Monday, October 31, 2011

துன்பம் இன்றெங்கும் இனி நினக்கென்னால் எய்திடாது!

"தேவகி அம்மாவிடமும், தந்தை வசுதேவரிடமும் நான் எப்போதும் அவர்களோடு இருப்பதாய்ச் சொல். அண்ணன் பலராமனை ரேவதியைத் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாய் இருக்கச் சொல். ரேவதியிடம், ஒரு மருமகளாகத் தன் கடமைகளைச் செய்யும்படியும், என் தாயையும், தகப்பனையும் கவனித்துக்கொள்ளவும் சொல்வதோடு, என்னை இழந்தால் அதற்காக அவர்கள் வருந்தாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளச் சொல். அவள் மிகவும் தைரியமான பெண்மணி. நன்கு கவனித்துக்கொள்வாள். எனக்குத் தெரியும்." கண்ணன் மிகவும் உணர்ச்சிமிகுந்த குரலில் கூறினான். சாத்யகி மிகவும் கஷ்டத்தோடு தனக்குள் எழுந்த விம்மலை அடக்கிக் கொண்டான். "அண்ணன் பலராமன் யாதவர்களை நன்கு கவனித்துக்கொள்வார்." கண்ணன் தொடர்ந்தான்.

"என் நமஸ்காரங்களை அண்ணனுக்குத் தெரிவித்துவிடு. சாத்யகி! மேலும்....." கண்ணன் தயக்கத்தோடு நிறுத்த, சாத்யகி, "உன் கட்டளை என்னவோ அதைச் சொல் கிருஷ்ணா!" என்று துக்கம் தொண்டையை அடைக்கக் கேட்டான்.

"இப்போது உனக்குத் தான் நான் சொல்ல வேண்டியது இருக்கிறது. நீ தைரியமானவன்; விசுவாசம் மிகுந்தவன்; நேர்மையானவன்; பெருந்தன்மை உள்ளவன். நீ இவ்வாறு இருப்பதிலேயே திருப்தி அடையலாம். உத்தவன் வலுவான மனமும், உடலும் கொண்டவன். அவன் மனதளவில் ஒரு துறவியாகத் தெரிந்தாலும் நான் இல்லை எனில் தனியாக உணருவான். தான் தன்னந்தனியாக விடப்பட்டதாய்க் கருதுவான். அவனைக் கை விட்டுவிடாதே! இப்போது அவன் எவ்வாறு என்னோடு இணைபிரியாமல் நிழல் போல் இருக்கிறானோ அவ்வாறு நீ அவன் நிழல் போல் அவனோடு இரு; ஒரு கணமும் பிரியாதே. "

"என் பிரபுவே, என் கடவுளே, அவ்வாறே ஆகட்டும்." சாத்யகியால் இப்போது தன் அழுகையை நிறுத்த முடியவில்லை. "வா, சாத்யகி, என்னைக் கட்டி அணைத்துக்கொள்வாய். எதற்கும் கவலைப்படாதே! மரணம் வந்தால் வரட்டும். பயந்து பயந்து வாழ்வதை விடத் துணிவோடு மரணத்தை எதிர்கொள்ளலாம். " கிருஷ்ணன் கூறினான். அவ்வளவில் சாத்யகியைக் கட்டி அணைத்துக்கொண்டு உச்சி முகர்ந்த கண்ணன் அவனுக்கு ஆசிகள் கூறினான். மென்மையான குரலில், " இன்னும் ஒன்றே ஒன்று கூறியாகவேண்டும்." என்றான். சாத்யகி நிமிர்ந்து பார்க்க, கிருஷ்ணன், "பீஷ்மகனின் மகள் ருக்மிணியை நீ அறிவாய் அல்லவா? அவள் என்னைத் தன் தலைவனாக, பிரியத்துக்கு உகந்தவனாகத தேர்ந்தெடுத்துவிட்டாள். இத்தனைக்கும் நான் ஒரு இடையன் என்பது அவளுக்குத் தெரியும். அவள் ஓர் ராஜகுமாரி என்பதையும் அறிந்திருக்கிறாள். ஆனால் இது நடந்தது சில வருடங்கள் முன்னர். நான் என் மாமா கம்சனைக் கொன்றேனே! அப்போது தான் முதன்முதல் மதுரா வந்தேன். அப்போது தான் இது நடந்தது. அப்போது எனக்குப் பதினாறு வயதுக்குள்ளே தான். அவளும் பதினைந்து வயதே ஆனவள். அப்போதிலிருந்து அவள் உடலால் தனியாக அவள் நாட்டில் வசித்தாலும் உள்ளத்தால் என்னோடுதான் இருந்து வருகிறாள்."

சற்று நிறுத்திவிட்டுப் பெருமூச்சு விட்ட கண்ணன் மேலே தொடர்ந்து, " சுற்றிலும் எதிரிகள் சூழ்ந்துள்ள இந்நிலையிலும், அவளைச் சுற்றிலும் கூட எதிரிகளை நிறைந்துள்ள நிலையிலும், அவள் நான் செய்யும் தர்ம யுத்தத்திற்கு எனக்குத் துணை நிற்கிறாள். என்னோடு கூடவே வருவதாய்ச் சொல்கிறாள். ஒரு செண்பக மலரைப் போல் அழகும், வடிவும், வனப்பும், மணமும், குணமும், எழிலும், நளினமும் நிறைந்த இந்த மங்கை தன்னந்தனியாக விதர்ப்ப நாட்டில் நமக்காக ஜராசந்தனையும், அவன் படைகளையும் எதிர்த்து வருகிறாள். அவள் மட்டும் சற்று வளைந்து கொடுத்திருந்தாளானால், ஒரு கண்ணிமை சற்றே ஜராசந்தன் பக்கம் இமைத்திருந்தாளானால், நாம் இன்று இப்படித் தப்பிக் கூட ஓட முடிந்திருக்காது. என்றோ இறந்தவர்களாகி இருப்போம்."

சாத்யகி கண்ணன் மேலே கூறப்போவதற்காகக் காத்திருந்தான். கண்ணன் கூறினான்:"மதுராவை நாசம் செய்துவிட்டு ஜராசந்தன் சும்மா இருக்க மாட்டான். ருக்மிணியை சிசுபாலனைத் திருமணம் செய்து கொள்ளக் கட்டாயப் படுத்துவான். ருக்மிணி சம்மதிக்க மாட்டாள்; அது என்னவோ உறுதி. எந்தவிதமான பாசபந்தங்களுக்கும் கட்டுப்படாமல் என் மேல் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கிறாள். நான் தர்மத்தின் பாதையில் செல்லப் போகிறேன்; என் வாழ்க்கையை அதற்காகவே வாழப்போகிறேன் என்பது தெரிந்த அந்த விநாடியில் இருந்து என்னைப் பின் தொடரத் தயாராகிவிட்டாள்; பின் தொடரவும் செய்கிறாள்."

இப்போது கண்ணன் குரலே உணர்ச்சி மயமாக இருந்தது. தன்னைப் பூரணமாய்க் கட்டுப்படுத்தியவண்ணம் கண்ணன் கூறினான்: அண்ணா பலராமரிடம் இது என் கடைசிச் செய்தி எனக் கூறு சாத்யகி! உத்தவன் மற்றும் உள்ள அனைத்து யாதவத் தலைவர்களிடமும் கூறு. எப்படியேனும் ருக்மிணி காப்பாற்றப்பட வேண்டும். ஜராசந்தன் கைகளில் அவள் மாட்டிக்கொள்ளக் கூடாது. எந்த விலை கொடுத்தேனும் அவளைக் காப்பாற்ற வேண்டும். ஒரு வேளை.... ஒருவேளை..... நம்மால் காப்பாற்றப்படுவதற்கு முன்னரே அவள் இறக்க நேரிட்டால்.....அவளுடைய அஸ்தியை நாம் இப்போது செல்லும் துவாரகை நகருக்கு எடுத்து வாருங்கள். அங்கே அந்த அஸ்தியைப் போட்டு அதன் மேல் ஒரு கோயிலைக் கட்டுவோம். தர்மதேவதை அவள் உருவில் அவதரித்திருக்கிறாள். அவளுடைய ஆசிகள் நம் குலத்து யாதவர்களுக்கு நன்மையையும், வளமான வாழ்வையும் கொண்டு வரும்."

சாத்யகியால் பேசவே முடியவில்லை.

Sunday, October 30, 2011

தந்திரங்கள் பயிலவுஞ் செய்குவான்!

அனைவரும் நடுவில் குறுக்கிட்ட நதி ஒன்றை அபாயம் ஏதுமில்லாமல் கடந்தனர். இன்னும் சிலர் கடக்கவேண்டி இருந்ததால் நதிக்கரையில் முகாம் இட எண்ணினார்கள். கிருஷ்ணன் சாத்யகியைக் கூப்பிட்டு ரகசியமாக, "சாத்யகி, நான் இங்கே உங்கள் அனைவரையும் பிரிந்து செல்கிறேன்." என்றான். சாத்யகி ஆச்சரியத்துடன், "பிரபுவே, நாம் சீக்கிரம் இந்த நதியைக் கடந்துவிடுவோம். கவலை வேண்டாம்.. " என்றான். கண்ணனோ அதைக் கவனியாமல், "கவனி, சாத்யகி, அனைவரும் பேராபத்தில் இருக்கின்றனர். நான் இரண்டு நாட்களாகவே மேற்கே தெரியும் தொடுவானத்தைக் கவனித்து வருகிறேன். அங்கே நேற்றும், இரண்டும் வெளிச்சம் தெரிந்தது. இன்று மீண்டும் கூர்ந்து கவனித்ததில் எனக்குத் தோன்றியது என்னவெனில், காலயவனன் சமீபத்தில் எங்கேயோ முகாமிட்டிருக்கிறான். இந்த நதிக்கரைப் பிரதேசத்தை அவனும் நமக்கு எதிர்ப்பக்கமிருந்து கடக்கிறான் என எண்ணுகிறேன். அப்படி என்றால் நாள அல்லது நாளை மறுநாள் நம்மைக் கடக்கக் கூடும். அதற்குள்ளாக மீதமிருக்கும் மக்கள் அனைவரும் இந்த நதியைக் கடக்க இயலாது." கண்ணன் குரலில் வருத்தமிருந்தது.

அதற்குள்ளாக அந்தப் பிரதேசத்தைக் கடக்க வழிகாட்டி வந்தவர்களிடம் கேட்டதில் மேல்வானில் தெரியும் வெளிச்சம் தூரத்தே எங்கேயோ முகாமிட்டிருக்கும் கூடாரங்களில் இருந்து வருவதே என்று தெரிந்தது. சாத்யகி மேல் வானை உற்றுக் கவனித்தவண்ணம், " ஆம், கிருஷ்ணா, நீ சொல்வது சரிதான், இந்தப் பிரதேசத்தை நாம் விரைவில் கடந்து செல்லவேண்டும் என்றான். அதற்குக் கண்ணன், " இங்கே இப்போது கடந்து கொண்டிருக்கும் மக்களால் இரண்டு நாட்களுக்குள் இந்தப் பிரதேசத்தைக் கடக்க இயலாது. இவர்கள் போர்வீரர்கள் அல்ல; சாமானிய மக்கள். மிகச் சாதாரணமானவர்கள். இவர்களுக்கு நான்கு நாட்கள் தேவைப்படும். இவர்களை நாம் அவசரப்படுத்த முடியாது.:" என்று கூறினான். "எனில் இவர்கள் வரும்போது வரட்டும்; நாம் முன்னே செல்வோம்; முக்கியமான யாதவர்கள் அனைவரும் சென்றுவிட்டார்கள். காலயவனன் பாடு; இவர்கள் பாடு." சாத்யகி கூற, கண்ணனோ, "இவர்கள் நம் மக்கள்; நம்மில் ஒருவர். அந்தக் காலயவனன் கைகளால் இவர்கள் இறக்க அனுமதிக்க முடியாது. அதோடு நாம் அனைவரும் சேர்ந்து இந்த இடத்தைக் கடக்கவில்லை எனில், காலயவனனுக்கு நம்மைப் பற்றித் தெரிந்து போய் அவன் மதுரா செல்லாமல் நம்மைத் தொடரவும் ஆரம்பிக்கலாம். கொடூரக் கொலைகாரன் அவன்." கண்ணன் கவலை மிகுந்த குரலில் கூறினான்.

"என்ன செய்யலாம்?" சாத்யகி கேட்டான். "நான் இங்கே உங்களைப் பிரிந்து சென்று காலயவனனைச் சந்திக்கிறேன். அல்லது வேறு வழியில் அவனைத் தடுத்து நிறுத்த முயல்கிறேன். அப்போது உங்கள் அனைவருக்கும் இந்தப் பிரதேசத்தைக் கடக்க நேரம் கிடைக்கும். நாம் அனைவரும் இப்படிக் கூண்டோடு தப்பிச் செல்வதை அவன் அறியாமல் இருக்க வேண்டும். இது ஒன்றுதான் வழி." என்றான் கண்ணன். "ஆனால், கிருஷ்ணா, நீயே நேரில் சென்று காலயவனனைச் சந்திப்பது மிகவும் ஆபத்து." சாத்யகி நடுங்கினான். "ஓஹோ, சாத்யகி, அவன் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறான் என்பதை மறவாதே! ஏற்கெனவே தாமதம் செய்து விட்டோம்; நான் இப்போது போயே ஆகவேண்டும்." கண்ணன் உறுதியாகச் சொன்னான். சாத்யகி கண்ணனுக்கு நேரக் கூடிய கதியை நினைத்துக் கலங்கினான். கண்ணனோ, நிதானமாக, "அதனால் என்ன? எத்தனை முறை இறப்பேன்? ஒரே முறைதானே! இந்த உடம்பை விடுத்து இன்னொரு உடம்பில் புகுந்து கொள்வேன்; பழைய ஆடைகளைக் களைந்துவிட்டுப் புத்தாடை உடுப்பது போல."

"ஆனால் உன் வழிகாட்டுதல் இல்லாமல் நாங்கள் என்ன செய்வோம்?" சாத்யகியின் குரலில் திகில் மிகுந்திருந்தது. " அப்படி எல்லாம் பேசாதே! நான் ஏற்கெனவே உனக்கு வழியைச் சொல்லிவிட்டேன். தர்மத்தின் பக்கமே எப்போது நிலையாக நின்று கொள். தர்மத்தை விட்டுச் சிறிதும் பிறழாதே. அது உன்னை எப்போதுமே காக்கும். அந்த நம்பிக்கையில் தான் நான் வாழ்கிறேன்; உன்னையும் வாழ வழிகாட்டுகிறேன்.." கண்ணன் கூறினான். சாத்யகியின் கண்களில் கண்ணீர் நிறைந்தது. கண்ணனை அணைத்தவண்ணம், என் பிரபுவே, என் பிரபுவே என்று புலம்பினான். அவனையொத்த இளைஞரக்ள் அனைவரும் இப்போது கண்ணனைத் தங்கள் பிரபுவாக நினைக்கத் தொடங்கி இருந்தனர்.. சாத்யகியைப் பார்த்துக் கண்ணன், மேலும் பேச நேரமில்லை என்றும், தான் இந்த வழிகாட்டியை உடன் அழைத்துச் செல்வதாயும் கூறினான். சாத்யகி கண்ணன் கால்களில் விழுந்து கதறினான். கண்ணனோ, அவனை எழுப்பி ஆசீர்வதித்து, உக்ரசேன மஹாராஜாவிடம் யாதவர்கள் அனைவரும் சுதந்திரமானவர்கள் என்றும் அவர்கள் இன்னமும் வலுப்பெற்று ஜராசந்தனை அழைக்கவேண்டும் எனவும், அவனை அழிக்கும் வரையிலும் ஆர்யவர்த்தத்தில் தர்மம் நிலைக்காது; அதர்மமே தலைவிரித்தாடும் எனவும் கூறுமாறு வேண்டிக்கொண்டான்.

Thursday, October 27, 2011

என் குடும்பம் வண்ணமுறக் காத்திடுவான்!

"இது ஒன்றே நாம் தப்பிக்க வழி. காலயவனனையும், ஜராசந்தனையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளலாம்." கண்ணன் கூற, "ஒருவேளை நமக்கு இதில் வெற்றி கிட்டவில்லை எனில்?" கத்ருவுக்கு சந்தேகம் பிறந்தது. " தளபதியாரே, நாம் இறக்கப் போவது ஒரே முறைதான். " கண்ணன் குரலில் அதீதமான தன்னம்பிக்கை தெரிந்தது. அதே சமயம் மற்றவர்களுக்கும் தன்னம்பிக்கையை ஊட்ட முயன்றான். "நம்மிடம் வேறு வழியே இல்லை; இதுவே எல்லாம் வல்ல மஹாதேவர் நமக்குக் காட்டி இருக்கும் நல்வழியென நான் நம்புகிறேன். இந்த வழியில் செல்லுகையிலும் நாம் இறக்க வாய்ப்பு இருந்தாலும்; உயிர் பிழைத்திருக்க அதிக வாய்ப்பு இருப்பதால், ஒரு முயற்சி செய்யலாம்." கண்ணன் தீர்மானமாய்ச் சொன்னான். அவன் கண்கள் பிரகாசித்தன. அனைவரையும் சுற்றுமுற்றும் பார்த்தான். எல்லார் முகத்திலும் நம்பிக்கைக் கீற்று மின்னலெனப் பளிச்சிடுவதை உணர்ந்தான். மேலே தொடர்ந்து, "பெரிய அண்ணா பலராமருக்கும், உத்தவனுக்கும் குஷஸ்தலைக்குச் செல்லும் வழி நன்கு தெரியும். வழியில் நாம் பாலவனங்கள், காடுகள், சதுப்பு நிலக்காடுகள், புதைகுழிகள் எனப் பலவகையான இயற்கை ஆபத்துகள் காத்திருக்கின்றன. அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும். ஆனால் பலராமனும், உத்தவனும் தலைமை வகித்து வழிநடத்திச் செல்வதால் நாம் நம்பிக்கை இழக்கவேண்டாம். சரியான பாதையில் அழைத்துச் செல்வார்கள். " கண்ணன் உறுதி கொடுத்தான்.

"நீ? கண்ணா! நீ என்ன செய்யப் போகிறாய்?"உக்ரசேனர் கேட்டார். "நான் என்னுடைய வார்த்தையைக் காப்பாற்றப் போகிறேன் தாத்தா. இந்த மதுராவின் கடைசிக் குடிமகன் நகரை விட்டு வெளியே செல்லும்வரை காத்திருப்பேன். அதன் பின்னரே மதுராவை விட்டு வெளிவருவேன். உங்கள் பின்னாலேயே வந்து உங்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்துவருவேன். தேவைப்பட்டபோது முன்னிருப்பேன். தேவை எனில் காலயவனனைத் தன்னந்தனியாகச் சந்திக்கவும் தயாராக இருக்கிறேன். யாதவர்களில் ஒருவருக்கேனும் அவர்களால் பாதிப்பு ஏற்பட்டால் அதன் பின்னர் ஒரு கணம் கூட நானும் உயிர் தரியேன். மாட்சிமை பொருந்திய அரசே, உங்கள் கட்டளைகளைக் கொடுங்கள்; ஆசிகளைத் தாருங்கள். நமக்கு நேரமே இல்லை. விரைவில் கிளம்பவேண்டும். வரும் திங்களன்று காலை சூரிய உதயத்திற்கு முன்னால், நாம் கிளம்பிவிடவேண்டும். நமக்காகப் புதியதோர் உலகம் காத்திருக்கிறது." என்றான் கண்ணன்.

பல்லாயிரக்கணக்கான கால்கள் முளைத்த பூரான்களைப் போல யாதவர்கள் கூட்டம் கூட்டமாகக் காடுகளையும், பாலைவனங்களையும் நோக்கிச் சென்றனர். முற்றிலும் புதிய நாட்டில், புதியதோர் உலகை நாடிச் சென்றார்கள். சுதந்திரமாகவும், இன்பமாகவும் வாழவேண்டி தொலைதூரத்தில் எங்கோ இருக்கும் செளராஷ்டிரக் கடற்கரையை நோக்கி நடந்தனர். சிலர் மாட்டுவண்டிகளிலும், சிலர் குதிரை வண்டிகளிலும், சிலர் ரதங்களிலும், சிலர் பல்லக்குகளிலும், பெரும்பான்மையான சாமானிய மக்கள் நடந்தும் பயணம்செய்தனர். பலராமனும், உத்தவனும் தலைமை வகித்து நடத்திச் செல்ல, உக்ரசேனர், வசுதேவர், அக்ரூரர் மற்ற யாதவத் தலைவர்கள் அனைவரும் ரதங்களில் தங்கள் குடும்பங்களோடு பயணம் செய்ய இளைஞர்களில் பலரும் குதிரைச் சவாரி செய்து வந்தனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்தமான கால்நடைகள் ஒட்டகங்கள், மாடுகள், யானைகள், குதிரைகளும் அவைகளால் தூக்க முடிந்த அளவுக்குப் பொதியைத் தூக்கிச் சுமந்து பயணம் செய்தன. வேடுவர்களும், நாகர்களும் மற்றவர்களும் கூடவே பயணம் செய்தனர். அவர்களைப் பின் பக்கமிருந்து சாத்யகி தலைமையில் மற்ற யாதவ இளைஞர்கள் பாதுகாவல் செய்து வந்தனர். சின்னஞ்சிறு நாடான அக்ரவனத்தின் அரசன் சாருதேஷ்னனும் ஜராசந்தன் கைகளில் மாட்டிக்கொள்வதைவிட யாதவர்களுடன் தப்புவதே மேல் எனக் கூடவே தன் பரிவாரங்களோடு பயணம் செய்தான்.

கண்ணன் அனைவரது பாதுகாப்பையும் நன்கு கவனித்து வந்தான். கண்ணின் இமைபோலக் காத்தான். மிகவும் கஷ்டமான இந்தப் பயணத்தில் மக்கள் பல துன்பங்களை அடைந்தனர். வயது முதிர்ந்த பலரும் பயணத்தின் கடினம் தாங்காமல் இறந்தனர். நோயாளிகளால் பயணம் செய்ய இயலவில்லை. பாலைவனங்களைப் பகல்வேளைகளில் கடக்கையில் அதன் வெப்பம் தாக்கிக் கால்நடைகள் இறந்தன. மக்களுக்கும் துன்பங்கள் நேரிட்டது. என்றாலும் எஞ்சியிருந்த யாரும் நம்பிக்கையை இழக்காமல் மேலே மேலே பயணித்தனர்.

Wednesday, October 19, 2011

தங்களுக்கோர் துன்பமுறாமற் காப்பேன்!

"அப்படி எல்லாம் பேசாதே கிருஷ்ணா! உன்னால் மட்டுமே எங்களைக் காக்க முடியும். உன்னால் மட்டுமே அற்புதங்களை நிகழ்த்த முடியும். " கத்ரு கூறினான். அதற்குக்கிருஷ்ணன், " நான் ஏற்கெனவே உங்களிடம் கூறியுள்ளேன்; நம்பிக்கை ஒன்றால் மட்டுமே அற்புதங்களை நிகழ்த்த முடியும். திரும்பவும் அதையே கூறுகிறேன். நம்பிக்கை இல்லை எனில் கடவுளரால் கூட அற்புதங்களை நிகழ்த்த இயலாது. " ஷங்கு கூறினான். "கண்ணா, எங்களுக்கு உன்னிடம் நம்பிக்கை உள்ளது. என்ன செய்ய வேண்டும் என்று கூறு." என்று கூற அனைவரும் ஒருமித்த குரலில் அதை ஆமோதித்தார்கள். "வாசுதேவா, இதற்கு முன்னால் நடந்தவைகளை எல்லாம் தயவு செய்து மறந்துவிடு. நாம் அனைவரும் மரணம் நம்மைப் பிரிக்கும்வரையில் ஒன்றுபட்டிருப்போம்." சாத்யகி திடமான குரலில் உறுதி அளித்தான். வசுதேவரும், உணர்ச்சிமயமான குரலில், " குழந்தாய், கிருஷ்ணா, நீ எங்களைப் போதுமான அளவு சோதித்துவிட்டாய். போதும் அப்பா. உன் சோதனைகளை நிறுத்திக்கொள். யுத்தம் செய்வதைத் தவிர இப்போது வேறு வழி இல்லை. நீ தான் அதற்குத் தலைமை தாங்க வேண்டும். ஜராசந்தனையும் காலயவனனையும் வேறு எவராலும் எதிர்கொள்ள இயலாது."

"மாட்சிமை பொருந்திய மன்னா, மரியாதைக்குரிய தந்தையே, நம்மிடம் நம்பிக்கை மட்டும் இருந்ததெனில் நாம் சுதந்திரமாக வாழலாம். பயமின்றியும் வாழலாம்." கண்ணன் கூறினான். அவன் குரல் மெதுவாக இருந்தாலும் அதில் உறுதி தொனித்தது. அனைவரும் மேலே என்ன செய்ய வேண்டுமெனக்கேட்டார்கள். "காலயவனனிடமோ ஜராசந்தனிடமோ நம்மை ஒப்புக்கொடுக்காமல் நாம் இறக்கத் தயாராக இருக்கிறோமா? சொல்லுங்கள், தயாராக இருக்கிறோமா?" கண்ணன் கேட்டான். "வேறு வழியும் இருக்கிறதா? காலயவனனையோ, ஜராசந்தனையோ எதிர்கொள்ளாமல் நாம் தப்பித்து சுதந்திரமாக வாழ வழி இருக்கிறதா? அந்த வழியைச் சொல் கிருஷ்ணா! " சாத்யகி கேட்க, "ஜராசந்தனிடமும், காலயவனனிடமும் மாட்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை" என ஏளனமாக சத்ராஜித் கூறினான். "சுதந்திரமாய் வாழவேண்டுமானால் நான் ஒரு வழியைக் காட்டுவேன்; அந்த வழி தான் நம் முடிவாக இருந்தாலும், அது ஒன்றே நம்மைச் சுதந்திரமாக வாழவும் வைக்கும்." கண்ணன் கூறினான். "சொல் கிருஷ்ணா, என்ன அது சீக்கிரம் சொல்! நம்மை நாமே சிதையை மூட்டி எரித்துகொண்டால் தான் சுதந்திரமாக இருக்கமுடியுமெனில் அதற்கும் தயார். நம் மானமும், மரியாதையும் அப்படியாவது காப்பாற்றப்படும்." உக்ரசேனர் கூறினார். தாம் அனைவரோடு கலந்து ஆலோசித்தே இம்முடிவை எடுத்ததாகவும் கூறினார். பலியாடுகளாக மாற எவருமே தயாராக இல்லை என்றும் கூறினார்.

"அரசே, கேளுங்கள். நாம் நம் மூதாதையர் காலந்தொட்டு, ஜன்ம, ஜன்மாந்திரமாக வாழ்ந்து வரும் இந்த மதுராவை விட்டு, இந்த யமுனைக்கரையை விட்டுவிட்டு, நம் புராதன மாளிகைகளை விட்டு விட்டு, நம் சொந்த மண்ணை விட்டுவிட்டு, இங்கிருந்து செல்ல வேண்டும். மாமா கம்சனுக்குப் பயந்து யாதவத் தலைவர்கள் ஓடோடி ஒளிந்து கொண்டார்களே அப்படி இல்லை இது; வாழவேண்டும்; சுதந்திரமாக வாழவேண்டும்; தர்மத்தின் பாதையில் செல்ல வேண்டும். என்ற புனிதமான எண்ணத்திற்காக இங்கிருந்து கிளம்ப வேண்டும்." கண்ணன் திட்டவட்டமாய்க் கூறினான். அமைதி! எங்கும் அமைதி. எவரும் எதுவும் பேசவில்லை. மூச்சு விட்டால் கூட சத்தத்தை ஏற்படுத்துமோ என அனைவரும் பயந்து கொண்டு மூச்சுவிட்டனர். கண்ணன் வாயிலிருந்து வரும் வார்த்தைகளைக் கவனமுடன் கேட்டனர். கண்ணன் மேலும் கூறினான்.

"ஜராசந்தனுக்கும் முன்னால் காலயவனன் மதுராவை அடைந்துவிடுவான். ஆனாலும் அதற்கு இன்னமும் ஒரு மாதம் முழுதும் பிடிக்கும். ஆகவே நமக்கு வேண்டிய நேரம் கிடைக்கிறது. மதுராவை விட்டு நாம் அனைவரும் கிளம்புவோம். இந்த மதுராவின் ஆண், பெண், குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள், ஆடுமாடுகள், கால்நடைகள், வேலையாட்கள், குதிரைகள், யானைகள் என நம் சொத்துக்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு இங்கிருந்து கிளம்புவோம். அதுவும் காலயவனன் மதுராவை அடையும் முன்னர் கிளம்பவேண்டும்."

"எல்லாம் சரி அப்பா! எங்கே போவோம்? எங்கே தங்குவோம்? நம்முடைய அண்டை நாடுகள் எதுவுமே நம்மை அடைக்கலம் கொடுத்துக்காப்பாற்றும் அளவுக்கு வலுவுள்ளவர்கள் அல்ல; ஜராசந்தனின் கோபத்தை அவர்கள் எதிர்கொள்ளத் தயங்குவார்கள். காலயவனன் வேறு சேர்ந்து கொண்டான்.:" கத்ரு கூற, கண்ணன் தொடர்ந்து, "நான் ஒரு நாட்டைக் கண்டறிந்திருக்கிறேன். அந்த நாட்டின் அரசனும்,மக்களும் நம்மை முழு மனதோடு வரவேற்றுத் தங்க வைப்பார்கள். நமக்கு அன்பான வரவேற்புக் கிடைக்கும். என் பெரிய அண்ணா பலராமன் அரசன் குக்குட்மினுக்காக குஷஸ்தலையை வெற்றி கொண்டார். மிக அழகான அந்த நாடு செளராஷ்டிரக் கடற்கரையில் வியாபித்துள்ளது. அரசர் குக்குட்மின் தம் ஒரே மகள் ரேவதியையும், ராஜ்யத்தையும் அண்ணா பலராமரிடம் ஒப்படைக்கக் காத்திருக்கிறார். அங்கே நாம் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும், சுதந்திரமாகவும் இருக்கலலம். ஜராசந்தனிடமிருந்தும் காலயவனனிடமிருந்தும் நம்மைக் காப்பாற்றிக்கொண்டு நமக்கு நாமே மன்னராக வாழலாம்."

இதைக் கேட்ட சத்ராஜித் ஆக்ஷேபித்தான். குஷஸ்தலை எங்கோ உள்ளது. அங்கெல்லாம் செல்ல முடியாது என மறுத்தான். கண்ணன் சிறு சிரிப்போடு, "யமப்பட்டினத்தை விட அருகே தான் உள்ளது" என்றான். எவருமே சிறிது நேரம் பேசவே இல்லை. கிருஷ்ணன் மேலே பேசினான். " உங்களால் மதுராவை விட்டுக் கிளம்ப இயலாதெனில் இப்போதே முடிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் விருப்பத்திற்கேற்ப நடக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் மரணத்தை எதிர்கொள்ள மட்டும் தயாராக இருக்க வேண்டாம்; நம் எதிரி நம்மை அழிக்கும் முன்னர் நம் பெண்டிரை எல்லாம் நெருப்பிலிட்டு எரித்துவிடத் தயாராக வேண்டும். இல்லை எனில் அவர்கள் கைகளில் மாட்டிக்கொண்டு அந்தப் பெண்கள் அவதிப்படுவார்கள். அவ்வளவு ஏன்? குழந்தைகளைக் கூட நாம் அழித்துவிடவேண்டும். அந்தக் காட்டுமிராண்டிகள் கைகளால் நம் குழந்தைகள் இறப்பதைவிட நாமே கொன்றுவிடலாம்.."

"ஆனால் நான் உங்களுக்கு எதிர்காலம் பற்றிய நல்லதொரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறேன். உங்கள் ரதங்களைத் தயார் செய்து கொண்டு கிளம்பத் தயாராகுங்கள். உங்கள் மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், பசுக்கள், குதிரைகள், யானைகள் அனைத்தும் தயாராகட்டும். மதுரா நகரை அதன் விதியைத் தன்னந்தனியே சந்திக்கத் தயார் செய்துவிட்டு ஒரு வீரனைப் போல் கிளம்புங்கள். அடைக்கலம் தேடி ஓடும் பலவீனமான மனிதனைப் போல் அல்ல. ஒரு அகதியாக அல்ல. புதியதொரு ராஜ்யத்தை ஸ்தாபிக்கப் போகும் அரசனைப் போல் வீரத்தோடு கிளம்புங்கள்."

Tuesday, October 18, 2011

இந்தக் கண்ணனைப் போலன்பு கொண்டவர் வேறுளரோ?

மதுராவில் சந்தோஷ ஆரவாரம். அனைவருக்கும் இனம் புரியாத நிம்மதி. கண்ணன் வந்து விட்டான். வந்தே விட்டான். இனி இல்லைத் துயரம்! படமுடியாதினித் துயரம் என இருந்தோர் அனைவரும் கண்ணனின் பாஞ்சஜன்யத்தின் ஒலி கேட்டுப் பரவசம் அடைந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், சிறுவர், சிறுமியர், வயோதிகர் என அனைவரும் ஓடோடி மதுராவின் கோட்டை வாயிலுக்குக் கண்ணனை வரவேற்கச் சென்றனர். ஜெயஶ்ரீ கிருஷ்ணா! என்ற கோஷம் கடல் அலையைப் போல் ஒலித்தது. அவர்களின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்திற்கு இடையில் ஒரு உருவம் கையில் பிடித்திருந்த தண்டாயுதத்தோடு மெல்ல மெல்ல நடந்து வருவதைக் கண்டனர். யார் அது?? கண்ணனா? ஆம்! கண்ணனேதான். அவர்களை நோக்கித் தான் வருகிறான். ஆனால் என்ன இது? இது முற்றிலும் மாறுபட்ட கிருஷ்ணன்! அவர்கள் எப்போதும் பார்க்கும் கிருஷ்ணன் அல்ல. ஏதோ புனிதத்தைத் தாங்கி வருபவன் போல் காணப்பட்டான். அவனைச் சுற்றி ஒரு புதிய சூழ்நிலை காணப்படுகிறதோ? கொஞ்சம் கடுமை; அதிகமாய் நன்றி, விசுவாசம், விநயம். கண்ணன் அங்கே வந்த உக்ரசேனரின் கால்களில் விழுந்து வணங்கினான். தேவகி அம்மா சந்தோஷம் தாங்க முடியாமல் அழ, வசுதேவரும், உக்ரசேனரும் கண்ணனை வாரி எடுத்துக்கட்டி அணைத்தனர். மற்றவரெல்லாம் கண்ணனின் காலடிகளில் விழுந்து வணங்கினார்கள். கண்ணன் கண்களில் இனம் புரியாத் துயரம்.

"மாட்சிமை பொருந்திய அரசே, மதிப்புக்குரிய தந்தையே, என் விருப்பத்திற்கு முற்றிலும் மாறாக நான் திரும்பி இருக்கிறேன். நீங்கள் அனைவரும் காட்டிய விசுவாசமும், நம்பிக்கையும் என்னைக் கட்டி இழுத்து வந்துவிட்டது. "

"உன்னை விட்டுப் பிரிந்து எங்களால் இருக்க முடியவில்லை கிருஷ்ணா! என்ன நடந்தாலும் சரி, எங்களுக்கு உன் இருப்பு மிக அவசியமான ஒன்று." உக்ரசேன மஹாராஜா முழு மனதோடு கூறினார். "யாதவ குலத் தலைவரே! தர்மம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இல்லாமல் நம்மால் வாழ முடியாது. அதற்காக நாம் நம் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். " அனைவரும் சிரிப்புக் கலந்த அழுகையோடு கண்ணனை மாளிகைக்கு அழைத்து வந்தனர். விசித்திரமாகக் கண்ணன் வாயைத் திறந்து எதுவுமே பேசாமல் அமைதி காத்தான். உக்ரசேன மஹாராஜா மந்திராலோசனை சபையைக் கூட்ட உத்தரவிட்டார். அனைத்து யாதவத் தலைவர்களுக்கும் செய்தி போய், அரண்மனையின் முன் முற்றம் மக்கள் கூட்டத்தாலும், தலைவர்கள் கூட்டத்தாலும் நிரம்பி வழிந்தது. பொது மக்களில் பலரும் கண்ணனை ஒருமுறையாவது பார்த்துவிடவேண்டும் என்ற ஆவலில் வந்தனர். ஆனால் அவர்கள் கண்களைக் கண்ணன் அணிந்திருந்த நாடோடிகளின் உடை உறுத்தியது. கண்ணனை பழையபடி கிரீடத்தில் மயில்பீலியைச் சூடியவண்ணம் மஞ்சள் பீதாம்பரம் அணிந்தே பார்க்க விரும்பினார்கள். நல்ல வேளையாக அரசவைக்கு வருவதாலோ என்னமோ கண்ணனும் முறைப்படியான பழைய உடையையே உடுத்தி வந்தான். தன்னுடைய சொந்த ரதத்தை ஓட்டிக்கொண்டு பலராமன், உத்தவன், சாத்யகி துணைக்கு வரக் கண்ணன் வந்து சேர்ந்தான். அவனைக் கண்டதுமே அனைவருக்கும் உடலில் பலமும், மனதில் வலுவும் ஏற்பட்ட எண்ணம். எதிர்க்க முடியாததொரு மாபெரும் சக்தியின் வடிவமாய்க் காட்சி அளித்தான்.

தங்களுக்குக் காத்திருக்கும் ஆபத்தைக் கூட மறந்த மக்கள், "ஜெயஶ்ரீ கிருஷ்ணா!" என்று கோஷமிட்டனர். கைகளைக் கூப்பியவண்ணம் பதில் வணக்கம் தெரிவித்தான் கண்ணன். அதில் விநயம் தெரிந்தாலும், கொஞ்சம் கடுமையாகவே அனைவரையும் நோக்கிய வண்ணம், " வெற்றி கிருஷ்ணனுக்கு அல்ல; தர்மத்திற்குத் தான் வெற்றி! தர்மம் காக்கப்பட்டாலே வெற்றி அடைந்ததாய்ச் சொல்லலாம்." என்றான். மந்திராலோச்சனை தொடர்ந்தது. அனைவரும் கண்ணனை வரவேற்றுப் பேசுகையில், எப்போதும் மலர்ந்த முகத்துடன் காணப்படும் கிருஷ்ணனுக்குப் பதிலாகக்கடுமையான முகத்தோடு, எந்த நிமிடம் சக்ராயுதத்தைப் பயன்படுத்துவானோ என்ற தோற்றத்தில் தர்மத்தை ரக்ஷிக்க வந்த கோலத்தில் காட்சி அளித்தான். உக்ரசேன மஹாராஜா கண்ணனிடம் யாதவர்கள் அனைவரும் கொண்ட அவநம்பிக்கைக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். கடன் அனைவரின் சார்பாகவும் இதைக் கூறினான். மேலும் தொடர்ந்து, "கிருஷ்ண வாசுதேவா, இறப்பிலும், பிறப்பிலும், வெற்றியிலும், தோல்வியிலும் நாங்கள் அனைவரும் உன்னோடே இருக்கிறோம். இருப்போம். இனி எங்களைப் பிரிந்து போக நினையாதே!:" என்றான்.

கண்ணன் அந்த நேரத்தின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தான். அனைவரையும் நமஸ்கரித்தான். "மரியாதைக்குரிய பாட்டனாரே, தந்தையே, நான் திரும்பி வரவேண்டும்; உங்களோடு இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தீர்கள். நான் வந்துவிட்டேன். இனி நீங்களே என்னைப் பிரிந்தாலும் நான் பிரிய மாட்டேன்." என்றான்.

Sunday, October 16, 2011

கண்ணன் வந்தான், அங்கே கண்ணன் வந்தான்!

மதிப்பிற்குரிய ஆசாரியரே, ஏன் அவ்வாறு கூறுகின்றீர்?" உக்ரசேன மஹாராஜா கேட்டார்.. தளபதி கடனும் அதையே கேட்க கர்காசாரியார் தொடர்ந்தார்." கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாகக் கிருஷ்ணன் என்னிடம் கால யவனனைப் பற்றிக் கேட்டறிந்தான். அவனைக் குறித்த அனைத்துத் தகவல்களையும் கேட்டுக்கொண்டான். " இப்போது அரசனைப் பார்த்து கர்கர் மேலும் தொடர்ந்தார்:' மாட்சிமை பொருந்திய அரசே! உமக்கு நினைவில் இருக்கலாம். நான் பிரமசாரியாக இருக்கையில் கால யவனனின் தகப்பனின் வீரர்கள் என்னைத் தூக்கிச் சென்று அவர்கள் நாட்டில் இருக்கச் செய்தனர். வேறு வழியின்றி நானும் சில காலம் அங்கே வசிக்க நேரிட்டது. ஆனால் ஒரு விஷயம், கால யவனனைப் போல் அவன் தகப்பன் கொடூரக் கொலைகாரனாக இருக்கவில்லை; தன் இளவரசனுக்கு என் மூலம் பாடங்கள் கற்பிக்கவும், வித்தைகளில் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்தான். அவன் இறந்ததும், அதிகாரம் காலயவனனின் தாய்மாமன் கைகளுக்கு வந்து சேர்ந்தது. நானும் ஒருவழியாகத் தப்பி மதுராவிற்குத் திரும்பினேன். காலயவனன் குறித்தும் அவன் என்னிடம் கல்வி கற்றதையும் கண்ணனிடம் நான் கூறியபோது, கண்ணன் என்ன கூறினான் தெரியுமா?" குருவே, உம்மிடம் பாடம் கற்றதின் மூலம் காலயவனன் எனக்கு குரு வழி சகோதரன் ஆகிறான். நீர் எப்படி எனக்குத் தந்தை ஸ்தானத்தில் இருந்து கல்வி கற்பித்தீர்களோ அவ்வாறே கால யவனனும் உம்மிடம் கற்றிருக்கிறான் ஆகவே அவனும் எனக்கு ஒரு சகோதரனே!' ஆனால் அப்போது எனக்குத் தோன்றவே இல்லை. கண்ணனுக்குக் கால யவனனைச் சந்திக்கும் நோக்கம் இருக்கும் என நினைக்கவே இல்லை. ஆனால் இப்போது அனைத்தையும் மீண்டும் யோசித்துப் பார்க்கையில் கால யவனனை நேரடியாகச் சந்திக்கும் திட்டத்தை ஒருக்கால் என்னிடம் சொல்ல வேண்டாம் என இருந்திருப்பான் எனத் தோன்றுகிறது."

"ஆனால், ஆனால், அந்தப் பிசாசு மனிதன் அவனைக் கிழித்துப் போட்டுவிடுவானே!. அந்தக் கூட்டமே மிருகக்கூட்டம். மனிதர்களே அல்ல." அந்தரிக்ஷன் என்பான் கூறினான். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த பலராமன் ஆவேசத்தோடு எழுந்தான். "ஆசாரியரே, முன்னால் ஏன் என்னிடம் சொல்லவில்லை? கண்ணன் கால யவனனைச் சந்திக்கச் சென்றால் நானும் சென்றிருப்பேனே. இப்போது ஒன்றும் கெட்டுவிடவில்லை. நானும் செல்கிறேன். கண்ணன் எங்கே இருக்கிறானோ அங்கே நானும் இருப்பேன். உத்தவா, கிளம்பு சீக்கிரம், நேரத்தை வீணாக்காதே! இது வெட்டிப் பேச்சுப் பேசும் நேரமல்ல" பலராமன் கூறிக்கொண்டே தன் ஆயுதத்தைத் தோளில் சார்த்திக்கொண்டு உத்தவன் கைகளைப் பற்றி வேகமாய் இழுத்தான்.. "வா, உத்தவா, நம் இடம் கண்ணன் இருக்குமிடம் தான்.." பலராமனின் வேகத்தையும் ஆவேசத்தையும் கண்ட மற்றவர்கள் வியப்பின் உச்சியில் நிற்க சாத்யகி, தானும் வருவதாய்க் கூறி எழுந்தான். உக்ரசேனரோ, அனைவரையும் அமைதியாய் இருக்கச் சொல்லிக் கெஞ்சினார். கண்ணனைத் தன் உயிரைத் தியாகம் செய்யும் அளவுக்கு விடப் போவதில்லை எனவும், அதை அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியாய்க் கூறினார். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நாம் அனைவருமே உயிரைக் கொடுக்கலாம் என்றும் கூறினார். வசுதேவரும் அதை ஆமோதித்தார்.. நம் போன்ற வீரர்களுக்கு உகந்ததொரு விஷயம் தான் அது என்றும், ஆனால் சிலர் வேறு மாதிரி நினைக்கலாம் எனவும் கூறினார். கூட்டம் சாது, சாது என கோஷித்தது.

அனைவரும் கண்ணனுக்காக உயிரைக் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும்ல் கண்ணன் இருக்குமிடம் தேடி பலராமன் தலைமையில் உத்தவனையும், சாத்யகியையும் அனுப்பலாம் எனவும் கூறினார்கள். உக்ரசேனர் பலராமனிடம், :"பலராமா, கண்ணனிடம் கூறு. "கிருஷ்ணா, பாட்டனார் நீ திரும்பி வருவதையே எதிர்பார்க்கிறார். உன்னைத் தவிர, உன் தலைமையைத் தவிர வேறு எவரையும் யாதவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று சொல்." என்று தம் செய்தியைக் கொடுத்தார். கிருஷ்ணன் திரும்பி வரும் நாளை எதிர்நோக்கி மதுரா நகரமே காத்திருந்தது. ஒவ்வொரு நாள் செல்வதும் ஒரு யுகம்போல் இருந்தது. ஒவ்வொரு நிமிஷத்தையும் கொடிய தண்டனையாகக் கருதிக் கழித்தனர். ஒவ்வொருவர் மனதிலும் பலவிதமான எண்ணங்கள்! சிலர் நம்பிக்கையுடன் காத்திருப்பைத் தொடர்ந்தாலும் பெரும்பாலானவர்களுக்குக் கண்ணன் திரும்பவில்லை எனில் என்ன நடக்கும் என யோசிக்கவே முடியவில்லை. தேடியும் கண்ணன் கிடைக்கவில்லஈ எனில்? அல்லது கண்ணன் வர மறுத்தான் எனில்? ஒருவேளை ஷால்வனின் ராஜ்யத்திற்குள் நுழைந்ததுமே அவனைக் கொன்றிருந்தார்களெனில்? ஆஹா, அப்படி ஏதும் நடந்திருந்தால் கண்ணனை மீண்டும் காணவே முடியாதே! என்ன செய்வோம்? வயது முதிர்ந்தவர்களும், மற்றப் பெரியவர்களும் இப்படியான ஒரு குழப்பத்தில் தவிக்க இளைஞர்களோ பொறுமையின்றிக் கண்ணன் இருக்குமிடம் நோக்கிச் செல்லத் தவித்தனர். இந்த எதிர்பார்ப்பிலேயே ஒவ்வொரு பகலும் இரவும் மெல்ல மெல்லக் கழிந்தது. நான்கு நாட்கள் சென்றன. ஐந்தாம் நாள் காலை,


பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

பாஞ்சஜன்யத்தின் ஒலி.

Saturday, October 15, 2011

எண்ணம், விசாரம், எதுவும் அவன் பொறுப்பு!

தன்னை ஒருவாறு சமாளித்துக்கொண்ட உத்தவன் மேலும் தொடர்ந்து இவ்வாறு கூறினான்: "பெரியோர்களே! கண்ணன் மேலும் கூறியதாவது: ' என் பேச்சைக் கேட்க விரும்புவர்களுக்குச் சொல் உத்தவா! அவர்களைக் காக்ககப் போவது நான் அதாவது கண்ணன் அல்ல; தர்மம் ஒன்றே காக்கும்! தர்மத்தின் மேல் அவர்கள் வைக்கும் நம்பிக்கை காக்கும். அந்த தர்மத்தைக் காக்கவேண்டி என் உயிரைக் கொடுக்க வேண்டி இருந்தாலும் கொடுப்பேன்; என்னால் செய்ய முடிந்த உயர்ந்ததொரு தியாகத்தைச் செய்யத் தயாராக உள்ளேன். தர்மம் ஜெயிக்கிறதை அப்போதாவது புரிந்து கொள்வார்கள்."இதைச் சொல்லி விட்டு அவன், தன் ஆபரணங்களையும், ஆயுதங்களையும் தன் பிரிவுப் பரிசாகக் கொடுத்துவிட்டு இங்கிருந்து சென்றுவிட்டான்." உத்தவன் தன் அழுகையைத் தொடர்ந்தான். வசுதேவருக்கும், மற்ற யாதவத் தலைவர்களுக்கும் கண்ணீரை அடக்க முடியவில்லை.

"விலை உயர்ந்த தியாகம் என்று கண்ணன் எதைக் கூறுகிறான்? "கத்ரு கேட்டான். அப்போது கிருதவர்மன்," கண்ணன் கிளம்புவதற்கு முதல்நாள் தான் யமுனைக்கரையில் உள்ள மக்களிடம் கண்ணன் தான் உயிரோடு இருக்கும்வரையில் அவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. அவர்களுக்கு எந்தத் தீங்கும் நேராது என்று கூறி இருக்கிறான். என் மகன் அங்கே அப்போது இருந்தான். அவன் என்னிடம் எல்லாவற்றையும் விபரமாய்க் கூறினான்." என்றான். சாத்யகியால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. "நாம் அனைவரும் கோழைகளாகி விட்டோம். நம்மால் கண்ணனுக்காக உயிர்த்தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக ஏன் கூற முடியவில்லை? நாம் கண்ணனிடம் அவனுக்காக நாம் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்திருக்க வேண்டும்." என்றான். சத்ராஜித்திற்குக் கோபம் வந்தது. "நாம் கோழைகள் அல்ல!" என்று கத்தினான்.

"நீ கோழையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் கோழையாகி விட்டேன்." சாத்யகி கூறினான். மேலும் தொடர்ந்து, "அன்று நான் கண்ணனோடு சேர்ந்து பொது இடங்களில் காட்சி கொடுப்பதையும் தவிர்த்தேன். பயந்தேன்; கண்ணனோடு காட்சி கொடுப்பதை யாரேனும் பார்த்துவிடுவார்களோ எனக் கவலை அடைந்தேன். தினமும் அவனோடு நதிக்கரைக்குப் போய்க்கொண்டிருந்தவன் அன்று தவிர்த்தேன். நான் மாபெரும் கோழை! நான் முதலில் என் உயிரைக் கொடுக்க வேண்டும். அதுவும் கண்ணனுக்காகக் கொடுக்க வேண்டும். எனக்கு வெட்கமாக உள்ளது; முதலில் தியாகம் செய்வது நானாக இருக்க வேண்டும்."

யோசனையோடு அமர்ந்திருந்த கத்ரு, "போனமுறை கண்ணன் கோமந்தக மலைப்பக்கம் சென்று மதுராவைக் காப்பாற்றிக் கொடுத்தான். இம்முறையும் அவ்வாறே ஏதேனும் செய்திருப்பான்." என்றான். வசுதேவர் பலமாக அதை மறுத்தார். "சென்ற முறை வேறு வழி இருக்கவில்லை. மதுரா பலஹீனமான நிலையில் வலுவிழந்த நிலையில் இருந்தது. இம்முறை முற்றிலும் வேறுபட்ட நிலைமை. காலயவனனும், ஜராசந்தனும் மதுராவையும், கண்ணனையும் அழிக்க ஒற்றுமையாகக் கை கோர்த்திருக்கின்றனர். யாதவர்களையும் ஒட்டுமொத்தமாய் அழித்துவிடுவார்கள். கண்ணன் இங்கிருந்து செல்வதனால் மதுரா காப்பாற்றப்படும் என எவரும் நினைக்க இயலாது." வசுதேவர் கூறினார்.

"வசுதேவா! கிருஷ்ண வாசுதேவன் சென்றிருக்கும் இடம் தான் எது? ஜராசந்தனிடம் தன்னை ஒப்புக்கொடுக்கச் சென்றிருக்கிறனா? "உக்ரசேன மஹாராஜா கேட்டார். "என்னால் பல விதங்களிலும் ஊகிக்கத் தான் முடிகிறது, பெரிய தந்தையாரே!" வசுதேவர் தொடர்ந்தார். "ஜராசந்தன் அவ்வளவு எளிதில் அமைதியடையப் போவதில்லை. அவனுக்குத் தேவை கண்ணனின் உயிர். மதுராவை நாசமாக்க அவன் எந்தவிதமான நிலைப்பாட்டையும் எடுக்கத் தயங்க மாட்டான். யாதவர்களிடம் உள்ள கோபத்திலிருந்து அவனை மாற்றுவதற்கு கண்ணன் தன்னை ஜராசந்தனிடம் ஒப்படைக்கவும் தயங்க மாட்டான். இது நடக்கக் கூடியதே!"

"அவன் காலயவனனோடு நேரடியாக சந்திப்பை ஏற்படுத்திக்கொள்ள ஷால்வனைச் சந்திக்கவும் சென்றிருக்கலாம்." அமைதியாக அமர்ந்து கொண்டு அனைத்தையும் உன்னிப்பாய்க் கேட்டுக்கொண்டிருந்த கர்காசாரியார் மெதுவாகக் கூறினார். அனைவருக்கும் தூக்கிவாரிப் போட்டது.

Wednesday, October 12, 2011

நகை புரிந்து பொறுத்துப் பொறுத்தையோ ஆண்டுகள் போக்குவான்!

கண்ணனைக் குறித்த எந்தத் தகவலும் இல்லாமல் அன்றைய தினம் நகர்ந்தது. மதுராவின் பெண்கள் அனைவரும் கண்ணன் இல்லாத தனித்ததொரு நிலையை நன்கு உணர்ந்தனர். அதோடு கண்ணன் ஒருவனாலேயே நமக்கு நன்மை செய்ய முடியும் எனவும், அவனே அதிர்ஷ்டத்தையும் கொண்டு வருவான் எனவும் முழு மனதோடு நம்பினர். இப்போது கண்ணன் இல்லை; நம் நிலைமை அதோகதிதான். அவனோடு போயிற்று நம் நல்ல நாட்கள் எல்லாம். இனி வரும் நாட்களை நம்ப முடியாது. கண்ணன் மட்டும் நல்லபடியாகத் திரும்பி வந்தால் போதும்; ஏ, யமுனைத் தாயே, உனக்கு எப்படி வழிபாடு செய்தால் ஏற்றுக்கொள்வாயோ, அவ்வாறு செய்து விடுகிறேன். மஹாதேவா, தேவாதி தேவா, நீரே துணை; கண்ணனை திரும்ப எங்களிடம் கொண்டு சேர்க்கவும். உம்மைத் தான் நம்பி இருக்கிறோம். எத்தனை விரதங்கள் வேண்டுமானாலும் இருக்கிறோம்; அதனால் கண்ணனுக்கு நன்மை விளைந்தால் சரி. இளம்பெண்களும் கண்ணன் இல்லாமையை நன்கு உணர்ந்தனர். யமுனைக்குக் குளிக்கச் செல்கையில் அங்கே ஆண்களுக்கான படித்துறையில் யமுனையின் நிறத்தோடு போட்டி போட்டுக்கொண்டு பளீரென்ற சிரிப்போடும், தலையில் மயில் பீலியோடும் காணப்படும் இளம் முகம், அதன் சுண்டி இழுக்கும் காந்தி, ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரிக்கும் பாங்கு. அனைவர் மனதையும் வருத்தம் பிசைந்தது. அழகான சிரிக்கும் கண்கள், இனிமையான வாரத்தைகள், ஆஹா, கண்ணனைப் போல் எவரும் உண்டா?? இவர்களில் தனித்துத் தெரிந்தாள் சத்யா என அழைக்கப்படும் சத்யபாமா. சத்ராஜித்தின் மகள். பதினைந்தே வயது நிரம்பிய சத்யபாமா தன் வெளிப்படையான பேச்சால் அனைவரையும் ஒரு பக்கம் கவர்ந்தாள்; இன்னொரு பக்கம் அனைவருக்கும் உறுத்தலாகவும் இருந்தது. கண்ணன் மேல் அவள் வைத்திருந்த பாசத்துக்கும், அன்புக்கும் ஈடு இணை கூற முடியாது. நடந்த விஷயங்களை எல்லாம் ஒருவாறு உணர்ந்திருந்தாள். தன் தகப்பன் தான் கண்ணனின் திடீர் மறைவுக்குக் காரணம் என நினைத்த அவள், தீயெனக் கொதிக்கும் கோபத்தைக் காட்டும் விழிகளோடு தகப்பனிடம் சென்று சண்டை போட்டாள். கண்ணனின் இந்த மறைவுக்குத் தன் தகப்பனே காரணம் என அடித்துக் கூறினாள். குற்றம் சாட்டினாள். கண்ணனை அடியோடு வெறுக்கும் தன் தகப்பன் கண்ணனை மதுராவை விட்டே ஓட்டி விட்டதாகவும் கூறினாள். கண்ணனே ஒரு கடவுள், எல்லாருக்கும் மேலான அந்த மஹாதேவனுக்கு ஈடானவன்; அவனுக்குக் கெடுதல் நினைப்பாருக்குக் கட்டாயம் சாபங்கள் சேரும். தெய்வசாபம் பொல்லாதது.

சத்ராஜித்துக்கோ கண்ணன் மேல் வெறுப்பு என்னமோ குறையவில்லை; ஆனால் கண்ணன் நாட்டுக்குத் திரும்பவில்லை எனில் பழி தன்னைத் தான் வந்து சேரும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தான். ஆனால் இந்தப் பெண்ணிடம் என்ன பதில் சொல்வது! வாய்மூடி மெளனியாய் இருத்தலே நலம். இவளிடம் வாயைக் கொடுத்தால் மீள்வது கடினம். அதிலும் செல்லமாய் வளர்த்த பெண்; துக்கப்படுவதைக் காணவும் சகிக்கமுடியவில்லை. பேசாமல் இருந்துவிடலாம். சத்ராஜித் வாயைத் திறக்கவே இல்லை. முதல்நாள் கண்ணனுடன் யமுனைக்குச் சென்றவர்களோ, நான் உயிருடன் இருக்கும்வரையிலும் உங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது எனக் கண்ணன் கூறியது நினைவில் வந்தது. அப்படியானால்???? கண்ணன் இப்போது ஜராசந்தனிடம் தன்னை ஒப்புக் கொடுத்து நம்மை எல்லாம் காப்பாற்றப் போய்விட்டானா?? மதுராவை ஜராசந்தன் எவ்வகையிலேனும் அழிப்பான் என்பது நிச்சயம் என்பதை அறிந்திருந்தாலும் அவர்கள் மனதில் கண்ணனிடம் மதிப்பும், மரியாதையும் மிகுந்தது. மதுராவின் ஆசாரியர்களோ மஹாதேவருக்கு யக்ஞம், யாகங்கள் செய்வதன் மூலம் வரப்போகும் ஆபத்தின் விளைவைக் குறைக்க யத்தனம் செய்தனர். நேரம் ஆக, ஆக, ஜராசந்தன் மதுராவை அழிக்க வரப் போகிறானே என்ற கவலையையும் மீறி அனைவரும் கண்ணனைக் குறித்துக் கவலைப்பட ஆரம்பித்தனர். கண்ணனிடம் நம்பிக்கை வைத்திருந்த கடா என்னும் வீரனுக்கும் ஷங்குவுக்கும், இப்போது நம்பிக்கையே போய்விட்டது. உக்ரசேன மஹாராஜாவிடம் மந்திராலோசனை சபையைக்கூட்ட வேண்டினார்கள். அவர்களோடு கிருதவர்மன், அந்தரிஷ்டன், சாம்பன், கக்‌ஷன் ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். மறுநாள் அனைத்து யாதவத் தலைவர்களும் மந்திராலோசனைக்குக் கூடினார்கள். அவர்களுக்கு இம்மாதிரியானதொரு பெரிய சபையை இன்று வரையிலும் பார்த்த நினைவு இல்லை. அவ்வளவு தலைவர்களும் ஒன்று கூடி இருந்தனர். அதைத் தவிரவும், மாளிகைக்கு வெளியே மற்ற யாதவ மக்கள், பொது ஜனங்கள் அனைவரும் கூடி நின்று கொண்டு மந்திராலோசனையின் முடிவுக்குக் காத்திருந்தனர்.

"கிருஷ்ணவாசுதேவன், நம்மைவிட்டுச் சென்றுவிட்டான்." உக்ரசேனர் முகம் மட்டும் சோகத்தைக் காட்டவில்லை; குரலும் காட்டியது. மதுராவின் நம்பிக்கை நக்ஷத்திரம் விண்ணிலிருந்து மறைந்து விட்டது. கண்ணன் சென்ற இடம் தெரியவில்லை. ஆனால் அவன் நம்மைக் காக்கவேண்டியே சென்றுள்ளான். " உக்ரசேனர் தழுதழுக்கும் குரலில் தொடர்ந்தார். "நம்மிடையே அவன் இருக்க நாம் மிகவும் கொடுத்து வைத்திருந்தோம். இப்போது தகுதியற்ற நம்மிடையே அவன் இல்லை; நம் அனைவரையும் ஒன்று சேர்த்து ஒற்றுமை உள்ளவர்களாக்கி, வலிமையையும், பலத்தையும் காட்டச் செய்து நம் குலப் பெருமையை நிலைநாட்டினான். அப்படிப்பட்டவனிடம் நாம் நம்பிக்கை வைக்கவில்லை; நன்றி கெட்ட நம்மிடையே இருக்க வேண்டாம் என அவன் சென்றுவிட்டான். இப்போது என்ன செய்வது என்றே புரியவில்லை."

யாருக்கும் குரல் எழும்பவில்லை. ஒருவாறு தன்னைச் சமாளித்துக்கொண்ட கத்ரு, "கடைசியாய்க் கண்ணனைப் பார்த்தவர் யார்?" என்று கேட்டான். "உத்தவன்!"வசுதேவர் கூறினார். "அவனுக்குத் தான் என்ன நடந்தது என்று தெரியும்." "உத்தவா, கடைசியாய் அவன் பேசிய வார்த்தைகள் என்ன?" உக்ரசேனர் கேட்டார். "மாட்சிமை பொருந்திய பாட்டனாரே, நாங்கள் அனைவருமே பீமசேனனை வழி அனுப்பச் சென்றோம். அவனை வழி அனுப்பிவிட்டுத் திரும்பி வரும்போது கண்ணன் என்னிடம், " உத்தவா, நான் என்ன செய்யப் போகிறேன் என்றோ ஏன் என்றோ எங்கே செல்லப் போகிறேன் என்றோ எதுவும் கேட்காதே." என்றான். உத்தவன் குரல் உணர்ச்சி மயமாய் இருந்தது. "பாட்டனாரே, கண்ணன் மேலும் என்னிடம், அவன் தாயையும், தகப்பனையும் கவனித்துக்கொள்ளுமாறும், தன்னுடைய நமஸ்காரங்களைத் தன் சார்பில் அவர்களுக்குத் தெரிவிக்குமாறும் கூறினான். மேலும் பெரிய அண்ணா பலராமனுக்கு எப்போதும் தான் அவர் அருகேயே இருப்பதாகவும், தன் நெஞ்சில் அவரைச் சுமந்து செல்வதாயும் கூறினான்." உத்தவனுக்குத் துக்கம் தாங்க முடியாமல் "ஓ"வென்று அழ ஆரம்பித்தான்.

Monday, October 3, 2011

சிறுமை கொண்டு ஒளித்தோடவும் செய்குவான்!

கண்ணன் உத்தவனைப் பார்த்து, “உத்தவா, அனைவரும் சிரத்தையின்றி, நம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர். தர்மம் ஜெயிக்கும் என்றே எண்ணவில்லை. நீயுமா அப்படி எண்ணுகிறாய்?” என்று கேட்டான்.

“இல்லை கண்ணா! நான் நம்பிக்கை இழக்கவில்லை; எல்லாவற்றுக்கும் மேல் உன்னிடம் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.”

“என்றால் என்னைப் பற்றிக் கவலைப்படாதே உத்தவா! ஆனால் இந்த மக்களிடம் நான் நம்பிக்கையை மீண்டும் உண்டாக்கவேண்டும். தர்மம் ஜெயிக்கும் என்பதை அவர்கள் நம்ப வேண்டும். அதைச் செய்யவில்லை எனில் நான் எதற்காகப் பிறந்திருக்கிறேனோ அதற்குப்பொருளே இல்லாமல் போய்விடும். நான் வாழ்வதற்கும் அர்த்தமில்லாமல் போய்விடும்.”

“எனக்குப் புரிகிறது கிருஷ்ணா!”

“உத்தவா, பின்னர் என்னை எதுவும் கேட்காதே! நான் என்ன செய்யப்போகிறேன், ஏன் செய்யப் போகிறேன், எப்படி என்றெல்லாம் ஆராயாதே! தந்தையையும், தாயையும் நன்றாகக் கவனித்துக்கொள். என் சார்பாக அவர்களை நீ நமஸ்கரித்து ஆசிகளைப் பெற்றுக்கொள். பெரிய அண்ணா பலராமனுக்கும், மற்றவர்களுக்கும் நான் எப்போதுமே அவர்களுடனே இருப்பேன் எனவும் அவர்களைக் கைவிடமாட்டேன் என்றும் உறுதியாய்ச் சொல். மேலும் முக்கியமான செய்தி என்னவெனில், இதை யார் விருப்பமுடன் கேட்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் சொல். கிருஷ்ணனை விடவும் தர்மம் உயர்ந்தது; கண்ணன் காப்பாற்றுகிறானோ இல்லையோ, தர்மம் நிச்சயம் கைவிடாது; காப்பாற்றும். அது ஒன்றே யாதவர்களைத் தற்போது காக்க வல்லது. அதற்காகக் கண்ணன் தன் உயிரைக் கூடக் கொடுக்க வேண்டுமானால் கொடுப்பான். அப்படி என் உயிரைக் கொடுப்பதன் மூலம் அதிசயம் நிகழ்ந்தால் அதுவும் ஏற்புடையதே. அவர்களை அது நம்பிக்கை கொள்ள வைக்கும்.”

இதைச் சொன்ன கிருஷ்ணன் உத்தவனை இறுகத் தழுவிக்கொண்டான். பின்னர் தன் ஆபரணங்களையும், ஆயுதங்களையும் உத்தவனிடம் கொடுத்துவிட்டு ஒரு தடியை மட்டும் எடுத்துக்கொண்டு நீண்ட அடிகளை வைத்து வேகமாய் நடந்து இருளில் மறைந்தான். மறுநாள் காலை மதுரா நகரமே அதிர்ந்தது. கண்ணன் இரவோடிரவாக ஊரை விட்டே ஓடிவிட்டான். அவன் எங்கே போயிருக்கிறான் என்பதை எவரும் அறிய மாட்டார்கள். பயங்கரக் காட்டின் மத்தியில் மேய்ந்து கொண்டிருந்த கால்நடைக்கூட்டம், சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்ட மாத்திரத்தில் எவ்வாறு பயந்து இங்குமங்கும் ஓட நினைத்து ஓடுமோ அவ்வாறே மதுராவின் யாதவர்களும் இங்குமங்கும் ஓடினார்கள். மாட்டுக்கூட்டத்தை அடக்கி வழிக்குக் கொண்டு வர இடையன் இல்லாது போனது போல இவர்களுக்கும் தலைமை தாங்கக் கண்ணன் இல்லை. ஒருவருக்கொருவர் இனி என்ன என்று பேசிக்கொண்டார்கள். ஜராசந்தன் வந்துவிடுவான்; கால யவனன் வந்துவிடுவான்; இதை எல்லாம் காட்டிலும் மேலாக அச்சமும், பீதியும் அவர்களை ஆட்டிப் படைத்தது. “கண்ணன் என்னமோ தப்பி ஓடிவிட்டான்! என்ன ஆகப்போகிறதோ நமக்கெல்லாம்~!” இந்தக் கவலையே அவர்களை ஆட்டிப் படைத்தது.

கண்ணனால் எந்தவிதமான பிரச்னைகளையும் எதிர்கொள்ள இயலாது; சத்ராஜித்தும் அவன் நண்பர்களும் திட்டமாய்க் கருதினார்கள். எந்த ஆபத்தாய் இருந்தாலும் கண்ணன் தன்னை எப்படியோ காப்பாற்றிக்கொள்வான். அப்படித் தான் முன்னர் ஓடிப்போனான்; அதே போல் இப்போது அவன் ஓடிவிட்டான். நாம் அவனை நம்பிப் பிரயோஜனம் இல்லை. நமக்கு இப்போது ப்ருஹத்பாலன் ஒருவனே கதி! வேறு வழியில்லை; முன்னர் ஒருமுறை ப்ருஹத்பாலன் ஜராசந்தனிடம் பேசி அனைவரையும் காப்பாற்றினான். ஆகவே இப்போதும் அவனிடமே செல்ல வேண்டும். அனைவரும் ப்ருஹத்பாலனிடம் சென்று தங்கள் நட்பைப்புதுப்பித்துக்கொள்ள வேண்டினார்கள். அதோடு ஜராசந்தனிடமும் அவர்களுக்காகப் பேசச் சொன்னார்கள். ஆனால் ப்ருஹத்பாலனுக்குத் தன்னுடைய உண்மையான நிலைமை நன்கு தெரியும். தான் எந்தச் செயலையும் சுயமாய்ச் செய்ய முடியாது என்றும் செயல் இழந்த நிலையில் இருப்பதும் அறிவான். ஆனால் அதற்காக இவர்கள் எதிரில் தன் உண்மை நிலையைக் காட்டிக்கொள்ள முடியுமா! அவனால் இயன்றதெல்லாம் தன் முன்னாள் நண்பர்களைப் பார்த்துக் கோபத்தோடு கத்துவது ஒன்றே.

“போங்கள், இங்கிருந்து ஓடுங்கள், உங்கள் கோவிந்தன், கோபாலன், கிருஷ்ண வாசுதேவன், இன்னும் எத்தனை பெயர்கள் அவனுக்கு! அவனைக் கேளுங்கள் பாதுகாப்பு. நன்றாய்ச் செய்து கொடுப்பான். அவனைத் தானே உங்களைக்காக்க வந்த ரக்ஷகனாக நினைத்தீர்கள்! காப்பான். போய்க் கேளுங்கள்.” அனைவருக்கும் ஏமாற்றமும், கோபமும் பொங்க ப்ருஹத்பாலனைத் திட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.

கண்ணன் இருந்தவரையிலும் தங்களுக்கு உயிர் தப்ப ஊசிமுனை அளவு சந்தர்ப்பமாவது இருக்கிறது என நினைத்த சாத்யகி, விராடன் போன்றவர்களுக்கு நிலைமையின் பயங்கரம் இப்போது புலப்படத் திகைத்தனர். யாதவத் தலைவர்களும் கிருஷ்ணன் தங்களைக் கைவிட்டுவிட்டானே என்ற கோபத்தில் என்ன செய்வது எனப் புரியாமல் திகைத்தனர். அனைவரும் பலராமனிடம் சென்று கேட்க அவனுக்குக் கோபம் வந்தது. கண்ணனிடம் நம்பிக்கை இல்லாமல் இருப்பது குறித்துக் கோவித்துக் கத்தினான் பலராமன். சாத்யகியைப் பார்த்து, “நேற்று அவனைத் தனிமையில் விட்டுவிட்டு வேடிக்கை பார்த்தீர்களே! இப்போது மட்டும் கண்ணன் தயவு தேவையா உங்களுக்கெல்லாம்! கோழைகள்! கோழைகள்! நீங்களே அவனைத் தேடிக்கண்டுபிடியுங்கள். அல்லது காலயவனன் கைகளிலோ, ஜராசந்தன் கைகளிலோ மாட்டிக்கொண்டு செத்துத் தொலையுங்கள். அதுதான் உங்களுக்குச் சரியான தண்டனை!” என்று கத்தினான்.

“அண்ணா, பெரிய அண்ணா! நீங்களே இப்படிச் சொன்னால் எப்படி! இந்தக் கஷ்டமான நிலையில் நீர் தான் எங்களுக்குத் தலைமை தாங்கி வழிநடத்த வேண்டும்.” சாத்யகி கெஞ்சினான்.

“அப்படி எதுவும் நான் செய்வேன் என நினைக்காதே சாத்யகி! நான் கூடிய சீக்கிரமே கண்ணன் இருக்குமிடம் போய்ச் சேர்ந்துவிடுவேன். அவன் நிச்சயமாக ஆபத்தை நோக்கியே சென்றிருக்கிறான். நீங்களெல்லாம் அங்கே வருவதற்குத் தகுதி உள்ளவர்களே அல்ல. இங்கே உங்களோடு இருப்பதைக் காட்டிலும் நான் அங்கே கண்ணனோடு ஆபத்தைச் சந்திக்கவே விரும்புகிறேன்.” பலராமன் கோபம் பொங்க ஆவேசத்துடன் கூறினான். சாதாரண மக்களோ கண்ணனைக் கடவுளாகவே நினைத்ததால் அவன் ஒருவனாலேயே தங்களைக்காக்க முடியும் என எண்ணி இருந்தவர்களுக்கு இப்போது அவன் நகரிலேயே இல்லை என்றதும், விதி தங்களைத் துரத்துவதை எண்ணித் துன்புற்றனர். மூத்த யாதவத் தலைவர்களாலும் எதுவும் செய்ய இயலவில்லை என்று நினைத்து நொந்து வருந்தினார்கள். வேறொரு சமயம் இதெல்லாம் கண்ணனால் தானே வந்தது; இப்போது அவன் மட்டும் தப்பிவிட்டானே எனக் கோபம் கொண்டனர். சில நாட்கள் முன்னர் தான் இதே கண்ணனைப் பாராட்டி அவர்கள் அனைவரும் கூறிய வார்த்தைகள் அவர்களுக்கு மறந்தே போனது.

Saturday, October 1, 2011

ஆயிரமாண்டுகள் பட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான்!

தன் சொந்த மனிதர்கள். அனைவரும் யாதவர் குலமக்கள். உறவின் முறையினர். அவர்கள் தன்னிடம் காட்டிய அவநம்பிக்கையும், வெறுப்பும், கோபமும் கண்ணனைத் தகித்துச் சுட்டெரித்தது. செய்வதறியாமல் யமுனையை நோக்கி நடந்த கண்ணனுக்கு அப்போதுதான் சாத்யகி தன்னோடு வரவில்லை என்பது புரிய வந்தது. தினமும் நம்மோடு சேர்ந்து கொள்வான்; இன்று நம்முடன் வர இஷ்டப்படவில்லை போலும். மென் சிரிப்பு இழையோடியது கண்ணன் முகத்தில். கண்ணன் யமுனையை விட்டு வெளியேறியதுதான் தாமதம், அங்கிருந்த ஆண், பெண், குழந்தை, குட்டிகள் அனைவருமே அவனைச் சூழ்ந்து கொண்டனர். நேரம் ஆக, ஆகக் கூட்டம் பெரிதாகிக்கொண்டிருந்தது. ஒருவரை ஒருவர் தள்ளும் நிலைமைக்குப் போனது. அனைவரும் உள்ளூரக் கொதித்துக்கொண்டிருந்தது அவர்கள் முகத்தில் இருந்து தெரிந்தது. “கண்ணா, கண்ணா, இந்த மாதிரியானதொரு நிலைக்கு எங்களை ஆளாக்கிவிட்டாயே!” கூட்டத்தில் ஒரு வயது முதிர்ந்தவன் திடீரெனக் கேட்டதோடு, “உன்னால்நாங்கள் அனைவரும் அடியோடு அழியப் போகிறோமே!” என்றும் வருத்தம் தொனிக்கச் சொன்னான்.

“எனக்கும், என் குழந்தைகளுக்கும் என்ன ஆகப் போகிறதோ!” இன்னொருத்தி புலம்ப, கம்சன் கொடுமைப் படுத்தினாலும், நாங்கள் அவன் சொன்னபடி கேட்டால் எங்களை வாழவாவது விட்டிருந்தான். இப்போது எங்கள் உயிருக்கே உத்தரவாதம் இல்லை.” என்று இன்னும் சிலர் புலம்பினார்கள். கண்ணனைச் சுற்றிலும் இப்படியான கூக்குரல்கள் அதிகரிக்க, இன்னொருத்தர் கம்சனைக் கொன்றதால் ஏற்பட்ட சாபம் தான் இப்படி விடாப்பிடியாகச் சுற்றுகிறது எனவும் கண்டுபிடித்துக் கூறினார்.

எங்கள் குழந்தைகளின் கதி நிர்க்கதியானால் உனக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் மஹாதேவி துர்கையின் கேள்விகளுக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும் என இன்னொருவர் ஆத்திரப்பட, வேறொருத்தரோ, ஓர் மாட்டிடையனை நம்பி எங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்ததால் இன்று நாங்கள் அனைவரும் தீக்குளித்தாகவேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என வெறுப்புடன் கத்தினார். கண்ணன் அவர்களை எவ்வளவோ சமாதானம் செய்ய நினைத்தான். தன் முகத்தின் புன்னகை வாடாமல் அவர்களைத் திரும்பிப் போக வைக்க எண்ணினான். ஆனால் கண்ணனின் அந்த மாயாஜாலம் இப்போது இந்த ஆத்திரம் கொண்டு வந்திருக்கும் கூட்டத்திடம் எடுபடாது போல் இருந்தது. ஆகவே அவர்களின் ஆத்திரமும், ரெளத்திரமும் குறைய இடம் கொடுத்துக் கண்ணன் பேசாமல் அப்படியே நின்று கொண்டிருந்தான். பீமனுக்கும், உத்தவனுக்கும் அந்த மக்களை ஒரு கையால் தள்ளிவிட்டுக் கண்ணனை அங்கிருந்து மீட்டுக்கூட்டிச் சென்றுவிட ஆவல்தான். கண்ணனின் கண்ணசைவுக்காகக் காத்திருந்தனர். அவனோ பேசாமல் இருக்கச் சொல்லிவிட்டான்.

அம்மக்களைப் பார்த்துக்கண்ணன், “ ஆம், ஆம், என்னாலேயே இப்படி ஒரு துன்பம் உங்களுக்கெல்லாம் ஏற்பட்டு விட்டது. உங்கள் உணர்வுகள் எனக்குப் புரிகிறது.” என்று வருத்தம் தொனிக்கக் கூறினான். “ஆஹா, உனக்குப் புரிந்து என்ன பயன் அப்பா?? போனமுறை ஓடிப் போய் ஒளிந்து கொண்டு உன்னைக் காப்பாற்றிக்கொண்டது போல, இப்போது நீ உன்னைக் காத்துக்கொண்டுவிடுவாய்!” ஏளனம் தொனிக்க ஒரு முதியவன் கூறினான். “உங்களில் ஒருவர் உயிர் கூட ஜராசந்தனால் எடுக்கப் படாது; இதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். நான் உயிருடன் இருக்கும்வரையிலும் உங்களில் எவரையும் ஜராசந்தனால் எதுவும் செய்ய இயலாது.” கண்ணன் கிட்டத்தட்ட உறுதிமொழி கூறினான். “நீ உன்னை ஜராசந்தனிடம் ஒப்படைத்துக்கொள் அப்பா! அப்போது தான் எங்கள் உயிருக்கு உத்தரவாதம்.” ஒரு திடகாத்திரமான மூத்த பெண்மணி ஏளனக் குரலில் கூறினாள். ஆத்திரத்திலும் ஆங்காரத்திலும் அவள் முகம் சிவந்து கண்கள் கோவைப்பழமாகக் காட்சி அளித்தன.

“அதுதான் உங்கள் அனைவரையும் காக்கும் எனில், நான் அதற்கும் தயாரே! என் அருமைச் சகோதர, சகோதரிகளே, தாய்மார்களே, தந்தைமார்களே! தர்மம் என ஒன்று இருப்பதை ஏன் மறந்துவிட்டீர்கள்? தர்மம் எங்கிருக்கிறதோ அங்கே வெற்றிதான்.”
“இது ஒரு முட்டாள்தனமான நம்பிக்கை. இப்போதெல்லாம் அதர்மம் ஒன்றே மாபெரும் வெற்றியைப் பெறுகிறது.”

“இல்லை;இல்லவே இல்லை;” கிருஷ்ணனின் கண்கள் மினுமினுத்தன. அவன் குரலிலோ பொறுமை இல்லாமல் காணப்பட்டது. “தர்மம் ஒருநாளும் அழியாது; அதற்குச் சாவில்லை; யார் தர்மத்திற்காக வாழ்கின்றனரோ, தர்மத்தைக் காக்கப் பாடுபடுகின்றனரோ அவர்கள் நசிந்தெல்லாம் போகமாட்டார்கள். “ சட்டென ஏற்பட்ட அதிகாரமும், தீர்க்கமும் நிறைந்ததொரு குரலில் கண்ணன் மேலே கூறினான்:” அனைவரும் உங்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள். கடவுள்களுக்கெல்லாம் கடவுளான அந்த மஹாதேவரின் மேல் நம்பிக்கை வையுங்கள். தர்மத்தை நம்புங்கள்; அது உங்களை எந்நாளும் காக்கும். தர்மம் தலை காக்கும். இதோ இந்த யமுனை நதிக்கரையில் அன்னை யமுனையின் முன்பாக உங்கள் அனைவருக்கும் நான் உறுதிமொழி அளிக்கிறேன்: நான் இருக்கும்வரை உங்களில் ஒரு சிறு குழந்தையைக் கூட நம்மை அழிக்க வரும் எதிரியால் அழிக்க முடியாது. இது சத்தியம். இப்போது நீங்கள் செல்லலாம்.” கண்ணன் மேலே ஓரடி எடுத்து வைக்கக் கூட்டம் தன்னையறியாமல் விலகி அவனுக்கு வழிவிடக் கண்ணன் தன் வழியே சென்றான்.

அப்போது கூட்டத்தில் ஒரு குரல், “இந்த மாட்டிடையனுக்கு நன்றாக, அழகாகப் பேசத் தெரிந்திருக்கிறது. பேச்சால் அனைவரையும் மயக்கிவிட்டான்; ஆனால் நான் சொல்கிறேன் பார்த்துக்கொண்டே இருங்கள்; இவன் ஒரு நாள் இரவு திடீரென ஒருவரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் தன்னுயிரைக் காப்பாற்றிக்கொண்டு ஓடிவிடுவான். ஜராசந்தன் வருகையில் இவன் அகப்படமாட்டான்; நாம் தான் மாட்டிக்கொள்ளப் போகிறோம்.” இதைக் கேட்ட கூட்டம் மேலும் ஆவேசம் அடைந்து கத்தலும், புலம்பலும் ஆரம்பமாயிற்று. அதைக் கேட்ட கண்ணன், ஒரு கண நேரம் யோசித்துவிட்டு, “இந்த ஆண்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்கின்றனர்.” என்று வருத்தமாய்ச் சொன்னான். நாள் பூராவும் வசுதேவரின் வீட்டுக்கு மக்கள்கூட்டம் கூட்டமாய் வந்து தங்கள் ஆத்திரத்தை, வெறுப்பை, கோபத்தைக் காட்டிச் சென்றார்கள். வசுதேவர் அவர்களைச் சமாதானம் செய்தார். ஆனால் யாரும் அவரை நம்பவில்லை. தேவகி அம்மாவும் மக்களிடம் மஹாதேவரை நம்பும்படியும், தர்மத்தின் பால் நம்பிக்கைகொள்ளும்படியும் வேண்டினாள். அனைவருமே அவளை இகழ்ச்சியாகப் பார்த்தனர்.

கண்ணனோ இவை ஒன்றையும் கவனிக்காமல் பீமன் ஹஸ்தினாபுரம் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தான். ஒருவழியாக பீமன் கிளம்ப கண்ணன் அவனுக்குப் பிரியாவிடை கொடுத்தனுப்பக் கூடவே சிறிது தூரம் சென்றான். அப்போது பீமன் கண்ணனிடம்,” கண்ணா, இவ்வுலகிலேயே மகிழ்ச்சியும், வேடிக்கை, விளையாட்டும் நிரம்பிய ஆள் நீ ஒருவனே என எண்ணி இருந்தேன்; என் எண்ணங்கள் எவ்வளவு தவறானவை என்று இப்போது தான் எனக்குப் புரிய வருகிறது. நீ தான் மிகவும் துயரத்திலும், துன்பத்திலும் இருக்கிறாய்.” என்றான். “சகோதரா, நாம் மகிழ்ச்சி என்ற வார்த்தையிலும், துன்பம், துயரம் என்ற வார்த்தையிலும் என்ன பொருளைக் காண்கிறோம்? துயரமோ, மகிழ்ச்சியோ தொடாத வேறு ஏதோ ஒன்று இருக்கிறது அல்லவா? அதை நீ அறிவாயா? ஒருவேளை தொடர்ந்து வரும் பலவேறு இக்கட்டுகளிடையே அதை நாம் புரிந்து கொள்ள நேரிடலாம்.” கிருஷ்ணன் ஆழ்ந்த யோசனையில் இருந்தான்.

“ஆஹா, கண்ணா, நீ இதையெல்லாம் தவறான ஆளிடம் கூறுகிறாயே! நம் மூத்த சகோதரர் யுதிஷ்டிரரிடம் இதை எல்லாம் கூறுங்கள். அவரே சரியான நபர். இதை எல்லாம் புரிந்தும் கொள்வார். உன்னோடு விவாதிக்கவும் செய்வார். இப்போது ஆளை விடு. நான் சந்தோஷமாகவோ, சந்தோஷமில்லாமலோ இருந்துவிட்டுப் போகிறேனே! என்னுடைய ஆசிகள் உனக்கு!” என்று வழக்கம்போல உற்சாகக் குரலில் கூறினான். கிருஷ்ணனும், உத்தவனும் பீமன் காலைத் தொட்டு வணங்க, பீமன் விடைபெற்றுச் சென்றான். “உத்தவா! பாண்டவர்கள் ஐவருமே மிகவும் உயர்குடிப்பிறப்பு மட்டுமின்றி அதற்கேற்ற உயர்ந்த உள்ளமும் பெற்றவர்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தார்களெனில் நிச்சயமாய் தர்மம் ஸ்தாபிதம் செய்யப் படும். ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வருவது எப்போது?” கண்ணன் யோசனையில் ஆழ்ந்தான்.