Saturday, December 31, 2016

குழல் மீதினிற்பூசி நறுநெய் குளித்தே சீவிக் குழல் முடிப்பேன் யான்!

சகோதரர்கள் ஐவரும் தங்கள் வழக்கமான ராஜ உடையையும், ஆபரணங்களையும் தரித்துக் கொண்டனர். தங்கள் ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டனர். அங்கிருந்து கிளம்பும்போது பீமன் துரியோதனனிடம் திரும்பிச் சொன்னான். “இத்துடன் நாங்கள் நிறுத்திவிடுவோம் என்று நினைத்து விடாதே! நீ தான் எங்கள் முக்கியமான முதன்மை எதிரி ஆவாய். நான் தான் உன்னைக் கொல்லப் போகிறேன்.  உங்களில் எவரும் தப்ப முடியாது! அதை நினைவில் வைத்துக் கொள்!” என்றான். “உன் தொடையைப்பிளந்து உன்னை மாய்ப்பேன்! துஷ்சாசனனையும் கொல்வேன்.” என்று சபதம் செய்தான்.  அர்ஜுனனும் இடைமறித்து, “நானும் கர்ணனைக் கொல்வேன் என்று சபதம் செய்கிறேன்.  ராதேயனையும் அவன் ஆதரவாளர்களையும் கொன்றொழிப்பேன்.” என்றான்.

சஹாதேவன் சொன்னான். “ஷகுனி, காந்தார இளவரசே, நீ ஓர் அவமானச் சின்னம். க்ஷத்திரிய குலத்துக்கே உன்னால் அவமானம்.  போர்க்களத்தில் நான் உன்னை எதிர்கொண்டு கொன்றழிப்பேன்.” என்றான். அதற்கு ஷகுனி கிண்டலாகச் சிரித்துவிட்டுச் சொன்னான். “அதற்கு முன்னர் நீ கொல்லப்படாமல் இருந்தால் தானே!” என்றான். நகுலன் சொன்னான். “நான் உன் மகன் உல்லூகனைக் கொல்வேன்.” என்றான். அதன் பின்னர் பாஞ்சாலி அனைவரையும் பார்த்து, “ துஷ்சாசனன், துரியோதனன் இருவரின் ரத்தத்தால் என் கூந்தலில் பூசிக் குளித்த பின்னரே இந்த என் விரிந்த கூந்தலை முடிவேன்!” என்று பயங்கரமான சபதம் செய்தாள்.  இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த யுதிஷ்டிரன் தன் கையை எச்சரிக்கை விடுக்கும் பாவனையில் உயர்த்தினான்.  பின்னர் கூறினான்.

“என் அருமைச் சகோதரர்களே, பாஞ்சாலி, கோபத்தின் வசப்பட்டு ஆத்திரத்திற்கு இரையாகி விடாதீர்கள். தர்மத்தின் பாதையை விட்டு விலகாதீர்கள்.  அங்க தேசத்து அரசன், ராதேயனின் மகன் கர்ணன், பாஞ்சாலியைக்குறித்த அவமரியாதையான சொற்களைப் பேசும்போது எனக்கும் ஆத்திரம் மூண்டது. அவனைக் கொல்ல வேண்டுமென்றே நினைத்தேன். ஆனால் என்னால் அவனிடம் கோபத்துடனோ, ஆத்திரத்துடனோ இருக்க முடியாது! அவன் மிகவும் துணிச்சல் உள்ளவன் மட்டுமல்ல; பெருந்தன்மை உள்ளவனும் கூட. விதியின் பயனால் அநீதியைச் சந்தித்தவன்! அவனுக்கு மாபெரும் அநீதி ஏற்பட்டு விட்டது.” என்று கூறினான். பின்னர் அந்த சபை கலைந்தது. கூடி இருந்த அரச குலத்தவர் அனைவரும் அங்கிருந்து சென்றனர். தனக்கு ஆதரவளித்த அரச குலத்தினரைப் பார்ப்பதற்குக் கூட துரியோதனனால் முடியவில்லை. அவனுக்குப் பெருத்த அவமானமாக இருந்தது.

குருட்டு அரசன் திருதராஷ்டிரன் சஞ்சயனால் அழைத்துச் செல்லப்பட்டான். அவன் சகோதரர்கள் ஐவரும் சபதம் எடுத்துக் கொண்ட போதும், திரௌபதி சபதம் போட்டபோதும் கேட்டுக் கொண்டு தானிருந்தான். அவனுக்குள் அச்சம் ஏற்பட்டது. தன் மக்களுக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ என்று பயந்தான். ஆகவே அவன் திரௌபதியிடம் திரும்பி, “உங்கள் அனைவரையும் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து விட்டேன். உனக்கு இதைத் தவிர வேறு ஏதேனும் வேண்டுமா? ஏதேனும் வேண்டுமெனில் கேள்!” என்றான்.  அதற்கு திரௌபதி சொன்னாள்:” என் கணவன்மார் ஐவரும் அடிமைகள் இல்லை என்றும் அதிலிருந்து அவர்களை விடுவித்து விட்டதாகவும் நீங்கள் அறிவிப்புச் செய்ததே எனக்குப் போதுமானது! நான் அதிலேயே மிகுந்த திருப்தி அடைந்து விட்டேன்.” என்றாள்.

பின்னர் தன் துணிகளைச் சரி செய்து கொண்டு மேலாடையைத் திருத்திக் கொண்டு அவள் அங்கிருந்து வெளியேறினாள்.  துரியோதனன், துஷ்சாசனன், கர்ணன் ஆகியோரும் செய்வதறியாமல் அங்கிருந்து வெளியேறினார்கள்.  தன் சகோதரர்கள் செய்த பயங்கரமான சபதங்களைச் சிறிதும் பொருட்படுத்தாமல் யுதிஷ்டிரன், தன் பெரியப்பாவின் கால்களில் விழுந்து வணங்கினான். “பெரியப்பா, நாங்கள் எப்போதுமே உங்கள் விருப்பங்களை நிறைவேற்றி வருகிறோம். ஆகவே இனியும் ஏதேனும் இருந்தால் உடனே எங்களிடம் சொல்லவும். நாங்கள் அதை நிறைவேற்றுகிறோம்!” என்றான்.  இதைக் கண்ட திருதராஷ்டிரன் மனம் கூட ஒரு கணம் நெகிழ்ந்தது.  யுதிஷ்டிரன் தன்னுடைய விருப்பங்களை நிறைவேற்றித் தருவதாய்ச் சொன்னதைக் கேட்ட அவன் மனம் யுதிஷ்டிரனின் பெருந்தன்மையால் மகிழ்ந்தது.

 மிக மெல்ல பலஹீனமான தொனியில் அவன் கூறினான். “உன்னுடைய அடக்கமான சுபாவத்தைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன் யுதிஷ்டிரா! நீ மிகவும் புத்திசாலி, விவேகி, மிக உயர்ந்தவன். இன்று நடந்த விரும்பத் தகாத சம்பவங்களை எல்லாம் மறந்து விடு! என் மக்கள் செய்த பாவங்களை எல்லாம் மன்னித்து மறந்து விடு! உன்னுடைய அனைத்துப் பொருட்களையும் திரும்ப எடுத்துக் கொண்டு இந்திரப் பிரஸ்தம் செல்! சந்தோஷமாக இரு!” என்றான். யுதிஷ்டிரன் மிகவும் அடக்கத்துடன் இதைக் கேட்டுக் கொண்டிருந்தான். பின்னர் விடைபெற்று இந்திரப் பிரஸ்தம் செல்லும் ஏற்பாடுகளைக்கவனிக்கச் சென்றான்.

ஆனால் இங்கே ஹஸ்தினாபுரத்திலோ துரியோதனன் வெறுப்பிலும் ஆக்ரோஷத்திலும் இருந்தான். அவன் எவ்வளவு ஆவலுடன் இருந்தான்? ஐந்து சகோதரர்களையும், திரௌபதியையும் அடிமை ஆக்கிவிட்டதை நினைத்து சந்தோஷத்தின் உச்சியில் அல்லவோ இருந்தான்! அதற்கு அவர்கள் எதிர்த்தால் அவர்களைக் கொன்றுவிடக் கூடத் தயாராக இருந்தான். ஆனால்! இப்போதும் அவனுடைய துரதிர்ஷ்டம் முன்னால் வந்துவிட்டதே! அது அவனை விடாமல் துரத்தி வருகிறது!  மறுநாள் யுதிஷ்டிரன் தன் தம்பிமாருடனும், மனைவியுடனும் அவன் சூதாட்டத்தில் தோற்றதாகச் சொல்லப்பட்ட அனைத்துச் செல்வங்களுடனும் இந்திரப் பிரஸ்தம் செல்லத் தயாராக இருந்தான்.  அவனுடைய ஏற்பாடுகளை எல்லாம் கவனித்த துரியோதனனுக்கு மீண்டும் ஆத்திரமும், வெறுப்பும் ஏற்பட்டது.

ஓர் பைத்தியக்காரன் போலத் தன் தந்தையின் இருப்பிடம் நோக்கி ஓடினான். “தந்தையே, தந்தையே, இது என்ன? கொடுமையாக இருக்கிறதே!  நீங்கள் எப்படி பாண்டவர்கள் ஐவரையும் ஹஸ்தினாபுரம் விட்டு வெளியேறச் சொல்லலாம்? அவர்கள் மிகவும் வலுவுள்ளவர்களாகவும் மாபெரும் கூட்டணியுடையவர்களாகவும் இருந்தார்கள். ஆகவே நாம் அவர்களின் ஒற்றுமையை உடைத்து அவர்களின் ராஜ்யத்தைப் பிடுங்கிக் கொண்டு அவர்களை அடிமையாக்கலாம் என்று தந்திரமாகத் திட்டம் போட்டோம். அதில் வெல்லவும் செய்தோம்.  அத்தோடு மட்டுமா? நாம் அவர்களை எப்படி எல்லாம் அவமானம் செய்தோம்!  இகழ்ந்தும், பரிகாசமாகவும் பேசியதோடு அல்லாமல், ஏசவும் செய்தோம். “

“மூர்க்கத்தனமாகவும் ஒழுக்கக் கேடாகவும் அவர்களின் ராணியிடம் நடந்து கொண்டோம்.  நாங்கள் இதை எல்லாம் செய்ததே உங்களிடம் நம்பிக்கை வைத்துத் தான். நீங்கள் ஒருவராவது எங்களை ஏமாற்ற மாட்டீர்கள் என்று நம்பினோம். ஆனால் நீங்கள் எங்களை ஏமாற்றி விட்டீர்கள், தந்தையே!  நீங்கள் திரும்பவும் அவர்களுக்கு அரச குலத்தவர் என்னும் தகுதியைக் கொடுத்துவிட்டீர்கள். அவர்களின் க்ஷத்திரிய பரம்பரையை அங்கீகரித்ததோடு அல்லாமல் அவர்கள் ராஜ்ஜியத்தையும் திரும்பக் கொடுத்துவிட்டீர்கள். அவர்கள் கோபத்தை நாங்கள் தூண்டி விட்டு விட்டோம். இனி அவர்கள் மிகக் கடுமையான எதிரிகள். அவர்கள் இப்போது மிகப் பயங்கரமானவர்களாக ஆகிவிட்டனர். முன்னர் இருந்ததை விட இப்போது அவர்கள் மிகப் பயங்கரமான எதிரிகள்!” என்றான் துரியோதனன்.

பின்னர் சற்று நிறுத்திவிட்டு மீண்டும் தொடர்ந்தான். “தந்தையே, அவர்கள் எடுத்துக் கொண்ட பயங்கரமான சபதங்களை எல்லாம் நீங்கள் கேட்டீர்கள் அல்லவா? இனிமேல் இன்றிலிருந்து அவர்கள் எங்களை அழித்து ஒழிக்கும் திட்டங்களைப் போடுவார்கள். இனி எங்களுக்கு எந்நேரமானாலும் ஆபத்துத் தான்!” என்றான்.  மிகவும் உணர்ச்சிவசப் பட்டிருந்த துரியோதனன் அமைதியின்றி மூச்சுக் கூட விட மறந்தவன் போல் காட்சி அளித்தான்.

Friday, December 30, 2016

வண்ணப் பொற்சேலைகளாம்! அவை வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே!

திரௌபதி முழு மனதுடன் கிருஷ்ணனைச் சரண் அடைந்து அவனை வேண்டிக் கொண்டாள். அவள் அப்படிப் பிரார்த்திக்கும்போதே திடீரென விண்ணில் ஓர் அபூர்வமான பிரகாசம் தென்பட்டு அந்தப் பிரகாசம் அந்த தர்பார் மண்டபத்துக்குள்ளும் சாளரங்கள் வழியாக வந்தது. இது வரை எவரும் இத்தகையதொரு பிரகாசத்தைக் கண்டதில்லை!  தொடர்ந்து திரௌபதி கூப்பிய கரங்களுடன் பிரார்த்தித்துக் கொண்டிருக்க துஷ்சாசனன் அந்த நடு மதியத்து சூரியன் ஒரு நெருப்புக்கோளத்தைப் போல் அதீதப் பிரகாசத்துடன் வேகமாகச் சுற்றுவதைக் கண்டான். அவனுக்கு மயக்கமே வரும்போல் ஆகி விட்டது.  அத்துடன் நில்லாமல் அந்த நெருப்புக் கோளத்திலிருந்து தெரிந்த ஒளிக் கற்றை ஓர் பிரகாசமான போர்வை போல நீண்டு வந்து அந்த அறைக்குள் நுழைந்திருந்தது.  அந்த ஒளிக்கற்றையானது நேரே திரௌபதியைச் சுற்றிக் கொண்டு அவளைப் போர்வை மூடுவதைப் போல் முழுமையாக மூடியது. திரௌபதி நெருப்பையே ஆடையாக அணிந்த வண்ணம் காட்சி அளித்தாள். அதைக் கண்டு மீண்டும் மயக்க நிலைக்கு ஆளான துஷ்சாசனன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் சாளரங்களுக்கு வெளியே பார்த்தான்! அந்த நெருப்புக் கோளத்தின் நட்ட நடுவே அவன் கண்டது என்ன?  ஆஹா! அது கிருஷ்ண வாசுதேவன்! சிசுபாலனை வதம் செய்கையில் எவ்வாறு காட்சி அளித்தானோ அவ்வாறே இப்போதும் அந்த நெருப்புக்கோளத்தின் நடுவே  தனக்குப் பின்னே சக்கரம் சுற்ற எந்நேரமும் சக்கரத்தை எடுத்துப் பிரயோகிப்பான் போல் காட்சி அளித்தான். துஷ்சாசனன் நடுங்கினான். அவன் உடல் வியர்த்தது. கை, கால்கள் நடுங்கின.

அந்த நெருப்புக்கோளத்தையே வியப்புடனும் திகைப்புடனும் பார்த்தான் துஷ்சாசனன்.  அவன் கைகள் திரௌபதியின் புடைவையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தாலும் இப்போது அவனுக்குத் தன் கைகள் மரத்துவிட்டாற்போன்ற உணர்வு தோன்றியது.  அப்படியே கைகள் செயலற்று உயிரற்றுப் போய்விட்டாற்போல் தோன்றியது. அவன் கைகளில் இருந்த புடைவை நுனி தானாக அவனை விட்டு நழுவிற்று.  தன்னையறியாமல் துஷ்சாசனன் கீழே விழுந்தான்.  ஆனால் திரௌபதி மிகவும் பயபக்தியுடன் அந்த ஒளிவட்டத்தைப் பார்த்தாள். “ஆஹா, அவன் வந்து விட்டான்! வந்தே விட்டான்! என் பிரபு! என் கோவிந்தன்! என் யஜமானன்! என் ரக்ஷகன்! என்னைப் பாதுகாக்க வந்தே விட்டான்! “ அவள் தனக்குத் தானே கண்ணீருடன் சொல்லிக் கொண்டாள்.  அந்த ஒளிவட்டம் வந்த வேகத்திலே திடீரென மறையவும் செய்தது.  அந்தத் திறமையான ஒளிவட்டம் மெல்லமெல்ல ஓர் நிஅழலைப் போல் மறைந்து போய் மதிய நேர சூரிய வெளிச்சத்தில் இரண்டறக் கலந்தது. பிதாமஹரின் உயரமான உருவம் தன் கைகளில் பரசுராமரிடம் குருகுலத்தை முடிக்கையில் அவரால் அளிக்கப்பட்ட கோடரியுடன் எழுந்து நின்றது.

வருடக் கணக்காக அனைவரும் பிதாமஹருக்குச் செய்து வந்த மரியாதை அப்போதும் சற்றும் தவறவில்லை. திரௌபதி கூடத் தன் விம்மல்களையும், புலம்பல்களையும் அடக்கிக் கொண்டு தன் மேல் துணியை எடுத்துத் தன்னைப் போர்த்திக் கொண்டு பின்னே சென்று விட்டாள்.  பிதாமஹர் தான் அமர்ந்திருந்த உயர்ந்த மேடையிலிருந்து கீழிறங்கினார். தன் வலக்கையை உயர்த்திக் கொண்டு அனைவரையும் அமைதியுடன் இருக்கச் சொல்லி ஜாடை காட்டினார்.  அவர் அப்படிக் கையை உயர்த்தியதும், அரண்மனையின் நிகழ்வுகளை அறிவிப்புச் செய்யும் காரியஸ்தர் தன் சங்கை எடுத்து முழக்கம் செய்தார்.  அந்த முழக்கம் முடிந்ததும், தன் கைகளைக் கீழிறக்கிய பிதாமஹர் அங்கே வீற்றிருந்த அரச குடும்பத்தவரை நோக்கித் திரும்பினார்.  அவர்களோ தாங்கள் முழுக்க முழுக்க பூமியில் புதைக்கப்பட்டு விட்டவர்கள் போல் அங்கிங்கும் எங்கும் நகரக் கூட முடியாதவர்களாக வாய் திறந்து பேசக் கூட முடியாதவர்களாகக் காட்சி அளித்தனர்.

“மதிப்புக்குரிய தலைவர்களே, நான் உங்களுக்கு இப்போது ஓர் உயர்ந்த கட்டளையைப் பிறப்பிக்கப் போகிறேன்.  அதை எதிர்ப்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் இறப்பார்கள்!” என்றார்.

பின்னர் தொடர்ந்து, “ என் மதிப்புக்குரிய தந்தை, மஹாராஜா சக்கரவர்த்தி ஷாந்தனு, இப்போது பித்ரு லோகத்தில் முன்னோர்களுடன் வீற்றிருப்பவர்,  தன் வாழ்நாளில் இப்படி ஓர் கட்டளையை ஒரே ஒரு முறை கொடுத்திருக்கிறார்.  அது எப்போதெனில் ஹைஹேயர்களால் ஆரியர்களுக்கு நேரிட்ட பேரிடரின் போது குரு வம்சத்துத் தலைவர்கள் அனைவருக்கும் இட்டிருக்கிறார்.  இன்று வரை எனக்கு அப்படிக் கட்டளை இடும்படியான சந்தர்ப்பம் ஏதும் வாய்க்கவே இல்லை!”

“ஆனால் இப்போது மீண்டும் முன்போல் ஆரியர்களின் நல்வாழ்வுக்கு பங்கமும் அச்சுறுத்தலும் ஏற்பட்டிருக்கிறது.  குரு வம்சத்துப் பெயர்பெற்ற சக்கரவர்த்தியின் குமாரர்களே!  இந்த ஆணைக்குக் கீழ்ப்படியுங்கள்.  உங்கள் வாள்களை உருவி என் முன்னர் தரையில் போடுங்கள்.” என்றார் பீஷ்மர்.  ஒவ்வொரு குரு வம்சத்துத் தலைவனும் அடுத்தவன் என்ன செய்கிறார் என்பதையே பார்த்தார்கள்.  அவர்கள் செய்வதையே தாங்களும் செய்ய யத்தனித்தார்கள். ஆனால் துரியோதனனின் ஆதரவாளர்கள் என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். செய்வதறியாது துரியோதனனையே பார்த்தார்கள். துரியோதனன் அதைவிடக் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான். மிகவும் அச்சத்தில் உறைந்து போயிருந்தான். அவன் கண்கள் வியப்பிலும் அச்சத்திலும் விரிந்திருந்தன.

பரசுராமரால் அளிக்கப்பட்ட அந்த பயங்கரமான கோடரியைக் கண்டு துரியோதனன் நடுங்கினான். பிதாமஹர் எப்போது வேண்டுமானாலும் அந்தக் கோடரியை வீசி அவனைத் துண்டாக்கிவிடலாம். அவரை அவனால் இப்போதைய நிலையில் எதிர்க்க முடியாது. வேறு வழி என்ன? பிதாமஹர் சற்று நேரம் பொறுத்திருந்து விட்டு மீண்டும் சொன்னார்.” என் ஆணைக்குக் கீழ்ப்படி!” அவர் குரலில் இத்தனை வருஷங்களாகப் பேரன் என்று அவர் காட்டி வந்த அன்பும், ஆதரவும், மென்மையும் சற்றும் இல்லாமல் வறண்டு கடுமையாக இருந்தது. அதிகாரத் தொனி காணப்பட்டது.  இப்போது அவன் என்ன செய்ய வேண்டும்? இந்தக் கிழவனின் அடக்குமுறைக்கு அடங்கி நடப்பதா அல்லது இவனை எதிர்த்து நிற்பதா? பீஷ்மரின் கண்கள் துரியோதனனின் மேலேயே  நிலைத்திருந்தன.  “என் ஆணையை மீறப்போகிறாயா?” என்று கேட்டார் அவர். துரியோதனனுக்குத் தொண்டை அடைத்துக் கொண்டாற்போல் இருந்தது.  இப்போது திருதராஷ்டிரன் பக்கம் திரும்பிய பீஷ்மர் மெல்லிய குரலில் அவனிடம், “மகனே,  நீ பாண்டவகுமாரர்களை இங்கே பொழுதுபோக்குவதற்காகத் தான் அழைத்திருந்தாய்! இப்போது விளையாட்டு முடிந்து விட்டது! இல்லையா மகனே!” என்றார்.

திருதராஷ்டிரன் இந்த நெருக்கடியான நேரத்தில் அனைத்தையும் மறந்தே போய்விட்டான். அவன் என்ன சொன்னான் என்பதையோ, என்ன நடந்தது என்பதையோ, என்ன செய்தான் என்பதையோ முற்றிலும் மறந்துவிட்டுப் பிதாமஹரிடம், “ஆம், தாத்தா! இது வெறும் விளையாட்டுத் தான். பொழுதுபோக்குத் தான்! இந்த விளையாட்டு இப்போது முடிந்து விட்டது. தாத்தா, விளையாட்டு முடிந்து விட்டதால் பணயமாக ஈடு கட்டியவை அனைத்தையும் இப்போது திருப்பிக் கொடுத்தாகவேண்டும்.” என்றும் கூறினான். “ஆம், மகனே! ஆம்! நீ சொல்வது சரி! இப்போது உன் கட்டளையை அறிவி! இந்த மாபெரும் சபையில் அறிவிப்புச் செய்!” என்றார்.

 திருதராஷ்டிரன் பேச ஆரம்பித்தான். அவன் உதடுகள் நடுங்கின. ஏற்கெனவே மெல்லிய குரலில் பேசுபவன் இப்போது அச்சத்தில் இன்னமும் பலஹீனமான குரலில் “பாண்டவர்கள் ஐவரும், திரௌபதியும் சுதந்திரமானவர்கள்.  என் அருமை மக்களே! இவர்களிடமிருந்து நீங்கள் வென்ற செல்வங்கள், நாடுகள், மண்டலங்கள் மற்றும் அனைத்தும் இப்போது இவர்களிடம் திரும்பக் கொடுத்தாக வேண்டும்!” என்று அறிவித்தான்.


“மாட்சிமை பொருந்திய குரு வம்சத் தலைவர்களே, என் அருமை மக்களே! கௌரவர்களே! என்னுடைய இந்த ஆணைக்குக் கீழ்ப்படியுங்கள்.  உங்களில் எவரேனும் இந்த ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்தால் அவர் கழுத்து இந்தக் குருவம்சத்துக்கு அர்ப்பணிக்கப்படும்.”


பீஷ்மர் ஷகுனியின் பக்கம் திரும்பினார். “காந்தார இளவரசே, ஷகுனி, விளையாட்டு இப்போது முடிந்து விட்டது. ஆகையால் நீ இனிமேல் குரு வம்சத்தவருக்கு தர்மத்தை எப்படிப் பாதுகாப்பது, நீதியை எப்படிப் பின்பற்றுவது என்பது குறித்துப் பாடம் எடுக்க வேண்டாம்!” என்றவர் துரியோதனன் பக்கம் திரும்பி, “ குழந்தாய். குரு வம்சத்தின் அதிகாரம் கொண்ட இந்தப் புனிதமான தர்பார் மண்டபத்தை ஓர் கொலைக்களமாக அதுவும் ஆடு, மாடுகளை வெட்டும் கொலைக்களமாக மாற்றி விடாதே!” என்றார்.

Thursday, December 29, 2016

ஹரி ஹரி என்றாள்! கண்ணா! அபயமுனக்கு அபயமென்றாள்!

“மிக உண்மை! அவருக்கு நாம் நம் தந்தையைப் போல் மரியாதை கொடுத்து வந்தோம். இப்போது அவருடைய கரங்களை நாம் எரித்தே ஆக வேண்டும். சுட்டுப் பொசுக்க வேண்டும். இதோ நம் மனைவியான இந்தப் பரிதாபத்துக்குரிய இளவரசியைப் பார்! எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவள்! நாம் அவளைத் திருமணம் செய்து கொள்கையில் அவளை ஓர் அரசியாக்கிப் பார்ப்போம் என்றும் நம் பட்டமஹிஷியாக அவளே இருப்பாள் என்றும் உறுதி மொழி கொடுத்திருந்தோம்.  இப்போது அவளை நம் அண்ணன், மூத்தவன் பணயம் வைத்துத் தோற்று அடிமையாக்கி வைத்திருக்கிறானே, இந்நிலையில் அவளைப் பார்க்கையில் உனக்கு ரத்தம் கொதிக்கவில்லையா?” என்று கேட்டான்.

“ஆம், பீமா! எனக்கும் கோபம் வரத்தான் செய்கிறது. ஆத்திரத்தில் உடல் நடுங்குகிறது. அதே போல் தான் நம் மூத்தவனுக்கும் இருக்கும் அல்லவா? அதோ அவர் முகத்தைப் பார்! அவர் மனம் உடைந்து நிற்பதைக் கவனி! நம்மைப் போல் அவரும் துக்கத்தில் மூழ்கித் தவிப்பது உன் கண்களில் படவில்லையா? இப்போது அவரிடம் உன் கோபத்தைக் காட்டுவதன் மூலம் மேலும் அவரைத் துக்கத்தில் ஆழ்த்தி விடாதே! அது நம் எதிரிகளுக்கு நல்லதொரு வாய்ப்பாகி விடும். அவர்கள் நோக்கமே நம்மைப் பிரித்து ஒருவருக்கொருவர் சண்டை மூட்டி விடுவது தான்! அதை உண்மையாக்கி விடாதே! இது வரையிலும் நாம் அனைவரும் ஒருவராக வாழ்ந்து வருகிறோம். ஆறு உடல்களாகவும் ஒரே உயிராகவும் இருந்து வருகிறோம். நம் எதிரிகள் இப்போது நாம் தோற்றதை நினைத்து மட்டுமே சந்தோஷம் அடைந்திருக்கிறார்கள்.  நாம் நம் மூத்தவனோடு சண்டை போட்டால் அதன் மூலம் அவர்களுக்கு இன்னமும் சந்தோஷம் கிடைக்கும்!”

மிக முயற்சி செய்து அர்ஜுனன் பீமனை சமாதானம் செய்தான். அவர்கள் வாழ்நாளில் எப்போதுமே மூத்தவனை மதிப்பதை ஓர் கடமையாகக் கடைப்பிடித்து வந்தார்கள். அந்த நிலைமை இப்போது மீண்டும் அர்ஜுனனால் திரும்பியது. இந்த துரதிர்ஷ்டமான நிலையைக் கண்டு தன்னை அடக்கி வைத்துக்கொள்ள இயலாத விகர்ணன் என்னும் துரியோதனனின் சகோதரர்களில் ஒருவன் இப்போது எழுந்து கொண்டு திரௌபதியைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான்.

“மாட்சிமை பொருந்திய மஹாராணியே! அண்ணியாரே! நீங்கள் சொல்வது சரியே! அதை அப்படியே நான் ஏற்கிறேன். இந்த தர்பார் மண்டபத்தில் நீதியும், நேர்மையும் சிறிதும் இல்லை!  தாத்தா அவர்களே, இந்தக் குரு வம்சத்தின் பிதாமஹர் நீங்கள்! நீங்கள் ஏன் மாட்சிமை பொருந்திய அண்ணன் யுதிஷ்டிரன் அவர்கள் மஹாராணியைப் பணயம் வைப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மா உட்கார்ந்திருந்தீர்கள்? குரு வம்சத்தின் ஏனைய தலைவர்களும் வாய் மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்களே! யுதிஷ்டிரன் தன் ராணியைப் பணயம் வைக்கும்போது ஏன் ஒருவருமே மறுத்துப் பேசவில்லை?” என்று கேட்டான்.  மிகவும் சிரத்தையுடனும், பவித்திரமான மனதுடனும் விகர்ணன் கேட்ட இந்தக் கேள்விகளால் அந்த தர்பார் மண்டபத்தின் இறுக்கமான சூழ்நிலை சற்றே மாறியது. அனைவரும் விகர்ணனையே கவனித்தார்கள்.

அங்கிருந்த மற்ற அரசகுலத்தவரைப்பார்த்துத் திரும்பிய விகர்ணன், “ஏன் அனைவரும் மௌனமாக உட்கார்ந்திருக்கிறீர்கள்? இப்போதாவது பேசலாமே! நம்மில் எவருக்கும் துரியோதனனை எதிர்த்துப்பேசவோ உண்மையை உரக்கச் சொல்லவோ தைரியமே இல்லையா? நம்மில் யாருமே தைரியசாலிகள் இல்லையா? மதிப்புக்குரிய தாத்தா அவர்களே! நான் எப்போதுமே நான் நினைப்பதை உண்மை என்று கருதுவதை சரி என என் மனதுக்குப் பட்டதைச் சொல்லியே தீருவேன். ஒரு வேளை அதுதான் என் கடைசி வார்த்தைகளாக இருந்தாலும் சரி! நான் அவற்றைப் பேசியே தீருவேன்!”

“மரியாதைக்குரிய என் அண்ணன் துரியோதனன் தன் தகுதியிலிருந்து கீழிறங்கி விட்டார். அதுவும் யுதிஷ்டிரனுக்குத் தன் ராணியைப் பணயம் வைக்கும் உரிமை சிறிதும் இல்லை.  ஏனெனில் மஹாராணி பாஞ்சாலி யுதிஷ்டிரனுக்கு மட்டும் மனைவி அல்ல. மற்ற நால்வருக்கும் மனைவி ஆவாள்.  இப்போது நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். பிதாமஹரே! மற்ற நால்வரின் சம்மதம் இல்லாமல் யுதிஷ்டிரனால் எப்படித் தன் மனைவியைப் பணயம் வைக்க முடியும்? அவளை அவர் இழந்ததாக எப்படிக் கருத முடியும்? அவள் எப்படி அடிமை ஆவாள்? அவளை நாம் எப்படி அடிமை என்று சொல்லலாம்? அவள் கௌரவர்கள் ஆன எங்களுக்குச் சொந்தம் இல்லை. அவள் சுதந்திரமானவள்!” என்று கூறினான் விகர்ணன். விகர்ணனின் வார்த்தைகள் அங்கிருந்த அரச குலத்தவர் அனைவர் மனதிலும் குறிப்பிட்டுச் சொல்லத் தக்க மாற்றத்தை உண்டு பண்ணியது. ஆனால் இது எதுவும் துரியோதனனின் ஆதரவாளர்கள் மனதை மாற்றவே இல்லை.

அங்க தேசத்து அரசன் கர்ணன் விகர்ணனைப் பார்த்து ஆத்திரம் கொண்டான். அவன் எழுந்து நின்று கூறினான். “விகர்ணா? நீ என்ன உன்னை மற்றவர்களை விட அதிக புத்திசாலியாகவும், விவேகியாகவும் எண்ணிக் கொண்டிருக்கிறாயா?  இங்கிருப்பவர்களை விட நீ அதிகம் புத்திசாலியா? இங்கிருக்கும் அனைவரும் பிதாமஹர் பீஷ்மர் உள்பட, அரசர் திருதராஷ்டிரர், துரோணாசாரியார், கிருபாசாரியார் மற்றும் மதிப்புக்குரிய மற்ற அரசகுலத்தவர் அனைவரும் திரௌபதி ஓர் அடிமை என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்கள்!” என்றான்.

“அவள் கணவன்மார் ஐவரையும் பார்! பெரிய வீரர்களாம். வீராதி வீரர்கள்! அவர்களும் தங்களை ஓர் அரசகுலத்தவர் என்றே சொல்லிக் கொள்கின்றனர். அவர்கள் அவளை, அந்தப் பாஞ்சால இளவரசியை ஓர் அடிமை என்று நினைக்காவிட்டால், அவள் இங்கே இழுத்து வரப்பட்டதை எப்படி அனுமதித்தார்கள்? அவள் கணவன்மாரின் நிலைமை என்ன? தர்மத்தின் பாதுகாப்போ தர்மத்தின் சட்டதிட்டமோ அவர்களைக் காப்பாற்றவில்லை, அவர்களிடம் அது எடுபடவும் இல்லை. ஏனெனில் அவர்கள் ஐவருமாகச் சேர்ந்து ஒரு பெண்ணைப் பங்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்! இவர்களை தர்மத்தின் பாதுகாவலராக எப்படிச் சொல்ல முடியும்?”
“அவள் ஓர் பரத்தை! பொதுவில் ஐவரால் பங்கு போட்டுக் கொள்ளப்படுபவள். வெட்கம் கெட்டவள்! இப்போது அவளுக்கு என்ன வந்தது? இங்குள்ள தகுதி வாய்ந்த மன்னர்கள் நிறைந்த அரசவையில் அனைவர் முன்னாலும் வருவதற்கு என்ன கேடு?  விகர்ணா, நீ எங்கள் அனைவரையும் விட புத்திசாலி, விவேகி என்று பெயரெடுக்க விரும்புகிறாய்! ஆனால் இங்கே நம் முன்னர் அவள் கொண்டு வரப்பட்டதன் மூலம் அவளுடைய அடக்கத்துக்கோ, நாணத்துக்கோ பங்கம் வந்துவிட்டதாக எண்ணிச் சீற்றம் கொள்ளாதே! பயப்படவேண்டாம்.  இதோ இந்த ஐந்து சகோதரர்களும் அவர்கள் அணிந்திருக்கும் உடையை அணியக் கூடத் தகுதி அற்றவர்கள். துஷ்சாசனா, எழுந்து சென்று இந்த ஐவரின் ஆடைகளை அவர்கள் உடலிலிருந்து நீக்கிவிடு!  மறக்காமல் இதோ இந்தப் பரத்தை திரௌபதியின் உடலில் இருந்தும் ஆடையை நீக்கி விடு! பின்னர் அவர்கள் யஜமானன் ஆன துரியோதனனிடம் அவர்களை ஒப்படைத்து விடு!” என்றான்.

கர்ணன் கூறிய இந்தக் கொடூரமான சொற்களைக் கேட்ட சகோதரர்கள் ஐவரும் தங்கள் மேலாடைகளை நீக்கினார்கள். அவற்றை துரியோதனன் காலடியில் சமர்ப்பித்தார்கள்.  திரௌபதியால் அப்படிச் செய்ய முடியாது. ஏனெனில் அவள் உடலில் ஒற்றை ஆடை மட்டுமே தரித்திருந்தாள். அதை எப்படி நீக்குவது? ஆகவே அவள் சும்மா இருந்தாள். ஆனால் துஷ்சாசனன் அவளை விடவில்லை. அவள் ஆடையின் ஒரு நுனியைப் பிடித்து இழுத்தான். மிக வேகத்தோடு அதை அவள் உடலிலிருந்து இழுத்து அகற்ற யத்தனித்தான்.  திரௌபதி வெறித்தனமாக அதை எதிர்த்தாள்.  தன் கணவன்மாரை ஒருவர் பின் ஒருவராகப் பார்த்தாள். இந்த அவமதிப்பிலிருந்து அவள் தப்புவதற்காக எதையும் அவர்கள் செய்யப் போவதில்லை; அவர்களால் செய்ய முடியாது. அந்த சபையில் இருந்த மற்றப் பெரியோர்களையும் அவள் பார்த்தாள். அவர்களிமிருந்து ஏதேனும் உதவி கிட்டுமோ என்றும் எதிர்பார்த்தாள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எவரும் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.  தான் எந்த உதவியும் கிடைக்கப் பெறாதவளாக நிராதரவான நிலையில் இருப்பதை திரௌபதி உணர்ந்தாள்.

அப்போது சற்றும் எதிர்பாரா வண்ணம் அவள் மனம் அவள் ஸ்வீகரித்துக் கொண்ட சகோதரன் கிருஷ்ண வாசுதேவன் பால் சென்றது.  அவன் அவளுக்கு வழிகாட்டியாகவும் ஒரு சிறந்த நண்பனாகவும் இருந்து வருகிறான், பல வகையிலும் அவளுக்குத் தக்க ஆலோசனைகள் சொல்லி வருகிறான்.  அவள் தன்னையுமறியாமல் தன் இரு கரங்களையும் ஒன்று சேர்த்துக் கூப்பிக் கொண்டாள்.  பின்னர் கண்ணீர் மழையாகப் பொழியக் கிருஷ்ண வாசுதேவனை நினைத்துப் பிரார்த்திக்க ஆரம்பித்தாள்.  பிரார்த்திக்கும்போதே அவள் தன்னையுமறியாமல் விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். “சகோதரா, கிருஷ்ண வாசுதேவா! நீ இப்போது எங்கே இருக்கிறாய்? இப்போது என்னை இந்த நிலைமையிலிருந்து உன் ஒருவனால் மட்டுமே காப்பாற்ற முடியும்.  கிருஷ்ணா! கிருஷ்ணா! எங்கே இருக்கிறாய் நீ?  நான் என்னை உன் காலடிகளில் சமர்ப்பிக்கிறேன். உன்னிடம் சரணாகதி அடைந்து விட்டேன். என்னை இந்த ராக்ஷசர்களிடமிருந்து நீ தான் காப்பாற்ற வேண்டும். ஹே கிருஷ்ணா, கோவிந்தா! ஹரே முராரி! ஹே நாத நாராயண வாசுதேவா! என்னைக் காப்பாற்று!”

Wednesday, December 28, 2016

வேதச்சுடர்த்தீ முன் வேண்டி மணஞ்செய்து பாதகர் முன் இந்நாள் பரிசழிதல் காண்பீரோ?

ஆத்திரமும் கோபமும் முகத்தில் தெரிய, கோபத்தினால் நடுங்கும் குரலில் பாண்டவர்களின் ராணியான திரௌபதி அங்கே அமர்ந்திருந்த பீஷ்மரை நோக்கி, “நான் இங்கே குரு வம்சத்தின் பெரியோர்களைக் காண்கிறேன். அனைவரும் தர்மத்தைப் பாதுகாப்பவர்கள். எப்போது என்று அறிய முடியாத பழங்காலத்திலிருந்து தர்மத்திற்கும், நீதிக்கும் நேர்மைக்கும் மட்டுமே இடம் கொடுத்து, அதற்காகவே வாழ்ந்து வருபவர்கள்.  இவர்கள் கண் முன்னர் அதர்மம் தலை தூக்க அஞ்சி, புற்றில் சுருண்ட பாம்பாக அடங்கிக் கிடக்கும்.”
தன் சுட்டு விரலை துரியோதனன் பால் சுட்டியவண்ணம் அவள், “இங்கே ஒரு மனிதன் அதிகார போதையில் மூழ்கித் தன் சகோதரனை அனுப்பி ஒரு பெண்ணை, அதுவும் குரு வம்சத்து ராணியை இழுத்துக் கொண்டு இந்த சபைக்கு வரும்படி கூறியுள்ளான்.” சற்று நேரம் பொறுத்து அவள் மீண்டும் பேசினாள். “உங்கள் அனைவரின் முன்னிலையில் நான் என் பிரபு, என் கணவர், பாண்டுவின் குமாரர், தர்மத்தின் காவலர் யுதிஷ்டிரரிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அவர் சூதாட்டத்தின் போது முதலில் யாரை இழந்தார்? அவரை இழந்த பின்னர் என்னையா? அல்லது என்னை முதலில் இழந்த பின்னர் அவரை இழந்தாரா?” என்று கேட்டாள். அவள் குரல் பலஹீனமாக இருந்தாலும் தன் சக்தி அனைத்தையும் திரட்டிக் கொண்டு அவள் பேசினாள்.

பீஷ்மரைப் பார்த்து அவள், “குரு வம்சத்தின் மூத்தவரே, பிதாமஹரே, உங்களை வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய இந்த எளிய கேள்விக்கு விடை கூறுங்கள். நீங்கள் என்னை ஓர் அடிமையாக நினைக்கிறீர்களா அல்லது சுதந்திரமான பெண்மணியாக நினைக்கிறீர்களா?” என்று கேட்டாள். தன் ஐந்து கணவன்மாரையும் மிகவும் வெறுப்புடன் பார்த்தாள்.  அவளைக் கண்ட யுதிஷ்டிரனுக்கு துக்கம் அதிகம் ஆகியது. எவ்வளவு சீருடனும், சிறப்புடனும் இருந்தவள், இருக்க வேண்டியவள், இம்மாதிரியான ஓர் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டாளே! இதை எண்ணிய யுதிஷ்டிரன் அவமானத்தால் தலை குனிந்து அமர்ந்து விட்டான். அவனால் பணயத்துக்கு உள்ளாக்கப்பட்ட தன் தேவியை நிமிர்ந்து பார்க்கக் கூட மனமோ தைரியமோ இல்லை! ஆனால் மாட்சிமை பொருந்திய திரௌபதி, பாஞ்சால இளவரசி, பாண்டவர்களின் மனைவி, இந்திரப் பிரஸ்தத்தின் ராணி கோபத்தின் உச்சியில் இருந்தாள்.

பீஷ்மரை ஆவேசத்துடன் பார்த்தாள். “உங்களை நாங்கள் மிகவும் தைரியசாலியாகவும், அதிகம் கற்றறிந்தவராகவும் நினைத்து கௌரவித்து வருகிறோம், பிதாமஹரே! இந்தக் குரு வம்சத்திலேயே உங்களைப் போன்ற சிறந்த அறிஞர் எவருமில்லை என்கிறார்கள்.  இப்போது என் கேள்விக்கு நீங்கள் விடை அளியுங்கள்!” என்றாள்.  பீஷ்மர் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு துஷ்சாசனனைப் பார்த்தார்.  அவன் தன் உடைவாளை உருவிக்கொண்டு திரௌபதி அருகே நின்றிருந்தான். பின்னர் திரௌபதியிடம் அவர், “உன்னுடைய கேள்விக்கு சரியான தக்க பதில் அளிக்க முடியாத நிலையில் நான் இப்போது இருக்கிறேன் திரௌபதி! தர்மத்தின் நிழல் மிகவும் நுட்பமானது. அது எங்கே எப்போது விழுகிறது என்றோ விழாமல் இருப்பது குறித்தோ அறிவது அத்தனை எளிதல்ல!” என்ற பீஷ்மர் சற்றே நிறுத்தினார்.

பின்னர் மேலும் தொடர்ந்து, “ஒரு மனிதன் எப்போது தன்னுடைய உடைமைகள் எல்லாவற்றையும் இழந்து தன்னையும் இழக்கிறானோ அவனுக்குத் தன்னுடைய மனைவியைப் பணயம் வைக்கும் உரிமை இல்லை!” என்றார்.  இந்தக் கிழவர் தன்னுடைய வாக்கு வன்மையால் தங்கள் முக்கிய நோக்கத்தைப் புரட்டிப் போட்டுவிடுவார் என்னும் எண்ணம் துரியோதனனுக்கும் அவன் சகாக்களுக்கும் வந்தது.  அவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு துரியோதனனின் அடுத்த ஆணைக்காகக் காத்திருந்தார்கள். பிதாமஹர் இந்தப் பிரச்னையின் நெருக்கடியான சூழ்நிலையை துரிதப்படுத்த விரும்பவில்லை.  ஆகவே தன் கைகளால் அங்கே அமைதி நிலவ வேண்டினார்.

“அடுத்தபடியாக, “ என்று ஆரம்பித்துத் தொடர்ந்து பேச ஆரம்பித்தார் அவர். ஒரு மனிதன் தன் அனைத்து உடைமைகளையும் சூதாட்டத்தில் தோற்றாலும் தோற்காவிட்டாலும் அவன் தன் மனைவியைப் பணயம் வைக்க முடியும்!” என்றார். “யுதிஷ்டிரனுக்கு நன்கு தெரியும் ஷகுனி சூதாட்டத்தில் சிறந்த நிபுணன் என்பதை நன்கு அறிவான். அதை அறிந்திருந்தும் தான் அவன் ஷகுனியோடு இந்தச் சூதாட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டான். விரும்பியே பங்கெடுத்தான். அவன் விரும்பியே அதில் மாட்சிமை பொருந்திய ராணியான உன்னை,  பாஞ்சால இளவரசியைப் பணயம் வைத்துத் தோற்றான். நான் உன்னுடைய கேள்விக்குத் தக்க பதில் அளிக்க முடியாத நிலையில் இருக்கிறேன், பாஞ்சாலி!” என்றார். அவ்வளவில் திரௌபதியின் ஆக்ரோஷம் அதிகம் ஆனது. “பிதாமஹரே! உங்கள் எண்ணமே தப்பு. அதாவது ஆரியபுத்திரர் அவருடைய சொந்த விருப்பத்தின் பேரில் இங்கே வந்திருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்! அல்ல, பிதாமஹரே! அவர் அப்படி வரவில்லை. இந்திரப் பிரஸ்தத்தை விட்டுக் கிளம்பும் முன்னரே இதை அவர் சித்தப்பா விதுரரிடம் தெரிவித்து விட்டார்.”

“பின்னர் அவன் ஏன் இங்கே வந்தான்?” என்று கோபமாகக் கேட்டான் துரியோதனன்!

“ஹூம்! இந்திரப் பிரஸ்தத்தில் மஹாராஜா யுதிஷ்டிரரிடம் இது வெறும் விளையாட்டு என்றும் பொழுதுபோக்காக ஆடுவதற்காக அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாகவும் தான் சொன்னார்கள். மரியாதைக்குரிய பெரியோர்களே, இந்த அநியாயத்தை, அநீதியைப் பாருங்கள்! மூத்தவரான யுதிஷ்டிர ராஜா துரியோதனனுடன் ஓர் விளையாட்டாக ஆடுவதற்காகத் தான் அழைப்பு அனுப்பப்பட்டது. அதை நம்பி நாங்கள் ஹஸ்தினாபுரம் வந்ததும் இங்கே துரியோதனனுக்கு பதிலாக ஷகுனி ஆடுவார் என்று சொல்லி விட்டார்கள்!” என்ற திரௌபதி சற்றே நிறுத்தினாள். மேலும் தொடர்ந்து, “  இப்போது ஷகுனி அவர்கள் ஆடியதால் என் பிரபு யுதிஷ்டிரருக்கு இந்த விளையாட்டில் ஜெயிப்பதற்கான வாய்ப்பே தரப்படவில்லை. உங்கள் அனைவருக்கும் இது தெரியும். பிதாமஹரே, நான் உங்களைக் கேட்கிறேன்! ஏன் நீங்கள் இந்த அநியாயமான விளையாட்டைத் தடுக்க முற்படவில்லை?  இந்தக் குடும்பத்திற்கு நீங்கள் தான் தலைவர். அனைவருக்கும் மூத்தவர். பிதாமஹர்! அப்படி இருந்தும் நீங்கள் வாய் மூடி மௌனமாக இருந்தது ஏன்? துரியோதனன் இப்படியான ஓர் அநியாயமான விளையாட்டு விளையாடுவதை ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை?”
 
சற்று நேரம் அங்கே எவரானும் பதில் கொடுப்பார்கள் என்று நினைப்பது போல் மௌனமாகக் காத்திருந்தாள் திரௌபதி! யாரும் பேசவில்லை. பின்னர் தொடர்ந்து, “ நீங்கள் சொன்னீர்கள்! ஆர்யபுத்திரர் இந்த விளையாட்டைத் தன் சொந்த விருப்பத்தின் பேரில் தான் விளையாடினார் என்றீர்கள்!  அதோடு அவர் சுய விருப்பத்தின் பேரில்  என்னைப் பணயம் வைத்ததாகச் சொல்கிறீர்கள். பிதாமஹரே, நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். இந்த தர்பார் மண்டபம் தர்மத்தின் பாதையில் அரசாட்சி நடத்தும் அரசர்களுக்கானதா? அல்லது தர்மத்தைப் பாதுகாப்பதிலிருந்து இந்தக் குரு வம்சத்து அரசர்கள் நிறுத்திக் கொண்டனரா?  என் தந்தை மரியாதைக்குரிய பாஞ்சால அரசர், துருபதர், எந்த ராஜ சபையிலும் பெரியோர் இல்லை எனில் அதை ஓர் ராஜசபையாகவே கருதக் கூடாது. ராஜ சபைக்கு அது லாயக்கற்றது என்பார். தாங்கள் உண்மை என்று நினைப்பதை, உண்மையான கருத்தைப் பேசவில்லை எனில் அவர் ஓர் ஆண்மகனே அல்ல! எங்கே உண்மை இல்லையோ, அங்கே நேர்மையும் இல்லை!”

அப்போது பலத்த சிரிப்புடன் அவள் பேசுகையில் துஷ்சாசனன் குறுக்கிட்டான். அவன் அவள் பக்கம் திரும்பினான். “ஓர் நேர்மையான விளையாட்டில் நீ துரியோதனனுக்கு அடிமையாகி விட்டாய். நீ இப்போது ஓர் அடிமை! தர்மத்தின் நுணுக்கங்களைப் பற்றி உனக்கு ஏன் வீண் கவலை? நீ ஓர் அடிமை! உன்னுடைய தர்மம் இப்போது என்னவெனில் உன் புதிய யஜமானனை எவ்வகையிலாவது திருப்தி செய்ய வேண்டும். உன்னுடைய யஜமான் கௌரவர்களின் தலைவனும் அரசனுமான துரியோதனன். அவனுக்குத் திருப்தி ஏற்படும் வகையில் நீ நடந்து கொள்ள வேண்டும்.”  திரௌபதி மிகவும் வெறுப்புடன் துஷ்சாசனைப் பார்த்தாள். அவள் பார்வையில் ஆக்ரோஷம் தெரிந்தது. அவள் எல்லாம் வல்ல அந்தப் பரமசிவன் தன் மூன்றாவது கண்ணால் எரிப்பது போல் துஷ்சாசனனையும் எரித்துவிடலாமா என்று எண்ணுவது போல் தெரிந்தது. ஆனால் அவள் வாய் திறந்து எதுவும் பேசவில்லை.

பீமனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. புயல் காற்றில் ஆடும் ஓர் இலை போல் நடுங்கினான். யுதிஷ்டிரனை வெறுப்புடன் பார்த்தான். பின்னர் அவனிடம், “பார், நன்றாகப் பார்! உன் முட்டாள் தனத்தாலும் பைத்தியக்காரத்தனத்தாலும் என்ன நிகழ்ந்திருக்கிறது என்பதைப் பார்! நம்மிடம் இருந்த எல்லாவற்றையும் நீ சூதாடிப் பணயம் வைத்துத் தோற்று விட்டாய்! அதோடு நிறுத்தினாயா! எங்களையும் பணயம் வைத்து சூதாடித் தோற்றதோடு அல்லாமல் எங்களை எல்லாம் ஓர் அடிமையாகக் கீழ்த்தரமான நிலைக்குக் கொண்டு வந்து விட்டாய்! போகட்டும்! அதைக் கூட நான் பொறுத்துக் கொண்டு விடுவேன். ஆனால் இது! திரௌபதியை இந்த சபைக்கு ஓர் அடிமைப் பெண்ணாக அழைத்து வந்திருப்பதை என்னால் சிறிதும் பொறுக்க இயலாது. “ இதைச் சொல்லிய வண்ணம் தன் பிடரி மயிரைச் சிலிர்த்துக் கொண்டான் பீமன். ஓர் சிங்கம் தன் பிடரி மயிரைச் சிலிர்ப்பது போல் இருந்தது அது!

“பாஞ்சால நாட்டு இளவரசியைப் பார், மூத்தவனே, நன்றாகப் பார்! ஆடு, மாடுகளை வெட்டுவதற்கு இழுத்துச் செல்வதைப் போல் அவளை இங்கே இழுத்து வந்திருக்கிறான் பார்! இதை என்னால் இன்னும் எத்தனை நேரம் பார்த்துக் கொண்டு பொறுத்திருக்க முடியும்? சஹாதேவா, விரைவில் சென்று நெருப்பை எடுத்து வா! நான் உடனே மூத்தவனின் கைகளை, மனைவியைப் பணயம் வைத்த அந்தக் கைகளை எரித்துச் சாம்பலாக்குகிறேன்!” என்று பற்களைக் கடித்துக் கொண்டு கூறினான்.  அர்ஜுனன் பீமன் இவ்வாறு கடுமையான வார்த்தைகளைச் சொல்லிப் பிதற்றுவதைக் கண்டு மிகவும் வருந்தினான். பீமனின் தோள்களில் கைகளை வைத்த வண்ணம், அவன், “சகோதரா, பீமா! உனக்கு என்ன ஆயிற்று? இதற்கு முன்னர் நீ ஒருபோதும் மூத்தவரை இப்படிக் கடுமையாக வசை பாடிக் கேட்டதில்லையே! நாம் நம் தந்தையைப் போல் அல்லவா அவருக்கு மிக்க மரியாதை கொடுத்து வந்திருக்கிறோம்.” என்றான். பொறுமையின்றி பீமன் இடையில் குறுக்கிட்டான்.        

Monday, December 26, 2016

பாண்டவர் தேவியுமல்லை நீ! புகழ்ப் பாஞ்சாலத்தான் மகளல்லை நீ!

அங்கே நின்றிருந்த ஓர் ஊழியனிடம் துரியோதனன் கூறினான். “பிரதிகாமி, பெண்கள் தங்கும் அந்தப்புரம் செல். அங்கிருக்கும் நம் அடிமை திரௌபதியிடம் சொல். அவள் இப்போது எனக்கு உரியவள் என்று எடுத்துச் சொல். உடனே அவளை தர்பார் மண்டபத்துக்கு வரச் சொல். என் ஆணை என்று தெரிவி! அவளுடைய யஜமானர்களான எங்களுக்கு அவள் உடனடியாக இங்கே வந்து தன் வணக்கங்களைத் தெரிவித்துவிட்டு அடிமைகளுக்குரிய வேலைகளைத் தொடங்க வேண்டும் என்று சொல்!” என்றான். அந்த ஊழியன் கண்களில் அச்சம் தெரிந்தது. அதைக் கண்ட துரியோதனன் மேலும் தொடர்ந்து கூறினான். “ பிரதிகாமி, விதுரன் இப்போது விவரித்தவற்றைக் கேட்டுவிட்டு இதன் பின் விளைவுகள் என்னவாக இருக்குமோ என்று அஞ்சுகிறாயா? பயப்படாதே! இதோ பாண்டவ சகோதரர்கள் ஐவருமே இப்போது எங்கள் அடிமைகள். ஆகவே இவர்கள் ஐவரின் மனைவியுமான திரௌபதியும் எங்கள் அடிமையே!” என்றான்.

அரை மனதாக அந்த ஊழியன் பிரதிகாமி பெண்கள் தங்கும் அந்தப்புரம் நோக்கிச் சென்றான். அங்கே விசாரித்ததில் திரௌபதி மாதாந்திர விலக்கின் காரணமாக அரச குடும்பத்தினர் தங்கவென்று ஏற்படுத்தப்பட்டிருந்த தனி அறையில் இருப்பதைத் தெரிந்து கொண்டான். அங்கே இருந்த திரௌபதியோ விரைவில் மோசமான பேரிடர் ஒன்று ஏற்படப் போகிறது என்பதைத் தன் உள்ளுணர்வால் புரிந்து கொண்டிருந்தாள். எந்த நேரமும் அது தன்னையும் வந்து தாக்கும் என எதிர்பார்த்திருந்தாள். அதுவும் அவள் மாத விலக்கின் காரணமாகத் தனித்திருக்கையில் தன்னை நோக்கி ஊழியன் பிரதிகாமி வருவதைப் பார்த்ததும் அவள் நெஞ்சு உலர்ந்து போனது. அச்சத்தில் மனம் திக், திக் என அடித்துக் கொண்டது. அவளுக்கு ஏற்கெனவே யுதிஷ்டிரன் இம்மூவுலகிலும் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகத் தங்கள் அனைவரையும் தியாகம் செய்து விடுவான் என்னும் எண்ணம் ஆழப் பதிந்திருந்தது. அப்படி ஏதானும் நடந்திருக்குமோ?
பிரதிகாமி அறைக்கு வெளியே நின்ற வண்ணம் தன் கைகளைக் கூப்பிக் கொண்டான். பின்னர் தன் தலையைக் குனிந்து வணக்கம் தெரிவித்தான். “மாட்சிமை பொருந்திய அரசியே! உங்களை தர்பார் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லவே நான் வந்துள்ளேன்!” என்றான். “என்ன? தர்பார் மண்டபத்திற்கா? அதுவும் என்னுடைய இந்த நிலைமையிலா? அது எப்படி முடியும்?” என்று கேட்டாள்.  “என்னை மன்னியுங்கள், மாட்சிமை பொருந்திய அரசியே! நான் உண்மையையும் பேச முடியாது. அதே சமயம் உங்களிடம் பொய்யும் சொல்ல முடியாது. மாட்சிமை பொருந்திய இந்திரப் பிரஸ்தத்து அரசர் யுதிஷ்டிரன் சூதாட்டத்தின் போது உங்களையும் பணயம் வைத்து ஹஸ்தினாபுரத்து யுவராஜா துரியோதனனிடம் உங்களை இழந்து விட்டார்.  யுவராஜா துரியோதனன் இப்போது உங்களை தர்பார் மண்டபத்துக்கு அழைத்திருக்கிறார்.” என்றான்.

திரௌபதி திகைத்தாள்.  சிறிது நேரம் ஆனது அவள் தன்னிலைக்கு வர! தன்னிலைக்கு அவள் வந்ததும், கேட்டாள். “என்ன சொல்கிறாய்? பிரதிகாமி? என்ன இது? என் கணவருக்குப் புத்தி பிசகி விட்டதா? அவர் என்னை எப்படிப் பணயம் வைக்க முடியும்?” அதற்குப் பிரதிகாமி தன் கைகளைக் கூப்பிய வண்ணம் கூறினான். “மாட்சிமை பொருந்திய அரசர் யுதிஷ்டிரன் முதலில் தங்கள் உடைமைகளையும், செல்வங்களையும் இழந்தார். பின்னர் இந்திரப் பிரஸ்தத்தை இழந்தார். அதன் பின்னர் தன் சகோதரர்கள் ஒருவர் பின் ஒருவராக இழந்தார். பின்னர் தன்னையும் இழந்தார். அதன் பின்னர் தன்னுடைய க்ஷத்திரிய குலத்தின் மகன் என்னும் தகுதியை இழந்தார். அதன் பின்னர் உங்களைப் பணயம் வைத்து உங்களையும் இழந்தார்!” என்று விவரித்தான்.

திரௌபதியின் முகம் ஆத்திரத்திலும் தாங்கொணாக் கோபத்திலும் சிவந்தது. “பிரதிகாமி, உடனடியாக தர்பார் மண்டபம் செல்! அங்கே என் கணவர் யுதிஷ்டிரன், பாண்டுவின் புத்திரனிடம் கேள்! அவர் என்னை எப்போது இழந்தார் என்று கேள்! தன்னையும் தன் சுதந்திரத்தையும் இழந்த பின்னர் என்னை இழந்தாரா? அல்லது அதற்கு முன்னரா என்று நான் கேட்டதாக ஆரிய புத்திரரிடம் கேள்!” என்று பதில் கொடுத்தாள். பிரதிகாமி மீண்டும் தர்பார் மண்டபம் நோக்கிச் சென்றான். அங்கே யுதிஷ்டிரனைப் பார்த்து அவன், “பிரபுவே, மதிப்புக்குகந்த பாஞ்சால இளவரசியும், உங்கள் ராணியுமான தேவி அவர்கள் உங்களிடம் இதைக் கேட்கச் சொன்னார்கள். அவரை நீங்கள் இழந்தது உங்கள் சுதந்திரத்தைப் பறி கொடுத்த பின்னரா அல்லது அதற்கு முன்னரா என்று அறிய விரும்புகிறார்!” என்றான்.

யுதிஷ்டிரனுக்கு மூச்சு முட்டியது. அவன் உள்ளத்தில் உணர்ச்சிப் பிரவாகம் எடுத்து ஓடியதில் அவன் மூழ்கி விடுவான் போல் இருந்தது. அவனால் பேச முடியவில்லை. அதோடு இல்லாமல் அவன் தர்பார் மண்டபத்தில் வைத்து எதையும் பேசவும் விரும்பவில்லை. திரௌபதியை அவன் இழந்தது எப்போது என்பது குறித்த கருத்து எதையும் இப்போது கூற அவன் விரும்பவில்லை. திரௌபதியைப் பணயம் வைத்தது சரியானது தானா என்பது குறித்தும் அவன் ஏதும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் துரியோதனன் மிகவும் ஆத்திரத்துடன் பிரதிகாமியிடம் கூறினான். “அந்தப் பெண்மணியை இங்கே தர்பார் மண்டபத்துக்கு வரச் சொல்! அவளே நேரில் இந்தக் கேள்வியைக் கேட்கட்டும்!” என்றான்.  பிரதிகாமி திரும்பிச் சென்று திரௌபதியிடம் யுதிஷ்டிரன் பதில் ஏதும் கொடுக்கவில்லை என்றும், துரியோதனன் அவள் தர்பார் மண்டபம் வந்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்துவதாகவும் கூறினான்.

துரியோதனனின் இந்தக் கட்டளையைப் பிரதிகாமி கூறியதும் திரௌபதி சொன்னாள்: ”நீ மீண்டும் தர்பார் மண்டபத்துக்குப் போ! அங்கே என் பிரபுவிடம் நான் செய்ய வேண்டியது என்ன என்று கேள்! அவர் சொல்வதை மட்டுமே நான் கேட்பேன். மற்றவர் பேச்சைக் கேட்க மாட்டேன்!” என்று தீர்மானமாகச் சொன்னாள். மீண்டும் தர்பார் மண்டபம் சென்ற பிரதிகாமிக்குத் தான் மிகக் கடுமையான அக்னிப் பரிக்ஷையில் இருப்பதாகத் தோன்றியது. ஏதோ கடுமையான சாபத்தில் அவன் பாதிக்கப்பட்டிருப்பதாக நினைத்தான். ஏனெனில் அவனைக் காப்பாற்ற யுதிஷ்டிரனாலும் முடியாது. துரியோதனன் குறித்துச் சொல்லவே வேண்டாம்.  அங்குமிங்கும் செய்திகளைத் தூக்கிக் கொண்டு அலையும் அவனை துரியோதனன் எவ்வாறு காப்பாற்றுவான்? அவனால் செய்யக் கூடியது எதுவுமே இல்லை. திரௌபதியின் செய்தியை அங்கே தர்பார் மண்டபத்தில் துரியோதனனிடம் தெரிவித்தான் பிரதிகாமி. யுதிஷ்டிரன் வாயே திறக்கவில்லை. தங்களுடனேயே திரௌபதியும் இருக்கவேண்டும் என்றே அவன் அவளையும் பணயம் வைத்தான். அவனுடைய இந்த நோக்கத்தை அவன் எப்படி திரௌபதியிடம் விவரிப்பான்?

“அவளிடம் சொல்! அவள் இங்கே வந்து இங்குள்ள பெரியோரிடம் அவள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கேட்கச் சொன்னேன் என்று தெரிவிப்பாய்!” என்றான் யுதிஷ்டிரன்.  ஊழியன் பிரதிகாமி அந்த இடத்திலேயே சிலை போல் நின்றான். அவனை அங்கேயே ஸ்தாபிதம் செய்து விட்டாற்போல் நின்றான். அவன் துரியோதனனுக்கும் கீழ்ப்படியாமல் இருக்க முடியாது. அதே போல் திரௌபதியின் நேர்மையான கோபத்தையும் அவனால் எதிர்கொள்ள முடியாது! துரியோதனன் தன் தம்பி துஷ்சாசனனிடம் திரும்பினான். “தம்பி, துஷ்சாசனா! இந்த ஊழியன் எதற்கெடுத்தாலும் பயப்படுகிறான். நீயே அந்தப்புரம் செல்! திரௌபதியை தர்பார் மண்டபத்துக்கு இழுத்துவா!  உனக்குக் கீழ்ப்படிய மாட்டேன் என்று அவளால் மறுக்க இயலாது! கேவலம் அவள் ஓர் அடிமை!” என்றான். துஷ்சாசனன் வெற்றிப் புன்முறுவல் பூத்தான். பாண்ட சகோதரர்கள் ஐவர் மட்டுமின்றி அவர்களின் மனதுக்குகந்த ராணியும் இப்போது அவர்களின் அடிமை!

துஷ்சாசனன் அரசகுலப் பெண்டிர் தங்கும் அந்தப்புரம் சென்று அங்கே தனி அறையில் இருந்த திரௌபதியைச் சென்று பார்த்தான். ஓர் இகழ்ச்சிப் புன்னகையுடன் அவளிடம் அவள் ஹஸ்தினாபுரத்து அரசன் துரியோதனனால் தர்பார் மண்டபத்துக்கு வரும்படி ஆணையிடப் பட்டிருப்பதாகச் சொன்னான். திரௌபதி திட்டவட்டமாக மறுத்தாள். அவன் சொன்னான். “வா, உடனே வா! வந்துவிடு! நீ என்ன இன்னமும் உன்னைக் குரு வம்சத்தின் இளவரசி என்றா நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நீ இப்போது ஓர் அடிமை! ஆனால் பயப்படாதே! நீ இப்போது குரு வம்சத்தின் ஈடு இணையற்ற அரசன் துரியோதனனின் பாதுகாப்பில் இருக்கிறாய்!” என்றான். அப்போது திரௌபதி அடைந்த வேதனையை துஷ்சாசனன் மிகவும் ரசித்தான். அவன் சிரித்தான். மேலும் பேசினான். “ரொம்பவே அடக்கமாக இருப்பதாக நினைக்காதே! நாங்கள் யார்? உன் கணவன்மார்களின் பெரியப்பன் பிள்ளைகள் தானே!” என்று கூறினான்.

ஆத்திரமும், ஆங்காரமும் பொங்க திரௌபதி துஷ்சாசனனைப் பார்த்தாள். அங்கிருந்து காந்தாரி தங்கி இருந்த இடம் நோக்கிச் செல்ல இரண்டு அடி எடுத்து வைத்தாள். ஆனால் துஷ்சாசனன் அவளை அங்கிருந்து தப்பிச் செல்ல விடவில்லை.  அவளை நோக்கிக் கோபமாக அடி எடுத்து வைத்து, அவளுடைய நீண்ட தலைமுடியைப் பிடித்து இழுத்தான். அவள் தலைமுடியைப் பிடித்து இழுத்த வண்ணம் அவளை தர்பார் மண்டபம் நோக்கி இழுத்துச் சென்றான். அது மிகக் கஷ்டமானதொரு வேலை தான். ஆனாலும் துஷ்சாசனன் சிறிதும் இரக்கமின்றி நடந்து கொண்டான். திரௌபதியின் கெஞ்சல்களைக் கேட்ட அவன் மீண்டும் மீண்டும் அவமரியாதையான சொற்களை அவளிடம் கூறினான்.  “என் சகோதரன் துரியோதனன் நீ தர்பார் மண்டபம் வந்து சேர வேண்டும் என்று விரும்புகிறான். நீ ஓர் அடிமை. இங்கே ஆடப்பட்ட சூதாட்டத்தில் நீ உன் கணவனால் பணயம் வைக்கப்பட்டு அடிமை ஆகி விட்டாய்!” என்று கூறிக்கொண்டே அவளை இழுத்துச் சென்றான். திரௌபதி கட்டி இருந்த ஒற்றை ஆடை அவள் கண்களிலிருந்து பெருகிய கண்ணீரில் நனைந்தது.  அந்தக் கோலத்துடனேயே அவள் தர்பார் மண்டபத்துக்குள் நுழைந்தாள்.


Sunday, December 25, 2016

அன்று நகைத்தாளடா! உயிர் மாமனே! அவளை எனக்கு ஆளாக்கினாய்!

பீமன் தன்னுடைய தண்டாயுதத்தைத் தூக்கக் கிளம்பினான். பீஷ்மரின் காலடிகளில் அது கிடந்தது. ஆனால் அர்ஜுனன் பீமனைத் தடுத்தான்.  ஆனால் யுதிஷ்டிரனின் எண்ணமோ வேறாக இருந்தது. ஆம், திரௌபதியும் இப்போது இங்கே இருந்தாக வேண்டும். அவர்கள் ஐவர் மட்டும் ஒற்றுமையுடன் ஒன்றாக இருந்தால் போதாது! கூடவே திரௌபதியும் அவர்களுடன் இருக்க வேண்டும்.  அவர்கள் ஐவரையும் இணைக்கும் முக்கிய நபராக திரௌபதி இருக்கிறாள். ஆகவே அவளும் இருந்தாக வேண்டும். உடனே யுதிஷ்டிரன் பேச ஆரம்பித்தான். “ நான் இப்போது என் மனைவியும் பாஞ்சால நாட்டு இளவரசியும் , எங்கள் ஐவருக்கும் பிரியமான மனைவியும்  ஆன திரௌபதியைப் பணயம் வைக்கிறேன்.” என்றான். சபாமண்டபத்தில் கூடி இருந்த மக்கள் அனைவரும் திகைத்து உட்கார்ந்திருந்தனர்.

அங்கு நடப்பது என்ன என்பதை அவர்கள் பூரணமாகப் புரிந்து கொள்ளும் முன்னரே அங்கே சூதாட்டம் ஆடி முடிக்கப்பட்டு விட்டது. ஷகுனியும், “நாங்களே இம்முறையும் வென்றோம். இப்போது பாஞ்சால இளவரசி எங்கள் அடிமை! எங்களுக்கு தாசியாகச் சேவை செய்ய வேண்டியவள்!” என்றான். துரியோதனனும் அவன் சகோதரர்களும் தங்கள் சுயக்கட்டுப்பாடுகளை இழந்து குதூகலத்தில் கூச்சலிட்டார்கள். அவன் ஆதரவாளர்களும், நண்பர்களும் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.  ஒரு சிலர் அவனைக் கட்டித் தழுவிக் கொள்ள இன்னும் பலர், “துரியோதனனுக்கே ஜெயம்! வெற்றி துரியோதனனுக்கே!” என்றெல்லாம் கூவினார்கள். அவர்களுடன் சேர்ந்து அங்க தேசத்து மன்னன் கர்ணனும் இந்த சந்தோஷத்தில் கலந்து கொண்டான். துரியோதனனுக்கும் அவனுக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  கர்ணன் துரியோதனனைப் பார்த்துப் புன்னகையுடன் அவன் காதுகளில் மெல்லக் கிசுகிசுத்தான்.

“துரியோதனா, இந்த திரௌபதி அவள் சுயம்வரத்தில் நம்மை எல்லாம் துச்சமாக நினைத்து உதறித் தள்ளிவிட்டு அர்ஜுனனைத் தேர்ந்தெடுத்தாள் அல்லவா? அப்போதே நான் அவளை அந்தச் சுயம்வர மண்டபத்திலிருந்து கடத்தித் தூக்கி வந்திருப்பேன். ஆனால் நீ தான் என்னைத் தடுத்தாய்!”  என்றான். அதற்கு துரியோதனன், “போகட்டும் விடு! இப்போது அவள் நம் அடிமை. நாம் கருணை காட்டினால் தான் அவளுக்கு நன்மை பயக்கும். ஆகையால் அவளை நாம் இப்போது என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யாரும் எதுவும் கேட்க முடியாது!” என்றான்.

இந்த மானங்கெட்ட நிகழ்ச்சியின் மூலம் குரு வம்சத்தினருக்கு ஏற்படப் போகும் அவப்பெயரை நினைத்து பீஷ்மர் வருந்தினார். தன் மதிப்பிழந்துவிட்டதாகக் கருதினார்.  அவர் கண் முன்னால் அவர்கள் குடும்பத்து அருமை மருமகள், பேரரசன் துருபதனின் மகள், எவ்வளவு மென்மையும் மதிப்பும் மிக்கவள், அனைவராலும் விரும்பப் படுபவள், அனைவராலும் மதிக்கப்படுபவள், இன்று ஒரு பேரத்திற்குப் பலியாகி விலை போய்விட்டாள். இது நீதியா, தர்மமா? யுதிஷ்டிரன் அவன் வாழ்நாளில் நேர்மையைக் கடைப்பிடித்து வந்திருக்கலாம்.  ஆனால் இன்று அவன் தன்னைத் தானே தியாகம் செய்து கொண்டது மட்டுமில்லாமல், தன் சகோதரர்கள் மற்றும் அருமை மனைவியையும் தியாகம் செய்யும்படி நேர்ந்து விட்டது. இதெல்லாம் எதற்காக? ஓர் கடினமான போர் ஏற்படுவதைத் தடுப்பதற்காக! அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக! யுதிஷ்டிரன் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டுள்ளான்.  துரியோதனனால் அவர்கள் ஐவருக்கும் குரு வம்சத்து அரச குலத்தவரிடம் ஏற்பட்டிருக்கும் தீராப்பகையை ஒழிப்பதற்காக இத்தனையும் நடந்திருக்கிறது.

துரோணருக்கும் கிருபருக்கும் நடப்பது என்னவென்று புரியவே இல்லை. இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் என்ன என்பதை அவர்கள் உணரவே இல்லை. அவர்கள் இருவரும் வெட்கத்திலும் அவமானத்திலும் தலை குனிந்து அமர்ந்திருந்தனர். அவர்கள் இந்த நிகழ்ச்சியின்போது குறுக்கிட்டுப் பேசித் தடுக்கவே விரும்பினார்கள். ஆனால் தன் ஒரு கையசைவால் பீஷ்மர் அவர்களைத் தடுத்து விட்டார்.  துரியோதனனின் இந்த அடாவடி நடவடிக்கையினால் அதிர்ச்சிக்குள்ளாகிய ராஜகுருமார்கள் சோமதத்தரும் ஆசாரியர் தௌமியரும் பீஷ்மரிடம் அனுமதி கேட்டுக் கொண்டு அந்த அவையை விட்டு வெளியேறினார்கள். அவர்களுடன் அந்த சபையில் இருந்த பல ஸ்ரோத்திரியர்களும் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினார்கள்.

செய்வதறியாது திகைத்து உட்கார்ந்திருந்த விதுரர் தன் இரு கைகளாலும் முகத்தைத் தாங்கிய வண்ணம் பூமியை நோக்கிக் கொண்டு அமர்ந்திருந்தார். அவர் மனமெல்லாம் பூமா தேவியிடம் குரு வம்சத்து இளையவர்கள் செய்யும் இந்த அக்கிரமத்தை மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டிருந்தது. “இதற்கு நான் இறந்திருக்கலாமே!” என்று திரும்பத் திரும்ப அவர் மனம் சொல்ல வாயும் அதை முணுமுணுத்தது.  திருதராஷ்டிரன் மிகவும் சந்தோஷத்துடன் இருந்தான் என்பது அவன் திரும்பத் திரும்ப சஞ்சயனிடம், “இப்போது நமக்கு வெற்றியின் மூலம் என்ன கிடைத்தது?” என்று ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

அங்கிருந்த பெரியோர்கள் அனைவரின் தகுதியையும் பதவியையும் முற்றிலும் நிராகரித்துவிட்டு துரியோதனன் ஷகுனியைக் கட்டித் தழுவிக் கொண்டு உற்சாகம் அடைந்தான். “மாமா அவர்களே, இன்று என் வாழ்நாளில் ஒரு பொன்னாள். மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளான நாள். இந்த அருமையான நாளை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.” என்றான்.  பின்னர் விதுரர் பக்கம் திரும்பி, “ஏ, சித்தப்பா விதுரா, இந்த திரௌபதி தன் சுயம்வரத்தில் எங்களை எல்லாம் அவமதித்து நடந்து கொண்டபோது நீ எங்கே போயிருந்தாய்? அந்த சுயம்வரத்தில் கூடி இருந்த அனைத்து அரசர்களையும் எங்களை ஏளனத்துடன் பார்த்துக் கேலி செய்ய வைத்தாளே, அப்போது நீ எங்கே போயிருந்தாய்? இப்போது அவள் எங்கள் அடிமை. நீ தான் இப்போது அந்தப்புரம் சென்று அவளை இங்கே இழுத்து வர வேண்டும்.” என்றான்.

பின்னர் ஒரு சீறலுடன் அவன் மேலும் கூறினான்.”இது ஓர் அற்புதமான மரியாதை இங்குள்ள பெரியவர்களுக்கெல்லாம். ஒரு அரசியை வரவேற்க வேண்டும்; ஆனால் அவள் இனிமேல் அரசியே அல்ல! ஓர் அடிமை! அவள் இங்கே வந்து எங்கள் அனைவருக்கும் தக்க மரியாதையைத் தெரிவித்த பின்னர், இங்குள்ள பெண் அடிமைகள் வசிக்கும் இடத்துக்குச் செல்ல வேண்டும். அவளுக்குத் தான் செய்ய வேண்டிய வேலைகள் என்னவென்று விரைவில் கற்றுக்கொள்ளச் சந்தர்ப்பம் கிட்டும்!” என்று கூறினான். பின்னர் தன் மீசையைத் தானே திருகிவிட்டுக் கொண்டான்.

விதுரர் தன் ஆசனத்திலிருந்து எழுந்து துரியோதனனைப் பார்த்துக் கை கூப்பி வணங்கினார். “மாட்சிமை பொருந்திய இளவரசே, திருதராஷ்டிர அரசனின் மகனே! இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. எதற்கும் நேரம் ஆகிவிடவில்லை.  நான் சொல்வதைக் கொஞ்சம் கேள்! இனி மேலே எதையும் செய்யாதே! போதும், விட்டு விடு! இதோடு நிறுத்திக் கொள்! திரௌபதி உன்னுடைய அடிமை அல்ல. ஒருக்காலும் இல்லை. அவள் ஓர் க்ஷத்திரிய குலத்து இளவரசி! ஆரியவர்த்தத்தின் பெருமை மிகுந்த சக்கரவர்த்தியின் குமாரி! அவள் பாண்டவ சகோதரர்கள் ஐவருக்கும் மனைவியும் ஆவாள்!” என்றார்.

“ஆஹா! அரசியா அவள்! அரசி!” என்று வாயைக் கோணிக் கொண்டு ஊளையிடும் குரலில் கூவினான் துரியோதனன். அப்போது விதுரர் மேலும் பேசினார். “யுதிஷ்டிரனுக்கு அவளைப் பணயம் வைக்க எந்த உரிமையும் இல்லை. ஏனெனில் ஏற்கெனவே அவன் தன்னைத் தானே பணயம் வைத்துக் கொண்டு அடிமையாகி விட்டான். ஓர் அடிமை எப்படி இன்னொரு சுதந்திரமான பெண்ணைப் பணயம் வைக்க முடியும்? இதோ, பார், துரியோதனா! நான் உன் நன்மையை விரும்புபவன் அல்ல என நீ நினைக்கிறாய்! ஆனால் அப்படி எல்லாம் இல்லை! நான் உன் நன்மைக்காகவே இப்போது பேசுகிறேன். நீ இப்போது என்னுடைய ஆலோசனைகளைக் கேட்காவிட்டால், நீ உன் சகோதரர்களுடனும், உன் நண்பர்களுடனும் முற்றிலும் அழிந்து படுவாய்!”

விதுரர் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தார். சற்று நேரம் கழித்துத் தன் தலையைத் தூக்கி துரியோதனனைப் பார்த்து, “ உன் கண்கள் இன்று மூடிக் கொண்டன போலும்! குருடாகிவிட்டன போலும்! இல்லை எனில் இன்றைய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடைபெறப் போகின்றவை குறித்து நீ யோசித்துப் புரிந்து கொண்டிருப்பாய்!” என்று கூறினார். அவர் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.

“நீ புலம்புவதெனில் தனியே புலம்பிக்கொள், கிழவா! நிறுத்திக்கொள் இப்போது!” என்ற துரியோதனன் தன் குர்லை உயர்த்தி, “இனிமேலும் ஏதும் பேச வேண்டாம். நிறுத்து! நாங்கள் ஏற்கெனவே நிறையவே உன் புத்திமதிகளையும் ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்டு விட்டோம். நீ கீழ்க்குடிக்குப் பிறந்தவன் தானே! ஆகவே நீ எதற்கெடுத்தாலும் பயப்படுகிறாய்! ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறாய். நாங்கள் பிறவியிலேயே க்ஷத்திரியர்கள்! அரச குலத்தவர். எல்லாவிதமான ஆபத்துக்களையும் எதிர்நோக்கும் போர்க்குணம் படைத்தவர்கள்! எங்களுக்குக் கடவுளின் அருள் பூரணமாக இருக்கிறது!” என்றான்.

Saturday, December 24, 2016

ஒளி மின்னும் அமுதமும் போன்றவள்! இவர் மேவிடு தேவி!

யுதிஷ்டிரன் மனதில் நம்பிக்கை தளர்ந்து விட்டது. அவனால் இப்போது எதுவும் செய்ய இயலாது. அவனால் இயன்றதெல்லாம் தங்களுடைய சகோதர ஒற்றுமையைப் பாதுகாத்துக் கொள்வது ஒன்று மட்டுமே! அதில் அவனுக்கு சந்தேகமே இல்லை.  அவர்கள் நாடிழந்து, வீடிழந்து பிச்சைக்காரர்களாக ஆனாலும் பாதகமில்லை. ஐந்து சகோதரர்களும், அவர்கள் மனைவியுமான திரௌபதியும் பிரிக்க முடியாதவர்கள்.  தன் கைகளை ஆதுரத்துடன் நகுலனின் தோள்களில் வைத்தான் யுதிஷ்டிரன். அவன் அன்பு முழுவதும் அந்தக் கைகள் வழி பாய்ந்தது. ஆனால் பீமனின் கண்களோ கோபத்திலும் ஆக்ரோஷத்திலும் சிவந்து எரிந்து கொண்டிருந்தன.  என்ன நடக்கப் போகிறது? சகோதரர்கள் ஐவரையும் விலைக்கு வாங்கி அடிமைகளாகவா விற்கப் போகிறான் இந்த துரியோதனன்? அவனுக்கு யுதிஷ்டிரனின் கைகளை நகுலனின் தோள்களிலிருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்று தோன்றியது. வலுக்கட்டாயமாக அகற்ற விரும்பினான்.

அப்போது அர்ஜுனன் அவனிடம் மெல்லிய குரலில், “சகோதரா, நம்முடைய வாழ்க்கையின் இந்தத் தருணங்கள் மிக முக்கியமானவை. ஆகவே உன்னுடைய உணர்வுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நலம்!” என்று எச்சரிக்கை செய்தான். பீமன் தன் பற்களைக் கோபத்துடன் கடித்தான். வேறு வழியின்றி அர்ஜுனனின் சொற்களுக்குக் கட்டுப்பட்டான். யுதிஷ்டிரன் அதைக் கவனித்தான். மெல்லிய குரலில் பீமனிடம், “வ்ருகோதர அரசனே! பொறுமை, பொறுமை!  நான் என்ன செய்யப் போகிறேனோ அது தான் நமக்கு நல்லது. நம்மால் முடிந்த வரை நன்மை செய்ததாகும். “ என்று சொல்லிவிட்டு ஷகுனி பக்கம் திரும்பினான். “நான் இதோ இப்போது பணயமாக இந்த இளம் வீரனும் அழகும் வீரமும் நிறைந்த புத்திசாலியும், குதிரைகளைப் பழக்குவதில் தேர்ந்தவனும் ஆன என் சகோதரன் நகுலனைப் பணயம் வைக்கிறேன்.” என்றான்.ஷகுனி உடனே பாய்ச்சிக்காய்களை உருட்டி முன் போல் சுண்டு விரலால் தனக்கு வேண்டிய எண்களை அமைத்த வண்ணம் வீசினான். எதிர்பார்த்தது போல் அவன் வென்றான். “நாங்கள் வென்றோம்!” என்று மகிழ்ச்சிக் கூக்குரல் இட்டான்.

யுதிஷ்டிரனுக்கு இந்த ஆட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்னும் வேகம் பிறந்தது. அவனுக்கு எந்த நேரமும் பிதாமஹர் இந்த ஆட்டத்தில் நடுவே புகுந்து தடுப்பாரோ என்னும் எண்ணம் இருந்தது. ஆகவே அதிகம் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளாமல் விரைந்து ஆடி முடிக்கவேண்டும் என்று எண்ணினான்.  ஆகவே அடுத்ததாக, “என் அருமை இளைய சகோதரன், விவேகம் நிறைந்தவன், புத்திசாலி, சஹாதேவன், தீர்க்கதரிசனம் மிகுந்தவன், அடுத்த பணயமாக வைக்கிறேன்.” என்றான் யுதிஷ்டிரன்.  மேலும் தொடர்ந்து, “இவனைப் போன்ற அறிவாளியும் புத்திசாலியும் இவ்வுலகில் காணக் கிடைக்க மாட்டார்கள்.” என்றும் சொன்னான். சொல்லிவிட்டு யுதிஷ்டிரன் தன் கைகளுக்கு வந்த பாய்ச்சிக்காய்களை உருட்டி விட்டான். ஷகுனி உடனே அதை எடுத்து துரியோதனன் சார்பில் அடுத்து விளையாடினான். மீண்டும் ஷகுனிக்கே ஜெயம்! “நாங்களே இம்முறையும் வென்றோம்!” என்று கூக்குரல் இட்டான்.

நகுலன் சஹாதேவன் பக்கம் திரும்பினான். “நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்?” அதற்கு சஹாதேவன், “மூத்தவருக்குக் கீழ்ப்படிந்து நட!” என்று சொல்லிவிட்டு அமைதியானான்.  உடனே நகுலனும், சஹாதேவனும் தங்கள் ஆசனங்களில் இருந்து எழுந்து கொண்டு, இளவரசர்களுக்கான கிரீடத்தைத் தங்கள் தலையிலிருந்து நீக்கினார்கள். உடைவாளையும் உருவிக் கொண்டு கிரீடத்தையும், உடைவாளையும் பீஷ்மரின் காலடிகளில் வைத்து வணங்கினார்கள். குரு வம்சத்தின் அப்போதைய பெரியவர் பீஷ்மர் மட்டுமே என்பதை உறுதி செய்யும் விதமாக இது அமைந்தது. ஓர் ஏளனமும், பரிதாபமும் நிறைந்த சிரிப்புடன் ஷகுனி யுதிஷ்டிரனைப் பார்த்தான். “மூத்தவனே, இரட்டையர்களை இழந்து விட்டாயே!” என்ற வண்ணம் கபடமாகச் சிரித்தான்.

பின்னர் யுதிஷ்டிரனைப் பார்த்து மேலும் சூழ்ச்சி நிறைந்த குரலில், “மூத்தவனே, உனக்கு இன்னும் இரு சகோதரர்கள் இருக்கின்றனரே! நம் ஆரிய வர்த்தத்தின் பழமையான கோட்பாடுகளின் படியும் விதிகளின் படியும் தந்தை இல்லை எனில் சகோதரர்களுக்கு மூத்த அண்ணனே தந்தைக்குச் சமம் ஆவான். குடும்பத்தை நிர்வாகம் செய்யும் அதிகாரமும், குடும்பச் சொத்துக்களை நிர்வகிக்கும் அதிகாரமும் மூத்தவனுக்கே  உரியது.  மொத்தக்குடும்பமும் அவனுக்குக் கட்டுப்பட்டது.  உன்னுடைய பணயங்கள் எதுவுமே இங்குள்ள செல்வங்களுக்கு ஈடு ஆகாது தான்! மட்டமானவை தான். ஆனாலும் நாங்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறோம். அதனால் தான் உன்னுடைய மட்டமான இந்த சகோதரர்களையும் உன் சொத்தாகக் கருதிக் கொண்டு பயன்படுத்த அனுமதிக்கிறோம்!” என்றான்.

அத்துடன் நிறுத்தாமல் மேலும் தொடர்ந்து, “மூத்தவனே? உன்னுடைய மற்ற சகோதரர்களைக் குறித்து என்ன முடிவு செய்திருக்கிறாய்? அவர்களைக் கூலிகளாகப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் அல்லவா? அவர்கள் அதில் நன்றாக வேலை செய்வார்கள் இல்லையா? அல்லது இவர்கள் உன் சொந்த சகோதரர்கள் என்பதால் இரட்டையர்களை விட உனக்கு இவர்கள் மேல் அதிகப் பாசம் உண்டோ? ஆம், ஆம், அப்படித் தான் இருக்க வேண்டும். ஏனெனில் இந்த இரட்டையர்கள் உன் தாய் வயிற்றில் பிறக்கவில்லையே! உன் சிற்றன்னைக்குப் பிறந்தவர்கள் தானே!” என்று கேலியுடன் கூறினான்.

கோபமே கொள்ளாத யுதிஷ்டிரனுக்கும் கோபம் மூண்டது. ஆனாலும் தாங்கள் அடிமைகளாக ஆனாலும் சரி சகோதரர்கள் ஐவரும் திரௌபதியுடன் ஒன்றாகச் சேர்ந்தே இருக்க வேண்டும் என்பதில் யுதிஷ்டிரன் உறுதியாக இருந்தான்.  ஆகவே அவன் ஷகுனியைப் பார்த்து, “காந்தார இளவரசே! அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். நீங்கள் ஏற்கெனவே எங்கள் சொத்துக்களை எல்லாம் பிடுங்கிக் கொண்டு விட்டீர்கள். இப்போது நீங்கள் எங்கள் ஐவருக்குள்ளும் வேற்றுமை கற்பிக்கப் பார்க்கிறீர்கள். ஆனால் ஒருக்காலும் இதில் நீங்கள் வெல்ல முடியாது. நீங்கள் என்ன செய்தாலும் சரி, என்ன சொன்னாலும் சரி, நாங்கள் ஐவரும் ஒன்று தான். உடல் ஐந்து, உயிர் ஒன்று. இப்படியே நாங்கள் ஒன்றாகவே கடைசி வரை இருப்போம். உங்களால் இதில் மட்டும் வெல்ல முடியாது. இப்போது என் அடுத்த பணயம் அர்ஜுனன், மிகச் சிறந்த வில்லாளி!” என்று முடித்தான்.

மீண்டும் பாய்ச்சிக்காய்கள் வீசப்பட்டன. ஷகுனி எப்போதும் போல் ஜெயித்தான். யுதிஷ்டிரன் அர்ஜுனனையும் இழந்தான். யுதிஷ்டிரன் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. ஏனெனில் அர்ஜுனன் எதற்கும் கலங்காதவனாக கௌரவத்துடன் எழுந்து கொண்டு தன் தலைக் கிரீடத்தையும் உடைவாளையும் கழற்றி பீஷ்மரின் காலடிகளில் வைத்து வணங்கினான். இப்போது துரோணாசாரியாருக்கே கோபம் வந்து விட்டது. ஏனெனில் அர்ஜுனன் அவருக்குப் பிரியமான சீடன். எவரோடும் ஈடு செய்ய முடியாத வில்லாளி. வில் வித்தையில் நிபுணன். அர்ஜுனனின் குருவாக அவர் தான் அவனுக்கு குருகுல வாசம் முடிந்ததும் கிரீடம் சூட்டி வில் அம்புகள், வாள் போன்றவை அளித்து கௌரவித்தார். ஆகவே இப்போது கோபத்துடன் தன் அருகிலிருந்த கோடரியைக் கைகளில் எடுத்தார்.  பீஷ்மரைப் பார்த்தார்.

“பிதாமஹரே! என்ன இது?” என்று கோபத்துடன் வினவினார். “இனிமேலும் சந்தர்ப்பம் கொடுத்துக் கொண்டிருந்தால் இவர்கள் சகோதரர்கள் ஐவரையும் அடிமைகளாக ஆக்கி விடுவார்கள். இங்கேயே, இப்போதே!” என்றார். பீஷ்மர் அவர் முதுகில் தட்டிக் கொடுத்து சமாதானம் செய்தார். அவர் காதுகளில் மெல்லக் கிசுகிசுத்தார். “பொறுங்கள், இப்போது எதுவும் வேண்டாம். இன்னும் நேரம் இருக்கிறது!” என்றார்.  அதற்குள்ளாக யுதிஷ்டிரன், “இதோ அடுத்த பணயம் பீமன்!” என்றான். “அதெல்லாம் முடியாது! நான் இங்கே இந்த சபையில் உன்னால் தோற்கப் பட்டு அடிமையாகப் போவதில்லை. இதற்கு நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்.” என்ற வண்ணம் பீமன் எழுந்தான். யுதிஷ்டிரன் அவனை மீண்டும் கீழே உட்கார்த்தி வைத்தான்.

“வ்ருகோதரா, ராக்ஷச அரசே, நீ என்னுடைய பணயமாக ஆகியே தீர வேண்டும். ஏனெனில் நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். நாம் அனைவரும்! அர்ஜுனனும், இரட்டையரும் எங்கே இருக்கின்றனரோ அங்கே நாமும் இருக்க வேண்டும்!” என்றான். பின்னர் அவன் ஷகுனியிடம் திரும்பி, “இதோ ராக்ஷசவர்த்தத்தின் அரசன் வ்ருகோதர அரசன்!  என்னுடைய ராணுவத்தின் தலைமைத் தளபதி! இவனை நான் பணயம் வைக்கிறேன்.” என்றான்.  மீண்டும் பாய்ச்சிக்காய்கள் உருட்டப்பட்டு, பீமனும் அடிமையாக ஆனான். ஷகுனி உற்சாகத்துடன் கூவினான். பீமன் தன் கண்களில் இருந்து கண்ணீர் வழிய எழுந்து வெறுப்பு கண்களில் தெரியத் தன் தலைக்கிரீடத்தையும் உடைவாளையும் அகற்றி பீஷ்மரின் காலடியில் தூக்கி எறிந்தான்.

‘ம்ம்ம், தாத்தா அவர்கள் எங்கள் ஐவரின் ஒற்றுமை குறித்து சந்தேகம் கொண்டிருப்பார். சகோதரர்களின் ஒற்றுமை குறித்தும் மூத்தவனுக்குக் கீழ்ப்படிதல் குறித்தும் அவர் கொண்டிருக்கும் சந்தேகம் இப்போது தீர்ந்திருந்தாலும் நானும் என்ன் சகோதரர்களுடனேயே இருந்தாக வேண்டும். அப்போது தான் அவருக்குப் புரியும்!” என்று எண்ணியவனாக, “மாட்சிமை பொருந்திய ஷகுனி அவர்களே, நான் இப்போது என்னையே பணயம் வைக்கிறேன்.” என்றான். “நாங்கள் தயார்!” என்றான் ஷகுனி. மீண்டும் பாய்ச்சிக்காய்கள் உருட்டப்பட்டு யுதிஷ்டிரனும் அடிமை ஆனான்.  பீஷ்மரின் கண்களில் கண்ணீர் வந்தது. யுதிஷ்டிரன் எவ்வளவு புத்திசாலி, விவேகம் நிறைந்தவன், தன்னலம் இல்லாதவன், தர்மத்தைக் கடைப்பிடிப்பவன், இப்போது அடிமை! அதுவும் சொந்தப் பெரியப்பன் மகன்களுக்கே. இல்லை. இல்லை. இல்லை. இது நடக்கக் கூடாது. பீஷ்மர் தன் கைகளால் தன் கண்களை மறைத்துக் கொண்டார்.

யுதிஷ்டிரன் தன் அரசக் கிரீடத்தையும் உடைவாளையும் கழற்றி மரியாதையுடன் பீஷ்மர் காலடிகளில் வைத்தான். கீழே குனிந்து வணங்க முற்படுகையில் பீஷ்மர் அவனைத் தூக்கிக் கட்டி அணைத்தார். பின்னர் யுதிஷ்டிரனும் தன் சகோதரர்களுடன் போய் நின்று கொண்டான். அப்போது ஷகுனியின் உதடுகளிலிருந்து வக்கிரமும், வஞ்சகமும் நிறைந்த வார்த்தைகள் வந்தன. “மூத்தவனே, நீ தர்மராஜா எனப் பெயர் வாங்கியவன். நேர்மையின் அதிகாரி. தர்மத்தின் வழியில் அரசாட்சி புரிந்தவன். நீ ஒரு விஷயத்தை மறந்து விட்டாய்! அதி முக்கியமான விலை உயர்ந்த ஒன்றை விட்டு விட்டாய்! அது தான் அழகுராணியும் உன் மனைவியும் ஆன பாஞ்சால இளவரசி திரௌபதி!” என்றான்.

Friday, December 23, 2016

காயுருட்டலானார்--சூதுக்களி தொடங்கலானார்!

மாட்சிமை பொருந்திய தங்கள் குலபதியைத் திரும்பிப் பார்த்தான் துரியோதனன்.  அவர் எப்படி இந்த நிகழ்வுக்கு எதிர்வினை ஆற்றுவார் என்பதை அறிய மிகுந்த ஆவலுடன் காத்திருந்தான். அவர் வலக்கையின் ஆள்காட்டி விரலை நீட்டிய வண்ணம் எச்சரிக்கைக் குறி செய்து கொண்டிருந்தார்.  துரோணாசாரியாரும் அப்போது கோடரியை நீட்டியவண்ணம் காட்சி அளித்தார். துரோணர் பரசுராமரின் சீடர் என்பதை நினைவூட்டும் விதமாகத் தன்னுடைய அடையாளமாகவும் கோடரியை வைத்திருந்தார்.  துரியோதனன் பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரின் மன ஓட்டங்களை அவர்களின் உடல் அசைவிலிருந்து புரிந்து கொண்டான். அவன் தைரியம் அப்போது அவனை விட்டு அகன்றது. தன் கையிலிருந்த வாளை மீண்டும் உறையிலிட்டான். திரும்பித் தன் நண்பர்களைப் பார்த்தான்.  அவர்கள் அவனை ஏளனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

துரியோதனன் எளிதில் வெடித்து விடுகிற சுபாவம் உள்ளவன் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால் இப்படி ஒரு கோழையாகப் பெரியோர்களுக்குப் பயப்படுபவனாக இருப்பான் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை.  இத்தனைக்கும் முதல் நாள் இரவில் அவர்கள் அனைவருமாகச் சேர்ந்தே தான் அந்த முக்கியமான முடிவை எடுத்திருந்தார்கள்.  அப்போது அவர்கள் முடிவுக்குக் குறுக்கே யார் வந்தாலும் அவர்களை அழிக்க வேண்டும் என்றும் பேசி முடிவு எடுத்திருந்தார்கள். அதன் பின்னரும் துரியோதனன் இவ்வளவு பயப்படுகிறானே! அதிலும் அந்தக் கிழவர் பீஷ்மருக்கு! இதைக் கண்ட துஷ்சாசனன் கூடத் தன் அண்ணனை வீரதீரக் கதாநாயகனாகவே எண்ணி இருந்தவன் இப்போது மனம் நொந்தான்.

அதற்குள்ளாக துரியோதனன் மீண்டும் சதுரங்கமேடையில் தன் ஆசனத்துக்கு அருகே போய் உட்கார்ந்து கொண்டான். ஷகுனி அவன் காதுகளில் மெல்லக் கிசுகிசுத்தான். “மருமகனே, கேள்! இதனால் எல்லாம் ஏமாற்றம் அடைந்து விடாதே! பொறுத்திருந்து பார்! நாம் விரைவில் அவர்களைப் பாண்டுவின் குமாரர்கள் என்னும் அந்தஸ்திலிருந்தும் க்ஷத்திரியர்கள், அரசகுலத்தினர் என்னும் தகுதியிலிருந்தும் ஒட்டு மொத்தமாக அழித்து விடுவோம்.  ஹூம், நீ இன்னும் உன்னுடைய தாய்மாமனான என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. என்னிடமிருந்து அவர்கள் தப்பி விடுவார்கள் என்று நினைத்து விடாதே!” என்றான்.

யுதிஷ்டிரன் ஆசாரியர் வேத வியாசரின் தீர்க்க தரிசனத்தைப் பொய்யாக்கி விட வேண்டும் என்றும், ஓர் மாபெரும் யுத்தம் நடைபெறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மனப்பூர்வமாக எண்ணினான்.  ஆனால் அவன் தங்கள் ஐவருக்கும் தங்கள் பெரியப்பாவின் மக்களுக்கும் இடையில் உள்ள பூதாகாரமான இடைவெளியை ஒழிக்க வேண்டும் என்று எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் மேலும் மேலும் பிரச்னைகளையே அருகில் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் தன் சொத்துக்களை எல்லாம் அவன் மகிழ்வுடனேயே இழந்தான். அதற்காகச் சிறிதும் கலங்கவில்லை.  மேலும் தங்கள் அனைவரின் உடைமைகளையும், இந்திரப் பிரஸ்தத்தையும் கூட இழந்து விட்டான். இனி அவனும் அவன் சகோதரர்களும் இந்த சபாமண்டபத்திலிருந்து பிச்சைக்காரர்களைப் போல வீடிழந்து நாடிழந்து திரும்பவேண்டியவர்களே! இப்படி இருக்கையில் யுதிஷ்டிரன் இப்போது தான் விஷயத்தைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டான்.

திடீரென ஏற்பட்டதொரு மன வெளிச்சப் பொறியில் அவனுக்குப் புரிந்தது என்னவென்றால் அவர்கள் ஐவருக்கும் அவர்களுடைய பெரியப்பா புத்திரர்களுக்கும் இடையில் சமாதானம் என்பதே இல்லை; எப்போதுமே இல்லை என்பதே! யுதிஷ்டிரன் எவ்வளவு விட்டுக் கொடுத்தாலும் அது துரியோதனாதியரின் மனதைத் திருப்தி செய்யப் போவதில்லை.  துரியோதனன் இந்த விளையாட்டை ஏற்பாடு செய்திருப்பதின் முக்கியக் குறிக்கோள் யுதிஷ்டிரனுடைய செல்வத்தையோ, உடைமைகளையோ, அல்லடு இந்திரப் பிரஸ்தத்தையோ கவர்வது மட்டுமல்ல. அவர்களைக் குலத்திலிருந்தே ஒதுக்கி வைத்துப் பாண்டுவின் புத்திரர்கள் என்னும் அந்தஸ்திலிருந்து முழுமையாக விலக்கி வைத்து ஆரிய வர்த்தத்தின் பிரசித்தி பெற்ற குரு வம்சத்து அரசகுல க்ஷத்திரியர்கள் என்னும் தகுதியிலிருந்து அவர்களைக் கீழிறக்க வேண்டும் என்பதே அவர்கள் எண்ணம். அவர்கள் அனைவரையும் துரியோதனாதியரின் அடிமைகளாக ஆக்கவேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோள்.

பிதாமஹர் பீஷ்மரைப் பார்த்தான் யுதிஷ்டிரன். அவர் வாக்குக் கொடுத்ததற்கு ஏற்ப மௌனமாகவே வீற்றிருந்தார். ஆனால் கடுங்கோபத்தில் இருந்தார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.  அவர் இத்தனை வருடங்களாக இந்தக் குரு வம்சத்தையும் ஹஸ்தினாபுரத்தையும் அதன் மகத்தான சாம்ராஜ்யத்தையும் கட்டிக் காத்து வந்தது வீணாகி விட்டது. அந்த நாட்களெல்லாம் இனி வரப் போவதில்லை என்றும் இனி எதுவும் தன் கைகளில் இல்லை என்பதையும் அவர் புரிந்து கொண்டு விட்டார்.  விதுரன் பட்ட பாடு! இத்தனைக்கும் இந்த அரசகுலத்தவரால் மிகவும் மதிக்கப்பட்ட மனிதர் விதுரர். அவர் திருதராஷ்டிரனின் பிரியத்துக்குகந்த மாற்றாந்தாயின் வழி சகோதரர் என்பதால் மட்டுமில்லை. அவருடைய படிப்பு, ஞானம், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நேசம் மிகுந்த குணம், பெரியோரிடம் காட்டும் மரியாதை, அரச நிர்வாகத்தில் அவர் காட்டிய நிபுணத்துவம் போன்றவையும் அவர் மேல் மிக்க மரியாதையைக் காட்டும்படி செய்திருந்தது.

அப்படிப் பட்ட விதுரரையே அவமதிக்கும்படி நடந்து கொண்டு விட்டான் துரியோதனன். அவனுடைய இந்தக் குணம் விதுரருக்கு மட்டும் அவமரியாதை இல்லை, பீஷ்மருக்கும் சேர்த்துத் தான்.  குரு வம்சத்தினருக்கே ஓர் மரண அடியாக அமைந்து விட்டது அது! அதுவும் பீஷ்மர் பல்லாண்டுகளாகக் கட்டிக் காத்து வந்த பெருமையை எல்லாம் சிதற அடித்து விட்டது.  ஆரியர்களின் பாரம்பரிய சாஸ்திரங்களின் படியும் கோட்பாடுகளின் படியும் ஆரியர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்களை வாங்கவோ, விற்கவோ கூடாது; முடியாது! அது விதி அல்ல! அவர்களை அக்னிக்கடவுளுக்கு இரையாகவும் ஆக்க முடியாது.  இப்படிப்பட்ட மனித பலியைக் கடவுள் வருண பகவான் முற்றிலும் நிராகரித்து விடுவார். ஏற்றுக்கொள்ளவே மாட்டார்.  இதை ஏற்கெனவே வருண் பகவான் முனிவர் ஷுனஷேபாவை பலி கொடுக்கக் கட்டிப் போட்டிருந்த சமயம் அவரை விடுவித்ததன் மூலம் நிரூபித்தும் காட்டி இருக்கிறார்.

அங்கே குழுமியிருந்த அரச குலத்தினரில் பெரும்பான்மையானவர்களுக்கு இந்த சபையில் நடக்கும் இந்த நிகழ்ச்சிகளின் போக்குப் பிடிக்கவில்லை. அவர்களுக்குள்ளாக முணுமுணுத்துக் கொண்டார்கள். ஆனால் வெளிப்படையாக ஏதும் பேசவில்லை. ஏனெனில் அனைவருக்கும் பெரியவரான பிதாமஹர் பீஷ்மரே பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.  ஆகவே மெல்ல மெல்லத் தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டனர். துரியோதனன் சூதாட்டம் விளையாடும் இடத்துக்குத் திரும்பி வந்ததும் அங்கே அமர்ந்திருந்த அனைவரையும் பெருமையுடன் பார்த்தான். பின்னர், “ஆட்டம் தொடங்கட்டும்!” என்று தோரணையுடன் கட்டளையிட்டான்.

Thursday, December 22, 2016

நெறி உரைத்திடும் மேலவர் வாய்ச்சொல் நீசரானவர் கொள்ளுவதுண்டோ?

ஆனால் விதுரர் தான் ஓர் விஷயத்தில் சரியாகப் புரிந்து கொள்ளாததையும் அப்போது உணர்ந்தார். பொதுவாக விதுரர் நினைப்பது போல் தான் நடந்து வந்திருக்கிறது. தவறியதே இல்லை. ஆனால் இப்போது விதுரர் தாம் தவறாகப் புரிந்து கொண்டு விட்டோம் என்பதை உணர்ந்து கொண்டார்.  மிக மோசமாக நடக்கப் போகிறது என்பதையும் கண்டு கொண்டார். இந்த விளையாட்டின் விளைவுகள் யுதிஷ்டிரனையும், மற்ற நான்கு சகோதரர்களையும் சொத்து இழக்கச் செய்வது மட்டுமே என நினைத்திருந்தார் விதுரர். மிஞ்சிப் போனால் இந்திரப் பிரஸ்தத்தையும் பிடுங்குவார்கள் என்றே எண்ணி இருந்தார். ஆனால் துரியோதனாதியரின் நோக்கம் அதுவல்ல என்பதை இப்போது தான் தெளிவாகப் புரிந்து கொண்டார் விதுரர். பாண்டவர்கள் ஐவரையும் சொத்துக்களை மட்டுமில்லாமல் நாட்டையும் இழக்க வைத்து, பாண்டுவின் புத்திரர்கள் என்னும் அந்தஸ்திலிருந்தும் அவர்களை விலக வைத்துப் பின் க்ஷத்திரிய அரசகுலத்தவர் என்னும் தகுதியிலிருந்தும் அவர்களை நீக்கித் தங்கள்  அடிமைகளாகச் செய்ய வேண்டும் என்பதே துரியோதனாதியரின் நோக்கம் என்பதை விதுரர் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டார். அவர் மனம் கொதித்தது.

ஏற்கெனவே பீஷ்மரும் விதுரரும் ஹஸ்தினாபுரத்தின் அரசாட்சி நிலையாக இருப்பதற்குச் செய்து வந்து கொண்டிருந்த பல்வேறு முயற்சிகளையும் முறியடித்துத் தன் விருப்பம் போல் நடந்து கொண்டு வந்தான் துரியோதனன்.  பீஷ்மரின் அரசு அதிகாரத்தை நிலைக்க விடாமல் குலைக்கும்படி நடந்து வந்தான். மிக இளம் வயதிலிருந்தே துரியோதனனுக்குப் பாண்டவர்கள் பால் இருந்த அளவற்ற வெறுப்பின் மதிப்பீட்டைச் சரியாகப் புரிந்து கொள்ளத் தவறி விட்டார் விதுரர். அதை நினைத்து இப்போது தன்னைத் தானே நொந்து கொண்டார். விதுரர் இப்போது திருதராஷ்டிரன் பக்கம் திரும்பி அவன் காலைத் தொட்டார். பீஷ்மரிடமிருந்து மௌனமாக சம்மதத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவருக்கு அவரின் தலை அசைப்பே போதுமானதாக இருந்தது.  அதன் பின்னர் திருதராஷ்டிரனும் அனுமதி கொடுத்தான்.

அனுமதி கிட்டியதும் விதுரர் பேசினார்: “பிரபுவே,  நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். இந்த விளையாட்டை இத்துடன் நிறுத்துங்கள். நாம் இருவரும் ஒன்றாகத் தான் தொட்டிலில் வளர்ந்தோம். அப்போதிலிருந்து நாம் நண்பர்களாகவும் இருந்து வருகிறோம். இத்தனை வருடங்களாக நான் உண்மையாகவும் நேர்மையாகவும் உங்களுக்காக உழைத்து வருகிறேன். என்னால் இப்போது இந்த நேர்மையற்ற செயலைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்க இயலாது. ஆகவே நான் இப்போது உங்களை எச்சரிக்கிறேன். ஹஸ்தினாபுரம் மெல்ல மெல்ல அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது!” என்றார்.

துரியோதனனும் அவன் ஆதரவாளர்களும் விதுரரை கோபமாகவும் ஆத்திரமாகவும் பார்த்தார்கள். அவர்கள் தாங்கள் முதல் நாள் இரவு எடுத்திருந்த முடிவைச் செயல்படுத்தும் நேரம் விரைவில் வந்து விடும் என்றும் தங்கள் முடிவைச் செயல்படுத்திவிடலாம் என்றும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். விதுரர் ஆனால் தொடர்ந்து பேசினார்:”பிரபுவே, உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? துரியோதனனின் பிறப்பின் போது நமக்குத்  தெரிந்து எத்தனை எத்தனை கெட்ட சகுனங்கள் தோன்றின என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவோ? இதோ உங்கள் இந்த மகன் தான் இவ்வுலகம் முற்றிலும் அழியக் காரணகர்த்தாவாக இருக்கப் போகிறான். ஆகவே அவனைக் கொன்று தான் அந்தப் பேரழிவிலிருந்து நாம் இவ்வுலகைக் காக்க வேண்டும். அவனைக் கொல்வதில் தவறில்லை!” என்றார்.

விதுரரின் மென்மையும் இனிமையும் நிறைந்த குரல் ஓர் பயங்கரப் புயல் காற்றின் ஓசையைப் போல் அந்த சபாமண்டபத்தில் ஒலித்ததை அனைவரும் உணர்ந்தனர். விதுரர் மேலும் தொடர்ந்து பேசினார்: “மாட்சிமை பொருந்திய மன்னா! இந்த விளையாட்டு மேலும் தொடர்ந்தால், நமக்குச் சொல்லப்பட்ட தீர்க்க தரிசனங்கள் அனைத்தும் உண்மையாகிவிடும். உங்கள் மகனால் பாண்டவ சகோதரர்களிடமிருந்து கிட்டத்தட்ட கொள்ளையடிக்கப்பட்ட இந்தச் செல்வங்களும் அவர்களின் உடைமைகளும் நல்லதற்கல்ல. அந்த இறைவனுக்கே இது பொறுக்காது. இறைவனின் கோபத்துக்கு இவர்கள் ஆளாகப் போகின்றனர். உங்களுடைய இந்த முதுமையான வயதில் நீங்கள் உங்கள் குமாரர்கள் அனைவரும் அழியப் போவதை, அதுவும் உங்கள் எதிரே அழியப் போவதை உணரப் போகிறீர்கள். ஆம், ஐயா, உங்கள் அனைத்து மகன்களும் அழிந்து போகப் போகின்றனர்.”

“அரசே, உங்கள் மகன் துரியோதனன், பாண்டவ சகோதரர்களுடன் நேருக்கு நேர் நின்று போரிட தைரியமில்லாமல் இருக்கிறான். போர்க்களத்தில் அவர்களை எதிர்கொள்ள அவனுக்கு இஷ்டமில்லை. “இப்போது ஷகுனியைச் சுட்டிக்காட்டிய வண்ணம் விதுரர் மேலும் பேசினார்:” இதோ இந்த தந்திரக்கார ஷகுனி, காந்தார இளவரசன் துணையுடன் உங்கள் மகனும் அவன் ஆதரவாளர்களும் பாண்டவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் கொள்ளையடித்து விட்டனர். நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், பிரபுவே. போதும், இந்த விளையாட்டை இத்துடன் நிறுத்துங்கள். நிறுத்தச் சொல்லி ஆணையிடுங்கள். நீங்கள் அப்படிச் செய்யவில்லை எனில் அனைத்து க்ஷத்திரியர்களும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு செத்துப் போகப் போகின்றனர்.  தர்மம் அழியப் போகிறது. குரு வம்சத்தினரால் தர்மத்தைக் காக்க முடியவில்லை எனில், நீங்கள் கட்டிய மகத்தான சாம்ராஜ்யக் கோட்டை தகர்ந்து விடும். ஆசிரமங்கள் அனைத்தும் கல்லறைகளாகிவிடும். சுடுகாடாகி விடும். க்ஷத்திரியர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளுவார்கள். மிச்சம் மீதி இருப்பர்கள் இப்படிப்பட்ட கோரமான வலிமைக்கு முன் எதிர்கொள்ள முடியாமல் செய்வதறியாமல் தவிப்பார்கள்.”

ஆனால் திருதராஷ்டிரன் வாயே திறக்கவில்லை. ஒரு வார்த்தை கூட அவன் வாயிலிருந்து வெளிவரவில்லை. துரியோதனன் கோபத்தில் கொதித்தான். தன் புருவங்களை நெரித்த வண்ணம் இடையில் இருந்த வாளில் கை வைத்து அதை உருவிய வண்ணம் துஷ்சாசனன் துணைக்கு வர விதுரர் பக்கம் பாய்ந்தான். “சித்தப்பா,  எங்கள் சோற்றைத் தின்று கொண்டே எங்கள் எதிரிகளைப் புகழ்ந்து பேசுவதில் அதுவும் எங்கள் எதிரே பேசுவதில் நீங்கள் வல்லவர், நிபுணர்!” என்று கோபம் கொந்தளிக்கக் கூறினான். “சித்தப்பா, என் சிறு வயதிலிருந்தே நீங்கள் எனக்குத் தீங்கு தான் புரிந்து வந்திருக்கிறீர்கள். நீங்கள் ஓர் மிருகம். உங்களுக்கு உணவளித்த கைகளையே பாய்ந்து கடிக்கிறீர்கள். நாயை விடக் கேவலமாக நடந்து கொள்கிறீர்கள். இப்போது என் தந்தை என்னிடம் வைத்திருக்கும் பாசத்தையும் கொன்று என்னையும் அழிக்க நினைக்கிறீர்கள்!” என்று கத்தினான்.

விதுரரைப் பார்த்துச் சீறினான் துரியோதனன். அவன் கைகள் மட்டுமின்றி உடலே கோபத்தில் துடித்தது. “ஹூம், என்ன இருந்தாலும் ஓர் சேடியின் மகன் தானே, நீங்கள்! உங்களிடமிருந்து இதை விட அதிகமாக எதையும் எதிர்பார்க்க முடியாது!” என்று ஏளனமாகக் கூறினான்.  சற்று நேரம் நிறுத்திய துரியோதனன் மேலும் தொடர்ந்தான். “நீங்கள் இந்தப் பாண்டவ குமாரர்களுக்குச் சாதகமாக நடந்து கொண்டு பாரபட்சம் பார்க்கிறீர்கள். இனிமேலாவது அப்படி எல்லாம் நடந்து கொள்ளாதீர்கள்!”  “துரியோதனன் விதுரரைக் கொல்லப் போகிறானா?” இதுவே அங்குள்ள அனைவர் மனதிலும் எழுந்த கேள்வி!  துரியோதனன் மேலும் தொடர்ந்தான்.

இகழ்ச்சி நிரம்பிய குரலில் அவன் கூறியதாவது:” எங்களைப் பற்றிக் கவலைப்படாதே, வேலைக்காரியின் மகனே! உன்னுடைய அருமை அண்ணன் மகன்களுக்காகவென்று உன்னுடைய துக்கத்தைக் காப்பாற்றி வைத்துக் கொள்! உன்னுடைய வருத்தம் எல்லாம் அவர்களுக்கே போகட்டும். விரைவில் அவர்கள் அனைவரும் எனக்கு அடிமையாவார்கள்!” என்று உதடுகளை வக்கிரமாக நெளித்த வண்ணம் கூறினான். வெறுப்பும் இகழ்ச்சியும் கலந்த குரலில் சிரித்த வண்ணம் அவன் மேலும் தொடர்ந்து, “நான் என்னவாக இருந்தாலும் சரி. நான் என்ன செய்தாலும் சரி, அல்லது வருங்காலத்திலும் சரி, என்னை இந்த வாழ்க்கைப் பயணத்தில் தள்ளி விட்ட கடவுளே காரணம் ஆவார். இது கடவுளின் உத்திரவு!” இதைச் சொல்லியவண்ணம் வன்மம் பொங்க விதுரரைப் பார்த்த துரியோதனன் தன் உடைவாளை அதன் உறையிலிருந்து எடுத்து விதுரரை நோக்கி நீட்டியதைப் பார்த்தால் அவன் வழியில் விதுரர் குறுக்கிடுவார் என்பது தெரிந்தால் அவரைக் கொல்லவும் துரியோதனன் தயங்க மாட்டான் என்பதை எடுத்துக் காட்டியது.

Tuesday, December 20, 2016

பீடிழந்த ஷகுனி அங்கு பின்னுஞ்சொல்லுகின்றான்!

சபை முழுவதும் அமைதி நிலவியது. ஆனாலும் அங்கே குழுமியிருந்த மக்கள் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக்கொள்ளாமலேயே தங்களையும் அறியாமல் இப்போது நடக்கப் போவது விளையாட்டு அல்ல; ஓர் மறைமுகப் போர் என்பதை உணர்ந்திருந்தனர். இன்னும் சொல்லப் போனால் தேவாசுர யுத்தம் போல இதுவும் ஓர் போர், அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையில் நடைபெறப் போகும் போர் என்று உணர்ந்தார்கள். ஆட்டம் ஆரம்பித்தது. யுதிஷ்டிரன் முதலில் தங்கள் குடும்பத்து நகைகளையும் அதிசயமாகக் கிடைத்த ரத்தினங்களையும் பணயம் வைத்தான். உடனே துரியோதனனும் தன்னுடைய நகைகளை எல்லாம் பணயமாக வைத்தான். முதலில் யுதிஷ்டிரன் பாய்ச்சிக்காய்களைக் கையில் எடுத்தான். தன் உள்ளங்கைகளுக்குள் வைத்து உருட்டினான். கீழே விரித்திருந்த பலகையில் அந்தக் காய்களை உருட்டி விட்டான. பின்னர் அவற்றை ஷகுனி கைகளில் எடுத்துத் தன் கைகளில் உருட்டிப் பலகையில் உருட்டி விட்டான். அப்போது பீஷ்மர் ஷகுனியையே கவனித்துக் கொண்டிருந்ததால் அவன் காய்களை உள்ளங்கையில் வைத்து உருட்டுகையிலேயே தனக்கு வேண்டிய எண் விழுவதற்குத் தோதாகத் தன் சுண்டுவிரலைப் பயன்படுத்திக் காய்களை மாற்றி அமைப்பதைக் கவனித்து விட்டார்.  ஆனால் மற்றவர்களோ ஷகுனிக்கு என்ன எண் விழுந்தது என்பதை அறியும் ஆவலில் எம்பி எம்பிப் பார்த்தனர்.  திருதராஷ்டிரனுக்குப் பொறுமை இல்லை. அவன் சஞ்சயனிடம், “சஞ்சயா, என்ன நடக்கிறது?” என்று வினவினான்.

ஷகுனி பகடைக்காய்களை உற்றுப் பார்த்துவிட்டு, யுதிஷ்டிரனிடம், “மூத்தவரே, நாங்கள் தான் வென்றோம்!” என்றான் மகிழ்ச்சியுடன். துரியோதனனின் ஆதரவாளர்களான அரசர்களும், குரு வம்சத் தலைவர்களும் இதைக் கேட்டு நகைத்தனர். ஒரு சிலர் அமைதியை வேண்டி, ‘சாது, சாது’ என்று கோஷித்தனர். அனைவரும் பீஷ்மர் இருந்த பக்கம் பார்த்தனர். அவர் முகத்தைப் பார்த்ததும் துரியோதனன் ஆதரவாளர்களின் உற்சாகம் வடிய ஆரம்பித்தது. பீஷ்மர் முகம் உணர்ச்சிகள் அற்ற சலவைக்கல் சிற்பம் போல் காணப்பட்டது. ஷகுனியின் பேச்சைக் கேட்ட, யுதிஷ்டிரன் உடனே, “சரி, இப்போது எனக்குப் பரிசாக வந்த விலை உயர்ந்த நகைகள், தங்கக் கட்டிகள், பாளங்கள் ஆகியவற்றைப் பணயம் வைக்கிறேன்.” என்றான். அவனுடைய சொத்துக்களை இம்முறையில் பிரிய நேர்வது குறித்து அவன் மனம் வருந்தியது. எப்படியேனும் விளையாட்டில் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்துப் பொறுமை இழந்தான்.

தன் ஆட்டத்தை ஆடிய யுதிஷ்டிரனிடம் இருந்து மீண்டும் காய்களை வாங்கிய ஷகுனி தன் உள்ளங்கைகளில் வைத்து அவற்றை உருட்டி முன்னர் ஆடியது மாதிரியே தனக்குச் சாதகமான எண்களைக் கொண்டு வந்து, “மீண்டும் நாங்களே வென்றோம்!” என்று கூறிக் கொண்டு கிண்டலாகச் சிரித்தான்.  ஆட்டம் தொடர்ந்து ஆடப்பட்டது. அவை முழுவதும் ஓர் இறுக்கமான சூழ்நிலையில் தவித்தது. சற்றும் எதிர்பாராவண்ணம் ஆட்டத்தில் சூடு பிடித்தது. ஒவ்வொரு விளையாட்டின் போதும் யுதிஷ்டிரன் தன் சொத்துக்களை ஒவ்வொன்றாகப் பணயம் வைத்தான். துரியோதனனும் அதே போல் யுதிஷ்டிரனின் சொத்துக்களுக்கு ஈடான பணயத்தைத் தானும் வைப்பான். யுதிஷ்டிரன் விளையாடியதும் ஷகுனி விளையாடுவான். தன் உள்ளங்கைகளில் வைத்து உருட்டிய வண்ணம் பகடைக்காய்களைத் தன் சுண்டு விரலால் தேவைக்கேற்றபடி மாற்றிக் கொண்டு தந்திரமாக விளையாடினான் ஷகுனி. ஒவ்வொரு ஆட்டத்திலும் தான் ஜெயித்ததை ஓர் மந்திரம் போல மகிழ்ச்சியுடன் கூறிக் கொண்டு சந்தோஷம் அடைந்தான். துரியோதனனின் ஆதரவாளர்கள் தங்கள் தொடைகளைத் தட்டிக் கொண்டும் மகிழ்ச்சிக் கூக்குரல் இட்டுக் கொண்டும் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.

பீஷ்மர் யுதிஷ்டிரனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். யுதிஷ்டிரன் நடந்தவை எதுவும் தன்னைப் பாதிக்காதது போல் காட்டிக் கொண்டு சிரித்த முகத்துடன் தொடர்ந்து ஆடினான். சற்றும் தயக்கமின்றிப் பாய்ச்சிக்காய்களை உருட்டி வீசினான். ஒவ்வொரு விளையாட்டிலும் தன் சொத்துக்களைப் பணயம் வைத்த யுதிஷ்டிரன் பின்னர் தன் ஈடு இணையற்ற ரதப்படைகளின் ரதங்கள், குதிரைகள், யானைகள், தன் படை வீரர்கள், மற்றும் யுதிஷ்டிரனுக்கே சொந்தமான அடிமைகள், அவன் அரண்மனைக் கஜானா மற்றும் தானியக் களஞ்சியம் என ஒவ்வொன்றாய்ப் பணயம் வைத்து வரிசையாக எல்லாவற்றையும் இழந்தான். ஒவ்வொரு முறையும் ஷகுனி தன் அறிவிப்பை ஓர் மந்திரம் போல் கூறி வந்தான். “மூத்தவனே, நாங்கள் வென்றோம்!”

அங்கிருந்த மற்ற நடுநிலை வகிக்கும் அரசர்களில் பலருக்கும் இதைக் காணப் பொறுக்கவில்லை. ஏனெனில் ஷகுனி தந்திரத்தின் மூலமே ஒவ்வொரு ஆட்டத்திலும் ஜெயித்து வருகிறான் என்பதை அவர்களும் கண்டு கொண்டனர். ஆனாலும் இத்தனை இழந்தும் யுதிஷ்டிரனின் மலர்ந்த முகமும் உற்சாகமான போக்கும் விளையாட்டில் காட்டிய ஈடுபாடும் அவர்களை வியக்க வைத்தது.  ஒரு தேர்ந்த சூதாட்டக்காரனைப் போல் அவன் தொடர்ந்து அடுத்து, அடுத்து என விளையாடி வந்தான்.  ஆயிற்று. இனி ஏதும் இல்லை. தொடர்ந்து ஆடிய யுதிஷ்டிரன் அனைத்து சொத்துக்களையும் இழந்ததோடு அல்லாமல் தன் தம்பிகளின் சொத்துக்களையும் பணயம் வைத்து இழந்தான். அப்போது ஷகுனி அவனிடம் இகழ்ச்சியாக, “ நல்லது, மூத்தவனே, உன்னிடம் இனி பணயம் வைக்க ஏதும் இல்லை. எல்லாவற்றையும் இழந்து விட்டாய். ஆகவே இனி நீ இழந்தவற்றை மீட்க வேண்டுமானல் உனக்கே உனக்கு எனச் சொந்தமான ஒன்றைத் தான் பணயம் வைக்க வேண்டும். அப்படி உனக்கெனச் சொந்தமாக என்ன இருக்கிறது?” என்று கேட்டான். இதைக் கேட்ட விதுரர் மனம் கொதித்தார். மெல்ல மெல்ல ஷகுனி யுதிஷ்டிரனை அவன் சகோதரர்களை ஒவ்வொருவராகப் பணயம் வைக்கும்படி தூண்டி வருவதை விதுரர் புரிந்து கொண்டார்.

Sunday, December 18, 2016

மாயச் சூதினுக்கே ஐயன் மனமிணங்கி விட்டான்!

துரியோதனனும், ஷகுனியும் யுதிஷ்டிரன் இனி இந்த விளையாட்டு ஆடுவதிலிருந்து பின்வாங்க முடியாது என்பதை நன்கறிந்திருந்தனர்.  வசமாக யுதிஷ்டிரன் மாட்டிக் கொண்டான் என்பதும் புரிந்திருந்தது இருவருக்கும். அப்படி அவன் விளையாடாமல் ஒதுங்கினால் இந்த மாபெரும் சபையின் முன்னர் அவன் ஓர் கோழையாகவும் தொடை நடுங்கியாகவும் அறிவிக்கப்படுவான் க்ஷத்திரிய குலத்துக்கே ஓர் அவமானச் சின்னமாகவும் அறிவிக்கப்படுவான். ஆகவே யுதிஷ்டிரனால் இந்த சூதாட்டம் ஆடுவதிலிருந்து தப்ப இயலாது. 

ஷகுனி கேட்டான்:"யுதிஷ்டிரா, நீ என்னுடன் சூதாட்டம் ஆடும்போது ஏமாற்றப்பட்டு விடுவோம் என்று அஞ்சுகிறாயா? அப்படி உனக்கு அச்சமாக இருந்தால் சொல்லி விடு. நாம் விளையாட வேண்டாம்." என்றான் எகத்தாளமாக. "இல்லை, காந்தார இளவரசரே! இந்த ஆணையைப் பிறப்பித்தவர் குரு வம்சத்தின் தலைவர். அவர் ஆணையை நான் மதித்தே ஆகவேண்டும். ஆகவே நான் விளையாடப் போகிறேன்." என்றான் யுதிஷ்டிரன். அப்போது சங்குகளும், பேரிகைகளும் முழங்கின. கட்டியம் கூறுவோரின் தொனிகளில் இருந்து பிதாமஹர் பீஷ்மரும், அரசன் திருதராஷ்டிரனும் வருகிறார்கள் என்பது புரிந்தது. இரு மெய்க்காவல் படை வீரர்கள் கைகளில் தங்கத் தகட்டால் மூடப்பட்ட தண்டாயுதங்களை ஏந்தியபடி உள்ளே நுழைந்து நுழைவாயிலுக்கு இருபுறமும் நின்று கொண்டனர்.

இரு தலைவர்களும் உள்ளே நுழைந்ததும் அங்கே அமர்ந்திருந்த ஸ்ரோத்திரியர்கள் அனைவரும் எழுந்து கொண்டு மந்திர கோஷங்கள் செய்து அவர்களை ஆசீர்வதித்து, வாழ்த்துகள் சொல்லி வரவேற்க மற்றவர் மரியாதையுடன் தலை குனிந்து வரவேற்றனர். சஞ்சயன் திருதராஷ்டிரனைக் கைப்பிடித்து அவனுடைய ஆசனத்துக்கு அழைத்துச் சென்றான். அவர்களுக்குப் பின்னர் துரோணாசாரியார், அஸ்வத்தாமா மற்றும் கிருபர் ஆகியோரும் வந்தனர். அதன் பின்னர் குரு வம்சத்தின் மற்ற உயர் பதவிகளில் இருக்கும் தலைவர்கள் அணி வகுத்து வந்தனர்.  உள்ளே நுழைந்த பீஷ்மரின் கழுகுக்கண்கள் அங்கிருந்த அனைவரையும் நோட்டம் விட்டன. அவர் முகம் இறுக்கமாக இருந்தது. 

அந்த மாபெரும் அவையின் இத்தனை வருட பாரம்பரியத்திற்குப் பொருந்தாத வகையில் பெரும்பாலான குரு வம்சத்துத் தலைவர்கள் ஆயுதபாணியாக வந்திருப்பதை அவர் கண்டு கொண்டார். அவர் மட்டும் இந்த விளையாட்டின் போது தலையிட்டால் ஷகுனி அதை எதிர்கொள்ளத் தயாராகக் காத்திருந்தான். ஆனால் அது தான் அந்த இடையூறும் எதிர்கொள்ளலுமே குரு வம்சத்தின் முடிவாகவும் அமையலாம். மொத்த அவையும் ஓர் எதிர்பார்ப்பிலும் நடுக்கத்திலும் அடுத்து நடக்கப் போவதற்காகக்  காத்திருந்தது.

சகோதரர்கள் ஐவரும் பீஷ்மருக்கும், திருதராஷ்டிரனுக்கும் நமஸ்கரிக்க, துரியோதனாதியரும் அதைப் பின்பற்றினார்கள். கர்ணனும் ஷகுனியும் கூட அனைவருக்கும் நமஸ்கரித்தனர். யுதிஷ்டிரன் கீழே விழுந்து நமஸ்கரிக்கையில் பீஷ்மர் குனிந்து அவனைத் தூக்கினார். தன்னுடன் ஆரத் தழுவிக் கொண்டு அவனை உச்சி முகர்ந்தார். அங்கிருந்த அனைவருக்கும் இந்த அன்பும், பாசமும் கண்டு ஆச்சரியம் ஏற்பட்டது. யுதிஷ்டிரனிடம் பீஷ்மர் அளவற்ற பாசம் வைத்திருப்பதைக் கண்டு வியந்தனர். அவர்கள் அனைவருக்கும் இந்த சூதாட்டத்தில் என்ன நடந்தாலும் அதில் பீஷ்மர் தலையிடப் போவதில்லை என்று வாக்களித்திருப்பது குறித்துத் தெரிந்திருந்தது. ஆனால் அதற்கும் இப்போது யுதிஷ்டிரன் பால் பீஷ்மர் காட்டிய பாசத்துக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டனர்.

யுதிஷ்டிரனின் இந்த முடிவு ஓர் வீரதீர சாகசமானதாகவே பீஷ்மர் எண்ணினார். அதற்காக அவனைப் பாராட்டவும் செய்தார். உண்மைக்கும், நேர்மைக்கும், சமாதானத்திற்கும், தர்மத்தின் வழி நடப்பதற்காகவும் அவன் தன்னையும் தன் குடும்பத்தையும் பணயம் வைக்கிறான் என்பதை பீஷ்மர் நன்கறிந்திருந்தார். இந்தக் குரு வம்சத்தில் இவன் ஒருவனாவது தர்மத்தின் வழி நடப்பதில் உறுதியுடன் இருக்கிறான் என்பதைக் கண்டு பீஷ்மர் உள்ளூர மகிழ்ந்தார். எத்தனை தடைகள் வந்தாலும் என்ன பிரச்னைகள் வந்தாலும் தர்மத்தைக் காப்பதில் யுதிஷ்டிரனுக்கு உள்ள உறுதியைக் கண்டு ஆனந்தம் அடைந்தார்.  அனைவரும் தங்கள் ஆசனங்களில் அமர்ந்தனர். ஆசிகளைக் கூறும் மந்திர கோஷங்களைச் செய்தனர் அங்கிருந்த அந்தணர்கள் அனைவரும். வந்திருந்த தலைவர்கள் அனைவரும் அவரவருக்குரிய ஆசனங்களில் அமர்ந்தனர்.

விதுரரும், சஞ்சயனும் கூட அவரவர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டனர். ஒருவர் பீஷ்மரின் காலடிகளுக்கு அருகேயும், சஞ்சயன் திருதராஷ்டிரனின் காலடிகளுக்கு அருகேயும் அமர்ந்தனர். பின்னர் இருவரும் பீஷ்மரைப் பார்க்க அவர் அனுமதி அளிக்கத் தொடர்ந்து திருதராஷ்டிரனும் அனுமதி அளிக்க விதுரர் அறிவிப்புச் செய்தார்!

"பிதாமஹர் பீஷ்மரும், சக்கரவர்த்தி திருதராஷ்டிரனும் இட்ட கட்டளையின் பேரில் இப்போது ஆட்டம் ஆரம்பிக்கத் தொடங்கும்!"

Saturday, December 3, 2016

வல்லுறு சூதெனும் போர் தனில் வலிமைகள் பார்க்குதும் வருதி!

ஆசாரியர் தௌமியரும், ஆசாரியர் சோமதத்தரும் இருவருக்கும் மரபு ரீதியான முறையில் வரவேற்பு அளித்துத் தக்க மந்திர கோஷங்களால் பெருமைப் படுத்தினார்கள்.  யுதிஷ்டிரன் தன் சகோதரர்களுடனும், துரியோதனன் தன் குழுவினருடனும் நுழைவாயிலுக்கருகே பெரியோர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். துரியோதனாதியரும் மற்றக் கௌரவர்களும் தாங்கள் விரித்த பொறியில் பாண்டவர்கள் மாட்டிக் கொண்டதை எண்ணி இறுமாப்புடன் இருந்தனர். மிகவும் வெற்றிகரமாக அமைந்து விட்டது எனக்  குதூகலித்தனர். அதைக் கண்ட யுதிஷ்டிரனுக்குத் தனக்குள்ளாகச் சிரிப்பு வந்தது. அவர்கள் தன்னை மாட்டுவதற்கு விரித்த வலையே தனக்கு ஓர் சந்தர்ப்பமாகப் பயன்படப் போவதை அவர்கள் அறிய மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டான். தற்செயலாக அவன் துரியோதனன் அருகே நிற்க நேரிட்டது. உடனே அவன் மனம் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு துரியோதனன் மனதை வெல்ல வேண்டும். இந்த சூதாட்டமே தேவையில்லை என்றெல்லாம் எண்ணியது. அதன் மூலம் சமாதானம் பிறக்கட்டுமே! “சகோதரா! இந்தச் சூதாட்டத்தை நாம் ஆடுவது அவ்வளவு முக்கியமா?” என்று துரியோதனனிடம் கேட்டான். அவனை ஈர்க்கும் குரலில், “நாம் இந்தச் சூதாட்டம் இல்லாமலே சமாதானமாக இருக்கலாம்!” என்றும் சொன்னான்.

“இந்த ஆட்டத்தில் என்ன தப்பைக் கண்டாய்? இதை ஆடுவதில் என்ன தவறு?” என்று கேட்டான் துரியோதனன். அதற்கு யுதிஷ்டிரன், “சூழ்ச்சிகளால் நிறைந்த ஓர் சூதாட்டத்தை ஆடுவதை விடப் போர் புரிவது மிகவும் உத்தமமான ஒன்று! இந்தச் சூதாட்டத்தினால் நம் நட்புத் தான் சிதையப் போகிறது!” என்றான். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஷகுனி தன்னையும் அந்தப் பேச்சில் இணைத்துக் கொண்ட வண்ணம், “மூத்தவனே, ஏன் பயப்படுகிறாய்? சூதாட்டத்திலிருந்து தப்புவதற்கு ஏன் முயல்கிறாய்?” என்று கேட்டான் யுதிஷ்டிரனிடம். அவனைப் பார்த்துக் கருணையுடன் சிரித்தான் யுதிஷ்டிரன். “மாட்சிமை பொருந்திய காந்தார இளவரசர், ஷகுனி அவர்களே, வணக்கம். இந்தச் சூதாட்டத்தின் பாய்ச்சிக்காய்களை எடுத்து ஆடும் ஓர் மனிதன் எவ்வளவு விவேகமுள்ளவனாக இருந்தாலும் விரைவில் ஓர் முட்டாளாகவோ அல்லது தந்திரங்களும் சூழ்ச்சிகளும் நிறைந்தவனாகவோ ஆகி விடுகிறான் ஆகவே இந்த ஆட்டத்தை நாம் ஆடவே வேண்டாம்!!” என்றான்.

ஷகுனி ஒரு சீறலுடன் மற்ற அரசர்களையும் அரசகுடும்பத்தினரையும் நோக்கித் திரும்பினான். ஓர் தேர்ந்த வில்லாளியைப் போல் அவன் மற்றவர்களைப் பார்த்து, “ உங்களுக்கெல்லாம் இந்த யுதிஷ்டிரன் ஏன் சூதாட்டத்தை அதுவும் அரசர்கள் ஆடும் இந்த ஆட்டத்தை ஆட மறுக்கிறான் என்பது எளிதாகப் புரிந்திருக்கும். அவன் வாழ்க்கையில் முதல் முதலாக ராஜசூய யாகத்தை நடத்தி அதன் மூலம் ஏராளமான செல்வங்களைச் சம்பாதித்து விட்டான். அதை விட்டுப் பிரிய அவனுக்கு மனமில்லை!” என்றான். அங்கே பரிகாசமும் ஏளனமும் நிறைந்த சிரிப்புக் கிளம்பியது. அதன் பின்னர் ஷகுனி யுதிஷ்டிரன் பக்கம் திரும்பி, “மூத்தவனே! உன் செல்வங்களை நீயே வைத்துக் கொள். இந்தச் சவாலை ஏற்று ஆட்டத்தை ஆட நீ மறுத்தால் விளையாட வேண்டாம்! விட்டு விடலாம்!” என்று தூண்டும் குரலில் கூறினான்.

யுதிஷ்டிரனைப் பார்த்து அவமதிப்பும் அலட்சியமும் துலங்கும்படி சிரிக்க மற்றவர்களும் அதைப் பின்பற்றிச் சிரித்தார்கள். ஆனால் யுதிஷ்டிரன் ஷகுனி சொன்ன மனதைப் புண்படுத்தும் வார்த்தைகளின் தாக்கத்தை அலட்சியம் செய்துவிட்டுச் சாதாரணமான குரலில், “அப்படி எல்லாம் இல்லை மாட்சிமை பொருந்திய ஷகுனி அவர்களே! நீங்கள் தப்பாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். எனக்கு எதிலும் பயமோ அச்சமோ இல்லை. ஒன்றே ஒன்றைத் தவிர! அது தான் அதர்மப் பாதையில் செல்வது! அதர்மமாய் நடப்பது! அதோடு எனக்கு செல்வங்களைக் குறித்துக் கவலையும் இல்லை. இவை எல்லாம் சற்றும் முக்கியமில்லாத விஷயங்கள், நான் இவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை! மாட்சிமை பொருந்திய குரு வம்சத்து அரசர் எனக்கு ஆணை பிறப்பித்திருக்கிறார். இந்தச் சூதாட்டத்தை நான் ஆடியே ஆகவேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஆகவே நான் இந்த ஆட்டத்தை ஆடத் தான் போகிறேன். அல்லது நாங்கள் இருவருமாகச் சேர்ந்தே இந்த ஆட்டத்தை வேண்டாம் என்று சவாலைத் திரும்ப பெற்றாக வேண்டும்.” என்றான்.

துரியோதனன் சொன்னான்:”மூத்தவனே! நான் உன்னிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கலாமா? நான் ஓர் வித்தியாசமான ஆட்டக்காரன். ஆகவே எனக்குப் பதிலாக ஷகுனி மாமாதான் உன்னுடன் ஆடப் போகிறார்.” என்றான். யுதிஷ்டிரன் ஷகுனியையும் அவன் ஆட்டத்தையும் குறித்து நன்கு அறிவான். ஷகுனி ஓர் மந்திரவாதியைப் போல் ஆடி துரியோதனன் பக்கம் வெற்றியைத் தேடித் தருவான். இவன் எனக்கு எதிராக விளையாடினான் எனில் நான் வெல்வது எப்படி? சற்றும் இயலாத ஒன்று! ஹூம்! இந்திரப் பிரஸ்தம் என் கைகளை விட்டுப் போகவேண்டுமெனில் அது விரைவில் நடந்து முடிந்து விடும்!” என்று நினைத்துக் கொண்டான். ஆனாலும் அவன் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மேலே சொன்னான்:” துரியோதனா, சகோதரா! இன்று வரை இந்த ஆட்டம் உரியவரால் மட்டுமே விளையாடப் பட்டதாக அறிந்திருக்கிறேன். பிரதிநிதிகளால் மற்றவருக்காக ஆடப்பட்டதை அறியவில்லை. ஆகவே இந்த ஆட்டத்தை நீயே ஆட வேண்டும், பந்தயம் என்ன என்பதையும் பிணையத் தொகையையும் அறிவிக்க வேண்டும்!” என்று கேட்டுக் கொண்டான்.

ஷகுனி துரியோதனனின் உதவிக்கு வந்தான். “இதோ பார், யுதிஷ்டிரா! இந்த ஏற்பாட்டில் எந்தவிதமான தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.” என்று சொன்னவன் மீண்டும் ஓர் சீறலுடன், “மூத்தவனே, நீ தான் ஏதேதோ சாக்குப் போக்குகள் சொல்லித் தப்பிக்க நினைக்கிறாய்! இந்த ஆட்டத்தை ஆடாமல் தப்பித்து உன் செல்வங்களைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கிறாய்! எப்படியேனும் போகட்டும்! உனக்கு இந்த ஆட்டத்தை ஆடுவதில் விருப்பமில்லை எனில் வெளிப்படையாகச் சொல்லி விடு! ஏன் ஏதேதோ கூறி தப்பப் பார்க்கிறாய்?” என்று கேட்டான். பின்னர் ஷகுனி கேலியாகச் சிரித்தான். துரியோதனனும் துஷ்சாசனும் கூட அதைக் கண்டு அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டு யுதிஷ்டிரனை அவமதித்தனர்

Friday, December 2, 2016

தெய்வமே துணை!

தர்பார் மண்டபத்துக்குள் அடி எடுத்து வைத்தான் யுதிஷ்டிரன். அந்த தர்பார் மண்டபத்தில் அவன் யுவராஜாவாக இருந்தபோது நிகழ்ந்த சில சந்தோஷமான நிகழ்வுகள், சம்பவங்கள் அவன் மனக்கண்கள் முன்னே தோன்றின. முதன் முதலில் அவனும் அவன் சகோதரர்களும் இந்த தர்பார் மண்டபத்தினுள் நுழைந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தான். பல வருடங்கள் முன்னர் அவர்கள் சிறுவர்களாக இருந்தபோது அவன் தாய் குந்தியுடன் இங்கே வந்ததையும் அவனையும் அவன் சகோதரர்களையும் பாண்டுவின் புத்திரர்களாக இந்தக் குருவம்சத்தினர் அங்கீகரித்த அந்த நாளும் அவன் நினைவில் வந்தது. அந்த நாட்கள்! எவ்வளவு சந்தோஷமானவை! மறக்கவும் முடியாத நாட்கள் அவை! அதன் பின்னரே அவன் வாலிபப்பருவம் எய்தியதும் இதே தர்பார் மண்டபத்தில் தான் யுவராஜாவாகப் பட்டாபிஷேஹம் செய்விக்கப்பட்டான் அதை ஒட்டி இந்த ஹஸ்தினாபுரத்தின் அநேக நிகழ்ச்சிகளிலும், கொண்டாட்டங்களிலும் ஓர் யுவராஜாவாக அவன் பங்கேற்றிருக்கிறான். அதன் பின்னர் தான் அவன் இந்தக் குரு வம்சத்தினரின் அரசனாக அறிவிப்புச் செய்யப்பட்டான். பின்னர் துரியோதனனால் அவனும் அவன் சகோதரர்களும் இந்த தர்பார் மண்டபத்திலிருந்து விடைபெற்று வெளியேற்றப்பட்டார்கள்.

இவை எல்லாம் நடைபெற்ற சமயங்களில் எல்லாம் இங்கே கூட்டம் கூட்டமாகப் பொதுமக்களும் குரு வம்சத்துத் தலைவர்களும் அமர்ந்திருந்து அவனுக்குத் தக்க மரியாதைகள் செய்து தங்கள் அங்கீகாரத்தைத் தெரிவித்துக் கொண்டனர். இங்கே தான் அவன் ஆட்சி அதிகாரம் குறித்த நடவடிக்கைகள் குறித்தும் ராஜ்ய நிர்வாகம் குறித்தும் அறிந்து கொண்டான். இமயமலையிலிருந்து பெருகிப் பிரவாகம் எடுத்து ஓடும் கங்கையைப் போல் தர்மத்தின் பாதையில் அவன் செல்லவேண்டியதைக் குறித்தும் தர்மத்தைக் குறித்தும் இங்கே தான் அறிந்து கொண்டான். தர்மத்தின் ஊற்று இந்த தர்பார் மண்டபம் என்பது அவன் முடிவு! சத்தியத்தின் பேரொளி இங்கே பிரகாசித்து வருவதாகவும் எண்ணினான். அப்படிப் பட்ட தர்பார் மண்டபம் இன்று? சதியாலோசனை நடக்கும் இடமாகவும் இழிந்த செயல்களைச் செய்யும் இடமாகவும் சூழ்ச்சிகளின் பிறப்பிடமாகவும் மாறி விட்டது! இதன் ஒளி மங்கி விட்டது! தன் புனிதத்தை இந்த தர்பார் மண்டபம் இழந்து விட்டது.

இங்கே இனி தொடர்ந்து எரியப் போகும் சூழ்ச்சியாகிய அக்னியில் அவன் ஓர் பலியாடாக மாறித் தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்ளப் போகிறான். அது தான் கடவுளின் விருப்பம் போலும்! இதன் மூலம் அவன் தன்னை மட்டுமல்லாமல் தன் குடும்பத்தையே மனைவி, தாய், சகோதரர்கள் உள்பட பலி கொடுக்கப் போகிறான். ஆனால் உள்ளுக்குள் அவன் மனம் அவனையும் அவனுடன் கூடச் சேர்ந்து இந்த சூதாட்டம் என்னும் துர்பிரயோக யாகத்தில் பங்கெடுப்பதைப் பாராட்டிக் கொண்டிருந்தது. ஏனெனில் அவனும் அவன்  சகோதரர்களும் இதன் மூலம் அமைதியையும் சமாதானத்தையுமே விரும்புவதை வெளிப்படையாகச் சொல்ல முடியும்! அவர்களுக்குத் தேவையானதும் அதுவே! ஓர் மாபெரும் யுத்தம் ஏற்படுவதைத் தடுத்தாக வேண்டும். அதற்குரிய விலை அவனும் அவன் சகோதரர்கள் மற்றும் குடும்பமும் தான் என்றால் அவன் அவற்றை பலி கொடுக்கவும் தயங்கப் போவதில்லை.

அந்த மாபெரும் சபாமண்டபத்தின் நுழைவாயிலுக்கு எதிரே ஓர் பக்கத்தில் ஓர் மேடையின் மேல் ஐந்து ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. மேடையின் நடுவே போடப்பட்டிருந்த இரு சிங்காதனங்களும் ஒன்று பிதாமஹர் பீஷ்மருக்கும் இன்னொன்று மன்னன் திருதராஷ்டிரனுக்கும் ஆகும். இது கூட அவன் அரசனாகப் பிரகடனம் செய்யப்பட்டபோது செய்த ஏற்பாடு தான். அவனை விட உயர்வான ஸ்தானத்தில் திருதராஷ்டிரனையும் பிதாமஹரையும் வைத்திருந்தான் யுதிஷ்டிரன். அந்த வரிசையிலேயே ஆசனங்களையும் போடச் செய்வான். இப்போதும் அது தொடர்கிறது போலும்! அவர்களுக்கு அடுத்தபடியாகக் கொஞ்சம்கீழ் வரிசையில் போடப்பட்டிருந்த ஆசனங்கள் அனைத்தும் துரியோதனனுக்கும் அவன் குழுவினருக்குமானது ஆகும். துரியோதனனுக்குச் சமமாகப் போடப்பட்டிருந்த அந்த இன்னொரு ஆசனம் ஒருவேளை யுதிஷ்டிரனுக்காக இருக்கும். அவன் தாய் மற்ற சகோதரர்களும் அந்த ஐந்து ஆசனங்களில் அமரலாம். அல்லது திரௌபதி அமரலாம்.

இவர்களுக்கு அருகே கொஞ்சம் சின்ன ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. இருபக்கங்களிலும் காணப்பட்ட அவை ஒன்று துரோணருக்கும் இன்னொன்று கிருபருக்கும் ஆகும். எல்லா ஆசனங்களின் பின்னாலும் ஓர் சாமரம் வீசும் பெண் சிலையைப் போல் அசையாமல் நின்று கொண்டிருந்தாள். இவர்களுக்கெல்லாம் சற்றுத் தள்ளிப் பொன்னால் வேயப்பட்ட தகட்டைப் பொருத்தி மான் தோலால் மூடப்பட்டிருந்த ஆசனங்கள் கௌரவர்களின் ராஜகுருவான ஆசாரியர் சோமதத்தருக்கும் இன்னொன்று பாண்டவர்களின் ராஜகுருவான தௌமியருக்கும் ஆகும். அந்த மேடையின் வலது ஓரத்தில் மற்ற ஸ்ரோத்திரியர்கள் அமர்ந்து கொண்டு மத, சாஸ்திர ரீதியான சடங்குகளைச் செய்ய ஏதுவாகத் தயார் நிலையில் இருப்பார்கள். இவர்களை அடுத்துக் குரு வம்சத்தின் மற்றத் தலைவர்களும் அரசகுடியில் பிறந்தவர்களும் அமர்ந்திருப்பார்கள்.

எல்லாவற்றிலிருந்தும் சற்றுத் தள்ளி ஓர் சின்ன மேடை அந்த தர்பார்மண்டபத்தின் நடுவில் காணப்பட்டது. அந்த மேடையில் தந்தத்தால் ஆன சொக்கட்டான் விளையாடும் பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. பகடை விளையாட்டின் பாய்ச்சிக்காய்கள் அங்கே விரிக்கப்பட்டிருந்த பட்டு விரிப்பில் வீசி விரிக்கப்படும் அந்தக் காய்கள் அடங்கிய ஓர் வெள்ளிச் சொம்பும் அங்கே இருந்தது. ஏற்பாடுகள் அனைத்தையும் பார்த்த யுதிஷ்டிரனுக்குத் தன்னையும் அறியாமல் சிரிப்பு வந்தது. இந்தப் பாய்ச்சிக்காய்கள் தான் அவன் செய்யப் போகும் மாபெரும் தியாகத்துக்கு ஓர் அடையாளச் சின்னமாக விளங்கப் போகின்றன. இவற்றின் மூலம் தான் அவன் அமைதியையும் சமாதானத்தையும் பெறப் போகிறன். நடக்கப் போகிற நிகழ்ச்சியைக் குறித்த நினைவுகள் அவன் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியது. அவன் தங்களுடைய பரம்பரையையே அடகு வைத்துத் தன் சகோதரர்களைக் கொள்ளை அடிக்கப் போகிறான்.  தன்னுடன் அருகே வந்து கொண்டிருந்த  பீமனை ஓர் பார்வை பார்த்தான். அவனுடைய தைரியமான சகோதரன்; அவனுக்குப் பிரியமானவன். யுதிஷ்டிரனுக்கு ஓர் பிரச்னை என்றால் அடுத்த கணமே முன்னுக்கு நிற்பவன். இப்போதும் வந்துவிட்டான்.

ஆனால் பீமனின் முகம் செக்கச்செவேர் எனச் சிவந்து கண்கள் கோபத்தில் ரத்தம் போல் காணப்பட்டன. அடுத்து அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் ஆகிய மூவரும் தலை குனிந்த வண்ணமே வந்தனர். தரையிலிருந்து அவர்கள் கண்களை மேலெடுத்துப் பார்க்கவே இல்லை. அவனிடம் அவர்களுக்கு இருந்த விசுவாசத்தின் காரணத்தால் தங்கள் முடிவு, உள்ளுணர்வு எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு அவனைச் சரண் அடைந்து விட்டார்கள். உண்மையில் அவர்கள் மிகவும் மனவேதனையில் இருந்தனர். அவன் விரும்புவதெல்லாம் தன் சகோதரர்களின் மகிழ்ச்சியைத் தான்! ஆனால் இப்போதோ! ஓர் மாபெரும் புயலில் சூறாவளியில் அவர்களுடைய மகிழ்ச்சியை எல்லாம் அடித்துக் கொண்டு போகும்படி யுதிஷ்டிரனே செய்யப் போகிறான். துரதிர்ஷ்டத்தில் அவர்களை மூழ்கடிக்கப் போகிறான்.

தன் தாய் குந்தியையும், மனைவி பாஞ்சாலியையும் மகிழ்ச்சியுடனும் திருப்தியுடன் வைத்துக் கொள்வதே யுதிஷ்டிரனுக்குத் தலையாய கடமை! ஆனால்! அவனே அவர்களைத் துன்பத்திலும் துயரிலும் தாங்கொணா சோகத்திலும் ஆழ்த்திவிட்டான்.  ஆனாலும் இதனால் எல்லாம் அவனுக்கு சங்கடங்கள் ஏதும் இல்லை. எத்தனை எத்தனை ரிஷிகள்! முனிவர்கள்! உண்மையைக் கடைப்பிடிப்பதற்காகவும் கடைப்பிடித்ததற்காகவும் இறக்கும்படி நேரிட்டிருக்கிறது! ததீசி என்னும் புராண காலத்து முனிவர் ஒருவர் தன் முதுகெலும்பையே தேவர்களுக்காகத் தியாகம் செய்திருக்கிறார். அவர் அசுரர்களை வெல்ல வஜ்ராயுதம் தயாரிக்கத் தன் முதுகெலும்பைக் கொடுத்து உதவி இருக்கிறார். இதன் மூலம் தேவர்கள் அசுரர்களை வெல்ல உதவி இருக்கிறார். ஆகவே இந்த தவம் என்னும் நெருப்பில் வேகாமல் எதையும் சாதிக்க இயலாது! அவன் சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்ட வேண்டுமெனில் இந்தச் சின்னத் தியாகம் அவசியமானதே! இது அவன் நிலைநாட்டப் போகும் அமைதிக்கு முன்னர் ஓர் சின்ன விலையே ஆகும்.

அங்கே அமர்ந்திருந்த குருவம்சத்துத் தலைவர்கள் அனைவரும் யுதிஷ்டிரனைக் கண்டதுமே தங்கள் கைகளைக் கூப்பியவண்ணம் அவனை நமஸ்கரித்தார்கள். ஒரு சிலர் கீழே விழுந்தும் வணங்கினார்கள். அவர்களில் சிலர் முகங்களில் மகிழ்ச்சியே இல்லாததையும் யுதிஷ்டிரன் கவனித்தான். இன்னும் சிலர் துரியோதனனின் பக்கம் ஆதரவு தெரிவிப்பவர்கள் தங்கள் மகிழ்ச்சியை உள்ளூர வைத்துக் கொண்டு வெளிக்காட்டாமல் இருந்தார்கள். துரியோதனன் வெல்வதற்கு அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். துரியோதனன் இந்திரப் பிரஸ்தத்தை வென்றதும் அதன் செல்வங்களையும் மற்ற பொக்கிஷங்களையும் கொள்ளை அடித்து அனுபவிக்கத் துடித்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள் நோக்கமெல்லாம் துரியோதனன் வெல்ல வேண்டும் என்பதில் தான்.

அங்கிருந்த சூழ்நிலையே இறுக்கமாகக் காணப்பட்டது. எங்கும் அமைதி இல்லை என்பது போல் இருந்தது. அடுத்து என்ன நடக்குமோ என்ற கவலை சிலருக்கு இருந்தாலும் பலரும் அங்கே நடக்கப் போவது நல்லதில்லை என்பதால் காணப்பட்ட மனக்கலக்கத்துடன் இருந்தனர். துரியோதனன், துஷ்சாசனன், ஷகுனி, கர்ணன், அஸ்வத்தாமா ஆகியோர் முன்னே வந்து கொண்டிருந்தனர். சகோதரர்கள் ஐவரையும் பார்த்ததும் வரவேற்கும் பாவனையில் முகமன் கூறினார்கள். துரியோதனன் யுதிஷ்டிரனின் கால்களில் விழுந்து வணங்க அவனைத் தூக்கி நிறுத்தினான் யுதிஷ்டிரன்: “சகோதரா, உன் விருப்பத்திற்கேற்றவண்ணமே எல்லாம் நடைபெறக் கடவுள் அருள் புரியட்டும்!” என்ற வண்ணம் அவனைக் கட்டித் தழுவிக் கொண்டான்.

Thursday, December 1, 2016

பீஷ்மரின் திகைப்பு!

“யுத்தம் மூளும் என்னும் எண்ணமே என்னை நடுங்க வைக்கிறது, தாத்தா!” என்றான் யுதிஷ்டிரன். “தாத்தா, உங்களுக்குத் தெரியும்! நீங்கள் நன்கறிவீர்கள்! அது ஒரு சிங்கத்தைப் போல் ஆட்களை விழுங்கும் காட்டு மிருகங்களைப் போல் உயிருடன் மனிதர்களை உண்ணும் விலங்குகளைப் போல் வந்து கொண்டிருக்கிறது. பற்பல வீரதீரங்களைச் செய்யும் கதாநாயகர்களின் எலும்புகளால் இந்த வளமான பூமியை நிரப்பிவிடும். உடைந்த ரதங்களும், இறந்த குதிரைகளும் யானைகளுமே எங்கும் காணக்கிடைக்கும். இவற்றை எல்லாம் என்னால் பார்க்க முடியவில்லை. பெண்களும், குழந்தைகளும் ஆதரவற்று வீடின்றி இருக்க இடமின்றித் திரிவார்கள். பசுக்களும், மற்ற கால்நடைச்செல்வங்களும் அழிக்கப்படும்!”

“குழந்தாய்!, ஆசாரியர் சொல்வதற்கு முன்னரே, அவர் உதவி இன்றியே என்னால் பல்லாண்டுகளுக்கு முன்னரும் பின்னரும் போர் வருவதைக் கணிக்க முடிந்தது. குரு வம்சத்தினருக்கு தர்மம் என்றால் என்னவென்று தெரியவில்லை எனில், அரச நீதியைச் சரிவர அவர்களால் கடைப்பிடிக்க முடியவில்லை எனில் வேறு எவரால் இங்கே ஒழுங்கான ஆட்சியை, நேர்மையான ஆட்சியைத் தர முடியும்?” என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொல்லி நிறுத்தினார் பீஷ்மர். யுதிஷ்டிரன் முழு மனதோடு மனம் நிறைய போர் குறித்த உண்மையான வருத்தத்தோடு தான் இவற்றைச் சொல்கிறான் என்பதைக் கண்டு கொண்டார் பீஷ்மர். இதோ! ஓர் நேர்மையான ஆட்சியாளன்! தர்மத்தின் பாதையைத் தவற விடாதவன்! நேர்மைக்கும்,, நீதிக்கும் தர்மத்தின் வழியில் செல்வதற்கும் என்றே பிறந்தவன்!

“தாத்தா, தாத்தா! என்னை மன்னியுங்கள்! இந்த நேர்மை, நீதி இவற்றை எல்லாம் கடைப்பிடிப்பது என்பது ஓர் தவம் செய்வது போல் ஆகும். யக்ஞம் செய்வது போல் ஆகும். இதற்காக வாழ்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்களைத் தாங்களே இந்த நேர்மை, நீதி என்னும் புனிதமான அக்னியில் ஆஹுதியாக இடத் தயார் நிலையில் இருக்க வேண்டும். பல இரவுகள் தூக்கமில்லாமல் கழித்த பின்னர் தான் எனக்குப் புரிந்தது தாத்தா! நான் எப்படியேனும் ஆசாரியரின் தீர்க்க தரிசனத்தைப் பொய்யாக்க வேண்டும். அதை நடக்க விடாமல் முறியடிக்க வேண்டும்! அதற்காக என் உயிரையே கொடுக்க வேண்டி இருந்தாலும் சரி! அவ்வளவு ஏன்? அதற்காக என் மனைவி திரௌபதி, என் அருமைச் சகோதரர்கள், என் தாய், எங்கள் குழந்தைகள் ஆகிய அனைவரின் உயிரையும் விலையாகக் கொடுக்க நேர்ந்தாலும் கொடுத்துவிடத் தயார்!”

“குழந்தாய், உன்னால் போரைச் சகிக்க முடியாது எனில் பின்னர் இங்கே ஏன் வந்திருக்கிறாய்? வருவதற்கு மறுத்திருக்கலாமே!”

“தாத்தா, உங்களுக்குத் தெரியாதா? நான் இங்கே வருவதற்கு மறுத்தால் துரியோதனனின் சவாலை ஏற்க மறுத்தால், பின்னர் அதற்காகவே துரியோதனன் போர் தொடுப்பான்!”

“ஆம், அதுவும் உண்மைதான். அதுவும் எனக்குத் தெரியும்!” என்றார் பீஷ்மர். “அவன் அவ்வளவு எளிதில் திருப்தி அடைய மாட்டான் குழந்தாய்! உன்னிடமிருந்து அனைத்தையும் பிடுங்கிக் கொண்டால் கூட அவன் மனம் திருப்தி அடையுமா தெரியவில்லை! ஆனால் அவன் அவ்வாறு உன்னிடமிருந்து எல்லாவற்றையும் பிடுங்கி விட்டான் எனில்? என்ன செய்யப் போகிறாய்? அதை எவ்வாறு தடுப்பாய்?”

யுதிஷ்டிரன் பணிவுடனும், விநயத்துடனும் தலையைக் குனிந்து கொண்டான். “தாத்தா, அது இறைவன் விருப்பம். இறைவன் விருப்பம் இந்திரப் பிரஸ்தத்தை நாங்கள் ஆளக் கூடாது, துரியோதனன் தான் ஆளவேண்டும் என்றிருந்தால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? நாங்கள் அதை எப்படி எதிர்ப்போம்? துரியோதனன் என்னிடமிருந்து பிடுங்கிக் கொள்ளும்படி விட மாட்டேன். நானே கொடுத்துவிடுவேன். ஒருவேளை அதன் பிறகாவது அவன் மனம் அமைதி அடையலாம். எங்களிடம் அவன் கொண்டிருக்கும் வஞ்சம் மறையலாம். அவனுடைய விஷமத் தன்மை குறையலாம்!”

“என்ன! இந்திரப் பிரஸ்தத்தைக் கொடுத்துவிடுவாயா?” பீஷ்மர் குரலில் ஆச்சரியம் மிகுந்தது.

“ஆம், தாத்தா, நான் அதற்கும் தயார்!”

“ஆஹா, மகனே, உன்னுடைய இந்த விசித்திரமான முடிவுக்கு உன் தாய், சகோதரர்கள் மற்றும் உன் மனைவி பாஞ்சால நாட்டு இளவரசி ஆகியோர் என்ன சொன்னார்கள்? அல்லது சொல்லப் போகிறார்கள்?”

“தாத்தா, என்னுடைய இந்த முடிவு அவர்களுக்கு இன்னமும் தெரியாது! நான் சொல்லவில்லை. சித்தப்பா விதுரர் இந்தச் சவாலை ஒரு அழைப்பாக எங்களிடம் வந்து சொல்லியபோது, நான் என் சகோதரர்களிடம் அவர்கள் எனக்குக் கட்டுப்பட்டிருப்பதாகக் கூறி இருந்த உறுதிமொழியிலிருந்து அவர்களை விடுவித்து விட்டேன். என்னை என்னுடைய சொந்த முடிவின் படி நடப்பதற்கு அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர்கள் தான் கேட்கவில்லை; மீண்டும் அவர்கள் அனைவரும் உறுதிமொழி கூறினார்கள்; எனக்கு ஆதரவாகவே செயல்படப் போவதாகச் சொல்லிவிட்டார்கள். இந்த விளையாட்டின் மூலம்……. இல்லை……இல்லை…… சூதாட்டத்தின் மூலம் என்ன நடந்தாலும், நான் எப்படி நடந்து கொண்டாலும், என்னைப் பிரிவதில்லை என்றும் சபதம் செய்து விட்டார்கள்!” என்றான் யுதிஷ்டிரன்.

“குழந்தாய்! உன் கழுத்தில் கத்தியை வைக்க ஏதுவாக நீ அவர்களிடம் உன் கழுத்தைக் காட்டிவிட்டாய்! நீயே விரும்பி ஏற்றுக் கொள்கிறாய்! அது உனக்குப் புரிகிறதா இல்லையா?”

“ஆம், தாத்தா, அதனால் போர் நின்றால் சரி! யுத்தமே வராமல் இருந்தால் சரி!” என்றான் யுதிஷ்டிரன்.

பீஷ்மர் மேலும் கேட்டார்;” குழந்தாய், உன்னால் அதைத் தடுக்க முடியும் என்றா நினைக்கிறாய்? முடியாது, அப்பனே, முடியாது!” என்றவர் சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார். பின்னர் தொடர்ந்து விதுரரிடம் திரும்பி, “விதுரா, நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டார்.

“பிரபுவே, சகோதரர்கள் ஐவரிடமும் நான் ஹஸ்தினாபுரம் வரவேண்டாம் என்று சொல்லி விட்டேன். அழைப்பை ஏற்க வேண்டாம் என்றே கூறினான். ஆனால் யுதிஷ்டிரன் ஓர் வீரனைப் போல் இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டுவிட்டான். அவன் மனோபலம் என்னை வியக்க வைத்தது. ஆகவே அவனை இந்த விஷயத்தில் திசை திருப்ப வேண்டாம் என்று இருந்துவிட்டேன். அவன் சமாதானத்திற்காக எரியும் நெருப்பில் குதிக்க நினைக்கிறான். அதற்குத் தயாராக வந்துவிட்டான். அவன் தோல்வியைக் கூட அடையலாம். ஆனால் அவன் செய்யப் போகும் இந்த முயற்சி தகுதியானதே! நேர்மையான ஒன்றே!” என்றார் விதுரர்.

“தாத்தா, என்னை மன்னியுங்கள்!” என்று மீண்டும் சொன்னான் யுதிஷ்டிரன். கைகளைக் கூப்பிய வண்ணம், “என் தந்தையை விட உங்களைத் தான் அதிகம் அறிவேன். உங்களை மிகவும் மதித்துப் போற்றுகிறேன். இந்த பூவுலகில் நீங்கள் வாழும் கடவுள் என உங்களை வணங்கி வருகிறேன். ஆகவே உங்களிடம் வந்தேன் தாத்தா! நாம் அனைவருமே தினம் தினம் சாந்தி, சாந்தி, சாந்தி எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் பாருங்கள், யுத்தம் நடந்து அதில் சாவதற்குத் தயாராக இருப்பவர்களால் அமைதிக்கும் சமாதானத்துக்குமாக வேண்டி உயிர்விடத் தயாராக இருக்க முடிவதில்லை. நான் அமைதிக்கும் சமாதானத்துக்குமாக என் உயிரைக் கூடத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன் தாத்தா! என்னை மக்கள் அனைவரும் தர்மத்தின் ராஜா என்றும் தர்ம ராஜா என்றும் அழைக்கிறார்கள் அல்லவா? அது உண்மையிலேயே இருக்கட்டும் தாத்தா! வெறும் பெயர் மட்டும் எனக்கு வேண்டாம். உண்மையிலேயே தர்மத்தின் பாதுகாவலனாக தர்ம ராஜாவாக அதை ரக்ஷிக்கும் அரசனாக இருக்க விரும்புகிறேன்.”

பின்னர் சற்று நேரம் மௌனத்தில் கழிந்தது. யுதிஷ்டிரன் தொடர்ந்தான். “ சரி தாத்தா, உங்கள் பொன்னான நேரத்தை நான் ஏற்கெனவே வீணாக்கி விட்டேன். தயவு செய்து எனக்கு இந்த ஓர் உதவியைச் செய்யுங்கள். சூதாட்டத்தின் போது என்ன நடந்தாலும் சரி, அமைதியாக இருங்கள். நீங்கள் தலையிடவே வேண்டாம். ஆட்டம் தந்திரமாகவும் மோசடியாகவும் நடந்தாலும் சரி!”

“இது ஒரு மோசமான கேலிக்குரிய சூழ்நிலை. நம் அனைவரின் கௌரவமே பாழடையப் போகிறது. யுதிஷ்டிரா, நீயோ அல்லது துரியோதனனோ எல்லாவற்றிலும் ஒத்துப் போவதில்லை! இன்று வரை அப்படித் தான்! ஆனால் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஒத்துப் போயிருக்கிறீர்கள்! அது தான் நான் சூதாட்டத்தில் தலையிடக் கூடாது என்பது! இந்த விஷயத்தில் இருவரும் ஒரே மனதுடன் இருக்கிறீர்கள். ஒரு பக்கம் சூழ்ச்சி, நயவஞ்சகம், இன்னொரு பக்கம் நேர்மை, நீதி! போகட்டும்! நல்லது யுதிஷ்டிரா, நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். மிக அதிகமாக நேசிக்கிறேன். நீ தர்மத்தின் பாதுகாவலன் மட்டுமல்ல, தர்மத்தின் அடையாளச் சின்னம், வாழும் தர்ம ராஜா! நீ கடைசிவரை அப்படித் தான் இருப்பாய்! மாற மாட்டாய்! உன்னால் மாற முடியாது. என்றும் எப்போதும் அமைதிக்கும் சமாதானத்துக்குமாக வாழ்வாய்! சமாதானத்திற்காகவே யுத்தம் செய்வாய்! போகட்டும்! இந்தச் சூதாட்டத்தில் அது சூழ்ச்சியானது என்பது முன் கூட்டியே தெரிந்திருந்தும் நான் தலையிடப் போவதில்லை! என்ன நடந்தாலும்! சரிதானே!” என்றார் பீஷ்மர்.  அவர்கள் இருவரும் அறையை விட்டு வெளியேறியதும் பீஷ்மர் தனக்குள்ளே, “ஓஓ, கடவுளே, கடவுளே, இன்னும் எத்தனை நாட்கள் நான் இந்தக் குரு வம்சத்தினரின் பாரத்தைத் தாங்கியாக வேண்டுமோ, தெரியவில்லையே!” என்றார்.

Tuesday, November 29, 2016

பின் வருந்துயர்க்கே சிந்தனை உழல்வரோ!

பீஷ்மர் தன் ஊஞ்சல் படுக்கையில் படுத்துக் கொண்டு அப்படியும் இப்படியுமாகப் புரண்டு கொண்டிருந்தார்.. உள்ளூரத் தவித்துக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம். அவனுக்கு அப்போதைய சூழ்நிலை நன்றாகவே புரிந்திருந்தது. குரு வம்சத்தினரின் முக்கியஸ்தர்களில் பலரும் தலைவர்கள் பலரும் யுதிஷ்டிரனோடு இருக்கவே விரும்பி இந்திரப் பிரஸ்தம் வந்து விட்டனர். அங்கே தங்கள் வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக் கொண்டும் விட்டனர். இங்கே இருந்தவர்கள் அனைவரும் துரியோதனனுக்கு ஏதோ ஒரு வகையில் கட்டுப்பட்டவர்கள்; அவனிடம் விசுவாசம் காட்டுபவர்கள்; அவன் ஆணையை மீறாதவர்கள். ஹஸ்தினாபுரத்திலேயே தங்கள் வாழ்க்கையைக் கழிக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பதால் துரியோதனனுக்குக் கட்டுப்பட்டு நடப்பது தவிர வேறு வழி இல்லை அவர்களுக்கு. துரியோதனனின் நண்பர்கள் அனைவரும் பீமன் மட்டும் சூதாட்டத்தின் நடுவில் தலையிட்டான் ஆனால் அவனை எதிர்க்கவும், அவனிடமும் சவால் விடவும் அறை கூவல் விடுக்கவும் தயங்கவே மாட்டார்கள். அவர்கள் அதைத் தான் முடிவும் செய்திருக்கிறார்கள். அதை பீஷ்மர் நன்கறிவார். அவரையும் அறியாமல் ஓர் புன்னகை பிறந்தது. “ம்ம்ம்ம், என்னைச் சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல! என்ன செய்யப் போகிறார்கள், பார்க்கலாம்!” என்று தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார்.

அவர் அப்போது தான் படுக்கையில் படுத்து ஓய்வெடுக்கத் தொடங்கினார். அப்போது பார்த்து விதுரர் உள்ளே வரலாமா என்று அனுமதி கேட்டுக் கொண்டு நுழைந்து விட்டார். விதுரரை அந்த நேரத்தில் அங்கே கண்ட பீஷ்மர் ஆச்சரியம் அடைந்தார். விதுரரே நேரில் வர வேண்டுமானால் விஷயம் மிகவும் முக்கியம். இந்த நேரத்தில் விதுரர் வரக் காரணம் இருந்தால் ஒழிய அவர் வர மாட்டாரே! பீஷ்மர் தனக்குள்ளே நினைத்துக் கொண்டார். “உள்ளே வா! விதுரா!” என்று அவரை உள்ளே அழைத்தார். விதுரர் தனியாக வரவில்லை. அவருடன் யாரோ ஓர் மனிதன் தன் முகத்தைத் தன் மேல் துண்டால் மறைத்துக் கொண்டு வந்திருந்தான். “யார் இவன்?” என்று பீஷ்மர் கேட்டார். விதுரருடன் வந்தவன் தன்னுடைய முகத்தை மூடியிருந்த துணியை எடுத்தான். பின்னர் கீழே குனிந்து பிதாமஹரை நமஸ்கரித்தான்.

“யுதிஷ்டிரா, குழந்தாய்! நீயா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் பீஷ்மர். யுதிஷ்டிரன் தன் கைகளைக் கூப்பிய வண்ணம் எழுந்து நின்றான். “நீ, இந்த நேரத்தில் இங்கே எதற்கு வந்தாய்? என்ன இது விதுரா! என்ன விஷயம்?” என்று விதுரரிடமும் கேட்டார் பீஷ்மர். “மிக மிக முக்கியமானதொரு விஷயம், பிதாமஹரே! “ என்றார் விதுரர். யுதிஷ்டிரனிடம் திரும்பினார் விதுரர். “யுதிஷ்டிரா, நீ இப்போது தாத்தா அவர்களிடம் என்ன சொல்ல வேண்டுமென்று நினைக்கிறாயோ அதைச் சொல்லலாம்.” என்று கூறினார். “நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள், உதவி கேட்கப் போகிறேன்.” என்றான் யுதிஷ்டிரன். “அது இப்போது ஆடப் போகும் சூதாட்டத்துடன் சம்பந்தப்பட்டது.” என்றும் கூறினான்.

“குழந்தாய்! நீ ஏன் இந்தச் சவாலுக்கு ஒத்துக் கொண்டாய்? முட்டாளா நீ?” என்று கோபத்துடன் கேட்டார் பீஷ்மர். பின்னர் அதே கடுமையான குரலில், “ஹஸ்தினாபுரத்துக்கே வரமாட்டோம் என்று மறுப்பதற்கென்ன? நீ மட்டும் வருவதற்கு மறுத்திருந்தால், வராமல் இருந்திருந்தால், துரியோதனன் அதனால் எல்லாம் உங்களுடன் போர் தொடுக்க ஆயத்தம் ஆகி இருக்கப் போவதில்லை. அவனுக்கு அவ்வளவு தைரியம் எல்லாம் இல்லை. அப்படியே அவன் போரை அறிவித்திருந்தாலும், அதில் அவன் வெல்லப்போவதும் இல்லை!” என்றார் பீஷ்மர்.

“தாத்தா, நான் பேசலாமா?” யுதிஷ்டிரன் கேட்டான்.

“சொல், குழந்தாய், சொல். உன் மனதில் உள்ளதைச் சொல்! ஆனால் உன்னுடைய பலஹீனத்தினால் நீ நம் அனைவரையும் ஓர் பெரிய ஆபத்தில் மாட்டி விட்டாய்!” என்றார் பீஷ்மர். யுதிஷ்டிரன் கூப்பிய கரங்களுடன், “தாத்தா, நான் ஓர் முட்டாளாக இருக்கலாம். ஆனால் இப்போது நாங்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறோம். உங்களால் தான் எங்களைக் காப்பாற்ற முடியும். அதனால் தான் உங்கள் உதவியை வேண்டி இங்கே இந்த நேரத்தில் வந்திருக்கிறேன், தாத்தா!” என்றான் யுதிஷ்டிரன்.

“என்ன வேண்டும், உனக்கு?” பீஷ்மர் கேட்டார்.

“என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவெனில் சூதாட்டத்தின் போது நடுவில் என்ன நடந்தாலும் மதிப்புக்குரிய தாத்தா அவர்கள் குறுக்கிட வேண்டாம் என்பதே ஆகும்! அந்த ஆட்டம் மிக மோசமாக விதிமுறைகளை மீறி விளையாடப் பட்டாலும் நீங்கள் அதைக் குறித்து எதுவும் சொல்ல வேண்டாம்!” என்றான் யுதிஷ்டிரன்.

“என்ன?” தன் படுக்கையில் எழுந்து அமர்ந்து விட்டார் பீஷ்மர். தன் கண்களைத் தேய்த்துவிட்டுக் கொண்டு தான் காண்பது கனவல்லவே என உறுதி செய்து கொண்டார். பின்னர் வறண்ட சிரிப்புடன், “ நான் விழித்திருக்கிறேனா? தூங்குகிறேனா? தூக்கத்தில் கனவுகள் காண்கிறேனா?” என்று கேட்டுக் கொண்டார். “இல்லை தாத்தா, இல்லை! தாங்கள் தூங்கவெல்லாம் இல்லை! நினைவில் தான் இருக்கிறீர்கள். தூங்கவும் இல்லை. ஷகுனி எவ்வளவு மோசமாகச் சூழ்ச்சிகள் எல்லாம் செய்து இந்த விளையாட்டை ஆடினாலும் நீங்கள் நடுவே குறுக்கிட வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்ளவே நான் இங்கே வந்தேன்.” என்று மீண்டும் சொன்னான் யுதிஷ்டிரன். அதைக் கேட்ட பீஷ்மர் கண்கள் வியப்பில் விரிந்தன. விரிந்த கண்களுடன் அவர், “நீ ஏன் என் தலையீடு இருக்கக் கூடாது என்று விரும்புகிறாய்? என்ன காரணம்?” என்று கேட்டார்.

யுதிஷ்டிரன் சற்று நேரம் மௌனம் காத்தான். பின்னர் மெல்லிய குரலில், “மதிப்புக்குரிய தாத்தா அவர்களே! இந்திரப் பிரஸ்தத்தை விட்டு நாங்கள் கிளம்புவதற்குச் சில நாட்கள் முன்னர் ஆசாரியர் வேத வியாசர் ஓர் தீர்க்க தரிசனத்தைக் கண்டறிந்து என்னிடம் சொன்னார். அதன்படி ஓர் மாபெரும் யுத்தம் நடக்கப் போகிறது என்றும் அந்த யுத்தத்தில் க்ஷத்திரியர்கள் பலரும் உயிரிழப்பார்கள் என்றும் அந்த யுத்தத்தின் மையக்காரணமாக நான் இருப்பேன் என்றும் சொன்னார்.” என்றான் யுதிஷ்டிரன். குரு வம்சத்தின் இரு பெரிய கிளைகளான நீங்கள் இருவரும் ஆளுக்கொரு பக்கம் இன்னொருவரை அழிக்க முனைந்தால் அது மாபெரும் யுத்தத்தில் தான் கொண்டு விடும்!” என்றார் பீஷ்மர்.