Wednesday, November 23, 2011

கண்ணன் இறந்து விட்டானா? துவாரகையில் கலக்கம்!

துவாரகை நகரின் வெளியே கிரிநகர் மலைக்கோட்டையை நோக்கிச் செல்லும் பாதையில் நூற்றுக் கணக்கான குடியிருப்புக்கள் புதியதாய்க் காணப்பட்டன. அவற்றைப் பார்த்ததுமே மதுராவின் யாதவர்களுக்கான புதிய குடியிருப்புகள் தான் அவை எனப் புரிந்து கொண்டான் கிருஷ்ணன். அதிலும் அந்த வீடுகளின் வெளியே மேய்ந்து கொண்டிருந்த பசுக்களைக் கண்டதுமே புரிந்து கொண்டான் கண்ணன். இவை மதுராவின் பசுக்களே தான். அமைதியாகவும், நிம்மதியாகவும் மேய்ந்து கொண்டிருந்தன. ஒரு சிலர் அதற்குள்ளாக தங்களுக்கான நிலங்களைப் பங்கிட்டுக்கொண்டு உழுவதற்கும் தொடங்கி விட்டனர். நகரின் வெளியே செல்கையில் கிருஷ்ணன் அங்கே நிலவியிருந்த அசாதாரண அமைதியைக் கண்டு மிகவும் வியப்படைந்தான். அவனைக் கடந்து சென்ற அனைவருமே நடுவயதைத் தாண்டியவர்களாகவும், வயதானவர்களாகவுமே காணப்பட்டனர். இளைஞர்கள் அனைவரும் போருக்குச் சென்றிருக்க வேண்டும்.

சரி, இந்தப் பெண்களுக்கு என்னவாயிற்று? அனைவர் கண்களும் சோகக்கடலில் கண்ணீரில் மிதக்கின்றனவே! அனைவருமே கறுப்பு வண்ண ஆடை அணிந்து ஆபரணங்களை நீக்கிவிட்டுக் காணப்பட்டனர். யாதவர்கள் அனைவருமே ஏதோ பொதுவான துக்கம் ஒன்றை அனுசரிக்கின்றனர். அது என்னவாக இருக்கும்? கிருஷ்ணனால் புரிந்து கொள்ள இயலவில்லை. மெல்ல மெல்ல நகரினுள் சென்று மாளிகைகள் காணப்பட்ட திசையை நோக்கி நடந்தான். பல மாளிகைகளும் கட்டுமான வேலைகள் செய்யப்பட வேண்டிய நிலையில் காணப்பட்டன. சிலவற்றில் வேலை நடந்து கொண்டிருந்தது. ஒரு பெரிய மாளிகையின் முன்னால் நின்ற கண்ணன் உள்ளே யிருந்து எவரேனும் வருவார்களோ எனக் காத்திருந்தான். கொஞ்ச நேரத்தில் சில ஆண்களும், பெண்களும் ஏதோ புனித தரிசனத்திற்குச் சென்று வந்தாற்போல் பேசிக்கொண்டு அங்கே வந்தனர். ஒரு வயதான பெண்மணி கிருஷ்ணன் நின்று கொண்டிருந்த வீட்டை நோக்கி வந்தாள். அழுது அழுது அவள் கண்கள் சிவந்திருந்தன. அனைவருமே ஏதோ தாங்க முடியாத் துக்கத்தில் காணப்பட்டனர்.

கிருஷ்ணன் அந்தப் பெண்மணி ஷங்கு என்ற முன்னாள் தளபதியின் மனைவி எனப் புரிந்து கொண்டான். மதுராவின் கோட்டையின் பாதுகாவலனாக இருந்தவனே இந்த ஷங்கு. கண்ணனைப் பலமுறை தன் வீட்டிற்கு அழைத்துத் தன் கைகளால் உணவு படைத்திருக்கிறாள். அவளிடம் கண்ணன், "அம்மா, வசுதேவரின் வீடு எங்கே உள்ளது?" என்று கேட்டான். அவள் கண்ணனையே உற்றுப் பார்த்துவிட்டு, "இளம் துறவியே! அதோ அங்கே தெரிகிறது பார்! இந்தச் சாலையோடு நேரே சென்று வலப்பக்கம் திரும்பினால் வௌச்தேவரின் வீடு வரும். ஆனால் அங்கே இன்று நீ பிக்ஷைக்குச் செல்லாதே; அவர்கள் அனைவருமே மாபெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளார்கள். உனக்கு வேண்டிய பிக்ஷையை நான் இடுகிறேன். வா." என அழைத்தாள். தன்னுடன் வந்தவர்களையும் உள்ளே அழைத்த வண்ணம் அவர்களில் ஒருவரை உள்ளே வேகமாய்ச் சென்று வந்திருக்கும் துறவிக்கு உணவு படைக்க ஏற்பாடுகள் செய்யுமாறு கூறினாள்.

"ஓஓ, தாயே! ஏன் அப்படி? என்னவாயிற்று வசுதேவரின் வீட்டில்? யாரும் இறந்துவிட்டனரா?"

அந்தப் பெண்மணி அங்கேயே உட்கார்ந்த வண்ணம் கண்ணனோடு பேச ஆரம்பித்தவள் துக்கம் தாங்க முடியாமல் பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். சற்றே தன்னை சமாளித்துக்கொண்டு, அனைவரின் வீட்டிலும் துக்கம் அனுஷ்டிப்பதாய்க் கண்ணனிடம் கூறினாள். கண்ணனின் ஆச்சரியம் அதிகமானது. யுத்தத்தில் அனைத்து இளைஞர்களும் இறந்துவிட்டனரா என்று கேட்டான் கண்ணன். அவனால் ஊர்க்காரர்களை அனைவராலும் ஒருமித்து அனுசரிக்கப்படும் துக்கத்தின் காரணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தப் பெண்மணி பேச ஆரம்பித்தாள்.

"அனைவருமே ருக்மிணியை விடுவித்து அழைத்துவர விதர்பா சென்றார்கள். எங்கள் கண்ணின் கருமணியான கிருஷ்ணனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மணப்பெண் விதர்பாவின் இளவரசி ருக்மிணி. ஆனால் அவன் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டான். நாங்கள் அனைவருமே மனம் உடைந்துவிட்டோம். " கஷ்டப்பட்டுத் தன் விம்மலை அடக்கியவண்ணம் அவள் மீண்டும் பேச ஆரம்பித்தாள். "கடந்த இரு மாதங்களாக நாங்கள் அனைவரும் எங்கள் கண்ணீர் வற்றும்வரை அழுது தீர்த்துவிட்டோம். இனி எங்கள் கண்களில் கண்ணீரே இல்லை என்னும்படி அழுது முடித்தாயிற்று."

இப்போது கண்ணனுக்கே அழுகை வரும்போல் ஆயிற்று. தான் இறந்துவிட்டதாய் நினைத்து இவள் இவ்வளவு அழுகிறாளே என வருந்தினான். "என்ன ஆயிற்று கண்ணனுக்கு?" கூடியவரையிலும் தன் குரலில் மாற்றத்தைக் காட்டாமல் கேட்டான் கண்ணன். "ஓ, கண்ணனைப் போல் அற்புதமானவர்களே இல்லை; அருமையானவன்; எங்கள் கண்ணின் கருமணி போன்றவன்; எங்கள் பாதுகாவலன், எங்கள் கடவுள், எங்கள் உயிர் அவனே. " சொல்லிக்கொண்டே போனாள் அந்தப் பெண்மணி. "எங்களை எல்லாம் காப்பாற்ற வேண்டி மதுராவில் இருந்து துவாரகைக்கு அழைத்து வந்தான் கண்ணன். இந்த அற்புதமான பூமியைத் தேடிக் கண்டுபிடித்து எங்களைக் குடி வைத்தான். இவ்வளவும் செய்துவிட்டு அவன் காலயவனன் கைகளில் மாட்டிக்கொண்டு தன்னைத்தானே பலி கொடுத்துக்கொண்டுவிட்டான். "

அந்தப் பெண்மணியால் அழுகையை அடக்க முடியவில்லை. அவள் அழுத அழுகையில் மயங்கி விடுவாள் போல் ஆகிவிடக் கூட வந்திருந்த இரு இளம்பெண்களும் தங்கள் புடைவைத் தலைப்பால் விசிறிவிட்டு அவளை ஆச்வாசப்படுத்தினார்கள்.

"ஏதானும் கோயிலில் இருந்து வருகிறீர்களா என்ன?" என்று கேட்டான் கிருஷ்ணன்.

"ஆம்,, நாங்கள் கிருஷ்ணை வணங்கவென்றே ஒரு கோயிலைக் கட்டி இருக்கிறோம்." என்றாள் அந்தப் பெண்மணி. இந்த அசாதாரணமான நன்றியின் உயர்வைக் கண்டு கண்ணன் மனதைப் பிசைந்தது. அவளிடமிருந்து விடைபெற்று அங்கிருந்து நகர்ந்தான்.

1 comment:

priya.r said...

// இப்போது கண்ணனுக்கே அழுகை வரும்போல் ஆயிற்று. தான் இறந்துவிட்டதாய் நினைத்து இவள் இவ்வளவு அழுகிறாளே என வருந்தினான். "என்ன ஆயிற்று கண்ணனுக்கு?" கூடியவரையிலும் தன் குரலில் மாற்றத்தைக் காட்டாமல் கேட்டான் கண்ணன். "ஓ, கண்ணனைப் போல் அற்புதமானவர்களே இல்லை; அருமையானவன்; எங்கள் கண்ணின் கருமணி போன்றவன்; எங்கள் பாதுகாவலன், எங்கள் கடவுள், எங்கள் உயிர் அவனே//
படிக்கும் எங்களுக்கும் மனம் வேதனை படுகிறது :(