Saturday, December 31, 2016

குழல் மீதினிற்பூசி நறுநெய் குளித்தே சீவிக் குழல் முடிப்பேன் யான்!

சகோதரர்கள் ஐவரும் தங்கள் வழக்கமான ராஜ உடையையும், ஆபரணங்களையும் தரித்துக் கொண்டனர். தங்கள் ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டனர். அங்கிருந்து கிளம்பும்போது பீமன் துரியோதனனிடம் திரும்பிச் சொன்னான். “இத்துடன் நாங்கள் நிறுத்திவிடுவோம் என்று நினைத்து விடாதே! நீ தான் எங்கள் முக்கியமான முதன்மை எதிரி ஆவாய். நான் தான் உன்னைக் கொல்லப் போகிறேன்.  உங்களில் எவரும் தப்ப முடியாது! அதை நினைவில் வைத்துக் கொள்!” என்றான். “உன் தொடையைப்பிளந்து உன்னை மாய்ப்பேன்! துஷ்சாசனனையும் கொல்வேன்.” என்று சபதம் செய்தான்.  அர்ஜுனனும் இடைமறித்து, “நானும் கர்ணனைக் கொல்வேன் என்று சபதம் செய்கிறேன்.  ராதேயனையும் அவன் ஆதரவாளர்களையும் கொன்றொழிப்பேன்.” என்றான்.

சஹாதேவன் சொன்னான். “ஷகுனி, காந்தார இளவரசே, நீ ஓர் அவமானச் சின்னம். க்ஷத்திரிய குலத்துக்கே உன்னால் அவமானம்.  போர்க்களத்தில் நான் உன்னை எதிர்கொண்டு கொன்றழிப்பேன்.” என்றான். அதற்கு ஷகுனி கிண்டலாகச் சிரித்துவிட்டுச் சொன்னான். “அதற்கு முன்னர் நீ கொல்லப்படாமல் இருந்தால் தானே!” என்றான். நகுலன் சொன்னான். “நான் உன் மகன் உல்லூகனைக் கொல்வேன்.” என்றான். அதன் பின்னர் பாஞ்சாலி அனைவரையும் பார்த்து, “ துஷ்சாசனன், துரியோதனன் இருவரின் ரத்தத்தால் என் கூந்தலில் பூசிக் குளித்த பின்னரே இந்த என் விரிந்த கூந்தலை முடிவேன்!” என்று பயங்கரமான சபதம் செய்தாள்.  இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த யுதிஷ்டிரன் தன் கையை எச்சரிக்கை விடுக்கும் பாவனையில் உயர்த்தினான்.  பின்னர் கூறினான்.

“என் அருமைச் சகோதரர்களே, பாஞ்சாலி, கோபத்தின் வசப்பட்டு ஆத்திரத்திற்கு இரையாகி விடாதீர்கள். தர்மத்தின் பாதையை விட்டு விலகாதீர்கள்.  அங்க தேசத்து அரசன், ராதேயனின் மகன் கர்ணன், பாஞ்சாலியைக்குறித்த அவமரியாதையான சொற்களைப் பேசும்போது எனக்கும் ஆத்திரம் மூண்டது. அவனைக் கொல்ல வேண்டுமென்றே நினைத்தேன். ஆனால் என்னால் அவனிடம் கோபத்துடனோ, ஆத்திரத்துடனோ இருக்க முடியாது! அவன் மிகவும் துணிச்சல் உள்ளவன் மட்டுமல்ல; பெருந்தன்மை உள்ளவனும் கூட. விதியின் பயனால் அநீதியைச் சந்தித்தவன்! அவனுக்கு மாபெரும் அநீதி ஏற்பட்டு விட்டது.” என்று கூறினான். பின்னர் அந்த சபை கலைந்தது. கூடி இருந்த அரச குலத்தவர் அனைவரும் அங்கிருந்து சென்றனர். தனக்கு ஆதரவளித்த அரச குலத்தினரைப் பார்ப்பதற்குக் கூட துரியோதனனால் முடியவில்லை. அவனுக்குப் பெருத்த அவமானமாக இருந்தது.

குருட்டு அரசன் திருதராஷ்டிரன் சஞ்சயனால் அழைத்துச் செல்லப்பட்டான். அவன் சகோதரர்கள் ஐவரும் சபதம் எடுத்துக் கொண்ட போதும், திரௌபதி சபதம் போட்டபோதும் கேட்டுக் கொண்டு தானிருந்தான். அவனுக்குள் அச்சம் ஏற்பட்டது. தன் மக்களுக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ என்று பயந்தான். ஆகவே அவன் திரௌபதியிடம் திரும்பி, “உங்கள் அனைவரையும் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து விட்டேன். உனக்கு இதைத் தவிர வேறு ஏதேனும் வேண்டுமா? ஏதேனும் வேண்டுமெனில் கேள்!” என்றான்.  அதற்கு திரௌபதி சொன்னாள்:” என் கணவன்மார் ஐவரும் அடிமைகள் இல்லை என்றும் அதிலிருந்து அவர்களை விடுவித்து விட்டதாகவும் நீங்கள் அறிவிப்புச் செய்ததே எனக்குப் போதுமானது! நான் அதிலேயே மிகுந்த திருப்தி அடைந்து விட்டேன்.” என்றாள்.

பின்னர் தன் துணிகளைச் சரி செய்து கொண்டு மேலாடையைத் திருத்திக் கொண்டு அவள் அங்கிருந்து வெளியேறினாள்.  துரியோதனன், துஷ்சாசனன், கர்ணன் ஆகியோரும் செய்வதறியாமல் அங்கிருந்து வெளியேறினார்கள்.  தன் சகோதரர்கள் செய்த பயங்கரமான சபதங்களைச் சிறிதும் பொருட்படுத்தாமல் யுதிஷ்டிரன், தன் பெரியப்பாவின் கால்களில் விழுந்து வணங்கினான். “பெரியப்பா, நாங்கள் எப்போதுமே உங்கள் விருப்பங்களை நிறைவேற்றி வருகிறோம். ஆகவே இனியும் ஏதேனும் இருந்தால் உடனே எங்களிடம் சொல்லவும். நாங்கள் அதை நிறைவேற்றுகிறோம்!” என்றான்.  இதைக் கண்ட திருதராஷ்டிரன் மனம் கூட ஒரு கணம் நெகிழ்ந்தது.  யுதிஷ்டிரன் தன்னுடைய விருப்பங்களை நிறைவேற்றித் தருவதாய்ச் சொன்னதைக் கேட்ட அவன் மனம் யுதிஷ்டிரனின் பெருந்தன்மையால் மகிழ்ந்தது.

 மிக மெல்ல பலஹீனமான தொனியில் அவன் கூறினான். “உன்னுடைய அடக்கமான சுபாவத்தைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன் யுதிஷ்டிரா! நீ மிகவும் புத்திசாலி, விவேகி, மிக உயர்ந்தவன். இன்று நடந்த விரும்பத் தகாத சம்பவங்களை எல்லாம் மறந்து விடு! என் மக்கள் செய்த பாவங்களை எல்லாம் மன்னித்து மறந்து விடு! உன்னுடைய அனைத்துப் பொருட்களையும் திரும்ப எடுத்துக் கொண்டு இந்திரப் பிரஸ்தம் செல்! சந்தோஷமாக இரு!” என்றான். யுதிஷ்டிரன் மிகவும் அடக்கத்துடன் இதைக் கேட்டுக் கொண்டிருந்தான். பின்னர் விடைபெற்று இந்திரப் பிரஸ்தம் செல்லும் ஏற்பாடுகளைக்கவனிக்கச் சென்றான்.

ஆனால் இங்கே ஹஸ்தினாபுரத்திலோ துரியோதனன் வெறுப்பிலும் ஆக்ரோஷத்திலும் இருந்தான். அவன் எவ்வளவு ஆவலுடன் இருந்தான்? ஐந்து சகோதரர்களையும், திரௌபதியையும் அடிமை ஆக்கிவிட்டதை நினைத்து சந்தோஷத்தின் உச்சியில் அல்லவோ இருந்தான்! அதற்கு அவர்கள் எதிர்த்தால் அவர்களைக் கொன்றுவிடக் கூடத் தயாராக இருந்தான். ஆனால்! இப்போதும் அவனுடைய துரதிர்ஷ்டம் முன்னால் வந்துவிட்டதே! அது அவனை விடாமல் துரத்தி வருகிறது!  மறுநாள் யுதிஷ்டிரன் தன் தம்பிமாருடனும், மனைவியுடனும் அவன் சூதாட்டத்தில் தோற்றதாகச் சொல்லப்பட்ட அனைத்துச் செல்வங்களுடனும் இந்திரப் பிரஸ்தம் செல்லத் தயாராக இருந்தான்.  அவனுடைய ஏற்பாடுகளை எல்லாம் கவனித்த துரியோதனனுக்கு மீண்டும் ஆத்திரமும், வெறுப்பும் ஏற்பட்டது.

ஓர் பைத்தியக்காரன் போலத் தன் தந்தையின் இருப்பிடம் நோக்கி ஓடினான். “தந்தையே, தந்தையே, இது என்ன? கொடுமையாக இருக்கிறதே!  நீங்கள் எப்படி பாண்டவர்கள் ஐவரையும் ஹஸ்தினாபுரம் விட்டு வெளியேறச் சொல்லலாம்? அவர்கள் மிகவும் வலுவுள்ளவர்களாகவும் மாபெரும் கூட்டணியுடையவர்களாகவும் இருந்தார்கள். ஆகவே நாம் அவர்களின் ஒற்றுமையை உடைத்து அவர்களின் ராஜ்யத்தைப் பிடுங்கிக் கொண்டு அவர்களை அடிமையாக்கலாம் என்று தந்திரமாகத் திட்டம் போட்டோம். அதில் வெல்லவும் செய்தோம்.  அத்தோடு மட்டுமா? நாம் அவர்களை எப்படி எல்லாம் அவமானம் செய்தோம்!  இகழ்ந்தும், பரிகாசமாகவும் பேசியதோடு அல்லாமல், ஏசவும் செய்தோம். “

“மூர்க்கத்தனமாகவும் ஒழுக்கக் கேடாகவும் அவர்களின் ராணியிடம் நடந்து கொண்டோம்.  நாங்கள் இதை எல்லாம் செய்ததே உங்களிடம் நம்பிக்கை வைத்துத் தான். நீங்கள் ஒருவராவது எங்களை ஏமாற்ற மாட்டீர்கள் என்று நம்பினோம். ஆனால் நீங்கள் எங்களை ஏமாற்றி விட்டீர்கள், தந்தையே!  நீங்கள் திரும்பவும் அவர்களுக்கு அரச குலத்தவர் என்னும் தகுதியைக் கொடுத்துவிட்டீர்கள். அவர்களின் க்ஷத்திரிய பரம்பரையை அங்கீகரித்ததோடு அல்லாமல் அவர்கள் ராஜ்ஜியத்தையும் திரும்பக் கொடுத்துவிட்டீர்கள். அவர்கள் கோபத்தை நாங்கள் தூண்டி விட்டு விட்டோம். இனி அவர்கள் மிகக் கடுமையான எதிரிகள். அவர்கள் இப்போது மிகப் பயங்கரமானவர்களாக ஆகிவிட்டனர். முன்னர் இருந்ததை விட இப்போது அவர்கள் மிகப் பயங்கரமான எதிரிகள்!” என்றான் துரியோதனன்.

பின்னர் சற்று நிறுத்திவிட்டு மீண்டும் தொடர்ந்தான். “தந்தையே, அவர்கள் எடுத்துக் கொண்ட பயங்கரமான சபதங்களை எல்லாம் நீங்கள் கேட்டீர்கள் அல்லவா? இனிமேல் இன்றிலிருந்து அவர்கள் எங்களை அழித்து ஒழிக்கும் திட்டங்களைப் போடுவார்கள். இனி எங்களுக்கு எந்நேரமானாலும் ஆபத்துத் தான்!” என்றான்.  மிகவும் உணர்ச்சிவசப் பட்டிருந்த துரியோதனன் அமைதியின்றி மூச்சுக் கூட விட மறந்தவன் போல் காட்சி அளித்தான்.

2 comments:

ஸ்ரீராம். said...

நடுவில் ஏதோ விட்டுப் போச்சோ.... இந்திரப்பிரஸ்தம் செல்கிறார்கள் என்றால் வனவாசம் எப்போது?

sambasivam6geetha said...

பொறுத்திருங்க. :) வரும். :)