Saturday, December 24, 2016

ஒளி மின்னும் அமுதமும் போன்றவள்! இவர் மேவிடு தேவி!

யுதிஷ்டிரன் மனதில் நம்பிக்கை தளர்ந்து விட்டது. அவனால் இப்போது எதுவும் செய்ய இயலாது. அவனால் இயன்றதெல்லாம் தங்களுடைய சகோதர ஒற்றுமையைப் பாதுகாத்துக் கொள்வது ஒன்று மட்டுமே! அதில் அவனுக்கு சந்தேகமே இல்லை.  அவர்கள் நாடிழந்து, வீடிழந்து பிச்சைக்காரர்களாக ஆனாலும் பாதகமில்லை. ஐந்து சகோதரர்களும், அவர்கள் மனைவியுமான திரௌபதியும் பிரிக்க முடியாதவர்கள்.  தன் கைகளை ஆதுரத்துடன் நகுலனின் தோள்களில் வைத்தான் யுதிஷ்டிரன். அவன் அன்பு முழுவதும் அந்தக் கைகள் வழி பாய்ந்தது. ஆனால் பீமனின் கண்களோ கோபத்திலும் ஆக்ரோஷத்திலும் சிவந்து எரிந்து கொண்டிருந்தன.  என்ன நடக்கப் போகிறது? சகோதரர்கள் ஐவரையும் விலைக்கு வாங்கி அடிமைகளாகவா விற்கப் போகிறான் இந்த துரியோதனன்? அவனுக்கு யுதிஷ்டிரனின் கைகளை நகுலனின் தோள்களிலிருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்று தோன்றியது. வலுக்கட்டாயமாக அகற்ற விரும்பினான்.

அப்போது அர்ஜுனன் அவனிடம் மெல்லிய குரலில், “சகோதரா, நம்முடைய வாழ்க்கையின் இந்தத் தருணங்கள் மிக முக்கியமானவை. ஆகவே உன்னுடைய உணர்வுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நலம்!” என்று எச்சரிக்கை செய்தான். பீமன் தன் பற்களைக் கோபத்துடன் கடித்தான். வேறு வழியின்றி அர்ஜுனனின் சொற்களுக்குக் கட்டுப்பட்டான். யுதிஷ்டிரன் அதைக் கவனித்தான். மெல்லிய குரலில் பீமனிடம், “வ்ருகோதர அரசனே! பொறுமை, பொறுமை!  நான் என்ன செய்யப் போகிறேனோ அது தான் நமக்கு நல்லது. நம்மால் முடிந்த வரை நன்மை செய்ததாகும். “ என்று சொல்லிவிட்டு ஷகுனி பக்கம் திரும்பினான். “நான் இதோ இப்போது பணயமாக இந்த இளம் வீரனும் அழகும் வீரமும் நிறைந்த புத்திசாலியும், குதிரைகளைப் பழக்குவதில் தேர்ந்தவனும் ஆன என் சகோதரன் நகுலனைப் பணயம் வைக்கிறேன்.” என்றான்.ஷகுனி உடனே பாய்ச்சிக்காய்களை உருட்டி முன் போல் சுண்டு விரலால் தனக்கு வேண்டிய எண்களை அமைத்த வண்ணம் வீசினான். எதிர்பார்த்தது போல் அவன் வென்றான். “நாங்கள் வென்றோம்!” என்று மகிழ்ச்சிக் கூக்குரல் இட்டான்.

யுதிஷ்டிரனுக்கு இந்த ஆட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்னும் வேகம் பிறந்தது. அவனுக்கு எந்த நேரமும் பிதாமஹர் இந்த ஆட்டத்தில் நடுவே புகுந்து தடுப்பாரோ என்னும் எண்ணம் இருந்தது. ஆகவே அதிகம் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளாமல் விரைந்து ஆடி முடிக்கவேண்டும் என்று எண்ணினான்.  ஆகவே அடுத்ததாக, “என் அருமை இளைய சகோதரன், விவேகம் நிறைந்தவன், புத்திசாலி, சஹாதேவன், தீர்க்கதரிசனம் மிகுந்தவன், அடுத்த பணயமாக வைக்கிறேன்.” என்றான் யுதிஷ்டிரன்.  மேலும் தொடர்ந்து, “இவனைப் போன்ற அறிவாளியும் புத்திசாலியும் இவ்வுலகில் காணக் கிடைக்க மாட்டார்கள்.” என்றும் சொன்னான். சொல்லிவிட்டு யுதிஷ்டிரன் தன் கைகளுக்கு வந்த பாய்ச்சிக்காய்களை உருட்டி விட்டான். ஷகுனி உடனே அதை எடுத்து துரியோதனன் சார்பில் அடுத்து விளையாடினான். மீண்டும் ஷகுனிக்கே ஜெயம்! “நாங்களே இம்முறையும் வென்றோம்!” என்று கூக்குரல் இட்டான்.

நகுலன் சஹாதேவன் பக்கம் திரும்பினான். “நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்?” அதற்கு சஹாதேவன், “மூத்தவருக்குக் கீழ்ப்படிந்து நட!” என்று சொல்லிவிட்டு அமைதியானான்.  உடனே நகுலனும், சஹாதேவனும் தங்கள் ஆசனங்களில் இருந்து எழுந்து கொண்டு, இளவரசர்களுக்கான கிரீடத்தைத் தங்கள் தலையிலிருந்து நீக்கினார்கள். உடைவாளையும் உருவிக் கொண்டு கிரீடத்தையும், உடைவாளையும் பீஷ்மரின் காலடிகளில் வைத்து வணங்கினார்கள். குரு வம்சத்தின் அப்போதைய பெரியவர் பீஷ்மர் மட்டுமே என்பதை உறுதி செய்யும் விதமாக இது அமைந்தது. ஓர் ஏளனமும், பரிதாபமும் நிறைந்த சிரிப்புடன் ஷகுனி யுதிஷ்டிரனைப் பார்த்தான். “மூத்தவனே, இரட்டையர்களை இழந்து விட்டாயே!” என்ற வண்ணம் கபடமாகச் சிரித்தான்.

பின்னர் யுதிஷ்டிரனைப் பார்த்து மேலும் சூழ்ச்சி நிறைந்த குரலில், “மூத்தவனே, உனக்கு இன்னும் இரு சகோதரர்கள் இருக்கின்றனரே! நம் ஆரிய வர்த்தத்தின் பழமையான கோட்பாடுகளின் படியும் விதிகளின் படியும் தந்தை இல்லை எனில் சகோதரர்களுக்கு மூத்த அண்ணனே தந்தைக்குச் சமம் ஆவான். குடும்பத்தை நிர்வாகம் செய்யும் அதிகாரமும், குடும்பச் சொத்துக்களை நிர்வகிக்கும் அதிகாரமும் மூத்தவனுக்கே  உரியது.  மொத்தக்குடும்பமும் அவனுக்குக் கட்டுப்பட்டது.  உன்னுடைய பணயங்கள் எதுவுமே இங்குள்ள செல்வங்களுக்கு ஈடு ஆகாது தான்! மட்டமானவை தான். ஆனாலும் நாங்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறோம். அதனால் தான் உன்னுடைய மட்டமான இந்த சகோதரர்களையும் உன் சொத்தாகக் கருதிக் கொண்டு பயன்படுத்த அனுமதிக்கிறோம்!” என்றான்.

அத்துடன் நிறுத்தாமல் மேலும் தொடர்ந்து, “மூத்தவனே? உன்னுடைய மற்ற சகோதரர்களைக் குறித்து என்ன முடிவு செய்திருக்கிறாய்? அவர்களைக் கூலிகளாகப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் அல்லவா? அவர்கள் அதில் நன்றாக வேலை செய்வார்கள் இல்லையா? அல்லது இவர்கள் உன் சொந்த சகோதரர்கள் என்பதால் இரட்டையர்களை விட உனக்கு இவர்கள் மேல் அதிகப் பாசம் உண்டோ? ஆம், ஆம், அப்படித் தான் இருக்க வேண்டும். ஏனெனில் இந்த இரட்டையர்கள் உன் தாய் வயிற்றில் பிறக்கவில்லையே! உன் சிற்றன்னைக்குப் பிறந்தவர்கள் தானே!” என்று கேலியுடன் கூறினான்.

கோபமே கொள்ளாத யுதிஷ்டிரனுக்கும் கோபம் மூண்டது. ஆனாலும் தாங்கள் அடிமைகளாக ஆனாலும் சரி சகோதரர்கள் ஐவரும் திரௌபதியுடன் ஒன்றாகச் சேர்ந்தே இருக்க வேண்டும் என்பதில் யுதிஷ்டிரன் உறுதியாக இருந்தான்.  ஆகவே அவன் ஷகுனியைப் பார்த்து, “காந்தார இளவரசே! அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். நீங்கள் ஏற்கெனவே எங்கள் சொத்துக்களை எல்லாம் பிடுங்கிக் கொண்டு விட்டீர்கள். இப்போது நீங்கள் எங்கள் ஐவருக்குள்ளும் வேற்றுமை கற்பிக்கப் பார்க்கிறீர்கள். ஆனால் ஒருக்காலும் இதில் நீங்கள் வெல்ல முடியாது. நீங்கள் என்ன செய்தாலும் சரி, என்ன சொன்னாலும் சரி, நாங்கள் ஐவரும் ஒன்று தான். உடல் ஐந்து, உயிர் ஒன்று. இப்படியே நாங்கள் ஒன்றாகவே கடைசி வரை இருப்போம். உங்களால் இதில் மட்டும் வெல்ல முடியாது. இப்போது என் அடுத்த பணயம் அர்ஜுனன், மிகச் சிறந்த வில்லாளி!” என்று முடித்தான்.

மீண்டும் பாய்ச்சிக்காய்கள் வீசப்பட்டன. ஷகுனி எப்போதும் போல் ஜெயித்தான். யுதிஷ்டிரன் அர்ஜுனனையும் இழந்தான். யுதிஷ்டிரன் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. ஏனெனில் அர்ஜுனன் எதற்கும் கலங்காதவனாக கௌரவத்துடன் எழுந்து கொண்டு தன் தலைக் கிரீடத்தையும் உடைவாளையும் கழற்றி பீஷ்மரின் காலடிகளில் வைத்து வணங்கினான். இப்போது துரோணாசாரியாருக்கே கோபம் வந்து விட்டது. ஏனெனில் அர்ஜுனன் அவருக்குப் பிரியமான சீடன். எவரோடும் ஈடு செய்ய முடியாத வில்லாளி. வில் வித்தையில் நிபுணன். அர்ஜுனனின் குருவாக அவர் தான் அவனுக்கு குருகுல வாசம் முடிந்ததும் கிரீடம் சூட்டி வில் அம்புகள், வாள் போன்றவை அளித்து கௌரவித்தார். ஆகவே இப்போது கோபத்துடன் தன் அருகிலிருந்த கோடரியைக் கைகளில் எடுத்தார்.  பீஷ்மரைப் பார்த்தார்.

“பிதாமஹரே! என்ன இது?” என்று கோபத்துடன் வினவினார். “இனிமேலும் சந்தர்ப்பம் கொடுத்துக் கொண்டிருந்தால் இவர்கள் சகோதரர்கள் ஐவரையும் அடிமைகளாக ஆக்கி விடுவார்கள். இங்கேயே, இப்போதே!” என்றார். பீஷ்மர் அவர் முதுகில் தட்டிக் கொடுத்து சமாதானம் செய்தார். அவர் காதுகளில் மெல்லக் கிசுகிசுத்தார். “பொறுங்கள், இப்போது எதுவும் வேண்டாம். இன்னும் நேரம் இருக்கிறது!” என்றார்.  அதற்குள்ளாக யுதிஷ்டிரன், “இதோ அடுத்த பணயம் பீமன்!” என்றான். “அதெல்லாம் முடியாது! நான் இங்கே இந்த சபையில் உன்னால் தோற்கப் பட்டு அடிமையாகப் போவதில்லை. இதற்கு நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்.” என்ற வண்ணம் பீமன் எழுந்தான். யுதிஷ்டிரன் அவனை மீண்டும் கீழே உட்கார்த்தி வைத்தான்.

“வ்ருகோதரா, ராக்ஷச அரசே, நீ என்னுடைய பணயமாக ஆகியே தீர வேண்டும். ஏனெனில் நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். நாம் அனைவரும்! அர்ஜுனனும், இரட்டையரும் எங்கே இருக்கின்றனரோ அங்கே நாமும் இருக்க வேண்டும்!” என்றான். பின்னர் அவன் ஷகுனியிடம் திரும்பி, “இதோ ராக்ஷசவர்த்தத்தின் அரசன் வ்ருகோதர அரசன்!  என்னுடைய ராணுவத்தின் தலைமைத் தளபதி! இவனை நான் பணயம் வைக்கிறேன்.” என்றான்.  மீண்டும் பாய்ச்சிக்காய்கள் உருட்டப்பட்டு, பீமனும் அடிமையாக ஆனான். ஷகுனி உற்சாகத்துடன் கூவினான். பீமன் தன் கண்களில் இருந்து கண்ணீர் வழிய எழுந்து வெறுப்பு கண்களில் தெரியத் தன் தலைக்கிரீடத்தையும் உடைவாளையும் அகற்றி பீஷ்மரின் காலடியில் தூக்கி எறிந்தான்.

‘ம்ம்ம், தாத்தா அவர்கள் எங்கள் ஐவரின் ஒற்றுமை குறித்து சந்தேகம் கொண்டிருப்பார். சகோதரர்களின் ஒற்றுமை குறித்தும் மூத்தவனுக்குக் கீழ்ப்படிதல் குறித்தும் அவர் கொண்டிருக்கும் சந்தேகம் இப்போது தீர்ந்திருந்தாலும் நானும் என்ன் சகோதரர்களுடனேயே இருந்தாக வேண்டும். அப்போது தான் அவருக்குப் புரியும்!” என்று எண்ணியவனாக, “மாட்சிமை பொருந்திய ஷகுனி அவர்களே, நான் இப்போது என்னையே பணயம் வைக்கிறேன்.” என்றான். “நாங்கள் தயார்!” என்றான் ஷகுனி. மீண்டும் பாய்ச்சிக்காய்கள் உருட்டப்பட்டு யுதிஷ்டிரனும் அடிமை ஆனான்.  பீஷ்மரின் கண்களில் கண்ணீர் வந்தது. யுதிஷ்டிரன் எவ்வளவு புத்திசாலி, விவேகம் நிறைந்தவன், தன்னலம் இல்லாதவன், தர்மத்தைக் கடைப்பிடிப்பவன், இப்போது அடிமை! அதுவும் சொந்தப் பெரியப்பன் மகன்களுக்கே. இல்லை. இல்லை. இல்லை. இது நடக்கக் கூடாது. பீஷ்மர் தன் கைகளால் தன் கண்களை மறைத்துக் கொண்டார்.

யுதிஷ்டிரன் தன் அரசக் கிரீடத்தையும் உடைவாளையும் கழற்றி மரியாதையுடன் பீஷ்மர் காலடிகளில் வைத்தான். கீழே குனிந்து வணங்க முற்படுகையில் பீஷ்மர் அவனைத் தூக்கிக் கட்டி அணைத்தார். பின்னர் யுதிஷ்டிரனும் தன் சகோதரர்களுடன் போய் நின்று கொண்டான். அப்போது ஷகுனியின் உதடுகளிலிருந்து வக்கிரமும், வஞ்சகமும் நிறைந்த வார்த்தைகள் வந்தன. “மூத்தவனே, நீ தர்மராஜா எனப் பெயர் வாங்கியவன். நேர்மையின் அதிகாரி. தர்மத்தின் வழியில் அரசாட்சி புரிந்தவன். நீ ஒரு விஷயத்தை மறந்து விட்டாய்! அதி முக்கியமான விலை உயர்ந்த ஒன்றை விட்டு விட்டாய்! அது தான் அழகுராணியும் உன் மனைவியும் ஆன பாஞ்சால இளவரசி திரௌபதி!” என்றான்.