தங்கக் கவசங்கள் அணிந்திருந்தனர். கனமான உருட்டுக்கட்டைகள் தாங்கிய எட்டு மெய்க்காவலர்கள் சூழ்ந்திருந்தனர். ரதத்தின் மேலே ஸ்ரீகாலவனின் கொடி பறந்து கொண்டிருந்தது. தன்னுடைய மாட்சிமை பொருந்திய வில்லையும், அம்புகளையும் எடுத்துக்கொண்ட ஸ்ரீகாலவனின் அம்புறாத்தூணியில் விலை மதிக்க முடியாத கற்கள் பதிக்கப் பட்டிருந்தன. அந்த அம்புறாத்தூணியை எடுத்துக்கொள்ளத் தனியே ஒரு காவலன் நியமிக்கப் பட்டிருந்தான். இத்தனை ஆடம்பரங்களோடு ரதத்தில் ஏறிய ஸ்ரீகாலவன் அதன் உயர்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டான். அவன் உடலிலும் தங்கமும், நவரத்தினங்களும் போட்டி போட்டுக்கொண்டு ஜொலிப்பதைப் பார்த்தால் பணமும், அதிகாரமும் அங்கே ஸ்ரீகாலவனுக்குக் கைகட்டிச் சேவகம் புரிவதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

கூடியிருந்த மக்கள் அனைவரும், “ஜெயவிஜயீபவ, ஸ்ரீகாலவ வாசுதேவருக்கு மங்களம்!” என்றெல்லாம் கோஷங்கள் இட, அதைப் பார்த்துக்கொண்டும், கேட்டுக் கொண்டும் பெருமையோடு பயணித்த ஸ்ரீகாலவன் வெகு சீக்கிரமே, தான் அமர்ந்திருந்த உயர்ந்த பீடத்தில் இருந்து சற்றுத் தூரத்தில் ஒரு ரதத்தில் மெல்லிய உருவம் கொண்ட ஒரு சிறுவன் அமர்ந்திருந்ததைப் பார்த்தான். தன்னுடைய பதிலுக்காகவே அவன் அங்கே காத்திருக்கிறான் என்பதையும் புரிந்துகொண்டான். ஸ்ரீகாலவன் மேற்கொண்டு ஏதும் பேசும்முன்னரே, அவன் ரதத்தில் விரைந்து வருவதைப் பார்த்த கிருஷ்ணன், தன் பாஞ்சஜன்யத்தை எடுத்து ஊதினான். பின்னர், “ஹே ஸ்ரீகாலவ வாசுதேவரே, உமக்கு நமஸ்காரம்! நான் கிருஷ்ண வாசுதேவன், வசுதேவனின் குமாரன் உம்மை வணங்குகிறேன். என் தந்தை சார்பாக வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன்.” என்றான்.

ஸ்ரீகாலவன் அதற்குப் பதிலாகத் தன் காவலனிடமிருந்து ஒரு அம்பைப் பெற்றுக்கொண்டு வில்லில் பூட்டிய வண்ணம் வில்லின் நாண் ஏற்படுத்தும் சப்த்த்துக்கும் மேலாக உரத்த குரலில், “மூவுலகிலும் வாசுதேவன் என இருப்பவன் நான் ஒருவனே! வேறு எந்த வாசுதேவனையும் என்னால் ஏற்க முடியாது!” என்று கூறிக்கொண்டே அம்பைச் செலுத்தினான். அம்பு வரும் நோக்கத்தையும், அதன் விரைவையும் வெகு சீக்கிரம் கணக்கிட்டுக்கொண்ட கிருஷ்ணன் தன் ரதத்தைச் சற்றே அப்பால் நகர்த்த, அம்பு கிருஷ்ணனின் தோள்பட்டையை உரசிக்கொண்டு சென்றது. அவன் இடது தோளில் சற்றே காயத்தை அது ஏற்படுத்த பார்த்துக்கொண்டிருந்த கருடன், க்ரீச்சிட்டான். அந்தக் குரலைக் கேட்ட சுற்றுவட்டாரமே நடுங்கியது.

கிருஷ்ணன் தன் ரதத்தை மெல்ல மெல்ல ஸ்ரீகாலவனின் ரதத்துக்கு அருகே கொண்டு சென்றான். கிருஷ்ணனின் குதிரைகள் நன்கு பழக்கப் படுத்தப் பட்டிருந்தன. ஸ்ரீகாலவனின் குதிரைகளோ நேர்மாறாக முரட்டுத் தனமாய்ப் பழக்கி இருந்தார்கள். ஆகவே அந்தக் குதிரைகளைப் பழகிய கிருஷ்ணனின் குதிரைகள் லேசாக ஒரு இடி இடிக்க, அவை நிலை தடுமாறிச் சுற்றிச் சுற்றி வந்தன. ரதமும் சேர்ந்து சுற்றியது. ரதத்தில் உள்ளவர்கள் நிதானித்துக்கொண்டு குதிரைகளை அடக்க முயற்சிக்கும் முன்னரே, கிருஷ்ணன் தன் குதிரைகள் உதவியோடு அந்தக் குதிரைகளை ரதத்திலிருந்து பிரித்தான். தறிகெட்ட குதிரைகள் மிரண்டு நிற்கத் தன் ரதத்தில் ஏறி நின்றுகொண்ட கிருஷ்ணன் கண்ணிமைக்கும் நேரத்தில் தன் சக்ராயுதத்தை எடுத்தான்.

நிலைமையைப் புரிந்து கொண்டு ஸ்ரீகாலவன் தன்னை நிதானப் படுத்திக்கொண்டு அடுத்த அம்பை எடுத்துக் கிருஷ்ணனின் மார்புக்குக் குறி வைத்தான். ஆனால் என்ன நடந்தது, எப்படி நடந்தது என்பதே அறியாதவண்ணம் கிருஷ்ணன் செலுத்திய சக்ராயுதம் ஸ்ரீகாலவனின் கழுத்தை வெட்டித் தள்ளிவிட்டுத் திரும்பக் கிருஷ்ணனின் கைகளுக்கே போய்ச் சேர்ந்தது. ஸ்ரீகாலவனின் உடல் ரதத்தின் இருக்கையில் தத்தளித்துத் தடுமாறியது.
ரத சாரதிகள் என்ன செய்வது எனப் புரியாமல் குதிரைகள் சென்ற திசை நோக்கி ரதத்தைச் செலுத்த முற்பட, குதிரைகளோ வேறுபக்கம் ஓடி விட்டிருந்தன. இப்படி அவர்கள் குழம்பிக்கொண்டிருந்தபோதே கிருஷ்ணன் கரவீரபுரத்துக்குள்ளே தன் ரதத்தைச் செலுத்திக்கொண்டு நகருக்குள் நுழைந்தான்.

சற்று நேரத்துக்கெல்லாம் அங்கே பலராமனும், தாமகோஷனும் சேர்ந்து கொள்ள தளபதியான ஸ்வேதகேதுவோ, அரசன் ஆன ஸ்ரீகாலவனோ இல்லாமல் விழித்துக்கொண்டிருந்த கரவீரபுரத்துப் படைகள் எதிர்ப்பின்றிச் சரண் அடைந்தன. கிருஷ்ணன் முதலில் நரகமான சிறைச்சாலைக்குள் இருந்த ஆசாரியர்களையும், புநர்தத்தனையும் ஸ்வேதகேதுவையும் விடுவித்தான். உத்தவனும் இதற்குள் வந்து சேர்ந்து கொண்டு கரவீரபுரத்தில் நடந்தது அனைத்தையும் கிருஷ்ணனுக்குத் தெரிவித்தான். ராணி பத்மாவதியை அழைத்து அவளுக்கு உரிய மரியாதையைச் செலுத்திய கிருஷ்ணன் அவள் மனம் நோகாவண்ணம் அவள் கணவனின் மரணச் செய்தியையும் தெரிவித்து அவளை ஆசுவாசப் படுத்தினான். அவர்களின் ஒரே குமாரன் ஆன ஷக்ரதேவனுக்கு உடனடியாகப் பட்டம் கட்டி அரசன் ஆக்கலாம் எனவும் ஆறுதல் கூறினான். தான் வேறு வழியில்லாமலே ஸ்ரீகாலவனைக் கொல்ல நேர்ந்ததாயும், அவனுடைய நட்பையே நாடி வந்த தன்னைக் கொல்ல அவன் மேலும் மேலும் முயற்சிக்கவே அவனைக் கொன்றதாயும் கிருஷ்ணன் கூறினான்.

ஷக்ரதேவனை ஒரு நல்ல ஆசாரியரிடம் சேர்ப்பித்து நல்லதொரு அரசனாக அவனை மாற்றி நல்ல அரசாட்சியைதரும்படி மாற்றுவதாயும் உறுதி கூறினான். நாட்டு மக்கள் அனைவருக்கும் இனி ஸ்ரீகாலவ வாசுதேவனுக்கெனச் சிறப்பு வழிபாடுகளோ தனி வழிபாடுகளோ இல்லை என்றும் அவரவர் அவரவருக்குப் பிடித்த கடவுளரை, பிடித்த முறையில் வணங்கிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கச் செய்தான். விடுவித்த ஆசாரியர்கள் இஷ்டப்பட்டால் அங்கேயே தங்கிக் குடிமக்களுக்கு அனைத்துத் தர்மங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள், வேத, வேதாந்தங்கள், ஆயுதப் பயிற்சி, சங்கீதப் பயிற்சி, மற்றக் கலைகளைக் கற்பிக்கலாம் எனவும் அதற்கென அவர்கள் ஆசிரமம் ஏற்படுத்திக்கொள்ள மக்கள் ஒத்துழைப்புக் கொடுப்பார்கள் எனவும் அறிவிக்கச் செய்தான். அங்கே தங்க இஷ்டப் படாத ஆசாரியர்கள் அவரவர் விரும்பும் இடத்துக்குச் செல்லலாம் எனவும் கூறச் செய்தான்.

இறந்த ஸ்ரீகாலவனுக்கு உரிய அரசமரியாதைகளுடன் எரியூட்டவும் ஏற்பாடுகள் செய்தான். அரசமரியாதைகளோடு ஒரு பேரரசனுக்குரிய மரியாதைகளோடு எரியூட்டப் பட்ட ஸ்ரீகாலவ வாசுதேவனின் இறுதிச் சடங்குகளைக் கிருஷ்ண வாசுதேவன் அருகில் இருந்து ஆசாரியர்கள் உதவியுடன் ஸ்ரீகாலவனின் குமாரன் ஷக்ரதேவனைச் செய்ய வைத்தான். எல்லாம் முடிந்து அரண்மனைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது அங்கே ஒரே சப்தம். இனம் புரியாததொரு அமர்க்களம் நடந்து கொண்டிருந்தது. கிருஷ்ணன் யோசனையுடன் தனக்கென ஒதுக்கப் பட்டிருந்த இடத்தில் உத்தவனோடும், புநர்தத்தனோடும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். தடால் என்ற சப்தத்துடன் கதவு திறக்கப் பட்டது. அலங்கோலமான ஆடையுடன் காற்றில் கேசமும், சேலைத் தலைப்பும் பறக்க, கண்கள் கோபத்திலும், அழுகையிலும், சிவந்திருக்க முகம் அவமானத்தில் வெந்து துடிக்க, கண்மணிகளோ அவை நெருப்புக் கட்டிகளோ என்னும்படியான அனல் உமிழும் பார்வையோடு ஷாயிபா அங்கே நுழைந்தாள்.

Wednesday, September 22, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

ஸ்வேதகேதுவின் மாற்றம்!

"ஐயா, அவன் ஒரு ரதத்தில் வந்திருக்கிறான். ரதசாரதி இளம் கருடன் ஒருவன். அவனுடைய முகமே கண்ணனின் கொடியிலும் காணப்படுகின்றது. ஒரு கதை, வில், அம்புகள் நிறைந்த அம்புறாத்தூணி, புதியதொரு ஆயுதமான ஒரு சக்கரம், அப்புறம் ஒரு சங்கு! அந்தச் சங்கைத் தான் தன் வரவைத் தெரிவிக்கப் பயன்படுத்துகிறான். தங்களுடன் நட்பை நாடியே வந்திருப்பதாய்த் தெரிவித்தான்.”

“என் நட்பு! இந்த ஸ்ரீகாலவ வாசுதேவன் ஒரு சாமானிய இடைச்சிறுவனோடு நட்புப் பாராட்டுவதா? என்ன தைரியம் அவனுக்கு?”

ஐயா, எனக்குச் சற்று அவகாசம் கொடுத்தால், கிருஷ்ணன் கூறியதை முழுவதும் கூறிவிடுவேன். “ என்று ஸ்வேதகேது, இறைஞ்ச, “விரைவாய்ச் சொல்!” என அதிகாரத் தொனியில் ஸ்ரீகாலவன் கூறினான். அதன் மேல் ஸ்வேதகேது, “கிருஷ்ணன் சொன்னான்:”சிலகாலம் வரை நான் பொறுத்திருப்பேன். என்னிடம் உத்தவனும், புநர்தத்தனும், அவனின் பாட்டனார் ருத்ராசாரியாரும், மற்ற ஆசாரியர்களும் எந்தவித சேதமும் இல்லாமல் ஒப்படைக்கப் படவேண்டும். அப்படி எவரும் வரவில்லை எனில், கோட்டைக்கதவுகள் என்னால் உடைத்துத் திறக்கப் படும்.” இது தான் ஸ்வாமி கிருஷ்ணன் கூறியவை!” என்று முடித்தான் ஸ்வேதகேது.

கூடியிருந்த ,மக்கள் கூட்டம் ஸ்தம்பித்து நின்றது. ஸ்ரீகாலவவாசுதேவனை எதிர்த்து ஒருவன் பேசுகிறானா? கரவீரபுரத்தை ஒரு சாதாரணமான, சாமானியமான மன்னன் ஆளும் தலைநகரம் என நினைத்துவிட்டானா? இது ஸ்ரீகாலவ வாசுதேவன் குடியிருக்கும் கோயில் அல்லவோ? புனிதத்திலும் புனிதமான ஒன்றல்லவோ? ராணி பத்மாவதியின் கைகளும், கால்களும் நடுங்கின. பயத்தின் எல்லையைத் தாண்டி இனம் புரியாததொரு கலக்கம் அவள் நெஞ்சை அலைமோத , மெல்ல, தன் கணவனைப் பார்த்து, “ஸ்வாமி, தயவுசெய்து ஆசாரியர்கள் அனைவரையும் விடுவியுங்கள். அவர்களைச் சிறையில் அடைத்திருப்பது நல்லதல்ல!” என்று கெஞ்சினாள்.

“எனக்கு நீ புத்திமதி சொல்லும் அளவுக்குத் துணிந்தாவிட்டாய்??” கோபமாய்க் கேட்ட ஸ்ரீகாலவன் குரல் இடியோசை போல் எழுந்தது. அதைக் கேட்ட மாத்திரத்திலேயே ராணி பத்மாவதிக்கு மயக்கம் வர அவளைப் பிடித்துக்கொண்ட ஷாயிபாவின் முகத்தில் தன் பெரிய தகப்பனின் வீரத்தைக் குறித்த பெருமை தாண்டவம் ஆடியது. அவள் முகத்திலேயே பெருமையும், சந்தோஷமும் தெரியத் தன் பெரியப்பனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஷக்ரா என்னும் பெயர் உள்ள இளவரசன், ராணி பத்மாவதிக்கும், ஸ்ரீகாலவனுக்கும் பிறந்த பையன், ஓடோடி வந்து தன் தாயைக் கட்டிக் கொண்டு அழுதான். தன் மகனை வெறுப்போடு பார்த்த ஸ்ரீகாலவன், “அந்த இடையன் என் கோட்டைக் கதவுகளைத் தொடும் முன்னரே நம் தெய்வீகக் கோபம் அவனைச் சுட்டுப் பொசுக்கி நிர்மூலமாக்கிவிடும். ஸ்வேதகேது, நம் படையின் சிறந்த வீரர்களைத் திரட்டி உம் தலைமையில் அழைத்துச் செல்லும். தன் தாய் மாமனைக் கொன்ற அந்தக் கொலையாளியும், இடைக்குலத்தில் பிறந்தவனுமான கிருஷ்ணனின் தலையை வெட்டிக் கொண்டு வாரும்! ம்ஹ்ம்! ஜராசந்தன், பிரஹத்ரதனின் குமாரன், மகதச் சக்கரவர்த்தி, ஒரு கோழையைப் போல் ஓடிவிட்டானா?? அவன் வேண்டுமானால் ஓடுவான்! ஆனால் நாம் மூவுலகும் வணங்கும் பரவாசுதேவனாக இருந்துகொண்டு இப்படிப்பட்ட அயோக்கியர்களுக்குத் தண்டனை வழங்கவில்லை என்றால் நீதி என்பதே இருக்காது!” தீர்மானமாய்ச் சொன்னான் ஸ்ரீகாலவன்.


தலை சுற்றியது ஸ்வேதகேதுவுக்கு. இக்கட்டான ஒரு நிலைமையில் தான் இருப்பதும் புரிந்தது. ஒரு பக்கம் ஸ்ரீகாலவன் கிருஷ்ணன் தலையைக் கொண்டுவரும்படி திட்டவட்டமாய் ஆணை பிறப்பிக்கிறான். இன்னொரு பக்கம் ஷாயிபா அவன் என்ன செய்யப் போகிறான் என்ற எதிர்பார்ப்போடும், தன் பெரியப்பனின் வீரத்திலும், அவனின் தெய்வீகத்திலும் அளவற்ற நம்பிக்கையோடும் ஈடுபாடோடும் பார்த்துக்கொண்டிருக்கிறாள். உத்தவனோ ஸ்வேதகேது என்ன பதில் சொல்லப் போகிறான் என்று காத்துக்கொண்டிருக்கிறான் போல் தெரிகிறது. அதோடு கூடவே, மயங்கி விழுந்திருக்கும் ராணி பத்மாவதியின் பரிதாபமான முகத் தோற்றமும், அவள் வாழ்நாள் பூராவும் ஸ்ரீகாலவனின் கொடுங்கோன்மையால் பட்டு வரும் கஷ்டங்களும் அணி வகுத்தன. எல்லாவற்றுக்கும் மேல் ஸ்வேதகேதுவின் காதுகளில் ஒலித்த அந்த மந்திரக் குரல், அவற்றின் வசீகரத் தன்மை! அவை சொன்ன மிருதுவான வார்த்தைகள், வார்த்தைகளைச் சத்தமாய்ச் சொன்னால் கூட அவற்றுக்கு வலிக்குமோ என்னும்படிக்கு மென்மையாக, அதே சமயம் உறுதியாகக் கண்ணன் கூறியவை!

“ஸ்வேதகேது, நாம் அனைவரும் சேர்ந்து சோமநாதம் என அழைக்கப்பட்ட க்ஷேத்திரத்தில் வணங்கினோமே மஹாதேவர் அவரல்லவோ நம் அனைவருக்குக் கடவுள்?” கண்ணன் கூறிய இந்த வார்த்தைகள் ஸ்வேதகேதுவின் மனதில் எதிரொலித்துக்கொண்டிருந்தது. ஆனால் இப்போது மட்டும் அவன் ஸ்ரீகாலவன் சொன்னபடி செய்தான் எனில், ஷாயிபாவின் காதல் கிட்டலாம். ஒருவேளை திருமணத்துக்குக் கூட அவள் சம்மதிக்கலாம். அவளும் மிகுந்த எதிர்பார்ப்போடு நம்மைப் பார்க்கிறாளே? மேலும் ஸ்ரீகாலவனை எதிர்த்தால் என்ன நடக்குமோ?? ஷாயிபாவும் லேசுப்பட்டவள் அல்லவே! இருவரும் சேர்ந்து என்ன செய்வார்களோ?? ஆனால்…….ஆனால்………. கண்ணன், கண்ணன், என் அருமை நண்பன், என் பிரியத்துக்கு உகந்த சீடன், என்னிடம் வேத அத்யயனம் செய்தவர்களிலேயே மிகச் சிறந்தவன், அவனோடு எவ்வளவு முறை சோமநாத்தின் கோயிலுக்குப் போய் மஹாதேவரை வணங்கி மந்திர கோஷம் செய்திருக்கிறோம்??

எல்லாவற்றுக்கும் மூலப் பொருளும், எவரும் அறியமுடியாத, புரிந்துகொள்ள முடியாத தன்மை படைத்தவரும், அடிமுடிகாணா ஜோதிவடிவானவரும் ஆன அவரன்றோ நம் அனைவருக்கும் கடவுள்?? அவரை விடுத்து சாதாரண மனிதன் ஆன இந்த ஸ்ரீகாலவனின் பேச்சைக் கேட்டுக்கொண்டு என்ன செய்கிறேன் நான்??? ஷாயிபாவா, கண்ணனா? என்று ஊசலாடிய ஸ்வேதகேதுவின் மனம் கண்ணன் பால் சாய்ந்தது. அவன் தலை நிமிர்ந்தது.
“மன்னிக்கவேண்டும் அரசே! வேறு என்ன வேலை செய்யச் சொன்னாலும் செய்து விடுகிறேன். ஆனால் கண்ணனை எதிர்த்துப் போரிடுவது மட்டும், ஒருகாலும் நடவாது!” உறுதியாகச் சொன்னான். ஸ்ரீகாலவனின் முகம் விகாரமாக மாற, ஷாயிபாவின் தொண்டையில் இருந்து விநோதமானதொரு சத்தம் எழும்பியது. “என்ன?” இடியோசை போல் கேட்ட ஸ்ரீகாலவனின் குரலையும் மீறிக்கொண்டு கண்ணனின் குரல் இனிமையானதொரு சங்கீதம் போல் கேட்டது ஸ்வேதகேதுவுக்கு. “என்னால் கண்ணனுடன் சண்டை போட முடியாது. உங்களுக்குத் தேவை எனில் என் சிரத்தைத் துண்டியுங்கள். நான் எதற்கும் தயார்!” என்றான்.

கூடியிருந்த மக்கள் கூட்டம் ஸ்தம்பித்து நின்றது. இன்று வரையிலும் ஸ்ரீகாலவனின் எதிரே, அவன் எதிரே தாங்கள் இருப்பதே மிகவும் புனிதமான ஒன்று எனக் கருதி வந்த அந்த மக்களுக்கு, தங்கள் கடவுள் எதிரே இப்படியும் ஒருவன் பேசுவான், பேசமுடியும் என்பது அவர்களை வியப்பின் எல்லைக்கு இட்டுச் சென்றது. இம்மாதிரிப் பேசிய எவரும் இதுவரையிலும் உயிர் தப்பியதில்லை. ஸ்ரீகாலவ வாசுதேவனின் தெய்வீகத் தன்மையின் உதவியோடு தண்டனை அளிக்கப்பட்டுக் கொல்லப் பட்டிருக்கின்றனர். இவனுக்கும் அதுதான் நடக்கப் போகிறது!

இதுதான் தப்பிச்செல்ல தக்க சந்தர்ப்பம் என நினைத்த உத்தவன், மெல்ல ஒருவரும் கவனிக்காதபடிக்கு அங்கிருந்து நழுவினான். அவன் இன்னும் ஸ்ரீகாலவனின் அதிகாரிகளின் அதிகாரபூர்வ உடையிலேயே இருந்து வந்ததால் அப்போது கண்ணனை உள்ளே விடுவது அவனுக்கு எளிதாகவும் இருக்கும். செல்லும்போது சற்றே திரும்பி ஷாயிபாவைப் பார்த்த உத்தவன் அவள் முகத்தில் கொதித்த கோபக் கனலைக் கண்டு அதிர்ந்தான்!

Sunday, September 19, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

கண்ணன் வந்துவிட்டான்!

தொடர்ந்து தனக்கு இழைக்கப்படும் கொடுமைகளால் ராணி பத்மாவதி மிகுந்த மனக்கஷ்டத்திலும் உடல் கஷ்டத்திலும் இருப்பதைப் புரிந்து கொண்ட உத்தவனுக்கு அவள் மேல் பரிதாபம் தோன்றியது. அதற்குள்ளாக ஸ்ரீகாலவனுக்குப் பாதபூஜைகள் நடக்க அவன் பாதங்களுக்குச் செய்யப்பட்ட அபிஷேஹ நீர் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டு ராணி பத்மாவதியிலிருந்து அங்கு கூடியிருந்த அனைவரும் அதைப் புனித நீராகக் கருதி உட்கொண்டனர். இயந்திரத்தனமாய் இயங்கிய பத்மாவதியும் அதற்கு நேர்மாறாக உணர்ச்சிப் பெருக்கோடும், பக்திபூர்வமாயும் இயங்கிய ஷாயிபாவும் உத்தவனைக் கவர்ந்தனர். ஷாயிபாவின் முழு ஈடுபாடும், தான் பிறப்பெடுத்திருப்பதே ஸ்ரீகாலவனுக்கு வழிபாடுகள் நடத்தவென்று அவள் காட்டிய பக்தியும் உத்தவனை வியக்க வைத்தது. ஸ்ரீகாலவன் பேரில் பக்திப்பாடல்கள் பாடப்பட்டன.

மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தும், தனித்தனியாகவும் தூப,தீப ஆரத்திகள் எடுத்தனர். அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீகாலவன் முகம் பெருமையில் பிரகாசித்த்தை உத்தவன் புரிந்து கொண்டான். மெல்ல மெல்ல பாடல்களும், ஆடல்களும் உச்சகட்டத்தை அடைந்து கொண்டிருந்தது. அந்தச் சமயம் முன்னறிவிப்பு இல்லாமல் கோட்டையின் காவலன் ஒருவன் யாரோ பிடித்துத் தள்ளுவது போல் குதிரையில் வேகமாய் நுழைந்தான். ஆடல்,பாடல்களில் ஈடுபட்டிருந்த சாமானியர்கள் எவரும் சரியாய்க் கவனிக்கவில்லை என்றாலும், அவர்கள் கவனித்திருந்தாலும் ஸ்ரீகாலவனின் அநுமதியோ, ஷாயிபாவின் அநுமதியோ இல்லாமல் பாடல்களையோ, வழிபாடுகளையோ நிறுத்த முடியாதென்பதால் தொடர்ந்து கொண்டிருந்தனர். ஆனால் தன் ஒரு கண்ணசைவால் ஸ்ரீகாலவன் கோட்டைக்காவலனின் அவசரமான நுழைவைக் கவனித்துக்கொண்டான். உடனே தன் கைகளை மேலே உயர்த்தினான். மந்திரம் போட்டது போல் கூட்டம் மெளனமானது.

அந்தக் காவலனைத் தன்னருகே அழைத்தான் ஸ்ரீகாலவன். அவனும் அருகே வந்து, “ஸ்ரீகாலவ பரவாசுதேவருக்கு மங்களம்! உமக்கே ஜெயம்! கிருஷ்ண வாசு……….” சற்றே தயங்கிய காவலன், “யாதவ குலத்துக் கிருஷ்ணன் மதுராவில் இருந்து நம் கோட்டை வாயிலுக்கு வந்து காத்திருக்கிறான். மேன்மை பொருந்திய பரவாசுதேவராகிய உம்மை வணங்கிச் செல்லவேண்டும் என அநுமதி கேட்கிறான். “ என்றான். இதைச் சொல்வதற்குள் அவன் குளறிவிட்டான். உதடுகள் துடிதுடிக்கக் கால்களும், கைகளும் நடுங்கின. ஸ்ரீகாலவனின் முகத்தில் சின்னதாக ஒரு வியப்புக்குறி. அதைக் கேட்டுக்கொண்டிருந்த உத்தவனுக்கோ நாம் எச்சரிக்கும் முன்னர் கிருஷ்ணன் வந்துவிட்டானே! இந்த ஸ்ரீகாலவன் என்ன பண்ணப் போகிறானோ, இங்கே உள்ள நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் கண்ணன் வந்திருக்கிறான். என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

ஸ்ரீகாலவனோ, “சேச்சே, இடைக்குலத்தில் பிறந்த நீசனான மனிதனை எல்லாமா இங்கே இந்தப் புனிதமான இடத்தில் அநுமதிப்பது! கேள்விக்கே இடமில்லை. ஸ்வேதகேது, வாரும் இங்கே!” என்று அழைத்தான். ஸ்வேதகேதுவுக்கு ஒரு பக்கம் கண்ணன் வருகை மனமகிழ்வைத் தந்தாலும் இன்னொரு பக்கம் மனதில் இனம் புரியாத சஞ்சலமும் ஏற்பட்டது. எனினும் ஸ்ரீகாலவனை மீற முடியாமல் அவனருகே சென்றான்.

“உமக்குத் தான் புரியும் அல்லவா அவன் மொழி?? போம், போய் அவனை யார் என்றும், ஏன் இங்கே வர விரும்புகிறான் என்றும் கேட்டுவிட்டு வாரும்! போம், உடனே போம்!”
ஸ்வேதகேது ஏனோ தயங்கினான். ஆனால் ஸ்ரீகாலவனோ, அவனை உடனே செல்லும்படி நிர்ப்பந்தம் செய்தான். மேலும் பாதியில் நிறுத்தப்பட்ட தன்னுடைய வழிபாட்டுப் பாடல்களையும், ஆடல்களையும் மீண்டும் தொடரும்படி சைகையும் செய்தான். வேறுவழியில்லாமல் அவனை வணங்கிவிட்டு ஸ்வேதகேது செல்ல, ராணி பத்மாவதி, தயங்கின குரலில், “ஸ்வாமி, நம் கோட்டை வாயிலில் ஒரு விருந்தினர் வந்து நம்மை வணங்க விரும்பினால் அவரை நாம் வரவேற்பது தானே முறை?” என்றாள். அந்த இடத்திலேயே அடித்துவிடுவான் போல ஸ்ரீகாலவன் அவளைப் பார்த்த கடுமையான பார்வையில் ராணி பத்மாவதி மயங்கி விழாமல் நல்லவேளையாக ஷாயிபா பிடித்துக்கொண்டாள்.

இதையெல்லாம் பார்த்த உத்தவனுக்கு ராணி பத்மாவதி ஒரு சிறு எதிர்ப்புக் காட்டினாலும் அவளுக்குக் கிடைக்கும் தண்டனைகளின் கொடூரத்தைப் புரிந்து கொள்ள நேர்ந்தது. ஷாயிபா அதற்கொரு கருவியாகப் பயன்பட்டாள் என்பதையும் அறிந்து கொண்டான். அருவருக்கத் தக்க இகழத்தக்கதொரு கீழ்ப்படிதலை அவள் ஸ்ரீகாலவனை வழிபடுவதில் மிகச் சிறந்த பூஜாரிணி என்ற பெயரால் மறைக்க முயல்கிறாள் என்பதையும் புரிந்து கொண்டான். ஸ்வேதகேது அந்த இடத்தை விட்டுச் சென்றான். வழிபாடுகள் தொடர்ந்தாலும் அதில் முன்பிருந்த உற்சாகமும், ஈடுபாடும் குறைந்தே காணப்பட்டது. மெளனத்திலேயே பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அங்கு கூடியிருந்த அனைவருக்குமோ ஏதோ நடக்கக் கூடாத புதிய ஒரு ஆபத்து அல்லது சர்வ நாசம் ஒன்று விளையப் போகிறது எனப் புரிந்தது.

சற்று நேரத்தில் குதிரையில் திரும்பி அங்கே வந்த ஸ்வேதகேதுவிற்கு மிகுந்த மனக்கிளர்ச்சி உண்டாயிருந்தது அவன் முகத்திலே தெரிய வந்தது. குதிரையில் இருந்து கீழே இறங்கிய அவன் ஸ்ரீகாலவனிடம் வந்தான்.

“அந்த மனிதன் என்ன கூறுகிறான்?” ஸ்ரீகாலவன் அதிகாரத் தொனியில் கேட்டான்.

"ஸ்வாமி, பரவாசுதேவரே! சர்வசக்தி வாய்ந்த கடவுளே!" ஸ்வேதகேதுவின் குரலில் நடுக்கம் காணப்பட்டது. "வந்திருக்கும் விருந்தாளி தங்கள் விருப்பத்தைக் கேட்டதும் சொன்னது என்னவெனில்:
"நான், கிருஷ்ணன், யாதவ குல ஷூரர்கள் இனத்துத் தலைவன் ஆன வசுதேவனின் குமாரன். நான் இங்கே தன்னந்தனியாகவே வந்துள்ளேன். என்னுடன் வந்திருக்கும் என் மூத்த சகோதரன் ஆன பலராமன், மற்றும் என் அத்தை கணவர் ஆன சேதிநாட்டு அரசர் ஆகியோரை நான் என்னுடன் அழைத்துவரவில்லை. அவர்கள் பரிவாரங்களும், எங்கள் பரிவாரங்களும் கூட அங்கேயே தான் தங்கி உள்ளது. நான் கரவீரபுரத்தின்........."இந்த இடத்தில் சற்றே தயங்கிய ஸ்வேதகேது தன்னைச் சமாளித்துக்கொண்டு, "கடவுளான ஸ்ரீகாலவ வாசுதேவனின் நட்பை நாடி வந்துள்ளேன்." இதுதான் அவன் சொன்னது பரவாசுதேவரே! ம்ம்ம்ம்ம் மேலும் ஒரு வரமும் கேட்டுள்ளான். "என் சிநேகிதனும் சித்தப்பன் மகனுமான உத்தவனை விடுவிக்க வேண்டும். அவனை என்னிடம் திருப்பி அனுப்பவேண்டும். மற்ற ஆசாரியர்களையும், அவர்களோடு சிறைப்பட்டிருக்கும் புநர்தத்தனையும் விடுவித்து அவரவர் இருப்பிடம் அனுப்பி வைக்கவேண்டும். இது என் வேண்டுகோள்" இது தான் அவன் சொன்னவை, பரம்பொருளே!" ஸ்வேதகேது நடுங்கும் குரலில் சொல்லி முடித்தான்.

ஏளனமாய்ச் சிரித்த ஸ்ரீகாலவன், "அந்த முட்டாள் இடையனை அப்படியே திருப்பி அனுப்பிவிட்டாயல்லவா?" என்று கேட்டான்.

"ஸ்வாமி, தங்கள் அநுமதியோ உத்தரவோ இல்லாமல் எவ்வாறு அனுப்புவேன்?" என்ற ஸ்வேதகேது, "ஆனால் உத்தவனிடம் நீங்கள் சொன்னதை நானும் அப்படியே அந்தக் கிருஷ்ணனுக்கும் சொல்லிவிட்டேன். எங்கள் மாமன்னர், அவர் மன்னரே அல்ல, மூவுலகையும் ஆளும் பரம்பொருள், ஒப்பற்ற கடவுள், பரவாசுதேவர், அவரை அவ்வாறு நீயும் ஒப்புக்கொண்டு உன் சிநேகிதர்களையும் ஒப்புக்கொள்ள வைப்பாயாக. அதற்குப் பின்னர் ஒருவேளை பிரபுவும் தயாளுவும் ஆன ஸ்ரீகாலவ பரவாசுதேவர் அவர்களை விடுவித்து அனுப்பச் சிந்திக்கலாம்." என்று சொன்னேன் ஸ்வாமி!"

இதைச் சொல்லும்போதே கண்ணனுக்கும், தனக்கும் நடுவே நடந்த சம்பாஷணை ஸ்வேதகேதுவின் நினைவில் வந்தது. கிருஷ்ணன் பார்த்த உடனேயே ஸ்வேதகேதுவை அடையாளம் புரிந்து கொண்டான். அவன் நிலைமையையும் சரியான கோணத்தில் புரிந்து கொண்டான். ஒரு தாய் தன் மகன் கோபமாய்ச் சென்றவன் திரும்பக் கிடைத்ததும் காட்டும் அளவற்ற பாசத்தையும் அன்பையும் காட்டிய கண்ணன், ஸ்வேதகேதுவைப் பார்த்ததுமே,"ஸ்வேதகேது, என் சகோதரரே, நீர்..... ஆஹா, எந்த இடத்தில் எவரைப்பார்க்கவேண்டாமோ அந்த இடத்தில் அவரே! நீர் என்னை இப்போது எந்தக் கடவுளை ஒப்புக்கொள்ளச் சொல்கிறீர்?? நாம் குருகுலத்தில் இருக்கும்போது காலை, மதியம், மாலை, இரவு நேர வழிபாடுகளில் சேர்ந்து வழிபடுவோமே, அந்த வாசுதேவனையா?? அல்லது இப்போது புதியவராய் நீர் அறிந்தவரையா?" என்ற வண்ணம் மிகவும் இரக்கமான குரலில் கேட்டான். கண்ணன் குரலின் சோகம் ஸ்வேதகேதுவின் மனதில் முள்ளாய்த் தைத்தது. இதைவிடக் கண்ணன் உத்தவனைப் போல் சண்டை பிடித்திருக்கலாமோ?? உத்தவன் சண்டை போட்டபோது கூட ஸ்வேதகேதுவால் அவனுக்குச் சரியாகப் பதில் சொல்ல முடிந்தது. ஆனால் கண்ணனின் இந்தச் சோகம் ஸ்வேதகேதுவின் மனதில் ஆழமாய்ப் பாய்ந்தது.

அவன் நினவோட்டத்தைக் கலைத்துக்கொண்டு ஸ்ரீகாலவன், "என்ன பதில் சொன்னான் அந்த இடையன் ?" என்று கேட்டான். ஸ்வேதகேது தன்னைச் சுதாரித்துக்கொண்டு, "யாதவ குலக் கிருஷ்ணனா? ஸ்வாமி, அவன் சிரித்தான் நான் சொன்னதுக்கு. அப்புறம் என்ன சொன்னான் தெரியுமா?" நான் இன்னும் திருக்கைலைப் புனித யாத்திரைக்குச் செல்லவில்லை. அதற்குரிய நேரம் கிட்டும்போது அங்கு சென்று அனைவருக்கும் மேலான கடவுளான அந்த மஹாதேவரை அங்கே நிச்சயமாய் வணங்குவேன். அதற்குக் காத்திருக்கவும் செய்கிறேன்." என்று சொல்லிவிட்டான், மகாப் பிரபு!" என்றான் ஸ்வேதகேது.

"இவ்வளவு போக்கிரியா அவன்?? துஷ்டன், கொடூர மனம் படைத்தவன், பாவம் நிறைந்தவன், அதிகப் பிரசங்கி!" என்று சரமாரியாகக் கண்ணனை ஆத்திரம் தீர வைதான் ஸ்ரீகாலவ வாசுதேவன். "அவன் என்ன ஆயுதங்கள் தரித்துப் பூரண ஆயுதபாணியாக வந்துள்ளானா?" என்றும் கேட்டான்.

Wednesday, September 15, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

உத்தவன் கவனிக்கிறான்!

இனி என்ன செய்ய முடியும்??? கரவீரபுரத்திற்கு வந்து சேர்ந்தேன். அங்கே ஸ்ரீகாலவன் என்னை மிகவும் மரியாதையோடு வரவேற்றான். ராணுவப் பயிற்சி அளிக்கும் பள்ளியில் தலைமை ஆசாரியனாக நியமிக்கப் பட்டேன். உண்மையில் கரவீரபுரத்தின் இளைஞர்களில் எவருக்கும் ஆயுதப் பிரயோகமோ அஸ்திரப் பிரயோகமோ தெரிந்திருக்கவில்லை. ஓடும் ரதத்தில் நிற்பது பெரும் விந்தையாக இருந்தது அவர்களுக்கு. வில்வித்தையின் அடிப்படையே புரியவில்லை. அவர்களுக்குப் பயிற்சி அளித்துக்கொண்டிருந்த நான் வெகு விரைவில் மிகவும் அந்தரங்கமான வேலைகளுக்கும் அழைக்கப் பட்டேன். இங்கே தங்கமும், நவரத்தினங்களும் இறைபடுவதைப் பார்த்திருப்பாயே! எங்களுக்கு மட்டுமே தெரிந்த அடர்ந்த காடுகளில் இருந்து அவற்றைக் கொண்டு வருவோம். செல்லும்பாதையும் நாங்கள் மட்டுமே அறிந்த ஒன்று. வெகு விரைவில் இத்தகைய முக்கியப் பணிக்கு நான் பயன்படுத்தப் பட்டேன். “

“ஷாயிபா என்னவானாள்?”

“அவள் ஒரு மின்மினியைப் போல்! என்னைக் கவர்ந்து தன் பக்கம் இழுத்தாள். ஆனால் அவள் பிடிபடவே இல்லை. என்னைக் கவர்ந்திழுக்க அவள் செய்த உபாயத்தை நான் மிகத் தாமதமாக நன்கு புரிந்து கொண்டேன். அவள் முழுக்க முழுக்கத் தன் சேவையைத் தன் பெரியப்பனுக்கு அர்ப்பணம் செய்திருந்தாள். ஆனால் என்னை அவள் சிறிதும் நம்பவில்லை. நான் அவள் அளவுக்கு அவள் பெரியப்பாவின் சேவையில் முழுமையாக ஈடுபடவில்லை என்ற சந்தேகம் அவளுக்கு இன்னமும் இருக்கிறது. என்னுடைய படிப்பிலும், வித்தையிலும், அஸ்திர, சாஸ்திரப் பிரயோகத்திலும் அவள் மகிழ்ச்சி அடைந்தாலும், எனக்கு அவள் பெரிய தந்தையிடம் முழுமையான பக்தி இருக்கிறதா என்பதை அவள் சோதித்துக்கொண்டே இருக்கிறாள். இவளால் நான் என் குருவை இழந்தேன், என் நாட்டை இழந்தேன், ஆனாலும் இவள் எனக்குக் கிட்டவும் இல்லை. உத்தவா, என் மீதே எனக்குக் கோபம் வருகிறது. மூர்க்கமாய்க் கோபம் வருகிறது.” ஸ்வேதகேது நீண்ட பெருமூச்சு விட்டான்.

“இத்தனைக்கும் பிறகு நீர் இங்கு வந்து அந்தக் குள்ளநரி ஸ்ரீகாலவனை நாங்கள் பரவாசுதேவன் என ஒப்புக்கொள்ளவேண்டும் என்று கேட்க வந்திருக்கிறீரா? ஸ்வேதகேது, நீர் எமக்கு வேதம் கற்றுக்கொடுத்த ஆசாரியனாக மட்டுமில்லாமல் நல்லதொரு நண்பராகவும் இருந்து வந்திருக்கிறீர். உமக்கு எப்படி மனம் வந்தது?”

“போம், போம், போய் இந்தத் தபஸ்விகளிடம் கேளும், குள்ளநரி ஸ்ரீகாலவனைப் பரவாசுதேவனாக ஒப்புக்கொள்ளுங்கள் என்று இறைஞ்சி மன்றாடும். அப்போது தான் அந்த மாயப் பெண் மோகினியின் ஒரு சிறு புன்னகை உமக்குக் கிட்டும். முதலில் அதைச் செய்யும்!” ஆத்திரத்துடன் கூறினான் உத்தவன். ஸ்வேதகேது கண்ணீர் ததும்பத் தழுதழுக்கும் குரலில், “உத்தவா, நான் பாவி. மீளமுடியாத நரகத்தில் விழுந்துவிட்ட பாவி. என்னை எவராலும் மீட்கமுடியாது. நான் இங்கிருந்து சென்றுவிடுகிறேன். இனி திரும்ப வரமாட்டேன்.” என்றான். “ஆஹா, ஸ்வேதகேது, நீர் மட்டும் தப்ப நினைக்கிறீரோ?? இது எவ்வாறு என்னையோ, புநர்தத்தனையோ, இந்தத் தபஸ்விகளையோ காக்கும்??? நாம் அனைவருமே இங்கிருந்து தப்ப ஒரு வழி சொல்லும். முதலில் கிருஷ்ணனுக்கு எச்சரிக்கை செய்யவேண்டும். இல்லாவிடில் அவனும் இங்கே வந்து இந்த நரகத்தில் மாட்டிக்கொள்வானே!” கவலையுடன் உத்தவன் கூறினான். ஸ்வேதகேது திட்டவட்டமாய் மறுத்தான். “என்னால் எந்த உதவியும் செய்யமுடியாது. நான் ஸ்ரீகாலவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன்.” என்றான்.

“ஆஹா, நீர் நம்பிக்கைத் துரோகத்தைப் பற்றிப் பேசுகிறீரா? நீர் முதலில் குருதேவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தீர். அவர் மனம் உடையக் காரணமானீர். உம் இந்திரியங்கள் சொன்ன வழி சென்று, உணர்வுகளுக்கு அடிமையாகி, உம் கடமையை மறந்து நம் சநாதன தர்மத்துக்கும் மிகப் பெரிய துரோகத்தைச் செய்தீர். அது போகட்டும், இப்போது கிருஷ்ணன் போன்ற நெருங்கிய நண்பனுக்கு உதவி செய்வதன் மூலம் எங்களை எல்லாம் இங்கிருந்து தப்புவித்தால் உம் வாழ்வில் ஒரு முறை நீர் ஸ்ரீகாலவனுக்கு துரோகம் செய்துவிட்டீர் என்பதை ஷாயிபா அறிந்து கொள்ள மாட்டாள். அவளால் இதைக் கண்டுபிடிக்கவும் முடியாது. பயப்படாதீர்!” ஏளனம் தொனிக்கச் சொன்னான் உத்தவன். அப்போது அங்கே புநர்த்த்தனின் பாட்டனாரான, ருத்ராசாரியார் அந்த வழியே நீர்நிலைக்கு அநுஷ்டானங்கள் செய்யச் சென்றவர் இவர்கள் இருவரும் பேசுவதைக் கண்டு சற்று நின்றார். ஸ்வேதகேதுவைப் பார்த்து, “மகனே, ஸ்ரீகாலவனைக் கடவுள் என்றும் பரம்பொருள் என்றும் பரவாசுதேவன் என்றும் ஒப்புக்கொள்கிறீர்களா என்று கேட்கத் தானே வந்தாய்?” என்று கேட்டார். ஸ்வேதகேது அவர் முகத்தைக் காண வெட்கம் கொண்டு தலையைத் தாழ்த்திக்கொள்ள, அவர், அவனிடம், “மகனே, இந்த உலகின் கடைசி ஆண்மகனாக ஸ்ரீகாலவன் இருந்தாலும் கூட அவனைப் பரவாசுதேவன் என ஒப்புக்கொள்ள முடியாது. அவன் பொய்யிலேயே வாழ்பவன். அவனைப் பர வாசுதேவன் என ஒப்புக்கொள்வதை விட மரணத்தை வரவேற்கும் ஆண்கள் இவ்வுலகில் இன்னும் இருக்கின்றனர். அவனிடம் நான் சொன்னேன் என்று போய்ச் சொல்.” என்று சொல்லிவிட்டுத் தன் வேலையைக் கவனிக்கச் சென்றார்.

ஸ்வேதகேதுவுக்கு என்னசொல்வதென்று புரியவில்லை. ஒரு காலத்தில் அவனும் உண்மையைக் கண்டறியும், உண்மையைப் போதிக்கும், ஞாநத்தை நாடும் ஞாநத்தைப் போதிக்கும் ஒரு ஆசாரியனாக இருக்கவேண்டும் என்றே விரும்பினான். ஆனால் இன்றோ, காலம் செய்த கோலம், அப்படிப் பட்ட ஒரு ஆசாரியரைத் தன்னைப் போல் ஸ்ரீகாலவனின் அடிமையாக்க நினைத்து வந்திருக்கிறான். இதைவிட ஒரு ஆசாரியரைத் தாழ்த்த முடியுமா?? சட்டென்று ஏற்பட்ட ஒரு எண்ணத்தில், “உத்தவா, நான் உங்கள் அனைவரையும் தப்புவிக்க எண்ணுகிறேன். சொல், என்ன செய்யலாம்?” என்று கேட்டான். சிறிது நேரக் கலந்தாலோசனைக்குப் பின்னர், கீழே விழுந்து கிடந்த ஸ்வேதகேதுவின் உதவியாளின் ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்த உத்தவன் ஸ்வேதகேதுவுடன் அவன் வந்த வாளியிலே ஏறிக்கொண்டு மேலே சென்றான்.

மறுநாள் காலை வழக்கம்போல் கரவீரபுரத்தின் மாளிகை ஸ்ரீகாலவனின் வருகைக்கும், அவனுக்குச் செய்யவேண்டிய வழிபாடுகளுக்கும் காத்திருந்தது. மாளிகையின் பெரிய முற்றத்தில் போட்டிருந்த உயர்ந்த ஆசனம் ஸ்ரீகாலவனுக்குக் காத்திருந்தது. அதிகாரிகள், பொதுமக்கள் அனைவருமே ஸ்ரீகாலவனின் வருகைக்குக் காத்துக்கொண்டிருந்தனர். அனைவரும் நின்றுகொண்டே இருந்தனர். மக்கள் கூட்டம் நிரம்பி இருந்த்து. அங்கே ஸ்வேதகேது அனைவரையும் ஒழுங்கு செய்து கொண்டு முக்கியப் பொறுப்பில் இருந்தான். அவன் கண்ணுக்குத் தெரிகிற மாதிரியான ஒரு மூலையில் உத்தவன், கரவீரபுரத்தின் அதிகாரிகளுக்கான உடையணிந்து கொண்டு நடக்கப் போகும் நிகழ்ச்சிகளைக் காணக் காத்திருந்தான். அவன் மாலை வரை பொறுத்தே ஆகவேண்டும். ஸ்வேதகேது அதன் பின்னரே அவனைத் தப்ப வைக்க முடியும் என்று கூறிவிட்டான். சற்று நேரத்தில் வாத்தியங்கள் அனைத்தும் முழங்க, சங்குகள் ஊதப்பட்டன. ஸ்ரீகாலவனைப் பரம்பொருளாக அங்கீகாரம் செய்த வேத வித்துவான்கள் அவனை வாழ்த்தும் வேத மந்திரங்களைச் சொல்ல, மற்ற மக்கள் அனைவரும், ஸ்ரீகாலவனை வாழ்த்திப் பாட, சற்று நேரத்தில் உயர்ந்த பட்டாடைகள் தரித்து, விலை உயர்ந்த ஆபரணங்களைப் பூண்டு ஸ்ரீகாலவன் அங்கே பிரவேசித்தான்.

மக்கள் அனைவரும் ஒருவர் விடாமல் கீழே விழுந்து வணங்கினர். கீழே விழுந்த மக்கள் ஸ்ரீகாலவன் அவனுடைய ஆசனத்துக்கு அருகே சென்றதும் மக்களுக்கு ஆசிகள் கூறும் விதமாய்க் கைகளைத் தூக்கிக் கொண்டு ஆசிகள் கூறினதுமே எழுந்துகொண்டனர். சங்குகள் மீண்டும் முழங்கின. அப்போது அங்கே ராணி பத்மாவதி வருகிறார் என்ற கட்டியக் குரலைத் தொடர்ந்து வந்தவர்கள்;, அடடா! என்ன இது?? இவள் யார்? மானிடப் பெண்ணா? மாயமோகினியா? கண்ணிமைக்கும் நேரம் உத்தவனின் இதயம் இயங்க மறுத்தது. ஒரு அழகான பெண், ராணி போல் அலங்கரிக்கப்பட்ட இன்னொரு வயதான பெண்ணைத் தன் கரங்களால் பிடித்து அழைத்து வந்து கொண்டிருந்தாள். இவள் தான் ஷாயிபாவா? அன்று அரைகுறையாகப் பார்த்தோம் அல்லவா? இப்படி ஒரு அழகான பெண்ணா? சந்திரன் தன் கிரணங்களை நேரே இவள் உடலில் பாய்ச்சிவிட்டானா? இல்லாவிடில் இவ்வளவு குளுமை ஏது?? ஆஹா, அந்தக் கண்கள்! கண்களா இவை, கடல்! இவள் மெல்லிய உடல் இவள் நடக்கிறாளா, மிதக்கிறாளா என்னும் சந்தேகத்தை உண்டாக்குகிறதே! விண்ணிலிருந்து நேரே கீழே இறங்கிய தேவதையோ? இல்லை, இல்லை, கால்கள் கீழே படுகின்றன. மேலும் அந்தக் கண்களின் இமைகள் மூடிக்கொள்வது சிப்பி ஒன்று ஸ்வாதி நக்ஷத்திரத்தன்று விழும் மழைத்துளியைப் பிடித்துக்கொண்டு மூடிக்கொள்வது போல் காட்சி அளிக்கிறது. ஸ்வேதகேது கூறியது அனைத்தும் உண்மையே. உத்தவனுக்கு ஸ்வேதகேது இந்தப் பெண்ணிடம் மயங்கியதோ, இவளுக்காக குருவை விட்டு விலகியதோ தவறாய்த் தோன்றவில்லை. இன்னும் சொல்லப் போனால் ஸ்வேதகேதுவை மன்னிக்கக் கூடத் தயாராகிவிட்டான் உத்தவன்.

அவள் கண்களின் ஒளி அந்த இடத்தையே பிரகாசப் படுத்திய மாதிரி தோன்றிற்று உத்தவனுக்கு. அவளுடைய வடிவான காதுகளில் அணிந்திருந்த வைர அணியானது தன் ஒளியை அவள் கன்னத்தில் தாராளமாக வாரிச் சொரிந்துகொண்டிருந்தது. அந்த ஒளியின் பிரகாசத்தால் அவள் முகமே ஏதோ ஜோதிமயமாய்க் காட்சி அளித்தது. அவளுக்கு நேர்மாறாகக் காட்சி அளித்தாள் ராணி பத்மாவதி. துயரமே ஒரு பெண்ணாக வடிவெடுத்து நடமாடுவது போல் காட்சி அளித்தாள். ஒரு காலத்தில் மிக அழகானதொரு பெண்ணாகவே இருந்திருக்கிறாள் என்பது அவள் முகத்திலிருந்து தெரிந்த்து. இப்போது இளைத்துச் சோர்ந்து போய், வயதுக்கு மீறிய முதுமையுடன் காட்சி அளித்தாள். அவள் ஸ்ரீகாலவனைப் பார்க்கும் பார்வையில் அன்பை விடப் பயமும், மிரட்சியுமே அதிகம் தெரிந்தது. மேலும் உத்தவன் நன்கு கவனித்ததில் அந்தப் பெண்மணி தன் வாழ்நாட்களைப் பயத்திலேயே கழித்து வந்திருக்கவேண்டுமென்றும் தோன்றியது. மேலும் ஷாயிபாவின் ஆதிக்கத்தை விட்டு அவள் இம்மியளவு கூட நகரமுடியவில்லை என்பதும் ஷாயிபாவை அவள் அடிக்கடி இறைஞ்சுவது போல் பார்த்ததில் இருந்து தோன்றியது. இப்படி ஒரு ராணியா? உத்தவன் மனதில் அவள் மேல் இரக்கம் சூழ்ந்தது.

Monday, September 13, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

ஸ்வேதகேதுவின் வீழ்ச்சி!

குருதேவர் என்னை என்ன நினைத்துக்கொண்டிருப்பார்?? நினைக்கவே எனக்கு வெட்கம் மிகுந்தது. இனி ஷாயிபாவின் அருகேயே செல்லக் கூடாது என உறுதி எடுத்துக்கொண்டேன். நீங்களும் சென்று விட்டீர்கள். ஆகவே எனக்கு நேரமும் செல்லவில்லை. என் வேலைகளை முடித்துக்கொண்டு வழக்கம்போல் கடற்கரையின் அதே பாறைக்குச் சென்று அமர்ந்தேன். முதல்நாளைப் போல் அன்றும் ஷாயிபா கடலில் இருந்து எழுந்து என்னருகே வந்து தன் இனிய குரலில் தேனினும் இனிய மொழிகளைக் கூறினாள். அவள் கூறியவற்றின் பொருளை விட அவளின் குரலினிமை என்னை மிகவும் ஈர்த்தது. அதைவிடவும் அவள் மெல்லிய தேகமும், அதன் காந்தியும், நறுமணப் பொருட்களால் ஸ்நாநம் செய்திருந்த சுகந்தமும் என் மனதை மயக்கி அறிவைக் குழப்பியது. அவள் என்னிடம் பேசிவிட்டுச் சென்றாள்."



"அவள் பின்னே செல்லக் கூடாது என்றிருந்த என் உறுதி போன இடம் தெரியவில்லை. உத்தவா, என் கால்கள் எனக்குத் துரோகம் செய்தன. என் அறிவு கொடுத்த எச்சரிக்கை மணியை என் மனம் புறக்கணித்தது. அவள் பின்னாலேயே நான் சென்றேன். முதல்நாள் போலவே அன்றும் ஸ்ரீகாலவ வாசுதேவனுக்கு வழிபாடுகளை ஷாயிபா நடத்தினாள். என்னைப் பார்த்து அவள் தன் பெரியப்பாவின் புகழையும், அவரின் தெய்வீகத் தன்மையையும், மூன்று உலகங்களும் அவர் காலடியில் கிடப்பதையும் கூறினாள் . ஈரேழு பதினாலு லோகங்களிலும் அவள் பெரியப்பாவை விட்டால் வேறொரு கடவுள் இருக்கவே முடியாது என்று அடித்து சர்வ நிச்சயமாய்ச் சொன்னாள். அவரை வணங்கி அவரின் ஆசிகளைப் பெறுவதே இவ்வுலகில் நாம் பிறப்பெடுத்ததின் பலன் என்று ஆணையிட்டுக் கூறினாள். அவள் பேசும்போது முகத்தின் பாவங்களும், கைகளின் அசைவுகளும், கண்களின் மின்னல் ஒளியும், கைகளில் அணிந்திருந்த வளையல்களின் கிண்கிணி நாதமும், இவை எதுவும் தனக்கு லக்ஷியமே இல்லை என்பதைப் போன்ற அவள் அலக்ஷிய சுபாவமும். உத்தவா, உத்தவா, நான் எப்படிச் சொல்லுவேன்??? எனக்கு அவள் முகத்திலிருந்து என் கண்களை எடுக்கமுடியவில்லை. அவள் குரலைத் தவிர மற்றவர் குரலைக் கேட்கப் பிடிக்கவில்லை. இவ்வுலகில் நான் பிறப்பெடுத்து வந்ததின் காரணமே அவளைச் சந்திக்கத் தான் என்று தோன்றியது. இந்தச் சந்திப்பின் மூலம் என் வாழ்க்கையின் மிக முக்கியமானதொரு அத்தியாயத்துக்கு நான் வந்துவிட்டேன், எனக்கென ஒரு சொர்க்கம் திறந்துவிட்டது என்றெல்லாம் நினைத்தேன்."


"அன்றும் நான் நடுநிசி கழிந்தே நம் இருப்பிடம் சென்றேன். குருதேவர் மறுநாள் என்னிடம் எதையுமே கேட்கவில்லை. ஆனால் அவர் முகத்திலிருந்து அவர் சந்தோஷமாக இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். ஏற்கெனவே தன் ஒரே மகனைப் பறி கொடுத்திருந்த அவர் வாழ்வில் நானும், நீங்கள் மூவரும் பாலவனச் சோலை போல் கொஞ்சம் ஆறுதல் கொடுத்துக் கொண்டிருந்தோம். நீங்களோ புநர்த்த்தனைத் தேடச் சென்று விட்டீர்கள். குருதேவரின் ஒரே பற்றுக்கோடு நானாக மட்டும் இருந்த அந்தச் சமயம் அவர் என்னிடம் நம்பிக்கை இழந்தார். அவருக்கு நான் எதுவும் விளக்கத் தேவை இருக்கவில்லை. அவருக்குப் புரிந்துவிட்டது. நான் வீழ்ச்சியை நோக்கிப் படுவேகமாய்ச் சென்று கொண்டிருக்கிறேன் என்று. என்றாலும் அவர் எவ்வளவு பெரிய மனிதர்! உத்தவா, அவர் என்னைக் கடிந்து கொள்ளவே இல்லை. ஒரு வார்த்தை கடுஞ்சொல் கூறவே இல்லை. இந்த மகத்தான பாசத்துக்கும், ஷாயிபாவின் மேல் எனக்கிருந்த மோகத்துக்கும் நடுவில் நான் இருதலைக் கொள்ளி எறும்பு போல் திண்டாடினேன். எனக்கு ஷாயிபாவும் வேண்டும். அதே சமயம் நான் எவ்விதம் குருதேவரைப் பிரிவது?? ஆனால் அத்தகையதொரு இக்கட்டான நிலைக்கு என்னை ஷாயிபா கொண்டு வந்துவிட்டாள்."

நாங்கள் சந்தித்த நான்காம் நாள் அவள் என்னைப் பார்த்தபோது சொன்னது:” இளைஞரே, எம்முடன் கரவீரபுரத்துக்கு வருவீராக. பெரும் செல்வம் நிறைந்த அங்கே நீர் சகலவிதமான செளகரியங்களோடும், ஆடை, ஆபரணங்களோடும் சந்தோஷமாக இருக்கலாம். என் பெரியப்பா உமக்கு வேண்டியதைச் செய்து தருவார்.” என்று வெளிப்படையாகவே அழைத்துவிட்டாள். இப்போது நான் என்ன செய்வது?? ஒரே குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டேன். குருதேவர், தந்தைக்கு ஒப்பானவர், இப்போது யாருடைய ஆதரவுமில்லாமல் அவருக்கு நெருக்கமானவர்கள் எவருமில்லாமல் நிராதரவாக இருக்கும் நிலையில் அவரைப் பிரியலாமா?? என் மனதை குருதேவரின் மீதான பாசம் வேல் கொண்டு அறுக்க, ஷாயிபாவைப் பார்க்கும்போதெல்லாம் அவள் அழகும், நடனம் ஆடுவது போன்ற அவள் நடையும், பாடுவது போன்றஅவள் குரலும், அவள் கம்பீரமும், எல்லாவற்றுக்கும் மேல் அந்தக் காந்தக் கண்கள். என்னை ஈர்த்தன."

" கரவீரபுரம் சென்றால் அவளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாமே! சீச்சீ, குருதேவரைப் பிரிவதா! அது பாவம் அல்லவோ? பாவம் என்ன? இதோ கண்ணனும் பலராமனும் புநர்தத்தனைக் கூட்டி வந்துவிட்டால் அப்புறம் குருதேவருக்கு என்ன பிரச்னை?? நாம் நம் பாட்டைப் பார்த்துக்கொள்ள வேண்டியது தான். இல்லை, இல்லை அது மாபெரும் தவறு. குருதேவரைப் பிரியாதே! அவருக்குப் பின் இந்த ஆசிரமத்தை எடுத்துச் சீராக நடத்திக் குருகுலத்தை வழிநடத்த அவர் உன்னைத் தான் எதிர்பார்க்கிறார். “


“ஹா, குருதேவருக்கு என்னைப் போல் எத்தனையோ சீடர்கள் கிடைப்பார்கள். மேலும் குருதேவர் இந்தப் பிரபாஸ க்ஷேத்திரத்தை விட்டுக் கிளம்பும் நாளும் நெருங்கிவிட்டது. ஷாயிபாவிடமிருந்து இப்போது பிரிந்து போனால்?? ஆம், ஆம், குருதேவருக்குத் துரோகம் செய்யக் கூடாது. இங்கிருந்து சென்றுவிட்டால் ஷாயிபா என்னைச் சுற்றிக் கட்டி வரும் இந்த மாயவலை அறுந்துவிடும். அதுதான் சரி. நாங்கள் கிளம்பும் நாள் வந்துவிட்டது. ஷாயிபாவிடம் விடைபெறச் சென்றேன். நாங்கள் குருகுலத்தை இங்கிருந்து கிளப்பிக் கொண்டு வேறொரு நாட்டுக்குப் போகப் போவதாய்க் கூறினேன் . நான் கூறியவுடனேயே ஷாயிபாவின் கடல் போன்ற கண்களில் கண்ணீரலை அடித்தது. பேரலையின் வேகத்தோடு அவள் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன. அவள் தன் நடுங்கும் கைகளால் என் தோள்களைத் தொட்டாள். அங்கும் இங்கும் அடைக்கலம் தேடி அலை பாயும் மீன்களைப் போன்ற கண்ணின் கருமணிகளால் என்னை உற்றுப் பார்த்தாள். அவை என் மீதே பதிந்திருந்தன. “ஸ்வேதகேது! ஸ்ரீகாலவவாசுதேவரை நீர் எப்படி மறக்கலாம்? உம்மைப் போன்ற ஒரு வேத வித்துக்காகவே அவர் காத்திருக்கிறார்.” ஏதோ மந்திரம் பேசுவது போன்றதொரு தொனியில் மெல்லிய குரலில் கிசுகிசுப்பாக அவள் இவற்றைக் கூறினாள். உத்தவா! என் மனம் இதற்காகவே காத்துக்கொண்டிருந்தது. என்னை நான் இழந்தேன். என் மனம் என் வசம் இல்லை. "


அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு நான் அவளிடம், “ஷாயிபா, நான் உன்னுடன் வரவேண்டும் என்று நீ உண்மையிலேயே விரும்புகிறாயா?” என்று கேட்டேன். அவள் தன் கைகளை விடுவித்துக்கொள்ள எந்த முயற்சியும் செய்யவில்லை. என் உடலே நெருப்பாய்த் தகித்தது. அந்தச் சூட்டின் வெம்மையில் என் மனம், அறிவு எல்லாமும் பொசுங்கிக் கொண்டிருந்தது. அவளுடைய பதிலில் தான் என் உலகமே இருக்கிறதென்று நம்பினேன். அவள் பதிலே சொல்லாமல் நிமிர்ந்து தன் கடல் போன்ற கண்களால், என்னை ஒரு முறை பார்த்துவிட்டுத் தன் தலையைத் தாழ்த்திக் கொண்டாள். அவ்வளவு தான் நான் முற்றிலும் என் வசம் இழந்துவிட்டேன். அப்படி அவள் நிமிர்ந்து பார்த்ததிலே அவளின் நுட்பமான மெல்லிய தேகம் பூக்கள் நிரம்பிய ஒரு கொடி கொழுகொம்பில்லாமல் அசைந்து ஆடுவது போல் எனக்குத் தோன்ற அவளைப் பிடித்துக்கொண்டேன். அதன் பின் நான் குருதேவரிடம் செல்லவில்லை. அதன் பின்னர் நாங்கள் ஷூர்பரகா என்னும் கப்பலில் கரவீரபுரத்தை நோக்கிச் சென்றோம். அப்போது ஒருநாள் அந்தி வேளையில் கப்பலின் மேல் தளத்தில் கடலைப் பார்த்தவண்ணம் நான் சிந்தனையில் இருந்தேன். என் ஆசைகள், கனவுகள், என் வாழ்க்கை, என் எதிர்காலம் அனைத்தும் ஒரு பெண்ணின் விருப்பத்தால் எதிர்பாராத திருப்பங்களோடு கூடியதொரு தீரமான சம்பவங்கள் நிறைந்ததாய் மாறிவிட்டதே! அப்போது ஷாயிபா என்னை நோக்கி வந்தாள்."


வந்தவள் என் கண்களுக்குள்ளே என்னைத் தேடுபவள் போலப் பார்த்தாள். அவள் கண்களின் ஆழத்தில் நான் மூழ்கிப் போனேன். அவள் இஷ்டப் பட்டால் அந்தக் கண்கள் நீர் நிரம்பிய ஒரு கடலாக மாறிவிடும்போல! நீரால் நிரம்பியது போல் காட்சி அளித்தன அந்தக் கண்கள். “ஸ்வேதகேது, பரம்பொருளான பரவாசுதேவனுக்காக அனைத்தையும் விட்டுவிட்டு வர நேர்ந்த்தே என வருந்துகிறீரோ?” என்று கேட்டாள். நான் பதிலேதும் சொல்லாமல் மறுப்பாகத் தலை அசைத்தேன். அவள் தன் கரங்களை என் மீது மிருதுவாக வைத்தாள். அவளுடைய அண்மையே என்னுள் அணையாத கனலை மூட்டியது. ஆகவே நான் என்னையுமறியாமல், “உன் பொருட்டு என்ன வேண்டுமானாலும் செய்ய நான் தயாராக இருக்கிறேன் ஷாயிபா” என்று கூறிக்கொண்டே அவளை என் பக்கம் இழுத்து என் நெஞ்சோடு சேர்த்து இறுக அணைக்க முயன்றேன். கோபம்கொண்டதொரு பெண்புலியைப் போல் பாய்ந்தாள் அவள். “தொடாதீர் என்னை! என்னைத் தொட எவருக்கும் அருகதை இல்லை. நான் முழுக்க முழுக்க இந்த மூன்று உலகங்களுக்கும் அதிபதியான ஸ்ரீகாலவ பர வாசுதேவனின் அடிமை. அவரின் சேவைக்கெனவே பிறந்துள்ளேன். அவர் பார்த்து உமக்கு அநுமதி கொடுக்கவேண்டும். மேலும் உமக்கு அதற்கான தகுதியும் இருக்கவேண்டும். உமக்குத் தகுதியும் இருந்து ஸ்ரீகாலவ வாசுதேவரின் அநுமதியும் கிட்டினால் தான் என்னைத் தொட முடியும்!” என்று வெகு அலக்ஷியமாய்ச் சொன்னாள். என் மனதில் பேரிடி விழுந்தது. அவள் சொந்த விஷயங்களைக் கூடப் பெரியப்பனின் அநுமதி இன்றிச் செய்ய மாட்டாளாமே! அவள் ஆசையைக் கூட அடக்கிக் கொள்வாளா?? எத்தகையதொரு அவமானம்?? அவள் ஸ்ரீகாலவனைத் தவிர வேறு எவரையும் ஒரு பொருட்டாக மதிக்கவே இல்லை. இந்த உண்மை என்னைப் பெருநெருப்பாகச் சுட்டது. வேறு வழியில்லாமல் அவளிடம் மன்னிப்புக் கேட்டேன். அந்தக் கணம் என் மனதில், ஆழ் மனதில் ஏதோ சுக்கு நூறாக உடைந்து போனது. அவளுடன் இருப்பதும், அவளைப் பார்ப்பதுமே சந்தோஷம் என நினைத்துக்கிளம்பி வந்தேனே, அது இனிமேல் நான் உணர முடியாத ஒன்று என்றும் எனக்குப் புரிந்து போனது. ஆனால், ஆனால், இனி நான் திரும்புவது என்பது?? ம்ஹும், அதுவும் நடக்க முடியாத ஒன்று. நன்றாக ஏமாந்து போனேன்.

Friday, September 10, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

ஸ்வேதகேதுவின் வீழ்ச்சி!

ஸ்வேதகேது, உம் இந்த நிலைக்கு என்ன காரணம்?? அதை முதலில் சொல்லுங்கள். கண்ணன் வந்து கட்டாயம் உம்மை இதிலிருந்து மீட்பான்.” என்றான் புநர்தத்தன். “ஒருவராலும் மீட்கமுடியாத அதல பாதாளத்தில் விழுந்துவிட்டேன்!” என்ற ஸ்வேதகேது, தான் இந்தக் கரவீரபுரத்திற்கு வந்த கதையைச் சொல்ல ஆரம்பித்தான். “உத்தவா, நீயும், கண்ணனும் புண்யாஜனா கப்பலுக்குச் சென்றுவிட்டீர்கள். அப்போது எனக்கு ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. பிரபாஸ க்ஷேத்திரத்தில் உள்ள மஹாதேவர் கோயில் இருக்கும் ஊருக்குச் சென்று மஹாதேவரை, அவரை அங்குள்ளவர்கள், “சோமநாதர்” என்னும் பெயரால் வணங்குகின்றனர். அந்த சோமநாதரைத் தரிசிக்கச் சென்றிருந்தேன். கடற்கரையோரம் எழுப்பப் பட்டிருக்கும் அந்தக் கோயிலில், மஹாதேவரை வணங்கிவிட்டு, வெளியே வந்து கரையோரத்தில் இருந்த ஒரு பெரிய பாறையின் மீது அமர்ந்து கொண்டு கடலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது……..””ஸ்வேதகேதுவின் குரல் தழுதழுத்தது.

அவன் குரலில் இன்னதென்று விவரிக்க முடியாத ஒரு உணர்வு. சமாளித்துக்கொண்டு, “கடலே ஒரு பெண்ணாக உருவெடுத்து வந்ததா? அல்லது கடல் கன்னி, கடல் கன்னி என்பார்களே அவளா இவள்?? என்னும்படியான ஒரு செளந்தர்ய தேவதை கடலில் இருந்து தோன்றினாள். ஒரு கணம் என் கண்களை என்னால் நம்பமுடியவில்லை. பின்னர் புரிந்தது. அவள் மானுடப் பெண்தான் என்றும், கடலில் குளித்துக் கொண்டிருந்தாள் என்பதும் புரிந்தது. அந்தப் பெண்ணைப் பார்க்கக் கூடாது என்று என் உள்மனம் எச்சரித்தாலும் என் கண்கள் அவளை விட்டு நகரவே இல்லை. இவளை ஏற்கெனவே எங்கேயோ பார்த்திருக்கிறோமே, அதான் திரும்ப யோசிக்கிறோம் என்று என்னை நானே சமாதானமும் செய்து கொண்டேன். கடலில் இருந்து தோன்றிய அந்தப் பெண் இப்போது கரைக்கு வர ஆரம்பித்தாள். நடையா, நடனமா என்னும்படிக்கு அவள் நடையில் ஒரு நளினம். இவ்வளவு அழகோடு ஒரு பெண்ணால் நடக்க முடியுமா? அவள் நடக்கிறாளா இல்லை மிதந்து மிதந்து வருகிறாளா? மீண்டும் என் மனம் என்னை இது தப்பு, ஒரு அந்நியப் பெண்ணை இப்படிப் பார்க்கக் கூடாது என்று எச்சரித்தது. உடனேயே அவளை எங்கே பார்த்தோம் என்பதும் நினைவில் வந்தது. பிரபாஸ க்ஷேத்திரத்தில் நாம் முகாமிட்டுப் பாடங்களை நடத்திக்கொண்டிருந்த சமயம் இவள் ஆயுதப் பயிற்சி நடக்குமிடத்திலோ அல்லது நான் வேதங்களை ஓதிக் கற்பித்துக் கொண்டிருக்கும் இடத்திலோ காணப்படுவாள். அந்தப் பெண்ணை நாம் கவனிக்காமல் இருக்க முடியாது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத செளந்தரியம் உள்ள இத்தகைய பெண்ணும் இந்தப் பூமியில் வசிக்கிறாளா என்னும்படி அவள் அழகு நம்மைக் கட்டிப் போடும். அவ்வப்போது என்னைப் பார்த்து அறிமுகமாய் ஒரு சிரிப்பையும் உதிர்ப்பாள்.”


ஸ்வேதகேதுவிற்கு இப்போது கண்களில் இருந்து கண்ணீரே வர ஆரம்பித்துவிட்டது. “அவள் யார் என என் நினைவில் வந்ததும், அவள் என்னருகே வருவதும் சரியாக இருந்தது. என்னருகே வந்த அவள் ஒரு கணம் நின்று, என்னைப் பார்த்தாள். அவள் கண்களின் ஒளியால் அந்த இடமே பிரகாசமாக ஆனாற்போல் இருந்தது. உத்தவா! நானும் எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு பெண்ணை மட்டுமல்ல, இப்படி அழகான கண்களையும் பார்த்தது இல்லை. கடலென விரிந்த அந்தக் கண்களில் மிதக்கும் நாவாய்களைப் போன்ற கண்ணின் கருமணிகள். அவை சொல்லும் செய்திகள்! எப்போதும் ஒரு மயக்கத்தில் இருப்பது போலவே அரைக்கண் மூடினாற்போல் இருக்கும் அந்த விழிகள் முழுவதையும் திறந்து அவள் நம்மைப் பார்த்தால், ஆஹா, இந்த விழிகளாகிய கடலில் நாம் மூழ்கிவிடுவோம் என்பதாலேயே இவள் அரைக்கண்களை மூடியே வைத்திருக்கிறாளோ எனத் தோன்றும். இப்போதும் அப்படியே தன் விழிகளால் என்னை அப்படியே விழுங்கி விடுவது போலவே பார்த்தாள்.”

“என் உடல் புல்லரித்தது. அந்த விழியாகிய கடலில் நீந்தி, நீந்திப் போகமாட்டேனா என நினைத்தேன். அப்போது, இனிமையான தன் குரலால் அவள் என்னிடம், “கோயிலில் உங்கள் மந்திர ஜபங்களை நான் கேட்டேன். இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு படித்து அறிஞராய் இருக்கிறீர்களே!” என்று வியந்தாள். என் வாழ்நாளில் இப்படி ஒருத்தர் முகத்துக்கு நேரே என்னை மட்டுமல்ல வேறு எவரையும் புகழ்ந்து கேட்டிராத என்னை அவள் வார்த்தைகள் கிறுகிறுத்துப் போக வைத்தன. அவளோ தொடர்ந்து, “என்னுடன் வருவீர்களா?? பக்கத்தில் ஒரு சோலையில் நாங்கள் கூடாரம் அடித்துத் தங்கி இருக்கிறோம். நீங்கள் இளம்பிள்ளைகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பதைக் கூடப் பார்த்தேனே. அற்புதமான மனிதர் நீங்கள்!’ என்னைப்போதை கொள்ள வைத்தன இந்த வார்த்தைகள். ஒரு பெண்ணின் அதுவும் அழகான ஒரு இளம்பெண்ணின் வாயிலிருந்து வந்த இந்த வார்த்தைகள் எப்பேர்ப்பட்ட மனிதனையும் போதையில் ஆழ்த்தும். “

குறுக்கிட்டுப் பேச வந்த உத்தவனையும், புநர்த்த்தனையும் கை சைகையால் நிறுத்திய ஸ்வேதகேது, மேலே தொடர்ந்தான். “மறுபடி நாம் தங்கி இருந்த இடத்திற்குச் சென்ற என்னால் எந்த வேலையையும் செய்யமுடியவில்லை. அவள் குரல் மட்டுமின்றி அவள் உருவமும் என்னை எங்கே போனாலும் துரத்திக்கொண்டிருந்தது. குளித்துவிட்டு வந்திருந்த அவள் உடலின் நறுமணம் அங்கேயே சுற்றிக்கொண்டிருந்த பிரமையாகவும் இருந்தது. அப்போது என் நினைவில் வந்தது, நம் குருதேவர் சாந்தீபனி சொன்ன அறிவுரை: “உன் தாயையும், மனைவியையும், சகோதரியையும் தவிர மற்ற எந்தப் பெண்ணாய் இருந்தாலும் அவரோடு தனித்து இருக்காதே!” என்ற குருதேவரின் இந்த எச்சரிக்கை என் நினைவில் மோதினாலும் அவளுடைய அழகு இதை எல்லாம் தூரப் போட்டு மறக்கடித்தது."


“அவள் அழைப்பிற்கு இணங்கி அவளுடன் அந்தச் சோலைக்குச் சென்றேன். அங்கே தான் அவள் ஒரு இளவரசி என்றும் அவள் பெயர் ஷாயிபா என்றும், கரவீரபுரத்தின் மாமன்னன் ஆன ஸ்ரீகாலவ வாசுதேவனின் சகோதரன் மகள் அவள் என்றும் தெரிந்து கொண்டேன். “ என்றான் ஸ்வேதகேது. “யார் அது?? மன்ன்னுக்கு அருகே, வீற்றிருந்த ராணிக்கு உதவி செய்வது போன்ற தோற்றத்துடன் காட்சி அளித்தாளே ஓர் இளம்பெண்? அவளா? நீ சொல்லும் ஷாயிபா??” உத்தவன் கேட்க ஸ்வேதகேது அதை ஆமோதித்தான். “அவளே தான். ராணிக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் எப்போதுமே அவள் அருகே இவள் உதவிக்கு நின்றுகொண்டிருப்பாள். இந்த ஸ்ரீகாலவ வாசுதேவன் பிரபாஸ க்ஷேத்திரத்துக்கு வந்தபோது அந்தக் குறிப்பிட்ட சோலையில் தான் தங்கி இருந்து புனிதப் படுத்தினான் என்பதால் இவர்களுக்கு அது ஒரு பூஜிக்கத் தக்க இடம் என்பதால் அங்கே வந்திருக்கிறார்கள். அங்கே தங்கிவிட்டுப் பின்னர் கரவீரபுரத்துக்குப் போன ஸ்ரீகாலவன் அதன் பின்னரே தன்னை, பரவாசுதேவனாக அறிவித்துக்கொண்டிருக்கிறான். நான் சென்ற போது அங்கே ஸ்ரீகாலவனின் பாதுகைகளுக்கு வழிபாடுகள் நடந்து கொண்டிருந்தன. ஷாயிபா தான் முன்னின்று நடத்திக் கொண்டிருந்தாள். தன் தகப்பனின் சகோதரன் மேல் அவள் கொண்டிருக்கும் பக்தியை என்னவென்று சொல்வது?? ஸ்ரீகாலவனைத் தவிர வேறு எவரையும் அவளால் வாசுதேவன் என ஒத்துக்கொள்ள முடியாது. அவனைத் தவிர வேறு யாரும் இவ்வுலகில் பெரியவர்கள் இல்லை. இப்படி ஒரு நம்பிக்கை கொண்டிருந்த ஷாயிபா வழிபாடுகளை நடத்திக் கற்பூர ஆரத்தியும் எடுத்தாள். அப்போது என்னை மந்திரங்கள் ஓதச் சொல்லி விண்ணப்பிக்க, நானும் மந்திரங்களை ஓதினேன். அதன் பின்னர் பிரசாதம் விநியோகிக்கப் பட்டது. எனக்கும் பிரசாதம் கொடுத்தார்கள். அதை உண்டதுதான் தெரியும். என் தலை விர்ர்ர்ரெனச் சுழல ஆரம்பித்தது. நான் இன்னும் நினைவோடு இருக்கிறேன் என்பதே எனக்கு அதிசயமாக இருந்தது.


ஷாயிபா அப்போது என்னை அழைத்துக்கொண்டு தனியே ஒரு பக்கமாய்ச் சென்று, என் காதுகளில் மந்திரங்களை ஓதினாள். அவை மந்திரங்களா, இன்னிசையா என்று எனக்குச் சந்தேகமாய் இருந்தது. அவ்வளவுக்கு அவள் குரலின் இனிமை மட்டுமே என் மனதில் பதிந்தது. கூடவே அவள் பெரிய தகப்பன் ஸ்ரீகாலவன் பற்றியும், அவனுடைய புனிதத் தன்மை பற்றியும், அவனுடைய வீரம் பற்றியும், கரவீரபுரத்தின் மேன்மை பற்றியும், அங்குள்ள மக்கள் எப்படி ஸ்ரீகாலவனை வழிபட்டு அதில் பெருமை கொள்கின்றனர் என்பது பற்றியும் ஏதேதோ சொன்னாள். எனக்கு அவள் என்னோடு பேசுகிறாள் என்பதே போதுமானதாய் இருந்தது. ஸ்ரீகாலவனை வழிபடுவதால் இவ்வுலகத்துத் தளைகளை எல்லாம் அறுத்துவிட்டு நிம்மதியாய் இருக்கலாம் என்றும் கூறினாள். அதுவும் என் போன்ற கற்றறிந்த, ஆயுதப் பயிற்சிகளில் தேர்ந்த, வேதங்களில் நிறைந்த அறிவு பெற்ற, ஒரு படித்த அந்தணன் ஸ்ரீகாலவனுக்கு வலக்கைபோல் செயல் பட்டால் இருவரும் இணைந்து ஒரு பொன் உலகையே ஸ்தாபிக்க முடியும் என்றும் அது ஸ்வர்க்கத்தை விட மேன்மையாய் இருக்கும் என்றும் கூறினாள். உத்தவா, என் மேல் இந்த ஏழை பிராமணன் மேல் அவள் வைத்திருக்கும் நம்பிக்கை இவ்வளவா என யோசித்து ஆச்சரியப் பட்டேன். அவள் மேலும் மேலும் ஏதோ ஊற்றிக் கொடுத்தாள் எனக்கு. என்னவென்று கேட்காமல் அவற்றை வாங்கிக் குடித்தேன். நான் பறக்கிறேனா, இல்லை இந்தப் பூமியில் இருக்கிறேனா என்றே சந்தேகமாய் இருந்தது எனக்கு. நடுநிசியில் நான் நம் இருப்பிடம் சென்றேன். மறுநாள் குருதேவர் என்னைப் பார்த்து நேற்று எங்கே உன்னை வெகு நேரம் காணவில்லை எங்கே போயிருந்தாய் என்று கேட்டபோது என் வாழ்நாளில் முதல் முறையாகப் பொய் அதுவும் தந்தையை ஒத்த குருவிடம் பொய் சொன்னேன்."

"என்ன சொன்னேன் தெரியுமா?? கோயிலிலேயே தங்கி மந்திரங்களை ஓதிக்கொண்டிருந்ததாய்ச் சொன்னேன். உத்தவா! அப்போது குருதேவர் என்னைப் பார்த்த பார்வை! என் வீழ்ச்சி அப்போதே ஆரம்பமாகிவிட்டது!"

Sunday, September 5, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

ஸ்வேதகேது மனம் திறக்கிறான்!

ஸ்வேதகேது உத்தவனின் குற்றச்சாட்டுகளுக்கு அசைந்தே கொடுக்கவில்லை. “உத்தவா, முதலில் உங்கள் கதையைக் கூறு. பின்னர் நான் என் கதையைச் சொல்கிறேன்.” என்றான். உத்தவனோ, “பெரியதாய் ஒன்றுமில்லை சொல்ல. பிரபாஸ க்ஷேத்திரத்தில் நாங்கள் இருந்தபோது நீரும் அங்கே இருந்தீர். பின்னர் நாங்கள் புநர்தத்தனை விடுவிக்க வைவஸ்வதபுரிக்குச் சென்றோம். கிருஷ்ணனின் அதி அற்புத சாகசங்கள் பற்றி நான் சொல்லவேண்டியது இல்லை. பாஞ்சஜனா ராக்ஷசனைக் கடலினடியில் தள்ளிவிட்டு வைவஸ்வத புரிக்கு அந்தக் கப்பலிலேயே சென்றோம். நாகலோகத்தின் சர்வ வல்லமை படைத்த அன்னை மாதா என்று போற்றப்படும் அரசியிடமிருந்தும், மரணக் கடவுள், யமன் என்றெல்லாம் அழைக்கப் படும் அரசனிடமிருந்தும் புநர்தத்தனை மீட்டு வந்தோம். கிருஷ்ணனின் சாகசங்களும், புத்திசாலித் தனமான முடிவுகளுமே இதற்குத் துணை செய்தன.”

“ஓஓ, ஆமாம், நான் நன்கறிவேன் கிருஷ்ணனின் வீரத்தையும் சாகசங்களையும் நன்கறிவேன். அவனால் அற்புதங்களை நிகழ்த்த முடியும்! பின்னர்???” என்று வினவினான்.

“பின்னர் நாங்கள் மதுராவிற்குச் சென்றோம். அங்கே ஜராசந்தன் கம்சனைக் கொன்றதற்குப் பழிவாங்க எங்களைக் கொல்லச் சபதம் எடுத்திருப்பதாயும், மதுரா நகரையே அழிக்கப் போவதாயும் செய்திகள் கிடைத்தன. நாங்கள் அப்போது இந்த்த் தாக்குதலுக்குத் தயாராய் இல்லை. முற்றுகைக்கு மதுரா நகரும் தயாரில்லை. அங்கிருந்தால் ஆபத்து நமக்கு மட்டுமில்லை, மதுராவுக்கும் எனத் தெரிந்து கொண்டு அங்கிருந்து கிளம்பி இங்கே வந்து சஹ்யாத்திரி மலைத் தொடர்களில் அடைக்கலம் புகுந்தோம்.”

“பின்னர்?”

“அங்கே இருந்த கோமந்தக மலையில் கருடக் குடியிருப்புகளில் பரசுராமரால் அடைக்கலம் பெற்றோம். ஆனால் உங்கள் கடவுள், இந்த வாசுதேவன் இருக்கிறானே? அவன் எங்களை ஏமாற்றிவிட்டான். ஜராசந்தனுக்குத் தகவல் கொடுத்துவிட்டான். ஜராசந்தனும் எங்களைத் தேடி அங்கே வந்துவிட்டான். மலைக்காடுகளுக்குத் தீ வைத்து எங்களை அழிக்க முயற்சி செய்தான்.”

ஓஓஓ, பரம்பொருளே, வாசுதேவரே! எங்கள் கடவுளே!” ஸ்வேதகேது அந்தக் கரவீரபுரத்து மக்கள் அனைவரும் ஸ்ரீகாலவனை வணங்கும் தொனியில் மிகவும் பணிவோடு இதைக் கூற உத்தவனின் ஆத்திரம் பொங்கியது..

“வெட்கமற்ற ஸ்ரீகாலவனின் சீடரே! கேளும்!” என்றான் உத்தவன். அவன் குரலில் படமெடுத்தாடும் நல்லபாம்பின் சீறல் மிக உக்கிரமாய்த் தொனித்தது. “கண்ணனை எவராலும் வெல்ல முடியாது. அதை அவன் நிரூபித்தும் வருகிறான். கோமந்தகமலையில் என்ன நடந்தது தெரியுமா?? கடலரசன் கண்ணன் சொற்படி கேட்டு மலையைச் சுற்றி வளைத்துக்கொண்டு பாய்ந்து வரும் தீயைத் தன் கடல் நீரால் அணைத்தான். அக்னியும் கண்ணனுக்குக் கட்டுப்பட்டு முற்றிலும் அணைந்து போனது. மேலே இருந்து கீழே வந்த கண்ணனும், பலராமனும் ஜராசந்தனின் படையை அழித்தனர். கோனார்டின் அரசன் கொல்லப் பட்டான். ருக்மிக்குக் காயம் ஏற்பட்டது. விந்தனும், அநுவிந்தனும் குருகுல முறை சகோதரர் என்பதால் காக்கப் பட்டனர். ஜராசந்தன் எப்படியேனும் தப்பி ஓடக் கண்ணனால் அநுமதிக்கப் பட்டான். அதுவும் தாமகோஷன் தலையீட்டினாலேயே தப்புவிக்கப் பட்டான். ஓடிக் கொண்டிருக்கிறான் இப்போது!” என்றான்.

“அது சரியப்பா, கரவீரபுரத்துக்கு எப்படி, ஏன் வந்தாய்?? என்ன நடந்தது இங்கே?”

“கண்ணன் ஸ்ரீகாலவனோடு சிநேகிதமாக இருக்கவேண்டும் என்றே ஆசைப்பட்டான். அவனால் தான் ஜராசந்தன் கோமந்தக மலை வரையிலும் வந்தான் என்று தெரிந்தும் கண்ணன் ஸ்ரீகாலவன் மனம் மாறுவான் என்றே எதிர்பார்த்தான். ம்ஹும், ஆனால் இங்கே என்ன நடக்கிறது? உன் மன்னன் கண்ணனின் நட்புக் கரத்தை வெறுத்து ஒதுக்குகிறானே? மேலும் கண்ணனைக் கண்டபடி திட்டுவதோடு அல்லாமல் அவன் தான் கடவுள் என்று நான் ஒப்புக்கொள்ளவேண்டும் என்றும் அவன் அடி பணிந்து வணங்கவேண்டும் என்றும் கூறுகிறான். வற்புறுத்துகிறான். நான் மறுத்ததால் இந்தச் சிறைக்குத் தள்ளப் பட்டேன். “

“ஓ, அப்படியா? புநர்தத்தா?? நீ எப்படி இங்கு வந்தாய்?”

“ அதை நீர்தான் சொல்லவேண்டும் ஸ்வேதகேது அவர்களே! இதோ இவர் தான் புநர்தத்தனின் தாய்வழிப் பாட்டனார் ருத்ராசாரியார். வேத, வேதாங்களில் கரை கண்டவர். சமுத்திரங்களின் எல்லை காணமுடியாதது போலவே இவரின் ஆழ்ந்த படிப்புக்கும் எல்லை இல்லை எனலாம். இவருடன் இருக்கும் மற்ற ஆசாரியர்களின் நிலையும் இவ்வாறே. இவர்கள் அனைவரும் அன்னை ஸரஸ்வதியின் அருட்கடாக்ஷம் நிரம்பியவர்கள். அவளால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். இவர்கள் எப்படி ஒரு மனிதனை, அதுவும் ஸ்ரீகாலவன் போன்றவனைக் கடவுளாக வணங்க முடியும்?”

"புநர்தத்தன் தன் பாட்டனைத் தேடி வந்தவன், அவனும் ஸ்ரீகாலவனை வணங்க மறுத்து இந்தச் சிறையில் தள்ளப் பட்டான். ஆனால், நீர், நீர், ஸ்வேதகேது! உம்மைப் போன்ற ஒரு குருவிடம் பாடம் கேட்டோமே என வெட்கப் படுகிறேன். எங்களுக்கெல்லாம் ஓர் ஆதர்சமாக இருந்த நீர், இப்போது இங்கே வெட்கம் கெட்டு, பணத்திற்கு அடிமையாகி, ஒரு கொடூர மனம் படைத்த மன்னனுக்கு ஊழியம் செய்து வருகிறீர். இது தான் நீர் படித்த வித்தைகளின் விளைவா?? சாந்தீபனி போன்றதொரு குருவிடம் அவருக்கு அடுத்த ஸ்தானத்தில் நீர் இருந்ததை மறந்தீரோ?? " உத்தவன் கடுமையான வார்த்தைகளை வீச ஸ்வேதகேது வாயே திறக்கவில்லை. அவனுக்கு மறுமொழி எதுவும் சொல்லவில்லை.

மெல்லத் தலையைக் குனிந்து கொண்டான். எப்படிப் பட்டதொரு தவ வாழ்க்கையை வாழ்ந்து வந்தான்! சாந்தீபனியின் சீடனாக இருந்ததோடு மட்டுமல்லாமல் அவர் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் இருந்து வந்திருக்கிறான். அவனுடைய கனவுகளெல்லாம் அப்போது அவனும் இது போன்றதொரு தவ வாழ்வு மேற்கொண்டு அவனும் ஒரு ரிஷியாகி, அவனிடமும் அவனுக்கென ஒரு ஆசிரமம் ஏற்படுத்திக்கொண்டு அதில் சீடர்கள் என அமைதி நிறைந்த கெளரவமான ஒரு வாழ்க்கைக்கான கனவு! இந்தக் கனவைக் கண்டு வந்த அவன் இப்போது அனைத்து ஆசாரியர்களையும் கேள்வி, முறையில்லாமல் சிறையில் தள்ளும் ஸ்ரீகாலவனுக்கு ஊழியம் புரிந்து கொண்டு இருக்கிறான். நிமிர்ந்து பார்த்தான் ஸ்வேதகேது.

"உத்தவா! ஒரு மிருகத்தை விடக் கேவலமாக நான் நடத்தும் இந்த வாழ்க்கையையும் என் நிலையையும் பார்த்தாயா? " என்றான்.

Thursday, September 2, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

ஸ்வேதகேது, உமக்கா இந்த நிலை??

உத்தவனுக்கு எவ்வாறேனும், அந்தக் கிணற்றுக் குகையில் இருந்து தப்பிக் கிருஷ்ணனிடம் போய் இங்குள்ள ஆபத்துகளைப் பற்றிச் சொல்லும் ஆசை வந்தது. ஆனால் எவ்வாறு தப்பிப்பது?? புநர்த்த்தன் தப்பவே முடியாது என்று திட்டவட்டமாகச் சொன்னான். இங்கிருந்து தப்ப வந்த வழி ஒரே வழிதான் எனவும், நான்கு நாட்களுக்கு ஒருமுறை ஸ்ரீகாலவனின் அதிகாரிகளில் ஒருவர் இங்கே வந்து, ஸ்ரீகாலவனைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளச் சம்மதிப்பவர்களை விடுவிக்க வந்திருப்பதாய்க் கூறுவதாயும், அதற்கு இது வரை எவரும் சம்மதிக்கவில்லை என்றும் கூறினான். நாளை அல்லது மறுநாள் அந்த அதிகாரி வரலாம் என்றும் கூறினான். தன்னுடைய பாட்டனாருக்கும் மற்றவர்களுக்கும் உத்தவனை அறிமுகம் செய்து வைத்தான் புநர்தத்தன். உத்தவன் அவர்களுக்குக் கண்ணன் கோமந்தக மலையில் செய்த சாகசங்களையும், மதுராவில் கம்சனைக் கொன்றது பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினான். இங்கிருந்து எவ்வாறேனும் தப்பிவிடவேண்டும் என்ற தன் தீராத ஆசையையும் கூறினான். அப்போது புநர்தத்தனுக்கு ஒரு யோசனை தோன்ற உத்தவனிடம் அதைப் பகிர்ந்து கொண்டான். உத்தவனும் அது நல்லயோசனை என்று கூறினான். இருவரும் மறுநாள் வரப் போகும் அதிகாரிக்காகக் காத்திருந்தனர்

மறுநாள் அந்தக் கிணற்றுக் குகைக்குள் ஒரு வலுவான வாளியில் இரு நபர்கள் அமர்ந்து கொண்ட வண்ணம் உள்ளே மேலிருப்பவர்களால் இறக்கப் பட்டனர். இருவரின் ஒருவர் ஸ்ரீகாலவனின் அதிகாரி, மற்றவர் அவருக்கு உதவியாய் வந்தவர். இருவரும் அந்தச் சமவெளிக்குச் செல்ல ஆரம்பித்தனர். இருட்டாக இருந்த அந்தப் பிரதேசத்தில் ஏற்கெனவே பலமுறை வந்து போன அநுபவத்தால் இருவரும் நடக்க ஆரம்பித்தனர். திடீரென அந்த அதிகாரியின் மேலே உத்தவன் பாய அதிகாரி திடுக்கிட்டுச் சமாளிக்க முடியாமல் கீழே விழுந்தார். மற்றவன் மேல் புநர்த்த்தன் பாய, சற்றும் பழக்கமே இல்லாத அவன் வெகு விரைவில் தோல்வியுற்றுக் கீழே விழுந்தான். ஆனால் உத்தவன் சமாளிக்க வேண்டி இருந்தது, தேர்ந்ததொரு மல்யுத்த வீரனை என்பதை வெகு விரைவில் அவன் புரிந்து கொண்டான். அவனை மடக்க உத்தவன் செய்த முயற்சிகளின் போது உத்தவனை வீழ்த்த அவன் போட்ட ஒரு பிடி உத்தவனை ஆச்சரியப் பட வைத்த்து. அது குரு சாந்தீபனியின் சீடர்கள் மட்டுமே அறிந்த அபூர்வப் பிடியாகும் அது. தன்னையுமறியாமல் உத்தவன், “சாந்தீபனியின் பிடி?? இல்லையா?” என்று கேட்க, அந்த அதிகாரியும் ஆச்சரியமடைந்தான். அந்த ஒரு விநாடியைப் பயன்படுத்திக்கொண்டு அதற்குத் தக்க எதிர்ப்பிடியைப் போட்டு அவனை வீழ்த்தினான் உத்தவன். அந்த அதிகாரி, “ஆம், நான் சாந்தீபனியின் சீடன் தான். நீயுமா?” என்று கேட்க. அவன் குரலைக் கேட்ட உத்தவன் ஆச்சரியத்துடன், “ஸ்வேதகேது, நீங்களா?” என்றான்.

“உத்தவா!” என்றான் ஸ்வேதகேது கண்களில் கண்ணீர் ததும்ப. கண்ணன், பலராமன், உத்தவன் ஆகியோருக்கு சாந்தீபனியின் நடமாடும் குருகுலத்தில் வேதங்கள் அனைத்தையும் கற்பித்தது ஸ்வேதகேது தான். தன்னை மீறிய ஆர்வத்தோடும், அன்போடும் ஸ்வேதகேது உத்தவனை அணைத்துக்கொள்ள உத்தவனும் அவன் அன்புப் பிடியில் திணறினான். புநர்தத்தனை குருவின் மகன் என்று அறிமுகம் செய்து வைத்தான். கண்ணன் வைவஸ்வத புரியிலிருந்து அவனை மீட்டு வந்ததைப் பராபரியாகக் கேட்டிருந்த ஸ்வேதகேது அவனையும் அன்போடு அணைத்துக் கொண்டான். “எவ்வாறு இந்த நரகத்துக்கு இருவரும் வந்தீர்கள்?” என்று ஸ்வேதகேது கேட்க, புநர்தத்தனோ, “நீங்கள் எப்படி இங்கே வந்து ஸ்ரீகாலவனுக்கு ஊழியம் செய்கிறீர்கள்?? சாந்தீபனி ஆசாரியருக்கு மிகவும் மனதுக்கு நெருங்கிய சீடர் நீங்கள். உங்களை அவருக்கு மிகப் பிடிக்கும். என்னை பாஞ்சஜனா ராக்ஷசன் கடத்திச் சென்ற சமயம் நீங்கள் அங்கே என் தகப்பானாரின் ஆசிரமத்தில் இருந்தீர்கள் அன்றோ? ஆனால் கண்ணனால் நான் மீட்கப் பட்டுத் திரும்பியபோது நீங்கள் அங்கே இல்லையே? ஆஹா, இருந்திருந்து ஸ்ரீகாலவனுக்கு ஊழியம் செய்யவா இங்கே வந்தீர்கள்? உங்கள் தகுதிக்கு இது ஒப்புமா? இன்று வரை உங்களை இங்கே நான் கண்டதுமில்லையே?” என்றான்.

அதற்கு ஸ்வேதகேது, “ஆம், இது என் வேலை இல்லைதான். ஆனால் இன்று ஒரு சிறப்பு விருந்தினர் இந்த நரகத்துக்கு வந்திருப்பதாய்த் தெரிவிக்கப் பட்டு அவரைச் சந்திக்கவேண்டும் என்று என்னை அனுப்பி வைத்திருக்கின்றனர். உங்கள் இருவரில் எவரைச் சொன்னார்கள் எனப் புரியவில்லை. ஆனாலும் பதின்மூன்று வயதான ரிஷிகளும் இரு இளைஞர்களும் இருக்கிறார்கள் என்று சொல்லப் பட்டது. “

“ஓஹோ, அந்தச் சிறப்பு விருந்தினன் வேறு யாரும் இல்லை. நான் தான். “ என்றான் உத்தவன். “ஆனால் என்ன ஒரு சந்திப்பு! நாங்கள் இருவரும் உங்கள் மாணாக்கர்கள். இந்த முதியவர்கள் அனைவரும் அனைத்தும் அறிந்த ஆசாரியர்கள். நாங்கள் அனைவரும் ஒரு தர்மத்தைக் காக்கவேண்டி இந்த நரகத்தில் அடைபட்டிருக்கிறோம். எங்கள் இருவரின் குருவான நீரோ, வெளியே ஆடம்பரத்திலும் சொகுசு வாழ்க்கையிலும், பண சுகத்திலும் மிதந்து கொண்டு இருக்கிறீர்.” என்றான்.

“ஓஓஓஓ, உத்தவா, என்னைப் பார்த்தால் அப்படிப் பணக்காரப் பிரபு போல் தெரிகிறதா?” என்றான் ஸ்வேத கேது. “நான் ரொம்பவே மாறிவிட்டேனா?” என்றும் வினவினான்.
“என்ன ஆயிற்று? எங்கள் மூத்த சகோதரருக்கு ஒப்பான நீர் இவ்விதம் மாறும்படியாக என்ன நடந்தது? கண்ணனுக்கு மிகவும் நெருக்கமானவர் அன்றோ நீர்?” என்றான் உத்தவன்.
“ஹா, என்ன ஆயிற்று எனக்கு?? ஒன்றும் ஆகவில்லை. நான் எப்போதும் போல்தான் இருக்கிறேன்.”

“ஆஹா, உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள், சகோதரரே! அறிவினாலும், விவேகத்தினாலும், ஞாநத்தினாலும் ஒளிவிட்டுப் பிரகாசித்த உங்கள் கண்கள்! அவற்றை இப்போது காணோமே? உங்கள் முகமே அறிவொளியினால் சுடர் விட்டுப் பிரகாசிக்குமே? எங்கே ஐயா அந்த அறிவொளி?? உங்கள் உடல் தவத்தினாலும், சீலத்தினாலும் கட்டுக்குலையாமல் இரும்பென இருந்ததே? அந்த ஒரு பிடி, குருதேவர் நமக்கு மட்டுமே கற்பித்த அந்தப் பிடி, அதை நீர் பிரயோகிக்காவிட்டால், உங்களை நான் கண்டறிந்து கொள்வது கடினமே ஐயா. தன்னைத் தானே தாழ்த்திக்கொண்டு ஆபரணங்களாலும், அழகிய பட்டாடைகளாலும் அலங்கரித்துக்கொண்டு வந்திருக்கும் உம்மை, ஒரு சாதாரண மானுடன் தன்னைத் தானே கடவுள் எனக் கூறிக்கொள்வதை அங்கீகரித்திருக்கும் உம்மை, நான் புரிந்து கொண்டிருப்பது கடினமே!” உத்தவனின் கோபம் அடங்கவே இல்லை.
“இரு உத்தவா, அப்படியெல்லாம் பேசாதே! என் உதவியாளுக்கு நினைவு தெளிந்து கொண்டு அனைத்தையும் பார்த்துக் கேட்டுப் புரிந்து கொள்ளப் போகிறான்.” ஸ்வேதகேது சொன்னான்.

“ஐயா, சாந்தீபனியின் சீடர் ஆன நீர், கேவலம் ஒரு உண்மையைப் பேசுவதால், அல்லது அந்த உண்மையைக் கேட்பதால் கேடு விளையும் என்று நம்ப ஆரம்பித்தது எப்போது?” சாதாரணமாய் மென்மையாய்ப் பேசும் உத்தவன், ஸ்வேதகேதுவின் தவசீலத்தையும், ஒழுக்கத்தையும் பற்றி நன்கு அறிந்திருந்தான். ஆகையால் அப்படிப்பட்ட ஸ்வேதகேதுவின் இந்தக் கீழான நிலைமை கண்டு கொதிப்படைந்திருந்தான்.