Saturday, January 29, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

கடும் வெயில், மழைக்காலம் என்ற பல இயற்கை உற்பாதங்களையும் தாண்டிக் கடைசியாக கிருஷ்ணனும், தாமகோஷனும், தங்கள் படைகளோடு மதுராவை வந்தடைந்தனர். அவர்களை வரவேற்க முதிய வயதிலும் கூட உக்ரசேன மஹாராஜாவே நேரில் வந்திருந்தார். வசுதேவன் தன் பரிவாரங்களோடு வந்திருந்தார். மதுராவின் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் அனைவரும் ஆங்காங்கே கிடைத்த இடத்தில் வந்து நின்று கொண்டனர். இளம்பெண்கள் தங்கள் சின்னஞ்சிறு குழந்தையைக் கூடத் தூக்கி வந்து, கிருஷ்ணனை அவர்களுக்குக் காட்டி மகிழ்ந்தனர். அரண்மனையைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் பல்வேறு வரவேற்பு கீதங்களை இசைத்துக்கொண்டிருக்க, கர்காசாரியார் போன்ற ரிஷிகளும், முனிவர்களும், அந்தணர்களும் பலவிதமான வேத கோஷங்களைச் செய்து இறைவனின் அருள் கண்ணனிடம் பரிபூரணமாக நிலைத்திருக்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டிருந்தனர். பணிப்பெண்கள் தங்கள் தலையில் பூரணகும்பம் தாங்கிக்கொண்டு அவற்றில் நீரும், தேங்காயும், மாவிலைக் கொத்துகளோடு அலங்கரித்துக் கொண்டு கிருஷ்ணனுக்குப் பூரணகும்ப மரியாதை அளித்தனர். ஆங்காங்கே ஆரத்திகளும் எடுக்கப் பட்டன. தேங்காய்கள் உடைபட்டன.

மதுரா நகரமே அன்று வரை கண்டிராத இந்த வரவேற்பு நிகழ்ச்சி அனைவர் மனதையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் ஈடுபடச் செய்தது. ஒரு மாபெரும் சக்கரவர்த்தியை அநாயாசமாகத் தோல்வி அடைய வைத்துவிட்டு வந்திருப்பவன் யாதவகுல ரக்ஷகன். யாதவகுலத்தின் மானம், மரியாதையே அவனால் காப்பாற்றப் பட்டிருக்கிறது. மேலும் கண்ணனுக்கு இந்த உயர்ந்த பரிவாரங்களான குதிரைகள், யானைகள், ரதங்கள், காலாட்படை வீர்ர்கள், அவர்களோடு சேர்ந்து வந்த நவரத்தினக் குவியல்கள், பொற்காசு மூட்டைகள், ஆடை, ஆபரணவகைகள் அனைத்துமே ராணி பத்மாவதியால் கொடுக்கப்பட்டவை என்பதும் ஸ்ரீகாலவ வாசுதேவனைக் கண்ணன் கொன்றதும் ஒரு கதை போல் ஆங்காங்கே மக்களால் உற்சாகத்துடன் பேசப்பட்டது. அனைவரும் தங்களுக்கே இத்தகைய மரியாதை கிடைத்த்து போல் மகிழ்ந்தனர்.

ஆனால் கண்ணனோ எப்போதும் போலவே தலையில் மயில் பீலியுடன், மஞ்சள் வண்ணத்தில் ஒரு வேட்டியும் அதற்கேற்ற மேலாடையும் தரித்திருந்தான். மலர்மாலைகளைக் கழுத்தில் அணிந்திருந்த கண்ணன் ரதத்திலிருந்து கருடன் ஒருவனோடு இறங்கினான். இறங்கியதுமே மரியாதையோடும், விநயம் மாறாமலும் ஆசாரியர்களையும், தன் தகப்பனையும், பாட்டனையும் மற்றப் பெரியவர்களையும் நமஸ்கரித்தான். பின்னர் தன் அருமைத் தாய் தேவகியையும் நமஸ்கரித்தான். அதற்குள் திரிவக்கரை அவன் காலடியில் விழுந்து வணங்க மற்றப் பெண்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், குழந்தைகள் எனக் கிருஷ்ணன் காலடியில் விழுந்து வணங்க ஆரம்பித்தனர். பூக்கள் மழையெனப்பொழிய கண்ணனுடன் வந்த குரு சாந்தீபனிக்கும், ராஜா தாமகோஷனுக்கும் இப்படிப்பட்ட ராஜ மரியாதை கிடைத்தது. உக்ரசேனரும், வசுதேவரும் ஆசாரியருக்கு தங்கள் வந்தனங்களைச் சமர்ப்பித்து தாமகோஷனை மார்போடு இறுகத் தழுவித் தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள். அப்போது……..


இதென்ன மின்னலே ஒரு பெண்ணுருக்கொண்டு இறங்குகிறதா?? நடப்பவை அனைத்தையும் பார்த்தவண்ணம் ஷாயிபா ஒரு தேரிலிருந்து கீழே இறங்கினாள். வயதான உக்ரசேனரையே அவள் அழகு அசர வைத்தது எனில் மற்றவர் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. அவள் கண்களில் தெரிந்த கடுகடுப்பும், தனக்கு நிகரில்லை என்பதைத் தெரிவிக்கும் பார்வையைக் கொண்ட அவள் கர்வமும், ருத்திராக்ஷ மணிகளால் ஆன ஒரே ஒரு மாலையையும், கைகளிலும் வளையல்களோ, கங்கணமோ இல்லாமல் ருத்திராக்ஷமே வளையல்களாய்க் காட்சி அளித்துக் கொண்டு வேறுஆபரணங்கள் எதுவுமே அணியாமல் வெள்ளை நிறத்தில் ஆடை புனைந்துகொண்டு காட்சி அளித்த இவள் யாராய் இருக்கும்?? எல்லாருக்கும் இந்தக் கேள்வி மனதைக் குடைந்தது. தாமகோஷனே அதைத் தீர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு உக்ரசேனருக்கும், வசுதேவனுக்கும் ஷாயிபா பற்றிய தகவல்களைக் கூறிவிட்டு அவளை தேவகி அம்மாவிடம் ஒப்படைத்தான்.

கண்ணன் தனியாய்த் தன் தாயைச் சந்தித்தபோது அவளுக்கு ஒரு புதிய மகளைக் கூட்டி வந்திருப்பதாய்க் கூறி தேவகியின் சந்தேகங்களைத் தவிர்த்தான். மேலும் திரிவக்கரையிடம் ஷாயிபாவைக் கவனிக்கும் பொறுப்பை ஒப்படைத்தான். அவளிடம்,”திரிவக்கரா, இந்த ஷாயிபா ஓர் இளவரசி! அவள் இனி உன் பொறுப்பு. அவள் எவ்வளவு அழகாய் இருக்கிறாளோ அவ்வளவுக்கு பயங்கரமான குணங்களையும் உடையவள். அவள் குணம் எவ்வளவு கொடூரமாய் எப்போது மாறும் என்பதை எவராலும் கணிக்க இயலாது. எனினும் நீ தேவகி அம்மாவின் சொந்த மகளான சுபத்ரையை எவ்வாறு பாசத்துடனும், அன்புடனும் நடத்துகிறாயோ அவ்விதமே இவளும் தேவகி அம்மாவுக்கு இன்னொரு பெண் என்று நினைத்துக்கொள்! அவ்விதமே இவளை நடத்தவேண்டும். “ கண்ணன் சொல்லுக்கு மறுப்பே தெரிவிக்காத திரிவக்கரை அப்படியே நடந்து கொள்வதாய் வாக்களித்தாள்.

கண்ணன் மதுராவின் மக்களுக்கு இடையே புகுந்து சிலரை நலம் விசாரித்தும், சிலரைப் பார்த்துச் சிரித்துக்கொண்டும், சிலரை வணங்கியும், குழந்தைகளிடம் அன்பு காட்டியும் தன் மகிழ்வைத் தெரிவித்துக்கொண்டான். ஒவ்வொருவரையும் தனித்தனியாக அவன் கவனித்தமாதிரியும் அவரவர் வயதுக்கும், பொறுப்புகளுக்கும் வகிக்கும் பதவிகளுக்கும் ஏற்ப அவன் மரியாதை செலுத்துவதாயும் அனைவரும் பேசி மகிழ்ந்தனர். கண்ணன் தங்களைக்கவனிப்பானா என்ற கவலையே படவேண்டாம். அவனே வந்து நம்மை விசாரிப்பான் என்று அனைவரும் நம்பிக்கையும் கொண்டனர். ஒவ்வொருவரையும் கண்ணன் விசாரித்த தோரணையிலிருந்தும் அவன் ஒரு போதும் அவர்கள் நலத்தைத் தவிர வேறு எண்ணம் ஏதுமில்லாமல் இருந்தான் என்று அவர்களுக்குப் புரியும் வண்ணம் இருக்கவே அனைவருக்கும் மகிழ்ச்சியும் கண்ணனிடம் பெரும் அன்பும் தோன்றியது. கண்ணனுக்கும் இதன் பிரதிபலிப்பு இருந்தது. ஒவ்வொருவரும் தன்னிடம் வைத்திருக்கும் அன்பைக் கண்டு மகிழ்ந்தான் கண்ணன்.

ஒவ்வொருவருக்கும் தான் எவ்வளவு முக்கியமோ அவ்விதமே அவர்களும் தனக்கு முக்கியம் என்பதையும் உணர்ந்தான். ஆனால், ஆனால்???? அங்கே இருந்த கம்சாவையும், அவள் மகன் ப்ருஹத்பாலனையும் கண்ணன் கண்டு தன் வந்தனங்களைத் தெரிவித்துக்கொண்டபோது அவன் உள் மனம் அவனை எச்சரித்தது. எனினும் தன் முகம் மாறாமால் தன் அன்பும் மாறாத வண்ணம் கண்ணன் அவர்களையும் நலம் விசாரித்தான். ஆனாலும் கம்சாவும், ப்ருஹத்பாலனும் வெளிப்படையாகவே தங்கள் விரோத மனப்பான்மையைக் காட்டிக்கொண்டனர். கண்களாலேயே தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தினார்கள். அனைவரும் அவரவர் மாளிகைகளுக்குச் செல்ல நகரில் ஆங்காங்கே விருந்தும், நடனமும், பாட்டும் அமர்க்களப்பட்ட்து. தாமகோஷன் கொண்டாட்டங்கள் முடிந்த்தும் தன் நாட்டுக்குத் திரும்பினான்.

இலக்கில்லாமல், தன்னை ஆள சரியான நபர்கள் இல்லாமல் இருந்து வந்த மதுரா நகருக்குக் கடைசியில் ஒரு ஆன்மா, உண்மையான ஆன்மா, தர்மத்தைக் கடைப்பிடிக்கும் ஆன்மா கிடைத்துவிட்ட குதூகலத்தில் இருந்தது. நகரமே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தது. அனைவரும் கண்ணனையே நம்பி இருந்தனர். அவனைப் பார்க்கவும், பேசவும், அவன் வீரச் செயல்களைக் குறித்து விசாரிக்கவும் ஆர்வம் காட்டினர். இந்த மக்களுக்கு நடுவே கம்சாவும், ப்ருஹத்பாலனும், அவன் நண்பர்களும் கண்ணனிடம் எவ்விதம் பழகுவது? என்ன சொல்வது? எப்படி நடந்து கொள்வது என்ற குழப்பத்தில் ஆழ்ந்தனர். வெகு விரைவில் அவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பமும் வாய்த்தது. கண்ணன் ஒரு பயிற்சி முகாம் ஆரம்பிக்கவேண்டும் என எண்ணிப் பெரியோர்களின் ஆசிகளோடும் சம்மதத்தோடும் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கவென ஒரு முகாம் ஆரம்பித்தான். ஆயுதப் பயிற்சிகளும், வாள், வில், கதை போன்றவற்றைக் கொண்டும், மல்யுத்தங்களில் பயிற்சியும் ரதங்களில் இருந்து யுத்தம் பண்ணப் பயிற்சியும், குதிரைகள், யானைகளைப் பழக்குவதில் பயிற்சிகளும் என அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பயிற்சிகள் அளிக்கப் பட்டன. . ராணி பத்மாவதி அளித்த தங்கத்தின் மூலம் வெளிநாடுகளில் இருந்து போர்க்குதிரைகள் வரவழைக்கப் படுவதாயும், அவற்றைப் பழக்கவும், போர் செய்யவும் பயிற்சி அளிக்கப் படும் எனவும் அறிவிக்கப் பட்டது.

மேலும் வீட்டில் எவரும் சும்மா உட்கார்ந்து கொண்டு பழம்பெருமைகளைப் பேசிக்கொண்டு இருக்கக் கூடாது எனவும், அவரவர் அவரவருக்கு நியமிக்கப் பட்ட பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்றவேண்டும் எனவும், ஒவ்வொரு யாதவனும் இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளத் தவறக் கூடாது என்றும் அறிவிப்புச் செய்யப் பட்ட்து. எல்லாவற்றிலும் அதிர்ச்சி அடைய வைத்த நிகழ்வே போர் ரதங்களைச் செலுத்துவதில் நடைபெற்று வந்த போட்டியைத் தடை செய்திருந்தான் கம்சன். இப்போது அந்தப் போட்டி கார்த்திகை மாதப் பெளர்ணமி அன்று நடைபெறும் எனவும் அனைவரும் தங்கள் போர் ரதங்களை அதற்கேற்ப ஆயத்தம் செய்யுமாறும் அறிவிக்கப் பட்டனர். மேலும் மதுராவின் கோட்டைச் சுவர்களை பலப்படுத்தவும் ஆயத்தங்கள் நடந்தன. பல யாதவர்களுக்கும் கண்ணனின் இந்த முயற்சிகள் சந்தோஷத்தையே கொடுத்தன. ஆனால் ப்ருஹத்பாலனுக்கும் அவன் நண்பர்களுக்கும் இது மிகுந்த வருத்தத்தையும், கோபத்தையும் கொடுத்தது. இது வரையிலும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த யாதவ மக்கள் சிறியோரிலிருந்து பெரியோர் வரை அனைவரும் இப்போது கண்ணனின் பின்னாலேயே செல்கின்றனர். அவன் வார்த்தைகளுக்கு பெரும் மதிப்புக் கொடுக்கின்றனர். அவன் கண்ணால் சுட்டிய வேலையை உடனே முடிக்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேல் அவனை ஒரு கடவுளாக நினைத்துத் தொழவும் செய்கின்றனரே!

Tuesday, January 25, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

அவன் வந்துவிட்டான்!


தேவகி, வியக்கவைக்கிறது, உன்னுடைய பக்தி. நீ ஒன்றும் பைத்தியம் இல்லை. நீயே தெய்வீகமானவளாகிவிட்டாய். நீ என்ன உணர்கின்றாயோ அதுதான் நாரதர் உணர்ந்த அனைத்திலும் சிறந்த பக்தியின் தத்துவம் என்று எனக்குப் புரிகிறது. நீ சொல்வதைக் கேட்டதும், உன்னையும் பார்த்ததும் எனக்கு ரிஷிகளிலே சிறந்தவரான வேதவியாசருக்கு நாரதமுனிவர் சொன்னவை நினைவில் வருகின்றன. பக்தி என்றால் என்ன என்று தேடிய நாரதருக்கு அந்த ஸ்ரீமந்நாராயணனே காட்டியவை இவை அனைத்தும் என்றும் வேத வியாசர் கூறினார் என்னிடம். அவர் என்னிடம் இதைப் பற்றிக் கூறியதுமே என் நினைவில் நீ தான் வந்தாய்.
அண்ணாரே, எனக்கு அது எல்லாம் தெரியாது; புரியவும் புரியாது. அப்படி ஒன்றை நான் கண்டதோ, கேட்டதோ இல்லை!” என்றாள் தேவகி.

“இதை ஐகாந்திக பக்தி என்பார்கள் தேவகி! பிரேமபக்தியின் வடிவம் இது. இறைவனிடம் கொண்ட அன்பே பிரேமை என்று கூறப்படும். தெய்வீகமான இந்த அன்பின் தத்துவம் பற்றிப் பிரஜாபதி நமக்கு முன் இருந்த பழைய அரசர்களுக்கும், விவஸ்வானுக்கும், மனுவுக்கும் பின்னர் இக்ஷ்வாகுவுக்கும் கூறினார். இப்படித் தான் எனக்கு வேதவியாசர் கூறிவிட்டு இதைப் பற்றிய அந்தச் செய்தியையும் கூறினார்.”

“ஆஹா, நான் அவ்வளவெல்லாம் அறிவாளி அல்லவே; நான் என்னை அப்படி நினைத்துக்கொண்டதும் இல்லை. அண்ணாரே, சற்று விளக்கமாய்ச் சொல்லுங்களேன். வேத வியாசர் என்ன கூறினார் உங்களுக்கு? நாரத முனிவர் வேத வியாசரிடம் என்ன கூறினாராம்?”

“தேவகி, கேள், வேத வியாசர் கூறியவை என்னவென்றால்:

ஒரு சமயம் நாரதமுனிவர் வைகுந்தத்தில் ஸ்ரீமந்நாராயணனைத் தரிசிக்கச் சென்றிருந்தாராம். ஸ்ரீமந்நாராயணன் அப்போது ஏதோ ஜபித்துக்கொண்டிருந்த மாதிரி நாரதருக்குத் தோன்றியதாம். ஆஹா இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் தொழும் ஸ்ரீமந்நாராயணன் யாரை வணங்குகிறான்? நாரதருக்கு ஆச்சரியம்! உடனே ஸ்ரீமந்நாராயணனிடம், “பிரபுவே, இவ்வுலகில் மட்டுமில்லாமல் ஈரேழு பதினாலு லோகங்களிலும் உம்மையே வணங்குகின்றனர். மானுடர்களும் உம்மைத் தான் வணங்குகின்றனர். ஆனால் நீர் யாரை வணங்குகின்றீர்? இவ்வுலகில் நீர் வணங்கும் ஆன்மாவும் உள்ளதா? “ நாரதருக்கு ஆச்சரியம். அனைவரையும் விடத் தாமே ஸ்ரீமந்நாராயணனிடம் பக்தி பூண்டவன் என்ற கர்வமும் உள்ளவர் நாரதர். ஆகவே ஸ்ரீமந்நாராயணன் தம்மைத் தான் வணங்குகிறாரோ என்ற உள்ளார்ந்த பெருமையும் இருந்தது அவருக்கு. ஆனால் ஸ்ரீமந்நாராயணனோ நாரதரிடம், “ நாரதா, உனக்கு என்னிடம் உள்ள பக்தியை நான் நன்கறிவேன். ஆனாலும் நீ இப்போது கேட்ட கேள்விக்கு விடையை என்னால் கூற இயலாது. சொல்லப் போனால் வார்த்தைகளிலே விவரித்துக் கூற இயலாத ஒன்று அது. பூமியின் மையமான மேரு மலைக்குப் போ. அதைச் சுற்றி உள்ள இடங்களுக்கு எல்லாம் செல். ஷ்வேத த்வீபத்துக்குச் செல். அங்கே பிருஹஸ்பதியைப் பார். பின்னர் ஏகதா, த்விதா, த்ரிதா மற்றும் வாசு உபரிச்சாரா ஆகியோரைப் பார். அவர்களிடம் கேள்! இந்த பக்தி என்றால் என்னவென்றும், ஸ்ரீமந்நாராயணனே வணங்கும் நபர் யார் என்றும் கேள்! விடையை நீயே உணர்வாய்!” என்றார்.’

அக்ரூரர் இதைக் கூறும்போதே தேவகி இடைமறித்து, “நாரதமுனி ஷ்வேத த்வீபம் சென்றாரா?” என்று வினவினாள். அக்ரூரர், “ சென்றார் தேவகி! முதலில் பிருஹஸ்பதியைப் பார்த்திருக்கிறார். அவருக்கு பக்தியின் அர்த்தமோ, அனைத்துக்கும் மேம்பட்ட ஸ்ரீமந்நாராயணனின் மகத்துவமோ தெரியவோ, புரியவோ இல்லை. அவர் வேதங்களைப் பின்பற்றுவதிலும், யாகங்களில் பலி கொடுத்து தேவதைகளைத் திருப்திப் படுத்துவதிலுமே மூழ்கி அதிலேயே தாம் உன்னதம் அடையலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தார். பின்னர் ஏகதா, த்விதா, த்ரிதா அனைவரிடமும் சென்றார் நாரதர். அவர்களும் பரமாத்மாவின் தத்துவத்தை அறிந்திருக்கவில்லை. அவர்களுக்கும் பரமாத்மா என்றால் என்னவென்று புரியவில்லை. அதற்காக தவங்கள், ஜபங்கள் செய்வதில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். பின்னர் நாரதர் வாசு உபரிசராவிடம் சென்றார். அவரோ பக்தியே உருவமாக இருந்தார். ஸ்ரீமந்நாராயணனைத் தவிர வேறு எவரையும் அவரால் உணரமுடியவில்லை. சொல்லப் போனால் அவரே ஸ்ரீமந்நாராயணனாகக் கரைந்து விட்டிருந்தார். “

“ஆஹா, எப்படி அண்ணாரே, எப்படி? அது எப்படி?” தேவகியின் ஆவல் மிகுந்தது.
“உன்னைப் போலத் தான் தேவகி! நீ எவ்வாறு பாலகிருஷ்ணனிடமே உன் மனத்தை ஈடுபடுத்தி, அவனுக்கு உன்னையே ஆஹுதியாகக் கொடுத்தாயோ அவ்வாறு தான். தன் தெய்வீகப் ப்ரேமையின் மூலமாக வாசு உபரிச்சரா தன்னையே ஸ்ரீமந்நாராயணனுக்குக் கொடுத்துவிட்டார். சொல்லப் போனால் அவர் தன் வாழ்க்கையையே இறைவனுக்காக, ஸ்ரீமந்நாராயணனுக்காக அர்ப்பணித்துவிட்டார். அனைத்துக்கடவுளருக்கும், அனைத்து மனிதர்களுக்காகவும், அனைத்து தேவர்களுக்காகவும், அனைத்து அசுரர்களுக்காகவும், இவ்வுலகின் அனைத்து ஜீவராசிகளுக்காகவும் அவற்றின் நன்மைக்காகவும், தீமைக்காகவுமே தம்மை அர்ப்பணித்திருக்கிறார். தன்னைப் பற்றிச் சிறிதும் சிந்திக்கவே இல்லை. ஸ்ரீமந்நாராயணன் தானே அவருக்கு நேரில் தரிசனம் தந்து அவரில் தன்னை நிரப்பிவிட்டான். அவரே ஸ்ரீமந்நாராயண சொரூபமாகிவிட்டார்.”

“பின்னர்?? பின்னர் நாரதர் என்ன செய்தார் அண்ணாரே?”

“தெய்வீகமான பக்தி/பிரேமை கலந்த பக்தி என்பது என்னவென்று அவரால் அப்போது தான் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த அதிசய, அபூர்வ, பிரேமையில் தன்னையும் கரைத்துக்கொண்ட நாரதர் முழுதும் அதில் மூழ்கியவராய் ஸ்ரீமந்நாராயணனைச் சரணடைந்தார். ஸ்ரீமந்நாராயணனும் அன்பு மீதூறி அவருக்குத் தன் தெய்வீக விஸ்வரூப வடிவைக் காட்டி அருளினார். அவ்வளவுதான். இந்தச் செய்தியை வேதவியாசர் என்னிடம் கூறியபோது உன்னுடைய அன்பும், பக்தியும் தான் என் நினைவில் வந்தது தேவகி!” என்று முடித்தார் அக்ரூரர்.

தேவகியோ பணிவுடனும், விநயத்துடனும், “என் மூத்த அண்ணாரே, நீர் என்னிடம் மிகவும் அன்பு வைத்திருக்கிறீர். அதோடு என்னிடம் மிகக் கருணையும் காட்டுகிறீர். நீர் இப்போது என்னிடம் கூறியவற்றை நான் புரிந்து கொள்ள முயல்கிறேன். நான் அவ்வளவு படித்த ஞானியோ, புத்திசாலியோ அல்லவே!” என்றாள்.

“ஓஓ, தேவகி, நீயா படிக்காதவள்? அல்ல, அல்ல! எத்தனையோ படித்த அறிஞர்களையும் தத்துவ விசாரங்கள் செய்யும் ஞாநிகளையும் விடவும் நீ மிகவும் உயர்ந்த உன்னதமானவள். பாலகிருஷ்ணனிடம் நீ வைத்திருக்கும் இந்த அன்பு, பிரேமை கலந்த பக்தியானது மிக மிக உயர்ந்த ஒன்று. தெய்வீகம் நிறைந்த இந்தப் பிரேம பக்தியே ஐகாந்திக பக்தி என்று அனைத்தும் கற்றறிந்த முனிவர்களாலும், ரிஷிகளாலும் சொல்லப் படுகிறது. ஆனால் நீயோ படிக்காதவள் என்று சொல்லிக்கொண்டே எப்படிப் பட்டதொரு அன்பை வெளிப்படுத்துகிறாய்? இந்த ஐகாந்திக பக்தி வேறு எதையும் எதிர்பார்க்காத பிரதிபலனே கருதாத பக்தியாகும். இந்த மாதிரியான பக்தி செலுத்துபவர்கள் பிரதிபலன் எதிர்பார்க்காததோடு, வேறு பரிசுகளோ இன்னும் சொல்லப் போனால் சொர்க்கம் செல்லவேண்டும் என்றோ வைகுந்த வாசம் வேண்டும் என்றோ நினைக்கவே மாட்டார்கள். எதையும் திரும்பக் கேட்காத இந்த அன்பு பரிபூரணமானது. ஏனெனில் இந்த அன்பில் அவர்களுக்குள்ளே அவனே பூரணமாக நிறைந்திருக்கிறான். அவனுள்ளே அவர்களே நிறைந்துள்ளார்கள். அவனிலேயே, அவனாக, அவனுக்காகவே வாழ்கின்றனர். உன்னுடைய அன்பு அப்படிப் பட்ட நாராயணீய பக்தி ஆகும் தேவகி!’ உள்ளமும், உடலும் மட்டுமில்லாமல் அக்ரூரரின் சொல்லும், பார்வையும், செயலுமே இந்த பக்தியில் உருகிக் குழைந்தது. கண்களில் கண்ணீர் ததும்பியது.

தேவகியோ புன்னகை மாறாமால், “அண்ணாரே, இன்று உமக்கு நல்ல வார்த்தைகளாகச் சொல்லும்படி நேரிட்டிருக்கிறது அல்லவா? அதுவும் என்னிடம் என்னைப் பற்றிய நல்வார்த்தைகளைக் கூறி என்னைச் சந்தோஷப் படுத்துகிறீர்கள். பால கிருஷ்ணனிடம் என்னுடைய பக்தியை அல்லது பிரேமையை, நாராயணீய பக்தி என்ற உயர்ந்த சொற்களால் சொல்லிப் பாராட்டுகிறீர்கள். அது உண்மை எனில் என்னுடைய கிருஷ்ணன், அவனே ஸ்ரீமந்நாராயணன் ஆகிவிடுவான். “ ஒரு குழந்தையின் குதூகலம் தெரிந்தது தேவகியின் குரலில்.

அக்ரூரரின் மனம் இன்னமும் நெகிழ்ந்த்து. அவர் கண்கள் ஏதோ பழைய காட்சியைக் காண்பது போல் எங்கோ தொலைதூரத்துக்குச் சென்றது. அதே கனவு காணும் குரலில் அவர், “யாருக்குத் தெரியும் தேவகி? அவனே அறிவான் இதை! முதல் முதல் அவனை நான் மதுராவுக்கு அழைத்துவரச் சென்றபோது ஒர் நிமிடம் நானும் அவனை ஸ்ரீமந்நாராயணன், அந்த வாசுதேவனே இவன் தான் என்பதை உணர்ந்தேன். கண்களால் கண்டேன்.”

“இருக்கட்டும் அண்ணாரே, ஆனாலும் இதை நாம் நம்மிருவரிடம் மட்டுமே வைத்துக்கொள்வோம். மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அவர்களுக்குப் புரியாது. மேலும் இது வெளியே பரவினால் கிருஷ்ணனுக்கு இன்னமும் எதிரிகள் அதிகம் ஆவார்கள்.” கொஞ்சம் கவலையோடு சொன்னாள் தேவகி.

“ஓ, நான் நன்கறிவேன் தேவகி, இது நம்மிருவருக்கும் இடையே மட்டுமே!” என்று அக்ரூரர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அங்கே வசுதேவர் வழக்கத்துக்கு மாறான படபடப்போடும், அவசரத்தோடும் விரைவாக வந்து கொண்டிருந்தார். வரும்போதே அவர் சத்தமாய், “அவன் வந்துவிட்டான்! அவன் வந்துவிட்டான்!’ என்று அறிவித்துக்கொண்டு வந்தார். சாதாரணமாக மிகவும் அமைதியாக இருக்கும் வசுதேவரின் படபடப்பையும் அவசரத்தையும் பார்த்து தேவகியும், அக்ரூரரும் வியந்தனர். “யார் வந்துவிட்டார்கள்?” என்று தேவகி கேட்டாள். கேட்கும்போதே அவள் உள் மனம் யார் வந்திருப்பார்கள் என்பதைச் சொல்லிவிட்டது. அதன் தாக்கத்தில் எப்போதும் வெளிறிக் காணப்படும் அவள் முகம் சற்றே நிறம் கண்டது.

“கிருஷ்ணன்! வேறு யார்? அவன் தான் வருகிறான். தாமகோஷனும் அவனுடன் இருக்கிறானாம். அவன் ஜராசந்தனை ஓட ஓட விரட்டி அடித்து விட்டான். என் கிருஷ்ணன்! அவனை மட்டுமில்லாமல் இன்னும் பல வெற்றிகளையும் கண்டு ஜராசந்தனின் படையையும் விரட்டி அடித்துவிட்டு வருகின்றான். “ வசுதேவரின் குரலில் அளவு கடந்த உற்சாகம். பல மாதங்கள் கழித்துத் தன் மகனைப் பார்க்கப் போகும் சந்தோஷம். என்றாலும் உடலும், மனமும் நடுங்கியது. “அவர்கள் வந்துவிட்டார்கள்” என்று கூறினார் பரபரப்பான குரலில்.

கண்களில் ஆந்ந்த பாஷ்பம் பொழிய, “அவன் என் நாதன், என் பிரபு, என் கடவுள்!” என்றாள் தேவகி!



அக்ரூரரோ, தன் கண்களை மூடியவண்ணம் கீழே பார்த்துக்கொண்டு மெல்ல முணுமுணுத்தார்:

அவனே நாதன், அவனே ஸ்ரீமந்நாராயணன், அவனே வாசுதேவன்!

Friday, January 21, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

"ஆம், ஆம், அவன் இறந்திருக்கவேண்டும்!” என்றான் இன்னொரு இளம் யாதவன். சாத்யகி கோபத்துடன், “அவன் நன்றாகவே இருக்கிறான். உயிரோடு தான் இருக்கிறான். இது உண்மையான செய்தி. முதலில் நீங்கள் அனைவரும் நிதானத்துக்கு வாருங்கள். அடுத்துச் செய்யவேண்டியது என்ன என்று யோசிக்கலாம்.” என்றான். இப்போ வசுதேவரைக் கொஞ்சம் பார்ப்போமா?
இங்கே மதுராவில் வசுதேவரின் குடும்பத்தில் ஒரு சில மாறுதல் நடந்திருந்தன. கிருஷ்ணனும், பலராமனும் உத்தவனோடு மதுராவை விட்டுச் சென்றதும், குந்தி ஹஸ்தினாபுரத்தில் இருந்து உதவி கேட்டு ஆளை அனுப்பி இருந்தாள். தனக்கும், தன் ஐந்து குமாரர்களுக்கும் ஆபத்து நேரிடும் என அஞ்சுவதாயும், ஆகவே இந்நேரம் உடன்பிறந்த சகோதரன் ஆன வசுதேவரின் உதவி தேவை எனவும் கேட்டிருந்தாள். ஹஸ்தினாபுரச் சூழ்நிலையையும், அதே சமயம் பீஷ்மப் பிதாமஹரோடும், திருதராஷ்டிரனோடும் தனித்தனியே பேசி அவர்கள் கருத்தையும் தெரிந்து வரவேண்டும் என்று நினைத்த வசுதேவன் அதற்காக அக்ரூரரை அங்கே அனுப்பி வைத்திருந்தார். குரு வம்சத்தினரின் வாரிசுச் சண்டையினாலும், அவர்களின் ஒற்றுமையின்மையினாலும் வசுதேவரும் கவலையடைந்தார். அக்ரூரர் ஹஸ்தினாபுரம் திரும்பி வரும் வழியில் குருக்ஷேத்திரம் சென்று அங்கே சரஸ்வதி நதிக்கரையில் ஆசிரமம் அமைத்துத் தங்கி இருந்த வேதவியாசரையும் சந்தித்துப் பேசினார்.


மதுரா வந்தடைந்த அக்ரூரர் வசுதேவரையும், உக்ரசேனரையும் சந்தித்து குருவம்சத்தின் மூத்தவர்கள் பாண்டவர்களிடம் அன்பாயும், பக்ஷமாயும் இருந்துவருவதைத் தெரிவித்தார். என்றாலும் திருதராஷ்டிரனின் குமாரர்களும், அவர்களுக்கு நண்பனாக இருந்து வழிநடத்தும் கர்ணனும், சேர்ந்து கொண்டு பலவகைகளிலும் பாண்டவர்களைத் துன்புறுத்தி மகிழ்வதாயும் தெரிவித்தார். இந்தக் கர்ணன் ஒரு தேரோட்டியின் மகன் என்று சொல்கின்றனர். ஆனாலும் சிறந்த வீரனாய் இருக்கிறான் என்றும் கெளரவர்களின் உற்ற நண்பனாய் இருப்பதாயும் கூறினார். என்றாலும் பாண்டவர்கள் மிகவும் பொறுமையுடனேயே இருப்பதாயும் மக்கள் அனைவருமே அவர்களிடம் பிரியமாகவும், பாசத்துடனும் இருப்பதாயும் கூறினார். பின்னர் அக்ரூரர் தேவகியைப் பார்த்துப் பேச அந்தப்புரம் வந்தார். அவள் அப்போது தன்னுடைய பொன்னாலான ஊஞ்சலில் குழந்தைக் கிருஷ்ணனின் விக்ரஹத்தை இட்டுத் தாலாட்டிப் பாட்டுப் பாடிக்கொண்டிருந்தாள். அவளைப் பொறுத்தவரை இது ஒரு கோயில். கோயிலில் இறைவனுக்குப் பள்ளியறையில் விட்டுப் பாடிக்கொண்டிருக்கும் ஓர் அடியார் கூட்டத்தைச் சேர்ந்தவள் அவள். அக்ரூரரைக் கண்ட அவள் அவர் காலில் விழுந்து ஆசியைப் பெற்றுக்கொண்டாள். “தேவகி, இன்னமுமா உன் குழந்தைக் கிருஷ்ணனை நீ மறக்கவில்லை?” என்று வினவினார் அக்ரூரர். “இனி அவன் குழந்தை இல்லை அம்மா. வீரனாக ஆகிவிட்டானே! அதுவும் அவனே நம்மை எல்லாம் காக்க வந்திருக்கும் ஓர் ரக்ஷகன்.” என்றார் சிரித்துக்கொண்டு.

“மரியாதைக்குரிய மூத்தவரே, என் அருமைக் கண்ணன் பிறந்தவுடன் ஒரு நிமிடம் மட்டுமே நான் அவனைக் கண்ணாரக் கண்டேன். பின்னர் அவனைத் துணியில் சுற்றி என் கணவரிடம் ஒப்படைத்தேன். அப்போதிலிருந்து என் கண்ணெதிரே துணியில் சுற்றிய என் கண்ணனின் முகமே தான் நினைவில் வருகிறது. அவனை வேறு எந்தவித உருவத்திலும் என்னால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. இருக்கட்டுமே, அவன் மூன்று உலகங்களுக்கும் ராஜாவாகவே இருக்கட்டுமே, என் அண்ணாரே, ஆனாலும் அவன் என் அருமைக் குழந்தைதான். துணியில் சுற்றி என் கணவரிடம் ஒப்படைத்தபோது எதை நினைத்தோ அவன் களுக்கென்று சிரித்துக்கொண்டிருந்தான். என்னால் அதை மறக்கவே முடியவில்லை.” என்றாள் கண்ணீர் ததும்ப.

“ஓஓஓ, தேவகி, அமைதி, அமைதி, சுபத்ரா எப்படி இருக்கிறாள்?” என்று கேட்டார். பலராமனுக்கும், கண்ணனுக்கும் பின்னர் பிறந்தவள் சுபத்ரா. “ஓ, அவளுக்கு என்ன? அண்ணாரே, அவள் நன்றாகவே இருக்கிறாள். ஆரோக்கியமாக இருக்கிறாள். எந்நேரமும் சிரிப்புத் தான். ஓர் அழகிய இளமங்கையாக வருவாள் என நினைக்கிறேன்.” குரலில் பெருமை கூடியது தேவகிக்கு.

“ம்ம்ம்ம்ம்.., இப்படி நீ கண்ணனையே நினைத்துக்கொண்டு அவனுக்காகவே உருகுவது சுபத்ராவுக்குக் கொஞ்சமும் சங்கடமாய் இல்லையா?? அதற்காக அவள் வருந்தவே இல்லையா? உனக்குத் தான் இவ்வாறு கண்ணனுக்கு எனத் தனி அன்பைக் காட்டிக்கொள்ள சங்கடமாய்த் தோன்றவில்லையா?” என்றார் அக்ரூரர்.

“அண்ணாரே, ஒரு தாய் தன் ஒரே மகளை எந்த அளவுக்கு நேசிக்கவேண்டுமோ அந்த அளவுக்கு சுபத்ராவை நான் நேசிக்கிறேன். ஆனால் கண்ணனின் விஷயம் வேறு. அவன் என் உலகம். என் மூச்சு, என் ஜீவன், என் கடவுள். இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் , இன்னும் நான் எங்கே சென்றாலும் அவனே எனக்கு எல்லாமுமாய் இருக்கிறான். அது போகட்டும்; குந்தி எப்படி இருக்கிறாள்? அவள் பிள்ளைகள்? அனைவரும் நலம்தானே?”

அக்ரூரர் தான் ஹஸ்தினாபுரம் சென்றது பற்றியும் அங்குள்ள நிலைமைகள் குறித்தும் ஒரு சின்ன விளக்கத்தை தேவகிக்குக் கொடுத்தார். அவர் மனம் மீண்டும் பழைய விஷயத்திலேயே இருந்த்து. ஆகையால் அதற்குத் தாவினார்:”தேவகி, நான் வரும் வழியில் வேதவியாசரைப் பார்த்தேன். பக்தியைப் பற்றியும், அதிலும் தெய்வீகமான அன்பு எவ்வாறு பக்தியாக மாறுகிறது என்பதைப் பற்றியும் அவர் கூறிக்கொண்டிருந்தார். எனக்கு உன் நினைவுதான் வந்தது. அதுசரி, தேவகி, பால கோபாலனை நினைத்துக்கொண்டே இருக்கும் உன்னால் எவ்வாறு சுபத்ராவுக்கும் தாயாய் இருக்க முடிகிறது?”

“என்னால் இயலும். திருமணம் ஆன நாள் தொட்டுப் பத்துவருடங்களுக்கும் மேல் சிறையில் இருந்த நான் எனது ஒரே விடுதலையாக நம்பி வந்ததே என் எட்டாவது குழந்தையைத் தான். பலவிதமான துன்பங்களையும் அநுபவித்தாலும் எட்டாவது குழந்தைப் பிறப்பையும் அதன் மூலம் விடுதலையையும் என் மனம் தேடிக்கொண்டே இருந்தது. கடைசியில் பல துன்பங்களை அநுபவித்தாலும் கண்ணன் பிறந்தான். அவன் மற்றவர்கள் வரையிலும் அவர்களை மீட்பவனாக மட்டுமே இருந்திருக்கலாமோ என்னமோ! என் வரையில் அவனே எனக்குக் கடவுள். ஆனால் அவன் பிறந்த அடுத்த கணமே என்னை விட்டுப் பிரிந்தான். அதன் பின்னர் கழிந்த வருடங்கள்!! காத்திருந்தேன்! காத்திருந்தேன் ஐயா, காத்திருந்தேன். இவ்வுலகில் எந்தத் தாயும் தன் குழந்தை இன்னொருத்தியைத் தாய் என்று சொல்லி வளர்ந்து வருவதைப் பொறுத்திருப்பாளா? நான் பொறுத்திருந்தேன். பதினைந்து வருடங்கள்! அவனுக்காக இரவும், பகலும் அவனையே நினைத்துக்கொண்டு, அவனைத் தூங்க வைத்து, அவனை எழுப்பிப் பாலூட்டித் தாலாட்டி! “
“இவ்வளவு கடுமையான காத்திருப்பிலும் அவன் என்னுடனேயே இருப்பதாயும், என் முன்னால் இருப்பதாயும் உணர்ந்தேன். அவன் என் கண்ணெதிரே இல்லாதபோதும், நான் விட்டுப் பிரிந்த அதே குழந்தை வடிவில் அவனைக் கண்டேன். அவனோடு பேசினேன், பாலூட்டினேன், அவனுக்காகத் தாலாட்டுகள் பாடினேன். அவனை அணைத்து மகிழ்ந்தேன்! என் கண்ணன், என் குழந்தை, என் மகன். ஆனால் என் அண்ணாரே! அவன் எனக்காகப் பிறக்கவில்லை. நான் அல்லவோ அவனைப் பெற்றெடுக்கவென்றே பிறந்துள்ளேன்! என்ன பாக்கியம் செய்தேனோ! நான் தான் அவனுக்கு அம்மா. நான் அவனுடையவள். என் மூச்சுக்காற்று இருக்கும் வரைக்கும் நான் அவனுடைய தாய்!


"இதோ, இப்போது கூட என் கண்ணெதிரே என் முன்னே என் கண்ணன் நிற்கிறான், என் அண்ணாரே! அவன் என்னை விட்டு ஒரு நாளும், ஒரு கணமும் பிரியவே இல்லை. என்னுடனேயே எப்போதும் இருக்கிறான். என்னோடு பேசுகிறான். எனக்கெனத் தனியான விருப்பங்கள் ஏதும் இல்லை. அவன் விருப்பமே என் விருப்பம். நான் நடந்தேன் என்றால் அது அவனுக்காக. நான் விடும் ஒவ்வொரு மூச்சும் அவனுக்காக. நான் உண்டேன் என்றால் அதுவும் அவனுக்காக. என் ஒவ்வொரு செயலும் அவனுக்காக. அவனில்லாமல் என் வாழ்க்கையே இல்லை. உங்களுக்கு இது புரியாது அண்ணாரே! உங்களால் புரிந்துகொள்ளவும் இயலாது. நீங்களும் கண்ணனை ஒரு கடவுள் என்றே நினைக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். மேலும் உங்கள் கண்களுக்கு அவன் வளர்ந்த ஒரு இளைஞனாகவும், வீரனாகவும் தெரிகிறான். யாதவ குலத்தின் ரக்ஷகனாகத் தெரிகிறான்.


ஆனால் எனக்கு எங்கு நோக்கினும் பாலகிருஷ்ணனாகவே இருக்கிறான். இந்த அந்தப்புரத்தின் மற்றப் பெண்கள் என்னை ஒரு பைத்தியம் என நினைக்கிறார்கள் என்பதையும் நான் புரிந்து கொண்டிருக்கிறேன். ஒருவேளை தாங்களும் அவ்விதம் நினைக்கலாம். ஆனால், எனக்கென்று, நான் என ஒரு தனித்தன்மை இல்லாமல் கண்ணனிலேயே நான் கரைந்து போய்விட்டேன் ஐயா. அவனையே நான் எங்கெங்கும் காண்கிறேன். என்னால் வேறு எவரையும் காண இயலவில்லை!”

Tuesday, January 18, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

தன் தலையைக் குனிந்த வண்ணம் சற்று நேரம் யோசித்தவாறு இருந்த உக்ரசேனர் பின் நிமிர்ந்து கர்காசாரியாரைப் பார்த்து, “ஆசாரியரே, நான் என்ன செய்யட்டும்?? எங்கள் யாதவகுலமே சபிக்கப் பட்ட குலம் என்பதைத் தாங்கள் அறிவீர்கள் அன்றோ? அதோடு மட்டுமா?? என் மகன் கம்சனின் கொடூரமான நடத்தைகளாலும் மொத்த யாதவ குலமுமே அவமானப்பட்டதோடு அல்லாமல் துன்பமும் அடைந்தனர். அந்தக் காரணத்தாலேயே கண்ணன் கம்சனைக் கொன்றபோது நான் எந்தவிதமான உணர்ச்சியையும் காட்டாததோடு ஆழ் மனதில் கொஞ்சம் ஆறுதலையும் அடைந்தேன். பின்னர் ஒருவழியாக நாட்டையும், பொறுப்பையும் கண்ணனிடம் ஒப்படைத்துவிட்டு நான் நகர்ந்தால் அதுவே மக்களுக்கு நன்மை பயக்கும் என்றும் எண்ணினேன். ஆனால் அதுவும் நடக்கவில்லை. மேலும் இப்போது கண்ணன் இருக்குமிடமும் தெரியவில்லையே? நானும் நாளாக நாளாகப் பலவீனம் அடைந்து வருகிறேன்.”

உக்ரசேனர் வருத்தத்துடன் பேசியதைப் புரிந்து கொண்ட கர்காசாரியார், “ மாட்சிமை பொருந்திய மன்னா! கவலை வேண்டாம். கிருஷ்ணனுக்கு எதுவும் ஆகாது. அவன் செளக்கியமாயும், சுகமாயும் இருப்பான். அவனுக்கு எதுவும் நடந்திருக்காது. அவன் இவ்வுலகில் வந்து பிறந்த காரணம் கம்சனை அழிப்பது மட்டுமல்ல. தர்மத்தை நிலைநாட்டுவதே. ஆகவே அவன் வந்த காரியம் பூர்த்தி ஆகும் முன்னர் அவனுக்கு எதுவும் நடக்காது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால் அரசே, என் நம்பிக்கையை உங்களிடம் எப்படிப் புகுத்துவது என்பது தான் எனக்குத் தெரியவில்லை.” என்றார் கர்காசாரியார்.

“அப்படியே இருக்கட்டும், ஆசாரியரே, ஆனால் அவன் ஏன் என் மகனுக்குக் குறுக்கே வருகிறான்?” கோபத்தோடு தலையிட்டாள் கம்சா. தன் தகப்பனின் கட்டிலின் தலைமாட்டில் நின்ற வண்ணம் தகப்பனுக்கு விசிறியால் வீசிக்கொண்டிருந்தாள். “ கண்ணன் தர்மத்தை நிலைநாட்டுவதற்கு என் மகன் தடை ஒன்றும் சொல்லவில்லையே? என் மகனா குறுக்கே நிற்கிறான்? அப்படி இருக்கையில் அவன் பட்டம் ஏற முடியாமல் இவனல்லவோ தடுத்துக்கொண்டிருக்கிறான்?” கம்சாவின்கோபம் அடங்கவே இல்லை.
“யாராலும் கண்ணனைத் தடுக்க இயலாது. “ உக்ரசேனரின் குரல் பலவீனமாய்த் தொனித்தாலும் உறுதி தெரியச் சொன்னார். “ஆனால் கண்ணன் இல்லாத இந்தச் சமயம் பார்த்து இந்த நாட்டுக்கு ஒரு யுவராஜாவை நியமிக்க எனக்கு என்னமோ பிடிக்கவில்லை. அது அவ்வளவு சரியானதாய்த் தெரியவில்லை. கண்ணன் இல்லை எனில் எத்தனையோ யாதவர்கள் காப்பாற்றப் பட்டிருக்கவே இயலாது.”

“அவனால் வரவே முடியவில்லை எனில்?” கம்சாவின் குரலில் சற்றும் இரக்கமே தெரியவில்லை. கடுமையான குரலில் கேட்டாள்.

கர்காசாரியாரோ அவளுடைய நம்பிக்கை பொய்த்துப் போகும் வண்ணம் தலையை வேகமாய் ஆட்டித் தன் மறுப்பைத் தெரிவித்தார். அப்போது அருகே காவலர்கள் இருந்த அறையில் ஏதோ கசமுசாவென்று ஒரே சப்தம். யாரோ உணர்ச்சிகள் பொங்கப் பேசும் குரல் கேட்டது. சற்று நேரத்தில் ப்ரத்யோதாவின் இடத்துக்கு நியமிக்கப் பட்டிருந்த ஷங்கு என்பவன் ஓடோடி வந்தான். “பிரபுவே, பிரபுவே, அவன் வந்துவிட்டான். அவன் வந்துவிட்டான்.” ஷங்குவால் பேசக் கூடமுடியவில்லை. உணர்ச்சி வசப்பட்டு கண்களில் கண்ணீர் ஒருபக்கம் வர, இன்னொரு பக்கம் முகமோ மலர்ச்சியால் விகசித்துக் காணப்பட்டது. உக்ரசேனரோ தூக்கிவாரிப் போட்டு எழுந்து அமர்ந்தார். தான் மரணத்தை அல்லவோ வரவேற்றுக்கொண்டிருக்கிறோம். இது யார் வந்திருப்பது? “யார் அது?” என்று கேட்டார்.

“கிருஷ்ண வாசுதேவன் . பிரபுவே, ஜராசந்தனை வென்று விட்டானாம்.” ஷங்குவின் மகிழ்ச்சி எல்லை கடந்தது. ஆனந்தத்தில் ஆடுவான் போல் காணப்பட்டான்.

“மஹாதேவா, எங்களையும், எங்கள் குலத்தையும் காப்பாற்றி விட்டாய்.” உக்ரசேனர் வாய்விட்டுத் தன் நன்றியைதெரிவித்த வண்ணம் மனதில் நிம்மதி பிறக்கப் படுக்கையில் சாய்ந்தார். கர்காசாரியாரோ மெளனமாய்ப் பிரார்த்தனையில் ஆழ்ந்தார். கம்சாவின் கோபம் அதிகமாக அவளுக்குக் கண்ணீர் பொங்கியது. தன் நெற்றியில் பளார் பளார் என்று அறைந்த வண்ணம், தன்னையும் மீறிக்கொண்டு வந்த கேவல்களை அடக்கியவண்ணம் அங்கிருந்து விரைவாக வெளியேறினாள்.

பிருஹத்பாலனோ தன் நண்பர்களோடு சதுரங்கம் ஆடிக்கொண்டும், குடித்துக்கொண்டும், விளையாட்டுப் பேச்சுக்கள் பேசிக்கொண்டும் காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தான். அவனுக்குத் தன்னை விட்டால் வேறு எவரும் யுவராஜா ஆகமுடியாது என்று சர்வ நிச்சயமாய்த் தெரிந்திருந்ததால், சம்பிரதாயமான அறிவிப்புக்குக் காத்திருந்ததோடு தன்னுடைய யுவராஜ பட்டாபிஷேஹத்தைக் கொண்டாடவேண்டிய ஏற்பாடுகளையும் செய்து வந்தான். அப்போது சாத்யகி கோபத்துடனும், ஆங்காரத்துடனும் உள்ளே நுழைந்தான். “முட்டாள்கள் நீங்கள் அனைவரும், ப்ருஹத்பாலா, நிறுத்து உன் விளையாட்டுக்களை. “ என்று கோபமாய்க் கத்தினான். அவன் முகம் கடுகடுவென்று இருந்ததோடு கண்கள் ஆழ்ந்த சிந்தனையையும் காட்டின. “வா, வா, நீயும் வந்து கொஞ்சம் பானம் அருந்திவிட்டு, இந்த விளையாட்டிலும் பங்கு கொள்வாய், வா நண்பா!” அளவுக்கு மீறிய குடியால் குழறிக் குழறி வந்தன ப்ருஹத்பாலனின் பேச்சுக்கள். “இது இந்த நாட்டு யுவராஜாவின் கட்டளை! வா!” என்று அதிகாரமாய்க் கூறினான்.

அவன் கைகளிலிருந்து கோப்பையையும், சதுரங்கம் விளையாடும் பொருட்களையும் பிடுங்கி வீசி எறிந்தான் சாத்யகி. “நீயோ, நானோ யாருமே யுவராஜா என்ன? தளபதியாகக் கூட ஆகப்போவதில்லை. முட்டாள். சர்வ முட்டாள்.” கத்தினான் சாத்யகி. “எல்லாருமே முட்டாள்கள் தான்.” அந்த நண்பர்கள் கூட்டத்தில் யாரோ குடிபோதையில் இளித்துக்கொண்டு பேச, சாத்யகியின் கோபம் அதிகம் ஆனது. “என்ன நடந்த்து?” ப்ருஹத்பாலன் சாத்யகியின் இந்த அதிரடி நடவடிக்கையால் போதை தெளிந்து நிதானத்துக்கு வந்திருந்தான். சாத்யகி கூறினான்.

“அவன் வந்துவிட்டான்.”

“யார் வருகின்றார்கள்?”

“கிருஷ்ண வாசுதேவன். இப்போதுதான் தூதுவர்களிடமிருந்து செய்தி வந்தது. ஜராசந்தனைத் தோற்கடித்து அவனை விரட்டி விட்டுக் கிருஷ்ண வாசுதேவன் மதுராவை நோக்கி வந்து கொண்டிருக்கிறானாம்.”

சற்று நேரம் அங்கே ஒரே அமைதி. பின்னர், விராடன்,”விளையாடாதே சாத்யகி! உன்னுடைய நகைச்சுவை உணர்வுக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விட்ட்து!” என்று கத்தினான்.

“நான் ஒன்றும் விளையாட்டுக்கோ, அல்லது சிரிக்கவோ சொல்லவில்லை. உண்மையைத் தான் சொல்கிறேன். ஜராசந்தனை விரட்டியதோடு மட்டும் அல்ல. கரவீரபுரத்தின் ஸ்ரீகாலவ வாசுதேவனையும் கிருஷ்ணவாசுதேவன் கொன்றுவிட்டானாம். அங்கிருந்து கிளம்பி இப்போது அவந்தி வரை வந்துவிட்டானாம். இன்னும் ஓரிரு வாரங்களில் மதுராவை வந்து அடைந்து விடுவான். “ சாத்யகி நிறுத்தினான்.

அனைவருமே இப்போது நிதானம் அடைந்துவிட்டனர். ப்ருஹத்பாலனின் முகம் கொடூரமாக மாறியது. கடித்த பற்களுக்கிடையே அவன், “கிருஷ்ண வாசுதேவன்! அவன் இன்னும் இறக்கவில்லையா? இறந்திருப்பான் என்றல்லவோ நினைத்தேன்!” என்றான்.

Tuesday, January 11, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

இளைஞர்கள் கூடிப் பேசியது தெரிந்த கம்சா தன் கணவன் தேவபாகனிடம் தன் எண்ணத்தைத் தெரிவித்தாள். ஒரு முறைக்கு இருமுறையாக அடுத்துப் பட்டம் ஏறவேண்டியவன் ப்ருஹத்பாலனே என்பதைச் சொல்லி அதை நிச்சயம் செய்துகொண்டு வரும்படிக் கணவனை வற்புறுத்தினாள். ஆனால் தேவபாகனுக்கோ அவள் எண்ணம் சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. தன் அண்ணனும், குடும்பத் தலைவனும் ஆன வசுதேவனுக்கு எதிராக யார் எது செய்தாலும் அதை அவன் ஒப்புக்கொள்ளமாட்டான். அது அவன் அருமை மனைவியானாலும் சரி, அவன் பிள்ளைகள் ஆனாலும் சரி. ஆரியர்களுக்கே உரித்தான கெளரவம் குடும்பத்துக்கு மூத்தவனைத் தந்தைக்கு அடுத்த ஸ்தானம் கொடுத்து மதிப்பதும், தந்தையின் காலம் ஆனதும் தந்தையின் இடத்துக்கு அவரை வைத்து மதிப்பதும், அவர் பேச்சுக்கும், செயலுக்கும் மறுப்புச் சொல்லாமல் சொன்னதைச் செய்வதும் தான்! ஆகவே அவன் அந்த மரபை மீற விரும்பவில்லை. மேலும் தன் உடன்பிறந்த அண்ணன் ஆன வசுதேவன் தனக்கும் தன் குடும்பத்துக்கும் நன்மையைத் தான் செய்வான் என்ற திடமான நம்பிக்கையும் இருந்தது அவனுக்கு. ஆகவே கம்சா வற்புறுத்தியும் அவன் இதைப் பற்றி ஒரு வார்த்தையும் வசுதேவனிடம் பேசவே இல்லை. கம்சாவுக்குத் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் எதிராக இந்த உலகே சதி செய்வது போல் தோன்றியது. அதிலும் ப்ருஹத்பாலன், எத்தகைய அறிவாளியும், திறமையும் வாய்ந்த பிள்ளை! அவனை விட்டால் வேறு எவருக்குத் தகுதி இருக்கிறது மதுராவை ஆள்வதற்கு? என்றோ ஒருநாள் அவன் தான் வரப் போகிறான். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.


அந்த இடையன் கிருஷ்ணனோ தனக்கு அளிக்கப்பட்ட பதவியை ஏற்க மறுத்து ஊரை விட்டே கோழையைப் போல் ஓடி எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறான். இந்த இக்கட்டான நிலையில் ப்ருஹத்பாலன் மட்டும் இல்லை எனில் மதுராவின் கதி?? என்ன ஆகி இருக்கும்?? அவனுடைய ராஜதந்திரமான நடவடிக்கையால் அன்றோ மதுரா காக்கப் பட்டது?? இந்த யாதவர்களுக்குத் துளியானும் நன்றி இருக்குமானால் அவனை அரசனாக்கவேண்டும். ம்ம்ம்ம்… அப்படியானும் யாதவ குலங்களிலேயே மிகவும் தலைமை ஸ்தானத்தில் இருக்கும் அந்தகர்களுக்கும், ஷூரர்களுக்கும் ஒற்றுமை ஏற்பட வேண்டும். அண்ணன் கம்சன் இருந்தவரையில் அதற்கு வழியே இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது என் மகன் ப்ருஹத்பாலனோ தந்தை உக்ரசேனரின் ஆசைக்கு உகந்த பேரன் ஆவான். ஆகவே இதற்குத் தடை சொல்வார் எவரும் இருக்கமாட்டார்கள். ஆனால் நாம் ப்ருஹத்பாலனுக்கு உதவியாக இருக்கவேண்டும். கம்சா ஒரு தீர்மானத்துக்கு வந்தாள்.
ப்ருஹத்பாலனோடு கூட்டுச் சேர்ந்துகொண்ட யாதவர்கள் அனைவரின் குடும்பத்தையும் தனக்கு சிநேகிதமாக்கிக் கொண்டாள். அவர்களில் சாத்யகி முக்கியமானவன். மேலும் உண்மையிலேயே மிகவும் புத்திசாலியும், திறமை வாய்ந்தவனும், முன்னுக்கு வரத் துடிப்பவனுமாக இருந்தான். பலவிதமான யுத்தங்களில் தலைமை வகித்து ஜெயித்து ப்ருஹத்பாலனுக்கு வலக்கையாக விளங்குவது போல் கனவும் கண்டு வந்தான். அவனுடன் பேசி அவன் எண்ணங்களைத் தெரிந்து கொண்ட கம்சா அவனுக்கு ஊக்கமும், உற்சாகமும் கொடுத்து அவனை ஆதரித்துப் பேசினாள். அதோடு நிறுத்தாமல் உக்ரசேனருக்கு ராஜரீக காரியங்களில் இருந்து ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் ப்ருஹத்பாலனையும், அவனுடைய ராஜதந்திர நடவடிக்கையையும், மதுராவை அவன் காத்ததையும் சொல்லித் தன் தகப்பனின் கவனத்தை அவன் பால் திருப்பவும் முயன்றாள். ஆனால் உக்ரசேனருக்கோ கிருஷ்ணன் ஒருவனைத் தவிர வேறு எவராலும் யாதவ குலத்தைக் காக்கமுடியாது என்ற திடமான எண்ணம் ஏற்பட்டிருந்தது. ஆகவே கம்சாவின் பேச்சுக்கு அவர் மதிப்பே கொடுக்கவில்லை. மெல்ல மெல்ல நாட்கள் சென்றன. கோடைக்காலம் போய் மழைக்காலமும் வந்துவிட்டது. கிருஷ்ணன் எங்கே சென்றான், என்ன செய்கிறான் என்று ஒரு தகவலும் இல்லை. உக்ரசேனர் வயது காரணமாயும், மனது காரணமாயும் உடல்நலக்குறைவால் படுத்தார். இதுதான் சமயம் என்று நினைத்த கம்சா மெல்ல மெல்ல அவரிடம் ப்ருஹத்பாலனை அரசனாக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை வற்புறுத்த ஆரம்பித்தாள்.


தந்தையிடம், ப்ருஹத்பாலனைப் போன்ற அற்புதமான இளைஞன் கிடைக்கமாட்டான் என்றாள். பாட்டனான உக்ரசேனருக்குச் சேவை செய்ய அவன் துடிப்பதையும் எடுத்துச் சொன்னாள். மதுராவை அவன் காப்பாற்றவில்லை எனில் அழிந்தே போயிருக்கும். இந்த ஒருகாரணத்துக்காகவே மதுராவின் மக்கள் அனைவரும் அவனை விரும்புகின்றனர் என்றாள். தந்தை சொல்வது சரிதான். கிருஷ்ணனுக்கு இல்லாத உரிமையும், அவனுக்கு இல்லாத பதவியுமா? அது சரிதான். ஆனால் இப்போது அவன் இந்த ஊரையும், நாட்டையும் விட்டே போய்விட்டான். போயும் ஒரு வருடத்துக்கும் மேல் ஆகிறது. எங்கே போனான், என்ன செய்கிறான், எப்படி இருக்கிறான் என்பது ஒன்றும் தெரியவில்லை. முதலில் உயிருடன் இருக்கிறானா என்பதே சந்தேகம். அதுவரை மதுரா காவலன் இல்லாத நகராக இருக்க முடியுமா? சொல்லப் போனால் வசுதேவரும் இதைத் தான் விரும்புகிறார். அவருக்கும் ஒன்றும் ஆக்ஷேபணை இருக்கவே முடியாது. ப்ருஹத்பாலன் தான் வேறு யார்? அவரின் தம்பி பிள்ளைதானே? அவர் பிள்ளையானால் என்ன? தம்பி பிள்ளையானால் என்ன? அவருக்கு இருவரும் ஒருவரே. என்னிடம் நேரிலேயே சொல்லிவிட்டார். உக்ரசேன ராஜா மட்டும் ப்ருஹத்பாலன் தான் தன் வாரிசு என அறிவித்தால் அடுத்த நிமிஷமே தானே ஏற்பாடுகள் செய்து அவனை யுவராஜா ஆக்குவதாய்ச் சொல்லிவிட்டார். ஆகவே இன்னும் தாமதம் வேண்டாம். கண்களில் கண்ணீரோடு கம்சா தன் தந்தையிடம் தன் கருத்தைச் சொல்லிக் கெஞ்சினாள். உக்ரசேனருக்கோ, தனக்கு வயதாகிவிட்ட்தும், மரணம் எப்போதுவேண்டுமானாலும் நெருங்கும் என்பதும் புரிந்தது. மேலும் கிருஷ்ணனிடமிருந்தும் நம்பிக்கையான தகவல்கள் ஒன்றுமே வரவில்லையே? கம்சாவேறு பிடுங்கி எடுக்கிறாளே? ஆகட்டும் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். நான் யோசிக்கிறேன். என்று தன் அருமைப் பெண்ணைச் சமாதானம் செய்து வைத்தார்.

கர்காசாரியாரைக் கூப்பிட்டு கம்சா ப்ருஹத்பாலனுக்குப் பட்டம் கட்டச் சொல்லுவதைக் குறிப்பிட்டுவிட்டுத் தமக்கு வேறு வழி தெரியவில்லை என்றும் சீக்கிரம் நாள் பார்க்கச் சொல்லுமாறும் கூறினார். கர்காசாரியாரோ அதிர்ந்தார். “அரசே, இப்போது தக்ஷிணாயந காலம் நடந்து வருகிறதை அறிவீர் அன்றோ? சுப காரியங்களை தக்ஷிணாயநத்தில் செய்வது வழக்கமே இல்லை. இது என்ன புது வழக்கம்? “ என்றார் கர்காசாரியார்.

Saturday, January 8, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்

ஆஹா, நாம இப்போ மதுராவை விட்டுட்டு வந்துப் பல நாட்கள் ஆகிவிட்டனவே . அதுக்குள்ளே அங்கே என்ன என்னமோ நடந்து விட்டது. சொல்லப் போனால் சதியாலோசனைகளிலும், அவசர ஆலோசனைகளிலும் மதுராவின் யாதவர்கள் அனைவரும் பொங்கிக் கொதித்துக்கொண்டிருக்கும் நீர் போல் கொதித்துக்கொண்டிருந்தனர். கம்சன் இறந்த செய்தி கேட்டதும் மற்ற நாடுகளில் இருந்த யாதவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பினாலும், அவர்கள் அனைவரும் அவர்களுக்கே உரித்தான தனிச் சட்டங்களை அநுசரித்தனரே அன்றி மதுராவின் சட்ட, திட்டங்களை மதிப்பார் இல்லை. உக்ரசேனர் பெயரளவுக்கே தலைவராய் இருந்தார், அவரால் இவர்களை அடக்கி ஆள முடியவில்லை. அவரவர் தங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு பேசுவதும் செயலாற்றுவதுமாய் இருந்தனர். வசுதேவர் அவர்களிடையே தன்னுடைய இனிமையான சுபாவத்தால் பெயர் பெற்றிருந்தார் ஆனாலும், அவருடைய இனிமையான சுபாவமே அவர்களை அடக்கி ஆளமுடியாமல் அவரைத் தடுத்தது. மற்றொருவரான அக்ரூரரோ மிகவும் ஆன்மிக நாட்டத்தோடும் துறவு மனப்பான்மையோடும் இருந்ததால் அவராலும் எவரையும் கடிந்து எதுவும் சொல்ல முடியவில்லை. ஆகவே மதுராவில் அவரவரும் தாங்கள் இட்டதே சட்டம் என்னும்படிக்கு இருந்தார்கள்.


எல்லாவற்றுக்கும் மேல் உக்ரசேனரின் அரண்மனையே சதியாலோசனைக்குத் தலைமை இடமாக இருந்து வந்தது. கம்சன் இறந்ததும் ஏற்பட்ட கிளர்ச்சிகளில் உக்ரசேனரின் மற்ற மகன்களும் கொல்லப் பட்டனர். அவரின் ஐந்து மகள்களும் வசுதேவரின் உடன்பிறந்தவர்களுக்கு வாழ்க்கைப் பட்டிருந்தனர். அவர்களில் கம்சா என்னும் மூத்த பெண்ணோ, வசுதேவரின் சொந்த சகோதரர் ஆன தேவபாகனுக்கு மனைவியாக இருந்தாள். அவள் உக்ரசேனரின் அருமையான செல்லப் பெண்ணாகவும் இருந்தாள். கம்சனால் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த உக்ரசேனருக்கு முழுக்க முழுக்க உதவி செய்தது கம்சாதான். ஒரு காலகட்டத்தில் உக்ரசேனருக்கு அருகேயே தன் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு தன் புகுந்த வீட்டுக்கு விசேஷங்களின் போது மட்டுமே போய் வருவதையும் வழக்கமாக்கிக்கொண்டு விட்டாள். எப்போதும் தன் அருமைத் தந்தை உக்ரசேனரைக் கவனிப்பதிலேயே தன் நேரத்தைச் செலவிட்டாள். கம்சாவிற்கு மூன்று மகன்கள். மூவரிடத்திலும் அவள் கருத்து மூன்று விதமாக இருந்தது. தன் சொந்த மகன்களே ஆனாலும் அவளால் எல்லா மகன்களையும் ஒரே நோக்கோடு வளர்க்க இயலவில்லை. மூத்தவன் ஆன சித்ரகேது ஷூரர்களில் யுத்தத்தில் தேர்ந்தவனாக இருந்ததோடு அல்லாமல் தகப்பனுக்கு வேண்டிய உதவிகளையும் செய்து வந்தான். தன்னுடைய அரச பரம்பரையிலும், தன் தந்தையிடமும் அதிகம் பற்று வைத்திருந்த கம்சாவோ மூத்த மகனை ஒரு விருந்தாளி போலவே நடத்தினாள். தன் பெரியப்பாவான வசுதேவனுக்குச் சேவகம் செய்யும் மூத்த மகனை அவளால் மரியாதையுடன் பார்க்க முடியவில்லை. கடைசி மகன் ஆன உத்தவனையோ அவளுக்குச் சுத்தமாய்ப் பிடிக்கவே இல்லை.


அவளுக்குத் தன் கணவன் இந்தக் குழந்தையைப்பிறந்ததுமே தன்னிடமிருந்து பிரித்து கோகுலத்திலும், விருந்தாவனத்திலும் வளர்ந்து வந்த கண்ணனோடும், பலராமனோடும் சேர்ந்து வளர அனுப்பியதே பிடிக்கவில்லை. திரும்பி வந்தாலாவது தன் மகன் தன்னை அன்போடு பார்ப்பான் என எண்ணியவளுக்குத் தங்களிடம் படை வீரர்களாக இருந்து வரும் ஷூரர்களின் தலைவன் ஆன வசுதேவனின் இடைக்குலத்து மகனிடம் முழுமையாக அவன் அன்பு செலுத்தி வந்தது இன்னும் வெறுப்பைத் தந்தது. அரச குலத்தில் பிறந்த தனக்கு இப்படி ஒரு மகனா என எண்ணி எண்ணி மனம் நொந்தாள். ஆகவே அவள் தன் ஆசையையும், அன்பையும் இரண்டாவது மகன் ஆன பிருஹத்பாலனிடமே வைத்தாள். அவனே தன்னையும், தங்கள் குலத்தையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வான் என உறுதியாக நம்பினாள். அவன் மேல் எல்லையற்ற பாசத்தைச் செலுத்தியதோடு வேறு எவருடைய ஆளுமைக்கும் அவன் பலியாகாத வண்ணம் காவல் காத்துவந்தாள் என்றே சொல்லலாம். ஏமாற்றத்துக்கு உள்ளான அவளுடைய தாய்மையானது ப்ருஹத்பாலனிடம் அன்பு செலுத்துவதில் தன் ஏமாற்றத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய் மறந்துவந்தது.
மேலும் அவள் எப்போதுமே ப்ருஹத்பாலனைத் தன்னோடு வைத்திருந்ததால் உக்ரசேனருக்கும் இந்தப் பேரன் மேல் பாசம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. கம்சா எதிர்பார்த்ததும் அதுவே. தன்னுடைய மற்ற சகோதரர்களும் இறந்ததும், இயற்கையாகவே அவள் அடுத்துத் தன் மகன் தான் அரசுக்கட்டிலுக்கு உரியவன் என்று நினைத்தாள். ஆகவே தன் தகப்பன் தன் மகனுக்குப் பதிலாகக் கண்ணனை அரசாள அழைத்ததில் அவளுக்கு அதிர்ச்சியும், வெறுப்பும் ஏற்பட்டது. தன் தகப்பன் செய்த இந்த அவமானத்தை அவளால் மறக்கவே முடியவில்லை. கண்ணனும், பலராமனும் மதுராவை விட்டுத் தப்பி ஓடியதும் தான் அவள் மனதில் ஒருவாறு நிம்மதி பிறந்தது எனலாம். அவள் தன் பேச்சுக்களாலும், குறிப்புகளாலும், பல்வேறு நடத்தைகளாலும் கண்ணனும், பலராமனும் ஜராசந்தனை எதிர்க்கப்பயந்து கொண்டு கோழைகளைப் போல் ஓடிப்போனார்கள் என்று கூறி எல்லா யாதவர்களின் மனதையும் மெல்ல மெல்ல மாற்றவும் முயற்சித்து வந்தாள். அதன் பின்னரே ஒரு நாள் அவளுக்கு அவளின் கண்ணின் கருமணியான பிருஹத்பாலனின் ராஜ தந்திர நடவடிக்கையாலேயே ஜராசந்தன் மதுராவை முற்றுகையிடவில்லை என்றும் மதுராவை காத்தது தன் அருமை மகனே என்றும் செய்தி கிடைத்தது.


ப்ருஹத்பாலன் தன்னுடைய சாமர்த்தியமான நடவடிக்கைகளினால் ஜராசந்தனை எவ்வாறு தன்னால் தடுக்க முடிந்த்து என்பதைப் பற்றி மதுராவின் அனைத்து யாதவர்களிடமும் மிகவும் பெருமையாகக் கூறினான். அக்ரூர்ருக்கும் கடாவுக்கும் கூட இது முதலில் ஆச்சரியம் அளித்தாலும் ப்ருஹத்பாலனின் சாமர்த்தியத்தைப் புகழத் தயங்கவே இல்லை. எனினும் அக்ரூரருக்கு ப்ருஹத்பாலன் மதுராவைக் காப்பாற்றும் நோக்கத்தில் கிருஷ்ணன் இருக்கும் இடத்தைச் சொல்லி இருப்பானோ என்ற சந்தேகம் மட்டும் மறையவில்லை. ஆனாலும் அவர் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. இங்கேயோ கம்சாவுக்கும் சந்தேகம் தான். அவள் சந்தேகமோ தன் சகோதரிகளிடமே. ஏனெனில் தன் மகன் ப்ருஹத்பாலனுக்கு அடுத்த அரசுரிமையைத் தரவேண்டி அவர்களின் சம்மத்த்தைக் கேட்டபோது அவர்களோ அதைத் திட்ட வட்டமாய் மறுத்ததோடு கண்ணனும், பலராமனுமே அதற்கு முழுத் தகுதி வாய்ந்தவர்கள் எனத் தாங்கள் நம்புவதாயும் கூறிவிட்டார்கள்.
ப்ருஹத்பாலனின் திட்டமோ வேறுவிதமாய் இருந்த்து. தன் வயதை ஒத்த இளம் யாதவர்களையும், வீரர்களையும் தன் பக்கம் சேர்த்துக்கொள்ள முயன்றான் அவன். பலரும் அவன் பக்கம் சேர்ந்து கொண்டார்கள். ஏனெனில் அனைவருக்குமே கம்சனின் கொடூரம் பிடிக்காமல் இருந்தது. ஆகவே அவன் ஒழிந்தான் என்பது அவர்கள் வரையில் மிகவும் மகிழ்வான ஒன்றாக இருந்த்து. ஆனால் திடீரென்று இந்தக் கிருஷ்ணன் எங்கே இருந்து வந்தான்?? வந்ததோடு இல்லாமல் எல்லாப் புகழையும் தனக்கல்லவோ ஸ்வீகரித்துக்கொண்டு விட்டான்?? கூடவே அவன் அண்ணனாம், பலராமன் என்றொரு குண்டோதரன். அது சரி, இந்த ப்ருஹத்பாலனின் தம்பியான உத்தவன் கூட அல்லவா அவர்கள் பக்கமே இருக்கிறான்?? மதுராவின் இளைஞர்களில் இவர்கள் மூவரும் அன்றோ முக்கியத்துவம் பெற்றிருக்கின்றனர்?? இப்படி எல்லாம் எண்ணியவர்களில் சத்ராஜித்தும், யுயுதானா என்ற சாத்யகியும் இருந்தனர். கண்ணனும், பலராமனும் ஓடிப் போனதில் இவர்கள் அனைவருமே மகிழ்வடைந்தனர். அனைவரும் ஒன்றாய்க் கூடிக் கண்ணனின்கோழைத்தனத்தை இகழ்ந்து பேசியதோடு , ப்ருஹத்பாலனின் அரசுரிமையையும் வற்புறுத்திப்பெறவேண்டும் என்று கூறினார்கள். உக்ரசேனரைப் போன்ற பலவீனமான மன்னன் இருப்பது சரியில்லை எனவும் உடனடியாக ப்ருஹத்பாலனுக்கு அரசுரிமையைத் தரவேண்டும் என்றும் முடிவெடுத்தனர்.

Tuesday, January 4, 2011

கண்ணன் வருவான் கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

பலராமன் அந்த அரசனிடம் பத்து ரதங்கள் கூட இருக்காது என்றும், ஒரு வாளின் எடைக்குக் கொடுக்கும் அளவுக்குக் கூடப் பொன்னும் இருக்காது என்பதையும் அறிவான். ஆனால் ஜராசந்தனைத் தானும், கண்ணனும் தோற்கடித்த விபரமும், குஷஸ்தலையைப் பிடித்துவிட்ட விஷயமும் மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும் என எதிர்பார்த்தான். அதோடு மேலும் பலராமன் தான் ஆயிரம் தலை உள்ள ஆதிசேஷன், என்பதும் அவர்கள் மனதில் பதிய வைக்க நினைத்தான். பலராமன் விரும்பிய வண்ணமே அனைத்தும் நடந்தது. பலராமன் அனுப்பிய தூதுவன் மக்களிடமும் எல்லா விஷயங்களையும் கூறினான். பலராமன் தூதுவன் மூலம் அனுப்பிய இந்த மிரட்டலைக் கேட்ட மக்கள் பயந்து நடுங்கினார்கள். தங்கள் வீடுகளை விட்டு வெளிவர மறுத்தார்கள். அரசனுக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது, செய்தால் பலராமன் தங்களை ஏதேனும் செய்துவிடுவான் என்று அஞ்சினார்கள். ஆனால் அரசன் தன் மெய்க்காவலர்களுடனும் ஒரு சிறு படையுடனும், வில்லையும் அம்புகளையும் ஏந்திக்கொண்டு ரதங்களில் ஏறிக்கொண்டு கோட்டை வாசலைத் திறந்துகொண்டு வெளியே வந்து பலராமனின் மேல் பாய்ந்தனர். பலராமன் இதை எதிர்பார்த்தவன் போலத் தன் வீரர்களை விட்டு அவர்களை எதிர்க்கச் செய்தான்.


அனைவருக்கும் முன்னிலையில் பலராமன் தலைமையில், ரேவதியும் உடன் இருக்க உத்தவனும், மற்றப் படை வீரர்களும் அவர்கள் மேல் கடும் தாக்குதல் நட்த்தினார்கள். பலராமனின் கலப்பைக்கு அன்று நல்ல வேலை இருந்தது. உத்தவனின் அம்புகளும், நாகர்களின் அம்புகளும் சரியான இடத்தைப்போய்த் தாக்கின. ரேவதியும் தன் தாக்குதலைத் திறமையாக நடத்தினாள். கோட்டையை விட்டு வெளிவந்த வீரர்கள் சுதாரித்துக்கொள்ளும் முன்னரே பலராமனும் அவன் ஆட்களும் நடத்திய கடும் தாக்குதலில் நிலைகுலைந்தனர் கிரிநகரின் வீரர்கள். மேலும் அவர்கள் போரையும் எதிர்பார்க்கவில்லை என்பதால் சரியான திட்டத்தோடு வந்திருந்த பலராமனைச் சமாளிக்க முடியவில்லை. இறந்து விழுந்த வீரர்களைத் தவிர மற்றவர்களுக்குப் பலத்த காயங்களும் ஏற்பட்டது. அனைவரும் அலறிக்கொண்டு திரும்பினார்கள். அரசன் பலராமனால் கொல்லப்பட்டான். தன் கலப்பையால் பிளந்து கோட்டையின் கதவுகளைத் திறந்துகொண்டு பலராமன் உள்ளே நுழைந்தான். மெல்ல மெல்லப் பொதுமக்கள் ஒவ்வொருவராய் வந்து புதிய அரசனான பலராமனுக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அதைக் கண்ட பலராமன் ரேவதியின் முதுகில் ஓங்கி அடித்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். அவனுக்கு ரேவதி ஒரு பெண் என்பதே பல சமயங்களிலும் மறந்துவிடுகிறது. மேலும் அடிக்கடி மதுபானம் செய்துகொண்டு அந்த மயக்கத்தில் இருந்ததாலும் அருகில் இருப்பது ரேவதி என்னும் பெண் என்பதும், அவள் தான் இந்த நாட்டின் உரிமைக்குப்பாத்திரமான இளவரசி என்பதும் புரிவதில்லை. அவளைத் தன் நெருங்கிய தோழர் போலவே நடத்தி வந்தான். ஆனால் ரேவதி அவனுடைய செயல்களை உள்ளூற விரும்பினாலும் வெளிப்படத் தன்னை அதிகம் பலராமனை நெருங்காமல் பாதுகாத்துக்கொண்டாள். நான்காம் நாள் குக்குட்மின் அங்கே வந்தார். ஒரு காலத்தில் அவருடைய கோட்டையாக இருந்த கிரிநகரை மீண்டும் பார்த்த அவர் கண்கள் கண்ணீரில் நனைந்தன. தான் இழந்த நகரம் மீண்டும் தன் வசமானது அவருக்கு மகிழ்வைத் தந்தது. பலராமனையும் அவன் படைவீரர்களையும், உத்தவனோடு அங்கே சில நாட்கள் தங்கச் சொல்லி வேண்டினார்.

பலராமன் ஒரு மாசம் அங்கே இருந்தான். குக்குட்மின் பலராமனுக்குட் தினமும் பலத்த விருந்து படைத்தார். எதற்கும் ஒரு முடிவு வரவேண்டுமே. ஆகவே பலராமன் மதுராவுக்குத் திரும்ப எண்ணினான். பலராமன் கிளம்பும் நாளும் வந்தது. குக்குட்மின் தன்னிரு கரங்களையும் கூப்பியவண்ணம் பலராமனிடம், “ பலராமா, நீர் உண்மையாகவே அந்த அநந்தன் தான். சந்தேகமே இல்லை. உன்னிடம் உள்ள பலமும், தைரியமும் அவற்றை நிரூபித்துவிட்ட்து. எனக்கோ வயதாகிவிட்டது. இனி என்னால் இந்த நகரின் நிர்வாகத்தைக் கவனிப்பது இயலாது. ஆகவே நீர் இந்த நாட்டின் பொறுப்பை ஒப்புக்கொள்ளும். நான் பிரமனை வழிபடுபவன் . வேதங்களை ஓதும் பிரமன் நான் என் நாட்டையும், நகரத்தையும், கோட்டையையும் இழந்து சுற்றத்தாரையும் இழந்த சமயம் எனக்கு வாக்குறுதி கொடுத்தார். நான் இறக்கும் முன்னர் இழந்த நாட்டைத் திரும்பப்பெறுவேன் என்றார். ஆகவே இப்படி ஒரு நாளை நான் எதிர்பார்த்துக்காத்திருந்தேன் எனினும் இப்போது தன்னந்தனியாக நாட்டை ஆளும் அளவிற்குப்பலம் இல்லை என்னிடம். மேலும் என் போன்ற வயதானவர்கள் உங்களைப் போன்ற இளையவர்களுக்கு வழிவிடவேண்டும். இப்போது உங்களைப் போன்ற இளையவர்களின் காலம். “

“என்னுடைய ஒரே கவலை ரேவதியைப் பற்றித்தான். அருமையான பெண் அவள். திறமையானவளும் கூட. நீங்கள் அவளை ஏற்றுக்கொள்ளவேண்டும். “

கடைசியில் தான் நினைத்த விஷயத்துக்கே வந்தது குறித்து பலராமனுக்கு சந்தோஷம். என்றாலும் கொஞ்சம் பெருந்தன்மையாக மறுத்துப் பார்த்தான். ஆனால் குக்குட்மினோ அவனை அங்கேயே இருந்து ரேவதியுடன் சேர்ந்து நாட்டை ஆளும்படி கூறினான். பலராமனோ, “மாமனார் வீட்டில் இருந்தால் அடிமையாகிவிடுவேனே?” என்று கூறிவிட்டுப் பெருங்குரலில் நகைத்தான். பின்னர் கொஞ்சம் யோசனையோடு, “அரசே, இந்த விஷயத்தை இப்போதைக்குக் கொஞ்சம் தள்ளிப் போடுவோமே. நான் இப்போது உடனே மதுரா செல்லவேண்டும். மதுராவையும், அதன் மக்களையும் காக்கவேண்டும். எப்படியாவது இதைச் செய்து முடிக்கவேண்டும். அதுவரையிலும் உங்கள் பெண் எனக்காகக் காத்திருந்தால் நான் என் வேலையை முடித்துவிட்டு வந்து உங்களிடம் ரேவதியைப் பெண் கேட்பேன். ஆனால் அதுவரை அவள் காத்திருக்க நேரிடுமே? ரேவதி, நீ என்ன சொல்கிறாய்?? எனக்காகக் காத்திருப்பாய் அல்லவா? உன் தந்தை பிரமன் அளித்த வரத்துக்காக இத்தனை வருடங்கள் காத்திருந்தார். நீ ஒரு சில வருடங்கள் எனக்காகக் காத்திருக்க மாட்டாயா?? என்ன சொல்கிறாய்?” என்று கேட்டான். ரேவதி நாணம் பொங்கச் சிரித்தவண்ணம் கண்களால் தன் சம்மதத்தைத் தெரிவித்தாள்.