Thursday, December 31, 2015

வாசுதேவக் கிருஷ்ணா, நீ திருடன்!

அறைக்குள் நுழைந்த மூவரில் சத்ராஜித் தன்னுடைய சுயக் கட்டுப்பாட்டிலேயே இல்லை. ஆகவே வழக்கமாய் அரசரைச் சந்திக்கையில் செய்யும் வணக்கங்களைக் கூட அவன் தெரிவிக்கவில்லை. அதே போல் மரியாதையுடனும் பேசவில்லை. உக்ரசேனரைச் சந்தித்ததுமே அவரைப் பார்த்துக் கூச்சல் போட்டான். “என் ச்யமந்தகம் திருடப்பட்டுவிட்டது. அதை அந்தத் திருடன் கிருஷ்ணன் தான் திருடி இருக்கிறான். இப்போது நான் இங்கே வந்ததன் காரணமே கிருஷ்ணன்ன் உடனே அதைத் திரும்பத் தரவேண்டும், இல்லை எனில் அவன் என்னால் கொல்லப்படுவான் என்பதைத் தெரிவிக்க மட்டுமே! என் வழியில் குறுக்கே எவர் நின்றாலும் என்னால் கொல்லப்படுவார்கள்.” என்று கூவினான்.

உக்ரசேனருக்குச் சற்றும் மரியாதையின்றி சத்ராஜித் இப்படி நடந்து கொண்ட விதம் ஆச்சரியத்தை அளித்தது. எனினும் அதை வெளிக்காட்டாமல், “மாட்சிமை பொருந்திய சத்ராஜித்! வருக, வருக! இப்படி இந்த ஆசனத்தில் அமரவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.” என்று அழைத்துத் தன்னருகே இருந்த ஆசனத்தைக் காட்டினார். மேலும் பங்ககராவையும் ஷததன்வா மற்றும் கூடவே கூட்டமாய் வந்திருந்த அதிரதிகள் அனைவரையும் பார்த்து, “நீங்களும் இங்குள்ள ஆசனங்களில் அமருங்கள்!” என உபசரித்தார். பின்னர் சத்ராஜித்தைப் பார்த்து, “உன்னை நீயே அமைதிப் படுத்திக் கொள் சத்ராஜித்! அமைதி கொள். என்னிடம் நிதானமாக என்ன விஷயம் என்பதைத் தெரியப்படுத்துவாய்! என்னால் நீ சொல்வதைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை!” என்றும் கூறினார்.

மிகவும் சிரமத்துடன் அங்கிருந்த ஓர் ஆசனத்தில் அமர்ந்தான் சத்ராஜித். ஆனாலும் அவன் உடலே நடுங்கிக் கொண்டிருந்தது. கைகளும் நடுங்கின. கண்களை இப்படியும் அப்படியும் உருட்டினான். “சாந்தம், சாந்தம், சத்ராஜித்! அமைதி கொள்! என்ன விஷயம் என்பதை என்னிடம் சொல்!” என்று சாந்தமாகச் சொன்னார். தன் கதையைச் சொல்லும் முன்னர் தன்னைச் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டான் சத்ராஜித். பின்னர் மேலும் பேசினான். “கிருஷ்ணன், அந்தத் திருடன், என்னுடைய ச்யமந்தகமணியைத் திருடிவிட்டான். நேற்று அவன் என்னிடம் கூறி இருந்தான். நேற்று மாலை சூரிய அஸ்தமனத்தின் பின்னர் அவன் என் ச்யமந்தகத்தை என்னிடமிருந்து எடுத்துவிடுவதாய்க் கூறி இருந்தான். அதே போல் செய்து விட்டான். அரசே, ஆணையிடுங்கள்! அந்தத் திருடன் கிருஷ்ணனை என் ச்யமந்தகத்தை உடனே திருப்பும்படி கூறுங்கள். இல்லை எனில் நானும் என் நண்பர்களும் அந்த ச்யமந்தகத்தைத் திரும்பப் பெறுவதற்காகப் போர் நடத்தக் கூடத் தயங்க மாட்டோம்.”

சத்ராஜித் தன்னுடைய கதையைச் சொல்லி முடித்த அதே கணம் வசுதேவர், கிருஷ்ணன்,  மற்றும் யாதவகுலத் தலைவர்கள் அனைவரையும் உடனே அழைத்துவரச் சொல்லி உக்ரசேனரால் அனுப்பப்பட்டிருந்த ப்ருஹத்பாலன் திரும்பினான். அவனுடன் வசுதேவர், சாத்யகன், அவன் மகன் யுயுதானா சாத்யகி ஆகியோரும் இருந்தனர். உக்ரசேனரின் அழைப்பின் பேரில் சாத்யகனும், வசுதேவரும் உக்ரசேனரின் படுக்கையில் அவருக்கு அருகே மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டனர்.

“சத்ராஜித் அவனுடைய ச்யமந்தகமணி இன்று காலை அதன் வழிபாட்டு அறையிலிருந்து திருடப்பட்டதாகக் கூறுகிறான்.” என்ற உக்ரசேனர் சத்ராஜித்தை மீண்டும் அவன் பக்கத்து நியாயத்தைச் சொல்லும்படி கூறினார். ப்ருஹத்பாலனை மீண்டும் அனுப்பிக் கிருஷ்ணனை அழைத்துவரச் சொன்னார். சத்ராஜித் தன் கதையை மீண்டும் அனைவருக்கும் எடுத்துச் சொன்னான். சாத்யகன் முகத்தில் கோபம் எழுந்தது. சத்ராஜித்தைப் பார்த்துக் கடுமையாக, “ நைனனின் மகனே! நீ சொல்வதில் ஒரு வார்த்தை கூட நம்பும்படியாக இல்லை. நான் அதை நம்பவும் இல்லை. கிருஷ்ணன் உன்னுடைய ச்யமந்தகத்தைத் திருடும்படியான கீழ்த்தரமான வேலையை ஒருக்காலும் செய்யமாட்டான். நேற்றே அதை உன்னிடமிருந்து பிடுங்க நாங்கள் அனைவரும் நினைத்தோம்; ஆனால் கிருஷ்ணன் தான் எங்களைத் தடுத்து நிறுத்தினான்.”

“அப்போது நான் பொய்யனா? அதைத் தானே நீ சொல்ல விரும்புகிறாய்? நான் பொய் சொல்வதாகக் குற்றம் சாட்டுகிறாயா நீ? வ்ருஷ்ணியின் மகனே! நீ ஆரம்பத்திலிருந்தே எனக்கு எதிராகச் சதி செய்வதையும் சூழ்ச்சிகள் செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறாய். என்னை எப்போது அவமானப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறாய். என்னுடைய பொறுமை எல்லை கடந்து விட்டது.” என்று சீற்றத்துடன் கூவினான். சாத்யகன் எதற்கும் அசைந்து கொடுக்கவே இல்லை. அப்படியே தன் கண்களை சத்ராஜித்தின் மேல் நிலைநாட்டி அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். “நான் நீ என்ன நினைக்கிறாய் என்பதைக் குறித்துக் கவலைப்படவில்லை, சத்ராஜித்! அதே போல் நீ செய்ய உத்தேசித்திருப்பதைக் குறித்தும் எனக்குக் கவலை இல்லை! ஆனால் எனக்குக் கிருஷ்ணன் அவன் சிறு பிள்ளையாக மத்ராவுக்கு வந்ததில் இருந்து நன்கு அறிவேன். அவன் தர்மத்தின் மறு உருவம். தர்மத்தின் அவதாரம். அவன் உன்னுடைய ச்யமந்தகத்தைத் திருடி இருப்பான் என்பதை நான் சிறிதும் நம்பவில்லை; நம்பவும் மாட்டேன்.”

“ஓ, பெரியவர்களான உங்கள் முடிவும், பார்வையும் இப்படியொரு கோணத்தில் இருக்கிறதா? எனில் நான் எனக்கு நியாயத்தை என் வழியிலே தேடிக் கொள்ளவேண்டியது தான். நான் இப்போது கிருஷ்ணனின் மாளிகைக்குச் செல்லப் போகிறேன். தேவைப்பட்டால் அந்த மாளிகையை அவனை உள்ளே வைத்து எரித்துச் சாம்பலாக்குவேன்.” என்று சீறியவண்ணம் தன் ஆசனத்திலிருந்து எழுந்தான் சத்ராஜித்.

இதற்குள்ளாக நகர் முழுவதும் ச்யமந்தகம் திருடப்பட்டது என்னும் செய்தியும் அதைக் கிருஷ்ணன் தான் திருடி இருக்கிறான் என சத்ராஜித் சொல்வதும் பரவிவிட்டது. மன்னரின் மாளிகையின் நிலா முற்றம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.அதோடு அரசமாளிகைக்குள் போர்க்கோலத்துடன் சத்ராஜித்தும் அவன் மகன் மற்றும் நண்பர்கள் சென்றதையும் அனைவரும் அறிந்திருந்தார்கள். ஆகவே அங்கு ஆவலுடன் அடுத்து என்ன என்று மக்கள் ஒருவருக்கொருவர் ஆவலுடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணன் அங்கே வர சத்ராஜித்தின் ஆத்ரவாளர்களில் சிலர், அவனைப் பார்த்து, “திருடன், திருடன்” என்று கூக்குரல் இட்டனர். கிருஷ்ணனை அவர்கள் திட்டியது குறித்தும் குற்றம் சாட்டியதும் குறித்தும் கோபம் அடைந்த மக்களில் பலருக்கும் சத்ராஜித்தின் ஆதரவாளர்கள் மேல் கோபம் வர, அவர்கள் சத்ராஜித்தின் ஆதரவாளர்களைத் தாக்கத் தொடங்கினார்கள். சிறிது நேரத்தில் அங்கே மாபெரும் கலவரம் ஒன்று உருவானது. மேலும் மேலும் யாதவர்கள் அங்கே வர, வர கூச்சல், குழப்பம் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டுவது என்று தொடர்ந்து குழப்பமான நிலை உருவானது.

கிருஷ்ணன் உக்ரசேனரின் படுக்கை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அங்கே தன் தந்தையும் சாத்யகரும் உக்ரசேனரின் படுக்கையிலேயே அமர்ந்திருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான். சத்ராஜித் உக்ரசேனருக்கு எதிரே நின்று கொண்டிருக்க அவனுக்கு இருபக்கமும் பங்ககராவும் ஷததன்வாவும் நின்றிருந்தனர். கிருஷ்ணனைப் பார்த்ததுமே சத்ராஜித், “இதோ! திருடன் வந்துவிட்டான்!” என்று கூச்சல் இட்டான். “திருடனா? நான் எதை எப்போது திருடினேன்?” கிருஷ்ணனுக்கு ஆச்சரியம் மேலிட்டது. “ஹூம், நடிக்கிறாயா? அடே வாசுதேவக் கிருஷ்ணா! என் ச்யமந்தகத்தை இன்று காலை அதன் வழிபாட்டு அறையிலிருந்து நீ திருடிச் சென்று விட்டாய்!” என்றான் சத்ராஜித்.

“இன்று காலை நான் அதைத் திருடினேனா? ச்யமந்தகத்தையா?” மீண்டும் ஆச்சரியம் மேலோங்கக் கேட்டான் கிருஷ்ணன்.

“ஆம், இன்று காலைதான் திருடினாய். நான் அறைக்கு வெளியே தான் காவல் இருந்தேன். சில கணங்கள் அறையை விட்டு வெளியே செல்லும்படி நேரிட்டது. நீ அப்போது வழிபாட்டு அறையின் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து ச்யமந்தகத்தை எடுத்துச் சென்று விட்டாய்! நான் திரும்பியபோது நீ நுழைவாயிலை நோக்கி ஓடியதைக் கண்டேன்!” என்றான்.

“ஆஹா, சத்ராஜித், சத்ராஜித்! ஒரு சாதாரணப் பாமரனைப் போல் நான் நீங்கள் சொல்வதை நம்பவேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? நான் உங்கள் வழிபாட்டு அறையின் கதவுகளை உடைத்து ச்யமந்தகத்தைத் திருடினேன் என நீங்கள் சொல்வதை நான் நம்பவேண்டுமா?” எனச் சற்றும் கலங்காமல் கேட்ட கிருஷ்ணன் கடகடவெனச் சிரித்தான். “ஆஹா, நான் ஓடியதை நீங்கள் பார்த்தீர்கள் அல்லவா? ஏன் என்னை ஓடி வந்து பிடிக்கவில்லை?” என்றும் கேட்டுவிட்டுச் சிரித்தான். “நீ அதற்குள்ளாகச் சில அடிகள் முன்னே ஓடி விட்டாய்! என்னால் அந்த இடைவெளியைக் கடந்து வந்து உன்னைப் பிடிக்க முடியவில்லை.” என்றான் சத்ராஜித்.

“ஓ, அப்போது நீங்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டீர்கள்! அப்படித்தானே?”

சத்ராஜித் ஆமெனத் தலையசைத்தான். “ஓ, நான் தப்பி ஓடிக் கொண்டிருந்தேன் என்பது உண்மையானால், உங்களால் என் முகத்தை எப்படிப் பார்த்திருக்க முடியும்?”

“வேறு யார் ச்யமந்தகத்தைத் திருடப் போகிறார்கள்? நீ தான் என்னை மிரட்டினாய். அதை நீயாகவே எடுத்துக் கொள்வேன் என்று சொன்னாய். நேற்று மாலை சூரியோதயத்துக்குள்ளாக அதை எடுக்கப் போவதாகவும் சொல்லி இருந்தாய். ஆகவே நீ தான் இந்தத் திருட்டை நடத்தி முடித்திருக்கிறாய்!” என்று திருப்பிச் சொன்ன சத்ராஜித், தன் கண்களை மேலே உயர்த்தி, தன்னுடைய குடும்பத்துக்குப் பாதுகாவலாக இருக்கும் தெய்வம் என அவன் நம்பும் சூரிய பகவானைப் பிரார்த்திக்க ஆரம்பித்தான். “நான் சூரிய தேவன் சாட்சியாகச் சொல்கிறேன். நீ ஒருவனே, ஆம் நீ மட்டுமே ச்யமந்தகத்தைத் திருடி இருக்கிறாய். இது நிச்சயம்!” என்றான்.

சாத்யகர் அப்போது குறுக்கிட்டார். தன் பயங்கரமான விழிகளை மீண்டும் சத்ராஜித்தின் மேல் நிலை நாட்டினார். “கிருஷ்ணன் சொல்வது தான் சரியானது. நைனனின் மகனே! நீ கிருஷ்ணன் தான் திருடினான் என்பதற்கு அவன் முகத்தைப் பார்க்கவே இல்லையே! இங்கே எவ்விதமான சாட்சியங்களும் கிருஷ்ணன் தான் திருடினான் என்று காட்டிக் கொடுக்கவே இல்லை!” என்றார்.

“அது கிருஷ்ணன் தான். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், இதோ பாருங்கள்! சாட்சி வைத்திருக்கிறேன். இது கிருஷ்ணனின் காதுக் குண்டலம். அவன் தப்பி ஓடுகையில் நழுவ விட்டது. இதை நான் நுழைவாயிலுக்கு அருகாமையில் பார்த்தேன்.” என்ற வண்ணம் தன்னிடமிருந்த காதுக் குண்டலத்தை எடுத்துக் காட்டினான் சத்ராஜித். “இது உன்னுடையது தானே! சொல், உடனே!” என்றான். கிருஷ்ணன், “ஆம், இது என்னுடையது தான். இது நேற்று உங்கள் மாளிகைக்கு நான் வந்தபோது நீங்கள் என்னைத் தாக்கியபோது கீழே விழுந்து விட்டது. என்னைக் கழுத்தை நெரிக்க முயல்கையில் கழன்று விழுந்து விட்டது.” என்றான்.

“பொய்யன், பொய்யன்! பொய் சொல்கிறான்.” என்று கூவினான் சத்ராஜித்.

அப்போது வெளியே பெரிய சப்தம் கேட்டது. வெளி முற்றத்திலும் அதை ஒட்டிய மைதானத்திலும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று உராயும் சப்தமும் மக்கள் கூக்குரலும் கேட்டது. ஆயுதங்கள் வேகமாய் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன.

Tuesday, December 29, 2015

போர்க்கோலத்தில் சத்ராஜித்!

அதற்குள்ளாக பங்ககரா தன் தகப்பனைச் சமாதானம் செய்துவிட்டு அவரைக் காலைக்கடன்கள் கழிக்கவும், நித்திய கர்மானுஷ்டானங்களைச் செய்யவும் அனுப்பி வைத்தான். அவற்றை முடித்த பின்னர் தேடிச் செல்லலாம் என்றும் கூறினான். சத்ராஜித் கத்திய கத்தலும் அதன் கடுமையும் மற்ற அனைவரையும் மிகவும் பாதித்து விட்டிருந்தது. ஊழியர்களும் சத்ராஜித்தின் இந்தக் கோப முகத்தின் பயங்கரத்தில் பயந்து விட்டிருந்தனர். அவர்கள் தன்னிச்சையாக மாளிகையை நோக்கிச் சிலரும் மைதானங்களையும், தோட்டங்களையும் நோக்கிச் சிலரும் சென்று திருடனின் கால்தடமோ அல்லது வேறு ஏதேனும் அடையாளமோ கிடைக்கப்பெறுமா என்று பார்ப்பவர்கள் போல் கிளம்பினார்கள். அதற்குள்ளாகத் தன் காலைக் கடன்களையும் நித்திய கர்மானுஷ்டானங்களையும் அவசரமாக முடித்துக் கொண்டு வந்த சத்ராஜித் தன் ரதத்தையும், நான்கு குதிரைகளையும் கொண்டு வரும்படி சத்தம் போட்டான்.

சத்யபாமாவுக்குக் குழப்பத்திற்கு மேல் குழப்பம். சந்தேக ரேகைகள் அவள் முகத்தில் ஓடின. அவள் சிந்தனையிலும் சந்தேகங்கள் பல ஏற்பட்டன. “அதிகாலை விடியும் முன்னரே சித்தப்பா ப்ரசேனரைத் தந்தை எங்கே அனுப்பி வைத்தார்? அதுவும் மிகவும் ரகசியமாக? என்ன காரணம்? இதை நினைக்க நினைக்க அவள் மனம் குழம்பியதோடல்லாமல், கிருஷ்ணன், தர்மத்தின் காவலன் எனப் போற்றப்படுபவன், இந்த ச்யமந்தகத்தைத் திருடி இருப்பானா என்பதிலும் அவளுக்குச் சந்தேகம் இருந்தது. ஒரு சாதாரணத் திருடனைப்போல் அவன் நடந்து கொள்வானா? தந்தை காட்டிய காதுக்குண்டலம் அவனுடையது தானா? ஆனால் தந்தை தன்னிடமிருந்து எதையோ கீழே போட்டுவிட்டுப் பின்னர் எடுத்தாரே? அது இந்தக் காதுக்குண்டலம் தானா? அல்லது வேறே ஏதேனுமா? என்னுடைய இந்த எண்ணம் அல்லது தோற்றம், நான் கண்டது சரியா? அல்லது நான் கனவு ஏதேனும் கண்டேனா?

சத்யபாமா தன் தந்தையை மிகவும் நேசித்தாள். ஆகவே அவரால் தவறு செய்ய முடியும் என்பதை அவளால் ஏற்கமுடியவில்லை. கிருஷ்ணனைத் தக்க காரணம் இன்றி அவர் திருட்டுப் பட்டம் கட்டிக் குற்றம் சுமத்த மாட்டார் என்றே அவள் நம்பினாள். அதற்கு ஏற்பத் தன் எண்ணங்களை அமைத்துக் கொண்டாள். ஆனாலும் அவள் தந்தையின் தந்திரங்களும் அவள் அறிந்தவையே! ஆகவே கிருஷ்ணனின் குணாதிசயங்கள் குறித்து அவள் தந்தையால் சொல்லப்பட்ட கதைகளையும் அவளால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அதன் நம்பகத் தன்மை குறித்தும் சந்தேகம் ஏற்பட்டது. திரும்பத் திரும்ப அவள் மனதில் சந்தேகம் எழுந்து கொண்டே இருந்தது. அதே சந்தேகம். கிருஷ்ணன், யாதவர்களின் காவலன்,  அவர்களின் கண்ணின் கருமணி போன்றவன், தன் சாமர்த்தியத்தால் சாம்ராஜ்யங்களை நிர்மாணிப்பவன், தர்மத்தின் பாதுகாவலன் என அனைவராலும் போற்றப்படுபவன் அப்படிப்பட்டவன் ஒரு சாமானியத் திருடனைப் போலவா நடந்து கொள்வான்? அதிலும் ஒரு நாள் முன்னர் தான் தன்னுடைய சுயக்கட்டுப்பாட்டை அவன் அவள் முன்னிலையிலும் சத்ராஜித் முன்னிலையிலும் காட்டி இருந்தான். தன்னைத் தாக்கிய சத்ராஜித்தைத் திரும்பத் தாக்காமல் தன்னைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டதன் மூலம் அவன் எவ்வளவு கட்டுப்பாடுகள் நிறைந்தவன், தன்னைத் தானே கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் என்பதைக் காட்டி இருந்தான்! வெகு எளிதில் அவனால் சத்ராஜித்தை வீழ்த்தி இருக்க முடியுமே! ஆனால் அதை அவன் செய்யவில்லை! அப்படிப்பட்டவனால் இப்படிஒரு திருட்டுச் செய்திருக்க முடியுமா? பாமாவுக்குக் குழப்பமே மிகுந்தது.

ஆனால் அவள் சந்தேகங்களை வீட்டில் மற்றவருடன் பகிர்ந்து கொள்ளவே முடியாது. எல்லோருமே கிருஷ்ணனால் தான் ச்யமந்தகம் திருடப்பட்டது என்றும், அவன் திருடிக்கொண்டு ஓடும்போது காதுக்குண்டலம் நழுவி விட்டது எனவும் நினைக்கத் தொடங்கி விட்டார்கள். அதை மாற்றும் சக்தி அவளிடம் இல்லை.

சத்ராஜித்தின் ரதம் தயாராகி விட்டது. மற்ற அதிரதர்களும், பங்ககரா, ஷததன்வாவுடன் தயாராகிக் காத்திருந்தனர். எல்லோரும் அவரவர் ரதத்தில் காத்திருந்தனர். மஹாரதர்களும் அவர்களுடன் கலந்து கொண்டனர். எல்லோரும் பூரண ஆயுதங்களையும் தரித்துக் கொண்டு தயாராகி இருந்தனர். சத்ராஜித் அவர்களிடம் கிருஷ்ணன் ச்யமந்தக மணியைத் திருடிச் சென்றதை மீண்டும் ஒரு முறை விவரித்தான். பின்னர் தன் ரதத்தை நோக்கிச் சென்றான். அப்போது பங்ககரா தன் தந்தைக்கு முன்னே வந்து நின்று கொண்டவன் அவர் கால்களில் விழுந்து வணங்கினான். பின்னர் தன் கைகளைக் கூப்பிய வண்ணம் பேச ஆரம்பித்தான்; “தந்தையே! உக்ரசேன மஹாராஜாவைப்பார்க்கச் செல்கையில் இப்படிப் பூரண ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு போர்க்கோலத்தில் ரதங்களோடு சென்று பார்க்க வேண்டுமா? இது இப்போது அவசியமா?” என்று மிகவும் விநயத்துடன் விண்ணப்பமாக வெளியிட்டான்.

ஆனால் சத்ராஜித் தன் மகனை முறைத்துப் பார்த்தான். “வாசுதேவக் கிருஷ்ணனுக்கு ச்யமந்தகத்தின் புனிதம் குறித்துத் தெரியவில்லை. அவன் அதை அவமதித்து விட்டான். எனக்கு ச்யமந்தகம் சூரிய பகவானால் நேரடியாக அளிக்கப்பட்டது. அதை அவன் திருடிச் சென்று விட்டான். அந்தக் கிருஷ்ணனை நான் என் கைகளால் கழுத்தை நெரித்துக் கொல்லப் போகிறேன். அல்லது அவன் என் ச்யமந்தகத்தை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். “ என்று தீர்மானமாகக் கூறினான்.

“தந்தையே, கொஞ்சம் யோசியுங்கள்! நிதானமாக முடிவு எடுங்கள். நான் மிகவும் உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இது மாபெரும் சிக்கலில் கொண்டு விட்டு விடும். நமக்குப் பெரிய பின் விளைவுகளை உண்டாக்கும். கிருஷ்ணன் மிகவும் அதிகாரம் படைத்தவன்; யாதவர்களின் அவன் செல்வாக்கு அளப்பரியது.” என்றான் பங்ககரா.

“முட்டாள், கோழை!” என்று சீறிய சத்ராஜித், ஒரு பெருமூச்சுடன் மேலும் தொடர்ந்தான். “இதோ பார்! நான் சொல்வதைக் கேள்! யாதவர்கள் எவரானாலும் அவர்களை நான் கொன்று விடுவேன். என் வழிக்குக் குறுக்கே எவர் வந்தாலும் அவர் என்னால் கொல்லப்படுவார்கள். இந்த துவாரகையையே நான் அழித்து விடுகிறேன். ஹூம்! நீ என் மகனா? ஒரு பெண்ணைப் போல் பயப்படுகிறாயே? நான் என் மகன் ஒரு பெண்ணைப் போல் அழுது புலம்புவான் என்று எதிர்பார்க்கவே இல்லை. உன் ரதத்துக்குப் போ! என்னைப் பின் தொடர்ந்து வா!” என்று உக்கிரமாக ஆணையிட்டான். சத்ராஜித் தன் ரதத்தை வேகமாகச் செலுத்தினான். மற்றவர்கள் தங்கள் தங்கள் ரதங்களில் அவனைப் பின் தொடர்ந்தனர். அவர்களைத் தொடர்ந்து காலாட்படையினர் காவலுக்கு வந்தனர். செல்லும்போதே அவர்கள் ஒரு மாபெரும் பிரளயம் யாதவர்களைத் தாக்கி விட்டது என்று கூவினார்கள். ச்யமந்தகம் கிருஷ்ணனால் திருடப்பட்டு விட்டது என்றும் கூறிக் கொண்டு சென்றனர்.

இந்த ஊர்வலம் நகரத்தினுள் சென்றது. உக்ரசேனரின் மாளிகைக்கு எதிரே நிறுத்தப்பட்டது. ஏனெனில் அங்கே ஏற்கெனவே ஒரு மாபெரும் கூட்டம் கூடி இருந்தது. சத்ராஜித் உக்ரசேனரின் மாளிகையை அடைந்தான். உக்ரசேனர் அப்போது ஓய்வில் இருந்தார். அவருடைய உடல் நலம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. ஆகவே ராஜ்யசபையின் வாதவிவாதங்கள் இல்லாத நாட்களில் தன் காலைக்கடன்களையும் நித்திய வழிபாடுகளையும் விரைவில் முடித்துக் கொண்டு தன் அறையில் படுத்து ஓய்வு எடுப்பார் உக்ரசேனர். சத்ராஜித் வற்புறுத்தியதன் மூலம் பிருஹத்பாலா, (உத்தவனின் சகோதரன்) உக்ரசேனரிடம் சென்று சத்ராஜித்தின் வரவைத் தெரியப்படுத்தினான். பிருஹத்பாலா தன் பாட்டனார் உக்ரசேனருடனே அவருக்கு உதவியாக இருந்து வந்தான். உக்ரசேனர் சத்ராஜித்தை அறைக்கு வரும்படி அழைத்தார். கூடவே அதிரதிகளும் வந்தனர். ஆனால் உக்ரசேனருக்கு வரவேற்பு அறைக்குச் சென்று அவர்களோடு சம்பாஷிக்கும் மனோநிலை இல்லை. ஆகவே இருந்த இடத்திலேயே வரவேற்றார்.

சத்ராஜித்துடன் பங்ககராவும் ஷததன்வாவும் சேர்ந்தே உக்ரசேனரைச் சந்திக்கச் சென்றனர். அவர்கள் விற்கள், அம்புகள், வாள் போன்றவற்றால் தங்களைப் பூரண ஆயுதபாணியாக ஆக்கிக் கொண்டிருந்தனர். ஓய்வில் இருக்கும் மன்னனைச் சந்திக்கச் செல்லும் நடைமுறை இப்படி இல்லை! ஆனாலும் அவர்கள் அப்படியே சென்றனர். மன்னனைச் சந்திக்கச் செல்கையில் ஒரே ஒரு வாள் மட்டும் தான் இருக்கலாம். அதுவும் மன்னனைப் பாதுகாக்கவேண்டி இருந்தால் பயன்படுத்துவதற்காக மட்டுமே. ஆனால் இங்கே! இவர்கள் பூரண ஆயுதபாணிகளாகச் சென்றனர்.

Sunday, December 27, 2015

ச்யமந்தகம் திருடப்பட்டதா?

சத்ராஜித்தின் அரண்மனை. பொழுது விடியும் நேரம். கருக்கிருட்டு மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தது.  எங்கும் ஓர் அமைதியான சூழ்நிலை நிலவிக் கொண்டிருந்தது. அப்போது அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு திடீரென ஒரு குரல் கிரீச்சிட்டுக் கத்தியது. தொடர்ந்து குழப்பமான பல குரல்கள்! தெளிவில்லாமல் கூச்சல்கள்! உற்றுக் கேட்டால்! “திருடன், திருடன்! ச்யமந்தகமணியைத் திருடி விட்டான்!” “ஐயகோ! திருடன் வந்திருக்கிறான்! ச்யமந்தகமணியைக் காணவில்லையே!” மாளிகையின் உள்ளே காலை நேரத்து உறக்கம் கலையாமல் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்தனர். கூக்குரல்களுக்கு நடுவே தனியாகத் தொனித்த குருவின் குரலை அடையாளம் கண்டு கொண்டார்கள். கூக்குரல்கள் வந்த திசையை நோக்கி அனைவரும் ஓடினார்கள்.

சத்யபாமா அந்த நேரம் தூங்கிக் கொண்டிருக்கவில்லை. விழித்துக் கொண்டு தான் படுத்திருந்தாள். சற்று நேரத்திற்கு முன்னர் மறைந்திருந்த வண்ணம் அவள் பார்த்த விசித்திரமான காட்சிகளை மனதினுள் மீண்டும் மீண்டும் கொண்டு வந்து அலசிக் கொண்டிருந்தாள். தன் தந்தை தன் சிறிய தந்தையை வேறு ஏதோ முக்கியமான வேலையாக அனுப்பியதை நினைத்து யோசித்துக் கொண்டிருந்தாள். ப்ரசேனன் எங்கே சென்றான்? யோசித்து யோசித்து அவள் மூளை குழம்பியது. இப்போது இந்தக் கூக்குரல் கேட்டதும் தன் படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தாள். தாழ்வாரத்திற்குச் சென்றவள் முன்னால் தன் தந்தை செல்வதைக் கவனித்தாள். அவர் பின்னாலேயே அவளும் சென்றாள். அவர் கோயிலின் வாயிலுக்கருகே ஓடிச் சென்று அங்கே திருடன் ஓடினால் பிடிக்க வேண்டி சென்று கொண்டிருந்தார்.

சத்யபாமாவின் சொந்தச் சகோதரன் ஆன பங்ககராவும், மாற்றாந்தாயின் மக்களான வடபதி, தபஸ்வந்தா ஆகியோரும் சில காவலர்களுடன் அங்கே கூடினார்கள். அவர்களுக்குள்ளாகப் பேசிக் கொண்டு சத்ராஜித்தைத் தொடர்ந்து சென்றனர். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் அந்தத் தாழ்வரையில் கூடி ச்யமந்தகம் காணாமல் போனதைக் குறித்து அதிசயித்துப் பேசிக் கொண்டனர். அனைவரும் திகைப்பிலும் பயத்திலும் உறைந்து போயிருந்தனர். அவர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த பேரிடர் கடைசியில் நிகழ்ந்தே விட்டது. வாசுதேவ கிருஷ்ணன் ச்யமந்தக மணியைத் திருடிச் சென்றுவிட்டான். அப்போது சத்யபாமாவுக்கு முன்னால் சென்ற சத்ராஜித் வாயிற்படியருகில் சற்றே குனிவதை பாமா பார்த்தாள். சத்ராஜித் எதையோ கீழே போடுவதையும் மீண்டும் எடுக்கையில் அது காதில் அணியும் குண்டலமாக இருந்ததையும் கவனித்தாள். அப்போது சத்ராஜித் பெருங்குரலெடுத்துக் கத்தினான்.

“இதோ! கிடைத்துவிட்டது! திருடன் அணிந்திருந்த குண்டலம்! ஆம்! இது அவனுடையது தான்! இல்லை எனில் இது யாருடையது?” என்று கூவினான் சத்ராஜித். சத்யபாமா திகைத்து நின்றாள். அவள் கண்களால் அவள் பார்த்திருக்கிறாள்: அவள் முன்னாலேயே அவள் தந்தை அந்தக் குண்டலத்தைக் கீழே போட்டுவிட்டுப் பின்னர் அனைவரும் பார்க்கும் வண்ணம் அதைக் கையில் எடுத்திருக்கிறார். அதை அவள் பார்த்தாள் அல்லவோ? அல்லது அதுவும் பொய்யோ? ஒருவேளை அவள் சரியாகக் கவனிக்கவில்லையோ? இல்லையே! அவள் நிச்சயம் பார்த்தாளே! எதைப் பார்த்தாள்? குனிந்து அவள் தந்தை எடுத்தது மட்டும் நிஜமோ? தான் பார்த்தது சரியா? அல்லது அவள் தந்தை இப்போது சொல்வது சரியா? என்ன செய்யலாம்? சத்யபாமாவின் மனம் குழம்பியது. இதற்குள் மற்றவர்கள் அனைவரும் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். சத்ராஜித் அப்போது அனைவரிடமும் காட்டினான் அந்தக் குண்டலத்தை! “அந்தத் திருடன், கிருஷ்ணன் ச்யமந்தகமணியைத் திருடிச் சென்று விட்டான்!” சத்ராஜித் கிருஷ்ணனைத் திட்டினான். பல சாபங்களையும் கொடுத்தான். அவனுக்குத் தக்க தண்டனை கொடுக்கப் போவதாக சபதம் எடுத்தான். அப்போது அவனைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது. வாரி முடியப்படாத குடுமி அவிழ்ந்து தொங்க, ஒழுங்காகத் தூக்கிக் கட்டப்படாத தாடி அங்குமிங்கும் காலைக்காற்றில் அலைய சிவந்த முகத்துடன் உக்கிரமான தோற்றத்துடன் காட்சி அளித்தான். “ச்யமந்தகம் என்னை விட்டுச் சென்று விட்டது. அந்தப் பாவி கிருஷ்ணன் அதைத் திருடி விட்டான்!” என்று உரக்கக் கத்தினான்.

ஆனால் சத்யபாமா விடவில்லை. “ஆனால் தந்தையே, நீங்கள் கோயிலுக்கு முன்னால் ச்யமந்தக வைத்திருக்கும் அறைக்கு எதிரே தானே படுத்திருந்தீர்கள்?” என்று தந்தையிடம் கேட்டாள். சத்ராஜித் அதற்கு, “சில விநாடிகளுக்காக நான் இங்கிருந்து சென்றிருந்தேன். நான் திரும்பியபோது வழிபாடுகள் நடக்கும் இந்த அறையின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. ச்யமந்தகம் திருடப்பட்டு விட்டது!” என்றான். பின்னர் தன்னிரு கரங்களையும் உயரத் தூக்கியவண்ணம் கடவுளரிடம் இறைஞ்ச ஆரம்பித்தான் சத்ராஜித். “சூரிய தேவனே! உன்னுடைய உக்கிரமான கிரணங்களால் அந்தத் திருடனைச் சுட்டு எரித்துவிடு! அவனும் அவன் குடும்பமும் நரகத்தின் கொடிய நெருப்பில் வெந்து அழிந்து போகட்டும்!” என்றான்.

பங்ககரா தன் தந்தையை சமாதானம் செய்து மீண்டும் மாளிகைக்கு அழைத்து வந்தான். அவன் தந்தையிடம், “தந்தையே, திருடனைத் தாங்கள் நேரிலே பார்த்தீர்களா?” என்றும் கேட்டான். அதற்கு சத்ராஜித், “நான் அறைக்குத் திரும்பியபோது கருக்கிருட்டாக இருந்தது. அந்தக் குறைந்த வெளிச்சத்தில் எனக்கு எதுவும் சரியாகத் தெரியாவிட்டாலும் எவரோ ஓடிச் செல்வதை நிழலுருவாகக் கண்டேன். யாரேனும் அரண்மனைச் சேவர்கர்களாக இருக்கலாம் என நினைத்தேன். அப்போது திடீரென எழுந்த சந்தேகத்தில் உள்ளே சென்று பார்த்தபோது திருட்டைக் கண்டு பிடித்தேன். என்னையும் அறியாமல் அலறினேன். அதன் பின்னர் நான் அறையை விட்டு வெளியே வந்து தாழ்வாரத்தினருகே வருகையில் அந்தத் திருடன் நுழைவாயிலுக்கு அருகே ஓடிச் செல்வதைக் கவனித்தேன். கோயில் இருக்கும் வளாகத்தினுள் அவன் நுழைந்து விட்டான். அவன் முகத்தை என்னால் பார்க்கமுடியவில்லை. ஆனால் அது கிருஷ்ணனாகத் தான் இருக்க வேண்டும். இந்தக் குண்டலம் அவனுடையது தான் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை!” என்றான்.

“யாதவர்கள் எவரையும் நான் விட்டுவிடப்போவதில்லை. கூண்டோடு அழிக்கிறேன். என் ச்யமந்தகம் எனக்கு வரவேண்டும். அதுவரை அனைவரையும் சும்மா விடமாட்டேன்.” என்று பெருங்குரலெடுத்துக் கத்தினான். அதன் பின்னர் என்ன நினைத்தானோ திடீரென பங்ககராவை நோக்கித் திரும்பினான். “என்ன, பேந்தப் பேந்த விழிக்கிறாய்? செல் உடனே செல்! என் ரதத்தைத் தயார் செய்! பெரிய ரதம்! சங்கை எடுத்து ஊது! ஷததன்வாவுக்குச் செய்தியை அனுப்பு! அவனையும் ரதத்தை எடுத்துக் கொண்டு வரச் சொல்! உன் ரதத்தையும் தயார் செய்! நம்முடைய மஹாரதிகள அனைவரையும் ஒன்று சேர்! விரைவில் இதைச் செய்து முடி! அனைவரும் தயாராகட்டும்!” என்றான். பின்னர் காவலர்களிடம் திரும்பி, “முட்டாள்களே, நீங்கள் அனைவரும் முழு முட்டாள்கள்! உங்கள் காவலின் லட்சணம் இப்படி இருக்கிறது! என்னுடைய ச்யமந்தகம் மட்டும் கிடைக்கவில்லை எனில் உங்கள் அனைவரையும் துண்டு துண்டாக வெட்டிப் போட்டுவிடுவேன். விரைவில் என் ரதத்தைத் தயார் செய்யுங்கள்! அந்தத் திருடன் இந்த உலகின் எந்த முனையிலிருந்தாலும் ஓடோடிப் போய்ப் பிடித்து வருவேன்!” என்று கத்தினான்.

Friday, December 11, 2015

கிருஷ்ணனின் முடிவே எங்கள் முடிவு!

இப்போது பலராமனாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. பெருங்குரலெடுத்துச் சிரித்தான். “உன்னிடம் இது தான் கஷ்டம், கிருஷ்ணா! உன்னைச் சமாளிப்பது பெரிய விஷயம்! நான் ஒரு பக்கம் உன்னோடு சண்டை இட்டுக் கொண்டிருக்க நீ இன்னொரு பக்கம் வாக்குறுதிகளை வாரி வழங்கிவிட்டு அவற்றை எங்களுக்குச் சிறிதும் புரியாத விதத்தில் நிறைவேற்றி விடுகிறாய்!” என்றான் பலராமன்.

“ஆஹா, அண்ணா? உங்களுக்கா புரியவில்லை? நன்கு புரிந்து கொள்கிறீர்கள்! அதை நீங்கள் உங்கள் பெரிய மனதால் ஆதரிக்கவும் செய்கிறீர்கள்! உங்களுடைய பெருந்தன்மையான போக்கினால் இதன் பலாபலன்களை என்னை அனுபவிக்கும்படி விட்டு விடுகிறீர்கள். அப்படி விட்டு விட்டு, இப்படி எல்லாம் நீ செய்தது எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது, கிருஷ்ணா என்றும் சொல்வீர்கள்!”

சற்று நேரம் அங்கே எவரும் பேசவில்லை. அனைவரும் அமைதி காக்க, கர்காசாரியார் திடீரென நினைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். “நம்மிடையே இருக்கும் தேர்வுகளில் ஒன்று என்னவெனில் இந்தச் சண்டையை நாம் ஆயுதங்களுடன் கூடிய மோதலாக மாற்றினோம் எனில், நம்மிடையே ஒரு உள்நாட்டுப் போர் நிச்சயம் ஏற்படும். அது அவசியமானதாகவும் இருக்கலாம். சத்ராஜித்திடம் இருக்கும் வளங்கள், ஆயுதங்கள், வீரர்கள் அனைத்தையும் மீறி அவனை ஒரே நாளில் நாம் முடித்து விடலாம். ஆனால், அவனோடு சமாதானமாகச் செல்ல ஒரு வழி கிடைத்தது எனில் அதை ஏன் விடவேண்டும்? அதை முயன்று பார்க்கலாமே? கிருஷ்ணனுக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்க்கலாம்.”

“நான் ஒருக்காலும் அவன் செய்தவற்றை மறக்கவும் மாட்டேன்; அவனை மன்னிக்கவும் மாட்டேன். இன்னமும் அவன் நமக்கெல்லாம் கெடுதல்களைத் தான் செய்து வருகிறான். நாம் அனைவரும் ஒற்றுமையாகப் பாண்டவர்களின் சுமையைப் பகிர்ந்து கொண்டிருக்கையில் அவனுக்கு மட்டும் அதில் கடமை ஏதும் இல்லையா? நம்மோடு அவனும் தானே சுமையைப் பகிர வேண்டும்? என்னால் அவனை வற்புறுத்திக் கொடுக்கும்படி செய்திருக்க முடியும். ஆனால் நான் அதை விரும்பவில்லை. யாதவர்கள் அனைவருமே பெருந்தன்மையோடும் பெரும்போக்குடனும் அவர்கள் இஷ்டப்பட்ட அளவுக்குப் பாண்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம். அதற்காகத் தான் நான் என்னிடமிருந்த அனைத்தையும் கொடுத்து மற்றவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக இருந்தேன். அவனிடம் என்ன இருந்து என்ன? அவன் என்ன சொன்னால் தான் என்ன? யாதவர்களை ஏமாற்றியதன் மூலம் அவன் தனிமைப்படுத்தப்பட்டு விட்டான். அவமானம் அடைந்திருக்கிறான். ஆகவே இப்போது அவன் பேரம் செய்கிறான். அவனுடைய பங்கு கொடுக்கப்படவில்லை என்பதற்காக மகளுக்குச் சீதனம் தருவதன் மூலம் அதை நியாயப்படுத்த விரும்புகிறான். அதற்காக என்னை வற்புறுத்துகிறான்.”

“இப்படி ஒரு பேரத்திற்கு நான் ஏற்றவன் இல்லை. அதில் நான் பங்கெடுக்கவும் மாட்டேன். இதை மட்டும் நான் ஒத்துக்கொண்டால் யாதவர்கள் செய்த தியாகம் அனைத்தும் வீணாகும். இந்த அச்சுறுத்தலுக்கு நான் பணிவதன் மூலம் யாதவர்கள் செய்ததை ஒன்றுமில்லாமல் போகவிட மாட்டேன். அதோடு அவன் பெண்ணைப் பொறுத்தவரை என் முடிவு இது தான். என் மகன் யுயுதானா சாத்யகி ஒரு நாளும் அவளை மணக்கமாட்டான். இது என் முடிவான முடிவு. அவள் மட்டும் என் குடும்பத்தின் மருமகள் ஆனாள் எனில் அவளுக்கும் எங்களிடம் மரியாதை ஏதும் இருக்காது! அதே போல் எங்களாலும் அவளை மரியாதையுடன் நடத்த இயலாது. குடும்பத்தின் தினசரிச் சட்டதிட்டங்கள் அனைத்தையுமே அவளுக்காக மாற்ற வேண்டி வரும். ஆனால் பலராமன் சொன்னதும் ஒரு வகையில் சரியே: நாம் என்ன தீர்மானிக்க வேண்டும் எனில், கிருஷ்ணனை அவன் தாக்கியதற்கு நாம் அவனுக்கு எவ்வகையில் பாடம் கற்பிக்கப் போகிறோம்? கிருஷ்ணன் நமக்கெல்லாம் அருமையானவன். நம் கண்ணின் கருமணி போன்றவன்.  நம்முடைய சொத்துக்களை எல்லாம் விட அவன் மதிப்பு மிக உயர்ந்தது. அவ்வளவு ஏன்? நம்முடைய உயிரை விட மேலானவன். நமக்கெல்லாம் அவன் ஓர் ரக்ஷகன்! நம்மைப் பாதுகாத்து வருகிறான். அவனைத் தாக்குபவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் இறந்தே ஆகவேண்டும். இது தான் என் முடிவு!”

பலராமன் குறுக்கிட்டான். “நிச்சயமாக! ஆம் அதுதான் என்னுடைய கருத்தும் கூட! உங்கள் கருத்தோடு நான் ஒத்துப்போகிறேன். கோவிந்தனின் மேல் கைவைத்தவர்கள் எவராக இருந்தாலும் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் கட்டாயமாய்த் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.”

“நான் முடிவு செய்துவிட்டேன். எப்போது சத்ராஜித் தன் கைகளைக் கண்ணன் மேல் வைத்ததைக் கேள்விப் பட்டேனோ அந்த நிமிடத்திலேயே நான் செய்த முடிவு இது! சத்ராஜித்தை உயிருடன் விட்டு வைக்கக் கூடாது! இது தான் என் முடிவு. கிருஷ்ணனின் புத்திமதிகளைக் கேட்டுக் கொண்டு நான் காத்திருப்பதோ, பலராமனின்  யோசனைகளைக் கேட்டு உடனே செயல்படுவதோ எதுவும் எனக்கு முக்கியமில்லை. என் முடிவு ஒன்றே!” என்றார் சாத்யகி.

“உங்கள் கருணையும் என் மீது நீங்கள் கொண்டிருக்கும் பாசமும் இதில் வெளிப்படுகிறாது சித்தப்பா சாத்யகி அவர்களே! என்னை நீங்கள் எந்த அளவு நேசிக்கிறீர்கள் என்பதை நான் நன்கறிவேன். சத்ராஜித் என்னைத் தாக்கினார் என்பதை நீங்கள் உங்களையே அவர் அவமதித்தாற்போல் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் புரிந்து கொண்டேன். ஆனால் கொஞ்சம் பொறுங்கள், ஐயா! நான் அவரிடம் இருக்கும் விஷத்தை மெல்ல மெல்ல இறக்குகிறேன். அதற்கு எனக்குக் கொஞ்சம் கால அவகாசம் தேவை. அதை எனக்குக் கொடுங்கள். இதில் நான் தோற்றேன் எனில் நீங்கள் உங்கள் முடிவை செயல்படுத்திக் கொள்வதில் எனக்கு எவ்விதமான ஆக்ஷேபணைகளும் இல்லை!” என்றான் கிருஷ்ணன்.

“நாங்கள் இப்போது என்ன செய்யவேண்டும் என்கிறாய் கிருஷ்ணா?” என்று ராஜா உக்ரசேனர் கேட்டார்.

“பாட்டனார் அவர்களே, சத்ராஜித்தைக் குறித்து நீங்கள் அனைவரும் என்ன நினைத்தாலும் சரி. தற்காலிகமாகக் கொஞ்சம் பொறுங்கள். இந்த விஷயத்தை என்னிடம் விட்டு விடுங்கள். இதில் நான் தோற்றேன் எனில், என் அருமை அண்ணா பலராமனால் அவர் தலைச் சுக்குச் சுக்காக உடைக்கப்படுவதை நான் தடுக்க மாட்டேன். அவர் தன் கை முஷ்டிகளாலேயே சத்ராஜித்தின் தலையை உடைக்கட்டும்!” என்று கிருஷ்ணன் தன் கைகளைக் கூப்பிய வண்ணம் உக்ரசேனரைப் பார்த்துக் கூறினான்.

“கிருஷ்ணா, கிருஷ்ணா! நான் அதைத் தான் இப்போதே செய்வதாகக் கூறுகிறேனே? ஏன் நான் இப்போதே அதைச் செய்யக் கூடாது?” என்று பலராமன் கேட்டான்.

“அண்ணா, உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். என்னைத் தவறாக நினைக்க வேண்டாம். சத்ராஜித்தின் சூழ்ச்சியையும், தந்திரத்தையும் நான் மெல்ல மெல்ல ஒழிக்கிறேன். ச்யமந்தகத்தை அவனிடமிருந்து பெற்று அக்ரூரரின் கஜானாவில் சேர்ப்பிக்கிறேன்.” என்றான் கிருஷ்ணன்.

“உன்னால் அது ஒருக்காலும் முடியாது, கிருஷ்ணா! அவன் அதற்கு இடம் கொடுக்க மாட்டான்!” என்றான் பலராமன்.

கர்காசாரியார் குறுக்கிட்டார்:”இதை நாம் கோவிந்தனின் பொறுப்பில் விட்டு விடுவோம். இந்தச் சண்டையின் போக்கையே சத்ராஜித் கிருஷ்ணனைத் தாக்கியதன் மூலம் மாற்றி விட்டது; முற்றிலும் மாற்றிவிட்டது. கோவிந்தன் இதைக் குறிப்பாகச் செய்ததன் மூலம் அவன் மனதில் ஏதோ ஓர் திட்டம் இருப்பது புலன் ஆகிறது. இதை அவனே வரவழைத்துக் கொண்டிருக்கிறான். ஆகவே அவனே சத்ராஜித்தைச் சமாளிக்கட்டும். அந்தப் பொறுப்பை அவனிடமே விட்டு விடுவோம். எனக்குக் கண்ணனிடம் நம்பிக்கை நிறையவே இருக்கிறது. அவன் என்ன செய்தாலும் தர்மத்தின் பாதையிலிருந்து பிறழ மாட்டான். முடிவில் தர்மமே வெற்றி பெறும்.”

உக்ரசேன மகாராஜா கூறினார்:”கிருஷ்ணா, உன்னிடம் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நீ சொல்லும்வரையிலும் நாங்கள் எவ்விதமான முடிவையும் எடுக்க மாட்டோம். சத்ராஜித்தின் விஷயத்தில் தலையிட மாட்டோம். நீ நினைப்பதை நீ முழு சுதந்திரத்தோடு உன் வழியில் செய்து முடிப்பாய் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உன் வழியில் நீ செல்!”


Thursday, December 10, 2015

ச்யமந்தகத்தை அடைந்தே தீருவேன்!

“ஆனால், இப்போது தானே நீ சொன்னாய்? சத்ராஜித்தைப் பயமுறுத்தியதாகச் சொன்னாய் அல்லவா?”வசுதேவர் கேட்டார்.

“ஆம், தந்தையே, நான் சொன்னேன்!”

“உன்னால் எப்படிச் செய்ய முடிந்தது? அவனைப் பயமுறுத்தினால் கூட அவன் ச்யமந்தகமணிமாலையைப் பிரியமாட்டான். அவனிடம் தான் அது இருக்கும். அவனிடம் அது இருக்கையில், நீ இப்போது அனைவருக்கும் முன்னே அதைப் பிடுங்கிவிடுவதாய்க் கூறி இருக்கிறாய். இது நம் மக்களுக்கு நம் வ்ருஷ்ணி குலத்தோருக்கு ஒரு அவமானம்! அவர்கள் நம்பிக்கையை அழித்து ஒழுக்கத்தைச் சிதைத்துவிடும். உன்னை எவராலும் எதிர்க்க முடியாது என மிக நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். அவர்கள் நம்பிக்கையையும் சிதைத்ததாக ஆகி விடும்.” வசுதேவர் தன் மெல்லிய குரலில் நிதானமாகச் சொன்னார்.

பலராமனுக்குப் பொறுமை போய்க் கொண்டிருந்தது. “கோவிந்தா, உன்னை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. சத்ராஜித் உன்னைக் கொல்ல முயன்றிருக்கிறான்; ஆனால் நீ அவனைத் திரும்பத் தாக்கவே இல்லை நீ ச்யமந்தகத்தை எடுத்துக் கொள்ளப் போவதாகச் சொல்லி இருக்கிறாய்; ஆனால் உன்னால் அது இயலாது! அது உனக்கே தெரியும். ஹூம், என்னை விட்டிருந்தால் சில நொடிகளில் அவனை அழித்திருப்பேன்.ச்யமந்தகத்தைப் பிடுங்கிக் கொண்டு வந்து அக்ரூரரின் கஜானாவில் சேர்த்திருப்பேன்.”

“அண்ணா, தயவு செய்து நீங்கள் சத்ராஜித்தை நானே எதிர்கொள்ளும்படி விடுவீர்களா? என்ன காரணமோ தெரியவில்லை. சாத்யகர் அவர்களை சத்ராஜித் தன்னுடைய எதிரியாக நினைத்துக் கொண்டிருக்கிறார். அந்தக் கோபத்தை நான் என்பால் திருப்பிக் கொண்டிருக்கிறேன். நான் அவருடைய வெறுப்பை அடியோடு களையப் பார்க்கிறேன்.”

“தப்பு செய்கிறாய் கோவிந்தா!”சாத்யகர் குறுக்கிட்டார். “சத்ராஜித் ஒருக்காலும் திருந்தப் போவதில்லை. அவனுடைய தற்பெருமை அழியப் போவதில்லை. மேலும் உன்னால் மென்மையாகப் பேசி எல்லாம் ச்யமந்தக மணிமாலையைச் சத்ராஜித்திடமிருந்து கொண்டு வர முடியாது. அதற்கு வலிமையைப் பிரயோகிக்க வேண்டி இருக்கும்.”

“உங்கள் தரப்பு நியாயத்தை நான் நன்கு புரிந்து கொள்கிறேன், ஐயா!ஆனால் அவருடைய வலிமையும், வளங்களும் இத்தனை ஆண்டுகளில் பல்கிப்பெருகி விட்டன. நாம் இல்லாமல் இருந்த இந்தச் சில ஆண்டுகளில் அவருடைய நடத்தைகளும் மாறிவிட்டன. ராஜ்யசபையில் அவர் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா? அன்று நான் இவ்விஷயத்தைப் பிரஸ்தாபிக்கையில் நீங்கள் அனைவரும் எவ்வளவு தர்மசங்கடமான மனோநிலையில் இருந்தீர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.  பார்க்கப் போனால் தன் பணபலத்தை வைத்து அவர் நம்மை எல்லாம் மிரட்டிப் பணிய வைக்க நினைக்கிறார். அவ்வாறே நடந்து கொண்டார்; இப்போதும் நடந்து கொள்கிறார் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் அதை மௌனமாகப் பொறுத்துக் கொள்ளும் நம் மக்கள்! அவர்களுக்காகவே நான் ராஜ்யசபைக் கூட்டத்தில் இதைக் குறித்துப் பேச ஆரம்பித்தேன்.”

“அவனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்னும் முடிவை நாம் எடுப்பதற்கு இது ஒன்றே போதுமானது!” என்றான் பலராமன்.

“மன்னியுங்கள், அண்ணாரே! சத்ராஜித் நம் யாதவர்களுடன் சண்டை போடத் தான் விரும்புகிறார். நமக்குள்ளாகவே நாம் போர் புரிந்து கொள்ள வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார். அதன் மூலம் சாத்யகர் அவர்களை அழித்துவிடலாம் என எண்ணுகிறார். ஆகவே நான் நம்முடைய நிலையைத் தெளிவாக அவரிடம் எடுத்துக் கூறிவிட்டேன். க்ஷத்திரிய தர்மத்தின் உயர்வை ஒப்புக் கொள்ள வேண்டும். அதன் படி நடந்து கொள்ளவேண்டும். சித்தப்பா சாத்யகரை மரியாதையுடன் நடத்த வேண்டும்.இல்லை எனில் நீ சிதறிப் போவாய் என எச்சரித்துவிட்டேன்!”

“ஆஹா! அவனை எப்படி அழிக்க எண்ணி இருக்கிறாய் கோவிந்தா? சத்ராஜித் தந்திரங்கள் நிறைந்தவன். சூழ்ச்சிகள் செய்வதில் வல்லவன்!” என்றார் சாத்யகர்.

“சித்தப்பா, கவலைப்படாதீர்கள்! ஏன் கவலைப்பட வேண்டும்? நான் உங்கள் கவலைகளையும் கஷ்டங்களையும் என் தோள்களில் சுமந்து கொள்கிறேன்.”

“என்னதான் செய்யப் போகிறாய், கிருஷ்ணா?” வசுதேவர் கேட்டார்.

“”அவர் இப்போது என்ன செய்திருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும். அதை நான் கவனித்துக் கொள்கிறேன். ஆனால் தந்தையே, நிச்சயமாய் ச்யமந்தகம் கிடைத்துவிடும். அதை அக்ரூரரின் கஜானாவில் சேர்த்துவிடுவேன். இந்த விஷயத்தில் நீங்கள் என்னை முழுதாக நம்பலாம்!” என்றான் கிருஷ்ணன்.

“ஹூம், உன்னை மாதிரி மென்மையாக இருப்பவர்களுக்கு அது கனவு தான். நீ ஒருக்காலும் ச்யமந்தகத்தை அடையப் போவதில்லை. அது உனக்குக் கிடைக்காது!” பலராமன் கோபத்துடன் கூறினான். கிருஷ்ணன் தன் வசீகரமான புன்னகையுடன், “அண்ணா, அண்ணா, எப்போதாவது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நான் தந்திருக்கிறேனா? வாக்குறுதி கொடுத்தபின்னர் அது என்னால் நிறைவேற்றப்படாமல் இருந்திருக்கிறதா?” என்று கேட்டான்.