Wednesday, December 28, 2011

கர்ணனின் பின்புலம்!

இள வயதில் துரோணரின் குருகுலத்தில் படிக்கும் நாட்களில் இருந்தே ஐந்து சகோதரர்களின் அபாரமான திறமை, அவர்களின் ஒற்றுமை, பணிவு போன்றவற்றைப் பிறர் பாராட்டிப் பேசுவதும், யாரிடமும் அனுசரித்துச் செல்லும் அவர்களின் சுபாவமும் கண்டு கர்ணனுக்கு அவர்களிடம் தீராத பொறாமை ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாகவே அவன் துரியோதனனுக்கும், அவன் சகோதரர்களுக்கும் பாண்டவர்களைப் பிடிக்காது என்பதைப் புரிந்து கொண்டு அவர்களிடம் நட்புக் கொண்டு துரியோதனின் பொறாமையையும் கோபத்தையும் வளர்த்து வந்தான். இதற்காகவே துரோணர் மறுத்த பின்னரும் பரசுராமரிடம் தான் பிராமணன் எனச் சொல்லிக்கொண்டு அனைத்துக்கலைகளையும் பிரம்மாஸ்திரப் பிரயோகம் முதல் கற்றுத் தேர்ந்தான் கர்ணன். முக்கியமாகப் பாண்டவர்களில் அர்ஜுனனை அழிப்பதே கர்ணனின் குறிக்கோளும் வாழ்நாள் லட்சியமுமாக இருந்தது. பரசுராமரின் ஆசிரமத்தில் ஓர்நாள் பயிற்சி முடிந்து குரு ஓய்வெடுக்கும் நேரம். பரசுராமர் ஒரு மரத்தடியில் படுக்கச் சென்றார். அப்போது அவர் தலையைத் தன் மடியில் தாங்கிக்கொண்டான் கர்ணன். கர்ணன் மடியில் தன் தலையை வைத்துப் படுத்திருந்தார் பரசுராமர்.


கொஞ்ச நேரத்தில் ஒரு ராக்ஷத வண்டு வந்து அங்கேயே கர்ணனையும், பரசுராமரையும் சுற்றி வந்தது. கர்ணன் விரட்ட விரட்ட அது அங்கிருந்து செல்லாமல் அவன் தொடையில் வந்தமர்ந்து துளைக்கத் தொடங்கியது. வண்டு துளைக்கத் துளைக்க ரத்தம் பெருக்கெடுத்தது. ஆனாலும் கர்ணன் குருநாதரின் உறக்கம் கலைந்து போய்விடுமோ என்றஞ்சி அசையாமல் இருந்தான். கடும் வலியையும் பொறுத்துக்கொண்டான். ஆனால் வழிந்தோடிய ரத்தம் பரசுராமரின் முகத்தில் பட்டு அவரின் தூக்கம் கலைந்தது. விழித்த அவர் எழுந்து பார்த்து ஆச்சரியமடைந்தார். ராக்ஷத வண்டைப் பார்த்ததுமே அவரின் தீர்க்க திருஷ்டியால் அது ஒரு அசுரன் எனவும் சாபவிமோசனத்துக்குக் காத்திருப்பதையும் உணர்ந்தார். அவரின் பார்வை பட்டதுமே வண்டுக்கு சாபவிமோசனம் கிடைக்கிறது. அதன் பின்னரே கர்ணனைப் பார்த்து பரசுராமர், இவ்வளவு பெரிய துளையைப் போட்டும் நீ வலியைப் பொறுத்துக்கொண்டு இருந்திருக்கிறாய் எனில் இது ஓர் அந்தணனால் இயலாதது. நீ நிச்சயம் அந்தணன் அல்ல; க்ஷத்திரியனாகவே இருக்கவேண்டும். யார் நீ?” என்று கேட்கிறார். உடனே உண்மையை ஒளிக்க இயலாத கர்ணன் தான் க்ஷத்திரியன் தான் எனவும் ராதேயனால் வளர்க்கப்பட்டதாகவும் துரியோதனனால் அங்கநாட்டிற்கு அரசனாகி இருப்பதாயும் கூறுகிறான்.


அவன் உள் மனதின் எண்ணங்களைப் புரிந்து கொண்டாலும் தன்னிடம் சீடனாகப் பயின்றுவிட்ட அவனை வேறு வழியில் சபிக்க நினைத்த பரசுராமர் அவன் கற்ற வித்தை அவனுக்கு உரிய காலத்தில் பலிக்காது என்றும் பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகிக்கையில் அது அவனுக்கு மறந்து போகும் எனவும், ஆனாலும் கர்ணனுக்குச் சமமான க்ஷத்ரியன் இவ்வுலகில் இருக்கமாட்டான்/ஆனால் அதன் முழுப்பலனும் அவனுக்குக் கிட்டாது எனவும் சபிக்கிறார். ஆகக் கூடி க்ஷத்ரியர்களிலேயே சிறந்தவனாகக் கர்ணன் இருந்தும், அர்ஜுனனை விடவும் ஒருபடி கூடவே அவன் வில்வித்தைகளில் தேர்ந்திருந்தும், அவனுக்குத் தக்க இடம் கிடைக்கவில்லை என்பது குருவின் சாபமும் ஒரு காரணம். வேறொரு சமயம் பரசுராமரிடம் அவன் பயின்றுவந்த காலத்தில் வில்வித்தைப் பயிற்சி மேற்கொண்டிருக்கையில் அவனுடைய அம்பு தவறுதலாக ஒரு பிராமணனின் பசுவின் மேல் பட்டுவிடுகிறது. அந்தப் பசுவை நம்பி வாழ்ந்து வந்த பிராமணன் கர்ணனுக்கு ஒரு பாவமும் அறியாப் பசு எவ்வாறு கர்ணனால் துன்பம் அடைந்ததோ அப்படியே கர்ணனுக்கும் தக்க நேரத்தில் உதவி கிட்டாமல் துன்பம் அடைவான் என சாபம் கொடுக்கிறான்.


வேறொரு சமயம் கர்ணன் தன் ரதத்தில் வீதியுலா வந்து கொண்டிருக்கையில் ஒரு சிறுமி நெய்வாங்கிக் கொண்டு வருகையில் நெய்யெல்லாம் கொட்டிப் போய்த் தன் சிற்றன்னை திட்டுவாளே என அழுது கொண்டு நிற்பதைப் பார்த்தான். புதுசாக நெய் வாங்கித் தருவதாகச் சொன்ன கர்ணனிடம் அந்தப் பெண் பிடிவாதமாகத் தனக்குக் கீழே கொட்டிய அந்த நெய்தான் வேண்டும் என்று பிடிவாதமாய்ச் சொல்ல, கர்ணனும் உடனே அந்த இடத்தில் இருந்த மணலை எடுத்துக் கைகளால் பிழிந்தான். அவன் கைகளில் அகப்பட்ட பூமாதேவி வலி தாங்காமல் கதறினாள். ஒரு சிறுமிக்காகத் தன்னைத் துன்புறுத்திய கர்ணனுக்குப் போர்க்களத்தில் அவனுக்கு மிகவும் தேவைப்படும் முக்கியமான தருணத்தில் அவனுடைய தேர் பூமியில் புதைந்து போகும் என்று கூறினாள். ஆக அர்ஜுனனைக் கொல்ல வேண்டி பிரம்மாஸ்திரப் பயிற்சிக்குப் போன கர்ணன் இப்படியாக மூன்று விதமான சாபங்களை வாங்கிக் கொண்டு ஹஸ்தினாபுரம் வந்திருந்தான்.

Friday, December 23, 2011

துரோணர்---- அர்ஜுனன் --------கர்ணன்!

குரு வம்சத்தினருக்கு அப்போது கிருபர் ஆசாரியராக இருந்து வந்தார். அவர் தங்கையை துரோணர் திருமணம் செய்து கொண்டு அஸ்வத்தாமா என்ற பெயரில் ஒரு ஆண் குழந்தையையும் பெற்றார். துரோணருக்குத் தன் மகனைச் சீரும் சிறப்புமாக ஒரு ராஜகுமாரனைப் போல் வளர்க்க எண்ணம். மேலும் குழந்தைக்குப் பால் கொடுக்கப் பசுக்களும் ஆசிரமத்தில் இல்லை. ஆகவே அவர் தன் பால்ய நண்பன் ஆன துருபதனைச் சென்று பார்த்து முன்னர் குருகுலத்தில் தாங்கள் செய்து கொண்ட சபதத்தின்படி அவனிடம் இருந்து அவனுக்குக்கிடைத்ததில் பாதியை வாங்கி வரலாம் என எண்ணிப் பாஞ்சாலத்திற்குச் சென்றார். அங்கே துருபதனைக் கண்டார். துருபதனுக்கு இவர் வந்திருப்பது அவ்வளவாய்ப் பிடிக்கவில்லை. எனினும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் வரவேற்று உபசரித்தான். அப்போது துரோணர் தாங்கள் குருகுலத்தில் செய்து கொண்ட பிரதிக்ஞையின்படி துருபதன் தன்னுடைய செல்வத்தில் பாதியைத் தருமாறு வேண்டினார். துருபதனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

துரோணரைப் பார்த்து, “துரோணரே, அறியாப் பருவத்தில் அப்போது இளம்வயதில் என்ன என்னமோ பிதற்றி இருந்தால் அதை எல்லாம் உண்மை என நம்பிவிடுவதா? நான் யாரென நினைத்தீர்? இந்த ஆர்யவர்த்தத்தின் மாபெரும் சக்கரவர்த்திகளில் ஒருவன். என்னுடைய பரம்பரையான சாம்ராஜ்யத்தை உம்முடன் நான் பங்கிட்டுக்கொள்வதா? நீர் என்ன என்னை யுத்தத்தில் ஜெயித்தீரா? எப்போதோ, என்றோ உணர்ச்சி வேகத்தில் எதையோ கூறி இருந்தால் அதை உண்மை என நம்புவதா? போம்,போம், போய் உம் வேலைகளைப் பாரும்! ஆசாரியராக நடந்து கொள்ளும்!” என்று பேசி அவரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேறச் செய்தான். துரோணரால் இந்த அவமானத்தைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதை அவரால் மன்னிக்கவோ, மறக்கவோ முடியாது என்று தோன்றியது. தீவிரமாக யோசித்தார். பின்னர் தன் திறமைகளை அதிகப்படுத்திக்கொண்டு எவரேனும் ஒரு சக்கரவர்த்தியிடம் குல குருவாகச் சென்றால் ஒழியத் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று நினைத்தவராய் அப்போது அனைவருக்கும் மேல் மஹா ஆசாரியராக இருந்து வந்த குரு பரசுராமரிடம் சென்றார். அவரின் அடி பணிந்து தன்னைச் சீடனாக ஏற்கச் செய்தார். அனைத்துக்கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். பரசுராமரின் சீடர்களிலே துரோணருக்கு நிகரில்லை என்னும்படி வில் வித்தையில் சிறப்பு வாய்ந்தவரானார். இத்தகைய சிறப்பினால் அவருக்குக் குரு வம்சத்தினருக்குக் கலைகளைக் கற்பிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இளம் சிறார்களாக இருந்த கெளரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் துரோணரின் குருகுலத்தில் வித்தைகள் கற்கும் வாய்ப்புக் கிடைத்தது.

துரோணர் அனைத்துச் சீடர்களுக்கும் சிறப்பான கவனம் எடுத்துச் சொல்லிக் கொடுத்தாலும் அனைவரிலும் அர்ஜுனன் மட்டுமே அவர் எதிர்பார்த்த அளவுக்கும் மேல் சிறப்பாகக் கற்று வந்தான். அவனுக்கு அடுத்தபடி வசுசேனன் என்னும் பெயர் கொண்ட கர்ணன். இவன் ராதேயன் என்னும் தேர்ப்பாகன் ஒருவனால் வளர்க்கப்பட்டவன். துரியோதனின் ஆத்ம நண்பன். அவனால் அங்க தேசத்து மன்னனாக கெளரவிக்கப் பட்டவன். என்றாலும் துரோணருக்குக் கர்ணனை விடவும், அர்ஜுனனே தனிச்சிறப்பு வாய்ந்தவனாக இருந்து வந்தான். மேலும் சிறு வயது முதலே கர்ணனுக்கு என்ன காரணத்தாலோ அர்ஜுனனைப் பிடிக்கவில்லை. துரோணர் அனைத்துக்கலைகளையும் எல்லோருக்கும் சமமாய்க் கற்பித்தாலும் இந்த பிரம்மாஸ்திரத்தை மட்டும் இன்னமும் ஒருவருக்கும் கற்பிக்கவில்லை. அர்ஜுனன் ஒருவனே அதற்குத் தக்கவன் என்ற எண்ணத்தில் இருந்து வந்தார். ஆனால் கர்ணனும் அதைக் கற்க ஆவலோடு இருந்தான். அவன் உள்ளக்கிடக்கை இந்த பிரம்மாஸ்திரத்தை என்றாவது ஓர் நாள் பிரயோகித்து அர்ஜுனனைத் தான் அழிக்க வேண்டும் என்பதே. கர்ணனுடைய எண்ணங்களை நன்கறிந்த துரோணர் அதை அவனுக்குக் கற்பிக்க மறுத்துவிட்டார்.

தம்மைப் பொறுத்தவரையில் அனைவரும் சமமே என்றாலும் தகுதியின் அடிப்படையில் பார்க்கையில் பிரம்மாஸ்திரப் பிரயோகத்தைக் கற்கும் அளவுக்கு மன ஒருமைப்பாடும், சிறந்த சீரிய சிந்தனைப்போக்கும் அர்ஜுனனுக்கே இருப்பதாகவும் கூறிவிட்டார். மேலும் பிரம்மாஸ்திரத்தைத் தவறாகப் பிரயோகம் செய்வது கூடாது என்றார். அதன் மேல் கர்ணன் மிகவும் யோசித்து பரசுராமரிடம் சென்றான். அவர் க்ஷத்திரிய குல விரோதி. அவரின் தாய், தகப்பன் இருவரும் க்ஷத்திரியர்களால் உயிர் இழந்த காரணத்தால் 21 தலைமுறை க்ஷத்திரியர்களை அழித்து பூமியையே வென்று வந்தவர். பின்னர் காச்யபரின் வேண்டுகோளுக்கிணங்கி தன் கோபத்தைத் தணித்துக்கொண்டு பூமியை அவருக்கு தானமாகக் கொடுத்துவிட்டுத் தான் மேற்குக் கடலோரமாக ஒதுங்கி வாழ்ந்து வந்தார். அவரைத் தேடிச் சென்ற கர்ணன் அவரிடம் தான் ஒரு பிராம்மணன் என்று கூறித் தனக்குக் கல்வி கற்பிக்கவும், முக்கியமாய் பிரம்மாஸ்திரப் பிரயோகம் செய்யக்கற்றுக்கொடுக்கவும் வேண்டினான். மறந்தும் தான் க்ஷத்திரியன் என்பதை அவரிடம் வெளிக்காட்டவில்லை. ஆனால்…………….

Tuesday, December 20, 2011

கண்ணன் வருவான் 3-ம் பாகம்! ஞாபகம் வருதா! ஞாபகம் வருதா!

இன்றைக்குச் சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் இந்தியாவின் முக்கிய மன்னர்களாக ஆரியர்கள் திகழ்ந்தார்கள். நாகர்களுக்குள் பெண் கொடுத்துப் பெண் எடுத்துத் திருமண பந்தம் ஏற்படுத்திக்கொண்டு மாபெரும் சாம்ராஜ்யங்களை ஸ்தாபிதம் செய்திருந்தனர். அவர்களில் யாதவர்கள் முக்கியமானவர்கள். ஒரு சாபத்தால் அரியணை ஏறமுடியாத அரசகுலத்தவரான அவர்கள் தலைவராக உக்ரசேனர் , பெயரளவில் அரசராக அழைக்கப்பட்டும், அறியப்பட்டும் வந்தார். இவர்களை அடுத்து ஹஸ்தினாபுரத்தின் அரசர்களாக சக்கரவர்த்தி பரதனின் வம்சாவழியினர் ஆண்டு வந்தார்கள். இவர்களுக்கு நிகர் யாருமில்லை என்று சொல்லும்படியாக முழு பலத்தோடு இவர்கள் ஆட்சி புரிந்து வந்ததோடு யாதவகுலத்தோடு பெண் கொடுத்து சம்பந்தமும் வைத்திருந்தனர். இவர்களையே குருவம்சத்தினர் எனவும் அழைத்தனர். இவர்களில் சக்கரவரத்தி ஷாந்தனுவுக்குப் பின்னர் அவரின் மகனான காங்கேயன் சிம்மாசனம் ஏற மாட்டேன் என கடும் சபதம் செய்திருந்த காரணத்தால் மற்றொரு மனைவியின் மூலம் பிறந்த விசித்திரவீரியன் அரியணை ஏறி வம்சம் விருத்தியடையாமல் இறந்தான்.

விசித்திரவீரியனின் தாயாரான சத்தியவதி காங்கேயனோடு கலந்து ஆலோசித்தபின்னர் தன் இரு விதவை மருமகள்களுக்கும் தன் இன்னொரு மகனான வியாசர் மூலம் புத்ரதானம் அளிக்கச் செய்தாள். அதன்படி பிறந்தவர்களில் மூத்தவரான திருதராஷ்டிரன் பிறக்கையிலேயே கண் தெரியாமல் பிறவிக்குருடராகவும், அடுத்துப் பிறந்த பாண்டு, பிறக்கையிலேயே தீராத நோயோடும், வெளுத்த சரீரத்தோடும் பிறந்தார்கள். விசித்திரவீரியனின் தாசியான பெண் மிகுந்த மனோ வலிமையோடு வியாசரை எதிர்கொள்ளவே அவள் வயிற்றில் தர்மத்தின் அதிதேவதையின் அம்சமாக ஒரு பிள்ளை பிறந்து விதுரர் எனப் பெயரிடப்பட்டு அரசகுமாரர்களோடு சரிசமமாக வளர்ந்து எல்லாப் பயிற்சிகளையும் பெற்று தர்மத்தில் சிறந்து விளங்கினார். முதல் இரு அரசகுமாரர்களில் திருதராஷ்டிரனுக்கு காந்தாரி என்னும் காந்தார தேசத்து அரசகுமாரி காந்தாரியை மணந்து துரியோதனன், துஷ்சாசனன் முதலான நூறு ஆண்மக்களையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றான். பாண்டுவுக்குக் குந்திபோஜனால் வளர்க்கப்பட்ட ப்ரீதா என்னும் பெயர் கொண்ட, குந்தி என அழைக்கப்பட்ட பெண் மனைவியாகவும் ஆனார்கள். இதன் பின்னரும் மாத்ரி என்னும் ராஜகுமாரியையும் பாண்டு மணந்தான். பாண்டுவிற்கு இல்லற சுகம் அனுபவிக்கையில் அவன் இறந்து போவான் என்ற சாபம் இருந்து வந்தமையால் இரு மனைவியர் இருந்தும் அவனுக்குக் குழந்தை இல்லை.

திருதராஷ்டிரனுக்குக் கண்கள் இல்லாமையால் அவனால் அரியணை ஏறி அரசாட்சி செய்யமுடியாது என்று பாண்டுவுக்குப் பட்டம் சூட்டினார்கள். பாண்டுவும் மக்கள் மனம் நிறைய நல்லாட்சியே புரிந்து வந்தான். காங்கேயன் என்ற பீஷ்ம பிதாமஹர் துணை புரிய, விதுரர் நல்லமைச்சராக நிர்வாகத்தில் ஆலோசனைகள் கூற குற்றம் குறைகளின்றி ஆட்சி புரிந்தாலும் பாண்டுவுக்கு வாழ்க்கை ரசிக்காமல் காட்டிற்குச் சென்றான். அங்கு சென்றும் தன்னுடைய நிலையை நினைத்தும் தன் மனைவியருக்குக்குழந்தை இல்லாமை குறித்து வருந்திய பாண்டுவுக்குக்குந்தி தன் இளம் வயதில் துர்வாசமுனிவர் மூலம் தனக்குக் கிட்டிய வரத்தையும் அதன் மூலம் குழந்தைகள் பிறக்கும் என எடுத்துச் சொன்னதன் பேரில் குந்திக்கு முதலில் தர்மராஜாவின் மூலம் யுதிஷ்டிரன் என்னும் மகனும், வாயுவின் மூலம் பீமன் என்னும் மகனும், இந்திரனின் மூலம் அர்ஜுனன் என்னும் மகனும் பிறந்தனர். அதன் பின்னர் குந்தி மாத்ரிக்கும் இந்த வரத்தின் பலனைக்கொடுக்கும் மந்திர உபதேசம் செய்து அவளுக்கும் இரட்டையர்களான நகுலனும், சகாதேவனும் பிறந்தனர். ஒருநாள் துரதிர்ஷ்டவசமாக பாண்டு மனைவி மாத்ரியைப் பார்த்து மோகவசப்பட அவளும் அவனுக்கு இணங்க மனைவியோடு இல்லற சுகம் அனுபவிக்க விரும்பிய பாண்டு இறந்தான். தன்னாலேயே இது நடந்தது என்ற காரணத்தால் தன்னிரு குழந்தைகளையும் குந்தியை நம்பி அவளிடம் ஒப்படைத்த மாத்ரி கணவனோடு உடன்கட்டை ஏறினாள்.

காட்டில் இருந்த ரிஷிகள், முனிவர்கள் அனைவரின் உதவியோடும் ஹஸ்தினாபுரத்திற்குப் பாண்டுவின் புத்திரர்களை அழைத்துக்கொண்டு வந்து சேர்ந்தாள் குந்தி. பிதாமகர் பீஷ்மர் அவளையும், குழந்தைகளையும் அன்போடும், பாசத்தோடும் வரவேற்று அரண்மனையில் வசிக்கச் செய்தார். வேத வியாசரின் ஆலோசனைகளின்படி அந்தக் குழந்தைகளுக்குச் சிறந்ததொரு ஆசிரியர்கள் மூலம் கல்வி, கேள்விகளில் சிறந்தவர்களாக்கினார். இவர்களோடு திருதராஷ்டிரனின் புத்திரர்களும் கல்வி கற்றனர். பாண்டுவின் புத்திரர்கள் பாண்டவர்கள் என அழைக்கப்பட்டனர். திருதராஷ்டிரனுடைய புத்திரர்களோ குலப் பெயராலேயே கெளரவர்கள் என அழைக்கப்பட்டனர். பாண்டவகுமாரர்கள் தங்கள் நடத்தைகளாலும், வித்தியா அப்பியாசங்களைக் கற்றதன் மூலமும் அனைத்திலும் சிறந்து விளங்கியதோடு அனைவராலும் விரும்பப் பட்டனர். ஆனால் கெளரவர்களோ வித்தைகளை நன்கு கற்றாலும் மற்றவற்றில் சிறந்து விளங்காமல் பாண்டவர்களிடம் அசூயையும், கோபமும், பொறாமையும் கொண்டு விளங்கினார்கள்.

அந்தக் காலகட்டத்தில் ஆசாரியர்களிலேயே சிறந்து விளங்கியவர் துரோணர் எனப்படுபவர். இவர் பாரத்வாஜ ரிஷியின் குமாரர். இவர் குருகுல அப்பியாசம் மேற்கொண்ட சமயம் பாஞ்சால தேசத்து ராஜகுமாரன் யக்ஞசேன துருபதனும் அவருடன் சக மாணவனாக இருந்தான். துரோணரும், யக்ஞசேனரும் ஒருவருக்கொருவர் இணை பிரியா நண்பர்களாக இருந்து வந்தனர். எதிர்காலத்தில் யாருக்கு என்ன கிடைத்தாலும் அதை இருவரும் பங்கிட்டுக்கொள்ளவேண்டும் என்றூ இளமையின் வேகத்தில் சபதம் எடுத்துக்கொண்டனர். குருகுலவாசம் முடிந்தபின்னர் யக்ஞசேனன் தன்னுடைய பாஞ்சால நாட்டிற்குத் திரும்பினான். குருவம்ச அரசர்களுக்கு அடுத்தபடியாக செல்வாக்கும், வலிமையும், நில ஆளுமையும் இருந்த நாடாகப் பாஞ்சாலம் திகழ்ந்து வந்தது. காம்பில்ய நகரத்தைத் தலைநகராகக் கொண்டு அவர்கள் ஆண்டு வந்தனர். அப்போது………



பி.கு. தொடர்ந்து சொல்லப்படும் கதை பாண்டவர்களைச் சுற்றியே செல்லும். ஆகவே இந்தப் பின்னணி புரிந்திருக்க வேண்டும்.

Monday, December 19, 2011

அறிவிப்பு! கண்ணன் வருவான் மூன்றாம் பாகம் ஆரம்பம்!

யாரும் கவனிக்கலைனாலும் சொல்ல வேண்டியது என் கடமை; இந்தப் பதிவோட இரண்டாம் பாகம் முடிவடைகிறது. அடுத்து மூன்றாம் பாகம். இது மறுபடியும் நல்லாப் படிச்சுக்கணும். கதை முற்றிலும் புதிய பாதையில் செல்லும். ஆகவே அதை உள்வாங்கிக் கொண்டு தட்டச்சணும். வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்காட்டியும் ஓரளவுக்குக் கதையை முன்ஷி சொல்லி இருக்கிறாப்போல் சொல்ல முயல்கிறேன். ஆங்காங்கே இருக்கும் பிழைகள், பொருள் குற்றம், சொல் குற்றம் இருந்தால் பொறுத்தருள வேண்டும். அனைவரின் ஆதரவுக்கும் நன்றி

Sunday, December 18, 2011

நெரித்த திரைக்கடலில், நீல விசும்பினிடை நின் முகங்கண்டேன்!

தன்னைத் தானே பணயம் வைத்தல்லவோ என்னை வெளியேற்றிக் கண்ணனிடம் ஒப்படைத்தாள்! கண்ணனிடம் அன்பு செலுத்திய காரணத்திற்காக என்னையே இவள் காப்பாற்றி இருக்கையில் கண்ணனுக்காக என்னதான் செய்யமாட்டாள்! பாதகி. தன் தியாகத்தின் மூலமும் சுயநலமில்லாச் செய்கைகள் மூலமும் இவள் தன்னை மிக மிக உயர்ந்தவளாய்க் காட்டிக்கொள்கிறாளோ! ஆஹா! ருக்மிணிக்கு உள்ளம் கொதித்தது. சற்று நேரம் முன்னர் இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும், அழகாகவும் தோன்றிய இவ்வுலகம் இப்போது கசந்தது. அவளுக்கு வாழவே பிடிக்கவில்லை. நேற்றெல்லாம் அவளுக்கு இருந்த மிதமிஞ்சிய மனமகிழ்ச்சியில் அவள் ஷாயிபாவைக் குறித்துச் சிறிதும் சிந்திக்கவே இல்லை. கண்ணனின் மனைவியாகப் போகிறோம்; அவனுடன் தனிமையில் இருக்கப் போகிறோம்; அவனும் தானும் ஒருவருக்கொருவர் ஒன்றில் ஒன்றாய்க் கலந்து ஐக்கியம் அடையப் போகிறோம்; இதற்கு முன்னால் வேறு யாரும், எவரும், முக்கியமாய்த் தெரியவில்லை. ஆனால் ஆனால், இந்த ஷாயிபா கண்ணனின் ஒரு அன்புப் பார்வை கூடக் கிட்டியிராத நிலையில் அவனுக்காகக் கடற்கரைக்குத் தன்னந்தனியாய்ச் சென்று காத்திருக்கப் போய்விட்டாள்.

இதை உணர்ந்த அடுத்த கணம் ருக்மிணிக்கு தன்னை நினைக்கவே வெட்கமாய் இருந்தது. அவள், ருக்மிணி, கண்ணனின் மனைவி, அவனின் சகல சுக, துக்கங்களிலும் பங்கெடுத்துக்கொண்டு இல்லறக்கடமை ஆற்றுவதாய் நேற்றுத்தான் அனைத்துப் பெரியவர்கள் முன்னிலையிலும் ஒப்புக்கொண்டு உறுதிமொழி அளித்து அக்னி சாட்சியாய் அவனை மணந்திருக்கிறாள். அவன் தர்மமே தன் தர்மமாய்க் கொள்வதாயும் அவனிடம் வாக்களித்திருக்கிறாள். இப்போது கண்ணனுக்கு ஒரு துன்பம் நேரிட்டது எனத் தெரிந்ததும் அடுத்து என்ன என்று சிந்திக்காமல் தன்னைக் குறித்தே, தன் எதிர்காலம் இனி என்ன ஆகும் என்றே சுயநலமாய்ச் சிந்திக்கிறாளே! ருக்மிணிக்குத் தன்னை நினைக்க வெட்கமாய் இருந்தது! கண்ணீரைப் பெருக்கியவண்ணம் தன் படுக்கையில் நிலையின்றிப் புரண்டாள்.

“ஆஹா, இது என்ன! நான் இத்தனை சுயநலமாய் இருக்கிறேனே! நன்றி கெட்டவளாக ஆகிவிட்டேனே! ஷாயிபா என்னருகே வந்து இந்த நேரம் எனக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறி இருக்கலாமோ!” இப்படி எல்லாம் மனது பொங்கிய வண்ணம் எழுந்த வருத்தத்தை அடக்க முடியவில்லை என்றாலும் உள்ளூர அந்தக் கறுப்பழகி ஷாயிபா கண்ணனின் மனதில் இடம் பிடித்திருப்பாள் என்பதை ருக்மிணியால் ஏற்கத்தான் முடியவில்லை. ஆனால் கண்ணனின் இதயத்தில் அவள் ஒருத்திக்கு மட்டுமே இடம் என்றும் அவளால் உறுதிபடச் சொல்லமுடியவில்லை. வசுதேவர், தேவகி அம்மா, அக்ரூரர், உத்தவன், பலராம அண்ணா, ஏன் திரிவக்கரை என எத்தனைபேர் கண்ணனின் அன்பில் திளைந்து ஆனந்திக்கிறார்கள். அவ்வளவு ஏன்? யாதவர்கள் அனைவருக்குமே கண்ணன் கண்ணின் கருமணி எனில் கண்ணனுக்கோ அவர்கள் தான் ஜீவன். இந்த யாதவகுலத்தின் சின்னஞ்சிறு குழந்தை கூடக் கண்ணனை நேசிக்கிறது; அவனும் அவ்வாறே. அவன் பொதுவானவன். அவனை எனக்கு மட்டுமே நான் உரிமை கோர முடியாது. அவர்கள் வாழ்வின் நம்பிக்கை நக்ஷத்திரம். ஒளி விளக்கு. அவள் யார் அவர்களைக் கண்ணனிடமிருந்து பிரிக்க! மீண்டும் தன்னை நொந்துகொண்டாள் ருக்மிணி.

ஆம்,ஆம், நான் சற்றும் கண்ணனுக்குத் தகுதியில்லாதவள். அவனுடைய மனைவியாவதற்கு ஏற்றவள் அல்ல. அவன் இயல்பாகவே கடவுள் தன்மை அதிகம் உள்ளவன்; அப்படிப்பட்ட ஒருவன் என்னை மணந்து என்னையும் அவ்வாறு உயர்த்தி வைக்கப் பார்க்கிறான். ஆனால் என்னிடம் அப்படி எந்தவிதமான உயர்வு மனப்பான்மையும் கிஞ்சித்தும் இல்லை. கண்ணனிடம் சுயநலமாக அன்பு வைத்துள்ளேன். ஷாயிபாவிடம் அவன் எப்படி நடந்து கொள்ளப் போகிறான் என்பது குறித்து நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஷாயிபாவின் தியாகத்தையும், அவள் தன்னைக் கொடுத்து என்னை மீட்டதையும், கரவீரபுரத்தில் எத்தகையதொரு கஷ்டமான நாட்களை அவள் கழித்திருக்கவேண்டும் என்பதோ என் புத்திக்கு எட்டவே இல்லை. என்னால் செய்ய முடிந்ததெல்லாம் ஓர் உயர்ந்த இடத்தில் அனைவருக்கும் தலைவனாக இருக்கும் ஒருவனை எனக்கு மட்டுமே உரியவனாக மாற்றும் சுயநல நோக்கத்தோடு செயல்பட்டதே! அவனை இவர்களிடமிருந்து பிரிக்கப் பார்த்தேன். என்னைத் தான் அவன் ஒரு பெண் தெய்வமாக மாற்ற நினைக்கிறான்,

நீண்ட நேரம் யோசித்தாள் ருக்மிணி. அவள் ஒரு பெண்; சாதாரணப் பெண்; சுயநலமும், ஆசையும், கொண்டதனால் பொறாமை கொண்டுவிட்டாள். இது இயற்கையானதே! ஆனால் கண்ணனின் ஸ்பரிசம் என்னை மாற்றி இருக்கவேண்டாமா? அதன் பின்னரும் சுயநலத்தோடு இருக்கலாமா? இருக்கட்டும்; இந்த ஷாயிபாவுக்குத் தான் தியாகம் செய்யத் தெரியுமா? நான் அவளை விஞ்ச மாட்டேனா! கண்ணனிடம் என்னை முழுதாக ஒப்புக்கொடுப்பதில் அவளை விஞ்சிவிடுகிறேன். அவனுடைய நோக்கத்திற்கு முழுமனதாகத் துணை போகிறேன். ஷாயிபாவை எப்படியும் கரவீரபுரத்தில் தன்னந்தனியாக வாழ்நாளைக்கழிக்கக் கண்ணன் விடப்போவதில்லை. அது நிச்சயமாய்த் தெரியும். கண்ணனுக்கு அவள் அன்பின் சக்தி தெரியும். ருக்மிணியின் அன்பின் சக்தியும் தெரியவரும். இதன் மூலம் அவள் ருக்மிணி உண்மையானதொரு பெண் தெய்வமாக ஆகிவிடுவாள். யாதவர்கள் அவளை உண்மையாகவே ஒரு தேவியாக ஒப்பற்றவளாக வணங்குவார்கள். ஷாயிபா கண்ணனின் சக்கரத்தைத் தானே வழிபடுகிறாள்.

தன்னை மறந்து கத்தினாள் ருக்மிணி: “கோவிந்தா, நீ யாரை விரும்பினாலும், எவர் மேல் அன்பு செலுத்தினாலும், அவர்கள் எனக்கும் அன்புக்குரியவரே. ஷாயிபாவைத் தனிமை வாழ்க்கை நடத்தக் கரவீரபுரத்திற்குத் திருப்பி அனுப்பப் போவதில்லை. என் கோவிந்தா! வா, வந்துவிடு, பத்திரமாய்த் திரும்பி வா. நான் ஓர் முட்டாளாகவும், சுயநலக்காரியாகவும் இருந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு.”

ருக்மிணி தன் படுக்கையை விட்டு எழுந்து தன்னைச் சுத்தம் செய்து குளித்துப் புத்தாடை தரித்து, தேவகி அம்மாவின் தினப்படி வேலைகளில் பங்கெடுத்துக்கொண்டு, எல்லாருக்கும் மதிய உணவு அளித்து முடிந்ததும், தன்னை பிரபாஸ க்ஷேத்திரத்துக்கு அனுப்புமாறும் தானும் ஷாயிபாவோடு அங்கே காத்திருக்கப் போவதாகவும் அனுமதி கேட்டாள். பின்னர் தனக்கு என வந்த ரதத்தில் ஏறிக்கொண்டு பிரபாஸ க்ஷேத்திரத்தை நோக்கிச் சென்றாள். அங்கே கடற்கரையில் கட்டப்பட்டிருந்த தடுப்புக்களின் பக்கம் ஓர் ஓரமாய் நின்று கொண்டிருந்த ஷாயிபா அலைகள் பொங்கி ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த கடலும், தொடுவானமும் சேரும் எல்லையைக் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். ருக்மிணி வந்தது கூடத்தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்த ஷாயிபாவின் முகத்தில் தெரிந்த இளநகையின் வசியம், நக்ஷத்திரங்கள் போல் ஜொலித்த கண்களில் தெரிந்த அன்பின் ஒளி, கண்ணனையே நினைத்திருந்த அவள் மனதின் ஒருமை கண்ணனைக் கட்டி இழுத்து வந்துவிடும் நிச்சயமாய். ருக்மிணி அமைதி கொண்டாள்.

அடுத்துப் பார்ப்போம்.

Saturday, December 17, 2011

நேசம் மறக்கவில்லை நெஞ்சம்! நினைவு முகம் மறக்கலாமோ!

ருக்மிணி கனவுலகிலிருந்து நனவுலகுக்கு வந்தாள்.


உத்தவன் முகமே ஏதோ முக்கிய செய்தி இருப்பதைச் சொன்னது. உத்தவன் கிருஷ்ணனின் இளைய சகோதரன் என்ற முறையிலும் தனிப்பட்ட முறையில் ருக்மிணிக்கு உதவிகள் செய்தவன் என்ற முறையிலும் எப்போது வேண்டுமானாலும் ருக்மிணியை வந்து பார்க்கும் உரிமையை அவன் எடுத்துக்கொண்டிருந்தான். ஆனால் ருக்மிணிக்கு அவனைப் பார்க்கையில் எல்லாம் அவன் என்னதான் நெருங்கிப் பழகினாலும் வேறு ஏதோ உலகிலிருந்து வந்தவன் போலவே காட்சி அளிப்பான். உத்தவன் வந்து அவளை வணங்கி நின்றான். அவளை விட வயதில் பெரியவனாக இருந்தாலும் கண்ணனுக்கு மனைவி என்பதால் அவளுக்கு உரிய அண்ணி ஸ்தானத்தையும், அதற்குரிய மரியாதையும் கொடுத்தான். அதோடு அவனுடைய பார்வையைப் பார்த்தபோது ஏதோ முக்கியச் செய்தி, தன் மனதுக்குப் பிடிக்காத செய்தியைக் கொண்டு வந்திருக்கிறான் என்று நினைத்தாள் ருக்மிணி. அதே போல் உத்தவன் அவளிடம், “இன்று கண்ணன் உங்களை வந்து பார்ப்பான் என்று நிச்சயமாய்ச் சொல்லமுடியாது அண்ணி, நான்கு கப்பல்கள் மூழ்கிவிட்டதாய்ச் செய்தி வந்திருக்கிறது. கண்ணன் சாத்யகியையும், விராடனையும் அழைத்துக் கொண்டு அந்தக் கப்பல்களைக் காப்பாற்றி மீட்க முடியுமா எனப் பார்க்கச் சென்றுவிட்டான். உங்களைக் கவனித்துக்கொள்ள என்னை அனுப்பி வைத்தான்.” என்று கூறிவிட்டு ருக்மிணியின் உத்தரவுக்குக் காத்திருந்தான்.

ருக்மிணி ஒரேயடியாகப் பயந்து போனாள். பதட்டத்துடன், “கோவிந்தனால் எப்படி எல்லாக்கப்பல்களையும் மீட்க முடியும்?” என்று கேட்டாள். அதற்கு உத்தவன், அவன் குக்குராவையும் அழைத்துப் போயிருப்பதாகவும், குக்குராவுக்குக் கடலைப் பற்றித் தெரியாததே இல்லை எனவும். சிறிய படகுகளில் அவர்கள் சென்றிருப்பதாகவும் கூறினான். கப்பல் மூழ்கிவிட்டால் அதிலிருந்தவர்களையாவது காப்பாற்றி அழைத்துவரலாம் எனவும் கூறினான். ருக்மிணி யோசனையுடன் நேற்றிலிருந்து கடல் ஒரேயடியாகக் கொந்தளித்து ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறதே. கண்ணன் எங்காவது மூழ்கிப் போய்விட்டால்!” எனத் தனக்குத் தானே பேசிக்கொண்டாள். அவளால் இப்படித் திடீரென ஏற்பட்ட மாற்றத்தைத் தாங்க இயலவில்லை. கண்ணன் ஏன் போகவேண்டும் என்றும் கூறவே உத்தவன், முப்பது யாதவக் குடும்பங்கள் பிருகு தீர்த்தத்திற்கு அந்தக் கப்பல்களில் சென்றதாகவும், அவர்கள் அத்தனை பேரையும் அப்படியே விடக்கண்ணன் எப்படிச் சம்மதிப்பான் எனவும் மறுமொழி கூறினான்.

ருக்மிணிக்கோ கண்களில் கண்ணீர் வந்தது. “உத்தவா, அவர் எப்போதும் யாதவர்களைப் பற்றியே எண்ணுகிறார்; என்னைக் குறித்தும் எண்ணலாமே! அவர் கடலில் மூழ்கிப் போய்விட்டால் எனக்கு என்ன கதி! நான் என்ன ஆவது! மஹாதேவா! இது என்ன சோதனை!” புலம்பினாள் ருக்மிணி. அதைக் கேட்டுச் சிறிதும் பதட்டமடையாமல் உத்தவன் அவளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசினான். கண்ணனை எவரால் தடுக்க முடியும் என்றும், கண்ணனுக்கு எதுவும் ஆகாது என்றும் எடுத்துக்கூறினான். ஜராசந்தனாலும், காலயவனனாலும் கூடக் கண்ணனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. யாதவர்களால் எப்படி இயலும்! அவனுக்கு ஒன்றும் நேராது என்று உறுதிபடச் சொன்னான். ஆனால் ருக்மிணியோ உத்தவனுக்கு இதயமே இல்லை எனக் கடுமையாகச் சொன்னாள். கண்ணன் தன் உயிரைப் பணயம் வைத்துக் கடலுக்குள் சென்றிருப்பதைச் சுட்டிக்காட்டினாள். ஆனால் அப்போதும் உத்தவன் கோபம் கொள்ளாமலேயே சாந்தமாக ஒரு மூத்த சகோதரன் தன் சகோதரியிடம் வாஞ்சையாகப் பேசுவதைப் போலவே பேசினான். தனக்கும் கண்ணனிடம் பாசம், அன்பு எல்லாம் உண்டு என்றும் தான் மட்டும் இல்லை எனவும், இங்கே உள்ள அனைவருக்குமே கண்ணனிடம் பாசம் உண்டு என்றும் கூறிய உத்தவன் கண்ணன் தன் வாழ்க்கையை ருக்மிணியுடன் மட்டும் பங்கு போட்டுக்கொள்ளவில்லை என்றும் அவர்கள் அனைவரோடும் பங்கு போட்டுக்கொள்வதாகவும் எடுத்துக் கூறினான். இதுதான் கோவிந்தனின் உண்மையான முகம் எனவும் நாம் அனைவரும் இதை ஒப்புக்கொண்டு கண்ணனிடம் பரிபூரணமாகச் சரணடைந்துவிடவேண்டும் என்றும் கூறினான்.

ருக்மிணி பொறுமையின்றி தன் உதட்டைக் கடித்துக்கொண்டாள். “ஆமாம், அனைவரும் கண்ணனை விரும்புகிறார்கள்; கண்ணனும் அனைவரையும் விரும்புகிறான்; எல்லாரிடமும் அன்பு செலுத்துகிறான். இதில் நான் எங்கே நடுவில் வருவது? எனக்கும் இதற்கும் என்னதான் சம்பந்தம்! நான் யார் நடுவில்!’ என்றாள் கோபமாக. உத்தவனோ பொறுமையை இழக்காமல், :பீஷ்மகனின் மகளாகப் பேசுகிறாய் ருக்மிணி. காலயவனனின் கைகளில் சிக்கி இறக்கத் தயாராகச் சென்ற அந்த நிமிடத்தில் கூடக் கண்ணன் உன்னை மறக்கவில்லை. அவனோடு சேர்ந்து நீயும் தான் நினைக்கப்படுவாய். உன்னை விட்டு அவனை மட்டும் எவரும் இனி தனியாக நினைக்கமாட்டார்கள்.” உத்தவன் சாந்தமாகப் பேசினாலும் அதில் இருந்த உள்ளார்ந்த கடுமையை உணர்ந்தாள் ருக்மிணி. “அவன் கடைப்பிடிக்கும் தர்மத்தை நீயும் கடைப்பிடி. அவனுடைய தர்மத்தைக் காக்கும் பணியில் உன்னுடைய பங்கும் இருக்கட்டும். முதலில் உன்னுடைய தர்மம் கிருஷ்ணனுக்கு உதவுவது தான் என்பதைக் கற்றுக்கொள். அவனோடு சேர்ந்து நீயும் தர்மத்தைக்காக்க உதவி செய்.” என்றான்.

“நான் என்ன செய்வேன்! என்னால் இயலாத ஒன்று! எனக்குத் தெரியும். ஒருக்காலும் என்னால் கண்ணனுக்கு உதவியாக இருக்க முடியாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவனுடைய வாழ்க்கையை அவன் வாழப்போகும் சமயம் நான் நிச்சயம் அதைப் பங்கிட்டுக்கொள்ளப் போவதில்லை. நான் அருகதை அற்றவள். எனக்குத் தகுதியே இல்லை. அவன் சஹதர்மிணியாக ஆக நான் தகுதி அற்றவள். அந்த ஈசன், மஹாதேவன் என்னை இப்படிப் படைத்துவிட்டார். கண்ணனின் பாரங்களைக் கூடச் சேர்ந்து சுமக்கும் அளவுக்கு வல்லமையும், துணிவும் உள்ளவளாக என்னைப் படைக்கவில்லையே!” ருக்மிணி புலம்பினாள். சொல்லிக்கொண்டே தன் படுக்கையில் துவண்டாள் ருக்மிணி. பின்னர் மெதுவாக தனக்குத் தனியாகச் செய்தி ஏதும் கண்ணன் அனுப்பி உள்ளானா? என்று கேட்டாள். ஆமென்ற உத்தவன் தொடர்ந்து சொன்னான்:

“ருக்மிணி, தைரியமாக இரு! யாதவர்களிடையேயும் தைரியத்தை ஊட்டு. யாதவர்களின் குலதெய்வமாக இருந்து வருவாய். அவர்களின் காவல் தெய்வமாக இருப்பாய். அவர்கள் என்னில் இணைந்தவர்கள். “ இதுதான் உனக்குச் சொல்லி இருப்பது. இதைச் சொல்லிவிட்டு என்னிடம் உத்தவா, நீ அவளைக் கண்காணித்துக்கொள். அவள் இட்ட வேலைகளைச் செய்துவா. அவள் சொல்வதைத் தட்டாதே! என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான். ருக்மிணி! அவனும் இதில் உள்ள ஆபத்தை உணர்ந்திருக்கிறான். உணர்ந்தே சென்றிருக்கிறான்.” என்றான். ருக்மிணியின் மனம் திடீரென கிருஷ்ணன் காலயவனன் கரங்களில் மாட்டிக்கொண்டு இறந்துவிட்டான் என நினைத்து அவளும் ஷாயிபாவும் அழுத அந்த தினம் நினைவில் வந்தது. ஷாயிபாவைப் பார்க்கவேண்டும்போல் இருந்தது அவளுக்கு. ஷாயிபா எங்கே எனக் கேட்டாள். கண்ணன் ஷாயிபாவுக்குச் செய்தி அனுப்பி இருக்கிறானா என்றும் கேட்டாள். அவளுக்கும் செய்தி இருப்பதாய்க் கூறிய உத்தவன், கண்ணன் திரும்பவில்லை எனில் அவனுடைய சக்கரத்தை ஷாயிபாவிடம் கொடுக்கும்படி அவன் கூறி இருப்பதாகவும், ஷாயிபா அந்தச் சக்கரத்தை வாழ்நாள் முழுதும் பூஜித்து வருவாள் எனக் கூறியதாகவும் சொன்னான்.

ருக்மிணி அழ ஆரம்பித்தாள். “நான் ஒரு மோசமான பெண். நேற்றைய என் சந்தோஷத்தில் நான் ஷாயிபாவை முற்றிலும் மறந்து போனேன். அவளைப் போய்ப்பார்க்கக் கூட இல்லை. ஒருமுறையாவது அவளை நான் போய்ப் பார்த்திருக்கவேண்டும். உத்தவா, அவளிடம் போய் நான் அவளை உடனே சந்திக்க விரும்புவதாய்ச் சொல். நான் அவளைப் பார்த்தாக வேண்டும்.” என்றாள்.

உத்தவனோ ருக்மிணியைப் பார்த்து அவளுடைய குழந்தைத்தனத்தைப் பார்த்துச் சிரித்தான். “சகோதரி, விடிகாலையிலேயே கண்ணன் கப்பல்களை மீட்கச் சென்ற செய்தி கிட்டியதும் கண்ணனைத் தொடர்ந்து ஷாயிபா ஒரு ரதத்தில் பிரபாஸ க்ஷேத்திரத்துக்குச் சென்றுவிட்டாள். கண்ணன் திரும்பி வரும்வரையில் பிரபாஸ க்ஷேத்திரத்தின் கடற்கரையிலேயே தான் காத்திருக்கப் போவதாய் ஷக்ரதேவனிடம் கூறி இருக்கிறாள். கண்ணன் பத்திரமாய்த் திரும்பி வரப் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறாள்.” ருக்மிணிக்கு இதைக்கேட்டதும் மனம் கொதித்தது. ஷாயிபாவின் மேல் பொறாமை மூண்டது. அவள் நன்கறிவாள்; ஷாயிபா கண்ணனை மணந்து கொள்ள விரும்புகிறாள்; கண்ணன் அவளை நிராகரித்தாலும் அவள் கண்ணன் மனதைக் கவர்ந்துவிட்டாள்; அதுவும் தன் பரிபூரண சரணாகதி மூலம் அவனை, அவன் அன்பை வென்றுவிட்டாள். அவனுக்காக அவன் சந்தோஷத்துக்காக அவள் என்னதான் செய்யவில்லை! இதோ நானே ஒரு சாட்சி! கண்ணனுக்காகவே அவள் அத்தனை கஷ்டப்பட்டுத் தன்னைக்கடத்திக்கொண்டு வர ஏற்பாடுகள் செய்தாள். தன்னிடத்தில் அவள் இருந்து கொண்டு என்னை வெளியே அனுப்பி வைத்தாள்.

Friday, December 16, 2011

நிதம் மேகம் அளந்தே பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை

ஆனால் அதற்காக என் கோவிந்தனும் சும்மா இருக்கவில்லையே! திரிவக்கரை மூலமோ உத்தவன் மூலமோ செய்திகளைச் சொல்லி அனுப்புவான்; அவ்வப்போது சிறு பரிசுகளைக் கொடுத்து அனுப்புவான். பின்னர்….பின்னர் திருமண நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. துவாரகை முழுதும் களியாட்டங்கள், கொண்டாட்டங்கள். அனைவரும் சந்தோஷத்தின் உச்சிக்கே போனார்கள். அனைத்துவீடுகளும் அலங்கரிக்கப்பட்டுக் குழந்தைகளுக்கும் பட்டாடைகள் உடுத்தப்பட்டு பாடலும், ஆடலுமாய்க் காட்சி அளித்தது. கப்பல்களின் மாலுமிகள்; அவர்களின் தலைவனாம் ஒருவன்; அவன் பெயரை என்னால் நினைவு கூர முடியவில்லை; அனைவரும் தங்களுக்கெல்லாம் கடவுளைப் போன்ற கண்ணன் மணக்கப் போகும் பெண்ணைப் பார்க்கவேண்டும் என்று கூறினார்கள். என்னை வந்து பார்த்தார்கள். பின்னர் ஷக்ரதேவன் வந்தான். விந்தன், அனுவிந்தன் மற்ற அரசகுமாரர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு அனைவரும் வந்தனர். ஷக்ரதேவனுடன் ஷாயிபாவும் வந்தாள். அவளால் அன்றோ இன்று எனக்கு இந்த வாழ்க்கை கிடைத்திருக்கிறது! ருக்மிணியின் நெஞ்சம் நன்றியால் நிரம்பி இருந்தது.


குலகுருவான கர்காசாரியார் முன்னிலையில் முறைப்படி அக்னி வளர்த்து ஹோமங்கள் செய்து கண்ணன் ருக்மிணியின் கரங்களைப் பிடித்தான். ஆஹா! கண்ணன் என் கைகளைப் பிடித்த அந்த முதல் தொடுகை! எனக்குள்ளாக ஏதோ புது ரத்தம் பாய்ந்தாற்போல! என் நாடி, நரம்புகளை எல்லாம் இனியதொரு வீணை போலவும், கண்ணனின் கரங்கள் அவற்றை மீட்டியது போலவும் அன்றோ தோன்றியது. எந்த நேரம் என் நாடி,நரம்புகளிலிருந்து சுநாதம் கிளம்பி என்னைக் காட்டிக்கொடுத்துவிடுமோ என அஞ்சினேனே! இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்க வைத்த அந்த அனுபவத்தை மறக்க இயலாது. பின்னர் அக்னியை வலம் வந்து இருவரும் ஏழடிகள் ஏழு புனிதமான அடிகள் சேர்ந்து எடுத்து வைத்தோம். அந்த அடிகளே கண்ணனை என்னோடு ஒன்று சேர்த்தது. என்னில் அவனும், அவனில் நானும் ஒன்று கலந்தோம்; பிரிக்க முடியாதவர்கள் ஆனோம். அங்கே இருந்த அனைத்துப் பெரிய மனிதர்கள்; உறவினர்கள்; நண்பர்கள் முன்னிலையிலும், அனைத்துக்கடவுள்களையும் அக்னியையும் சாட்சியாகக் கொண்டு நான் கண்ணனின் மனைவியாகிவிட்டேன். இனி எங்களை மரணம் கூடப் பிரிக்க முடியாது; ஆம். மரணத்திலும் கண்ணனோடு சேர்ந்தே செல்வேன்.


ஆஹா! கண்ணனின் மனைவியானது போன்றதொரு அற்புதமான ஒன்று வேறெதுவும் இல்லை. கண்ணன் எத்தனை கம்பீரமாகத் தன் தலையில் சூடிய மயில்பீலி அசைந்து ஆட, சிரிக்கும் கண்களோடும், இளநகை மாறாமல் அனைவரையும் பார்த்துச் சிரித்துக்கொண்டும் கனிவோடு பேசிக்கொண்டும், அதே சமயம் அவளையும் மறவாமல் கனிவுப் புன்னகையை வீசிக்கொண்டும் காணப்படுகிறான். இது அவனால் அன்றி வேறு எவரால் இயலும்! பின்னர் வந்த இரவு! அவளால் மறக்க இயலாத ஒன்று. அவள் கோவிந்தன் அவளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்ததை நூற்றுக்கு நூறு நிரூபித்தான். அவளைப் புதியதோர் மனுஷியாக்கிக் காட்டினான். பின்னர் மறுநாள் எப்போதும்போல் கோவிந்தன் தன்னுடைய பயிற்சிகளை மேற்கொள்ள அனைவரோடும் சேர்ந்து கொள்ள வேண்டிச் சென்றுவிட்டான். இங்கே நான் என் படுக்கையில் தன்னந்தனியாகப் படுத்திருக்கிறேன். என் மனதில் பொங்கும் சந்தோஷத்தை எனக்குள் நானே வெளிப்படுத்திக்கொண்டு கனவுகளில் மிதந்த வண்ணம் இருக்கிறேன். அந்த தேவகி அம்மா! அவளைக்கோயிலில் வைத்துக் கும்பிட வேண்டும். என் மனநிலையைப் புரிந்து கொண்டவள் போல் மதிய உணவு சமயம் வந்து கலந்து கொள் எனச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள். இந்த மாளிகையின் வெளிப்புறச் சுவர்களில் கடலின் அலைக்கரங்கள் வந்து மோதுகின்றன போலும். என் உள்ளத்து அலைகள் என்னுள்ளே மோதி மோதித் ததும்புவதைப் போல் அவையும் இந்த மாளிகையின் சுவர்களை மோதி மோதித் திரும்புகின்றன. அதான் “ஓ”வென்ற இரைச்சல்.


அப்போது தான் உத்தவன் அங்கே வந்தான்.

Wednesday, December 14, 2011

கண்கள் உறங்கலெனும் காரியமுண்டோ!

ருக்மிணியின் மனம் மீண்டும் காட்சிகளைக் கண்டு கொண்டிருந்தது...............


"கிருஷ்ணனின் அம்புகளால் ருக்மி துளைக்கப்பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. உத்தவன் தன் குதிரையிலிருந்து கீழே இறங்கி ருக்மியின் பெருகும் ரத்தத்தைத் துடைத்து நிறுத்த முயன்று கொண்டிருந்தான். ருக்மிணியின் நெஞ்சம் பதறியது. மஹாதேவா! மஹாதேவா! என் அண்ணனைக்கண்களைத்திறக்கச் செய்வாயாக! நான் மஹாருத்ர ஜபம் செய்து முடிக்கிறேன். தேவாதி தேவா! நீ தான் கருணை செய்ய வேண்டும். ருக்மிணியின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்தார் போலும் மஹாதேவன். ருக்மி மெல்லக்கண்களைத் திறந்து பார்த்தான். அதைக்கண்ட கிருஷ்ணன் ரதத்தில் இருந்து கீழே இறங்கினான். ருக்மிக்கு அவ்வளவு பலமான அடி பட்டிருந்தாலும் அவன் சமாளித்துக்கொண்டு எழுந்து அமர முயன்றான். கண்ணனைக்கண்டதும் அவனுக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. உறுமிய வண்ணம் எழ முயன்றான். கண்ணனுக்கு ஏதேதோ சாபங்கள் வேறு கொடுத்தான். பலராமனுக்கு இதைக் கண்டதும் சிரிப்பு அதிகமானது. சத்தம் போட்டுச் சிரித்தான்.

இவை எதையும் லக்ஷியம் செய்யாமல் கிருஷ்ணன் கீழே குனிந்து உத்தவன், சாத்யகி ஆகியோரின் உதவியோடு ருக்மியைத் தூக்கி எடுத்துத் தன் ரதத்தில் ருக்மிணியின் அருகே கிடத்தினான். ருக்மிணி அண்ணனைக் கவனித்தாள். இரக்கமும், அன்பும், கருணையும் பொங்க அண்ணனைத் தொட முயன்றாள். உத்தவன் கட்டுகள் போட்டுக்கட்டியிருந்தும் ருக்மியின் காயங்களிலிருந்து ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. ஆனாலும் ருக்மியோ தன் தங்கையைக் கடுமையாகவும் கொடூரம் கொப்பளிக்கும்படியும் பார்த்துவிட்டு அவள் முகத்தில் எச்சிலைத் துப்பினான். அதைத் தடுத்த கண்ணன் ருக்மியைப் பார்த்து, “ருக்மி, எல்லாவற்றையும் மறந்துவிடு. உன் தங்கையை மன்னித்துவிடு. அவளாலேயே நீ இன்று உயிருடன் இருக்கிறாய். இல்லை எனில் உன் பிணம் தான் இங்கே கிடந்திருக்கும்.” என்றான். ருக்மியோ கோபமும்,ஆங்காரமும் பொங்க கிருஷ்ணனைப் பார்த்து, “மோசக்கார இடையனே! கேடுகெட்டவனே!” எனக் கத்தினான். ருக்மிணியின் மனம் கோபத்தில் கொதித்தது. என் கோவிந்தனைப் பார்த்தா இப்படிச் சொல்கிறான். எனக்காகவன்றோ கோவிந்தன் இவனைக் கொல்லாமல் உயிர் பிழைக்க வைத்தான்.

“உன் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள் ருக்மி! நான் உன்னைக்குண்டினாபுரத்திற்குத் திருப்பி அனுப்பப் போகிறேன்.” சிரித்த வண்ணம் மென்மையான குரலில்கூறினான் கண்ணன். தொடர்ந்து, அவன் பேசுவதற்குள்ளாக ருக்மி குறுக்கிட்டான். தான் குண்டினாபுரம் திரும்ப முடியாது என்றும் கிருஷ்ணனின் தலையைக் கொய்து எடுத்துவராமல் திரும்பப் போவதில்லை என சபதம் செய்திருப்பதாகவும் கூறினான். தான் அங்கே போகப்போவதில்லை எனவும் தன் கைகளால் கிருஷ்ணனின் கழுத்தை நெரித்துக்கொன்று தலையை எடுத்துப்போகவேண்டும் எனக் கூறினான். “ஓ, அப்படியா? உன் தங்கையை விதவையாக்கிப் பார்ப்பது நல்லதென உனக்குப் படுகிறதா?” கண்ணன் கேட்டான். மேலும் தொடர்ந்து, “சரி, நீ குண்டினாபுரம் செல்லவில்லை எனில் நான் உன்னை வற்புறுத்தவில்லை ருக்மி. உன்னை என்னுடன் துவாரகைக்கு அழைத்துச் செல்கிறேன். என் வருங்கால மனைவியின் சகோதரனான உனக்கு கெளரவமான வரவேற்புக் கிடைக்கும். யாதவர்களோடு ஒத்துக்கலந்து வாழலாம்.” என்றான்.

பலராமன் அப்போது அங்கே வந்து என்ன நடக்கிறது இங்கே என்று கேட்டான். அவனுக்கு விஷயம் புரிந்ததும் ருக்மியின் மேல் பரிதாபம் பொங்கியது. எப்போதுமே அவனுக்கு ருக்மியின் மேல் பச்சாத்தாபம் உண்டு. தன்னுடைய பெரிய குரலில் கண்ணனைப் பார்த்து, “கண்ணா, ருக்மியின் இடத்தில் எவர் இருந்தாலும் இப்படித்தான் நடந்துகொள்வார்கள., குடும்ப கெளரவத்தை மீட்டெடுக்க ருக்மி இப்படித்தான் நடந்துகொள்வான்; வேறு மாதிரி அவனிடம் எதிர்பார்க்க முடியாது. அவனுடைய அருமைத் தங்கையைக்கடத்தி வந்திருக்கிறாய். அவனால் உன்னைத் தன் தங்கையின் கணவனாக ஏற்க முடியவில்லை. அது அவனுடைய முட்டாள்தனமாக இருக்கலாம். ஆனால் அவன் செய்வது தப்பெல்லாம் இல்லை. அவனைக் குண்டினாபுரத்திற்கு நான் அழைத்துச் செல்கிறேன்.” என்றான். ஆனால் ருக்மியோ கண்ணனின் தலையைத் தன் வாள்களால் அறுத்து எடுத்துக்கொண்டே தான் குண்டினாபுரம் திரும்பப் போவதாய் மீண்டும் மீண்டும் திடமாய்க் கூறினான். பலராமன் அவனைப் பார்த்து,” நீ இங்கேயே இருந்து உன் ஆட்களுடன் என்ன வேண்டுமானாலும் செய்து கொள். துவாரகைக்கு வந்தாயானால் உனக்கு மரியாதை கிட்டாது!” எனக்கோபமாய்ச் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.

பின்னர் அனைவரும் சந்தோஷமாக சூரிய தீர்த்தத்திற்கு வந்து சேர்ந்தோம். காத்திருந்த கப்பல்களில் ஏறிக்கொண்டோம். பிரபாச க்ஷேத்திரத்தை வந்து அடைந்தோம். அங்கே தான் மஹாதேவரும், தேவாதிதேவரும் ஆன ஈசன் சோமநாதராகக் குடி இருக்கிறார். அங்கே நாங்கள் அனைவரும் வந்து சேர்ந்ததும் யாதவர்கள் அனைவரும் எங்களை மிகவும் மகிழ்வோடு வரவேற்றனர். கீதங்கள் இசைக்கப்பட்டன. மலர்கள் தூவப்பட்டன. முரசுகளும், சங்கங்களும், எக்காளங்களும் ஊதப்பட்டன. மணிகள் அடிக்கப்பட்டன. அனைவரும் ஆடிப்பாடி வண்ணப் பொடிகளைத் தூவிய வண்ணம் ஒருவருக்கொருவர் விளையாடி மகிழ்ந்தனர். அம்மா தேவகி என்னைக் கண்டதும் எவ்வளவு மகிழ்ந்தார். திரும்பத் திரும்ப என்னை அருகே அழைத்து அணைத்து மகிழ்ந்தார். கண்களில் கண்ணீரோடு என்னை உச்சிமுகர்ந்து ஆசிகள் கூறிய வண்ணம் இருந்தார். ஆஹா, அந்த ரேவதி அக்கா! பெரிய அண்ணா பலராமனின் மனைவி! அவருக்கேற்றவண்ணம் அவளும் ஆகிருதியோடு காணப்படுகிறாளே! என்னை எவ்வளவு அன்பாய்த் தன் சொந்த சகோதரியைப் போல் கனிவுடன் விசாரித்தாள்.

திரிவக்கரையும் அங்கே தன் சந்தோஷத்தைக் காட்டிய வண்ணம் தன்னால் தயாரிக்கப்பட்ட வாசனாதி திரவியங்களை எனக்குப் பரிசளித்தாள். பின்னர் நான் தந்தையார் வசுதேவர், பாட்டனார் உக்ரசேனர், அக்ரூரர், சித்தப்பா தேவபாகர் போன்றோரை வணங்கினேன். இன்னமும் யாரெல்லாமோ இருந்தனர் அங்கே. அவள் வயதுப்பெண்களும், வயதில் மூத்த பெண்களும், இளைய பெண்களும் காணப்பட்டனர். அனைவரும் என் அழகைப் பார்த்து வியந்தனர். அவர்களால் இயன்ற பரிசுகளை எனக்கு அளித்து மகிழ்ந்தனர். கடலுக்கு என்னை அழைத்துப் போய் அங்கே ஸ்நாநம் செய்ய வைத்தனர். ஒரே ஒரு கஷ்டம் என்னவெனில் கண்ணனோடு திருமணம் இன்னும் நடத்தவில்லை; எப்போது எனத் தெரியவில்லை. கண்ணனைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் மணப்பெண்ணாக அந்த அரண்மனையில் வசித்து வந்தேன். கண்ணனைப் பார்த்தால் பேச முடியாது. திருட்டுத்தனமாகப் பார்த்து மகிழ வேண்டியது தான். அதிலும் பெரியவர்கள் இருக்கையில் கண்ணனோடு சகஜமாய்ப் பேசுவது மரியாதைக் குறைவும் கூட. அப்புறம் என்ன நினைத்துக்கொள்வார்கள் என்னை! குண்டினாபுரத்து ராஜகுமாரிக்குப் புகுந்த வீட்டில் மரியாதை கொடுத்து நடந்து கொள்ளத் தெரியவில்லை என்றல்லவோ நினைப்பார்கள்!

Sunday, December 11, 2011

கொல்லுங் கொலைக்கஞ்சிடாத மறவர் குணமிகத் தானுடையான்!

சென்ற அத்தியாயத்துடன் இரண்டாம்பாகம் முடிந்து விட்டாலும் அதன் பின்னர் நடந்த ஒரு சில சம்பவங்களைச் சொல்வதற்காக இந்தப் பின்னுரை.

துவாரகையில் மாளிகையின் உப்பரிகை. எதிரே கொந்தளித்து ஆர்ப்பரிக்கும் கடல். அதையே நோக்கிய வண்ணம் நின்று கொண்டிருந்த ருக்மிணிக்குக் கடந்த இரு மாதங்களின் நிகழ்வுகள் கண்ணெதிரே ஒவ்வொன்றாய்த் தோன்றிக்கொண்டிருந்தன. ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளில் அந்தக் காட்சிகளை அவள் கண்டாள். திடீரென அவள் பல யுகங்கள் வாழ்ந்துவிட்டது போல் உணர்ந்தாள். எவ்வளவு சங்கடமான காலங்களைக்கடந்திருக்கிறாள். மீண்டும் அவள் சுயம்வர தினம் அவள் கண்ணெதிரே விரிந்தது. அவளைத் தன்கைகளால் தூக்கிய வாசுதேவன் ரதத்தின் பின்னிருக்கையில் அவளை அமர வைத்துவிட்டுப் பூர்ணா நதியில் வேகமாய் ரதத்தை ஓட்டினான். அப்போது கோடைக்காலம் என்பதால் நதியில் நீர் இல்லாமல் ஆங்காங்கே பாறைகளும், கற்களுமே தெரிந்தன. அவற்றின் மேல் ரதத்தை வேகமாய்க் கண்ணன் ஓட்டுகையில் ருக்மிணி அங்கும் இங்கும் தூக்கி எறியப்பட்டாள். அவள் உடல் அங்குமிங்கும் மோதியதில் வலி பொறுக்க முடியவில்லை. ஆனால் கண்ணனின் முகத்தில் தெரிந்த புன்முறுவல் அவள் மனக்காயங்களை மட்டுமின்றி உடல் வேதனையையும் மறக்கடித்தது. ஆஹா! இந்த நாளுக்குத்தானே அவள் காத்திருந்தாள். கண்ணனின் அருகாமை அவளுள் புத்துணர்ச்சியை ஊட்டியது. இனி சுயம்வரம் என்ற அந்தக் கொடிய நிகழ்வு இல்லை. அவள் கண்ணன் அவளிடம் வந்துவிட்டான்.

அதன் பின்னர் அவர்கள் பலராமன் இருக்குமிடம் சென்று அவனைச் சந்தித்தனர். ருக்மிணி முதல் முதல் மதுராவில் கண்ணனைப் பார்த்த சந்திப்பின்போதும் கண்ணனே அவள் மனதில் நிறைந்திருந்ததால் பலராமனை அவள் இப்போதே முதலில் சந்திப்பதாய் உணர்ந்தாள். இவ்வளவு பெரிய ஆகிருதியோடும், பலத்தோடும் விளங்கும் இந்த மனிதனின் உள்ளத்துக்குள்ளேயா இத்தனை கருணையும், பெருந்தன்மையும். தன் பெரிய உடலில் காணபட்ட பெரிய முகத்தின் பெரிய கண்களில் உலகத்து அன்பை எல்லாம் தேக்கிக்கொண்டு பலராமன் தன் பெரிய குரலால் சத்தமாய் அவளை ஆசீர்வதித்தான். தப்தி நதியின் வடக்குக் கரையோடு பயணப்பட்டார்கள் அவர்கள். அப்போது தான் ருக்மி தன் படையோடு அவர்களை எப்படியோ கண்டுபிடித்து எதிர்கொண்டான். அவள் யாதவர்களும், தன் அண்ணனோடு வந்த தன் சொந்த நாட்டுப் படைவீரர்களும் போட்டுக்கொண்ட சண்டையைப் பார்த்துக் கலவரம் அடைந்தாள். அதே சமயம் ருக்மி மிக வேகமாய்த் தன் ரதத்தை ஓட்டிக்கொண்டு கிருஷ்ணனை நோக்கிப் பாய்ந்தான். ருக்மிணி பயத்தோடு தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள். கண்களை மெதுவாகத் திறந்து பார்த்தபோது கண்ணன் துளியும் பயமில்லாமல் ருக்மியை எதிர்கொள்வதைக் கண்டாள். அவளுக்கோ ருக்மியின் கோபத்தை நினைத்து தலையோடு கால் நடுங்கியது. ஆனால் அவள் அங்கே கண்டதோ ஒரு புதிய கண்ணனை. இவனை இதுவரை அவள் கண்டதே இல்லை. அவன் உடலே முறுக்கிக் கொண்டு கண்களின் அந்தச் சிரிப்பு மறைந்து போய், கண்களிலிருந்து பாயும் ஒளியாலேயே எதிரியைத் தொலைத்துவிடுவான் போல, தன் கைகளில் சாட்டையைப் பிடித்த வண்ணம் போருக்கு ஆயத்தமாய் இருக்கும் கண்ணன் அவளுக்குப் புதியவன். ருக்மியின் அம்பு கிருஷ்ணனை நோக்கிப் பாய்ந்ததைக் கண்டு மீண்டும் அஞ்சினாள் ருக்மிணி. ஆனால் கண்ணன் அதிலிருந்து தப்பியதோடு தன் சுதர்சனத்தை எடுத்துக்கொண்டு போருக்குத் தயாரானான்.

ருக்மிணிக்கு சுதர்சன சக்கரத்தைக் குறித்த கதைகள் நினைவில் வந்தன. ஆஹா! இந்தச் சக்கரம் ஏவப்பட்டால் குறி தவறாமல் எதிரியைத் தாக்கும் என்பார்களே. ஒருமுறை கூடக்குறி தவறியதில்லையாம். உடனேயே ருக்மிணிக்கு நிலைமையின் விஸ்வரூபம் புரிய, ஆஹா, இது என்ன, என் சொந்தத் தமையனின் மரணத்திற்கு நானே காரணமாகப் போகிறேனா? துடித்துப் போனாள் ருக்மிணி. உடனே அவள் மெல்லத் தவழ்ந்து சென்று நின்று கொண்டிருந்த கண்ணனின் காலடியைச் சென்றடைந்து அவன் கால்களைப் பிடித்துக்கொண்டாள். அவன் கீழே பார்த்தான். “என் கடவுளே, என் தலைவா, அவனை விட்டுவிடு. என் சகோதரன் அவன். அவனைக்கொன்றுவிடாதே!” என்று கெஞ்சினாள். கண்களில் இருந்து கண்ணீர் பொங்கியது. அடக்கமுடியாமல் விம்மினாள். கண்ணன் முகத்தில் மீண்டும் இளநகை. அவளுக்கு அவன் பார்வையே உறுதிமொழி அளிக்க,அதை நிரூபிப்பது போல் குதிரையின் சாட்டையை பஹூகாவிடம் கொடுத்த கண்ணன், தன் சார்ங்கம் என்னும் வில்லை எடுத்து அம்புகளைப் பூட்ட ஆரம்பித்தான். அம்பு ருக்மியைத் துளைக்குமோ என பயந்தாள் ருக்மிணி. இறைவனைப் பிரார்த்தித்துக்கொண்டாள். கிருஷ்ண வாசுதேவனுக்கு ஜெய மங்களம் என்ற கோஷம் எழுந்தது. ரதங்கள் நின்றன. குதிரைகள் கூடக் கனைக்க மறந்தன. ருக்மி ரதத்திலிருந்து கீழே விழுந்து கிடந்தான்.

Friday, December 9, 2011

கண்ணன் என்னைக்கண்டு கொண்டான், கையிரண்டில் அள்ளிக்கொண்டான்!

கருவறையில் அன்னபூரணி விக்ரஹத்திற்கு இரு பக்கங்களிலும் நெய் விளக்கு சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தது. அந்த விளக்கின் ஒளியைத் தவிர வேறு ஒளி அங்கே காணப்படவில்லை. பெரிய பெரிய தீவட்டிகள் எல்லாம் கருவறைக்கு வெளியேயே நிறுத்தப்பட்டுவிட்டன. உள்ளே ருக்மிணியும் இன்னும் முக்கியமான சிலரும் மட்டுமே சென்றனர். அவர்களில் ருக்மிணியைப் போலவே ஆடம்பரமாக அலங்காரம் செய்துகொண்டிருந்த ஷாயிபாவும் ஒருத்தி. அவள் தலை அலங்காரத்தைச் சுற்றிலும் மலர்களால் ஆன திரை காணப்பட்டது. உள்ளே நுழைகையில் அந்தத் திரையால் தன் முகத்தை மறைத்த வண்ணம் ஷாயிபாவும் உள்ளே செல்பவர்களோடு கலந்து கொண்டாள். உள்ளே ருத்ராசாரியார் வேத மந்திரங்களைச் சொல்லி ருக்மிணிக்கு வழிபாடுகள் நடத்தி ஆசிகள் வழங்கி தரிசனம் செய்து வைத்தார். அதன் பின்னர் கருவறையைச் சுற்றிப் பிரதக்ஷிணம் செய்ய ஆரம்பித்தனர். ருக்மிணிக்கு முன்னால் ஷாயிபா சென்று அங்கிருந்த ஒரு மூலையில் நின்று கொண்டாள். பிரகாரத்தின் வடக்குக்கோடியிலிருந்து வெளியே செல்லும் வாயிலுக்கு அருகே ஷ்வேதகேது காவலுக்கு நிற்பவனைப் போல் நின்று கொண்டிருந்தான். அரச குடும்பத்தின் தலைமை குருவானவர் ருக்மிணியை அழைத்துச் செல்கையில் கூடவே ருத்ராசாரியாரும் சென்றார், ஒரு திருப்பத்தில் சற்றே இருட்டாக இருந்த இடத்தில் சரேலென ஷாயிபா வந்து கலந்து கொள்ள ருக்மிணியை இழுத்தவண்ணம் ருத்ராசாரியார் அந்த இடத்தில் மறைந்து கொண்டார். அனைத்தும் கண்மூடித்திறக்கும் முன்னர் நடந்து முடிந்துவிட்டது.

ஊர்வலம் அதிவேகமாய்ச் சென்றது. ருத்ராசாரியார் மெல்ல வெளியே வந்து ருக்மிணியை அழைத்துக்கொண்டு ஷ்வேதகேதுவிடம் சென்றார். அவளை ஷ்வேதகேதுவிடம் ஒப்படைத்துவிட்டு அவசரம் அவசரமாக ஊர்வலத்தைப் பின் தொடர்ந்தார். அங்கே மீண்டும் மணப்பெண் அன்னபூரணிக்கு எதிரே மண்டியிட்டு நமஸ்கரித்தவண்ணம் பிரார்த்தனைகள் செய்துகொண்டிருந்தாள். அவள் வாய் திறந்து எதுவும் சொல்லாததால் மனதிற்குள்ளாகப் பிரார்த்திக்கிறாள் என்று தெரிந்து கொண்டு அனைவரும் மெளனம் காத்தனர். இங்கே ருக்மிணி பின் தொடர ஷ்வேதகேது மாந்தோப்பை நோக்கி ஓட்டமாய் ஓடினான். இரு பெரிய மரங்களின் அடர்த்தியில் மறைந்திருந்த உத்தவனும் சாத்யகியும் வெளியே வந்தனர். நதிகளின் சங்கமத்துறையில் அவர்களுக்காகக் காத்திருக்கும் படகை நோக்கி அவர்களை அழைத்துச் சென்றனர். ருக்மிணியோ உத்தவனைப் பார்த்து, “உத்தவா, நான் உங்களுடன் வர விரும்பவில்லை. வாசுதேவன் எங்கே சென்றானோ அங்கேயே நானும் செல்ல விரும்புகிறேன். ஆசாரியரே, நான் சதியாகித் தீக்குளித்து உயிரை விட விரும்புகிறேன். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. என்னை அந்தச் சிதையின் பக்கம் அழைத்துச் செல்லவும்.” என வேண்டுகோள் விடுத்தாள்.

உத்தவன் தன்னால் ஆன மட்டும் தடுத்துப் பாரத்தான். ஆனால் ருக்மிணியோ கிருஷ்ணனையே தான் நினைத்து வந்ததால், இன்னமும் நினைத்திருப்பதால் தான் மணமாகாவிட்டாலும் அவனுடைய மனைவி என்றும், வாசுதேவ கிருஷ்ணனின் இளைய சகோதரன் என்னும் முறையில் இந்தச் சிதையை மூட்டித் தான் இறங்குவதற்குத் தயார் செய்யவேண்டியது உத்தவனின் கடமை எனவும் கம்பீரமாய்க்கூறினாள். பின்னர் உத்தவனைத் தள்ளிவிட்டுவிட்டு ஷ்வேதகேது பின் தொடரச் சிதையை நோக்கி நடந்தாள். அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஒருபக்கம் ஷாயிபா ருக்மிணியின் இடத்தில் இருப்பதைக் கண்டுபிடித்து அனைவரும் தேடிக்கொண்டு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற கலக்கம். இன்னொரு பக்கம் உயிரைவிடத் துணிந்துவிட்ட ருக்மிணியைக் காப்பாற்றி ஒருவருக்கும் தெரியாமல் துவாரகைக்கு எப்படி அழைத்துச் செல்வது என்ற குழப்பம். அவர்கள் வருவதைக் கண்ட அப்லவனும், ஜாஹ்னுவும் நெய்யை ஊற்றிச் சிதையில் அக்னியை வளர்த்தனர். ருக்மிணி சிதையின் அருகே வந்து சூரியனை வணங்கிவிட்டுக் கண்களை மூடி தர்மராஜனையும் பிரார்த்தித்துக்கொண்டாள். நதிக்கரையில் சற்றுத்தூரத்தில் ஒரு ரதம் வேகமாய் வரும் சப்தமும் குதிரைகளின் குளம்படிச் சப்தமும் கேட்டன. ருக்மிணியோ இவை எவற்றாலும் பாதிக்கப்படாதவளாய் அக்னியில் இறங்க முன்னேறினாள்.

ருக்மிணியைப் பிடிக்கும் ஆட்கள் தானோ என்ற எண்ணத்தோடு திரும்பிய உத்தவனும் ஷ்வேதகேதுவும் ரதத்தில் சாட்டையை ஓங்கிக் கொண்டு அதே சமயம் குதிரைகளை அடிக்காமலேயே அவற்றை வேகமாய் ஓட வைத்துக்கொண்டு வாசுதேவ கிருஷ்ணன் அமர்ந்திருந்தான். சொல்லமுடியாத சந்தோஷத்தோடு ஷ்வேதகேது பாய்ந்து சிதையில் காலடி எடுத்து வைத்துவிட்ட ருக்மிணியை வேகமாய் அப்புறம் தள்ளினான். ருக்மிணி அதிர்ச்சியோடு திரும்பிப் பார்த்தாள். சற்றுத் தூரத்தில் வேகமாய் வந்து கொண்டிருந்த ரதத்தையும் அதில் வீற்றிருந்த கிருஷ்ணனையும் கண்டாள். அதன் பின்னர் அவள் கண்களுக்கு வேறு எதுவும் தெரியவில்லை; அவள் நினைவுகளில் கண்ணனைத் தவிர வேறு எவரும் இல்லை. சுற்றிலும் காணப்பட்டவர்கள் மறைந்தனர். அங்கிருந்த சிதை மறைந்தது. நதியும் மறைந்தது. வாசுதேவன் ஒருவனே விச்வரூபம் எடுத்து அவள் கண்களில் தெரிய தன்னை மறந்து சுற்றி இருப்பவர்களையும் மறந்து ருக்மிணி ரதத்தை நோக்கி ஓடினாள். ரதத்தின் சக்கரங்களில் ருக்மிணி மாட்டிக்கொள்ளப் போகிறாளே எனப் பயத்தோடு செய்வதறியாமல் பார்த்துக்கொண்டிருந்தனர் உத்தவன், சாத்யகி, ஷ்வேதகேது, அப்லவன், ஜாஹ்னு அனைவரும். ஆனால் அந்த முடுக்குத் திரும்பியதும் ரதம் வேகமாய் நிறுத்தப்பட்டது என்பதை அதன் கிரீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சென்ற சப்தமும் சக்கரங்கள் உராயும் சப்தமும் தெரிவித்தன. வாசுதேவன் ரதத்தில் இருந்து குதித்தான். தன்னிருகரங்களால் ருக்மிணியைத் தூக்கினான். ரதத்தின் பின்னிருக்கையில் அமர்த்தினான்.

அனைவரும் சந்தோஷத்தில் கிருஷ்ண வாசுதேவனுக்கு மங்களம் என கோஷமிட்டவண்ணம் நதிக்கரையின் சங்கமத்துறையில் படகு நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு ஓடோடிச் சென்றனர். கிருஷ்ணன் தன்னுடன் வந்திருந்த பஹூகாவிடம் ரதத்தை ஓட்டச் சொல்லிச் சாட்டையைக் கொடுத்திருந்ததைத் திரும்பபெற்றுக்கொண்டு வேகமாய் ரதத்தைத் திருப்பினான். வேகமாய் நதிக்கரையைக் கடந்தான். அக்கரைக்குச் சென்றான். குதிரைகளை நிறுத்தினான். தன் பாஞ்சஜன்யத்தை எடுத்துக்கொண்டான். தன் எதிரிகளுக்குத் தன் வரவால் கிலி ஏற்படும்படியும், அதே சமயம் நண்பர்களுக்கு பலத்தைக் கொடுக்கும்படியும் அந்தப் பாஞ்சஜன்யத்தால் “பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்” என்று சப்தமெழுப்பினான். கண்ணன் வந்துவிட்டான். அவன் வெற்றி அந்த நாதத்தின் தொனியில் தெரிய வந்தது.

சுற்றுப்புறமே அமைதியாக அங்கே ஒலித்தது, பாஞ்சஜன்யம்.

பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Tuesday, December 6, 2011

கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னர் முகம் காண்பதில்லை!

திருமணக்கொண்டாட்டங்களில் முதல்நாள் விருந்து நடைபெறுகையிலேயே ஜராசந்தன் ஒருவனே அங்கிருந்த அனைவரையும் ஆட்டி வைப்பவன் என்பது புரிந்துவிட்டது. எல்லா அரசர்களும், சிற்றரசர்களும், பட்டத்து இளவரசர்களும் அவனைச் சுற்றிக் குழுமிக்கொண்டு அவன் சொல்வதற்கெல்லாம் “ஆமாம்” போட்டுக்கொண்டும், அவனைப் புகழ்ந்து கொண்டும் இருந்தனர். இரண்டாம் நாள் சாஸ்திர, சம்பிரதாயப்படி வேத கோஷங்களோடு திருமண மண்டபமும், சுயம்வர மண்டபமும் வழிபாடுகள் செய்யப்பட்டு முறைப்படி அலங்கரிக்கப்பட்டது. சுயம்வரம் நடப்பதற்கான நேரத்தை ஜோசியர்கள் அலசி ஆராயந்த தேர்ந்தெடுத்தனர். அக்ஷய த்ரிதியை அன்று நடுப்பகல் வேளையில் குறிப்பிட்ட ஒரு இலக்கை நோக்கி சிசுபாலன் அம்பை விடவேண்டும். அவன் அம்பை விட்டதுமே அவன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, ருக்மிணி சுயம்வர மாலையை அவனுக்குச் சூட்ட வேண்டும். அதற்கு முன்னர் அன்று காலை போஜர்களின் குலதெய்வமான அன்னபூர்ணா தேவிக்குத் திருமணப் பெண் வழிபாடு நடத்த வேண்டும். அன்னபூர்ணா தேவி குண்டினாபுரத்திலிருந்து மூன்று மைல் தூரத்தில் பூர்ணா நதியும், தப்தி நதியும் சேரும் சங்கமத் துறையில் கோயிலில் குடி கொண்டிருக்கிறாள். அவள் கடவுளருக்கெல்லாம் கடவுளான, ஏகப்பரம்பொருளான மஹாதேவரின் மனைவியும், போஜ நாட்டரசர்களின் வழிவழியாக வந்த குலதெய்வமும், காவல் தெய்வமும் ஆவாள். ஆகவே போஜ மன்னர்களின் சம்பிரதாயப்படி சுயம்வர மண்டபத்திற்குப் போகும் முன்னர் மணப்பெண் காலையில் குறிப்பிடப்படும் முஹூர்த்த காலத்தில் அந்தக் கோயிலில் வழிபாடு நடத்தவேண்டும். இதன் மூலம் அவள் திருமண வாழ்க்கையும், அவள் செல்லும் இடத்தின்/நாட்டின் சிறப்பும் மேம்படும் என மனப்பூர்வமாக நம்பினார்கள்.

சுயம்வர தினம். அன்று அதிகாலை இருட்டிலேயே இன்னமும் கிழக்கு வெளுக்கும் முன்னரே, உத்தவனும், சாத்யகியும் ஒரு சிறுபடகைச் சத்தமில்லாமல் கைகளால் துடுப்புப் போட்டுக்கொண்டு சங்கமத்துறைக்கு வந்தார்கள். படகைக் கரையில் இருந்த ஒரு மரத்தில் கட்டிவிட்டுப் பின்னர் கோயிலுக்குப் பின்னாலும் கோயிலைச் சுற்றிலும் சூழ்ந்திருந்த மாந்தோப்புக்குள் சென்று மறைந்தார்கள். அதே சமயம் அப்லவனும், ஜாஹ்னுவும் சந்தனக் கட்டைகளைச் சேகரித்துக்கொண்டிருந்தார்கள். சேகரம் செய்த கட்டைகள், பூர்ணா நதிக்கரையில் அன்னபூர்ணா கோயிலில் இருந்து சற்றுத் தூரத்தில் தள்ளி இருந்த சுடுகாட்டிற்குக் கொண்டு சேர்த்தார்கள். கட்டைகளை அடுக்கி இருந்த விதம் பார்த்தால் யாருக்கோ சிதை தயார் செய்வதாய்த் தெரிந்தது. மேலும் ஒரு மண் பாண்டம் முழுதும் நெய்யையும் அங்கே கொண்டு வந்து வைத்தார்கள். யாரோ தன்னைத் தானே மாய்த்துக்கொள்ளப் போகின்றார்கள் அல்லது யாரையோ அங்கே எரிக்கப் போகிறார்கள்? யாருக்கு? ருக்மிணிக்குத் தான். இது அவளுடைய கட்டளையின் பேரில் தயார் செய்யப்படுகிறது.

அரண்மனை. நேரம் அதே அதிகாலை இருட்டு: ருக்மிணியின் கன்னிமாடம்: வெளியே மங்கலவாத்தியங்கள் முழங்கி தோழியர் அனைவரும் இனிய கீதங்கள் பாடி மணப்பெண்ணை எழுப்புகின்றனர். உள்ளே தன் கட்டிலில் படுத்திருந்த ருக்மிணிக்கு அந் தகீதங்கள் நாராசமாய்க் காதில் விழுந்தது. அவள் எங்கே தூங்கினாள்? தூங்கிப் பல யுகங்கள் ஆகிவிட்டனவே! இசையோடு கூடவே வேத கோஷமும் கேட்க ஆசாரியர்களைக்காக்க வைப்பது சரியில்லை என்பது புலப்பட ருக்மிணி எழுந்து தன்னைத் தயார் செய்து கொள்ள ஆரம்பித்தாள். தோழிப்பெண்கள் உதவி செய்ய ருக்மிணியை மிகவும் அழகாகவும், விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்காளாலும் அலங்கரித்தனர். மலர்களால் ஆன முகத்திரையால் ருக்மிணியின் முகம் மூடப்பட்டது. இது அவள் அன்னபூர்ணா தேவியை வழிபடுகையில் மட்டும் நீக்கிக்கொள்ளலாம். பின்னர் அவள் மணமகனைத் தேர்ந்தெடுத்து மாலையிடும்வரை முகத்திரையோடு இருக்கவேண்டும். மலர்களால் ஆனதென்றாலும் அது அடுக்கு அடுக்காக நான்கைந்து அடுக்குகளால் ஆகி மிகவும் கனமானதொரு திரையாகக் காணப்பட்டது.
நேரம் ஆக ஆக, ருக்மிணிக்குப் பதட்டமும், ஆவலும், அவசரமும் அதிகரித்தது. இனி நகரும் ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாகத் தோன்றியது அவளுக்கு. எப்போது இதெல்லாம் முடியும்? நான் என் கண்ணனிடம் அவன் இருக்குமிடம் போய்ச் சேர்வேன்? இப்போதே நேரே போய்ச் சிதையில் விழுந்துவிடலாமா என்றிருந்தது அவளுக்கு. அவளுடைய அவசரத்தைப் பார்த்த சுவ்ரதா, இந்தக் கொண்டாட்டங்களிலும், ஆடம்பர அலங்காரங்களிலும் மனதைப் பறி கொடுத்த ருக்மிணி சிசுபாலனைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று தீர்மானித்துவிட்டாள் என்றே எண்ணிக்கொண்டாள். ருக்மிணி சுயம்வர மண்டபத்திற்குக்கிளம்ப வேண்டிய நேரம் வருவதற்கு முன்னால் கோயிலுக்குச் செல்ல வேண்டிய வேளை வந்துவிடவே ஆசாரியர்கள் அனைவரின் கால்களிலும் விழுந்து வணங்கி, ஆசிகளைப் பெற்றுக்கொண்டு ருக்மிணி தனக்கென வந்து காத்திருந்த ரதத்தில் ஏறிக்கொண்டாள். அவளுடன் சுவ்ரதாவும், இன்னும் இரண்டு இளவரசிகளும் கூடவே ஏறிக்கொண்டனர். இதைத் தவிரவும் பத்துப்பனிரண்டு பல்லக்குகளில் வேற்று நாட்டரசிகளும், இளவரசிகளும் வந்திருந்தனர். அனைவரும் திருமணப்பாடல்களைப் பாடிக்கொண்டு ஊர்வலமாக ருக்மிணியின் ரதத்தைப் பின் தொடர்ந்தனர். ரத ஊர்வலம் மிகவும் ஆடம்பரமாகக் கண்களைக் கவரும் விதத்தில் இருந்தது. ரதங்களே மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது குண்டினாபுரத்தின் செல்வ வளத்தையும், செல்வாக்கையும் காட்டியது. சுவ்ரதாவிற்கு ருக்மிணியின் மேல் ஒருபக்கம் கோபம். இந்தச் சிசுபாலனை மணக்க இவளுக்கு இவ்வளவு அவசரமா என நினைத்துக்கொண்டாள். ரதம் அன்னபூர்ணா கோயிலுக்கு வந்து சேர்ந்தது. ருக்மிணி ரதத்தை விட்டு இறங்க ருத்ராசாரியாரும், ஷ்வேதகேதுவும் அவளை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். மற்றவர்கள் பின் தொடர்ந்தனர்.

Saturday, December 3, 2011

பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால்!

சில நாட்களில் ஷாயிபா குண்டினாபுரம் வந்து சேர்ந்தாள். கூடவே ருத்ராசாரியாரும் வந்திருந்தார். இருவரும் பாட்டனார் கைசிகனின் விருந்ஹ்டாளியாக அவருடைய மாளிகையில் தங்கினார்கள். அவள் சகோதரனும் கரவீரபுரத்தின் தற்போதைய அரசனுமான ஷக்ரதேவன் சில நாட்கள் கழித்துச் சுயம்வரத்திற்கு வந்து சேருவதாய்ச் செய்தி அனுப்பி இருந்தான். கிருஷ்ணன் இறந்தான் என்ற செய்தியை ருக்மிணியின் வாயிலாய்க்கேட்ட ஷாயிபா துக்கம் தாங்க முடியாமல் மனம் உடைந்து போனாள். இருவருமே தங்கள் வாழ்க்கையில் உயிர் கொடுக்கும் ஒளி கொடுக்கும் ஒரு உயிர் மறைந்துவிட்டதை எண்ணி எண்ணி வருத்தம் அடைந்தனர். ஷாயிபா வந்து சேர்ந்ததுமே ருக்மிணிக்குக் கொஞ்சம் பலம் வந்துவிட்டாற்போலாயிற்று. பலராமன் வந்து அவளை மீட்டுச் செல்லப் போகும் செய்தியை அவள் ஏற்கெனவே அறிந்திருந்தாள். மேலும் உத்தவனும் கரவீரபுரத்திற்குச் சென்று ஷாயிபாவோடு கலந்து ஆலோசித்துப் புனர்தத்தனை பலராமனோடு சேர்ந்து கொள்ளச் சொல்லி வேண்டுகோள் விடுத்திருந்தான். புனர்தத்தனும் ஒரு பெரும்படையோடு பலராமனோடு சேர்ந்து கொள்ளச் சென்று விட்டான். குண்டினாபுரத்துக்கும் மேற்குக்கடற்கரையின் சூரிய தீர்த்தத்துக்கும் நடுவே தப்தி நதிக்கரையை ஒட்டி அவர்கள் முகாமிட்டிருந்தனர்.

அங்கே சில கப்பல்கள் ருக்மிணியைக் கவர்ந்து வந்ததும் துவாரகைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகளோடு காத்திருந்ததையும் ஷாயிபா தெரிவித்தாள். எல்லாம் சரி. பலராமனோடு செல்வது சரியா? ருக்மிணி தன் மனதைத் திறந்து ஷாயிபாவிடம் தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டாள். ஒரு பெண்ணாலேயே இன்னொரு பெண்ணின் மனதை அறிய முடியும் என்பதற்கொப்ப்ப, ஷாயிபா ருக்மிணி சொல்வதன் உட்கருத்தைப் புரிந்து கொண்டாள். அவள் சொல்வதே சரியென முழு மனதோடு ஆமோதித்தாள். வேறுவழியில்லை என்பதையும் புரிந்து கொண்டாள். இதுவே கிருஷ்ணனால் அவள் கவர்ந்து செல்லப்பட்டு அவனோடு மணம் முடிக்கப்பட்டாளெனில் அது வேறு விஷயம். காலம் காலமாக மணமகள் விரும்பினால் அவளைத் தூக்கிச் சென்று மணம் புரிந்து கொள்வதை சாஸ்திரங்களும், நீதிகளும் ஆமோதிக்கிறது. அதைச் சரியெனச் சொல்கிறது. ஆனால் ஆனால், மணமகன் இறந்து போனபின்னால் அவனுடைய உறவினர்களுடன் ஓடிப் போவது என்பது! மஹாதேவா! ருக்மிணியைப் போன்ற ஒரு சாம்ராஜ்யத்தின் இளவரசி இப்படி நடந்தால் அது நிச்சயமாக மன்னிக்கவே முடியாத ஒரு குற்றமாகும். என்னதான் பலராமனும், மற்ற யாதவர்களும் கிருஷ்ணனின் தியாகத்தால் மனம் உடைந்து வருத்தம் அடைந்திருந்தாலும், திருமணமே ஆகாமல் இறந்தவன் ஒருவனின் நிச்சயிக்கப்பட்ட மணமகளாக அவர்கள் நடுவே வாழ்க்கை நடத்துவது என்பது ஒருக்காலும் இயலாத ஒன்று. ஷாயிபா தீர்மானமாகச் சொன்னாள்.

ஷாயிபாவோடு கலந்து ஆலோசித்து அவள் கருத்தையும் கேட்டுக்கொண்டதும், ருக்மிணிக்குத் தன்னைத் தானே மாய்த்துக்கொள்வதே சிறந்த வழி எனப் பட்டது. விரைவில் சித்திரை மாதமும் வந்தது. ஒவ்வொரு நாளும் கடந்தது. இப்போது ருக்மிக்குப் புதுப்பலம் வந்ததுபோல் அவன் எல்லாவிஷயங்களிலும் மூக்கை நுழைத்து சுயம்வரத்திற்கான ஏற்பாடுகளைக்கவனிக்க ஆரம்பித்தான். அவன் சந்தோஷம் அடைய முக்கியக்காரணங்கள் இரண்டு.
1. அவனுடைய எதிரியான கிருஷ்ணன் ஒரேயடியாக ஒழிந்து போய்விட்டான்.
2. எந்த மதுராவின் வீதிகளில் அவன் அவமானப்படுத்தப்பட்டானோ அந்த மதுராவும் எரிந்து சாம்பலாய்ப் பழங்கதையாய்ப் போனது.
யாதவர்களோ போன இடமே தெரியவில்லை. அவர்களுக்கு என அதிசயங்களையும், அற்புதங்களையும் நிகழ்த்துவதாய்ச் சொல்லிக் கொண்டிருந்த கிருஷ்ணனோ உயிருடனேயே இல்லை. எல்லாவற்றையும் விட அவனை அதிசயத்தில் ஆழ்த்தி மகிழ்ச்சி அடையச் செய்த விஷயம் ருக்மிணியின் மனமாற்றம். அவள் இப்போது எதற்குமே எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அடங்கிவிட்டாள். இனி எதுவும் செய்யமுடியாது என்பதைப் புரிந்து கொண்டுவிட்டாள். சொல்லப் போனால் சுயம்வர நாளுக்காகக் காத்திருக்கிறாள் என்று அவளைக் கவனித்து வரும் சேடிகள் கூறுகின்றனர்.

தப்தி நதிக்கும், பூர்ணா நதிக்கும் இடைப்பட்ட நகரம் குண்டினாபுரம். இவை இரண்டுக்கும் இடையில் இருந்த ஒரு பெரிய மைதானத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த மாபெரும் பந்தலில் சுயம்வரத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. பந்தலின் ஒரு கோடி தப்தி நதியையும் இன்னொரு கோடி பூர்ணா நதியையும் தொட்டுக்கொண்டிருந்தது. ஆயிற்று! இதோ ஜராசந்தன் வந்துவிட்டான் போலிருக்கிறதே! ஆம், பீஷ்மகன் தக்க மரியாதைகளுடனும், மிகப் பணிவோடு வேறு எவரை வரவேற்கப் போகிறான். இப்போது அவனை எவராலும் அசைக்க முடியாது. அவனுக்குத் துணைக்கு என அணி சேர்ந்திருந்த மன்னர்களின் ஆலோசனைகள் எதுவுமே இப்போது அவனுக்குத் தேவையில்லை. அவனே எல்லாமுடிவுகளையும் எடுத்தான். சுயம்வரத்திற்கு மூன்றுநாட்கள் முன்னால் தாமகோஷன் தன்னுடைய மகன் சிசுபாலனோடு வந்து சேர்ந்தான். தாமகோஷன் மனதளவில் மட்டுமில்லாமல் உடலளவிலும் தளர்ந்து போயிருந்தான். மதுராவும் எரிக்கப்பட்டு அவன் அருமை மருமகனான கிருஷ்ணனும் கொல்லப்பட்ட செய்தி அவனை உள்ளமும், உடலும் உருகும்படிச் செய்திருந்தன. ஆனால் மாறாக சிசுபாலனோ முன்னிலும் பலம் வாய்ந்தவனாகக்காட்சி அளித்தான். சேதி நாட்டிலேயே அரசியல் விவகாரங்களில் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பங்கெடுத்துக்கொண்டு ஒரு மாபெரும் சக்தியாக மாறி இருந்தான். ருக்மிணி தனக்குத்தான் என சர்வ நிச்சயத்தோடு காத்திருந்தான்.


ஆசாரிய ஷ்வேதகேதுவோடு விந்தன் வந்திருந்தான். ஷ்வேதகேது வந்து சேர்ந்ததுமே ஷாயிபா மூலம் ருக்மிணியைத் தொடர்பு கொண்டான். பலராமன் அவனோடு தொடர்பில் எப்போதும் இருந்து வந்தான் ஆகவே அவ்வப்போது நடைபெறும் விஷயங்களை அவனோடு பகிர்ந்து கொண்டான் ஷ்வேதகேது. ஷாயிபாவும் ருக்மிணியும் ஷ்வேதகேதுவை முழுமனதோடு நம்பினார்கள். ருக்மிணியின் முடிவு சரிதான் என்றாலும் பலராமனையும் விட்டுக்கொடுக்க முடியவில்லை அவனால். திருமணத்திற்கான முன்னேற்பாடுகளும், கொண்டாட்டங்களும் மெல்ல மெல்ல ஆரம்பித்தன. எங்கு பார்த்தாலும் குதூகலம், கொண்டாட்டம், ஆட்டம், பாட்டம். விருந்துகள்.வேடிக்கை விளையாட்டுக்கள். அனைவர் மனமும் அதில் ஆழ்ந்து போக ஒரே ஒரு உயிர் மட்டும் துக்கத்தில் ஆழ்ந்திருந்தது. இவை எதிலும் மனம் ஒட்டாமல் பரிதவித்தது.

Friday, December 2, 2011

இனி வாழும் வழியென்னடி தோழி!

பால்குனி மாத ஆரம்பத்தில் அவளுக்கு ஷாயிபா அப்லவன் மூலம் செய்தி அனுப்பி இருந்தாள். தான் ஆசாரியர் ருத்ராசாரியாருடன் கிளம்பி வருவதாக ஆறுதல் கூறி இருந்தாள். இன்னொரு செய்தி மீண்டும் ஷ்வேதகேது மூலம் வந்தது. ஆனால் அனுப்பியது அவனில்லை. பலராமனின் செய்தி அது. ஆம் கிருஷ்ண வாசுதேவனின் அண்ணன் பலராமன் கீழ்க்கண்ட செய்தியை ருக்மிணிக்கு அனுப்பி இருந்தான். ஜாஹ்னு அந்தச் செய்தியை எடுத்துக்கொண்டு தன்னால் இயன்றவரை விரைந்து வந்திருந்தான். செய்தி வருமாறு:

“விதர்ப்பாவின் அரசுக் கிரீடத்தில் ஜொலிக்கும் ரத்தினங்களைப் போன்ற பெண் ரத்தினமும், பீஷ்மகனின் மகளுமான ருக்மிணிக்கு,
ஷூரர்களின் தலைவன் ஒப்புயர்வற்ற தலைவனும் ஆன வசுதேவரின் மூத்த மகனும் கிருஷ்ண வாசுதேவனின் மூத்த சகோதரனும், ஆன பலராமன் ஆசீர்வதித்து எழுதும் மடல்,
ஆசாரிய ஷ்வேதகேதுவிற்கு நீ அனுப்பிய செய்தி கிடைக்கப் பெற்றது. அருமை இளவரசி, கோவிந்தன், உன் கண்ணின் மணி போன்றவன், தன்னுயிரை ஈந்துவிட்டான். அவன் யாதவர்களின் நலத்திற்காகத் தன்னுயிரைத் தியாகம் செய்துவிட்டான். அவனுடைய விலை மதிப்பற்ற உயிரைக் கொடுத்ததின் மூலம் எங்களை இவ்வுலகில் மரணம் அழைக்கும்வரை வாழ வழி செய்து கொடுத்திருக்கிறான்.
இளவரசி, கோவிந்தன் இங்கிருந்து கிளம்பும் முன்னர் எங்களிடமிருந்து விடைபெறுகையில், அந்தக் கடைசி நிமிடத்தில் உன்னைத் தான் நினைத்திருந்தான். இந்த பூமியின் அனைத்துக்கடவுளரையும் சாட்சியாக வைத்து அவன் உன்னைத் தன் மணமகளாகத் தேர்ந்தெடுத்ததை எங்களுக்கு அறிவித்தான். தாயே, நாங்கள் அவனுக்கு செய்ந்நன்றிக் கடன்பட்டுள்ளோம். கிருஷ்ணன் எங்களுக்கு அருமையானவன் மட்டுமல்லாமல் எங்கள் உயிர் போன்றவனும் ஆவான். எங்கள் குலதெய்வமும் ஆவான். அம்மா, அப்படிப்பட்ட அவன் உன்னை எங்களிடம் ஒப்புக் கொடுத்திருக்கிறான் எனில் நீயே இனி எங்களுக்கு வாழ வழிகாட்டும் தெய்வம் ஆவாய். எங்கள் வீட்டுப் பெண்தெய்வம் ஆவாய். எங்கள் வம்சம் விருத்தி அடைய நீ எங்களை வாழ்த்த வேண்டும்.

பீஷ்மகனின் மகளே, உன் வீடு இனி எங்கள் இருப்பிடம் ஆகும். நீ எங்கள் வீட்டுப் பெண்ணாகிவிட்டாய். எங்களைக்காக்கும் காவல் தெய்வமாகிவிட்டாய். தயாராய் இரு அம்மா! நாங்கள் கிளம்பி வருகிறோம். உன்னை எவ்வகையிலேனும் மீட்டு எங்களுடன் அழைத்துச் செல்வோம். காத்திரு. எதற்கும் தயாராக இரு!”

மேற்கண்ட பலராமனின் செய்தியைப் படித்தாள் ருக்மிணி. அவளையும் அறியாமல் கண்ணீர் வழிந்தோடியது அவள் கண்களிலிருந்து. முத்துப் போன்ற கண்ணீர் உருண்டோட, அவள் அவளுடைய அருமை கோவிந்தன் கடைசியாக விடைபெற்றுச் செல்கையில் கூட அவளையே நினைத்திருந்ததை நினைத்து ஒரு பக்கம் சந்தோஷம் அடைந்தாள். அவனுடைய அந்த நினைப்பாலேயே அவள் தெய்வீகத் தன்மை அடைந்துவிட்டாள். அவனுடைய ஸ்பரிசம் கூடத் தேவையாயிருக்கவில்லை. ஆஹா, பலராமன் மட்டும் வரப்போவதில்லை. உத்தவனும் வருவான். ஆசாரிய ஷ்வேதகேது வருவார். யாதவர்களில் வீரர்கள் அனைவருமே வருவார்கள். தங்கள் ரதங்களில் ஏறிக்கொண்டு அந்த அதிரதர்களும், மஹாரதர்களும் தங்கள் சாமர்த்தியத்தை இங்கே காட்டப் போகின்றனர். வந்து அவளை அழைத்துக்கொண்டு அலைகள் மோதியடிக்கும் செளராஷ்டிரக் கடற்கரையில் உள்ள யாதவர்களின் புதிய நகரத்துக்கு அவர்களின் இஷ்டமான பெண் தெய்வமாக நினைத்து ஆராதிக்கப் போகின்றனர். ஒரே நிமிடமே நீடித்த இந்த சந்தோஷம் அடுத்த கணம் தூள் தூளானது. கிட்டத்தட்ட மயங்கும் நிலைக்கு வந்துவிட்ட அவளுக்கு நிலைமையின் உக்கிரம் புரிய ஆரம்பித்தது.

அவளுடைய கிருஷ்ணன் இப்போது உயிருடன் இல்லை. பலராமன் தூக்கிச் செல்வதன் மூலம் சுயம்வரத்திலிருந்து வேண்டுமானால் அவள் தப்பலாம். ஆனால் அவள் பல புதிய மனிதர்களுக்கு இடையில் வசிக்க வேண்டும். முற்றிலும் தெரியாத மனிதர்கள்! ஆனால்….ஆனால்….. இவை எல்லாம் தூசி மாத்திரம்….அவளுடைய கோவிந்தன் மட்டும் இருந்தால் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்வதில் எந்த சிரமமும் இராதே. ஆனால் இப்போதோ! அவன் எப்போதோ சொல்லி வைத்துவிட்டுச் சென்றதை வைத்து அவர்கள் அவளை அங்கே வாழ அனுமதிப்பார்கள். அப்படித்தானே! ருக்மிணியின் இதயம் கொஞ்சம் “இது தவறு” என இடித்துரைத்தாலும், அவளுக்கே அவளை நினைத்து உள்ளூர வெட்கம் வந்தாலும், ஒரு அரசகுமாரியாக மாறிய அவள் கர்வம் கொண்ட மனம் “அப்படித்தான்” என்றது. ருக்மிணிக்கு இதுவே வசதியாகவும் தெரிந்தது. பலமும் ஆற்றலும் பொருந்திய இந்த யாதவர்கள் வெகு விரைவில் கிருஷ்ண வாசுதேவனையும், அவன் தியாகத்தையும் மறந்துவிடுவார்கள். அதன் பின்னர் அவள் அவர்களின் எவரையேனும் உதவிக்கு ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக்கொண்டு கல்யாணம் ஆகாமலேயே கிருஷ்ண வாசுதேவனின் விதவையாக வசித்துவரவேண்டி இருக்கும். ஒரு நாள் கூடக்கண்ணனோடு மனைவியாக வாழாமலேயே விதவையாக வாழ வேண்டி இருக்கும். ருக்மிணியின் அரச ரத்தம் வழக்கம் போல் தன் நினைப்பையே சரி எனச் சொன்னது. அவள் ஒரு இளவரசி என்பதும் அதிகாரம் செலுத்தியே பழக்கப்பட்டவள் என்பதுமே நினைவில் நின்றது. அவளுடைய சுபாவமான எதிர்ப்புக் குணம் தலை தூக்கியது. அவள் யதார்த்தத்தை உண்மையை மறந்தே போனாள். இல்லை….இல்லை. நான் எவரையும் எதிர்பார்த்து இருத்தல் என்பது ஒருக்காலும் நடவாத ஒன்றாகும். பலராமன் என்னவோ நல்லவர் தான். அவருடைய மற்ற யாதவத் தலைவர்களும் நல்லவர்களாகவே இருக்கலாம். ஆனால் அவளுடைய கோவிந்தன் இல்லாமல் அவள் அவர்களுடன் சென்று வசிப்பது என்பது ஒருக்காலும் முடியாத காரியம்.

அதே சமயம் தன் தகப்பனின் பேச்சுக்கும், சகோதரனின் வற்புறுத்தலுக்கும் இணங்கி சிசுபாலனைத் திருமணம் செய்து கொண்டு வாழ்வதும் அவளால் ஒப்ப முடியாத ஒன்று. ஆகவே அவளுக்கு போஜ நாட்டில் வாழவும் வழியில்லை. உரிமையும் இல்லை. ஆயிற்று; ஏற்கெனவே தந்தைக்கு வயதாகிவிட்டது. வெகு விரைவில் ருக்மி அரசனாகி அரசுப் பொறுப்பை ஏற்றுக்கொள்வான். ருக்மிக்குத் தன்னைக் கிருஷ்ணனுக்குக் கொடுக்கும் அளவிற்குப் பெருந்தன்மை எல்லாம் இருந்ததே இல்லை. ஆகையால் அவன் இப்போது பலராமனோடு தான் செல்வதை உள்ளூர விரும்ப மாட்டான். ஆனால் அதே சமயம் ருக்மி விரும்பும் சிசுபாலனிடம் தான் தன்னை ஒப்புக்கொடுக்கப் போவதுமில்லை. அவள் கிருஷ்ண வாசுதேவனின் மணமகள். அவனுக்கென நிச்சயிக்கப்பட்டவள். கிருஷ்ணன் இறந்துவிட்டாலும் அவள் என்றும் அவனுக்குரியவளே. அவளே மரணம் அடைந்தாலும் அப்படித்தான். அவள் இறந்தாலும், இருந்தாலும் அவளுடைய இடம் அவனருகேயே. அவனே இவ்வுலகை விட்டுச் சென்றதன் பின்னர் அவளிருக்க வேண்டிய இடம் இந்த பூமியல்ல. அதுவும் தன்னந்தனியாக இருக்க முடியாது. ருக்மிணி ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள்.

அதோ, கோவிந்தன் மேலுலகில் இருந்து என்னை அழைக்கிறான். எனக்காகக்காத்திருக்கிறான். அவனுடைய அன்பை வேண்டிப் பல பெண்கள் அவன் காலடியில் விழுந்தனர். ராதை, விஷாகா, ஆசிகா, ஷாயிபா. எனப் பல பெண்கள். எனினும் அவன் அவளையே தன் மணமகளாய்த் தேர்ந்தெடுத்திருக்கிறான். அவளை மட்டுமே. அவள் இந்த பூமியில் ஒரு சாதாரண மானுடனுக்கு மானுடப் பெண்ணாகவே பிறந்தாள்; ஆனால் கிருஷ்ண வாசுதேவன் அவளை ஒரு தேவதையாக அனைவரும் வணங்கும் தெய்வமாக ஆக்கி விட்டான். அவனைப் பொறுத்த வரையில் அவள் ஒரு தெய்வம் என்றார்களே. ஆகவே நான் அப்படியே வாழ்ந்து அப்படியே மறைந்தும் போய்விடுகிறேன். இறந்தாலும் கிருஷ்ண வாசுதேவனின் நிச்சயிக்கப்பட்ட மணமகளாக அதனால் ஏற்பட்டிருக்கும் தெய்வீகத் தன்மையோடு ஒரு தெய்வீகப் பெண்ணாகவே இறப்பேன்.

Thursday, December 1, 2011

தூண்டிற் புழுவினைப் போல எனது நெஞ்சந் துடித்ததடீ!

என்னதான் தன் உள்ளத்து அன்பை எல்லாம் கொட்டிக்கண்ணனுக்குக் கடிதம் அனுப்பினாலும் ருக்மிணி இன்னமும் தான் தனித்துவிடப்பட்டதாயும், தனக்கு உதவ யாருமே இல்லை எனவும் நினைத்தாள். அவள் அனுபவித்த தனிமை அவளைக் கொன்று தின்றுவிடும்போல் ஆனது. செய்வது என்னவெனப் புரியாமல் அவள் ஷாயிபாவின் துணையை நாடத் தீர்மானித்தாள். உடனே ஒரு கடிதம் எழுதி ஷாயிபாவுக்கு அப்லவன் மூலம் கொடுத்து அனுப்ப நினைத்தாள். கரவீரபுரத்தின் ஷாயிபாவுக்கு ருக்மிணி கீழ்க்கண்டவாறு எழுதினாள்.

"ஷாயிபா, என் அருமைச் சகோதரி, உன் இளைய சகோதரியான குண்டினாபுரத்தின் இளவரசி, பீஷ்மகனின் மகள் ஆன ருக்மிணி எழுதிக்கொண்டது,"

"அக்கா, என் அருமை அக்கா! என்னைச் சுற்றி இருள் சூழ்ந்துவிட்டது. சூரியனின் கிரணங்கள் என் மீது இனிப் படவே படாது என நான் அஞ்சுகிறேன். நான் இங்கே தன்னந்தனிமையாக நாட்களைக் கழிக்கிறேன். உதவவும் எவரும் இல்லை. அக்கா, என் அருமை அக்கா, என் வாழ்க்கையே பாழாகிவிட்டது. இப்படி ஒரு கடுமையான சூழ்நிலையில் என்னருகே இருந்து எனக்கு ஆறுதல் சொல்லவோ, அன்பு காட்டவோ, இன்முகத்தோடு சில சொற்களைப் பேசி என்னைத் தேற்றவோ எவருமே இல்லையே! நம்பிக்கை என்னும் சூரியன் இருக்கும் திசை நோக்கி என்னை வழிநடத்த எவரும் முன்வரவில்லை. கவிந்து கிடக்கும் இந்த இருளினால் போகவேண்டிய திசையும் எனக்குப் புரியவில்லை. அக்கா, அக்கா, மரணத்தின் நகரத்துக்கு நான் செல்ல விரும்புகிறேன். ஆனால் அங்கேயும் நான் செல்கையில் எனக்காகத் துயரப்படுபவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்."

"எவ்வளவு விரைவில் உன்னால் வர இயலுமோ அவ்வளவு விரைவில் நீ புறப்பட்டு இங்கே வா. அக்கா! அந்தக் கண்ணன், கோவிந்தன், வாசுதேவ கிருஷ்ணனின் பெயரால் ஆணையிட்டு உன்னை இங்கே அழைக்கிறேன். மயில் பீலிகளைச் சூடிக்கொண்டிருக்கும் அவனையும், அவனின் சிரிக்கும் கண்களையும், மலர்ந்த முகத்தையும் நினைத்துக்கொண்டு உருகும் என்னைக் காக்க உடனே கிளம்பி வா. அக்கா, அக்கா, ஒரு ரகசியம் சொல்லட்டுமா? எனக்குத் தெரியும். உன்னுடைய உயிரும் அவனிடமே உள்ளது. நீயும் அவனிடம் உன்னை ஒப்புக் கொடுத்துவிட்டாய் என்பதை நான் அறிவேன். அவன் தான் நம் வாழ்க்கையின் ஒளி விளக்கு என்பதையும் நான் அறிவேன். அவன் பெயரால் மீண்டும் உன்னை இங்கே அழைக்கிறேன். கிளம்பி வா அக்கா. உன்னையே எதிர்பார்க்கும்,"

அபலை ருக்மிணி.

அப்லவன் இந்தச் செய்தியை எழுதி வாங்கிக் கொண்டால் எப்படியானும் மாட்டிக் கொள்வோம் என நினைத்து மனப்பாடம் செய்து கொண்டு ஓலையைக் கிழித்து எரித்துவிட்டான். கரவீரபுரத்திற்குச் செல்வதையும் வெளியே சொல்லாமல் சாதாரணமாகக்கிளம்பிக் காட்டு வழியில் காவீரபுரத்தை நோக்கிப் பயணம் ஆனான். சில நாட்கள் கழிந்தன. ஒரு மாபெரும் அடி விழுந்தது ருக்மிணிக்கு. ஷ்வேதகேதுவிடமிருந்து செய்தி வந்தது. ஏன் வந்தது?

குண்டினாபுரத்தின் இளவரசி ருக்மிணிக்கு,

"குரு சாந்தீபனியின் முதன்மை சீடன் ஆன ஆசாரிய ஷ்வேதகேது சகல செளபாக்கியங்களையும், ஆசீர்வதித்து எழுதுவது. தாயே, மூன்று உலகங்களும் தகர்ந்து தூள்தூளாகிவிட்டனவே! தர்மம் சுக்கு நூறாகக் கிழித்து எறியப்பட்டுவிட்டது அம்மா. சூரிய, சந்திரர்கள் தங்கள் கடமையைச் செய்யவென்றே உதிக்கின்றனர் போலும்."

"தாயே, கிருஷ்ண வாசுதேவன், காலயவனன் என்னும் பிசாசு அரசனால் கொல்லப்பட்டான் என்ற செய்தி கிடைத்திருக்கிறது. அம்மா, கடைசியில் ராகு , சூரியனை விழுங்கியே விட்டான் போலும். இப்படியும் நடக்குமா? கிருஷ்ணனுக்காக அழுது அழுது எங்கள் நாட்கள் கடக்கின்றன. தாயே, இனி அழுவதிலும் பிரயோசனமே இல்லை; அவன் ஒரு நாளும் திரும்பி வரப்போவதில்லை. அவனுக்காகக்காத்துக் காத்து எங்களுக்கு அலுத்துவிட்டது. அம்மா, அவன் இறந்தவர்கள் இருக்க வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்துவிட்டான். நம் வாழ்க்கையின் நம்பிக்கை என்னும் ஒளி விளக்கு நிரந்தரமாக அணைந்து போய்விட்டது."

"இளவரசி, உன் தைரியத்தை இழந்துவிடாதே; அக்ஷயத்ரிதியை அன்று சுயம்வரம் எனக் கேள்விப் பட்டேன்; அன்று உன்னை நான் எப்படியேனும் சந்திப்பேன். அம்மா, நீ என்ன சொல்கிறாயோ அது எனக்குக் கட்டளை. அதன்படியே நடப்பேன். அம்மா, கிருஷ்ணன் என்னில் பாதியாக இருந்தான். வாழ்ந்தான், அவன் உண்மையாகவே என்னைப் பொறுத்தவரை அந்தப் பரவாசுதேவனே தான். சந்தேகமே இல்லை."

ருக்மிணி உடைந்து போனாள். இனி அவள் வாழ்வதில் அர்த்தமே இல்லை. எங்கே சென்று யாரிடம் எவ்விதமான அறிவுரையைப் பெறுவது என்றும் புரியவில்லை. நம்பிக்கை இழந்த ஒரு நடைப்பிணமாகக் கண்களில் உறைந்த கண்ணீருடன் அவள் மாளிகையில் அங்குமிங்கும் இலக்கின்றி அலைந்தாள். மாக மாசமே உறைந்துவிட்டதோ என்னும்படி ஒவ்வொரு நிமிடமும் அவளுக்கு ஒரு யுகமாய்க் கடந்தது. ஆயிற்று, பால்குனி மாதம் பிறந்துவிட்டது. சில நாட்களில் வசந்தம் வந்துவிடும். அவள் வாழ்க்கையில்??

வசந்தம் வருமா?

Wednesday, November 30, 2011

கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை!

ஏழு வருடங்களுக்கு முன்னர் வந்த ஒரு சரத் ருதுவில் என் பதின்மூன்று வயதில் உங்களை முதன்முதல் பார்த்தேன். அப்போதே ஜன்ம ஜன்மாந்திரங்களுக்கும் நீ என்னுடைய துணைவனாக வந்திருக்கிறாய்; இனி வரும் ஜன்மங்களிலும் தொடர்ந்து துணையாக வருவாய் எனப் புரிந்துவிட்டது எனக்கு. என்னை அப்போதே, அன்றே, அந்த நிமிடமே உன்னிடம் ஒப்புக் கொடுத்துவிட்டேன் நான்.


நான் விழித்திருந்தாலும், தூக்கத்திலும், என் கனவுகளிலும், நனவுகளிலும் என் முன்னே தெரிவது உங்கள் உருவம் தான். நான் உங்களுடையவள் என்பதை ஒரு நாளும் மறக்கவில்லை. அதே போல் நீங்களும் என்னுடையவர் என்பதையும் மறக்க மாட்டேன். ராக்ஷசனும், கொடுங்கோலனுமான ஜராசந்தனால் சுயம்வரம் வைசாக மாதம் அக்ஷயத்ரிதியை அன்று என நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. என் பிரபுவே! எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லையே! நான் என்ன செய்வேன்!


என் எதிரே எந்த வழியும் புலப்படவில்லை. மணந்தால் வாசுதேவ கிருஷ்ணனின் மனைவியாக ஆகாசவாணி, பூமாதேவி சாட்சியாக மணக்க விரும்புகிறேன். எனக்கு வேறெதுவும் தேவையில்லை. நான் ஏற்கெனவே உம்மை என் பதியாக வரித்துவிட்டேன். என் தேவனே! வா, வந்து என்னை ஆட்கொள்வாயாக! உன்னுடைய கருடக் கொடியைப் பறக்கவிட்டுக்கொண்டு உன் ரதத்தில் கிளம்பி வருவாய்! இந்த மடலைக் கண்டதும் சற்றும் தாமதிக்காதே! தாயைப் பிரிந்த பசுங்கன்று எவ்வாறு துடித்துக் கதறுமோ அப்படி உனக்காக நான் கதறுகின்றேன்.


என் தலைவா, நீ வரும் வேளையில் நான் உயிருடன் இருந்தால் என்னை உன்னுடன் அழைத்துச் சென்று மணம் புரிந்து கொள். அல்லது….அல்லது……. விதிவசத்தால் … உன்னுடைய வருகை தாமதம் ஆனால், என்னுடைய உயிரற்ற உடலை நீ தான் எடுத்துச் சென்று தகனம் செய்ய வேண்டும். அந்தச் சாம்பலை நீ வசிக்கும் துவாரகை நகரெங்கும் தூவிவிடு. இது என் வேண்டுகோள்.

ருக்மிணி மேற்கண்ட கடிதத்தைத் தன் கண்ணீரால் எழுதி ஜாஹ்னுவிடம் கொடுக்க அவனும் அதை எடுத்துக்கொண்டு அவந்திக்கு விரைந்தான்.

Tuesday, November 29, 2011

கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ! காற்றில் கரைவேனோ!

ஆனாலும் ருக்மிணியின் மனம் அலை பாய்ந்தது. யாதவர்கள் அனைவரும் காடுகளையும், மலைகளையும், பாலைவனத்தையும், நதிகளையும் கடந்து செளராஷ்டிரக் கடற்கரைக்குச் சென்றிருப்பார்களா? கிருஷ்ணன்? அவனுக்கு என்னவாகி இருக்கும்? பத்திரமாகத் தானிருப்பான். ம்ம்ம்ம்?? அல்லது வழியில் ஏதேனும் நிகழ்ந்துவிடுமோ? கார்த்திகை மாதம் போய் தனுர் மாதம் எனப்படும் மார்கழி மாசமும் வந்துவிட்டது. ஆனால் கண்ணனைக் குறித்தோ யாதவர்களைக்குறித்தோ தகவல்கள் எதுவும் வரவில்லை. பெளஷ மாசம் என்றழைக்கப்படும் தை மாசமும் பிறந்துவிட்டது. ஒன்றுமே தெரியாமல் இருந்தது. தை மாத நடுவில் ஒரு செய்தி வந்து சேர்ந்தது. அதைக் கேட்டதும் ஏன் செய்தி வந்தது என ஆகிவிட்டது ருக்மிணிக்கு. மனமும் உடலும் பதறித் துடித்தது. ஆனால் அப்போதும் கொஞ்சம் ஆறுதலான செய்தியாகவும் இருந்தது. ஜராசந்தன் காலியாக இருந்த மதுரா நகரைக் கண்டதும் ஆத்திரம் தாங்க முடியாமல் நகரைத் தீ வைத்துக் கொளுத்திவிட்டானாம். நகரமே எரிந்து சாம்பலாகி விட்டதாம். போகட்டும்; நல்லவேளையாக யாதவர்கள் எவரும் இல்லை. அவர்களைப் பற்றிய எந்தச் செய்தியும் கிட்டவும் இல்லை. செய்தி இல்லாததும் நன்மைதான். ஒன்றும் வரவில்லை எனில் எல்லாரும் க்ஷேமம் எனத் தானே அர்த்தம். ருக்மிணி தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள்.

எதிர்பார்ப்பு, அதனால் விளந்த ஏமாற்றம், நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையே ஊசலாடும் மனம் என ருக்மிணி படாத பாடு பட்டாள். சுவ்ரதா முன்போல் இப்போது நட்போடு பழகுவதில்லை. ருக்மிணிக்குச் சுயம்வரம் நடக்கப் போகிறது என்ற போது அவள் ருக்மிணிக்கு உறுதுணையாக இருந்தாள். ஏனெனில் அந்தச் சுயம்வரம் நடந்திருந்தால் ஜராசந்தனின் பேத்தியை ருக்மி திருமணம் செய்து கொண்டு அவளுக்குப் பிறக்கும் மகனைத் தன் அடுத்த பட்டத்துக்கு வாரிசாக நியமித்திருப்பான் இப்போதோ சுயம்வரமே நடக்கவில்லை; அதோடு ஜராசந்தனும் முன்னைப் போல் இப்போது ருக்மிக்குத் தன் பேத்தியைக் கல்யாணம் செய்து கொடுக்கும் ஆர்வத்தோடு இல்லை. ஆகவே ருக்மிணியின் துணை அவளுக்கு இப்போது தேவையில்லை. இப்போது அவள் செய்யக் கூடியது ஒன்றே ஒன்று தான். எப்பாடுபட்டாவது ருக்மியை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி ருக்மிணியோடு பேச்சு, வார்த்தை வைத்துக்கொள்ளாமல் இருப்பதே! சற்றும் தயக்கமின்றி ருக்மிணியோடான தன் உறவை முறித்துக்கொண்டுவிட்டாள் சுவ்ரதா.

பாட்டனார் கைசிகனைப் பற்றிக்கேட்கவே வேண்டாம். அவருக்குக் கிருஷ்ணன் மேல் இருந்த நம்பிக்கை தளர்ந்துவிட்டது. அவரே தன்னிரக்கத்திலும், சுய பச்சாத்தாபத்திலும் வெந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ருக்மிணிக்கு ஆறுதல் சொல்வது எவ்வாறு! கிருஷ்ணன் வரவும் மாட்டான்; ருக்மிணியைக் காப்பாற்றவும் மாட்டான். அதெல்லாம் நடவாத காரியம். தன்னந்தனியாக வேதனைப்பட்டுக்கொண்டிருந்த ருக்மிணியின் வேதனையை அதிகரிக்கும் வண்ணம் சக்கரவர்த்தி ஜராசந்தன் ஒரு செய்தியை அனுப்பி இருந்தான். எப்பாடு பட்டேனும் ருக்மிணியின் சுயம்வரம் நடந்தே தீர வேண்டும். சிசுபாலன் தான் மாப்பிள்ளை; வேறு எவரும் இல்லை. வைசாக மாதத்தின் (நமக்கெல்லாம் சித்திரை) பெளர்ணமியும் அக்ஷய த்ரிதியையும் ஆன சுபநாள் அன்று இந்தச் சுயம்வரம் நடந்தே தீர வேண்டும். அதோடு இல்லாமல் சுயம்வரத்திற்கு அழைக்கப்பட வேண்டிய நபர்களை ஜராசந்தன் பட்டியலிட்டு அனுப்பி இருந்தான். அவர்களுக்கு மட்டுமே உடனடியாக அழைப்பு அனுப்பப்படவேண்டும். மதுராவின் சர்வநாசத்தை நிச்சயமாகக் கண் குளிரப் பார்த்துவிட்டு மகதம் திரும்பும் முன்னர் ஜராசந்தன் ருக்மிணிக்கும், சிசுபாலனுக்கும் நடைபெறப் போகும் திருமணத்தில் முக்கிய விருந்தாளியாக இரு தரப்புப் பெற்றோரின் அழைப்பை ஏற்றுக் கலந்து கொள்வான்.

இதே போன்ற செய்தி; சர்வ நிச்சயமாக நடக்க வேண்டும் என்ற குறிப்போடு சேதி நாட்டரசன் ஆன தாம கோஷனுக்கும் அனுப்பப் பட்டிருந்தது. பீஷ்மகனைச் சந்தித்து செய்தியைக் கொடுக்க வந்திருந்த தூதுவன் அதை நிச்சயம் செய்தான். ஜராசந்தன் தன்னுடைய கட்டளைகள் இறுதியானவை என்று தெரிவித்துவிட்டான். வேறு தப்பிக்கும் வழியோ, வேறு ஆலோசனைகளோ பீஷ்மகனுக்கோ, தாமகோஷனுக்கோ இருக்கக்கூடாது என்பதையும் மறைமுகமாய்ச் சுட்டி இருந்தான். இந்தச் செய்தியை அரசவையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ஒரு சேடிப் பெண் ருக்மிணிக்கு வந்து சொன்னாள். தன் தலையில் அடித்துக்கொண்டாள் ருக்மிணி. தன் உதடுகளை ரத்தம் வரும்வரை அழுந்தக் கடித்துக்கொண்டாள். எதிர்காலமே சூன்யமாய்த் தெரிந்தது அவளுக்கு. நம்பிக்கையின் ஒரு சிறு கீற்றுக் கூடக் காணமுடியவில்லை. யாதவர்களைக்குறித்தோ, கண்ணனைக் குறித்தோ எந்தத் தகவலும் இல்லை. கண்ணன் வந்து என்னைக் காப்பானா? ருக்மிணியின் மனதில் நம்பிக்கை என்பதே இல்லை. மரணம்! ஆம் , எனக்கு மரணம் ஒன்றே நிச்சயிக்கப்பட்டுள்ளது.

ஆனால்..ஆனால்… அந்த கோவிந்தன் அதிசயங்களை நிகழ்த்துபவனே! அனைவரும் கூறுகின்றனர். அவன் ஒரு கடவுள் எனவும் சொல்கின்றனர். இதைக் கேட்டுக் கேட்டு ருக்மிணியும் கண்ணனைக் கடவுள் என்றே நம்பத் தொடங்கி விட்டாள். யாருக்குத் தெரியும்! கடைசி நிமிடத்தில் கூடக் கண்ணன் திடீரெனத் தோன்றி அவளைக் காக்க முடியும். ருக்மிணிக்கு ஒரு கணம் மனதில் சிறிதளவு நம்பிக்கை ஏற்பட்டது. அடுத்த கணம் உள்ள நிலையை உள்ளபடி உணர்ந்து கொண்டிருக்கும் புத்திசாலிப் பெண்ணான அவளுக்குத் தான் காண்பது கனவு என்றும் முட்டாள் தனமாகச் சிந்திக்கிறோம் என்பதும் புரிந்தது. செளராஷ்டிரக் கடற்கரையை நோக்கிப் பயணித்த யாதவர்களுக்கு என்ன ஆனது என்பது யாருமே அறியாத ஒன்றாக இருந்தது. அதுவும் என்னவோ தொலைதூரத்தில் உலகத்தின் இன்னொரு கோடியில் இருப்பது போல் அல்லவா இருக்கிறது! யோசித்த ருக்மிணி ஜாஹ்னு மூலம் கண்ணனுக்குச் செய்தியை அனுப்ப நினைத்தாள். அவன் ஆசாரிய ஷ்வேதகேதுவிடம் அதைச் சமர்ப்பிக்கட்டும். அவர் எப்படியேனும் கண்ணன் பார்வைக்குக் கொண்டு சென்றுவிடுவார். தன் மனதைக் கொட்டி எழுத ஆரம்பித்தாள் ருக்மிணி.

“யாதவர்களுக்குக் கடவுளானவனும், மாட்சிமை பொருந்திய வாசுதேவக் கிருஷ்ணனுக்கு,

குண்டினாபுரத்தின் இளவரசி ருக்மிணி, தலை வணங்கி நமஸ்கரித்து எழுதும் மடல்.”

Monday, November 28, 2011

என் மனம் மிக அலை பாயுதே, கண்ணா!

தங்களை மறந்து பஜனையின் ஒன்றிப் போயிருந்த மூவருக்கும் தூக்கிவாரிப் போட்டது. மூவரும் திரும்பிப் பார்க்கத் திரிவக்கரையின் கைகளில் வைத்திருந்த பூஜைப்பொருட்கள் அடங்கிய தாம்பாளம் “கணீர்” என்ற ஓசையோடு கீழே விழுந்து, “டங்ங்ங்ங்ங்” என்ற நாதத்தை எழுப்பிய வண்ணம் சுற்றிச் சுழன்றது. தன் கண்களைத்துடைத்த வண்ணம் ஓடோடி வந்த திரிவக்கரை கண்ணனின் எதிரில் நின்று கொண்டு அவனை உற்றுப்பார்த்துவிட்டு மீண்டும் தன் கண்களைத் துடைத்துக்கொண்டு அப்படியே அவன் கால்களில் விழுந்தாள். “கண்ணா, கண்ணா!” அவளால்ல் மேலே பேச முடியவில்லை. அவளைத்தூக்கக் கண்ணன் முயன்றான்; அதற்குள்ளாக அவன் தாயும், அக்ரூரரும் கண்ணனின் அருகில் வந்தனர். இத்தனை நாட்களில் தேவகி அம்மா இளைத்து உருமாறிப் போயிருந்ததோடு அல்லாமல், மூப்படைந்த மாதிரியும் காணப்பட்டாள். அழுது அழுது கண்கள் சிவந்து வீங்கிக் காணப்பட்டன. தன் கண்களையே நம்பாதவள் போல் கண்களை அகல விரித்துக் கண்ணனையே பார்த்தாள். அன்னையின் அருகே சென்ற கண்ணன், “அம்மா,அம்மா,” என மீண்டும் அழைத்தான். “என் கண்ணா, என் கோவிந்தா, என் கிருஷ்ணா!” தேவகியால் மேலே பேசமுடியாமல் ஆனந்த அதிர்ச்சியின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் அப்படியே மயங்கி ஒரு குவியலாகக்கண்ணனின் காலடியில் வீழ்ந்தாள். தன் அன்னையைத் தன் இரு கைகளால் தூக்கிய கிருஷ்ணன், ஒரு குழந்தையைத் தூக்குவது போன்ற அதி தீவிர கவனத்தோடு அவளை எடுத்துக்கொண்டு மாளிகையின் உட்புறம் நுழைந்தான்.
***********************************************************************************************


பல மாதங்கள் பிரிந்த பெற்றோருடன் கண்ணன் பேசிக் களித்து ஆசுவாசம் செய்து கொள்ள விட்டுவிட்டு நாம் இப்போது ருக்மிணியைக் கவனிப்போம். ஆம்; ருக்மிணி என்னவானாள்? அவள் நிலை இப்போது சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆகவே வெகு கவனத்தோடு வாருங்கள். இதோ விதர்ப்பா! ருக்மிணியின் கன்னிமாடம். யாரோ சேடிப் பெண் வந்து ருக்மிணியின் காதுகளில் ஏதோ கிசுகிசுக்கிறாளே! என்னவாயிருக்கும்?? கொஞ்சம் கிட்டே போய்க் கேட்கலாமா? செய்தி அப்படி ஒன்றும் நல்லதில்லை போலிருக்கிறதே! ஆம்.

ருக்மிணியின் மனம் நொறுங்கும்படியான செய்தி தான் வந்துள்ளது. சக்கரவர்த்தி ஜராசந்தன் மதுராவை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறான். மதுராவை நெருங்கிவிடுவான். மதுராவையும் அதன் குடிகளையும் சாம்பலாக்கும்வரை விடப்போவதில்லை என்று சபதம் செய்திருக்கிறானாம். செய்தி கேட்ட ருக்மிணியால் அதன் பாரம் தாங்கவே முடியவில்லை. மயங்கிக் கீழே விழுந்தாள். அதோடு ஜராசந்தன் தன்னுடைய அணியில் இருக்கும் அரசர்களையும், இளவரசர்களையும் இந்த மாபெரும் சாதனையைத் தான் தனியாகவே செய்ய விரும்புவதாயும் யாரும் உதவிக்கு வரவேண்டாம் எனவும் திட்டவட்டமாய்க் கூறிவிட்டான். ருக்மியும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தான் . தானும் இந்த யுத்தத்தில் கலந்து கொள்ளலாம் எனக் காத்திருந்தான். ஆனால் ஜராசந்தன் அவனை வரக் கூடாது எனத் திட்டவட்டமாக மறுத்து நிறுத்திவிட்டான். “இம்முறை எந்தக் குழப்பமும், நாடகமும் இருக்காது; இருக்க விட மாட்டேன். நானே தன்னந்தனியாக என்னுடைய பழைய தாக்குதல் முறையைக் கடைப்பிடித்து, கொஞ்சம் கூடக் கருணை காட்டாமல் அந்த யாதவக் கூட்டத்தை ஒரு புழுவை நசுக்குவது போல் நசுக்கிக் காட்டுகிறேன். நான் எவ்வளவு கொடூரமானவன் என்பதை அவர்கள் அப்போது புரிந்து கொள்வார்கள்.” ஜராசந்தனின் எண்ணம் இதுவே.


இதைக் கேட்டதிலிருந்து தடுமாறிய வண்ணம் நாட்களைக் கடத்திய ருக்மிணிக்கு இன்னமும் மோசமான செய்தியும் வந்து சேர்ந்தது. காலயவனனும் ஜராசந்தனோடு கூட்டுச் சேர்ந்துவிட்டானாம். இன்னொரு திசையிலிருந்து கண்ணனைத் தாக்கப் புறப்பட்டுச் செல்கிறானாம். ஆஹா, இந்தக் காலயவனனின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் பற்றியும், கொலைகள் பற்றியும் பலரும் பலவாறு கூறுவரே. இம்முறை கண்ணன் அடியோடு ஒழிந்தான். கண்ணன் என்ன! யாதவர்களே ஒழிந்தார்கள். ருக்மிணியால் தன் மனத்தின், யோசனையின் பாரம் தாங்க முடியவில்லை. நேரே தன் பாட்டனிடம் சென்று தன் மனதில் உள்ளவை அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள். கைசிகன் ஏற்கெனவே வயதானவர். தற்சமயம் அவரால் செய்ய முடிவது எதுவுமில்லை. அவருக்கே கண்ணன் தப்ப முடியும் என்ற நம்பிக்கை வரவில்லை. ருக்மிணிக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. இரவு, பகல் கண்களை மூடினால் தூக்கம் வரவில்லை. கோவிந்தனின் சிரித்த முகம், மயில் பீலி அசைந்தாட சிரிக்கும் கண்களோடு அவன் பேசுவதும் தான் கண் முன்னே தோன்றுகிறது. அப்புறம் உறங்குவது எங்கனம்? அழுதாள் ருக்மிணி. சில சமயம் சிரித்தாள். தன் முன்னே தோற்றமளித்த கோவிந்தனோடு பேசினாள். அவனைக் கவனமாக எச்சரிக்கையோடு இருக்கச் சொன்னாள். கண்ணீர் விட்டாள். கிட்டத்தட்ட பைத்தியம் போல் நடந்து கொண்டாள் ருக்மிணி.


கார்த்திகை மாத ஆரம்பம். ஆசாரிய ஷ்வேதகேதுவின் முக்கிய சீடர்களான அப்லவனும், ஜாஹ்னுவும் ஷ்வேதகேதுவின் செய்தியை எடுத்துக்கொண்டு குன்டினாபுரம் வந்து சேர்ந்தனர். ஆசாரிய ஷ்வேதகேது இப்போது அவந்தியில் குரு சாந்தீபனியின் ஆசிரமத்தில் இருப்பதாகவும் கைசிக அரசருக்கும், ருக்மிணிக்கும் செய்திகளை அனுப்பி இருப்பதாகவும் கூறினார்கள். ஆவலுடன் கேட்டாள் ருக்மிணி. கண்ணன் யாதவர்களைக் குடும்பங்களோடு அழைத்துக்கொண்டு மேற்கே கடற்கரையோரம் தொலைதூரத்தில் இருக்கும் செளராஷ்டிராவை நோக்கிப் பயணிக்கிறானாம். மதுரா நகரை ஜராசந்தன் கைகளுக்குப் போய்ச் சேரும் வண்ணம் ஒப்படைத்துவிட்டு அவன் அனைத்துக்குடிமக்களையும் அழைத்துக்கொண்டு இடம் பெயர்ந்து செல்கிறானாம். மதுராவில் யாதவர்களின் ஒரு சின்னஞ்சிறு குழந்தை கூட இல்லையாம். மதுரா நகரை அதன் விதியின் கரங்களில் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறானாம். பல மாதங்களுக்குப் பின்னர் ருக்மிணியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

Thursday, November 24, 2011

தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்!

கண்ணனுக்கு இந்த விசித்திரமான சூழ்நிலை ஆச்சரியத்தைக் கொடுத்தது. தான் உயிரோடு இருக்கையிலேயே தன்னெதிரிலேயே தான் இறந்துவிட்டதற்கு துக்கம் அநுஷ்டிக்கும் தன் சொந்த மக்கள். இவர்கள் மனம் தான் எவ்வளவு துயரத்தில் ஆழ்ந்துள்ளது? தன்னிடம் எவ்வளவு அன்பும், பாசமும் இருந்தால் இந்த அளவுக்கு துயரம் அவர்களைத் தாக்கி இருக்கும்! ஆனால் ஒரு விஷயம். கடைசியாய் தான் அனுப்பி வைத்த செய்தி இளம் யாதவர்களைச் சென்றடைந்துவிட்டது. பலராமனும், உத்தவனும் இளைஞரக்ளின் துணையுடனும், விசுவாசத்துடனும் சரியாகவே அந்த வேலையைச் செய்து முடித்திருப்பார்கள். ஆனால்....... அவர்கள் ருக்மிணியைக் காப்பாற்றச் சென்றிருந்தால்?? தான் இருக்க வேண்டிய இடமும் அதுவன்றோ? கண்ணன் சிந்தனை வேகம் அதிகரிக்க அதிகரிக்க அவன் நடையின் வேகமும் அதிகரித்தது. வேக வேகமாய் அடிகளை எடுத்து வைத்துத் தன் தாய், தந்தையர் இருப்பதாய்ச் சொன்ன மாளிகையின் எதிரே வந்து நின்றான்.

வீட்டினுள் பலரும்போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருந்தனர். அவர்களில் அனைவரையுமே கண்ணன் நன்கறிவான். அவன் தகப்பனிடம் ஆலோசனை கேட்கவும், உதவிகள் கேட்கவும் வருவார்கள். அனைவருக்கும் வசுதேவரிடம் மாளாத மதிப்பும், விசுவாசமும் உண்டு. எல்லாம் சரி! ஆனால் அம்மா! தேவகி அம்மா! அம்மா என்ன செய்து கொண்டிருக்கிறாள்? வீட்டினுள்ளே கும்பல் கும்பலாகச் சென்று கொண்டிருந்த மனிதர்கள் பக்கத்திலுள்ள ஒரு கதவின் வழி சென்றதையும் ஒவ்வொரு முறை கதவு திறந்து மூடுகையிலும் வீட்டின் ஒரு பாகமே அங்கு கோயிலாக மாற்றப்பட்டிருப்பதையும், ஏதோ ஓர் சந்நிதி தெரிந்ததையும் கவனித்தான். அதோ! யாரோ ஒரு குண்டான அம்மாள்......ஓ, அது வேறு யாருமில்லை. கம்சாச் சித்திதான். உக்ரசேனத் தாத்தாவின் சொந்த மகளும் சித்தப்பா தேவபாகனை மணந்திருப்பவளும், உத்தவனின் தாயும் ஆவாள். ம்ம்ம்ம்...இவள் தானே ஒரு சமயம் என்னைக் கொல்ல நினைத்தாள்! பாவம்,பாவம் சித்தி கம்சா! மிக மிகப் பாவம். தன் மூன்று பிள்ளைகளில் ப்ருஹத்பாலன் ஒருவனுக்கே அவள் தன் அன்பையும் பாசத்தையும் காட்டி வளர்த்தாள். அவனுக்காக எதுவேண்டுமானாலும் செய்யத் தயாராயும் இருந்தாள்.

ம்ம்ம்ம்ம்... ப்ருஹத்பாலன் இப்போது எங்கே போயிருப்பான்?? பலராமனோடு விதர்ப்பா சென்றிருப்பானோ? அல்லது அவன் வழக்கம்போல் பயந்து ஒதுங்கி இருப்பானா? கண்ணன் மெல்லக் கொஞ்சம் நகர்ந்து முன் சென்று உள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்த ஒரு பெண்மணியிடம், தானும் உள்ளே சென்று அந்தக் கோயிலைக்காண விரும்புவதைத் தெரிவித்தான். தான் அப்போது உள்ளே செல்ல முடியுமா என்றும் கேட்டான். அந்தப் பெண்மணி அவன் செல்லலாம் என்று சொன்னாலும் அப்போது வழிபாடு முடிந்துவிட்டதாயும் தெரிவித்தாள். கண்ணன் தன் கரத்தை உயரே தூக்கி அவளை நமஸ்கரித்துவிட்டு மேலே சென்றான். அவளுக்கோ இந்தத் துறவியை எங்கோ பார்த்திருக்கிறோமே! எங்கே பார்த்திருக்கிறோம் என்ற சந்தேகம். அக்கம்பக்கம் கூட இருந்தவர்களிடம் இது குறித்துக் கேட்டாள். தெரிந்த முகமாய் இருக்கிறதே என யோசித்தாள். இன்னொருவனோ, இம்மாதிரியான துறவிகள் அடிக்கடி துவாரகைக்கு வருவதாய்க் கூறினார்கள். அவர்களில் எவரேனும் இருக்கலாம் என்றும் பேசிக்கொண்டனர்.

உள்ளே சென்ற கண்ணன் அனைவரும் அங்கிருந்து சென்றவுடன் தன் தாயை மட்டும் தனியாகச் சந்திக்க விரும்பிக் கதவருகே தயங்கி நின்றான். சுற்றும் முற்றும் பார்த்தான். அடுத்த அறையின் ஒரு கோடியில் ஒரு அழகானமேடையின் மேலே அலங்கரிக்கப்பட்ட ஒரு சிம்மாசனம்காணப்பட்டது. கண்ணனின் இதயமே தொண்டை வழியாக வெளியே வந்துவிடும்போல் அடித்துக்கொண்டது. தன் நெஞ்சத்தை அமுக்கியவண்ணம் கண்ணன் மேலும் கவனித்தான். அந்த சிம்மாசனத்தின் மேலே கண்ணனின் தலைக்கிரீடம், மயில்பீலிகள், அவன் அணியும் மாலைகள் புதிதாய்த் தொடுக்கப்பட்டவை, அவனுடைய ஆபரணங்கள், எல்லாவற்றுக்கும் மேல் அவனுடைய அருமையான சக்கரம், சுதர்சனம் என கோமந்தக மலையில் அவனால் தயாரிக்கப்பட்டுப் பெயரிடப்பட்ட சக்கரம், புண்யாஜனா ராக்ஷஸர்களிடமிருந்து கண்ணன் வெற்றி கொண்டு பெற்ற பாஞ்சஜன்யம் என்னும் சங்கு, எல்லாம் வைக்கப்பட்டு, அந்த சிம்மாசனத்தின் எதிரே அவனுடைய சொந்த வில்லான சார்ங்கம், அவனுடைய அருமை தண்டாயுதம், அவன் அதற்கு கெளமோதகி எனப் பெயரிட்டிருந்தான். அனைத்தும் வைக்கப்பட்டிருந்தன.

இந்த சிம்மாசனமும் இதில் அலங்கரிக்கப்பட்ட கண்ணனின் சொந்தப் பொருட்களும் அவன் நினைவாக இங்கே போற்றி வணங்கப் படுகின்றன என்பதையும், இந்த சிம்மாசனத்தை அவனுக்கே அர்ப்பணித்திருக்கிறார்கள் என்பதையும் கண்ணன் புரிந்து கொண்டான். அங்கே இருந்த பல பக்தர்களும் சென்றுவிட்டார்கள். இப்போது அந்த சிம்மாசனத்தின் அருகே மூன்று அல்லது நான்கு நபர்கள் காணப்பட்டனர். அவன் தாய் தேவகி, உத்தமரான அக்ரூரர், அவனுக்கு தாசியாகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட திரிவக்கரை, ஆகியோரின் குரலை அவனால் அடையாளம் காண முடிந்தது.

"ஹே கிருஷ்ண, கோவிந்த, ஹரே, முராரே
ஹே நாதா, நாராயணா, வாசுதேவா"
மேற்கண்ட பாடலை மூவரும் திரும்பத்திரும்பப் பாடினார்கள். எவ்வளவு நேரம் பாடி இருப்பார்களோ, தெரியாது. தேவகி அம்மாவிற்கு உணர்ச்சிகள் அதிகமாகி கண்ணன் நினைவில் தன் மனபாரம் அதிகமாகி மனம் உடைந்து சுக்குநூறாக ஆகிவிட்டாற்போல் தோன்ற ஓவென அழத்தொடங்கினாள். கிருஷ்ணனால் அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை.

"தாயே, நான் வந்துவிட்டேன்!"

Wednesday, November 23, 2011

கண்ணன் இறந்து விட்டானா? துவாரகையில் கலக்கம்!

துவாரகை நகரின் வெளியே கிரிநகர் மலைக்கோட்டையை நோக்கிச் செல்லும் பாதையில் நூற்றுக் கணக்கான குடியிருப்புக்கள் புதியதாய்க் காணப்பட்டன. அவற்றைப் பார்த்ததுமே மதுராவின் யாதவர்களுக்கான புதிய குடியிருப்புகள் தான் அவை எனப் புரிந்து கொண்டான் கிருஷ்ணன். அதிலும் அந்த வீடுகளின் வெளியே மேய்ந்து கொண்டிருந்த பசுக்களைக் கண்டதுமே புரிந்து கொண்டான் கண்ணன். இவை மதுராவின் பசுக்களே தான். அமைதியாகவும், நிம்மதியாகவும் மேய்ந்து கொண்டிருந்தன. ஒரு சிலர் அதற்குள்ளாக தங்களுக்கான நிலங்களைப் பங்கிட்டுக்கொண்டு உழுவதற்கும் தொடங்கி விட்டனர். நகரின் வெளியே செல்கையில் கிருஷ்ணன் அங்கே நிலவியிருந்த அசாதாரண அமைதியைக் கண்டு மிகவும் வியப்படைந்தான். அவனைக் கடந்து சென்ற அனைவருமே நடுவயதைத் தாண்டியவர்களாகவும், வயதானவர்களாகவுமே காணப்பட்டனர். இளைஞர்கள் அனைவரும் போருக்குச் சென்றிருக்க வேண்டும்.

சரி, இந்தப் பெண்களுக்கு என்னவாயிற்று? அனைவர் கண்களும் சோகக்கடலில் கண்ணீரில் மிதக்கின்றனவே! அனைவருமே கறுப்பு வண்ண ஆடை அணிந்து ஆபரணங்களை நீக்கிவிட்டுக் காணப்பட்டனர். யாதவர்கள் அனைவருமே ஏதோ பொதுவான துக்கம் ஒன்றை அனுசரிக்கின்றனர். அது என்னவாக இருக்கும்? கிருஷ்ணனால் புரிந்து கொள்ள இயலவில்லை. மெல்ல மெல்ல நகரினுள் சென்று மாளிகைகள் காணப்பட்ட திசையை நோக்கி நடந்தான். பல மாளிகைகளும் கட்டுமான வேலைகள் செய்யப்பட வேண்டிய நிலையில் காணப்பட்டன. சிலவற்றில் வேலை நடந்து கொண்டிருந்தது. ஒரு பெரிய மாளிகையின் முன்னால் நின்ற கண்ணன் உள்ளே யிருந்து எவரேனும் வருவார்களோ எனக் காத்திருந்தான். கொஞ்ச நேரத்தில் சில ஆண்களும், பெண்களும் ஏதோ புனித தரிசனத்திற்குச் சென்று வந்தாற்போல் பேசிக்கொண்டு அங்கே வந்தனர். ஒரு வயதான பெண்மணி கிருஷ்ணன் நின்று கொண்டிருந்த வீட்டை நோக்கி வந்தாள். அழுது அழுது அவள் கண்கள் சிவந்திருந்தன. அனைவருமே ஏதோ தாங்க முடியாத் துக்கத்தில் காணப்பட்டனர்.

கிருஷ்ணன் அந்தப் பெண்மணி ஷங்கு என்ற முன்னாள் தளபதியின் மனைவி எனப் புரிந்து கொண்டான். மதுராவின் கோட்டையின் பாதுகாவலனாக இருந்தவனே இந்த ஷங்கு. கண்ணனைப் பலமுறை தன் வீட்டிற்கு அழைத்துத் தன் கைகளால் உணவு படைத்திருக்கிறாள். அவளிடம் கண்ணன், "அம்மா, வசுதேவரின் வீடு எங்கே உள்ளது?" என்று கேட்டான். அவள் கண்ணனையே உற்றுப் பார்த்துவிட்டு, "இளம் துறவியே! அதோ அங்கே தெரிகிறது பார்! இந்தச் சாலையோடு நேரே சென்று வலப்பக்கம் திரும்பினால் வௌச்தேவரின் வீடு வரும். ஆனால் அங்கே இன்று நீ பிக்ஷைக்குச் செல்லாதே; அவர்கள் அனைவருமே மாபெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளார்கள். உனக்கு வேண்டிய பிக்ஷையை நான் இடுகிறேன். வா." என அழைத்தாள். தன்னுடன் வந்தவர்களையும் உள்ளே அழைத்த வண்ணம் அவர்களில் ஒருவரை உள்ளே வேகமாய்ச் சென்று வந்திருக்கும் துறவிக்கு உணவு படைக்க ஏற்பாடுகள் செய்யுமாறு கூறினாள்.

"ஓஓ, தாயே! ஏன் அப்படி? என்னவாயிற்று வசுதேவரின் வீட்டில்? யாரும் இறந்துவிட்டனரா?"

அந்தப் பெண்மணி அங்கேயே உட்கார்ந்த வண்ணம் கண்ணனோடு பேச ஆரம்பித்தவள் துக்கம் தாங்க முடியாமல் பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். சற்றே தன்னை சமாளித்துக்கொண்டு, அனைவரின் வீட்டிலும் துக்கம் அனுஷ்டிப்பதாய்க் கண்ணனிடம் கூறினாள். கண்ணனின் ஆச்சரியம் அதிகமானது. யுத்தத்தில் அனைத்து இளைஞர்களும் இறந்துவிட்டனரா என்று கேட்டான் கண்ணன். அவனால் ஊர்க்காரர்களை அனைவராலும் ஒருமித்து அனுசரிக்கப்படும் துக்கத்தின் காரணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தப் பெண்மணி பேச ஆரம்பித்தாள்.

"அனைவருமே ருக்மிணியை விடுவித்து அழைத்துவர விதர்பா சென்றார்கள். எங்கள் கண்ணின் கருமணியான கிருஷ்ணனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மணப்பெண் விதர்பாவின் இளவரசி ருக்மிணி. ஆனால் அவன் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டான். நாங்கள் அனைவருமே மனம் உடைந்துவிட்டோம். " கஷ்டப்பட்டுத் தன் விம்மலை அடக்கியவண்ணம் அவள் மீண்டும் பேச ஆரம்பித்தாள். "கடந்த இரு மாதங்களாக நாங்கள் அனைவரும் எங்கள் கண்ணீர் வற்றும்வரை அழுது தீர்த்துவிட்டோம். இனி எங்கள் கண்களில் கண்ணீரே இல்லை என்னும்படி அழுது முடித்தாயிற்று."

இப்போது கண்ணனுக்கே அழுகை வரும்போல் ஆயிற்று. தான் இறந்துவிட்டதாய் நினைத்து இவள் இவ்வளவு அழுகிறாளே என வருந்தினான். "என்ன ஆயிற்று கண்ணனுக்கு?" கூடியவரையிலும் தன் குரலில் மாற்றத்தைக் காட்டாமல் கேட்டான் கண்ணன். "ஓ, கண்ணனைப் போல் அற்புதமானவர்களே இல்லை; அருமையானவன்; எங்கள் கண்ணின் கருமணி போன்றவன்; எங்கள் பாதுகாவலன், எங்கள் கடவுள், எங்கள் உயிர் அவனே. " சொல்லிக்கொண்டே போனாள் அந்தப் பெண்மணி. "எங்களை எல்லாம் காப்பாற்ற வேண்டி மதுராவில் இருந்து துவாரகைக்கு அழைத்து வந்தான் கண்ணன். இந்த அற்புதமான பூமியைத் தேடிக் கண்டுபிடித்து எங்களைக் குடி வைத்தான். இவ்வளவும் செய்துவிட்டு அவன் காலயவனன் கைகளில் மாட்டிக்கொண்டு தன்னைத்தானே பலி கொடுத்துக்கொண்டுவிட்டான். "

அந்தப் பெண்மணியால் அழுகையை அடக்க முடியவில்லை. அவள் அழுத அழுகையில் மயங்கி விடுவாள் போல் ஆகிவிடக் கூட வந்திருந்த இரு இளம்பெண்களும் தங்கள் புடைவைத் தலைப்பால் விசிறிவிட்டு அவளை ஆச்வாசப்படுத்தினார்கள்.

"ஏதானும் கோயிலில் இருந்து வருகிறீர்களா என்ன?" என்று கேட்டான் கிருஷ்ணன்.

"ஆம்,, நாங்கள் கிருஷ்ணை வணங்கவென்றே ஒரு கோயிலைக் கட்டி இருக்கிறோம்." என்றாள் அந்தப் பெண்மணி. இந்த அசாதாரணமான நன்றியின் உயர்வைக் கண்டு கண்ணன் மனதைப் பிசைந்தது. அவளிடமிருந்து விடைபெற்று அங்கிருந்து நகர்ந்தான்.

Thursday, November 17, 2011

சித்தத்திலே சிவம் நாடுவார்!

"நாம் வாழும் விதத்தில் அதைப் பயனுள்ளதாய் ஆக்கலாம் ஐயா! இவ்வுலக வாழ்க்கையைத் துறக்காமலேயே அமைதியை அடையலாம். லக்ஷியத்தை அடையலாம், திருப்தியும் கொள்ளலாம்" கண்ணன் மிகப் பணிவோடு கூறினான். "நான் அவ்வாறே கண்டேன், கண்டிருக்கிறேன்; கண்டு வருகிறேன்." கண்ணன் மேலும் கூறினான். "எப்படி மகனே? எப்படி?" துறவி கேட்டார். "நம்மால் முடிந்த நன்மைகளை அவை சரியான பாதையில் தான் செய்கிறோமா எனத் தெரிந்து கொண்டு செய்தால் போதும்; சில சமயம் அதன் மூலம் புரியாமல் நமக்கு எதிர்ப்பும் வரலாம்; ஆனால் இதுவே நல்வழி எனத் தெரிந்து கொண்டால், தர்மம் இதுவே எனப் புரிந்து கொண்டால் அந்த வழியில் சென்றால் போதுமானது. அதன் விளைவுகள் எப்படி இருந்தாலும் எதிர்கொள்ளலாம். ஜயிக்கலாம்." கண்ணன் கூறினான்.

"அற்புதம் குழந்தாய்! அற்புதம்! நீ ஓர் அதிசயமான, அற்புதமான இளைஞன். நீ வாழ்க்கை அனுபவித்து வாழ்ந்து காட்டுகிறாய். அதிலே உயிர்ப்பையும் ஜீவனையும், மனமகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் கண்டு கொள்கிறாய். இந்தக் கோட்பாடும் புதியதாகத் தான் இருக்கிறது. ஏற்கக் கூடியதாகவும் உள்ளது. வித்தியாசமானதாயும் உள்ளது."

"ஆம் ஐயா, நான் அப்படி வாழவே பழகிக் கொண்டிருக்கிறேன்; முழு முயற்சிகளும் எடுக்கிறேன்." கண்ணன் கூறினான். அவனுக்கு அங்கிருந்து சென்று தன் கூட்டத்தாரோடு சேர்ந்து கொள்ளும் ஆவல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. அனைவரும் குஷஸ்தலை சென்றிருப்பார்கள். நாமும் அங்கே செல்லவேண்டும். ஆனால்... ஆனால்....... துறவியின் சீடர்கள் கீழே இறங்கிச் சமவெளிக்குச் சென்று பார்த்துவிட்டுக் காலயவனனின் ஆட்களின் நடமாட்டம் சமவெளிப்பக்கம் அதிகம் இருப்பதாயும் காலயவனன் இறந்துவிட்ட செய்தி அவர்களுக்குக் கிடைத்துவிட்டதாயும், அதற்குக் காரணமானவனைக் கொல்ல வேண்டி அவர்கள் காத்திருப்பதாயும் கூறுகின்றனரே. இந்தத் துறவியின் சீடர்கள் தினமும் அந்தப் பக்கம் போய்ப் பார்த்துப் புதுப் புதுத் தகவல்களைக் கூறுகின்றனர். ஆகவே செளராஷ்டிரக் கடற்கரைப் பக்கம் இப்போது செல்வது மிகவும் ஆபத்தாக முடியும். என்ன செய்யலாம்?

அவர்களுடைய தத்துவங்களில் இருந்து கண்ணனுக்குப் பல மாறுபாடான கருத்துக்கள் இருந்தன. என்றாலும் அவர்களின் யோக முறையை அவனும் கற்றுக்கொண்டான். சற்றும் நேரத்தை வீணாக்காமல் அவர்களுக்குத் தெரிந்தவைகளை அவனும் கேட்டுத் தெரிந்து கொண்டான். அவர்களைப் போலவே தலையை முண்டனம் செய்துகொண்டு, கையில் திரிசூலம் ஏந்தியவண்ணம், உடல் முழுதும் விபூதிச் சாம்பலைப் பூசிக்கொண்டு மஹாதேவனை நினைத்துக்கொண்டு மணிக்கணக்காய் தியானத்தில் அமர்ந்தான். இப்படிக் கண்ணன் தானாக அந்தச் சூழ்நிலைக்கு ஏற்பத் தன்னை மாற்றிக் கொண்டதைக் கண்ட மூத்த துறவி மிகவும் மனம் மகிழ்ந்தார். சில வாரங்கள் இவ்வாறு சென்றன. அந்த மூத்த துறவியும், அவரின் சீடர்களும் பிரபாஸ க்ஷேத்திரத்தில் இருந்த சோமநாதர் ஆலயம் சென்று அங்கே ஶ்ரீ மஹாதேவரின் தரிசனம் காண விரும்பினார்கள். ஆகவே அவர்கள் பயணத்திற்கு ஆயத்தம் செய்தனர். கண்ணனும் தன் விபூதிச் சாம்பல் பூசிய உடலுடனேயே கையில் திரிசூலம் ஏந்திய வண்ணம், "ஹர ஹர மஹாதேவா!" என கோஷமிட்டவண்ணம் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

பிரபாஸ க்ஷேத்திரத்தில் ஹிரண்ய நதி கடலுடன் சேரும் சங்கமத்தில் கண்ணன் புனித நீராடிக் கோயிலில் தன் தரிசனத்தை முடித்துக்கொண்டான். சோமநாத் கோயில் இருக்கும் நகரத்தில் சில நாட்களாக சப்தமில்லாமல் ஒரு கிளர்ச்சி நடைபெற்று வந்தது. ஆயிரக்கணக்கான யாதவத்தலைவர்கள் அங்கு வந்து கப்பல்களில் ஏறிக் கொண்டு தூரத்துத் தீவுகளுக்குச் சென்று ராணுவப் பாசறைகள் அமைத்து வீரர்களுக்கு ராணுவப் பயிற்சியும், ராணுவப் பிரசாரமும் செய்வதாகப் பேசிக் கொண்டனர். கண்ணனுக்குக் குழப்பமாக இருந்தது. குஷஸ்தலை வந்தடைந்ததுமே யாதவத் தலைவர்களுக்கு, அதுவும் இளம் தலைவர்களுக்கு இப்படிச் செல்லவேண்டியதன் அவசியம் என்ன? கண்ணனுக்கு உடனே குஷஸ்தலை செல்லவேண்டும் என மனம் துடித்தது. மூத்த துறவியைக் கண்டுத் தண் வணக்கங்களைத் தெரிவித்துவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு குஷஸ்தலை நோக்கித் தன் பிரயாணத்தைத் தொடர்ந்தான். இவ்வளவு நாட்களில் குஷஸ்தலையின் பெயர் மாறி துவாரகை என்னும் புதிய பெயரைப் பெற்றிருந்தது.

Wednesday, November 16, 2011

அறநீதி முறை வழுவாமலே எந்த நேரமும் பூமித் தொழில் செய்து!

மறுநாள் காலயவனனின் உடல் கண்டெடுக்கப்பட்டு தக்க மரியாதைகளுடனும், நியமங்களுடனும் கடைசிச் சடங்குகள் செய்யப்பட்டன. கிருஷ்ணன் இந்தத் துறவிகளின் வித்தியாசமான நடவடிக்கைகளைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான். அங்கே மூட்டப்பட்டிருந்த நெருப்பைச் சுற்றி அமர்ந்த வண்ணம் அவர்கள், "சம்போ மஹாதேவா!" என்னும் மந்திரத்தைப் பல மணிநேரம் உச்சரித்த வண்ணம் இருந்தனர். ஒருநாள் ஆவல் பொறுக்கமுடியாமல் கிருஷ்ணன் அந்தப் பெரிய துறவியிடம், "குருவே, இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து நீங்கள் வசிப்பதன் காரணம் என்னவோ?" என்று கேட்டுவிட்டான்.

அதற்கு அவர், "குழந்தாய், நாங்கள் இங்கே பல வருடங்களாக வசிக்கிறோம்." பழைய விஷயங்களை நினைவு கூரும் குரலில் அவர் தொடர்ந்தார். "ஏன், உன் தந்தை கூடப் பிறந்திருக்க மாட்டார். அதற்கும் முன்னரே நாங்கள் இந்தக் குகைக்கு வசிக்க வந்துவிட்டோம். இவை முசுகுந்தன் என்னும் அரசனின் தங்குமிடமாக இருந்து வந்தன. சத்ய யுகத்தில், இந்திரனுக்காக அவனுக்கு உதவி செய்யவெனப் போரிட்ட ஓர் உயர்ந்த மன்னனாம் அந்த முசுகுந்தன். இந்த குகைகளில் அவன் ஓய்வெடுக்க வந்து தங்குவானாம். இவை முசுகுந்தன் குகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. பல காலமாய் இங்கே தங்குவதால் மக்கள் என்னையும் "முசுகுந்தன்" என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர்."

"அப்படியா ஐயா, அது சரி, நீங்கள் ஏன் இவ்வளவு தனிமையான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?" கிருஷ்ணன் தொடர்ந்து கேட்டான்.

"மகனே, வாழ்க்கையும், மனிதர்களும் எனக்கு அலுத்துவிட்டனர். எவர்க்கும் பயனில்லாமல் ஒரு வாழ்க்கையை வாழும் இந்த மனிதர்களின் கேவலமான, கொடூரமான நடவடிக்கைகளைக் கண்டு வெறுத்துப் போய்விட்டேன். ஒரு காலத்தில் நான் ஓர் மாபெரும் தலைவனாக இருந்தேன். மனைவி, மக்கள், நண்பர்கள் என அனைவரும் உண்டு. அவர்களை எல்லாம் துறந்துவிட்டேன். அமைதியை நாடி இங்கே வந்துவிட்டேன். இங்கே அமைதி மட்டும் இல்லை; என்ன என்னவோ கிடைத்துவிட்டன." மிகவும் மகிழ்வோடு கூறினார் அந்தத் துறவி.

"குருவே, க்ஷமிக்கவேண்டும். வாழ்க்கை அதிலும் மனிதர்கள் வாழும் இல்வாழ்க்கையைப் பயனற்றது எனக் கூற முடியாது. " மறுத்துக் கூறினாலும் கிருஷ்ணன் குரலில் தெரிந்த விநயம் துறவியைக் கவர்ந்தது. "வாழ்க்கையை அதன்போக்கில் ஏற்றுக்கொண்டு, முழுமையாக, நல்ல வலுவோடும், ஆற்றலோடும், அழகோடும் அனுபவித்து சந்தோஷமாக வாழ்ந்து காட்டவேண்டும். விதியை மதியால் வெல்லவேண்டும். இது தான் இல்வாழ்க்கையின் உண்மையான தர்மம்." கண்ணன் முடித்தான்.

"மகனே, என் வயதுக்கு வருகையில் நீ வாழ்க்கை எவ்வளவு பயனற்றது! அதிலும் இல்வாழ்க்கையின் துன்பங்களைப் புரிந்து கொள்வாய். ஒருவேளை அப்போதும் நான் உயிரோடு இருந்தேன் எனில் நீ என்னைத் தேடி அலுத்துச் சலித்து வருகையில் நான் உன்னை முழு மனதோடு வரவேற்பேன். துன்பங்களும், துயரங்களும், ஏமாற்றங்களும் நிறைந்த வாழ்க்கையைத் துறப்பதே தர்மம் ஆகும்." துறவி முடித்தார்.

கண்ணன் விடவில்லை. "குருவே, மன்னியுங்கள். என்னால் இதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க முற்படுவது அவ்வளவு துயரம்; அதிலிருந்து தப்பிவிடவேண்டும்; என்கிறீர்கள். அதுதான் தர்மம் எனவும் கூறுகிறீர்கள். எனில் படைப்புக்கடவுள் ஏன் தொடர்ந்து தன் தொழிலைச் செய்து வருகிறான்?"

"நீ உன் வாழ்க்கையை எவ்வாறு வாழ்ந்து வருகிறாய், மகனே?"

"வருவதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன், குருவே. என்ன கிடைக்கிறதோ அதை ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் அதுவே என் தர்மம். அப்படி வாழ்வது தான் சிறப்பாகவும் தோன்றுகிறது எனக்கு."

துறவி சிரித்தார். அவர் குரல் வறண்டு காணப்பட்டது. எவ்வித உணர்ச்சியையும் காட்டாமலே அவர் கண்ணனிடம் மேலும் பேசினார்:" நீ இன்னும் உன் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கவே இல்லை, மகனே. நீ போகவேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கிறது. உனக்கு எவ்வித அனுபவமும் ஏற்படவும் இல்லை. உலகில் வாழ்வதன் கொடூரத்தை நான் கண்டு அனுபவித்தாற்போல் நீ பார்த்திருக்கவே முடியாது." அவர் மனதினுள் கிருஷ்ணன் மேல் அனுதாபம் ஏற்பட்டது. தவறான வழியில் இந்த இளைஞன் செலுத்தப்படுகிறானே எனப் பரிதாபப்படுபவர் போல் காணப்பட்டார். " உனக்கு அமைதி, சாந்தி, திருப்தி வேண்டுமானால் உலக வாழ்க்கையைத் துறந்துவிடு." என்றார் முடிவாக.

Monday, November 14, 2011

சீடனா வந்தெனைச் சேர்ந்தனன், தெய்வமே!

உள்ளே நுழைந்த காலயவனனின் கண்களுக்கு மஞ்சள் பீதாம்பரத்தைப் போர்த்திக்கொண்டு படுத்திருந்த உருவம் கண்களில் பட்டது. கிருஷ்ணன் தான் அங்கே வந்து படுத்துவிட்டான் என்றே எண்ணிய காலயவனன் தன் இடையில் மறைத்து வைத்திருந்த கூரிய கத்தியை வெளியே எடுத்தான். தூங்கிக் கொண்டிருந்த மனிதனிடம் ஒரே ஓட்டமாய் ஓடி அவனைக் காலால் எட்டி உதைத்து எழுப்பினான். "மோசக்காரா! வஞ்சகா!" கூவினான் காலயவனன். தூங்கிக் கொண்டிருந்த அந்த வயதான மனிதன் மெல்ல எழுந்தான். அவன் ஒரு பக்கத்துத் தோளில் காலயவனனின் கத்தி பட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அவன் தன் கண்களைத் திறந்தான். புருவம் கூட மஞ்சள் நிறமாக மாறிப் போய்க் காணப்பட்டது. அந்த மஞ்சள் நிற அடர்த்தியான புருவங்களின் கீழே காணப்பட்ட அவன் கண்கள் தீச்சுடரைப் போல் ஒளிர்ந்தன. அந்த மனிதனின் வயதுக்குச் சிறிதும் பொருத்தமின்றி அவன் இளைஞனைப் போல் துள்ளி எழுந்தான். காலயவனன் மேல் பாய்ந்தான். கத்தியைப் பிடித்திருந்த அவன் கையைத் தோளோடு சேர்த்து முறுக்கினான். தன் முழு பலத்தோடு அவனைக் குகையின் ஒரு மூலையில் சுவரோடு சேர்த்துத் தள்ளி நசுக்கினான். அங்கே அணையாமல் நீறு பூத்துக் கொண்டிருந்த நெருப்பில் அவனைத்தள்ளி அந்தச்சூட்டில் அவனை அழுத்தினான். சூடுதாங்காமல் காலயவனன் அலற ஆரம்பித்தான்.

காலயவனன் அலறிய அலறலில் குகைக்கு வெளியே இருந்து நான்கு நிர்வாணமாக இருந்த மனிதர்கள் ஓடோடி வந்தனர். அவர்கள் கைகளில் செம்பாலான கூரிய திரிசூலம் போன்றதொரு ஆயுதம் இருந்தது. அதைக் காலயவனன் மேல் வீசினார்கள். நாலாபக்கமிருந்தும் குறிதவறாமல் பாய்ந்த அந்தத் திரிசூலங்கள் காலயவனன் உடலில் பட்டு ரத்தம் கொப்பளித்தது. அவன் அப்படியே மயக்கமானான். அவன் உடலோ அந்தத் தீயில் பட்டு கருக ஆரம்பித்தது. நெருப்பில் வாட்டப்பட்ட காலயவனனின் நினைவு தப்பிய உடலைச் சற்றும் இரக்கமில்லாமல் மலையின் உச்சியிலிருந்து கீழே உருட்டி விட்டான் அந்த வயதானவன். கிருஷ்ணன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து அந்த வயதானவனை நமஸ்கரித்தான். அவன் ஒரு துறவி எனக் கிருஷ்ணன் எண்ணியது சரியாக இருக்கும் எனத் தோன்றியது அவனுக்கு. தன்னுடைய பீதாம்பரத்தைக் கிழித்து அந்த வயதானவன் கால்களில் பட்டிருந்த காயத்தைக் கட்டுவதற்கு முனைந்தான் கண்ணன்.

"ஹர ஹர மஹாதேவா!" தனக்குள்ளேயே சொல்லிக்கொள்வது போல் சொன்ன அந்த வயதானவன் கண்ணனைப் பார்த்து, " நீ யாரப்பா?" என வினவினான். "மாட்சிமை பொருந்திய குருவே, நான் கிருஷ்ண வாசுதேவன்." பதில் சொன்ன கண்ணன் தன் வேலையிலேயே கவனமாக அந்தக் கிழவனின் காயத்தைக் கட்டுவதில் முனைந்தான். "கிருஷ்ண வாசுதேவன்!" மீண்டும் தனக்குள்ளேயே முணுமுணுத்த அந்தக் கிழவன் எதையோ நினைவுக்குக் கொண்டுவர முயற்சித்தான். "பத்ரா! பத்ரா!" தன்னுடைய சீடர்களில் ஒருவனை அழைத்தவண்ணம் அவனிடம், "கிருஷ்ண வாசுதேவன்! வாசுதேவன்! எங்கே கேட்டோம் இந்தப் பெயரை? பத்ரா நினைவிருக்கிறதா உனக்கு?" என்று கேட்டான். " மரியாதைக்குரிய குருவே, இரண்டு வருடங்கள் முன்னர் நாம் பிரபாஸ க்ஷேத்திரத்துக்குச் சென்றபோது அங்கே மக்கள் அனைவருமே ஒரு பிரசித்திபெற்ற வீரக் கதாநாயகனைப் பற்றிக் கூறினார்கள்." பத்ரனும் கொஞ்சம் யோசனையோடேயே இருவருடத்துக்கு முன்னர் நடந்ததை நினைவில் கொண்டுவர முயற்சித்தான்.

"அங்கே தான் கேள்விப்பட்டோம். யமப்பட்டணத்துக்கே போய் யமனையே ஜெயித்துவந்தான் கிருஷ்ண வாசுதேவன் என்று கூறினார்கள். அதோடு... அதோடு, அந்தக் கொடூரமான மகத அரசன்! ஆஹா, அவன் பெயர் என்னவோ! மறந்தேன். அவனைக் கூட விரட்டிவிட்டான் என்றார்களே!" பத்ரன் கஷ்டப்பட்டு நினைவு கூர்ந்தான்.

"இதோ பார், நீ ஏன் உன்னைக் கிருஷ்ண வாசுதேவன் என்று கூறிக்கொள்கிறாய்?" வயதான துறவிக் கிழவன் கண்ணனைப் பார்த்துக் கேட்டான்.

"ஏனெனில் நான் தான் அவன். அவன் தான் நான். நான் ஒரு வீரனுமில்லை; கதாநாயகனுமில்லை. மதுராவின் ஒரு யாதவக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஷூரர்களின் தலைவன் ஆன வசுதேவனின் இளைய குமாரன். ஆனால் நீங்கள் கேள்விப்பட்டது என்னவோ உண்மைதான். நான் நாகலோகம் சென்றிருந்தேன். அங்கே தன்னை யமன் என்றும் மரணத்தின் கடவுள் என்றும் அழைத்துக்கொண்டவனை வெற்றி கொண்டிருக்கிறேன். அதோடு மகதத்தின் அரசன் ஜராசந்தனை மகதத்துக்கு ஓட ஓட விரட்டி அடித்தேன்."

"ஆஹா, இப்போது நினைவுக்கு வந்துவிட்டது. அந்தக் கொடுங்கோல் அரசன் பெயர் ஜராசந்தன்." கிழவனின் சீடன் கூறினான்.

"இங்கே ஏன் வந்தாய்?" கிழவன் கண்ணனைக் கேட்டான். கண்ணனும் தன் கதையைக் கூறி அனைத்தும் விளக்கித் தான் எவ்வாறு அங்கே வர நேர்ந்தது என்பதையும் கூறினான். அவன் கூறி முடித்ததும் கிழவன் தன் சீடரக்ளைக் கண்ணனுக்குக் குகையில் தங்கத் தேவையான செளகரியங்களைச் செய்து தருமாறு கூறினான். கண்ணன் அன்றிரவு அங்கே தங்கினான்.

Thursday, November 10, 2011

பகைமை முற்றி முதிர்ந்திடுமட்டிலும் பார்த்திருப்பான்!

மிக்க கவனத்தோடு மலைகளின் பாறைகளோ, மரங்களின் முட்களோ குத்திவிடாமல் சென்றான் கண்ணன். சற்றுத் தூரம் போனதும் தன்னைத் தொடர்ந்து வந்தவனின் குதிரை தன் குதிரை படுத்துக்கிடக்கும் இடத்தினருகே நிற்கிறது என அப்போது எழுந்த சப்தங்களை வைத்து ஊகித்துக்கொண்டான். குதிரையின் சப்தம் மட்டுமா?? ஒரு பயங்கரமான குரல் ஆங்காரத்தோடு சாபம் ஒன்றை இடுவதும் காதில் விழுந்தது. ஆஹா! இது வேறு எவரும் இல்லை! காலயவனன் தான்! அவனா நம்மைப் பின் தொடர்ந்திருக்கிறான். இதோ, இது என்ன? இந்தப்பாதையில் யாரோ நடந்து வரும் சப்தம்! அவன் தான் நம்மைத் தொடர்கிறான். அங்கிருந்து வேறேதும் பாதை செல்லவில்லை அல்லவா? கிருஷ்ணன் வேகமாக ஓடினான். தன் உயிரைக்கைகளில் பிடித்துக்கொண்டு ஓடினான் என்று சொல்லலாம்.

மெல்ல மெல்ல சூரியோதயம் ஆகிக் கொண்டிருந்தது. பொன்னிறக் கதிர்கள் காட்டுக்குள்ளே ஊடுருவின. ஆங்காங்கே தங்கக் காசுகளை வாரி இறைத்தாற்போல் வெளிச்சத் துகள்கள். கண்ணன் ஓடுவதை நிறுத்திக்கொண்டு பெருமூச்சுவிட்ட வண்ணம் சுற்றும் முற்றும் பார்த்தான். பின்னால் வருபவரை இப்போது நன்றாகப் பார்க்க முடிகிறது. அது காலயவனனே தான்! கண்ணனை அவனும் பார்த்துவிட்டான். கண்ணன் இருக்குமிடம் நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கிறான். தன்னுடைய உடலின் பாரம் போதாதெனத் தான் சுமந்து கொண்டிருந்த ஆயுதங்கலும் பாரமாக இருந்திருக்கவேண்டும். ஆகையால் பெரும்பாலான ஆயுதங்களைக் களைந்திருந்தான். உடல் கவசம், தலைக்கவசம், நீண்ட கத்தி போன்றவற்றைக் காணவில்ல்லை. இப்போது அவனுடன் போடும் சண்டை அதிகாரத்திற்காகவும், உடல் பலத்தை மட்டும் காட்டியும் தான். மற்றபடி ஆயுதச் சண்டை இல்லை. இந்தச் சண்டையில் காலயவனனை வெல்லவேண்டும்.

கிருஷ்ணன் தப்பிக்க ஏதேனும் வழி இருக்கிறதா எனச் சுற்றும் முற்றும் ஆராய்ந்தான். சற்றுத் தொலைவில் ஒரு சிறிய குன்று இருப்பதையும், அதன் உச்சியில் குகைகள் போல் தெரிந்த இடத்திலிருந்து புகை வருவதையும் கண்ட கிருஷ்ணன் அங்கே யாரோ வசிக்க வேண்டும் என்று புரிந்து கொண்டான். தப்பிக்க வேண்டுமானால் இது ஒன்றே வழி. வேறு வழியில்லை என்பதையும் கண்டான். அந்தக்குன்றை நோக்கி வேகமாய் ஓடினான். குன்றின் அடிவாரத்தை அடைந்ததும் திரும்பிப் பார்த்தான். காலயவனன் களைத்துப் போயிருப்பதையும் இப்போது அவன் வேகம் குறைந்திருப்பதையும் கண்டு கொண்டான். குன்றின் மேல் ஏறத் தொடங்கிய கண்ணன் கிட்டத்தட்ட பாதிவழி ஓடினான் என்றே சொல்லலாம். ஒரு வளைவான பாதையும் காணப்பட்டது. அந்தப் பாதையில் சென்றவன் குன்றின் அடிவாரத்தை நோக்கியபோது காலயவனன் மேலே ஏற முயற்சித்ததையும், அப்போது தடையாக இருந்த கடைசி ஆயுதமான கத்தி ஒன்றையும் விட்டெறிந்ததைக் கண்டான். கிருஷ்ணன் சிரித்துக்கொண்டான். இப்போது இருவரும் சம பலமுள்ளவர்களாகி விட்டோம்.

ஆஹா, இப்போது யுத்தம் செய்வதெனில் மல்யுத்தம் ஒன்றுதான். ஆனால் இந்தப்பிசாசு மனிதனை நம்ப முடியாது. அவன் இடுப்பில் ஒரு சின்னக் கத்தி வைத்திருப்பானே! ஆகவே கவனமாகவே இருக்க வேண்டும். கண்ணனின் இதயம் படபடவென அடித்துக்கொண்டது. காதுகளில் ஓவென்ற இரைச்சல் சப்தம்! இப்போது காலயவனன் கண்களில் பட்டால் அவனோடு மல்லுக்கட்ட கண்ணன் உடலில் தெம்பு இல்லை. சற்றாவது ஓய்வெடுக்க வேண்டும். மெல்லமெல்ல மேலே ஏறினான். குன்றின் மேலே உச்சிக்குச் சென்ற கண்ணன் அங்கே ஆறு குகைகள் இருப்பதைக்கண்டான். சிலவற்றின் எதிரே நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. கண்ணன் ஓட்டத்தை நிறுத்தி மெல்ல நடக்க ஆரம்பித்தான். திரும்பிப் பார்க்க காலயவனன் குன்றின் மேல் பாதி தூரமே வந்திருப்பதைக் கண்டான். அடிமேல் அடியெடுத்து வைத்து நடுவில் இருந்த குகையை நோக்கிச் சென்றான் கண்ணன். எல்லாவற்றையும் விட அந்தக் குகை பெரிதாக இருந்தது. அதனுள்ளே உற்று நோக்கினான். உள்ளே ஒரு வயதான மனிதன் கிட்டத்தட்ட நிர்வாணமாகக் காட்சி அளித்தான். அவன் தலைமயிர் நீளமாக மஞ்சள் நிறத்தோடு காணப்பட்டது. அதே நிறத்தில் நீண்ட தாடியும் இடுப்பு வரை வந்திருந்தது. அந்த மனிதன் தூங்கிக் கொண்டிருந்தான். குகையின் ஒரு மூலையில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் இட்டிருந்த கட்டைகள் கரியாகி விட்டன.. தன் உடலைப் போர்த்திக்கொண்டிருந்த மஞ்சள் நிறச் சால்வையால் அந்த மனிதனுக்குக் கனிவோடு போர்த்திவிட்ட கண்ணன், சப்தமே இல்லாமல் அங்கிருந்து நகர்ந்து குகையின் ஓரத்திலிருந்த ஒரு தனியான இடத்திற்குச் சென்று இருளில் மறைந்து கொண்டான்.

தன் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு குகையின் வாசலில் காலயவனன் வரும் சப்தம் கேட்கிறதா எனக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான். நேரம் சென்றது. கண்ணனுக்கு இப்போது மூச்சு ஒழுங்காக வந்தது. இனிமேல் காலயவனன் வந்தால் ஒரு கை பார்த்துவிடலாம். கண்ணன் தயாரானான். அதற்குள்ளாக குகையின் வாசலில் யாரோ ஓட்டமாய் ஓடிவரும் சப்தம் கேட்டது. கண்ணன் குகையின் வாசலை உற்று நோக்கினான். வாசலில் தெரிந்த வெளிச்சம் ஒரு கணம் மறைந்து மறுகணம் வெளிப்பட்டது. யாரோ குகைக்குள்ளாக நுழைந்திருக்கின்றார்கள். அது காலயவனனாய்த் தான் இருக்கும் எனப் புரிந்து கொண்ட கண்ணன் அவனோடு நேருக்கு நேர் மல்யுத்தம் செய்யத் தயாரானான். ஆனால் காலயவனனோ படுத்து தூங்கிக் கொண்டிருந்த மனிதனை நோக்கிக் கூச்சலிட்டுக்கொண்டு ஓடினான்.