Wednesday, December 28, 2016

வேதச்சுடர்த்தீ முன் வேண்டி மணஞ்செய்து பாதகர் முன் இந்நாள் பரிசழிதல் காண்பீரோ?

ஆத்திரமும் கோபமும் முகத்தில் தெரிய, கோபத்தினால் நடுங்கும் குரலில் பாண்டவர்களின் ராணியான திரௌபதி அங்கே அமர்ந்திருந்த பீஷ்மரை நோக்கி, “நான் இங்கே குரு வம்சத்தின் பெரியோர்களைக் காண்கிறேன். அனைவரும் தர்மத்தைப் பாதுகாப்பவர்கள். எப்போது என்று அறிய முடியாத பழங்காலத்திலிருந்து தர்மத்திற்கும், நீதிக்கும் நேர்மைக்கும் மட்டுமே இடம் கொடுத்து, அதற்காகவே வாழ்ந்து வருபவர்கள்.  இவர்கள் கண் முன்னர் அதர்மம் தலை தூக்க அஞ்சி, புற்றில் சுருண்ட பாம்பாக அடங்கிக் கிடக்கும்.”
தன் சுட்டு விரலை துரியோதனன் பால் சுட்டியவண்ணம் அவள், “இங்கே ஒரு மனிதன் அதிகார போதையில் மூழ்கித் தன் சகோதரனை அனுப்பி ஒரு பெண்ணை, அதுவும் குரு வம்சத்து ராணியை இழுத்துக் கொண்டு இந்த சபைக்கு வரும்படி கூறியுள்ளான்.” சற்று நேரம் பொறுத்து அவள் மீண்டும் பேசினாள். “உங்கள் அனைவரின் முன்னிலையில் நான் என் பிரபு, என் கணவர், பாண்டுவின் குமாரர், தர்மத்தின் காவலர் யுதிஷ்டிரரிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அவர் சூதாட்டத்தின் போது முதலில் யாரை இழந்தார்? அவரை இழந்த பின்னர் என்னையா? அல்லது என்னை முதலில் இழந்த பின்னர் அவரை இழந்தாரா?” என்று கேட்டாள். அவள் குரல் பலஹீனமாக இருந்தாலும் தன் சக்தி அனைத்தையும் திரட்டிக் கொண்டு அவள் பேசினாள்.

பீஷ்மரைப் பார்த்து அவள், “குரு வம்சத்தின் மூத்தவரே, பிதாமஹரே, உங்களை வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய இந்த எளிய கேள்விக்கு விடை கூறுங்கள். நீங்கள் என்னை ஓர் அடிமையாக நினைக்கிறீர்களா அல்லது சுதந்திரமான பெண்மணியாக நினைக்கிறீர்களா?” என்று கேட்டாள். தன் ஐந்து கணவன்மாரையும் மிகவும் வெறுப்புடன் பார்த்தாள்.  அவளைக் கண்ட யுதிஷ்டிரனுக்கு துக்கம் அதிகம் ஆகியது. எவ்வளவு சீருடனும், சிறப்புடனும் இருந்தவள், இருக்க வேண்டியவள், இம்மாதிரியான ஓர் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டாளே! இதை எண்ணிய யுதிஷ்டிரன் அவமானத்தால் தலை குனிந்து அமர்ந்து விட்டான். அவனால் பணயத்துக்கு உள்ளாக்கப்பட்ட தன் தேவியை நிமிர்ந்து பார்க்கக் கூட மனமோ தைரியமோ இல்லை! ஆனால் மாட்சிமை பொருந்திய திரௌபதி, பாஞ்சால இளவரசி, பாண்டவர்களின் மனைவி, இந்திரப் பிரஸ்தத்தின் ராணி கோபத்தின் உச்சியில் இருந்தாள்.

பீஷ்மரை ஆவேசத்துடன் பார்த்தாள். “உங்களை நாங்கள் மிகவும் தைரியசாலியாகவும், அதிகம் கற்றறிந்தவராகவும் நினைத்து கௌரவித்து வருகிறோம், பிதாமஹரே! இந்தக் குரு வம்சத்திலேயே உங்களைப் போன்ற சிறந்த அறிஞர் எவருமில்லை என்கிறார்கள்.  இப்போது என் கேள்விக்கு நீங்கள் விடை அளியுங்கள்!” என்றாள்.  பீஷ்மர் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு துஷ்சாசனனைப் பார்த்தார்.  அவன் தன் உடைவாளை உருவிக்கொண்டு திரௌபதி அருகே நின்றிருந்தான். பின்னர் திரௌபதியிடம் அவர், “உன்னுடைய கேள்விக்கு சரியான தக்க பதில் அளிக்க முடியாத நிலையில் நான் இப்போது இருக்கிறேன் திரௌபதி! தர்மத்தின் நிழல் மிகவும் நுட்பமானது. அது எங்கே எப்போது விழுகிறது என்றோ விழாமல் இருப்பது குறித்தோ அறிவது அத்தனை எளிதல்ல!” என்ற பீஷ்மர் சற்றே நிறுத்தினார்.

பின்னர் மேலும் தொடர்ந்து, “ஒரு மனிதன் எப்போது தன்னுடைய உடைமைகள் எல்லாவற்றையும் இழந்து தன்னையும் இழக்கிறானோ அவனுக்குத் தன்னுடைய மனைவியைப் பணயம் வைக்கும் உரிமை இல்லை!” என்றார்.  இந்தக் கிழவர் தன்னுடைய வாக்கு வன்மையால் தங்கள் முக்கிய நோக்கத்தைப் புரட்டிப் போட்டுவிடுவார் என்னும் எண்ணம் துரியோதனனுக்கும் அவன் சகாக்களுக்கும் வந்தது.  அவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு துரியோதனனின் அடுத்த ஆணைக்காகக் காத்திருந்தார்கள். பிதாமஹர் இந்தப் பிரச்னையின் நெருக்கடியான சூழ்நிலையை துரிதப்படுத்த விரும்பவில்லை.  ஆகவே தன் கைகளால் அங்கே அமைதி நிலவ வேண்டினார்.

“அடுத்தபடியாக, “ என்று ஆரம்பித்துத் தொடர்ந்து பேச ஆரம்பித்தார் அவர். ஒரு மனிதன் தன் அனைத்து உடைமைகளையும் சூதாட்டத்தில் தோற்றாலும் தோற்காவிட்டாலும் அவன் தன் மனைவியைப் பணயம் வைக்க முடியும்!” என்றார். “யுதிஷ்டிரனுக்கு நன்கு தெரியும் ஷகுனி சூதாட்டத்தில் சிறந்த நிபுணன் என்பதை நன்கு அறிவான். அதை அறிந்திருந்தும் தான் அவன் ஷகுனியோடு இந்தச் சூதாட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டான். விரும்பியே பங்கெடுத்தான். அவன் விரும்பியே அதில் மாட்சிமை பொருந்திய ராணியான உன்னை,  பாஞ்சால இளவரசியைப் பணயம் வைத்துத் தோற்றான். நான் உன்னுடைய கேள்விக்குத் தக்க பதில் அளிக்க முடியாத நிலையில் இருக்கிறேன், பாஞ்சாலி!” என்றார். அவ்வளவில் திரௌபதியின் ஆக்ரோஷம் அதிகம் ஆனது. “பிதாமஹரே! உங்கள் எண்ணமே தப்பு. அதாவது ஆரியபுத்திரர் அவருடைய சொந்த விருப்பத்தின் பேரில் இங்கே வந்திருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்! அல்ல, பிதாமஹரே! அவர் அப்படி வரவில்லை. இந்திரப் பிரஸ்தத்தை விட்டுக் கிளம்பும் முன்னரே இதை அவர் சித்தப்பா விதுரரிடம் தெரிவித்து விட்டார்.”

“பின்னர் அவன் ஏன் இங்கே வந்தான்?” என்று கோபமாகக் கேட்டான் துரியோதனன்!

“ஹூம்! இந்திரப் பிரஸ்தத்தில் மஹாராஜா யுதிஷ்டிரரிடம் இது வெறும் விளையாட்டு என்றும் பொழுதுபோக்காக ஆடுவதற்காக அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாகவும் தான் சொன்னார்கள். மரியாதைக்குரிய பெரியோர்களே, இந்த அநியாயத்தை, அநீதியைப் பாருங்கள்! மூத்தவரான யுதிஷ்டிர ராஜா துரியோதனனுடன் ஓர் விளையாட்டாக ஆடுவதற்காகத் தான் அழைப்பு அனுப்பப்பட்டது. அதை நம்பி நாங்கள் ஹஸ்தினாபுரம் வந்ததும் இங்கே துரியோதனனுக்கு பதிலாக ஷகுனி ஆடுவார் என்று சொல்லி விட்டார்கள்!” என்ற திரௌபதி சற்றே நிறுத்தினாள். மேலும் தொடர்ந்து, “  இப்போது ஷகுனி அவர்கள் ஆடியதால் என் பிரபு யுதிஷ்டிரருக்கு இந்த விளையாட்டில் ஜெயிப்பதற்கான வாய்ப்பே தரப்படவில்லை. உங்கள் அனைவருக்கும் இது தெரியும். பிதாமஹரே, நான் உங்களைக் கேட்கிறேன்! ஏன் நீங்கள் இந்த அநியாயமான விளையாட்டைத் தடுக்க முற்படவில்லை?  இந்தக் குடும்பத்திற்கு நீங்கள் தான் தலைவர். அனைவருக்கும் மூத்தவர். பிதாமஹர்! அப்படி இருந்தும் நீங்கள் வாய் மூடி மௌனமாக இருந்தது ஏன்? துரியோதனன் இப்படியான ஓர் அநியாயமான விளையாட்டு விளையாடுவதை ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை?”
 
சற்று நேரம் அங்கே எவரானும் பதில் கொடுப்பார்கள் என்று நினைப்பது போல் மௌனமாகக் காத்திருந்தாள் திரௌபதி! யாரும் பேசவில்லை. பின்னர் தொடர்ந்து, “ நீங்கள் சொன்னீர்கள்! ஆர்யபுத்திரர் இந்த விளையாட்டைத் தன் சொந்த விருப்பத்தின் பேரில் தான் விளையாடினார் என்றீர்கள்!  அதோடு அவர் சுய விருப்பத்தின் பேரில்  என்னைப் பணயம் வைத்ததாகச் சொல்கிறீர்கள். பிதாமஹரே, நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். இந்த தர்பார் மண்டபம் தர்மத்தின் பாதையில் அரசாட்சி நடத்தும் அரசர்களுக்கானதா? அல்லது தர்மத்தைப் பாதுகாப்பதிலிருந்து இந்தக் குரு வம்சத்து அரசர்கள் நிறுத்திக் கொண்டனரா?  என் தந்தை மரியாதைக்குரிய பாஞ்சால அரசர், துருபதர், எந்த ராஜ சபையிலும் பெரியோர் இல்லை எனில் அதை ஓர் ராஜசபையாகவே கருதக் கூடாது. ராஜ சபைக்கு அது லாயக்கற்றது என்பார். தாங்கள் உண்மை என்று நினைப்பதை, உண்மையான கருத்தைப் பேசவில்லை எனில் அவர் ஓர் ஆண்மகனே அல்ல! எங்கே உண்மை இல்லையோ, அங்கே நேர்மையும் இல்லை!”

அப்போது பலத்த சிரிப்புடன் அவள் பேசுகையில் துஷ்சாசனன் குறுக்கிட்டான். அவன் அவள் பக்கம் திரும்பினான். “ஓர் நேர்மையான விளையாட்டில் நீ துரியோதனனுக்கு அடிமையாகி விட்டாய். நீ இப்போது ஓர் அடிமை! தர்மத்தின் நுணுக்கங்களைப் பற்றி உனக்கு ஏன் வீண் கவலை? நீ ஓர் அடிமை! உன்னுடைய தர்மம் இப்போது என்னவெனில் உன் புதிய யஜமானனை எவ்வகையிலாவது திருப்தி செய்ய வேண்டும். உன்னுடைய யஜமான் கௌரவர்களின் தலைவனும் அரசனுமான துரியோதனன். அவனுக்குத் திருப்தி ஏற்படும் வகையில் நீ நடந்து கொள்ள வேண்டும்.”  திரௌபதி மிகவும் வெறுப்புடன் துஷ்சாசனைப் பார்த்தாள். அவள் பார்வையில் ஆக்ரோஷம் தெரிந்தது. அவள் எல்லாம் வல்ல அந்தப் பரமசிவன் தன் மூன்றாவது கண்ணால் எரிப்பது போல் துஷ்சாசனனையும் எரித்துவிடலாமா என்று எண்ணுவது போல் தெரிந்தது. ஆனால் அவள் வாய் திறந்து எதுவும் பேசவில்லை.

பீமனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. புயல் காற்றில் ஆடும் ஓர் இலை போல் நடுங்கினான். யுதிஷ்டிரனை வெறுப்புடன் பார்த்தான். பின்னர் அவனிடம், “பார், நன்றாகப் பார்! உன் முட்டாள் தனத்தாலும் பைத்தியக்காரத்தனத்தாலும் என்ன நிகழ்ந்திருக்கிறது என்பதைப் பார்! நம்மிடம் இருந்த எல்லாவற்றையும் நீ சூதாடிப் பணயம் வைத்துத் தோற்று விட்டாய்! அதோடு நிறுத்தினாயா! எங்களையும் பணயம் வைத்து சூதாடித் தோற்றதோடு அல்லாமல் எங்களை எல்லாம் ஓர் அடிமையாகக் கீழ்த்தரமான நிலைக்குக் கொண்டு வந்து விட்டாய்! போகட்டும்! அதைக் கூட நான் பொறுத்துக் கொண்டு விடுவேன். ஆனால் இது! திரௌபதியை இந்த சபைக்கு ஓர் அடிமைப் பெண்ணாக அழைத்து வந்திருப்பதை என்னால் சிறிதும் பொறுக்க இயலாது. “ இதைச் சொல்லிய வண்ணம் தன் பிடரி மயிரைச் சிலிர்த்துக் கொண்டான் பீமன். ஓர் சிங்கம் தன் பிடரி மயிரைச் சிலிர்ப்பது போல் இருந்தது அது!

“பாஞ்சால நாட்டு இளவரசியைப் பார், மூத்தவனே, நன்றாகப் பார்! ஆடு, மாடுகளை வெட்டுவதற்கு இழுத்துச் செல்வதைப் போல் அவளை இங்கே இழுத்து வந்திருக்கிறான் பார்! இதை என்னால் இன்னும் எத்தனை நேரம் பார்த்துக் கொண்டு பொறுத்திருக்க முடியும்? சஹாதேவா, விரைவில் சென்று நெருப்பை எடுத்து வா! நான் உடனே மூத்தவனின் கைகளை, மனைவியைப் பணயம் வைத்த அந்தக் கைகளை எரித்துச் சாம்பலாக்குகிறேன்!” என்று பற்களைக் கடித்துக் கொண்டு கூறினான்.  அர்ஜுனன் பீமன் இவ்வாறு கடுமையான வார்த்தைகளைச் சொல்லிப் பிதற்றுவதைக் கண்டு மிகவும் வருந்தினான். பீமனின் தோள்களில் கைகளை வைத்த வண்ணம், அவன், “சகோதரா, பீமா! உனக்கு என்ன ஆயிற்று? இதற்கு முன்னர் நீ ஒருபோதும் மூத்தவரை இப்படிக் கடுமையாக வசை பாடிக் கேட்டதில்லையே! நாம் நம் தந்தையைப் போல் அல்லவா அவருக்கு மிக்க மரியாதை கொடுத்து வந்திருக்கிறோம்.” என்றான். பொறுமையின்றி பீமன் இடையில் குறுக்கிட்டான்.        

1 comment:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.