Thursday, February 28, 2013

திரெளபதி மனம் திறக்கிறாள்!


கிருஷ்ணனின் மனம் நெகிழ்ந்தது.  திரெளபதியின் ஆழ்ந்த வருத்தம் அவனைக் கொஞ்சம் அசைத்தது. அவளைப் பார்த்து அவன், “நான் மாட்சிமை பொருந்திய மன்னருக்கு உதவவே விரும்புகிறேன், இளவரசி!  ஆனால் நீங்கள் அனைவரும் விரும்பும் வகையில் அல்ல.”  அவர்கள் அனைவரும் கிருஷ்ணன் மேல் வைத்திருந்த ஆழ்ந்த நம்பிக்கையைப் பொய்ப்பிக்க வேண்டுமே என நினைக்கையிலேயே கண்ணன் மனம் மிக வலித்தது.  ஆனால் அவர்கள் கூறியதை அவன் ஏற்றால் அவன் மனமே அவனை மன்னிக்காது.  எந்த தர்மத்தைக் காக்கவென அவன் பாடுபடுகிறானோ அதற்கு விரோதமாகவே இருக்கும்.  இக்கட்டான சூழ்நிலையில் தான் இருப்பதைக் கண்டு கண்ணன் மனம் வருந்தினான்.   அதே சமயம் திரெளபதி அவனைப் பார்த்து, “கண்ணா, தர்மத்தைக் காக்கவென்றே நீங்கள் அவதாரம் எடுத்திருப்பதாய் அனைவரும் கூறுகின்றனர்.  எங்களுக்கு உதவி செய்வதன் மூலம் உங்களுடைய தர்மம் காக்கப்படாதா?  தர்மத்துக்கு விரோதமான எதையும் உங்களை  நாங்கள் செய்யச் சொல்லவே இல்லையே!  துரோணரால் நாங்கள் எவ்வளவு கொடூரமான முறையில் நடத்தப் பட்டோம் என்பதை நீர் அறிவீரா?”   திரெளபதியின் முகத்திலும் குரலிலும் மீண்டும் நம்பிக்கைக்கீற்று தென்பட்டது.

“ஏதோ கொஞ்சம் அறிவேன்.  முழு விபரங்களும் தெரியாது.” என்றான் கண்ணன்.  கண்ணன் முகத்தை நேருக்கு நேர் தைரியமாகப் பார்த்த திரெளபதி, “எனில் நான் சொல்கிறேன், கேளுங்கள்!” என்றாள்.  “அப்போது அஹிசாத்ராவில் என் தந்தை ஒரு திருவிழாவை ஏற்பாடு செய்து நடத்திக் கொண்டிருந்தார். கோயிலில் இருந்து கடவுளரை வணங்கிவிட்டு அங்கிருந்த அந்தணர்களும், அர்ச்சகர்களும் புடைசூழ என் தந்தை அப்போது தான் வெளியே வந்தார்.  கோயிலைச் சுற்றிலும் கோயிலுக்குள்ளும் மக்கள் வெள்ளம்.  எவரும் ஆயுதம் தரிக்கவில்லை.  அந்தச் சமயம் பார்த்து துரோணரும் அவருடைய சீடர்களும் ஆயுதபாணியராகச் சூழ்ந்து கொண்டனர்.  இது தர்மத்துக்கு விரோதமில்லையா?  அர்ஜுனன் தூரத்திலிருந்து ஒரு மரத்தின் அருகிருந்து என் தந்தையைக் குறி வைத்தான்.  ஒரே அம்பில் என் தந்தையின் கிரீடத்தைக் கீழே தள்ளினான்.  அடுத்த அம்பில்  என் தந்தையின் வலது காதின் தங்க வளையங்கள் இரண்டு துண்டாக ஆகிவிட்டன.  மூன்றாவதில் அவரின் காலில் காயத்தை ஏற்படுத்தினான்.  என் தந்தை தன்னைச் சமாளித்துக் கொள்ளக் கூட அவகாசம் கொடுக்கவில்லை.  அவர் தன்னைச் சமாளித்துக் கொண்டு தன் வில்லையும், அம்பையும் எடுப்பதற்குள்ளாக அர்ஜுனன் தாக்குதலால் கீழே விழுந்துவிட்டார்.  அவரைச் சூழ்ந்திருந்த மக்கள் அனைவரும் நிராயுதபாணியாக இருந்தமையால் பயந்து ஓடி விட்டனர்.  பின்னர் பீமனும், அர்ஜுனனும் அவரை இழுத்துக் கொண்டு போய்க் கட்டி துரோணரிடம் இழுத்துச் சென்றனர்.  என் தந்தை,  இந்த ஆர்ய வர்த்தத்தின்  ஒரு பகுதியான  பாஞ்சாலத்தின் மாட்சிமை பொருந்திய மன்னர் ஒரு திருடனைப் போல இழுத்துச் செல்லப்பட்டார்.” பேச்சை நிறுத்திய திரெளபதிக்கு மேல் மூச்சு வாங்கியது.  அவள் கண்களில் இருந்து அக்கினி ஜ்வாலை கிளம்பியது.  அவள் குரோதத்தின் உச்சியில் இருப்பதை அவள் முகம் காட்டியது.

அவள் மேலே தொடரட்டும் எனக் கிருஷ்ணன் காத்திருந்தான். 

“அர்ஜுனனோ, பீமனோ சரியான போர் வீரர்களைப் போல நேருக்கு நேர் யுத்தம் புரிந்திருந்தால் என் தந்தை அதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டிருக்கவே மாட்டார்.  யுத்தம் மன்னர்களுக்குள்ளே நடைபெறுவது சகஜம் தானே!  ஆனால் துரோணரோ அவ்விதம் யுத்தம் புரிய அனுமதிக்கவில்லை.  அவர் என் தந்தையை சற்றும் எதிர்பாராவிதத்தில் ஜெயிக்கவே விரும்பினார்.  அதுவும் அவருடைய சீடர்களுக்கும், அவருடைய அஸ்தினாபுரத்து மக்களுக்கும் தெரியும்படி ஜெயிக்க விரும்பினார்.  அவருடைய மாணாக்கர்களுக்கு எதிரே என் தந்தையை அவமானப்படுத்தி, அவரைக் கேவலமாக நடத்தித் தனக்கெதிரே மண்டி போட வைக்கவும் விரும்பினார்.   அவர் விரும்பியதை நடத்திக் கொண்டார்.  ஹூம், அதே போல் நடத்தினார்.  என் தந்தை மன்னிப்புக் கேட்டுக் கொண்டதற்குப் பின்னரே விடுதலை செய்யப் பட்டார்.  என் தந்தை அளித்த வாக்குறுதிப்படி நடக்காததற்கும், அதை உடைத்ததற்கும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு அல்லாமல் எங்கள் நாட்டின் ஒரு பகுதியையும் துரோணருக்குக் கொடுக்க வேண்டி வந்தது.  அப்படியும் அவருக்குத் திருப்தி இல்லை.  எங்கள் நாட்டைப் பறித்துக் கொண்டதோடு அல்லாமல், எங்கள் மக்களைக் கொள்ளை அடித்தார்; அவர்களை சொந்த நாட்டை, வீட்டை விட்டு விரட்டி அடித்தார்.  பசியுடனும், துக்கத்துடனும், ஆதரவு காட்ட மனிதர்கள் இல்லாமல் அவர்களைத் துரத்தி அடித்தார்.”

திரெளபதி கண்ணனுக்கு நடந்தவற்றைச் சொல்லுவதாக ஆரம்பித்திருந்தாலும், அவள் தனக்குத் தானே அந்த நிகழ்வுகளை மீண்டும் தன்னுள் காண ஆரம்பித்திருந்தாள் என்று தெரிய வந்தது.   அதிலும் அந்த நிமிஷம் அவள் அந்த நிகழ்ச்சியை, அவள் தந்தையின் அவமானத்தை நேருக்கு நேரே கண்டு கொண்டிருந்தாள் என்பதையும் உணர முடிந்தது.  அந்த நிகழ்வுகளின் காலத்துக்குச் சென்று மீண்டும் வாழ ஆரம்பித்த அவள் குரல் கோபத்திலும், குரோதத்திலும் நடுங்க ஆரம்பித்தது.  அவள் கண்களில் தெரிந்த ஒளி ஒரு தீப்பிழம்பைப் போல் காணப்பட்டதெனில் அவள் முகமே அக்னியால் சூழ்ந்தது போல் சிவந்து  இருந்தது.  திடீரெனத் தன்னைச் சமாளித்துக் கொண்ட திரெளபதி பேச்சை நிறுத்தினாள்.

Sunday, February 24, 2013

திரெளபதியுடன் கண்ணன்!


மறுநாள் காலையிலே திருஷ்டத்யும்னன் வந்து திரெளபதியைப் பார்த்துப் பேசக் கண்ணனை அழைக்க வந்தான்.  இரவு முழுவதும் தூங்காத அசதியும், சோர்வும் அவன் முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது.  ஆனாலும் கண்ணன் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை.   தன்னுடைய கிரீடத்தை எடுத்து வைத்துக் கொண்டு கண்ணன் திரெளபதியைச் சந்திக்கக் கிளம்பினான்.  திரெளபதி தனியாக அவனைச் சந்திக்கவில்லை என்றும் தன் சகோதரர்கள் ஆன திருஷ்டத்யும்னனும், சத்யஜித்தும் அருகில் இருக்கையிலேயே சந்திக்க ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது என்பதையும் கிருஷ்ணன் உணர்ந்தான்.  ஆனால் இப்போதும் இன்னொரு சகோதரன் ஆன ஷிகன்டின் அங்கே காணப்படவில்லை என்பதையும் கவனித்துக் கொண்டான்.  அந்த இளைஞனைக் குறித்த மர்மம் ஏதோ உள்ளது!  அதற்குள்ளாகக் கண்ணனின் சிந்தனைகளைக் கலைத்துக் கொண்டு அவன் எதிரே அமர்ந்த திரெளபதி தலையைக் குனிந்து அவனை வணங்கினாள்.  அவள் தலையில் சூடியிருந்த மலர்களின் சுகந்தம் அந்த அறை முழுதும் நிரம்பி இருந்தது. 

அவளைப் பார்த்துக் கிருஷ்ணன், “ஒருவேளை இது சம்பிரதாயத்துக்கு விரோதமாக இருக்கலாம், மாட்சிமை பொருந்திய இளவரசியே.  ஆனால் மன்னர் நான் உங்களைச் சந்தித்துப் பேச வேண்டும் என விரும்பினார்.  ஆகவே அவர் விருப்பத்தின் பேரிலேயே உங்களைச் சந்திக்கச் சம்மதித்தேன்.” என்றான்.  தன்னுடைய விசாலமான கண்களால் கண்ணனை நேருக்கு நேராகப் பார்த்தாள் திரெளபதி.  அவன் மனத்தின் ஆழத்தை அந்தக் கண்களால் அளக்க முற்படுகிறாளோ?  பின்னர் சற்றே தயங்கிய மெல்லிய குரலில், “நான் என் தந்தையிடன் உங்களைக் கண்டு பேச வேண்டும் என வற்புறுத்தினேன்.  ஒருவேளை ஒரு பெரிய நாட்டின் அரசகுமாரிக்கு இதெல்லாம் உகந்தவையாக இல்லாமல் இருக்கலாம்.  சம்பிரதாய விரோதமாகவும் இருக்கலாம்.  பாரம்பரிய மிக்க அரசகுடும்பத்தில் பிறந்த எனக்கு இது பாரம்பரியத்தைப் பின்பற்றாத ஒரு விஷயமாகவும் இருக்கலாம்.”

பின்னர் தன் உறுதியான குரலில் தீர்மானமாகப் பேச ஆரம்பித்தாள்.  அவள் குரலின் தன்மையைக் கண்ட கிருஷ்ணன் தன் தகப்பனிடமிருந்து இந்த குணத்தை அவள் பெற்றிருக்கிறாள் என்பதை உணர்ந்தான்.  அவள் கண்ணனுக்குக் காட்டிய பணிவான தன்மைக்கு நேர் விரோதமான குரலில் பேசினாள்.  “நான் எங்களுக்கு உதவ உங்களால் முடியுமா முடியாதா என உங்களைக் கேட்க எண்ணினேன்.  அதுவும் நானே நேரிடையாகக் கேட்க வேண்டும் என விரும்பினேன்.”  என்றாள்.  கிருஷ்ணன் முகத்தில் தவிர்க்க முடியாத அந்தப் புன்னகை தோன்றியது.  இந்தப் பெண்ணின் மனோதைரியத்தையும், வெளிப்படையான பேச்சையும் கண்டு வியந்தான்.  உள்ளூர அவளைப் பாராட்டவும் செய்தான்.  “இளவரசி,   தாங்களும், தங்கள் தந்தையும் என்னிடம் காட்டும் கருணையால் நான் நெகிழ்ந்து விட்டேன்.  தங்களிடம் எதையும் மறுக்க இயலாதபடி செய்து விட்டீர்கள்.”  என்றான்.  “ஆனால் ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள் உங்களுக்கு உதவ?  அதை நான் தெரிந்து கொள்ளலாமா?”

இப்போது திருஷ்டத்யும்னன் குறுக்கிட்டான். “கண்ணா, உன்னைக் குறித்தும் உன் சாகசங்கள் குறித்தும் நாங்கள் இரண்டு வருடங்களாக  யோசித்து வருகிறோம்.  உன்னைக் குறித்து இரண்டு வருடங்களாகச் சிந்தித்து வருகிறோம்.  நீ எப்போது யாதவர்களை மதுராவிலிருந்து தப்ப வைத்து செளராஷ்டிரம் அழைத்துச் சென்றாயோ அப்போதிலிருந்து வியந்து வருகிறோம்.”  என்றான். 

“எவ்வகையில் நான் உதவ முடியும்?? யாதவர்கள் எங்கோ மேற்குக் கடற்கரைக்குப் பக்கம் தூரத்தில் இருக்கின்றனர்.  அவ்வளவு வலுவாக இருப்பதாகவும் சொல்ல முடியாது.  மேலும் நானும் ஒரு அரசன் இல்லை.”

“நீங்கள் ஒரு அரசனை விடவும் மேம்பட்டவர்.  நீங்கள் ஒரு கடவுள்.  ரக்ஷகர்.  அப்படித்தான் ஆர்யவர்த்தம் முழுதும் பேசுகிறது.  இந்த ஆரியர்களுக்குள்ளேயே உங்கள் ஒருவரைத்தான் மொத்த ஆர்ய வர்த்தமும் மதிக்கிறது.  மதித்து வணங்குகிறது.”  வருத்தம் தோய்ந்த விழிகளுடன்  பேசினாள் திரெளபதி.  அவள் வருத்தத்திற்குக் காரணம் புரியவில்லை கிருஷ்ணனுக்கு.  தன் தந்தையின் நிலை குறித்தா?  ஆம், அப்படித்தான் இருக்க வேண்டும்.  கிருஷ்ணனுக்கு இந்தப் பெண்ணின் பேச்சு மட்டுமில்லாமல் அவள் உறுதியும் பிடித்தது.  தன் தந்தைக்காக இவள் எப்படிப் பட்ட பிரச்னையையும் சந்திக்கத் தயாராக இருக்கிறாள்.  அவள் மேல் மதிப்பு உயர்ந்தது கண்ணனுக்கு.

“குரு சாந்தீபனி உன்னைக் குறித்த அனைத்துத் தகவல்களையும் கூறினார் வாசுதேவா!  ஜராசந்தன் கூட உன்னைக் கண்டு பயப்படுகிறான் என்றும் அறிந்தோம்.”  திருஷ்டத்யும்னன் கூறினான்.

“குருஜி என்னிடம் எப்போதும் அன்பு அதிகம் காட்டி வருகிறார்.  ஆனால் மன்னர் துருபதன் என்னிடம் வைத்த வேண்டுகோள் என் சக்திக்கு அப்பாற்பட்டது.  என்னால் துரோணரோடு யுத்தம் செய்ய முடியாது;  ஏனெனில் குரு வம்சத்தினரோடு எனக்கு யுத்தம் செய்யும் அளவுக்கு எதிரிகள் இல்லை.”  திரெளபதியின் முகத்தை ஏமாற்றம் என்னும் மேகம் சூழ்ந்து கொண்டது.  ஏனெனில் இவ்வளவு நேரம் பிரகாசமாக இருந்த அவள் முகம் இப்போது கறுத்தது.  முகம் கவலையில் ஆழ்ந்து போகக் கண்கள் கீழ் நோக்கிப் பார்த்தன.  தனக்கே கேட்குமோ கேட்காதோ என்னும்படியான மெல்லிய குரலில் அவள் கண்ணனிடம், " வாசுதேவா, அப்போது, அப்போது,  நீங்கள் எங்கள் உதவிக்கு வரப் போவதில்லை என்று முடிவே செய்து வீட்டீர்களா?" என்று கேட்டாள். அவளது அழகிய விசாலமான கண்களில் நிரம்பிய நீரைப் பார்த்த கண்ணன் ஒரு மாபெரும் சமுத்திரத்தின் அலைகள் கரையில் வந்து மோதிக்  குமுறிக் கொண்டிருப்பதைப் போல் உணர்ந்தான். 

Monday, February 18, 2013

கண்ணனும், நண்பர்களும்!


“ஏன் கண்ணா?” என்று சாத்யகி கேட்க, கண்ணன்,  “ நாம் இப்போதைக்கு இந்தப் பிரச்னைகளில் மாட்டிக்கொள்ளாமல் தப்புவதற்குத் தான் அது உதவும். ஆனால் நீண்ட காலத்துக்கு உதவாது.  மேலும் ஆர்யவர்த்தத்தின் அழிவுக்கும்  காரணம் ஆகிவிடுவோம்.  இந்த  வெறுப்புமயமான மனிதர்களின் அந்தரங்கப் பழிவாங்கலில்  இருந்து தப்பலாம். ஆனால்  அவர்கள்  ஒருவரை ஒருவர் கொன்று கொண்டு மொத்த  ஆர்யவர்த்தத்தின் அழிவுக்கே காரணமாகிவிடுவார்கள்.  உலக க்ஷேமத்துக்காக நம் முன்னோர்கள் மிகவும் பாடுபட்டுக் கட்டிய இந்த கம்பீரமும், நேர்மையும், அழகும் பொருந்திய தர்மம் என்னும் கட்டிடம் தூள் தூளாகிவிடும்.  எங்கும் வன்முறையும், வெறுப்பும், பழிவாங்கலுமே முன் நிற்கும்.  மனிதர்கள் ஒருவரை ஒருவர் எவ்வகையிலேனும் பழி தீர்த்துக் கொள்ளவே முனைவர்.  எங்கெங்கு காணினும் ஒழுக்கமின்மையே முன் நிற்கும்.  ஒழுக்கத்தைக் குறித்து எவரும் சிந்திக்கக்கூட மாட்டார்கள்.”  என்றான் கண்ணன்.

“கண்ணா, என்னால் இன்னமும் புரிந்து கொள்ள முடியவில்லை.  பாரத வர்ஷத்தின் இந்த வட பாகத்திலிருந்து பிரிந்து நாம் மேற்குக் கடல் பக்கம் நிம்மதியாக வாழ்வதால் மொத்த உலகும், மனிதர்களும் பாதிக்கப்படுவது எவ்வாறு?”

“இல்லை சாத்யகி, இல்லை.  இந்த வெறுப்பின் ஆழத்திலிருந்து நம்மை நாம் பிரித்துக் கொள்ள இயலாது.  அது சரியும் இல்லை.  வெறுப்பை எல்லாம் மாற்றி அன்புமயமாக்குதலே நம் கடமை.  அதை வெல்வதிலே தான் நம் திறமையும் உள்ளது.  ஒருவேளை இந்தக் கடமையை நாம் ஆற்றும் சமயம் நாமே முழுவதும் அழிந்து போகவும் நேரிடலாம்.  ஆனால் நாம் அதற்கெல்லாம் பயப்படக் கூடாது.  இறைவன் நமக்கு இட்ட கட்டளை இங்கு தர்மத்தை நிலை நாட்டுவது தான்.    இந்த மாபெரும் பணியைச் செய்கையில் நமக்கு இறப்பு நேரிடுமெனில் நாம் அதை முன்னின்று வரவேற்கத் தயாராக இருக்க வேண்டும்.   இதை விட்டு பயந்து ஓடுவது சரியில்லை.  அப்படி நாம் இறந்தாலும், நாம் எவ்வகையிலேனும் தர்மத்தை நிலை நாட்டி விட்டே இறப்போம்.  நமக்குப் பின்னர் தர்மத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு வலிமை மிக்க பாரம்பரியத்தை விட்டுச் செல்வோம்.  பின்னால் புதியதொரு  ரக்ஷகன் தோன்றலாம்.  நாம் விட்டுச் சென்ற பணியை அவன் முடிப்பான். “

“இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் எனக் கூறுகிறாய் கிருஷ்ணா?” ஷ்வேதகேது கேட்டான்.

“இப்போது எனக்கு நம்பிக்கையின் ஒரு கீற்றுக் கூடத் தென்படவில்லை.  நான் இளவரசியைச் சந்தித்த பின்னர் ஒருவேளை நம்பிக்கை ஒளியே தென்படலாம்.”

சிறுபிள்ளைத்தனமாக நகைத்தான் சாத்யகி.  தொடர்ந்து, “நாம் நம்பிக்கையின் ஒளியை முனிவர்களில் சிறந்தவரான முனிசிரேஷ்டர் வியாசரிடம் காண முடியவில்லை.  மன்னன் துருபதனிடமும் காண முடியவில்லை. இப்போது நாம் அந்த நம்பிக்கையின் கீற்றாவது ஒரு அழகிய இளம்பெண்ணான இளவரசியிடம் கிடைக்கும் என நம்புகிறோம்.  பிரபுவே, கண்ணா,  நீங்கள் விருந்தாவனத்தில் எப்படி இருந்தீர்களோ அதிலிருந்து சற்றும் மாறியதாகத் தெரியவில்லை. “

கிருஷ்ணனுக்குக் கோபம் வரவில்லை.  மாறாக உற்சாகத்துடன் சிரித்தான்.  “சாத்யகி,   மாணவர்களின் ஊக்கத்தைப் பொறுத்தே ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையில் விநயம்  ஏற்படும்.   இது ஒரு கெட்டிக்கார மனிதனிடம் இருந்து வருவதை விட ஒரு பெண்ணிடம் இருந்தும் வரலாம்.  வரும்.  அடிக்கடி இப்படி ஏற்படுகிறது.  திரெளபதியின் மூலம் ஏதேனும் நம்பிக்கை ஒளி கிடைக்கிறதா எனப் பார்க்கப் போகிறேன்.”

“தயவு செய்து அவளை உன் வாழ்க்கைத் துணையாக ஏற்க வேண்டாம் கண்ணா.  அவள் பிறப்பிலிருந்து இன்று வரை வெறுப்புக்கடலில் மூழ்கிப் பழிவாங்கும் எண்ணத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.”  சாத்யகி கெஞ்சினான்.

“நம்பிக்கை இழக்காதே சாத்யகி.   நான் பார்த்துப் பேசியதன் பின்னரும் திரெளபதி வெறுப்புக்கடலில் மூழ்கிப் பழி வாங்கும் நோக்கில் இருந்தாளெனில் நான் தோல்வி அடைந்தவன் ஆவேன். அனைவரிடமும் நீங்கள் கூறுவதை நான் நம்புகிறேன்.  அது வெறும் வாய்ப் புகழ்ச்சியாக இருந்தாலும்; “ கண்ணன் சிரித்தபடி, “கண்ணன் இருக்குமிடத்தில் தர்மம் இருக்கும். என நீங்கள் அனைவரும் கூறுவீர்கள் அல்லவா?  யதோ கிருஷ்ணா,  ததோ தர்மா!”

அனைவரையும் விட ஆர்வத்தில் தூண்டப் பட்ட திருஷ்டத்யும்னன் அன்று மாலை கண்ணனைச் சந்திக்க வந்தான்.  முதலில் அவன் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான்.  அன்று மாலை மன்னனால் விருந்தாளிகளோடு கலந்து கொள்ள இயலாது.  திடீரென நோய்வாய்ப் பட்டுவிட்டார்.  அன்று மாலை திருஷ்டத்யும்னனால் கூட விருந்தாளிகளைக் கவனிக்கவோ உபசரிக்கவோ இயலாது.  ஷிகண்டினின் மாமனார் ஆன ஹிரண்யவர்மர் முக்கியமான ஆலோசனைகளுக்காக தூதர்களை அனுப்பியுள்ளார்.  விஷயம் மிகவும் அவசரமும், முக்கியத்துவமும் நிறைந்தது.  மாட்சிமை பொருந்திய துவாரகையின் விருந்தாளிகளுக்கு ஆக்ஷேபணை இல்லை எனில் இன்று மாலை எங்களால் உங்களை உபசரிக்க இயலாமையைப் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறோம்.  இதுவே திருஷ்டத்யும்னன் கொண்டு வந்த செய்தி.  கிருஷ்ணனுக்கு எந்தவிதமான ஆரவாரமும் இல்லாமல்  ஒரு மன்னின் தூதர்கள் வந்திருப்பது மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது.  எனினும் அவனும் அன்று ஓய்வையே நாடியதால் திருஷ்டத்யும்னனுக்கு சம்மதம் கூறினான்.  ஆனால்…….ஆனால்…. கண்ணன் மனதை ஏதோ உறுத்தியது.  இந்த ஷிகண்டினின் விஷயத்தில் ஏதோ மர்மம் உள்ளது.  எல்லாமே ஒரு மர்மமான சூழ்நிலையில் பரம ரகசியமாக நடப்பதாகத் தோன்றியது.  என்னவாக இருக்கும்??  எதுவாக இருந்தாலும் இது கண்ணனுக்கு அவசியம் இல்லை.  ஆம், அவசியமே இல்லைதான்.

Sunday, February 10, 2013

கண்ணனின் கவலை!


“கண்ணா, நீ திரெளபதியைச் சந்திக்க த்ருஷ்டத்யும்னன் உதவி செய்வான்.  அவன் உன்னை அவளிடம் அழைத்துச் செல்வான்.”  துருபதன் கண்ணனை த்ருஷ்டத்யும்னனோடு திரெளபதியைச் சந்திக்க அனுப்பவேண்டி எழுந்தான்.  அப்போது ஒரு மெல்லிய காலடி ஓசை அந்த அறையிலிருந்து திரும்பும் வழியில் செல்வது கேட்டது.  உற்றுக் கேட்ட துருபதனுக்குக் கோபமும், எரிச்சலும் மேலோங்கியது.  தன் உதட்டைக் கடித்துக் கொண்டான்.  யாரோ, எவரோ ஒட்டுக் கேட்டிருக்கிறார்கள்.  சமாளித்துக் கொண்ட மன்னன் துருபதன் கண்ணனை த்ருஷ்டத்யும்னனும், அமைச்சரும் காத்துக் கொண்டிருந்த அறையில் கொண்டு விட்டான் .  கண்ணன் தன்னையும் அறியாமல் திரும்பிப் பார்க்க, இளம் அரசகுமாரன் ஆன ஷிகண்டின் அவர்கள் வந்த வழியில் இருந்து வெளிவந்து தோட்டத்தில்  மாந்தோப்புக்குள் நுழைந்து கொண்டிருப்பதைக் கண்டான்.  இவன் தான் துருபதனும் தானும் பேசிக் கொண்டிருக்கையில் ஒட்டுக்கேட்டவனா?  ம்ம்ம்ம்ம்???  இந்த இளைஞனைக் குறித்த மர்மம் ஏதோ இருக்கிறது.  இங்கே ஒருவருக்கும் வேண்டாதவனாகவும் உள்ளானே?  ஏன் இப்படி?  கண்ணன் மனம் தீவிர யோசனையில் ஆழ்ந்தது.

கண்ணன் துருபதனின்  பெருந்தன்மையையும், அவன் நீதி நிர்வாகத்தையும் கண்டு அதன் பால் தன் மனதைப் பறி கொடுத்திருந்தான்.  துவாரகையிலிருந்து கிளம்புகையில் வடக்கே நமக்கு எதிரிகள் இருக்கக் கூடாது என்ற ஒரே  எண்ணமே கண்ணனிடம் இருந்தது.  ஆர்ய வர்த்தத்தில் தர்மத்தை நிலை நாட்டுவதற்கு அதன் அரசர்கள் உதவி தேவை என்ற ஒரே கருத்திலும் இருந்தான்.  ஆனால் இப்போதோ கண்ணன் ஒரு மாபெரும் உணர்ச்சிக் குவியல்களால் ஆனதொரு குடும்பத்தின் அந்தரங்க விவகாரங்களில் தன்னையும் அறியாமல் பங்கெடுத்துக் கொண்டிருந்தான்.  அதன் வேகமும், அவர்களின் விவரிக்கவொண்ணா வெறுப்பும், அந்த வெறுப்புக்குக் காரணமான ஆணிவேரைக் களைய எடுத்த முயற்சிகளும், அதன் காரணமாக அந்தக் குடும்பத்து உறுப்பினர்கள் ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருக்கும் ஆழ்ந்த பற்றும் ஒரு பிரளய அலை போலக் கண்ணனைத் தாக்கியது.  அதில் மூழ்காமல் இருக்கப் பெரும் பிரயத்தனம் செய்தான் கண்ணன்.  சாத்யகியையும், ஷ்வேதகேதுவையும் தனிமையில் பார்த்த கண்ணன் ஒரு மாபெரும் சூறாவளிக்கு முன்னர், அதுவும் அதர்மம் என்னும் சூறாவளிக்கு முன்னர் நாம் மாட்டிக் கொண்டிருக்கிறோம்.  இதிலிருந்து தப்ப வேண்டும் என்று வலியுறுத்திச் சொன்னான்.

“இது எப்படி அதர்மச் சூறாவளியாகும் கண்ணா?”  சாத்யகி இதன் வெளிப்படையான நல்ல விஷயங்களையும் அதன் மூலம் கிடைக்கப் போகும் பலன்களை மட்டுமே சிந்தித்தான்.  “ ஓ, ஓ, சாத்யகி, இந்த விஷயம் நம்மை வெறுப்பு என்னும் சுழலில் ஆழ மூழ்கடிக்கப் பார்க்கிறது.  இந்தச் சுழலில் அகப்பட்டுக் கொண்டு நாம் சுற்றிச் சுற்றி வரப் போகிறோம்.  மூழ்காமல் வெளியே வருவது நம் திறமையைப் பொறுத்தது.”  என்றான் கண்ணன்.  சற்றே யோசனையுடன் அனைத்தையும் விவரித்தான் கண்ணன்.  “  இதோ பார், எவ்வளவு முட்டாள்தனமான விஷயங்கள் நடந்துள்ளது என்பதைக் கவனி.  ஒரே ஒரு சிறு வெறுப்பு என்னும் தீ இன்று ஊழிப் பெரும் தீயாக மாறி விட்டிருக்கிறது.  இரண்டு முட்டாள்கள், ஒருவன் க்ஷத்திரிய இளவரசன், இன்னொருவன் அந்தணன், இருவரும் ஒருவருக்கொருவர் முட்டாள் தனமான வாக்குறுதிகளை இளம் வயதில் செய்து கொள்கின்றனர்.   அந்த வாக்குறுதியே முட்டாள்தனமானது எனில் அந்த இளவரசனும் முட்டாள் தான்.  சற்றும் யோசனையில்லாமல் அந்த அந்தணனை அவமதிக்கிறான்.  இந்த அவமதிப்பே அந்த அந்தணன் மனதில் வெறுப்பு என்னும் ஊற்றாக மாறுகிறது.  அது இன்று மாபெரும் பிரளய வெள்ளமாக மாறி இந்தப் பாஞ்சாலத்தையும், அதன் மக்களையும், அதன் அரசர், இளவரசர்கள், இளவரசி என அனைவரையும் மூழ்கடிக்கப் பார்க்கிறது.  “

“அந்த அந்தணனோ மோசமானவன்.  முட்டாள் தனத்தில் சற்றும் குறைந்தவன் அல்ல.  தன் வாழ்நாள் முழுவதையும், தன் வித்தையின் சிறப்பு முழுவதையும் இந்த அரசனைப் பழிவாங்கவென்றே செலவு செய்கிறான்.  அதற்காகவே தன்னிடம் வரும் தன் மாணாக்கர்களை இந்த அரசனைத் தோற்கடித்துப் பழிவாங்கவே தயார் செய்கிறான்.  இதை அடைவதற்காகத் தன் பிராமணத்துவத்தின் மகத்துவத்தையே,  அவ்வளவு ஏன்?  அவர்களின் நியமங்களை, கட்டுப்பாடுகளை, தவத்தை, ஒரு உண்மையான பிராமணன் வாழ்க்கை நடத்த வேண்டிய முறையை என அனைத்தையும் மீறுகிறான்.  அதோடு மட்டுமல்ல.  அவன் சார்ந்திருக்கும் அரசாங்கத்தில் அவன் வலிமையானதொரு ஆசானாகவும் திகழ்கிறான்.  இதை முன் வைத்து இந்த மரியாதைக்குரிய அரசனை இகழ்ந்து பேசி அவனைத் தோற்கடித்து அவனை இழிவுக்கு ஆளாக்கித் தேர்க்காலில் கட்டி இழுத்து எனப் பல விதங்களிலும் அவமரியாதை செய்கிறான்.  பின்னர் அவன் நாட்டையே, அதன் ஒரு பகுதியையே அவனுக்குத் தானமாகவும் தருகிறான்.  அரசனால் இந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை.  என்னதான் நாட்டின் ஒரு பகுதி திரும்பக் கிடைத்தாலும், தன் முழுநாட்டையும் மீட்கும்வரை அவனுக்கு நிம்மதியில்லை.  அதற்காகவென்றே பிள்ளைகளைப் பெற்றுத் தன் பழைய நண்பனும், இப்போதைய எதிரியும் ஆன அந்த பிராமணனைப் பழிவாங்க வென்றே அவர்களைத் தயார் செய்கிறான்.  ஒவ்வொரு முறை உணவூட்டுகையிலும் இந்த வெறுப்பையும் சேர்த்தே தன் குழந்தைகளுக்கு ஊட்டுகிறான்.  அந்தக் குழந்தைகள் இன்று வாழ்வதே தங்கள் தகப்பனுக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்துப் பழிவாங்கவேண்டும் என்றே.  வெறுப்பை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டே போகும் அந்த அந்தணனோ இன்று ஹஸ்தினாபுரத்தில் ஒரு அசைக்க முடியா சக்தியாகிவிட்டான்.  அங்குள்ள அரசகுமாரர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பதோடு அல்லாமல் தானும் ஒரு சிறந்த போர்வீரனாக இருக்கிறான்.  அவன் சக்தி இன்று அளப்பரியதாக உள்ளது.  இங்குள்ள அரசனோ அவனை அடியோடு ஒழிக்க விரும்புகிறான்.  தன் பலத்தைப் பெருக்கிக் கொள்ள நினைக்கிறான்.   ஷ்வேதகேது! சாத்யகி!  இருவரும் கேளுங்கள்.  பாஞ்சாலமும், குருவம்சத்தினரின் அஸ்தினாபுரமும் இன்று பிரிந்து ஒருவருக்கொருவர் எதிரிகளாகத் திகழ்கின்றனர்.  எந்த நேரமும் அவர்களுக்குள் யுத்தம் மூளலாம்.  நாம் இவற்றுக்கு நடுவில் மாட்டிக் கொண்டுள்ளோம்.”  என்றான் கண்ணன்.

“ஓஹோ, கண்ணா, அப்படியெல்லாம் விரைந்து முடிவெடுக்காதே.  யாதவர்கள் நினைத்தால் மட்டுமே இதில் கலந்து கொள்ள இயலும்.  ஒதுங்கி இருக்க நினைத்தால் தடுப்பவர் யார்?” ஷ்வேதகேது சொன்னான்.

“இல்லை, ஷ்வேதகேது,  துருபதனின் வேண்டுகோளை நான் ஏற்றால் இந்தச் சுழலில், மாபெரும் சுழலில் யாதவர்களை நானே இழுத்துவிடுவேன்.  ஆனால் இதை நான் ஏற்கவில்லை என்றாலோ, துருபதன் தன்னுடைய பேரத்தை ஜராசந்தனிடம் பேசுவான்.  அவனுடன் ஒப்பந்தம் செய்து கொள்வான்.  அவனுடன் நட்புப் பாராட்டுவான்.  இதன் மூலம் நமக்கு நன்மை கிட்டாது அப்பனே.  இந்தச் சுழலின் ஆழமும், அகலமும் அதிகம் ஆகும்.  நாம் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி சுழலில் மாட்டிக் கொண்டே தீருவோம்.  வேறு வழியே இல்லை.”

“என்றால் நாம் இந்த மாயச் சுழலை விட்டு நீங்கித் திரும்பச் சென்றுவிடுவோம்.  நாம் துவாரகையில் இருந்தவரைக்கும் மிகவும் சந்தோஷமாகவே இருந்தோம்.  வா, கிருஷ்ணா, நாம் துவாரகைக்கே சென்றுவிடுவோம்.” சாத்யகி அழைத்தான்.

“அது அவ்வளவு சுலபமல்ல, சாத்யகி” , என்றான் கண்ணன்.