Friday, December 28, 2012

கண்ணனுக்கு வரவேற்பு!


"மாட்சிமை பொருந்திய வாசுதேவனை வரவேற்பதில் பாஞ்சாலம் பெருமையும் அதிர்ஷ்டமும் அடைந்திருக்கிறது!" என்றான் துருபதன் தன் கம்பீரமான குரலில்.  கிருஷ்ணனும், அங்குள்ள அனைவருமே துருபதனின் இருப்பை உணர்ந்து முழு அரச மரியாதையைக் காட்டுவதை உணர்ந்தான்.  கண்ணன் மெல்லிய நகையுடன், "உண்மையில் எனக்குத் தான் அதிர்ஷ்டமும், பெருமையும்." என்று கூறினான்.  துருபதனின் கால்களைத் தொட்டு வணங்க முயன்ற கண்ணனைத் தடுத்துத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் துருபதன்.  மிக அழகாகவும், ஆடம்பரமாகவும் அலங்கரிக்கப்பட்ட பட்டத்து யானையின் மேல் தன்னருகே கண்ணனை அமரச் சொன்னான் துருபதன்.  அவர்களுடன் த்ருஷ்டத்யும்னனும் அவன் சகோதரன் சத்யஜித்தும் அமர்ந்து கொள்ள யானை பிளிறிக் கொண்டே கிளம்பியது. மற்றவர்கள் அனைவரும் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.

முன்னே முரசுகளும், பேரிகைகளும் சப்திக்க, எக்காளங்கள் ஊத, கட்டியக்காரர்கள் கட்டியம் கூற, பின்னே ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்றது.  மிகக் குறைவாகவே பேசிய துருபதன் பேசிய ஓரிரு வார்த்தைகளும் ஆழ்ந்த உணர்வுகளோடு கூடியதாக இருந்ததைக் கண்ணன் உணர்ந்தான்.  யாதவர்களையும் அவர்களின் இடம் மாற்றி வேறிடம் சென்றதையும், அவர்களைப் பற்றிய மற்ற விபரங்களையும் துருபதன் நன்கு அறிந்திருந்தான்.  குரு சாந்தீபனியைத் தவிரவும் அவன் ஒற்றர்கள் மூலமும் இதை எல்லாம் அறிந்திருக்கலாம் எனக் கண்ணன் நினைத்தான்.  த்ருஷ்டத்யும்னனிடமும், சத்யஜித்திடமும் கண்ணன் பேசிய போதும் அவர்கள் இருவருமே துருபதனைப் போலக் கேட்ட கேள்விக்குப் பதில் என்ற அளவில் இருந்ததைக் கண்டான்.  ஆனாலும், அவர்கள்கண்களில் அவர்கள் நேர்மை தெரிந்ததோடு கிருஷ்ணனைக் குறித்து அவர்கள் மிகப் பெருமையாகவும், உயர்வாகவும் உளமார, மனமார நினைக்கின்றார்கள் என்பதையும் புரிந்து கொண்டான்.

மாளிகைக்கு வந்ததும், துருபதனின் மூன்றாவது மகன் ஷிகண்டினை அறிமுகம் செய்து வைத்தார்கள். பார்ப்பதற்கு ஒரு அழகான சிறு பெண்ணைப்போல் காட்சி அளித்த ஷிகண்டின் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லாமல் காணப்பட்டான்.  அவன் வரும் முன்னரே அவனுக்கும் முன்னால் அவனுடைய பயந்த சுபாவம் அங்கே ஒரு காற்றைப் போல் சூழ்ந்து கொண்டு மூச்சு முட்ட வைப்பதைப் போல் கண்ணன் உணர்ந்தான்.  துருபதனும், அவனுடைய மற்ற இரு மகன்களும் ஷிகண்டினையே பார்த்துக் கொண்டிருக்க அந்தப் பையனோ சபையை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டுவிடுவானோ எனக் கண்ணன் அஞ்சினான்.  அப்படியே அவனும் நடுங்கிக் கொண்டிருந்தான். தடுமாறினான்.  முறையான வரவேற்புக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் தவித்தான். பின்னர் அனைவருக்கும் ராஜ விருந்து படைக்கப்பட்டது.  உயர் அதிகாரிகள் சூழ, முக்கியமான நபர்கள் கலந்து கொள்ள மிகவும் உயர்தரமான விருந்து படைக்கப்பட்டது.

ஏற்பாடுகள் அனைத்தும் கன கச்சிதமாகச் செய்யப்பட்டிருந்தது.  எங்கோ தூரத்தில் மெல்லிய இசை ஒலிக்க,அரச குடும்பத்துப் பெண்கள் மிக அருமையாகவும், பகட்டான ஆடை அலங்காரத்துடனும் வந்து உணவு பரிமாற ஆரம்பித்தார்கள்.  அவர்களில் துருபதனின் அன்பு மகள் திரெளபதியும் இருந்தாள்.

Saturday, December 15, 2012

பாஞ்சாலத்தில் கண்ணன்!


சத்யவதி தன்னிடம் பகிர்ந்து கொண்ட ரகசியம் வியாசருக்குத் தெரிந்திருக்குமா எனக் கண்ணன் யோசித்தான்.  அவரிடம், “தாங்கள் ஐந்து சகோதரர்களும் உயிருடன் இருக்கிறார்கள் என நம்புகிறீர்களா ஆசாரியரே!” எனக் கண்ணன் கேட்டான்.  வியாசர் அந்தக் கேள்விக்கு நேரடியாகப்பதில் கூறவில்லை.  “அப்படி அவர்கள் இறந்திருந்தால்???? கண்ணா, நீ இங்கே இப்போது இருக்கிறாய்.  எதற்கு?  ஆர்ய வர்த்தத்தின் அரசர்களுக்கு மனுநீதியையும், வைவஸ்வதர் சொன்னதையும், ஜனகர் சொன்ன ராஜநீதியையும் நீயன்றோ போதிக்க வேண்டும்! வாசுதேவா, இப்போது நீ துருபதனைச் சந்திக்கச் செல்கிறாய் அல்லவா?  அவனிடம் அன்பின் மூலமும், பாசத்தின் மூலமும் மட்டுமே வெற்றி கிட்டும் என எடுத்துச் சொல்லி அவன் மனதை மாற்றுவதில் வெற்றி அடை !  குரு வம்சத்தினருக்கும், பாஞ்சால நாட்டு மன்னனுக்கும் நடுவில் இருக்கும் பகை அடியோடு ஒழிந்து அங்கே ஒரு அமைதியான நட்புப்பூங்கா உருவாகட்டும்.  பாஞ்சால நாட்டு மன்னர்களும் சாமானியர்கள் அல்ல,  தர்மத்தைக் கடைப்பிடிப்பதில் வல்லவர்களே. “

“மாட்சிமை பொருந்திய ஆசாரியரே, இந்த விஷயத்தில் என்னால் எவ்வளவு தூரம் உதவ முடியும் எனப் புரியவில்லை.  எனினும் நான் முயல்கிறேன்.”
“நீ ஒரு க்ஷத்திரியன் கண்ணா! எப்போதும் அரசனுக்குரிய தர்மத்தையே கடைப்பிடித்து வா.  க்ஷத்திரிய தர்மத்தைக் கைவிடாதே.  உண்மையை மதித்து நட!  தர்மத்தின் வழி செல்பவருக்குத் தக்க மரியாதையைக் கொடுத்து வா.  மற்றவற்றை அந்த மாபெரும் இறைவன் கைகளில் விட்டு விடு.”
“பீஷ்மரும் இதையே தான் சொன்னார் ஆசாரியரே!”  என்றான் கண்ணன்.
“துரியோதனனின் சதித்திட்டங்களை பீஷ்மன் முறியடித்து அவனுக்கு ஒரு பாடம் புகட்டி இருக்கவேண்டும் .  மாறாக துரியோதனனுக்கு அடங்கி நடக்கும்படி யுதிஷ்டிரனுக்குச் சொல்லிக் கொடுத்தது அவன் செய்த மாபெரும் தவறு.”  வியாசர் கூறினார்.  ஒரு சிறுநகையுடன், மேலும் தொடர்ந்து, “ஒவ்வொரு மனிதனும் அவனுக்கென ஒரு தனிக் கடமையைக் கைக்கொண்டிருக்கிறான்.  பீஷ்மன் குரு வம்சத்தையும் ஹஸ்தினாபுரத்தையும் காப்பது அவனுடைய மாபெரும் கடமையாகக் கொண்டிருக்கிறான்.  ஆகவே அவன் வரையில் அதைக் காக்க வேண்டி அவன் செய்தது சரி.”

“ஆம், ஐயா, நான் அறிந்த வரையில் பீஷ்மரின் மனதுக்குள்ளே ஒரு பிரளயமே நடந்து கொண்டிருக்கிறது.  மிகுந்த மனப்போராட்டத்தில் அவர் தவிக்கிறார்.  ஐந்து சகோதரர்களா?  ஹஸ்தினாபுரமா?  என்ற கேள்வி எழுந்தபோது அவர் மனம் ஹஸ்தினாபுரம் பக்கமே சாய்ந்துவிட்டது.  அதே சமயம் சகோதரர்களிடம் வைத்திருக்கும் பாசத்தாலும் தவிக்கிறார்.”

“வாசுதேவா, உன் எதிரில் காணப்படும் அனைத்துப் பிரச்னைகளையும் நீ தக்க விதத்தில் சமாளிப்பாய்.  எனினும் நீ எல்லாவற்றையும் அந்த இறைவனிடம் ஒப்படைத்துவிடு.  உன் ஒருவனால் மட்டுமே இந்தப் பிரச்னைகளைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.  இது தான் உன் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம்;  நீ கட்டப் போகும் பிரம்மாண்டமான சாம்ராஜ்யமும் இதுவே.  இதை எவராலும் வெல்ல முடியாது.”  என்றார் வியாசர்.
“தங்கள் ஆசிகளை வேண்டுகிறேன் குருதேவரே!” என்று கண்ணன் அவர் பாதம் பணிந்தான். 
“என் ஆசிகள் எப்போதும் உனக்கு உண்டு வாசுதேவா!  நீ மேற்கொள்ளப் போகும் அனைத்துச் செயல்களிலும் வெற்றியே அடைவாய்!”  தன்னிரு கரங்களைத் தூக்கி ஆசீர்வதித்தார் வியாசர்.  அதற்குள் வியாசரை அழைத்துச் செல்ல தெளமியர் வர, அவருடன் வேதபாடசாலைக்குச் சென்றார் வியாசர்.  மாலை நேர அநுஷ்டானங்களுக்கும், வழிபாட்டுக்கும் பின்னர் அனைவரும் பழங்கள், பால் என அருந்தி இரவு உணவை முடித்துக் கொண்டு படுத்தனர்.  இரவு முழுவதும் வியாசரின் அருகாமையை மிகவும் நன்றாக உணர்ந்தான் கண்ணன்.  காலையில் எழுந்ததும், வியாசர் தன் சீடர்களோடு நடுக்காட்டிற்குள் இருக்கும் நாகர்களின் அரசன் ஆன ஆர்யகனைச் சந்திக்கச் சென்றுவிட்டார் எனக் கண்ணன் கேள்விப் பட்டான்.  விடிவதற்கு முன்னரே அவர்கள் கிளம்பிச் சென்றிருந்தனர்.  உத்தவனைத் தேடினான் கிருஷ்ணன்.  அவன் வியாசருடன் சென்றிருப்பதாக சாத்யகி கூறினான்.
“உத்தவன், உங்கள் இருவரின் தந்தைக்கும் தாய்வழிப் பாட்டனார் ஆன ஆர்யகனைச் சந்தித்து ஆசிகள் பெற்று வரப் போயிருக்கிறான்.  நாம் நம் வழியே திரும்புகையில் உத்கோசகத்துக்கு அருகே நம்முடன் சேர்ந்து கொள்வதாய்க் கூறினான்.”  சாத்யகி மேலும் கூறினான்.

“ஏன் அவன் திடீரெனச் சென்றிருக்கிறான்?”  கண்ணன் உத்தவன் சாத்யகியிடம் உண்மையைச் சொல்லி விட்டுச் சென்றிருக்கிறானா என அறிய விரும்பினான்.  ஆனால் சாத்யகியோ, “ ஒருவேளை ஐந்து சகோதரர்களும் உண்மையாகவே இறந்துவிட்டனரா என அவன் அறிய விரும்பி இருக்கலாம்.  எனக்கு என்ன தெரியும் கண்ணா! ஆசாரியர் வியாசருடன் பேசியதும், உத்தவனுக்கு வியாசரும் அதே விஷயமாகத் தான் ஆர்யகனைச் சந்திக்கச் செல்கிறார் எனத் தோன்றி இருக்கலாம்.  அல்லது காட்டின் நடுவில் ஆர்யகனின் பாதுகாப்பில் ஐந்து சகோதரர்களும் இருக்கிறார்களா என வியாச முனிவர் பார்க்கப் போவதாகவும் நினைத்திருக்கலாம்.  நான் அறியேன்!”
சாத்யகியின் சாமர்த்தியமான பதிலைக் கேட்டுக் கண்ணன் சிரித்தான்.

கிருஷ்ணனும், அவனுடன் வந்தவர்களும் நதியிலேயே தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.  ஏகசக்ர தீர்த்தத்தின்  அருகே அவர்கள் வந்துவிட்டனர்.  இன்னும் ஒரே ஒரு துறை தான் காம்பில்யத்தை அடைய பாக்கி இருந்தது.  ஏக சக்ர தீர்த்தக்கரையிலேயே திருஷ்டத்யும்னன் அவர்களைச் சந்தித்தான்.  பாஞ்சால நாட்டு அரசன் தன் யுவராஜாவான திருஷ்டத்யும்னனை மட்டுமின்றி, தன் முதல் அமைச்சரையும் கண்ணனை வரவேற்க அனுப்பி இருந்தான்.  ஆசாரிய உத்போதனர் என்னும் பெயர் கொண்ட முதல் அமைச்சருடன், ஷ்வேதகேதுவும் வந்திருந்தான்.  அவன் முன்னால் சென்று கண்ணன் வருகையை அறிவிக்கவே துருபதனால் இத்தனை ஏற்பாடுகளையும் செய்ய முடிந்தது.  பாஞ்சால நாட்டுத் தலை நகருக்கு அழகாக அலங்கரிக்கப் பட்ட படகுகளில் அனைவரும் சென்றனர்.  கரையோரங்களில் அவர்கள் தங்குகையில் அங்கிருந்த குடியிருப்பின் மக்கள் அவர்களுக்குப் பெரிய அளவில் வரவேற்பு அளித்தனர்.  திருஷ்டத்யும்னனின் வீர, தீரப்பராக்கிரமங்களையும், அவனின் திடமான உறுதியான உடலையும், உறுதியைக் காட்டும் கண்களையும் பார்த்த கிருஷ்ணன் சந்தோஷம் அடைந்தான்.  பாஞ்சால நாட்டு மன்னனின் ஆட்சியில் குடிமக்கள் எவ்விதக் குறையுமின்றி சந்தோஷமாக இருப்பதாகக் கண்ணன் கேள்விப் பட்டிருந்தான்.  அவர்கள் தங்கிச் செல்லும் இடங்களில் உள்ள மக்கள் மூலம் கண்ணன் அதைப் பூரணமாகப் புரிந்து கொண்டதோடு ஆங்காங்கே நிறைய ரிஷிகளின் ஆசிரமங்களும், குருகுலங்களும் இருப்பதையும் பார்த்தான். 

காம்பில்யத்தை அவர்கள் அடைந்த போது கோட்டை வாயிலுக்கே வந்து கண்ணனை வரவேற்றான் துருபதன்.  மக்களோ வெள்ளமாகக் கூடி இருந்தனர்.  கண்ணனின் சாகசக் கதைகள் அவ்வளவு தூரம் மக்கள் மனதைக் கவர்ந்திருந்தது.  உயரமாகவும், அதிகப்பருமன் இல்லாமலும், மாபெரும் வீரன் எனவும் தோற்றமளித்த துருபதன் முகத்தில் எப்போதும் உறைந்த தன்மையே காணப்படுமோ என எண்ணும்படி இருந்தான்.  எனினும் நெடுநாட்களாய்த் தான் காத்துக் கொண்டிருந்த தன் அருமை விருந்தினரை வரவேற்க வேண்டி அவன் முகம் கொஞ்சம் போல இளகியும் இருந்தது. 

Monday, December 10, 2012

தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்!


“கண்ணா,  இப்படி எல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன் எனில் நான் இத்தனை காலம் உயிர் வாழ்ந்திருக்கவே முடியாது.  வாசுதேவ கிருஷ்ணா, நான் பிறந்த சமயம் இந்த ஆர்யவர்த்தம் சகலவிதமான செளகரியங்களையும் கொண்டிருந்தது.  ஆனால் அதன் மன்னர்களிடையே ஒற்றுமை என்பதே இல்லை.  வேதங்கள் ஓதுவதும், அவற்றைப் பற்றிப் பேசுவதும் முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது.  உள்நாட்டுச் சண்டையில் முக்கியத்துவம் காட்டி வந்த மன்னர்கள் வேதம் ஓதுதலை மறந்தே விட்டார்கள் எனலாம்.  ஆசிரமங்கள் அனைத்தும் காடுகள் போல் மாறிவிட்டன.  இப்படி அனைத்தும் அழிந்துவிடுமோ என்னும் சூழ்நிலையிலேயே நான் பிறந்தேன்.”

“பின்னர் நீங்கள் அனைத்தையும் மீண்டும் நிலை நாட்டி தர்மத்தை ஸ்தாபித்து இருக்கிறீர்கள்.  ஆசாரியரே, மிகக் கடினமான இந்த வேலையைத் தனி ஒருவராக எப்படிச் செய்தீர்கள்? உங்களால் எப்படி முடிந்தது?”  கண்ணன் ஆச்சரியத்தோடு கேட்டான். 

“கண்ணா, தர்மம் என்பது காலவரையரை இல்லாத ஒன்று.  அது என்றும் நிலைத்திருப்பது.  ஆகவே அழியாத ஒன்று.  அவ்வப்போது அதற்குச் சரியான பாதுகாவல் இல்லாமல் மறைந்திருப்பது போல் தோன்றலாம்.  ஆனால் தக்க சமயம் வந்ததும் மீண்டும் தலையெடுக்கும்.   தர்மம் ஒருகாலும் அழியாது.  ஏனெனில் அதுவே சத்தியம், நிரந்தரம், உண்மை!  எவராலும் அதை அழிக்க இயலாது!”
“ஆனால், ஆசாரியரே, ஜராசந்தன் போன்ற அரசர்களாலும் என் மாமன் கம்சன் போன்ற கொடியவர்களாலும் தர்மத்தை அழிக்க முடிந்திருக்கிறது.  தாங்கள் நன்கு அறிவீர்கள்.”

“கண்ணா, நான் பெரிய சாம்ராஜ்யச் சக்கரவர்த்திகளையும் சரி, குறுநில மன்னர்களையும் சரி நம்புவதே இல்லை.  ஏனெனில் அவர்கள் மனம் முழுதும் வெறுப்பு, அவநம்பிக்கை, பொறாமை, ஒருவர் மற்றவர் மேல் கொண்டுள்ள பயம் ஆகியவற்றால் பீடிக்கப்பட்டுள்ளார்கள்.  இவையே அவர்களை வழிநடத்துகிறது.  நான் ரிஷி, முனிவர்களையும், ஆசிரமங்களையுமே நம்புகிறேன்.  நதி வழியாகவும், தரை வழியாகவும் நான் ஒவ்வொரு ஆசிரமமாகப் பயணிக்கையில் அவை அனைத்துமே ஒரு அருமையான பல்கலைக்கழகங்களாகத் திகழ்வதை உணர்கிறேன்.  மாணவர்களின் வாழ்க்கைக்கு மட்டுமின்றி அவர்களின் ஆத்ம தாகத்தையும் தீர்க்க வல்லவை இந்த குருகுலங்கள்.  பற்பல கலைகளையும் சுய ஒழுக்கத்தையும் போதிக்கும் இந்த ஆசிரமங்களினால் மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகமாவதோடு சுயக் கட்டுப்பாடும் அதிகமாகிறது.  இதன் ஆசிரியர்கள் ஒருவேளை ஏழையாக இருக்கலாம்.  தப்பில்லை.  ஆனால் அவர்கள் தவத்தில் உயர்ந்தவர்கள்.  அதர்மம் எந்த விதத்தில் வந்தாலும் அவர்களின் தவ பலத்தால் அவர்கள் உயர்ந்தே நிற்கிறார்கள்.  இவர்களை எதிர்த்து எந்த அரசனும் ஒன்றும் செய்ய இயலாது.”

“ஆமாம், ஆசாரியரே, உங்களாலும், உங்கள் வழிநடத்தலாலும் அனைத்து ஆசிரமங்களும் பல்கலைக் கூடமாகவே திகழ்கின்றன.”

“கண்ணா, முதலில் நான் ஒருவனாகத் தான் இந்த யுத்தத்தை ஆரம்பித்தேன். ஆனால், நாளாக, ஆக, எல்லாம் வல்ல மஹாதேவனால் இந்த ரிஷிகளின் மனதில் தைரியத்தையும் நம்பிக்கையையும் ஊட்ட முடிந்தது.  அனைவரும் என் பக்கம் சேர்ந்தார்கள்.  இந்த ரிஷிகள் அனைவரும் தர்மத்தின் வழிநடப்பவர்கள்.  அதைக் காப்பதற்காக எப்படிப்பட்ட ஏழ்மையோ கஷ்டமோ  வந்தாலும் அதையும் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  இவர்களின் இந்த உற்சாகம் பல அரசர்களையும் கவர்ந்திருப்பதோடு அல்லாமல் இவர்கள் மேல் மட்டற்ற மரியாதை கொள்ளவும், இவர்களுக்கு எந்தவிதமான உதவிகளைச் செய்யவும் வைத்திருக்கிறது.  இதோ இந்த தெளம்யரைப்  பார் கண்ணா!  ஒரு வருடம் முன்னால் இவர் இங்கு வந்து இந்த ஆசிரமத்தை நிறுவினார்.  இவருடைய இடைவிடா தபஸின் காரணமாகக் காட்டுவாசிகளான இந்த நாகர்களைக் கூட முன்னேற வைத்துள்ளார்.  அவர்களின் நடவடிக்கைகள், போர் முறைகள் அனைத்திலும் கட்டுப்பாடும் நாகரிகமும் கொண்டு வர இவரால் இயன்றிருக்கிறது.  ஆரியர்களின் நாகரிக வாழ்க்கை முறையை நாகர்களின் தலைவன் ஆர்யகனும், அவன் குடிமக்களும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டு விட்டனர்.  பல அரசர்கள் பலமுறை முயன்றும் அவர்களில் எவராலும் நடக்காத ஒன்று இந்த தெளம்யரின் தபஸினால் நடந்துள்ளது.  “

“ஆர்யகன் இன்னமும் சுறுசுறுப்பாக நடமாடும் நிலையில் இருக்கிறாரா, ஆசாரியரே?”

“ஆர்யகனுக்கு மிகவும் வயது ஆகி விட்டது.”  என்றார் வியாசர்.

“சொல்லுங்கள் ஆசாரியரே!துரியோதனனை எவ்வாறு தர்மத்தின் வழியில் திருப்புவது?”  இதைச் சொல்லும்போது ஹஸ்தினாபுரத்தில் நடந்த கெளரி பூஜையும், அதைச் சாக்காக வைத்து பானுமதியின் மூலம் தன்னை மாற்ற துரியோதனன் செய்த கேவலமான முயற்சிகளும் கண்ணன் நினைவில் வந்தது.

“கண்ணா, அதைக் குறித்தெல்லாம் யோசிக்காதே!  எல்லாம் வல்ல மஹாதேவனால் சரியான நேரத்தில் இதற்கு ஒரு பதிலைக் கொடுக்க இயலும்.   நமக்கு வேண்டியதை, வேண்டிய சமயம் அவன் கொடுத்தே ஆகவேண்டும் என நாம் யாரையும் கட்டாயப் படுத்த முடியாது.  அதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை.” வியாசர் முகத்தின் புன்சிரிப்பு விரிந்தது ஒரு மலர் மெல்ல மெல்ல மலர்வது போல் இருந்தது.

“ம்ம்ம்ம்…மேலும் இப்போது யுதிஷ்டிரனும் மறைந்துவிட்டான்.”  கண்ணன் தொடர்ந்தான்.

வியாசரின் புன்னகை மேலும் விகசித்தது.  “அவர்கள் சொல்கின்றனர்.  யுதிஷ்டிரன் மாண்டுவிட்டான் என. “ எவராலும் அறிந்து கொள்ள இயலாத மர்மச் சிரிப்பொன்று வியாசரின் முகத்தில் காணப்பட்டது.  “ எனக்குத் தெரியும்.  அவன் சாகவில்லை;  உயிருடன் இருக்கிறான்.  உடலோடு இல்லை என்றாலும்  ஆன்ம சொரூபத்திலாவது.”  கண்ணன் முகத்தைப் பார்த்துச் சிரித்தார் வியாசர். 


Thursday, December 6, 2012

கண்ணனை விட என் கவலை அதிகமா இருந்தது.  ஒரு வழியா இதுவும் சரியா வந்திருக்கு.  இறைவனுக்கு நன்றி.

Tuesday, December 4, 2012

கண்ணனுக்கும் கவலை!


அனைவரும் உணவு உண்ண அமர்ந்த போதும் வியாசருக்கு அவர்களுடனேயே அமர்ந்து உணவு உண்ணப் பரிமாறி இருந்தாலும் அவர் உடனடியாக அமராமல் அனைவரையும் பந்தி விசாரணை செய்து அவரவருக்கு வேண்டியவற்றைக் கேட்டறிந்து அவற்றைப் பரிமாறச் சொல்லி அனைவரும் மன நிறைவுடன் உட்கொண்ட பின்னரே அவர் அமர்ந்தார்.  இது அவர் எப்போதும் கடைப்பிடிக்கும் வழக்கம் எனக் கிருஷ்ணன் கேள்விப் பட்டான்.  உண்டு முடித்ததும், “ஷாந்தி, ஷாந்தி, ஷாந்தி” என மும்முறை உச்சரித்த வியாசர் பின்னர் கைகளை வணங்கிய வண்ணமே அங்கிருந்து வெளியேறினார்.  அனைவரும் ஓடோடியும் வந்து அவர் பாதங்களைத் தொட்டுத் தங்கள் கண்களில் ஒற்றிக் கொண்டனர்.  வியாசரைக் குறித்த பல்வேறு செய்திகளையும் கேள்விப் பட்டிருந்த கண்ணன், தான் நேரில் பார்ப்பதற்கு முன்னர் அவை எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்தான்.  இந்த மனிதர் அனைவருக்கும் நண்பராக இருக்கிறார்.  மற்றவர்களிடமிருந்து தன்னை அயல் மனிதனாக வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளவில்லை.  மாறாக அவர்களில் ஒருவராக, அவர்கள் மனதைப் புரிந்தவராக, அதே சமயம் அவர்களின் ஆன்மிக பலமாகவும், உடல் நலத்துக்கு ஏற்ற பலம் தரும் மருத்துவராகவும் திகழ்ந்தார்.  ஒரு மனிதன் இவ்வாறு பலரையும் கவர்ந்து இழுப்பது கண்ணனுக்கு ஆச்சரியத்தை அளித்தாலும்,  தான் போற்றி வணங்கக் கூடிய மனிதர் இவர் என்பதைப் புரிந்து கொண்டான்.

கண்ணனுக்கும் அவனுடன் வந்தவர்களுக்கும், ரிஷிகளின் குடிலுக்கு அருகேயே குடில் அமைத்துத் தரப் பட்டது.  வியாசரின் குடிலில் இருந்து கண்ணனுக்கு அழைப்பும் வந்தது.  வியாசரின் குடிலில் அவர் எதிரே கூப்பிய கரங்களுடன் அமர்ந்த கண்ணனுக்குத் தான் மாபெரும் மனிதர் ஒருவர் முன் அமர்ந்திருக்கும் நிலைமை புரிந்தது.  இந்த மனிதன் சாதாரணமானவன் அல்ல.  இங்கிருக்கும் அனைவரையும் தனித்தனியாக அறிவான்;  அனைவரிடமும் அன்பும் செலுத்துவான்;  அனைவரின் துக்கங்களுக்கும், துயரங்களுக்கும், மருந்திடுவான்;  அனைவரையும் புரிந்தும் கொள்வான்.  இப்படி ஒரு அதிசய மனிதன் இவ்வுலகில் உண்டா?  அல்லது இவன் வேற்று கிரஹத்து மனிதனா? கண்ணனுக்கு மயக்கம் ஏற்பட்டது.  கண்ணனைப் பார்த்த அந்த விசாலமான கண்களில் கருணையும், அன்பும் பொங்கி வழிந்தது.  குரலிலும் அளப்பரிய அன்பு தெரிந்தது.  ஒவ்வொருவர் சொல்வதையும் இவர் இதே போல் அதி தீவிர கவனத்துடனும், அக்கறையுடனும், அன்புடனும் கேட்டுத் தீர்வுகளைச் சொல்கிறார்.  கண்ணன் புரிந்து கொண்டான்.  இவர் எதிரே எவரும் அந்நியர் இல்லை.  அனைவரும் இவருக்குச் சொந்தமானவர்களே.

“கோவிந்தா, ஹஸ்தினாபுரத்துக்கு நீ வந்த காரணம்?”  வியாசர் கேட்டார்.
கண்ணன் ஹஸ்தினாபுரத்துக்குத் தான் வர நேர்ந்த விஷயத்தைத் தெரிவித்தான்.  பாண்டவர்கள் அரக்கு மாளிகையில் நெருப்பு வைத்துக் கொல்லப் பட்டதையும், தான் துக்கம் விசாரிக்க வேண்டி ஹஸ்தினாபுரம் வந்ததையும், தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும், ஹஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரருடனும், பீஷ்மருடனும் பேசியதையும், துரியோதனனையும், அவன் தாய்மாமன் சகுனியையும் குறித்த தன் எண்ணங்களையும் அவரிடம் தெரிவித்தான்.  இவருக்கு எதிரே இவர் முன்னே எதையும் மறைக்கக் கூடாது;  அது பாவம் என்ற எண்ணம் கிருஷ்ணனிடம் இருந்தது.  ஆகவே அனைத்தையும் அவரிடம் கூறினான்.  எனினும்,  சத்யவதி தன்னிடம் பகிர்ந்து கொண்ட ரகசியத்தைச் சொல்லலாமா வேண்டாமா என்பதில் அவனால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.  அது சரியா, தவறா என நிர்ணயிக்க முடியவில்லை. 
“ஆசாரியரே, யாதவர்களையும் கெளரவர்களையும் நெருங்கி வரும்படி செய்வதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.  ஆகவே குரு வம்சத்தினரை யாதவர்களிடம் நெருங்கி வரச் செய்ய ஹஸ்தினாபுரத்தில் யுதிஷ்டிரன் இருப்பது நன்மை பயக்கும் என எண்ணினேன்.  யாதவர்களும், குருவம்சத்தினரும் நெருங்கினால், துருபதனுக்கும் குரு வம்சத்தினரிடம் இருக்கும் மாபெரும் பகை ஓரளவுக்குக் குறையும்.  அவர்களிடம் அவனுக்கு இருக்கும் அவநம்பிக்கையைக் குறைக்கலாம்.  யாதவர்கள் துவாரகையிலும், காம்பில்யத்தில் துருபதனும், ஹஸ்தினாபுரத்தில் யுதிஷ்டிரனும் ஒற்றுமையாக இருந்து ஆட்சி செய்வது அனைவருக்கும் நன்மை பயக்கும் ஒன்று என என் கருத்து.  என் ஆசையும் அதுவே. “ என்றான் கண்ணன். 

“எப்படி நீ அதைச் செய்து முடிக்கப் போகிறாய் வாசுதேவா?” ஆசாரியர் கேட்டார்.
“அரசர்கள் ஒரு முறை உணர்ந்து கொண்டதும், ராஜ தர்மத்தைக் கடைப்பிடிப்பார்கள் என நம்பினேன்.  அரசர்கள் ராஜ தர்மத்தைக் கடைப்பிடித்தால் மக்களும் அவரவர் தர்மங்களைக் கடைப்பிடிப்பார்கள்.  இந்த நம்பிக்கைதான் ஆசாரியரே.  ஆனால்……..ஆனால்…… இப்போது யுதிஷ்டிரன் இல்லை.  அவன் இல்லாமல் என்ன நடக்கும்?  என்னுடைய நம்பிக்கைகளை நான் முற்றிலும் இழந்துவிட்டேன் ஆசாரியரே!”

ஆசாரியரின் முகம் விகசித்து மலர்ந்தது.  மலர்ந்த முகத்தோடு கண்ணனைப் பார்த்து, “வாசுதேவா, தர்மம் ஒருநாளும் மரிப்பதில்லை.  அதை நீ அறிய மாட்டாயா?  அதற்கு இறப்பில்லை.   அதோடு கம்சனை அழித்த நீ, ஜராசந்தனை ஓட ஓட விரட்டிய நீ இதை மறக்கலாமா?  வாசுதேவா, எங்கெல்லாம் அதர்மம் தலை எடுக்கிறதோ, அதை வேரோடு அழிக்கப் பிறந்தவன் நீ.  அதை மறவாதே!” என்றார். 
“மதிப்புக்குரிய ஆசாரியரே! உங்களைப் போன்ற மஹரிஷிகளால் தான் எனக்கு நம்பிக்கை ஒளி காட்ட முடியும். மகதத்தில் சர்வ செளகரியங்களோடும், இணையற்ற செல்வாக்குடனும் ஜராசந்தன் ஆட்சி செலுத்தி வருகையில், அதர்மம் எங்கிருந்து அழிந்தது?  ஹஸ்தினாபுரத்தில் துரியோதனன் ஆண்டு வருகிறான்.  காம்பில்யத்திலோ துருபதன் அனைவரிடமும் தன் வெறுப்பைக் காட்டி வருகிறான்.  அவர்கள் வெறுப்பில் வாழ்கின்றனர்; வன்முறையில் நம்பிக்கை வைத்துள்ளனர்.  அவர்களுக்குத் தெரிந்த ஒரே தர்மம் அவர்களைத் திருப்தி செய்யும் இந்த வெறுப்பும், வன்முறையுமே.”

Thursday, November 15, 2012

வியாசரின் பரிவும், கண்ணனின் நெகிழ்வும்!


****
வாசுதேவா, உனக்கு நூறு வயது.  இல்லை; இல்லை; பல்லாண்டுகள் வாழ்வாய்! உன்னைச் சந்திக்கவேண்டும் என்றே காத்திருந்தேன்.”  வியாசரின் குரலில் ஒரு தந்தையின் பரிவு தென்பட்டது.  நெடுநாள் கழித்துச் சந்திக்கும் மகனைக் கண்ட உற்சாகம் அவர் கண்களில் மட்டுமின்றிக் குரலிலும் தென்பட்டது.  “நான் உன் தந்தையைப் பார்த்திருக்கிறேன்.  ஆனால் பல்லாண்டுகள் முன்னர்!  ஏன், நீ பிறக்கும் முன்னர் சந்தித்திருக்கிறேன்.” என்றார் வியாச முனி.  அவருடைய முக விலாசத்திலிருந்தும் கண்களில் பெருகிய அன்பிலிருந்தும் அவருடைய உள்ளார்ந்த அன்பைப் புரிந்து கொண்ட கண்ணன், அதில் பூரணமாக நனைந்தான். “என் தாய் தேவகி நீங்கள் எங்கள் அனைவரையும் ஆசீர்வதித்தது குறித்து இப்போதும் பேசிக் கொண்டிருக்கிறாள்.” என்றான் கண்ணன்.  வியாசரின் பேச்சை விடவும் அவர் முகமே அவனுக்குப் பல்லாயிரம் செய்திகளைச் சொல்லாமல் சொன்னது. 

“அதன் பின்னர் நான் மதுரா வந்தபோது, நீயும், பலராமனும் கோமந்தக பர்வதத்துக்குச் சென்றிருந்தீர்கள்.” என்றார் வியாசர்.   மான் தோலை ஆடையாக உடுத்தி இருந்த வியாசமுனிவர் கறுப்பு நிறத்தோடும், நல்ல வலுவான உடல் கட்டோடும் காணப்பட்டார்.  அவரிடம் இருந்த சொல்ல ஒண்ணாக் கவர்ச்சி என எதைச் சொல்வது எனக் கண்ணன் திகைத்தான்.   அன்பு பெருகி ஊற்றெடுக்கும் அந்த விசாலமான கண்களா?  அந்தக் கண்களால் வியாசர் எவரையேனும் பார்க்கையிலேயே எதிராளிக்குத் தான் அந்தக் கண்களாகிய மாபெரும் கடலின் அன்பு அலைகளில் மூழ்குகிறோம் என்பது புரிந்தது.  வளைந்த அதே சமயம் தீர்க்கமான புருவங்களும், நீளம் கம்மியாக இருந்தாலும் அகலமான மூக்கும் சேர்ந்து ஒரு இணையற்ற கம்பீரத்தை அவருக்கு அளித்தது.  அதோடு தூக்கிக் கட்டிய அந்த வெண்ணிற முடிக்கற்றைகள், வைரங்களால் ஆன கிரீடம் போல அவருக்கு அமைந்து விட்டிருந்தது.  கைலைச் சிகரத்தின் மேல் எப்போதும் மூடி இருக்கும் வெண்பனியைப் போலவும் காட்சி அளித்தது.  எல்லாவற்றுக்கும் மேல் அவரின் சிரிப்பு, புன்னகை கண்ணனை மிகக் கவர்ந்தது.  “என்னிடம் நெருங்கி வாருங்கள் குழந்தைகளே, உங்களுக்கு எந்தத் தடையும் இல்லை;  என்னிடமிருந்து விலகியும் இருக்க வேண்டாம்.  உங்களிடையே எந்தவிதமான வித்தியாசங்களும் வேண்டாம்.  அனைவரும் என் அருகே வாருங்கள்.  அன்பாகிய அமுதத்தை அள்ளித் தருகிறேன்.” என அந்தச் சிரிப்பு சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது.

“சரி, இப்போது நாம் யாகத்தை முடிப்போம்.” என்றார் மாமுனி.
நாகர்களின் தலைவர்கள் அருகேயே அமர்ந்த கிருஷ்ணனும் அவன் தோழர்களும் மந்திர கோஷத்திலும் கலந்து கொண்டனர்.  ஹோமம் முடிந்ததும் வியாசர் கண்ணனிடம் யாதவர்களின் சுக செளக்கியங்களைக் குறித்து விசாரித்தார்.  மேலும் இங்கே கங்கைக்கரைக்கு வரும்படியாக கிருஷ்ணனுக்கு என்ன வேலையோ எனவும் கேட்டார்.  கிருஷ்ணன் இந்தக் கேள்விகளுக்குப்பதில் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே தெளம்ய ரிஷி அங்கே காத்துக் கொண்டிருந்த உடல் நலமற்றவர்களுக்குப் பாலை விநியோகம் செய்யும்படியாகத் தன் சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.  ஒவ்வொருவராக வரிசையில் வந்து பாலைப் பெற்றுக் கொண்டனர்.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நோயால் அவதிப் பட்டனர்.  சிலரால் நடக்கக் கூட முடியவில்லை. நகர்ந்தே வந்தனர்.  சிலர் யாரேனும் பிடித்துக்கொள்ள நகர்ந்து வந்தனர்.  தங்கள் உடல்நிலை எவ்வளவு அனுமதித்ததோ அந்த அளவுக்கு அவர்களால் நகர முடிந்தது.  அங்கிருந்த வியாசரின் பிரதான சீடரான ஜைமினியின் தோள்களில் இருந்த ஒரு பையிலிருந்து ஒரு சிறிய இலையை வியாசர் அங்கே பால் ஊற்றி வைத்திருந்த ஒவ்வொரு மண் சட்டிகளிலும் இட்டார்.  நோயாளிகள் அந்த மண் சட்டியைக் கைகளில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புனிய யாகாக்னியின் முன்னர் அமர்ந்த வண்ணம் தலை குனிந்து பிரார்த்தித்தனர்.  வியாசர் உரத்த குரலில் அஸ்வினி தேவர்களைத் துதித்துப் பாடத் தொடங்கினார்.  அஸ்வினி தேவர்களைப் பிரார்த்தித்துக் கொண்டால் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை.

சற்று நேரத்தில் அங்கிருந்த சூழ்நிலையே மாறி இனம் தெரியாததொரு அமைதி அங்கே நிலவிற்று.  காற்றும் குளிர்ந்து வீசியது.  மந்திரங்களின் ஏற்ற, இறக்கங்களும் அவைஓதப் பட்ட முறையினாலும்  அனவர் மனதிலும் ஒரு அமைதியை உண்டாக்கியது.  சிறிது நேரத்தில் பிரார்த்தனை முடிந்து, வியாசர் அனைவரையும் அந்தப் பாலைக் குடிக்கச் சொன்னார்.  சிறு குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மார்கள் பாலைப்புகட்டினார்கள்.  தன்னுடைய அதே கவர்ந்திழுக்கும் குரலில், அன்பாக வியாசர் அனைவரையும் தம் அருகே வரச் சொல்லி அழைத்தார்.  “அருகே வாருங்கள் என் குழந்தைகளே, உங்களை நான் ஆசீர்வதிக்கிறேன்.” என்றார்.  அவர் குரலின் இனிமையும், அதில் தொனித்த அன்பும் அனைவரையும் அவர் அருகே வரவழைத்தது.  அனைவரும் அவர் அருகே வந்து குனிந்து நமஸ்கரித்தனர்.  சிலர் அவர் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டனர். சிலர்  சாஷ்டாங்கமாக விழுந்து பாதங்களைக் கண்ணீரால் நனைத்தனர்.  சிறு குழந்தைகள் வியாசரின் காலடியில் படுக்க வைக்கப்பட்டன.  வியாசர் அந்தக் குழந்தைகளைத் தூக்கி அவர்கள் நெற்றியில் யாகாக்னியின் புனிதச் சாம்பலை இட்டு ஆசீர்வதித்தார்.  இம்மாதிரியே அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டனர்.

அனைவரையும் வீட்டுக்குச் செல்லச் சொன்னார் வியாசர்.  அஸ்வினி தேவதைகள் அவர்களை ஆசீர்வதித்து விட்டதாயும், அவர்களின் நோய் குணமடைந்துவிடும் எனவும் கூறினார்.  ஆனந்தக் களிப்பில் கோஷமிட்ட மக்கள் தாங்கள் உண்மையாகவே புத்துணர்ச்சி பெற்றிருப்பதை உணர்ந்தார்கள்.  ஒரு சிலருக்கு உண்மையாகவே நோய் குணமாகி இருக்க, நோய் முற்றிலும் நீங்காத மற்றவர்கள் ஆசாரியரைப் பார்த்து வணங்கிய வண்ணம் அவர் கால்களில் விழுந்தனர்.  அவர்களை, வீட்டிற்குச் சென்று எல்லாம் வல்ல மஹாதேவனை வணங்கிப் பிரார்த்திக்கும்படி ஆசாரியர் கூறினார்.  அவன் ஒருவனே அனைத்தையும் ஆக்கவும், அழிக்கவும் வல்லவன்.  அவனாலேயே உங்கள் துன்பங்களை அழிக்க முடியும். " என்றார்.  மக்கள் ஆசாரியரை வணங்கி அவருக்கு ஜெயகோஷம் போட்டுக் கொண்டு அங்கிருந்து சென்றனர்.

Wednesday, November 7, 2012

கிருஷ்ணரைக் கண்ட கிருஷ்ணன்! :)


உத்தவனுக்கு நாகர்கள் தலைவன் ஆர்யகனையும் தங்கள் தேடுதலில் சேர்க்க எண்ணம் ஏற்பட்டது.  கிருஷ்ணனிடம் அதைக் குறித்துச் சொன்னான்.  ஆனால் எந்த அளவுக்கு அவனை நம்புவது எனக் கண்ணனுக்குக் குழப்பம் இருந்தது.  ஆனால் காட்டின் ஒவ்வொரு மூலை, முடுக்கும் நாகர்கள் நன்கு அறிவார்கள் என்பதால் அவர்கள் தேடுவது இன்னும் எளிது என்றான் உத்தவன்.  அப்படி ஒரு முடிவு எடுக்கவேண்டுமெனில் எடுத்தே ஆகவேண்டும்;  அதன் விளைவுகள் என்னவாக இருந்தாலும் சமாளிக்க வேண்டும் என இருவரும் முடிவெடுத்தார்கள்.  உத்தவன் தானும் காட்டுக்குள் சென்று பாண்டவர்களைத் தேடுவதாகக் கூறினான்.  அதோடு தான் நேரே நாககூடம் செல்வதால் ஆர்யகனை நம்புவதா வேண்டாமா எனச் சோதிக்கவும் வசதியாக இருக்கும் என்றும் கூறினான்.   ஆனால் கண்ணனோ, குறும்புப் புன்னகையோடு, “உத்தவா, நான் உன்னைக் காம்பில்யத்தில் என்னோடு வரவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.” என்றான்.

கிருஷ்ணனின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட உத்தவனும் சிரித்துக் கொண்டே, “நான் எதுக்கு கிருஷ்ணா?  என்னை விட சாத்யகி இளமையானவன்;  வலுவானவன்.  தன் நண்பனாகிய உன் மனதில் ஓடும் புனிதமான எண்ணங்களைப் புரிந்து கொண்டு நிறைவேற்றுவான்.  நீ அவனிடம் கேட்கக் கூட வேண்டாம்.”  என்றான்.  “நான் உன்னை ஏன் அழைக்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டு விட்டாயே, நீ மிகவும் தந்திரக்காரன் உத்தவா!’ கண்ணன் கலகலவென நகைத்த வண்ணம், “திரெளபதியை நீ திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்தேன்.”  என்றான்.

“ஆஹா, உன் இடத்தில் நானா?  யார் ஒப்புக் கொள்வார்கள்?” உத்தவனுக்கும் அடக்கமுடியாமல் சிரிப்பு வந்தது.  மேலும் தொடர்ந்து, “கிருஷ்ணா, நான் ஒரு சாமானியமான மனிதன்.  எனக்கு எந்தவிதமான அபிலாஷைகளும் இல்லை.  அதுவும் திருமணத்தில்.  மேலும் திரெளபதியைப் போன்ற ஒரு தீவிரமான கொள்கைப் பிடிப்புக் கொண்ட திடமான உறுதி படைத்த இளவரசியை மணப்பது எனில்  என்னால் இயலாது.  உன்னைப் போல் காட்டில் வளர்ந்த பெண்களை அடக்கி ஆளும் வல்லமை என்னிடம் இல்லை.”

“உத்தவா, எத்தனை நாட்களுக்கு நீ உன்னை என்னிடம் ஒப்புக் கொடுத்திருப்பாய்?  நானும் உனக்கு ஏதேனும் செய்ய வேண்டியவன் அல்லவா?  உன் சொந்த வாழ்க்கையை என்னைக் கவனிப்பதிலேயே எத்தனை காலம் கழிக்க முடியும்?  எப்பொழுதும் நீ என்னைக்  கவனித்துக் கொண்டிருக்க முடியாது.  சில சமயங்களில் நானும் உன்னைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.  இல்லையா?”

“என்னைப் பற்றி நினைக்காதே.  இப்போது நாம் செய்ய வேண்டியது பாண்டவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியது ஒன்றே.  வேறு சிந்தனைகள் தேவையில்லை.”

“உத்தவா, “ கண்ணன் அழைத்த தொனியில் ஏதோ இருப்பதை உணர்ந்து கொண்ட உத்தவன் என்னவென நிமிர்ந்து பார்க்கக் கண்ணன் அதற்கு, “சகோதரர்கள் ஐவரும் ஒரு வேளை உயிருடன் இருந்தார்களெனில்…….” என இழுத்தான்.  “இருந்தால்?.....” உத்தவன் மேலே தூண்ட, “  துருபதன் மட்டும் அவர் மகளை…….”

“அர்ஜுனனுக்குக் கொடுத்தால்…..” என உத்தவன் முடித்தான்.  “ம்ம்ம்ம்…. இது என் ஆசைதான்…..நடக்குமோ, நடக்காதோ, எங்கே எனக்குத் தோன்றவில்லை.” என்றான் கண்ணன்.  அவர்களின் படகுப் பயணத்தின் ஓர் நாள் நதிக்கரையில் அவர்கள் வேத மந்திரங்கள் ஒலிக்கும் கோஷத்தைக் கேட்க நேர்ந்தது.  வேதங்களின் உச்சரிப்பும், அதை கோஷித்ஹ குரல்கள் இணக்கமாகச் சேர்ந்து ஒலித்த சப்தம் ஒரு இன்னிசையாக ஒலித்ததையும் கேட்டு ஆச்சரியப் பட்டான்.  விசாரிக்கையில் அது தெளம்ய மஹரிஷியின் ஆசிரமம் எனத் தெரிய வந்தது.  அந்தத் தீர்த்தமும் உத்கோசக தீர்த்தம் எனப்பட்டது என்பதையும் அறிந்தான்.   சிறிது நேரத்துக்கெல்லாம் கண்ணன் ஒரு பெரிய படகுத்துறையை அடைந்ததைக் கவனித்தான்.  அதோடு அங்கே பல பெரிய படகுகளும், சிறிய படகுகளும் நிறுத்தப் பட்டிருப்பதையும் கண்டான்.  அந்தப் படகில் வந்தவர்கள் தெளம்ய மஹரிஷியின் ஆசிரமத்தில் இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டான்.  அவர்கள் படகும் கண்ணன் வேண்டுகோளுக்கிணங்கி அங்கே நிறுத்தப் பட்டது.  படகை நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினார்கள்.  அவர்கள் கரையிறங்கியதும் வேத கோஷம் கேட்ட திசையை நோக்கிச் சென்றனர்.  சிறிது நேரத்தில் ஒரு  திறந்த வெளியில் ஒரு பெரிய குடியிருப்பைக் கண்டான்.  அங்கே பல் குடிசைகள் சிறிதும், பெரிதுமாய்க் காணப்பட்டன.  கத்தாழைச் செடிகளும், முட்புதர்களும் சுற்றிலும் வேலியாக அரண் கட்டி இருந்தன.  குடிசைகளுக்கு நடுவே இருந்த திறந்த வெளியில்   விண்ணை நோக்கி எரிந்து கொண்டிருந்த அக்னியும், அதைச் சுற்றி அமர்ந்தவர்களும் தென்பட்டனர்.  ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துப் பாலரும் அங்கே இருந்தனர்.  அவர்களில் நாகர்களும் இருந்தனர்,  நிஷாதர்களும் இருந்தனர்.  அங்கிருந்த மற்றவர்களில் இருந்து நாகர்களின் அலங்காரமும், நிஷாதர்களின் அலங்காரமும் தனித்துத் தெரிந்தது.  சிலர் கைகளில் கோடரி, கதை போன்ற ஆயுதங்களையும் வைத்திருந்தனர்.  பெண்கள் குழந்தைகளைச் சுமந்து கொண்டு வந்திருந்தனர்.  அவர்களில் நோய்வாய்ப்பட்டவர்களும் நிறையக் காணப்பட்டனர்.

தெளம்ய மஹரிஷிக்குக் கண்ணன் வரவு அறிவிக்கப் பட்டது.  கண்ணன் தன் ஆசிரமம் தேடி வந்ததைக் கண்டு ரிஷிக்கு மிகவும் சந்தோஷம்.  ஏற்கெனவே ஸ்வேதகேது கண்ணன் காம்பில்யம் செல்லும் வழியில் தெளம்ய ரிஷியின் ஆசிரமத்துக்கு வருவான் எனச் சொல்லி இருந்தான்.  ஆகவே ரிஷியும் கண்ணனை நேரே சந்திக்க ஆவலுடன் இருந்தார்.  இப்போது கண்ணனைக் கண்டதும், அவன் வரவால் தனக்கு மிகப் பெரிய கெளரவம் கிடைத்ததாகக் கருதினார்.  அவரின் ஆனந்தம் எல்லை மீறியது.  கிருஷ்ணனையும், அவன் தோழர்களையும் ஆசீர்வாதம் செய்த பின்னர் அங்கிருந்த யாக குண்டத்தின் முன்னே அமர்ந்த வண்ணம் மந்திரங்களை ஆழ் மனதிலிருந்து ஸ்பஷ்டமாக உச்சரித்துக் கொண்டிருந்த ஒரு மஹா பெரியவரிடம் அழைத்துச் சென்றார் தெளம்ய ரிஷி.

"வாசுதேவா, இந்தத் தீர்த்தம் மட்டுமின்றி நாங்களும் அதிர்ஷ்டக்காரர்களே.  இதோ இவர் யார் தெரிகிறதா?  வேத வியாசர்.  கண்ணா, நீயும் அதிர்ஷ்டக்காரனே.  வேத வியாசர் விஜயம் செய்திருக்கும் சமயம் நீயும் இங்கே வந்திருக்கிறாய்."  என்றார்.

கண்ணன் வியப்பின் உச்சிக்கே போனான் என்று சொன்னால் அது மிகையல்ல.  இது வரையிலும் இப்படி ஒரு ஆச்சரியத்தை அவன் சந்தித்ததில்லை.  "மஹரிஷி, என்றும், ஆசாரியர் என்றும் அனைவராலும் மிகவும் மரியாதையுடன் அழைக்கப்பட்ட வேத வியாசரைக் கண்ணன் சந்தித்தே விட்டான்.  தர்மத்தின் இருப்பிடம், அதன் அஸ்திவாரம், அனைத்து முனிவர்களும், ரிஷிகளும், மாணவமணிகளும் மிகவும் மரியாதையுடன் குறிப்பிடும் ஒருவர்.  இதோ அவர் முன்னிலையில் தான் நிற்கிறோமே.  கண்ணன் மிக மரியாதையுடன் சாஷ்டாங்கமாக வேத வியாசர் முன்னால் விழுந்து நமஸ்கரித்தான்.  வேத வியாசரின்  அகன்ற கண்கள் ஒரு கணம் வியப்பைக் காட்டின;  மறுகணம் அடையாளம் தெரிந்து கொண்டதற்கு அறிகுறியாகக் கண்களில் கருணை ததும்பியது.  கிருஷ்ணன் தன்னை அவரிடம் அறிமுகம் செய்து கொண்டான்.

"நான்,  வாசுதேவ கிருஷ்ணன்,  ஷூரர்களின் தலைவரான வசுதேவரின் மகன், தங்களை வணங்குகிறேன், மஹரிஷியே!  இதோ இவன் உத்தவன், என் சித்தப்பா தேவபாகனின் மகன்.  இவன் என் நண்பன் யுயுதானன், சாத்யகனின் மகன்  சாத்யகி."


Friday, November 2, 2012

தேடுதல் வேட்டையில் கண்ணன்!


கண்ணனும் மற்றச் சில முக்கியமானவர்களும் காம்பில்யத்திற்குச் செல்வதற்காக ஆயத்தம் ஆனார்கள்.  அந்த நாட்களில் கங்கையைக் கடந்தே காம்பில்யம் செல்ல வேண்டும்.  மற்ற யாதவர்கள் அங்கேயே தங்கி கண்ணன் காம்பில்யத்திலிருந்து திரும்பி வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.  கண்ணன் காம்பில்யத்திலிருந்து திரும்பி துவாரகை செல்லும் முன்னர் நாககூடம் சென்று தன் தாய் வழிப் பாட்டனான ஆர்யகனைச் சந்திக்க எண்ணி இருந்தான்.  ஆகவே அவர்கள் அவனுடன் செல்ல ஆயத்தம் செய்து கொண்டனர்.  கண்ணனும் மற்றவர்களும் பிரம்மாண்டமாகக் காட்சி கொடுத்த கங்கையைக் கடக்கப் படகுகளில் ஏறினார்கள்.  அந்த நாட்களில் படகுகளின் போக்குவரத்து மிகவும் முக்கியத்துவம் வகித்தது.  கங்கை, யமுனை போன்ற பெரிய நதிகளைப் படகுகளிலேயே கடக்க இயலும்.  சிறு வயதிலிருந்தே கண்ணனுக்கு கங்கையைக் குறித்தும், அதன் புனிதம் குறித்து அறிய நேர்ந்திருந்தாலும் இன்றே அவளின் பிரம்மாண்டமான இந்தத் தோற்றத்தைப் பார்க்கிறான். 
                                     
கண்ணன் கங்கையின் அகலத்தையும் அக்கரை வெகு தூரத்தில் தெரிந்ததையும் பார்த்து ஆச்சரியம் அடைந்தான்.  எத்தனை எத்தனை அதிசயங்களையும், அற்புதங்களையும், சரித்திரங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு இந்த நதி ஓடுகிறது என நினைக்க அவனுக்குப் பிரமிப்பாக இருந்தது.  சமுத்திரத்தில் எழுவது போலவே கங்கையிலும் அலைகள் எழும்பிக் குதித்து அடங்குவதையும், சில அலைகள் கரையோரத்தில் மோதித்திரும்புவதையும் பார்த்தான்.  வாழும் தெய்வமான இந்தக் கங்கையில் தான் எத்தனை நீர்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன!  அதோ, கங்கையில் நீந்திச் செல்லும் வாத்துக்கள்.  இதோ இந்தப் பகுதியில் அன்னங்கள் மிதக்கிறதைப் பார்த்தால் நீரின் பச்சையும், அன்னங்களின் வெண்மையும் சேர்ந்த வண்ணக்கலவை மனதை அள்ளியது.  ஆஹா, சித்திர விசித்திரமான மீன்கள், இங்கே தங்கள் வால்களைத் தூக்கிக் கொண்டு , எழும்பிக் குதித்து விளையாடுகின்றனவே!  படகு செல்கையிலேயே முதலைகள் தங்கள் முகத்தைத் தூக்கிக் கொண்டு சிறிய கண்களால் உற்றுப் பார்க்கின்றன.  படகுகள் அருகே வரும் சப்தம் கேட்டதும், துடுப்புகளின் ஓசை கேட்டதும் தங்கள் வாலால் தண்ணீரை அடித்துக்கொண்டு மூழ்கிப் போகின்றன.  விதவிதமான நீர்ப்பறவைகள் தலைக்கு மேலே பறந்து ஏதேனும் தின்னக் கிடைக்குமா எனப் பார்க்கின்றன.  அவைகளின் மதுரமான த்வனி காதுக்கு இனிமையாக இருக்கிறது.  இரு கரைகளிலும் அழகிய புடைவைக்குக் கரை போட்டாற்போல் கரும்பச்சை மரங்கள் அணி வகுத்து நிற்கின்றன.  அவற்றிலிருந்து  உதிர்ந்திருக்கும் வண்ண, வண்ண மலர்கள் ஆழ்ந்த பச்சைக்கரைப் புடைவையில் போட்ட ஜரிகைப் புட்டாக்கள் போலக் காட்சி அளிக்கின்றது.  மேலே பார்த்தால் ஆழ்ந்த நீலத்தில் தெரியும் வானமும், கரும்பச்சை நிற மரங்களும், அவற்றின் வண்ண, வண்ணமான மலர்களும், ஆழ்ந்த பச்சை நிறத்து நீரும் சேர்ந்து ஒரு இந்திரலோகத்தையே சமைத்துவிட்டதே.  தன் மனம் நிறையக் கண்கள் நிறைய அந்தக் காட்சிகளை உள்ளுக்குள் பதித்துக் கொண்டான் கண்ணன்.

இரு கரைகளிலும் மனிதர் சென்றறியாத அடர்ந்த காடுகளும் தென்பட்டன.  சில இடங்களில் மனித நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறிகளும் தென்பட்டன.  அருகே உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் வந்து நீராடிச் செல்வதற்கும், தண்ணீர் கொண்டு செல்வதற்கும் ஏற்படுத்தப்பட்ட வழி போலும்.  அந்தப் பிராந்தியத்து மக்களான நாகர்கள் பெரும்பாலும் நிர்வாணமாகக் காணப்பட்டார்கள்.  சிறிய ஓடங்களைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தினார்கள்.  இதைத் தவிரவும் பெரிய பெரிய குடியிருப்புக்களையும் கண்டனர்.   அவை காட்டை அழித்துக் கட்டப்பட்டிருந்தன.  இவை ஆரிய வர்த்தத்தின்  எல்லைகள் எனவும்,  நாகர்களோடு கலந்து சம்பந்தம் வைத்துக்கொண்ட ஒரு சில ஆரியர்களால் ஏற்படுத்தப்பட்ட குடியிருப்புகள் என்றும் புரிந்து கொண்டனர்.  அங்கே வசித்த மக்கள் இந்தப் படகுகளின் ஊர்வலத்தைக் கண்டதும், அவர்களை நிறுத்தித் தங்கள் இல்லத்துக்கு வருகை தருமாறு உபசரித்தனர்.  படகுகளில் இருந்தவர்களுக்குப்பல விதங்களில் மரியாதை செய்தனர்.  இரவு அங்கே தங்கிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.  அனைவருக்கும் படகில் பயணிப்பது கிருஷ்ணன் எனத் தெரிந்ததும், ஆச்சரியமும், உவகையும் கொண்டு கண்ணனின் பாதங்களை அலம்பி வழிபட்டு அவனை ஒரு கடவுள் போலப் போற்றி வணங்கினர்.  ஜராசந்தனை ஓட ஓட விரட்டியதும், யாதவர்கள் அனைவரையும் துவாரகையில் குடியேற்றியதும் கண்ணனை அவர்களிடையே ஒரு வீர தீரப் பராக்கிரமம் உள்ள கதாநாயகனாகக் காட்டி இருந்தது. 

மேலும் படகுகள் செல்லச் செல்ல ரிஷி, முனிவர்கள் சிலரின் ஆசிரமங்களையும் அவர்கள் கடக்க வேண்டி வந்தது.  அங்கிருந்து வந்த வேத கோஷமும், யாகங்களின் அக்னியிலிருந்து எழுந்த புகையும் விண்ணையே தொடும்போல் கேட்டுக்கொண்டிருந்தது.  கிருஷ்ணனும், அவன் கூட வந்தவர்களும் முக்கியமான ரிஷி, முனிவர்களின் ஆசிரமங்களின் அருகே இறங்கி அவர்களை வணங்கி ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.  சத்யவதியைப் பார்க்கும் முன்னர் கண்ணனிடம் இருந்த துக்கம் எல்லாம் பறந்து ஓடி விட்டது.   இரவுகளில் சாந்தமான சந்திரனை கங்கை நீர் பிரதிபலிப்பதைக் கண்டு கண்ணன்மனமும் சாந்தம் அடைந்தது.  அது அவனுக்குப் புதியதோர் பலத்தையும் கொடுத்தது.  அவர்கள் தனியாக இருக்கையில் மட்டுமே உத்தவனோடு பாண்டவர்களைக் கண்டு பிடிப்பது குறித்துக் கண்ணன் ஆலோசித்தான்.  தங்களுடன் வரும் யாதவத் தோழர்கள் கூட அறியாமல் பாண்டவர்கள் இருக்கும் இடம்கண்டுபிடிக்கப் படவேண்டும் எனக் கண்ணன் நினைத்தான்.  சாத்யகிக்குக் கூடத் தெரியக் கூடாது.  அவன் மனதில் ஒன்றும் தங்காது.  வெளியிட்டு விடுவான்.  உத்தவன் ஒருவனே இந்த ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ளச் சரியானவன்.  வேறு யாரிடமும் சொல்ல இயலாது. உத்தவனும் ரகசியமாக இந்தத் தேடுதல் வேட்டையை நடத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொண்டான்.  ஒப்புக் கொண்டான்.



Wednesday, October 31, 2012

சத்யவதியின் வேண்டுகோள்



கிருஷ்ணன் வியப்பின் உச்சத்துக்கே சென்றான் என்றால் அது மிகையில்லை.  பின்னர் எப்படி அவர்களுக்கு ஈமக்கிரியைகள் நடந்தன?  சத்யவதி மீண்டும் அறையைச் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டாள்.  மிகக் கவனமாகத் தன் எதிரே அமர்ந்திருக்கும் விதுரரையும், கண்ணனையும் தவிர அங்கு வேறும் எவரும் இல்லை என்பதையும் நிச்சயம் செய்துகொண்டாள்.  பின்னர் ரகசியம் பேசும் குரலில், “வாசுதேவா, அவர்கள் தப்பி விட்டனர்.  எரியும் மாளிகையிலிருந்து தப்பிவிட்டார்கள்.” என்றாள்.  “தப்பி விட்டார்களா?” கண்ணனால் இன்னமும் நம்ப முடியவில்லை.  “ஆனால்…..ஆனால்……. தாயே, அவர்கள் உடலும், குந்தி அத்தையின் உடலும் எரியூட்டப்பட்டு ஈமக்கிரியைகள் நடந்தனவே!”  சத்யவதி கண்ணனை அடக்கினாள்.  “உஷ் ஷ் ஷ் ஷ் ஷ்ஷ் ஷ்ஷ்” பின்னர் அதே மெதுவான குரலில்,”விதுரனின் ஆட்கள் தோண்டிக் கொடுத்த சுரங்கப்பாதையின் மூலம் அவர்கள் தப்பி விட்டனர்.”  என்றாள்.

“ஆனால் தாயே, உயிரிழந்த உடல்கள்?”
“அவை குந்தியும் பாண்டவர்களும் அல்ல.” சத்யவதி மேலே தொடர்ந்தாள். “ அப்படி செத்த உடல்கள் கிடைக்கவில்லை எனில் துரியோதனனும், சகுனியும் அவர்கள் தப்பியதை அறிந்திருப்பார்கள்.  பின்னர் எப்படியோ அவர்கள் ஒளிந்திருக்கும் இடத்தையும் கண்டு பிடித்துத் தொல்லை அளிப்பார்கள்.  மீண்டும் கொலை முயற்சி நடக்கும்.  நிறுத்த மாட்டார்கள்.” 

“அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்?”
“விதுரன் அவர்களுக்காக ஒரு படகைத் தயார் நிலையில் வைத்திருந்தான்.  அதில் ஏறி கங்கையைக் கடந்து செல்ல ஏற்பாடுகள் செய்திருந்தான்.  ஆனால் கங்கையைக் கடந்ததும், அவர்கள் காட்டிற்குள் மறைந்துவிட்டனர்.”

“”அவர்கள் எங்கே எனக் கண்டுபிடிக்க முடியவில்லையா?”
“அதான் எங்களுடைய பிரச்னையே!” என்றாள் சத்யவதி. “எங்களால் இந்த ஹஸ்தினாபுரத்தில் எவரையும் நம்ப முடியவில்லை.  பின்னர் யாரிடம் சொல்லி அவர்களைக் கண்டுபிடிக்கச் சொல்வது?  அப்படிச் செய்தாய் எவரேனும் துரியோதனனிடமோ, சகுனியிடமோ அவர்கள் இருப்பிடத்தைச் சொல்வார்கள்.  பின்னர் என்ன நடக்கும்?  மீண்டும் மனித வேட்டை தான்! கண்ணா, இதற்குத் தான் நான் உன் உதவியை நாடுகிறேன் குழந்தாய்.  நீ எவ்வாறேனும் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து பத்திரமாகவும் செளகரியமாகவும் இருக்கிறார்களா என்பதையும் பார்த்துச் சொல்ல வேண்டும்.  உன்னை யாரும் சந்தேகப் படமாட்டார்கள் என எண்ணுகிறேன்.”

“அதோடு அவர்கள் மறைந்திருக்கும் காடும் நாகர்கள் வசிக்கும், அவர்கள் ஆளும் பகுதியாகும்.  உன்னால் அங்கே சுலபமாய்த் தேட முடியும்.  உன் தாய்வழிப் பாட்டன் ஆன ஆர்யகன் நாகர்களில் தலைவன் உன்னிடம் அன்புள்ளவன்.  உனக்கு உதவிகள் செய்வான் என நம்புகிறேன்.  ஆனால் அவனை முழுதும் நம்பி நம் ரகசியத்தை, பாண்டவர்கள் பற்றிய செய்தியைச் சொல்ல முடியாது.  எவரை நம்புவது என்பது புரியவில்லை.  சகுனி அவர்களையும் விலைக்கு வாங்கினாலும் வாங்கிவிடுவான்.  நீ மட்டும் அவர்களைக் கண்டு பிடித்துவிட்டால், உன்னோடு துவாரகைக்கு அழைத்துச் செல்.  எவருக்கும் தெரியவே வேண்டாம்.”

“மாட்சிமை பொருந்திய ராணி அம்மா, உங்கள் கட்டளைகள் ஏற்கப் பட்டன. அவற்றைத் துளியும் பிசகாமல் நிறைவேற்றுவேன். பாண்டவர்கள் இருக்குமிடம் கண்டுபிடிக்கப் படும். “இதைச் சொல்கையில் உள்ளூர எழுந்த திருப்தியிலும், சந்தோஷத்திலும் ஏற்கெனவே மலர்ந்திருக்கும் கண்ணனின் முகம் மேலும் மலர்ந்து பிரகாசித்தது. 
“குழந்தாய், நீ செல்லும் பாதையில் வெற்றியே அடைவாயாக!”  கண்ணனை ஆசீர்வதித்த சத்யவதியின் குரலில் பூரண திருப்தியும், இனம் காணா அமைதியும் நிறைந்திருந்தது.


Saturday, October 27, 2012

சத்யவதி மனம் திறக்கிறாள்!

கண்ணா, நீ எத்தனை நல்லவனாக இருக்கிறாய்!  உண்மையில் நான் இதை எதிர்பார்க்கவே இல்லை.” என்றாள் சத்யவதி. கண்ணன் நகைத்தான்.  “தாயே, நான் நல்லவன் என எதைக் கொண்டு முடிவு செய்தீர்கள்?  நான் மிக மிகப் பொல்லாதவனாக்கும்.  நான் என் தாய் மாமனைக் கொன்றிருக்கிறேன்;  அதோடு பீஷ்மகன் மகளைக் கடத்திச் சென்று திருமணமும் செய்து கொண்டிருக்கிறேன்.  அடுத்து நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை உங்களால் சொல்ல முடியாது.” என்றான் கண்ணன்.  சத்யவதி ஹஸ்தினாபுரத்தின் அரசியலில் தன்னுடைய நிபந்தனைகளற்ற ஆதரவை எங்கேனும் கேட்டுப் பெற்றுக் கொண்டுவிடுவாளோ என உள்ளூறக் கண்ணனுக்கு சந்தேகம் இருந்ததால் தன்னை ஒரு பொல்லாதவனாகவும், சூழ்ச்சிக்காரனாகவும் காட்டிக் கொண்டான். 

“குழந்தாய்!  இத்தனை வருடங்கள் இந்த அரண்மனையிலே வீணே கழித்தேன் என எண்ணுகிறாயா?  இல்லை அப்பா, யார் உண்மையான, நேர்மையான பாதையில் செல்லுகின்றனர் என்பதை அவர்கள் செய்யும் காரியங்களிலிருந்து புரிந்து கொண்டிருக்கிறேன்.  நீ இங்கே வரும் முன்னரே உன்னைப் பற்றிய செய்திகளை நான் அறிந்திருக்கிறேன்.  மேலும் என் மகன் க்ருஷ்ண த்வைபாயனன் தவறு செய்ய மாட்டான்.  அவன் கணிப்புப் பொய்க்காது.  அவன் உன்னைப் பற்றிச் சிறிதும் மிகையாகக் கூறவில்லை.”

“ஆஹா, முனி சிரேஷ்டர் என்னைக் குறித்து என்ன கூறினார்?”

சத்யவதியின் புன்னகை பெருநகையாக விரிந்தது:”நீ தர்மத்தை நிலைநாட்டவென அவதரித்திருக்கிறாய் எனக் கூறினான்.”

“ஓ, தாயே, நீங்கள் அனைவருமே என்னிடம் மிகவும் அன்போடும், கருணையும் காட்டி வருகிறீர்கள்.  இதற்கு நான் என்ன கைம்மாறு செய்வது!  நான் அப்படி ஒன்றும் நன்மை செய்துவிடவில்லை;  என்னால் இயன்றதைச் செய்கிறேன். எல்லாம் வல்ல அந்த மஹாதேவன் கருணையினால் அவற்றுக்கு வெற்றி கிடைக்கிறது.  இதில் என் செயல் எதுவும் இல்லை.”  கண்ணன் மிகப் பணிவோடு பேசினான்.

“கண்ணா, எல்லாம் வல்ல அந்த மஹாதேவன் உன் மூலமாக என்ன என்ன வேலைகளை நிகழ்த்திக்கொள்ளப் போகிறானோ!  தெரியவில்லை.  வாசுதேவா, நான் உன்னை கிருஷ்ணா என அழைக்கட்டுமா?  அப்படி அழைத்தால் ஒரு நெருக்கம் வரும் என நினைக்கிறேன்.  மேலும் இந்தப்பெயர் மேல் எனக்கு எவ்வளவு பிரியம் தெரியுமா?  என் அருமை மகனுக்கும் இதே பெயர் அல்லவா? “சத்யவதியின் முகம் பிள்ளையைக் குறித்த பெருமையால் விகசித்து மலர்ந்தது. அவள் கண்ணனிடம், “கண்ணா, நான் உன்னிடம் ஒன்று கேட்கப்போகிறேன்.  நீ எனக்கு அதைச் செய்வேன் எனத் தட்டாமல் வாக்குறுதி கொடுப்பாயா? வெளிப்படையாய்ச் சொல்லி விடு.  உன்னால் முடியுமா, முடியாதா?”

“உங்களுக்கு என் வெளிப்படையான பேச்சிலும், நேர்மையிலும் சந்தேகமா அம்மா?”கண்ணன் மனதில் ஏதோ ஒரு தாக்கம்.  அந்தக் கேள்வியின் உள்ளே அவன் உணர்ந்த ஆத்மார்த்தமான நோக்கத்தை பூரணமாகப் புரிந்து கொண்டான்.  சத்யவதி சிரித்தாள்.  கண்ணனை ஒரு சின்னக் குழந்தையாகவே பாவிக்கிறாள் என்பதை அந்தச் சிரிப்பு எடுத்துச் சொன்னது.  “கண்ணா, என் கேள்விக்கு நீ பதில் சொல்லவே இல்லையே?  என் பக்கம், எனது அணியில் நீ இருந்து எனக்குத் துணை செய்வாயா?”

“மாட்சிமை பொருந்திய மஹாராணி அவர்களே!  நான் உங்கள் பக்கமே இருப்பேன். உங்களைப் போன்ற வலிமை பொருந்திய மஹாராணியை இந்த ஆர்யவர்த்தம் இதற்கு முன்னர் கண்டதில்லை.  அதோடு அதிக அதிகாரமும் படைத்தவர் தாங்கள்.  தங்களை விட்டு விட்டு வேறு பக்கம் நிற்க முடியுமா? அதோடு பீஷ்மர் வேறு உங்கள் அணியில் இருக்கையில் உங்களைத் தவிர்க்க முடியுமா?  நீங்கள் தவிர்க்க முடியாதவர் அம்மா!”

“ஆனால் விதியை வெல்ல முடியுமா?  அதை எதிர்த்து நம்மால் நிற்க முடியுமா?” மெல்லிய குரலில் இதைச் சொல்கையிலேயே அங்கே கண்ணனையும் விதுரரையும் தவிர வேறு யாரும் இல்லையே என உறுதி செய்து கொண்டாள் சத்யவதி.

“நான் எப்போதும் உங்கள் சேவையில் இருக்கிறேன் தாயே!” கண்ணன் உறுதிபடக் கூறினான்.  மெல்ல விதுரரை ஒரு நோட்டம் விட்டுக் கொண்டாள் சத்யவதி.  அதன் மூலம் விதுரரிடம் இருந்து ஏதோ செய்தியை வாங்கிக் கொண்டாளோ என்னும்படி இருந்தது.  பின்னர் தன் குரலை மேலும் தழைத்துக் கொண்டு, ரகசியம் பேசும் குரலில்,, “கண்ணா, நீ பாண்டவர்கள் பக்கம் இருப்பாய் அல்லவா?  அவர்களுக்கு உதவி செய்வாய் அல்லவா?”

“பாண்டவர்கள் பக்கமா? அவர்களுக்கு உதவியா?” கண்ணன் பரிபூரணமாகத் திகைத்துப் போயிருந்தான் என்பது அவன் குரலிலும், முகத்திலும் வெளிப்படையாகவே தெரிந்தது.  “எனில் அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? தாயே,  இது எப்படி முடியும்?  அவர்களின் சவங்கள் எரியூட்டப்பட்டிருக்கின்றன.  அனைத்து கிரியைகளும் சம்பிரதாயப்படி நடந்திருக்கின்றன.  தாயே, தாங்கள் என்ன சொல்கிறீர்கள்?”




Monday, October 15, 2012

சத்யவதியின் மனோதிடம்--தொடர்ச்சி!


எந்தவிதமான தடங்கல்களோ, யோசனைகளோ இல்லாமல் சத்யவதி நேரடியாகக் கண்ணனிடம் விசாரித்தாள்:”வாசுதேவா, நாளை நீ காம்பில்யத்துக்குப் பயணமாகப் போவதாய்க் கேள்விப் பட்டேன். “அவள் குரலின் வருத்தம் கண்ணனைக் கவர்ந்தது.  “நீ ஹஸ்தினாபுரம் வந்ததில் எனக்கு மகிழ்ச்சியே.  ஆனால் வேறு ஏதேனும் சந்தோஷமான நிகழ்வுக்காக வந்திருக்கலாம்.  இப்படி துக்கம் விசாரிக்க வேண்டி வந்திருக்க வேண்டாம்.  ஒரு மாபெரும் பிரச்னையில் நாங்கள் இப்போது மூழ்கி இருக்கிறோம்.  இதிலிருந்து எப்படி வெளிவரப் போகிறோம் எனப் புரியவில்லை.”

“ஆம், அன்னையே, நானும் பாண்டவ சகோதரர்கள் ஐவராலும் பரதனால் ஏற்படுத்தப் பட்ட இந்த மாபெரும் சாம்ராஜ்யம் புனர்வாழ்வு அடையப் போவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.  மீண்டும் ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் அவர்களால் ஏற்படும் எனவும் எண்ணி இருந்தேன்.”

“ஆம், வாசுதேவா, நானும் அவ்வாறே நினைத்தேன்.  ஆனால் கடவுளின் விருப்பம் வேறு மாதிரி இருக்கிறது.  என்ன செய்ய முடியும்!” தொடர்ந்தாள் சத்யவதி.  “வாசுதேவா, நீ துவாரகை சென்றதும் உன் தந்தைக்கும், தாய்க்கும், மற்றும் உன் அண்ணன் பலராமனுக்கும் எங்கள் கனிவான விசாரணைகளைச் சொல்லு.  உன் தந்தையைப் போல் அதிர்ஷ்டம் செய்தவர்கள் மிகச் சிலரே.  ஏன் உன் தாயும் அதிர்ஷ்டம் செய்தவள் தான்.  உன் பெற்றோரைப் போல் அதிர்ஷ்டம் செய்தவர்கள் மிகக் குறைவு.  நீயும், பலராமனும் அவர்களுக்குப் பிள்ளைகளாகப் பிறந்ததை விடவும் மாபெரும் அதிர்ஷ்டம் வேறென்ன வேண்டும்!”  சத்யவதியின் குரல் தழுதழுத்தது.  அவள் பாசத்தோடும், நேசத்தோடும் வளர்த்து வந்த பாண்டவர்களின் நினைவுகள் அவள் மனதில் வந்து அலைகளைப் போல் மோதின.  அவளால் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுமோ என எண்ணினாள்.  தன்னைத் தானே சமாளித்துக்கொள்ளப் பார்த்தாள்.

“மாட்சிமை பொருந்திய தாயே, தங்கள் அன்பான விசாரிப்புக்களை நான் என் பெற்றோரிடமும், அண்ணனிடமும் தெரிவிக்கிறேன்.  உங்கள் அன்பான விருந்தோம்பலையும் சொல்லியே ஆகவேண்டும்.”

“கண்ணா, உனக்குக் குழந்தைகள் இருக்கின்றனவா?”

“ஒரு மகன் இருக்கின்றான் தாயே!”
“யார் மூலம், விதர்ப்ப இளவரசி ருக்மிணி மூலமா?”
“ஆம் தாயே.”
“பெயர் என்ன?”
“ப்ரத்யும்னன்”
“அவனுக்கு என் ஆசிகளைத் தெரிவித்துவிடு கிருஷ்ணா!”
“தங்கள் ஆணைப்படியே தாயே!” கிருஷ்ணன் தலை வணங்கி ஏற்றுக்கொண்டான்.
“நாங்கள் உனக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம், வாசுதேவா, பானுமதியை மட்டும் நீ காப்பாற்றி இருக்காவிட்டால்!”  இப்போது ஒரு மஹாராணியின் கம்பீரம் அவள் குரலிலும் புகுந்து கொண்டதைக் கண்ணன் ஆச்சரியத்துடன் கவனித்தான்.  தோரணையும் மாறி விட்டது.  “குரு வம்சமே உனக்குக் கடமைப்பட்டிருக்கிறது.  நீ குருவம்சத்தின் மானத்தைக் காப்பாற்றி இருக்கிறாய்.”
“ஓஓ, தாயே,  அதெல்லாம் எதுவும் இல்லை,  உங்கள் வரையில் இந்த விஷயம் வெளிவந்துவிட்டதா?”
சத்யவதி புன்னகை புரிந்தாள்:  “வாசுதேவா, இது என் குடும்பம்.  நான் உயிருடன் இருக்கும்வரையில் இதன் சுக, துக்கங்களில் நான் பங்கெடுக்காமல் இருக்க முடியுமா?  என் கவனிப்பைத் தான் நான் தராமல் இருக்கலாமா?  மூத்தவளான என் கவனிப்பு இருந்தே ஆகவேண்டும் இல்லையா!  நாங்கள் உனக்கு எப்படித் திரும்ப இந்த நன்றியைச் செலுத்தப் போகிறோம் என்பதுதான் புரியவில்லை.”

“ஓ, தாயே, இதைக் குறித்துச் சிந்தனையே செய்யாதீர்கள்.  இதையே யோசித்துக் கொண்டிருந்தால் சூழ்நிலை தலைகீழாகவும் மாறிவிடலாம்.   இதை முற்றிலும் மறந்துவிடுங்கள்.  பாவம், பானுமதி,  ஒன்றும் அறியாத அப்பாவிப் பெண்.   கணவன் சொல்வதைத் தட்டக்கூடாது என்ற பாடம் மட்டுமே அறிந்திருக்கிறாள்.  அவள் மேல் தவறு எதுவும் இல்லை.  அவளைக் குற்றம் சொல்லாதீர்கள்.   அவள் மனது தூய்மையானது.  ஒருநாள் மஹா பெரிய அறிவாளியாகவும், சிறந்ததொரு பெண்மணியாகவும் வருவாள்.  பொறுத்திருந்து பாருங்கள்.”

“இது துரியோதனனின் வேலைதான் என்பதை நீ நிச்சயமாக அறிந்திருக்கிறாயா?”

“தாயே, இதன் பின்னர் யார் இருக்கிறார்கள், அல்லது யார் இருந்தார்கள் என்பதை நான் அறிய மாட்டேன்.  ஆனால் அவள் சிறு பெண்ணாக இருந்தபோதில் இருந்தே, என்னைக் குறித்துக் கேள்விப் பட்டு என் பரம ரசிகையாக இருந்து வந்திருக்கிறாள்.  இதை நன்கறிந்த யாரோ அவளை நன்கு பயன்படுத்திக் கொண்டுவிட்டனர். என்னை அவர்கள் பக்கம் இழுக்க ஒரு வலை விரித்துப் பார்த்திருக்கிறார்கள்.”
“உன்னை இழுக்க வலை விரித்தார்களா?  என்ன காரணத்துக்காக?”
“ம்ம்ம்ம் பட்டத்து இளவரசனுக்குத் துணைபோகவேண்டி இருக்கலாம்.  அதான் முக்கியமான காரணம் என்று நினைக்கிறேன்.”
“அப்படியா? உண்மையாகவா சொல்கிறாய்?”
“ஆம், தாயே,  இது உண்மையே.  ஆனால் இந்த கொடுமைக்கு எல்லாம் பானுமதியைத் தேர்ந்தெடுத்தது தவறு.  அவளால் இதைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஒரு அன்பான இளைய சகோதரியாக எனக்குப் பரிசுகள் அனுப்பி வைத்திருக்கிறாள்.  நானும் ஏற்றுக் கொண்டு அவளுக்கு உண்மையானதொரு சகோதரனாக இருப்பதாய் வாக்குக் கொடுத்துள்ளேன்.


Friday, September 14, 2012

சத்யவதியின் மனோதிடம்!


ஷாந்தனு சோகத்துடன் இருக்க அதைக் கவனித்த தேவ விரதன் தந்தையிடம் காரணம் கேட்கிறார்.  முதலில் மறுத்த ஷாந்தனு பின்னர் தன் ஆசையையும், அதற்கு நிபந்தனை விதித்த சத்யவதியின் தகப்பனின் கருத்தையும் கூறினான்.  இதைக் கேட்ட தேவ விரதன் தன் தகப்பனின் சந்தோஷமே தன் சந்தோஷம் எனக் கூறித் தான் அரியணை ஏறப்போவதில்லை என்கிறான்.  ஆனால் ஷாந்தனுவோ மகனிடம், “மகனே, நீ அரியணை ஏறவில்லை எனினும் உனக்குப் பிறக்கப்போகும் உன் குமாரர்கள் அவ்விதம் இருப்பார்களா?” என சந்தேகத்துடன் கேட்க, தேவவிரதன், தான் திருமணமே செய்து கொள்ளாமல் கடும் பிரமசரியம் அநுஷ்டிக்கப் போவதாய்க் கடும் சபதம் செய்கிறார்.  இத்தகைய கடும் சபதத்தைக் கேட்ட  வானவர்களும், ரிஷி, முனிவர்களும் தேவ விரதனை வாழ்த்தி, “பீஷ்ம”  “பீஷ்ம” என அழைக்க, அன்று முதல் தேவ விரதனின் பெயர் “பீஷ்மர்” என்று மாறிற்று.  அவரும் அன்று முதல் ஹஸ்தினாபுரத்தின் மேன்மை ஒன்றையே தம் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு வாழ்கிறார்.  இதன் மூலம் அவருக்கு அவர் விரும்பும்போது உயிரை விடலாம் என்னும் மாபெரும் வரமும் கிடைக்கிறது.  ஆகவே ஷாந்தனு சத்யவதியை மணந்து குழந்தைகள் பெற்ற பின்னர் அந்தக் குழந்தைகளில் ஒருவர் விரைவில் இறக்க, மற்றொருவனுக்குப் பட்டம் கட்டி, அவனும் வாரிசின்றி இறக்கப் பின்னர் அவன் மனைவியருக்கு வேத வியாசர் மூலம் பிறந்த குழந்தைகள் தான் திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரர்.  இப்போது அவர்களின் குழந்தைகளாலேயே ஹஸ்தினாபுரத்தில் பல்வேறு பிரச்னைகள்.


சத்யவதி மீனவப் பெண்ணாக இருந்தாலும், அனைத்தையும் தைரியத்துடனும், மன உறுதியுடனும் எதிர்கொண்டாள்.  ஷாந்தனுவுடன் ஆன தாம்பத்தியத்தில் பிறந்த பிள்ளைகளில் சித்திராங்கதன்  இளவயதில் இறந்தபோதும், அதன் பின்னர் வாரிசில்லாமல் விசித்திர வீரியன் இறந்தபோதும் அவள் தைரியத்தை விட வில்லை.  பீஷ்மரைத் தன் சபதத்தை விடச் சொல்லிக் கெஞ்சினாள்.  ஆனால் அவரோ திட்டமாக மறுத்திவிட்டார். அதன் பின்னர் வியாசர் மூலமாகப் பிறந்த குழந்தைகளில் திருதராஷ்டிரன் பிறவிக்குருடாகப் பிறந்த போதும், பாண்டுவுக்கு ஏற்பட்ட சாபமும், அதனால் அவனுக்கு ஏற்பட்ட மரணமும் அவள் திட நெஞ்சத்தைக் கலங்கவே அடித்தது.  எனினும் பீஷ்மரின் உதவியோடு அனைத்தையும் தாங்கிக் கொண்டாள்.  பாண்டுவின் ஐந்து புத்திரர்களையும் கடவுள் அவர்கள் குரு வம்சத்துக்கு அளித்த ஈடு இணையில்லாப் பரிசு என ஏற்றுக் கொண்டாள். திருதராஷ்டிரனுக்கோ நூறு குழந்தைகள் பிறந்தன.  அனைவரையும் சமாளித்து வளர்க்கும் பொறுப்பும் அரண்மனை வாசிகளுக்கு ஏற்பட்டது.  பாண்டுவின் ஐந்து புத்திரர்களால் குரு வம்சம் மேன்மை பெறப் போகிறது என்ற நம்பிக்கையும் அவள் மனதில் ஏற்பட்டது.  ஆனால்  திருதராஷ்டிரனின் புத்திரர்களோ பாண்டுவின் புத்திரர்களை எதிரிகளாகவே பார்த்தனர்.   அதோடு அவர்கள் பாண்டுவின் புத்திரர்களை நாட்டை விட்டே வெளியேற்றி வாரணாவதத்துக்கு அனுப்பியதோடு இல்லாமல், அங்கே அவர்கள் மாளிகை எரிந்து சாம்பலாகிவிட்டதாகவும் கூறுகின்றனர்.

இந்த முதிர்ந்த வயதில் இத்தனையையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்த சத்யவதிக்கு எல்லாம் வல்ல மஹாதேவனைத் தொழுவதை விட வேறு வழி தெரியவில்லை.  எந்நேரமும் வழிபாடு, பூஜை எனக் காலம் கழித்தாள்.  யாரையும் பார்க்கவிரும்பவில்லை.  எப்போதேனும் வரும் பீஷ்மரையும் விதுரரையும் தவிர மற்றவர்கள் அவள் அருகில் செல்லவே அஞ்சினார்கள்.  ராஜரீக விஷயங்களில் நேரிடையாகத் தலையிடாவிட்டாலும் அவளுடைய கண்கள் அனைத்தையும் கவனித்து அவள் மனதுக்குச் செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தன.   அதோடு பீஷ்மரும், விதுரரும் நியாமாகத் தான் நடந்து கொள்வார்கள் என்பதிலும் அவளுக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை.  அவர்கள் செய்வதை அவள் உள்ளூர ஆதரித்தாள்.  முக்கியமான நேரங்களில், முக்கியமான விஷயங்களில் தன் ஆலோசனைகளையும், உதவியையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி வந்தாள்.  மொத்தத்தில் அவளுடைய உயர்வான நடவடிக்கைகளாலும், அரும் குணங்களினாலும் ஹஸ்தினாபுரத்து அரண்மனை வாசிகள் மட்டுமின்றி மக்களும் அவளை வாழும் தெய்வம் எனத் தொழுது வந்தனர்.  அத்தகைய சத்யவதி இப்போது கண்ணனைக் காணத் தயாராகக் காத்திருந்தாள்.

கண்ணன் அவளைக் காண வந்தபோது சத்யவதி, தனக்கென அந்த அரண்மனையில் கட்டப்பட்டிருந்த சங்கர மஹாதேவரின் கோயிலில் அவர் சந்நிதியில் அமர்ந்திருந்தாள்.  இந்த எழுபது வயதிலும், அவளிடம் இன்னமும் இளமையின் மிச்சங்கள் இருந்தன.  இவள் சிறு வயதில் எத்தனை அழகாக இருந்திருப்பாள் எனக் கண்ணனால் ஊகிக்க முடிந்தது.  இந்த எழுபது வயதிலும் அவள் அழகையும், மென்மையான தோலையும் உடல் கட்டுடன் இருந்ததையும் கண்ட கண்ணன் இவளைக் கண்டு ஷாந்தனு மயங்கியதில் வியப்பில்லை என நினைத்தான்.  இத்தனை துக்கத்திலும் ஒளிர்ந்த கண்களையும், நரைத்த தலைமுடி கூட அவளுக்கு ஒரு அழகான கிரீடம் சூட்டியது போன்றிருந்ததையும் கண்டு வியந்தான். கண்ணனைத் தன் பார்வையாலும், புன்னகையாலும் வரவேற்ற அவள் தனக்கருகே இருந்த ஒரு ஆசனத்தில் அவனைச் சைகையாலேயே அமரச் சொன்னாள்.  கண்ணன் அவளை வணங்கிவிட்டு அமரவும், விதுரரையும் உடன் அமரச் சொன்னாள். அவள் காலடியில் விதுரர் அமர்ந்தார்.

Monday, September 10, 2012

பீஷ்மரின் கோபமும், சத்யவதியின் அழைப்பும்


விதுரரிடம் சென்ற அர்ச்சகர்கள் பானுமதியின் நந்தவனத்திலும், அதை ஒட்டிய கெளரி அம்மன் சந்நிதியிலும் தாங்கள் கண்டவற்றைச் சொல்லவே ஆச்சரியமும், திகைப்பும், அதிர்ச்சியும் ஒருங்கே அடைந்த விதுரர் தன் நம்பிக்கைக்கு உகந்த நாலைந்து ஆட்களை அழைத்துக் கொண்டு, அங்கே சென்றார்.  சென்றவர் தாம் கண்ட காட்சியைப் பார்த்து அதிர்ச்சியோடு அருவருப்பும் அடைந்தார்.  முதலில் பட்டத்து இளவரசனாக முடி சூட்டிக் கொண்ட துரியோதனனை அப்புறப்படுத்த வேண்டும்.  ஆனால் அவன் உடல் வலுவானவன்.  ஆளும் கட்டுமஸ்தாக இரண்டு, மூன்று பேரால் தூக்க முடியாத அளவுக்கு இருக்கிறான்.  மேலும் முந்தைய இரவின் கோலாகலக் கொண்டாட்டங்களின் நினைவோடேயே தூங்கி இருந்த துரியோதனன் இப்போது எழுப்பப் பட்ட போதும் அந்த நினைப்போடயே இருந்தான்.  அதோடு அவனை முழுக்கச் சுயநினைவுக்குக் கொண்டு வரவும் முடியவில்லை.  முந்தைய இரவின் மயக்கத்திலிருந்து அவனை மீட்டு எடுப்பது பிரம்மப் பிரயத்தனமாக இருக்கும் போல் இருந்தது.  மற்றவர்களை விதுரர் தன் மாளிகைக்கு எடுத்துச் செல்லச் சொல்லி அங்கே அவர்களை அவரே சுயநினைவுக்குக் கொண்டு வர முயற்சித்தார்.  துரியோதனன் மிகவும் சிரமத்தோடு அவன் மாளிகைக்கு எடுத்துச் செல்லப் பட்டான்.  அனைத்து இளைஞர்களும், இளம்பெண்களுமே உயர் பதவிகளில் இருப்பவர்கள் என்பதால் மெல்ல மெல்லச் செய்தி அனைத்துத் தரப்பினரையும் எட்டியதோடு அது ஒரு கலவரத்தையும் உண்டாக்கும் நிலை தோன்றியது.

பீஷ்மர் காதுகளையும் இந்தச் செய்தி போய் எட்டியது.  கோபத்திலும், ஆத்திரத்திலும் கொதித்துப் போனார் பீஷ்மர்.  தன் வாழ்நாள் முழுதும் பிரமசரியம் காத்து ராஜ்யத்தின் நலனைத் தவிர வேறொன்றை நினையாத அவருக்கு இப்படி எல்லாம் நடந்தது கேட்டதில் இருந்து  இந்த சாம்ராஜ்யத்தின் கதி என்ன என்ற கவலை உண்டானது.  இன்னமும் தனது அதிகாரத்திலேயே இருக்கும் சபையைக் கூட்டி, தன் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தார்.  சபையின் முக்கிய அதிகாரிகள் அந்தக் கட்டளைகளால் திக்கு முக்காடிப் போனார்கள்.  துரியோதனனும், ஒரு மாதத்திற்குக் குருக்ஷேத்திரம் சென்று அங்கே ஆன்மீகச் சிந்தனைகளில் இருந்து தவம் செய்து தங்கள் தண்டனையைக் கழிக்க வேண்டும்.  மற்ற இளைஞர்கள் ஒரு வருடம் பதரிகாசிரமம் செல்ல வேண்டும்.   பானுமதியுடன் காசியிலிருந்து வந்திருந்த அவள்  உறவினர்களான இளவரசிகள் இருவரையும் காசிக்கே திரும்பி அனுப்பச் சொல்லிக் கட்டளையிட்டார்.  மற்ற இளம்பெண்கள் சந்திராயன விரதம் அநுஷ்டிக்க வேண்டும்.  அதுவும் ஒரு வருஷத்துக்குக் குரு வம்சத்தினரின் குருக்களில்  தலைமை வகிப்பவரின் மேற்பார்வையில்  அந்த விரதம் எல்லாவிதமான நியம நிஷ்டைகளோடு கடுமையாக அநுஷ்டிக்கப்படவேண்டும். பானுமதியின் அழகான நந்தவனம் அடியோடு அழிக்கப்பட்டு, அவள் ஏற்படுத்தி இருந்த கெளரி அம்மன் சந்நிதிக்குப் பதிலாக அங்கே கூடவே அவள் கணவன் ஆன சங்கரமஹாதேவனையும் குடி ஏற்றினார்.  அந்த இடமே ஒரு உண்மையான கோயிலாக ஆயிற்று.  கோபுரங்கள் எழுப்ப ஆணை பிறப்பிக்கப் பட்டது.  தன்னுடைய மோசமான விதியை நினைத்து நொந்து அழுது கொண்டிருந்த பானுமதிக்குக் கடுமையான ஜ்வரம் ஏற்பட்டுத் தன் நினைவை இழந்தாள்.

கண்ணன் ஹஸ்தினாபுரத்தை விட்டுக் கிளம்புவதற்கு முதல் நாள் விதுரர் அவனைக் காண வந்தார். வந்தவர், மாதேவியான சத்யவதி கண்ணனைப் பார்க்க விரும்புவதாய்ச் சொன்னார்.  கண்ணனுக்கே ஆச்சரியமாக இருந்தது.  அந்தக் குருவம்சத்தின் மஹாராணியான சத்யவதி இப்போதெல்லாம் தன்னை யாரும் வந்து பார்ப்பதை விரும்புவதில்லை எனவும், அவசியம் நேர்ந்தால் தன் மூத்தாள் மகனான பீஷ்மரையோ அல்லது தன் சொந்த மகனான வியாசரையோ மட்டுமே பார்ப்பாள் எனவும், விதுரருக்கு மட்டும் பிரத்யேக அநுமதி என்றும் கேள்விப் பட்டிருந்தான்.  ஆகவே இது தனக்குக் கிடைத்த மிகப்  பெரிய கெளரவம் என எண்ணினான்.  கூடவே அவளுடைய பூர்வீகமும் நினைவில் வந்தது.

ஒரு மீனவப் பெண்ணான மத்ஸ்யகந்தி (சத்யவதியின் அப்போதைய பெயர்) குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் பிள்ளை இந்த உலகுக்கே குருவாக இருப்பான் எனவும், அவனால் பலவிதமான நன்மைகள் அனைவருக்கும் ஏற்படும் எனவும் சொல்லிக் கொண்டு தன் படகில் ஏறிய பராசரரை அக்கரைக்குக் கொண்டு போக நினைத்துத் துடுப்பு வலித்துக் கொண்டிருந்தாள்.  ஆனால் மேலே விண்ணையே பார்த்துக் கொண்டிருந்த பராசரரோ, அந்தக் குறிப்பிட்ட நேரம் வந்துவிட்டதால், சத்யவதியையே அந்தக் குழந்தையைத் தன்னிடமிருந்து பெற்றுக்கொள்ளும்படி கேட்டார்.  மத்ஸ்யகந்தி தயங்க, “கவலைப்பட வேண்டாம்;  இதன் மூலம் அவள் எதிர்காலத்துக்கு எவ்விதமான இடையூறும் ஏற்படாது.” என உறுதியளித்தார் பராசரர்.  அருகே இருந்த ஒரு தீவில் இருவரும் இணைந்தனர்.  ரிஷியின் மூலம் என்பதால் உடனே ஒரு பிள்ளையும் பிறந்தது.  அந்தப் பிள்ளை கறுப்பாக இருந்ததாலும், தீவில் பிறந்ததாலும் க்ருஷ்ண த்வைபாயனர் என்ற பெயரை வைத்துப் பராசரர் தன்னுடன் பிள்ளையை அழைத்துச் சென்றார்.  மத்ஸ்யகந்தி பிள்ளையை நினைக்கையில் அவன் வருவான் என்னும் உறுதிமொழியுடன் பிள்ளை அழைத்துச் செல்லப்பட்டு, குருக்ஷேத்திரத்தில் உள்ள பராசரருடைய ஆசிரமத்தில் வளர்க்கப் பட்டு சகல கலைகளும் போதிக்கப்பட்டார்.

வசிஷ்டரின் பாரம்பரியத்தில் வந்த அந்தப் பிள்ளைதான் பின்னால் முனிவர்களுக்குள் சிரேஷ்டமானவன் என அனைவராலும் புகழப்பட்ட வேத வியாசர்.  இதன் பின்னர் தன் கன்னித்தன்மையை மீண்டும் பெற்ற மத்ஸ்யகந்தி ஒரு நாள் கங்கைக்கரையோரம் உலவிக்கொண்டிருந்தாள். அப்போது வேட்டையாடிவிட்டு அங்கே இளைப்பாற வந்த மன்னம் சாந்தனு அவளைக்கண்டதும் அவள் அழகில் மயங்கினான்.  அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். அவளிடம் காந்தர்வ விவாஹம் செய்து கொள்ளச் சம்மதம் கேட்டான்.  ஆனால் அவளோ தன் தகப்பன் சம்மதிக்க வேண்டும் என்று கூற, மன்னன் அந்த மீனவனைப் பார்த்து மத்ஸ்யகந்தியை மணக்கச் சம்மதம் கேட்கிறான்.  மீனவனோ தன் மகளுக்குப் பிறக்கும் பிள்ளைக்கே பட்டம் என்ற உறுதிமொழியைக் கொடுத்தால் உடனே மகளைத் திருமணம் செய்து கொடுப்பதாய்ச் சொல்கிறான்.  ஷாந்தனு மனம் வருந்தி அரண்மனைக்குத் திரும்புகிறான்.  ஏனெனில் அவனுக்கு ஏற்கெனவே கங்கையுடன் திருமணம் ஆகி ஏழு பிள்ளைகள் பிறந்து ஏழையும் கங்கைக்குக் கொடுத்து எட்டாவது பிள்ளையை மட்டும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறான்.  அந்தப் பிள்ளையின் பெயர் தேவ விரதன்.  எல்லாக்கலைகளையும் கற்றதோடு அல்லாமல் கங்கையின் வெள்ளத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி கொண்டிருந்தான்.  பரிபூர்ண ராஜ அம்சத்தோடு எல்லாவிதமான மக்களின் கருத்தையும் கவர்ந்து மக்களின் பேரபிமானத்துக்குப் பாத்திரமாகி விளங்கினான்.  அவனை விடுத்து வேறொருவனை மன்னன் ஆக்குவதை நாட்டு மக்களே எதிர்ப்பார்கள்.  அதோடு ஷாந்தனுவுக்கும் அது சம்மதம் இல்லை.

Thursday, September 6, 2012

காந்தாரியின் கவலை!


காந்தாரி ஒரு பணிப்பெண்ணை அழைத்து இதற்குள்ளாக ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருந்த பானுமதியைத் தன் படுக்கையிலேயே தனக்கு அருகே போடச் சொல்லிக் கட்டளை பிறப்பித்தாள்.  “வாசுதேவா,  குரு வம்சத்திற்குப் பேருதவி செய்திருக்கிறாய்.  இதை என்னால் மறக்க முடியாது.  யார் கண்டார்கள், இதன் மூலம் இந்தப் பெண்ணின் வாழ்க்கையில் புதியதோர் அத்தியாயம் பிறக்கலாம்,  மாறுதல்கள் அடையலாம்.  பாவம்!” என்றாள்.  காந்தாரியின் இக்கட்டான நிலையைப் புரிந்து கொண்ட கண்ணன் அங்கிருந்து சென்றான்.  பானுமதி நடந்தவை எதையும் அறியாதவளாக ஒரு குழந்தையைப் போல் தூங்கிக் கொண்டிருந்தாள்.  என்னதான் மகன்கள் மேல் அளவுக்கதிகமான பாசம் இருந்தாலும் காந்தாரிக்கு இந்தச் செயல்களின் எதிர்வினைகளை எண்ணிப்பார்க்கவே பயமாக இருந்தது. இவை எல்லாம் எங்கே போய் முடியுமோ எனக் கவலை அடைந்தாள். 

காலையில் பானுமதி எழுந்திருக்கவே இல்லை என்பதைக்கண்ட காந்தாரி, பணிப்பெண்ணிடம் சொல்லிக்குளிர்ந்த நீரை எடுத்து வந்து அவள் முகத்தைத் துடைத்துக்கண்களில் அடிக்கச் செய்தாள்.  இதனால் கண் விழித்த பானுமதி தான் எங்கிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளவே சில நிமிடங்கள் ஆயின.  அவளுக்குத் தான் தன் மாமியாரின் படுக்கையில் படுத்திருப்பதையும், அருகே அமர்ந்திருக்கும் மாமியாரையும் பார்த்ததும் அதிர்ச்சி தாங்கவில்லை. அதுவும் நேற்றைய மாலை அலங்காரங்களைக்களையாமலேயே அவள் படுத்து உறங்கி இருக்கிறாள்.  அதுவும் மாமியாரின் மாளிகையில் அவர்களின் படுக்கை அறையில் அவர்களின் படுக்கையில்.  இது எங்கனம் நேர்ந்தது? “தாயே, தாயே, இது என்ன?  எனக்கு என்ன ஆயிற்று?  நான் எப்படி இங்கே வந்தேன்?” கேட்டுக்கொண்டே பானுமதி காந்தாரியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்.  “குழந்தாய்! அழாதே, உனக்கு எதுவும் ஆகவில்லை.  நல்லவேளையாகக் கிருஷ்ண வாசுதேவன் உன் நிலைமையைக் கவனித்து விட்டு உன்னை இங்கே எப்படியோ கொண்டு வந்து சேர்த்தான்.  இல்லை எனில் குரு வம்சத்தின் பட்டத்து இளவரசியின் நிலைமையால் மொத்த நாடும் அதிர்ச்சியில் ஆழ்ந்து போயிருக்கும்.  பரத வம்சத்தில் இருந்து ஆரம்பித்துத் தொடரும் இந்த மாபெரும் அரசகுலம் பேரிடியில் மூழ்கிப் போயிருக்கும்.  இறை அருளால் அவ்விதம் நேரவில்லை.”

பானுமதி செய்வதறியாது அழ ஆரம்பித்தாள்.  “தாயே, தாயே, என் தாயே, நான் என்ன செய்வேன்!  என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே!  ஆர்யபுத்ரர், உங்கள் மூத்த குமாரர், என் அருமைக் கணவர், எவ்வகையிலேனும் கிருஷ்ணனை நான் கவர்ந்து என் பக்கம் இழுக்க வேண்டும் என மூர்க்கமாக ஆணை பிறப்பித்திருந்தார்.  அம்மா, நான் அறிவேன், கிருஷ்ண வாசுதேவனுக்கு என்னிடம் ஒரு சகோதரிக்கு உள்ள அன்பே என்று.  ஆனால், …ஆனால்,… தாயே எனக்கிடப்பட்ட கட்டளையை நான் மீற முடியவில்லையே!  என்னால் இயன்றதை நானும் செய்தேன்.  ஆனால் கண்ணனுக்கு என் மேல் உள்ள அன்பின் காரணமே வேறு என்பதை உங்கள் குமாரர் புரிந்து கொள்ளவில்லையே!  வலுக்கட்டாயமாக மது புகட்டப் பட்டேன்.  அதன் பின்…..அதன் பின்…..அம்மா, ஐயோ, நான் இனி எப்படி அனைவரையும் பார்ப்பேன்!”  பானுமதி குலுங்கிக் குலுங்கி அழுதாள். 

“எனக்கு உன்னை நன்றாகத் தெரியும் குழந்தாய்!  நீயாக இப்படி எல்லாம் நடந்து கொள்ள மாட்டாய் என்பதை நானும் நன்கறிவேன்.  நீ மிகவும் சிறிய பெண்.  இப்படி எல்லாம் யோசித்து நடக்கக் கூட உனக்குத் தெரியாது.  அவ்வளவுக்கு மன முதிர்ச்சி உன்னிடம் இல்லை;  ஆனால் ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள் பானுமதி!  ஒரு பெண் தன் கணவனுக்காகக்கூட இம்மாதிரியான காரியங்களைச் செய்யக் கூடாது.  தன் சுயமரியாதையும், சுய கெளரவத்தையும் தள்ளி வைத்துவிட்டு இம்மாதிரிக் கணவனுக்காக அவன் நண்பர்களைக் கவர நினைக்கும் பெண் கடைசியில் கணவனுக்கு மட்டுமில்லை; அந்த நண்பர்கள்; மற்றும் அவளுக்கும் அவளே எதிரியாகிவிடுவாள்.  நல்லவேளையாக , இங்கே வாசுதேவனைக் கவரச் சொல்லி உன் கணவன் கட்டளை;  இதுவே வேறு எவராகவேனும் இருந்திருந்தால், என்ன நடந்திருக்குமோ!  கவனமாக இரு பெண்ணே!”  என்றாள் காந்தாரி.
மெல்ல மெல்ல விடிய ஆரம்பித்தது.  காலை இளங்கதிர்கள் அங்கே நுழைந்து விடியல் எனக் கட்டியம் கூற ஆரம்பித்தன.  நேற்றுச் செய்த வழிபாட்டை இன்று அதிகாலையில் புனர் வழிபாடு செய்து முடிக்க வேண்டி இரண்டு அர்ச்சகர்கள் வரவே, அங்கிருந்து பானுமதியின் தோட்டத்தையும், கெளரி அம்மன் சந்நிதியையும் மேற்பார்வை பார்க்கும் அதிகாரிகள், அர்ச்சகர்களை அழைத்துக் கொண்டு கெளரி அம்மன் சந்நிதிக்குச் சென்றனர்.  அங்கே அவர்கள் பார்த்த காட்சி அதிர அடித்தது. ஆண்களும், பெண்களும் தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.  அவர்கள் இருந்த நிலையோ! கண்களைக் கூசும் வண்ணம் இருந்தது.  வழிபாடு நடந்த இடத்தில் இப்படியா?  திகைத்துப் போய்ப் பார்த்தவர்கள் மேலும் திகைக்கும் வண்ணம் அங்கே துரியோதனனின் உருவமும் தென்பட்டது.  ஆஹா, பட்டத்து இளவரசருமா இப்படி?  இப்போது என்ன செய்யலாம்?  பயந்துவிட்டனர் அந்த அதிகாரிகள்.  தாங்கள் இதைப் பார்த்ததாய்க் காட்டிக் கொள்ளலமா வேண்டாமா?  அல்லது சத்தம் போடாமல் போய்விடலாமா?  ஆனால்,  இந்த நேரம் கட்டாயமாய்ச் செய்ய வேண்டிய புனர் வழிபாட்டைச் செய்யாமல் சென்றால் கோயில் நடைமுறையை அவமதித்ததாக ஆகிவிடுமோ?  அர்ச்சகர்களுக்கும் தயக்கம்.  இவர்கள் எவரையும் தொட்டுத் தூக்கி அப்புறப்படுத்திவிட்டுப் பின்னர் சுத்தம் செய்து வழிபாடுகளை முடிக்கும் அளவுக்கு தைரியம் அவர்கள் எவரிடமும் இல்லை.  ஏனெனில் அனைவருமே உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள்.  பின்னால் ராஜாங்கக் குற்றமாகலாம்.

யோசித்த அர்ச்சகர்கள் நேரே சென்றது விதுரரிடம்.

Monday, September 3, 2012

பானுமதி காப்பாற்றப் பட்டாள்!


"நான் அதை விருந்தாவனத்தில் இருந்து எடுத்து வர வேண்டும் பானுமதி.  அது இப்போது என்னிடம் இல்லை.” கண்ணன் சிரித்துக் கொண்டே கூறினான் என்றாலும் அவன் பார்வை எங்கோ தொலைதூரத்தில் நிலைத்து நின்றது.  அவன் கண்களுக்கு முன்னால் ராதாவின் அழகிய உருவம் தோன்றியது.  ஒரு கணம் அதிலேயே மனதை நிலைக்கவிட்ட கிருஷ்ணன் தன்னைச் சுதாரித்துக் கொண்டு, “ஆம், விருந்தாவனத்தில் இருக்கிறது.  அது எங்கோ எங்கோ தொலைதூரத்தில் உள்ளது.  என்னால் இப்போது எட்டமுடியாத தூரம்.”   கடந்து சென்ற காலத்தின் நினைவுகள் மனதில் மோதக் கூறினான் கண்ணன்.  “பானம் ஏதேனும் அருந்துகிறாயா கண்ணா?” என உபசரித்தாள் பானுமதி.  கண்ணன் மறுத்தான்.  அங்கிருந்த நாலைந்து இளைஞர்களும், இளம்பெண்களும் அளவுக்கதிகமான மதுவை அருந்திவிட்டுக் கூப்பாடு போட்டுக் கொண்டு ஆடிப் பாடியதைக் கண்ணன்கவனித்துக் கொண்டே நடந்தான்.  துரியோதனனும், பானுமதியும் கெளரி அம்மனின் சந்நிதிக்குக் கண்ணனை அழைத்துச் சென்றார்கள்.

அப்போது பூஜை முடிந்து ஆரத்தி எடுக்கும் நேரமாக இருந்தது.  இவர்கள் வரவுக்குக் காத்திருந்த இரு இளம்பெண்கள் இவர்களைக் கண்டதும், ஆரத்திப் பாடல் ஒன்றைப் பாடிக் கொண்டே ஆரத்தி எடுக்க ஆரம்பித்தனர்.  ஆரத்தி முடிந்து அனைவரும் அம்மன் மேல் பூக்களைச் சொரிந்து பிரார்த்தனைகள் செய்து கொண்டனர்.  அங்கிருந்த எல்லாரும் மீண்டும் மது அருந்த ஆரம்பிக்கக் கண்ணன் ஒதுங்கியே நின்றான்.  அங்கே அன்னையின் சந்நிதியின் முன்னர் ஆடல், பாடல் ஆரம்பித்தது.  அனைவருமே தனித்தனியாகவும், ஜோடியாகவும், குழுவாகவும் ஆட ஆரம்பித்தனர்.  பானுமதியும் மிகவும் நன்றாகவே பாடி ஆடினாள் என்பதைக் கண்ணன் கவனித்தான்.  ஆடத் தெரியாத இளைஞர்கள் சுற்றி நின்று தம்கைகளைத் தட்டி ஆர்ப்பரித்து உற்சாகப் படுத்தினார்கள்.  ஆனால் அவர்களால் ஆடலின் முக்கியக் காரணம் மாறுகிறதோ எனக் கண்ணனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.  அதற்கேற்ப எவரோ சிருங்கார ரசம் தொனிக்கும் பாடலைப் பாட ஆரம்பிக்க தெய்வீகமான சூழ்நிலை மாறத் தொடங்கியது.   கண்ணனுக்குள் சந்தேகம்.  தினம் தினம் பானுமதி செய்யும் பூஜையில் இப்படி இருந்திருக்குமா என்ன?  இந்தக் கூட்டத்துக்குள் சேராமல் ஒதுங்கி நின்று ஆராய்ந்த கண்ணனுக்கு துரியோதனன் இதைத் திட்டமிட்டு நடத்துகிறானோ என சந்தேகம் ஏற்பட்டது.  ஏனெனில் அவன் கண்ணன் பக்கம் பானுமதியை அனுப்பிக் கண்ணனை மேலும் மேலும் உபசரிக்க வைத்தான்.  பானுமதியும் வெகுளியாகவும் கண்ணன் மேல் இயல்பாக அவளுக்கு ஏற்பட்டிருந்த பாசத்தாலும் இதைக் கவனிக்கவில்லை.

பானுமதியை ஒரு துருப்புச் சீட்டாகத் தனக்கு எதிராக துரியோதனன் பயன்படுத்துகிறான் என்ற சந்தேகம் கண்ணனுக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் வலுத்து வந்தது.  அதற்கேற்றாற்போல் அங்கு நடந்த நிகழ்வுகளைக் கவனித்த கண்ணனுக்குக் குடிவெறியில் இங்கே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எனத் தோன்றியது.  அங்கிருந்து விலகிச் செல்ல அவன் மனம் அவனுக்கு ஆணையிட்டாலும், குழந்தை போல் பழகிய பானுமதிக்குத் தீங்கு ஏதேனும் நேரிட்டுவிடுமோ என அஞ்சினான் கண்ணன்.  அவளுக்குப் பாதுகாப்பாக துரியோதனன் இந்தச் சமயம் இருக்க மாட்டானோ எனக் கவலை கொண்டான்.  எவ்வாறேனும் அவளைக் காத்து அவள் அந்தப்புரத்தில் சேர்க்கவேண்டும் என எண்ணினான்.  ஆனால் அவன் சற்றும் எதிர்பாராத ஒன்று அப்போது நடந்தது.  துரியோதனன் விளக்குகளை அணைக்க ஆணையிட்டான்.  விளக்குகள் அணைந்ததும்  கண்ணன் மேல் ஒரு பெண் வந்து விழுந்தாள்.  அவளைத் தாங்கிப் பிடித்த கண்ணன் அவள் பானுமதிதான் என்பதைப் புரிந்து கொண்டான்.  அளவுக்கு அதிகமாய் மது புகட்டப் பட்டிருந்தாள் பானுமதி.  கண்ணனை இறுகக் கட்டிக் கொண்டாள்.  நிலைமை தலைக்கு மேல் போவதைக் கண்ணன் உணர்ந்தான்.  பானுமதி மூலம் தன்னை அவனுக்கு என்றென்றும் அடிமையாகக் கட்டிப் போட நினைக்கிறானா துரியோதனன்.  பானுமதிக்கு நினைவுகள் திரும்பி இந்த விபரம் புரிந்தால்???

ஆஹா! பட்டத்து இளவரசன் ஆன துரியோதனன் குரு வம்சத்தினரின் கெளரவத்தைக் கொஞ்சமானும் காப்பாற்றுவான் என எண்ணினால்!  இப்படி ஒரு பட்டத்து இளவரசனா?  ஆஹா, தாத்தா பீஷ்மர் எங்கே, இவர்கள் எங்கே!  அவருடைய பாரம்பரியம் தான் எங்கே, இவர்கள் தான் எங்கே!  இந்த வயதிலும் தான் எடுத்த சபதத்தைக் காக்க வேண்டி பிரமசரியம் அநுஷ்டித்து, நாட்டின் மேன்மை ஒன்றே தன் லக்ஷியம் என்றிருக்கும் அவர் எங்கே, இவர்கள் எங்கே!  ஆனால், இப்போது யோசிக்கும் நேரம் இல்லை;  உடனடியாக பானுமதியை இங்கிருந்து காப்பாற்றி அழைத்துச் செல்ல வேண்டும்.  கண்ணன் ஒரு குழந்தையைத் தூக்குவது போல் அவளைத் தூக்கி எடுத்துத் தோளில் சார்த்திக் கொண்டான்.  பானுமதி ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாள்.  அவளுக்கு நேர்ந்தது என்னவென அறிந்து கொள்ளும் நிலையில் அவள் இல்லை.  கண்ணன் மெல்லத் தோட்டத்தை நோக்கி நடந்தான்.  நக்ஷத்திரங்களின் வெளிச்சத்திலேயே வழியைக் கண்டு பிடித்துக் கொண்டு சென்றான்.  துரியோதனன் இந்த அழகான மனைவியைச் சரியானபடி நடத்தவில்லையே.  இவளின் அழகும், இளமையும் துரியோதனனால் வீணாகின்றதே.  கண்ணனுக்கு வருத்தமாகவே இருந்தது.  என்றாலும் இந்த ஒன்றுமறியா பேதைப் பெண்ணின் மானத்தைக் காத்து ஆகவேண்டும்.  கண்ணன் ஒரு நிமிஷம் யோசித்தான்.  ஆம், இவளை அவள் மாமியாரான காந்தாரியின் பார்வையில் விடுவதே சரி.

திருதராஷ்டிரன் மாளிகையை அடையாளம் கண்டு கொண்டு நடந்தான் கண்ணன்.  வாயில்காவலனிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு கெளரி பூஜையின் போது திடீரென பானுமதியின் உடல்நலம் குன்றியதாகவும், ஆகையால் மஹாராணி காந்தாரியின் பார்வையில் இவள் இருக்க வேண்டும் என அழைத்து வந்ததாகவும் கூறினான்.  காவலாளிக்கு பட்டத்து இளவரசனின் மனைவிக்கு நேர்ந்திருக்கும் கோலத்தைக் கண்டு அதிர்ச்சியாக இருந்தாலும் துரியோதனனின் நடவடிக்கைகள் நன்கு பரிச்சயம் என்பதால் எதுவும் பேசாமல் இன்னொரு சேடிப் பெண்ணை அழைத்து வந்தான்.  அவள் நிலைமையைப் புரிந்து கொண்டு காந்தாரி தூங்கிக் கொண்டிருந்த இடத்துக்குச் சென்று அவளை அழைத்து வந்தாள்.  கண்ணன் இருந்த இடத்துக்கு வந்த காந்தாரி தன் கண்களைக் கட்டிக் கொண்டிருந்தாலும் வந்திருப்பது கண்ணன் என்பதை அறிந்து, “கண்ணா, என்ன இந்த நேரம் இங்கே வந்திருக்கிறாய்?” என அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தோடு வினவினாள்.

காவலனையும், சேடிப்பெண்ணையும் அப்பால் போகச் சொல்லிவிட்டுக் கண்ணன் காந்தாரியிடம் நடந்தவற்றை விவரித்தான்.  கெளரி பூஜை என ஆரம்பித்தது சிருங்கார ஆட்டபாட்டங்களில் மாறிப் போனதையும் பானுமதிக்கு நேரவிருந்த ஆபத்தையும் சொன்னதோடு,  ஒருவேளை தான் கொண்டு வரவில்லை எனில் பானுமதி காலையில் தோட்டத்தில் தன்னினைவின்றிக் கிடந்திருப்பாள் என்பதையும் கூறினான்.  இதன் மூலம் பானுமதியின் நற்பெயர் கெடுவதோடு ஹஸ்தினாபுரத்தின் அரசர்களின் மேல் மக்களுக்கு இருந்த மரியாதையும் கூடக் குறைந்துவிடும் என்பதைச் சுட்டிக் காட்டினான்.  பானுமதியின் மேல் தவறில்லை எனவும், துரியோதனன் மேலும், மேலும் அவளிடம் அன்பு காட்டுவது போல் நடித்து அவளுக்கு மதுவைப் புகட்டினான் என்பதையும் கூறினான்.  இவள் ஒரு குழந்தையைப் போல் கள்ளங்கபடு அற்றவளாக இருக்கிறாள். தனக்கு என்ன நேரவிருந்தது என்பதையும் இவள் அறிவாள் இல்லை. என்றான் கண்ணன். 

Thursday, August 30, 2012

திண்டுக்கல் தனபாலனுக்காக ராஸலீலைப் படங்கள்.

இப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.  யமுனைக்கரையில் பெளர்ணமி அன்று நடக்கும் இது. மற்ற விபரங்கள் பின்னர்.  இப்போ அவசரம்.

பானுமதியின் நிறைவேறா ஆசைகள்!


துரியோதனன் குடித்திருந்தாலும் நிதானத்தை இழக்காததோடு, பானுமதியை மேலும் பேசவிடுவதன் ஆபத்தையும் உணர்ந்திருந்தான்.  ஆகவேஅவளிடம், “உனக்கு ராஜாங்க விஷயங்கள் பற்றியோ, அரசியல் குறித்தோ அரசாட்சி குறித்தோ எதுவும் தெரியாது;  புரியாது.  ஆகவே நீ இவற்றைப் பற்றியெல்லாம் பேசாமல் இருப்பதே நல்லது.”  என்றான்.  ஆனால் பானுமதியோ அசைந்து கொடுக்கவில்லை. “எனக்கு இவை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள ஆசையோ, புரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணமோ எதுவும் இல்லை, ஆர்ய புத்திரரே.  “  தன் கணவன் தன்னைப் பலர் முன்னிலையில் அதட்டியதனால் தான் எதுவும் பாதிக்கப்படாமல் இருப்பதாகவே காட்டிக் கொண்டாள்.  “கண்ணா, நீ அடுத்த பெளர்ணமி வரை இங்கே இருந்தால், நாம் அனைவரும் இங்கே “ராஸ்” விளையாடலாம்.  என்ன சொல்கிறாய்?” என்று கண்ணனிடம் கேட்டாள்.

“பானுமதி, நடக்க முடியாத விஷயங்களைக் குறித்தே பேசுகிறாய்.  என்னால் இங்கே பெளர்ணமி வரையிலும் தங்க முடியாது.  அதோடு நீ சொல்லும் அந்தப் புல்லாங்குழலை நான் விருந்தாவனத்திலேயே விட்டு விட்டு வந்துவிட்டேன்.  நான் இப்போது புல்லாங்குழல் வாசித்துக் கொண்டு “ராஸ்” விளையாடும் மனநிலையிலும் இல்லை.  அதோடு விருந்தாவனத்தை விட்டு வந்ததும் வாசித்த எந்தப் புல்லாங்குழலிலும் அந்த மாதிரியான இசையும் பிறக்கவில்லை.  அந்தப் புல்லாங்குழலில் ஏதோ மாயம் இருந்திருக்க வேண்டும்.  அதன் இசை அப்படி அனைவரையும் கவர்ந்து இழுத்தது.  இது விருந்தாவனமும் இல்லை, பானுமதி.  இங்கெல்லாம் நம் இஷ்டப்படி நடந்து கொள்ள முடியாது.”  என்றான் கண்ணன். 

பானுமதி, “நான் விருந்தாவனத்தில் இருந்திருக்கக் கூடாதா என எண்ணுகிறேன்.”  என்றாள்.  இதைச் சொல்கையில் அவள் குரல் அடைத்துக் கொண்டது.  கண்ணீர் மல்கியது அவளுக்கு.  தனக்கு அரசகுல வாழ்க்கை பிடிக்கவில்லை என்பதை எவ்வாறேனும் வெளிக்காட்ட விரும்பியவளாகத் தென்பட்டாள்.  கண்ணன் அவளைத் தேற்றும் விதமாக, “பானுமதி, நீ பட்டத்து இளவரசனின் மனைவி.  விரைவில் பட்ட மஹிஷியாகவும் ஆகப் போகிறாய்.  நாம் விரும்புவதெல்லாம் நடக்காது.  நடப்பது அனைத்தையும் நாம் விரும்பவும் மாட்டோம்.  நாம் விரும்பும் அனைத்தும் நமக்குக் கிடைக்கவும் கிடைக்காது.  பானுமதி, இங்கே அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அவர்களிடம் நடந்து கொள்ளும் முறைகளும் எனத் தனியாக ஒரு சட்டம் இருக்கிறது என்பதை நான் நன்கறிவேன்.  அதை நான் மீறினால் தாத்தா பீஷ்மர் மனம் வருந்துவார்.  என்னை என்றென்றும் மன்னிக்க மாட்டார்.  அப்படியெல்லாம் சுதந்திரத்தை நான் இங்கே வந்து எடுத்துக்கொள்ள இயலாது.”  என்றான் கண்ணன்.

“ஆம், நானும் நன்கறிவேன்.  தாத்தா இங்குள்ள கஷ்டமான வாழ்க்கையை மேலும் கஷ்டமாக்குகிறார்.  என்ன செய்யலாம்.  வாசுதேவா, நானும் ஒரு கோபியாகப் பிறந்திருக்கக் கூடாதா என்றிருக்கிறது எனக்கு!” பானுமதி இதைக் கூறுகையில் துரியோதனனின் மாளிகை வந்துவிட்டது.  அந்த அரண்மனை வளாகத்தின் ஒரு கோடியில் அழகானதொரு நந்தவனத்தைத் தாண்டியதும் துரியோதனன் மாளிகை வந்தது.  அந்த நந்தவனம் பானுமதியால் பராமரிக்கப் படுகிறது என்பதை அவள் முகத்தைப்பார்த்ததுமே புரிந்து கொள்ள முடிந்தது.  நந்தவனத்தைப் பார்த்த பானுமதியின் முகத்தில் மகிழ்ச்சிக் கீற்றுகள்.  வெள்ளிக் கூடாரத்தின் அடியிலே அன்னையின் திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்து பானுமதி தினமும் தன் ஆடல், பாடல்களால் அன்னையை வழிபட்டு மகிழ்வித்து வந்தாள்.  இங்கே இருக்கையில் அவள் சுதந்திரமாக அவளுடைய பிறந்த நாடான காசியில் இருப்பது போல் இருப்பாள்.  அவள் பேச்சிலிருந்து பானுமதி தினமும் இங்கே கெளரி பூஜை செய்வதாக அறிந்து கொண்டான் கண்ணன்.  பூக்களில் இருந்து தேனை அருந்தும் வண்டுகள் ரீங்காரமிடுவதைப் போல் இனிமை கலந்த குரலில் பானுமதி அனைத்தையும் சொல்வதைக் கண்ணன் ரசித்தான்.  அவள் வெளிப்படையான மனம் அவனுக்குப் புரிந்தது.  அன்புக்கு ஏங்கும் அவள் உள்ளத்தை உணர்ந்து கொண்டான்.  அத்தகைய அன்பு துரியோதனனிடமிருந்து அவளுக்குக் கிட்டவில்லை என்பதையும் புரிந்து கொண்டான்.  என்றாலும் தன் கணவனின் உடல் நலத்துக்காகவும், அவனின் அரசியல் முன்னேற்றங்களுக்காகவும் என பானுமதி செய்து வரும் கெளரி பூஜை கண்ணனை வியப்படைய வைக்கவில்லை.  துரியோதனன் மட்டுமல்லாமல் மற்ற இளவரசர்கள், இளவரசிகளும் என்றாவது தான் பானுமதியின் இந்த வழிபாட்டில் கலந்து கொள்வதாகவும் அறிந்தான்.

“இந்த ஹஸ்தினாபுரத்துக்காரர்களுக்கு அவர்களைத் தவிர மற்றவர்கள் நாகரீகமற்றவர்கள் என்ற நினைப்பு அதிகம். என்னைப் பார்த்தால் அப்படியா இருக்கிறது?” என்றாள் பானுமதி.  “நீ நாகரீகமற்றவள் எனில் நாங்களெல்லாம் எங்கே போவது?” என்றான் கண்ணன்.  பானுமதி உதட்டைப் பிதுக்கிக் கொண்டே தன் கணவனைப் பார்த்துக் கொண்டு, “ஆர்ய புத்திரர் இந்த வழிபாட்டுக்கு ஒரு நாளும் வந்ததில்லை.  எனக்கு அவர் தினமும் வரவேண்டும் என்ற ஆசை.  இந்த பூஜை நடத்துவதே அவர் நன்மைக்குத் தானே!  இன்றைக்கு நீ வந்திருப்பதால் அவரும் வந்திருக்கிறார். இல்லை எனில் நான் எவ்வளவு அழைத்தாலும் வர மாட்டார். எனக்கு அவரிடம் மிகவும் கோபம் வருகிறது.”  என்றாள் பானுமதி.  “ம்ம்ம்ம்.. அவர் தன் நண்பர்களையும், அழைத்து வந்திருக்கிறார்.  ஆனால்……ஆனால் எப்படிப் பட்ட நண்பர்கள்!  கூடவே அவர்களின் மனைவிமார்களும் வந்திருக்கின்றனர்.  ஆனால், கண்ணா, இவர்களெல்லாம் உன்னைப் பார்க்கத் தான் வந்திருக்கின்றனர்.  அந்தப் பெண்களெல்லாம் உன்னைப் பார்க்கத் துடி துடித்துக் கொண்டிருந்தனர்.  இப்போது வாய்ப்பு நேரவும் உடனே வந்துவிட்டார்கள். உன்னைக் குறித்த நாடோடிப் பாடல்களை என் தந்தையின் சபையில் நான் கேட்டிருக்கிறேன் என்றதும் அவர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்து அதைக் குறித்து மேலும் சொல்லும்படிக் கேட்டனர்.”  திடீரெனக்கோபம் கொண்டவளாய்க் கிருஷ்ணனைப் பார்த்து, “உன் புல்லாங்குழலை ஏன் விட்டு வந்தாய் கண்ணா?  அடுத்த முறை நீ ஹஸ்தினாபுரம் வந்தால் கட்டாயம் புல்லாங்குழலோடு தான் வரவேண்டும்.”  என்று ஆணையிடுவது போல் கூறினாள்.