Wednesday, November 19, 2014

பீஷ்மர் போடும் திட்டம்!

திருதராஷ்டிரன் காந்தார நாட்டு இளவரசி காந்தாரியை மணந்து பல குழந்தைகளைப் பெற்றெடுத்தான். அவர்களில் பலரும் குழப்பங்களையே ஏற்படுத்தினார்கள்.  பெரியவர்களிடம் மரியாதை இன்றியும் நடந்து கொண்டனர். சுய விருப்பம் மிகுந்து தன்னலமே பெரியதாய் நடந்து கொண்டனர்.  தர்மத்தைக் குறிப்பாக அரச தர்மத்தை மதிப்பதே இல்லை.  அவர்களில் மூத்தவன் ஆன துரியோதனன் பாண்டவர்கள் ஐவரில் பெரியவன் ஆன யுதிஷ்டிரனை விடச் சிறியவன்.


பீஷ்மப் பிதாமகருக்கும் வயது ஆகிக் கொண்டே இருந்தது.  ஆனால் அவர் தந்தையின் ஆசிகளாலும் மஹாதேவன் அருளாலும் அவர் நினைத்தபோது உயிரை விடலாம் என்னும் வரம் அவருக்கு இருந்தது.  என்றாலும் முதுமை அவரை வாட்டத் தொடங்கி இருந்தது.  அந்நிலையிலும் அவர் தன் பொறுப்பை மறக்காமல் தன் தம்பியின் பிள்ளைகளான பாண்டுவுக்கும், திருதராஷ்டிரனுக்கும் பிறந்த குழந்தைகளை வளர்த்தார்.  அவர்களைத் தக்க வயதில் குருகுலத்தில் சேர்த்தார்.  அவர்கள் அனைத்துக் கலைகளிலும் வல்லவர்களாக இருத்தல் வேண்டும் என்பதற்காக அரச குரு கிருபாசாரியாரிடம் கலந்து ஆலோசித்து கிருபரின் மைத்துனன் ஆன துரோணாசாரியாரைத் தன் பேரப்பிள்ளைகளுக்கு ஆசான் ஆக்கினார்.  துரோணர் பரசுராமரின் நேர் சீடர் ஆவார்.


ஐந்து சகோதரர்களும் தங்கள் குருகுல வாசத்தை முடித்ததும் பீஷ்மர் யுதிஷ்டிரனை ஹஸ்தினாபுரத்தின் யுவராஜாவாக நியமித்தார்.  யுதிஷ்டிரனும் தன் பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்றி வந்தான்.  அதோடு இல்லாமல் திருதராஷ்டிரன் பட்டம் ஏற முடியாமல் பாண்டுவே அரசனாக இருந்ததாலும் முறைப்படி யுதிஷ்டிரனுக்கே அந்தப் பதவி கிடைக்க வேண்டும் என அனைவரின் விருப்பமாகவும் இருந்தது.  தன் வயதுக்கு மீறிய விவேகமும், புத்திசாலித் தனமும் கொண்ட யுதிஷ்டிரனோ தன் யுவராஜா அதிகாரத்தைச் சரியான முறையிலேயே பயன்படுத்தி வந்தான்.  ஹஸ்தினாபுரத்து மக்களாலும், மற்றும் அரண்மனை ஊழியர்களாலும் மிகவும் நேசிக்கப்பட்டான்.  ஆனால் இது தொடர முடியாமல் கௌரவர்கள் என அழைக்கப்பட்ட திருதராஷ்டிரனின் மக்கள் தொந்திரவு கொடுத்தனர்.



பாண்டுவின் புத்திரர்கள் நாட்டுக்கு அழைத்து வரப் பட்ட நாளில் இருந்தே அவர்களுக்கும் கௌரவர்களுக்கும் ஒருவருக்கொருவர் பிடிக்காமல் போய் விட்டது.  பாண்டவர்களைத் தங்கள் எதிரிகளாகவும், தங்கள் உரிமையைப் பறிக்க வந்ததாகவும் கௌரவர்கள் நினைத்தனர். ஆகவே அவர்களை மனமார வெறுத்ததோடு அவர்களைப் பல விதத்திலும் சிரமங்களுக்கும் உள்ளாக்கினார்கள்.  அவர்களை எப்படியேனும் கொன்றுவிடவும் சதியாலோசனை செய்தார்கள்.  இது தெரிந்த பீஷ்மர் பாண்டவர்களின் உயிரையானும் காப்பாற்ற வேண்டியும் அவர்களை இந்த மாபெரும் அரசியல் பிரளயத்திலிருந்து காக்க வேண்டியும் சிறிது காலத்துக்காக அவர்களைப் பிரிக்க எண்ணினார்.  ஆகவே வாரணாவதத்துக்கு அவர்களை அனுப்பி வைத்தார்.  ஆனால் துர் நோக்கம் கொண்ட துரியோதனன் அங்கேயும் அவர்களை நிம்மதியாக இருக்க விடாமல் மாளிகையை அரக்கினால் கட்டி அதில் ஓர் குறிப்பிட்ட நாளில் நெருப்பையும் வைக்க ஏற்பாடுகள் செய்திருந்தான்.



இதை அறிந்த விதுரர் மிகவும் ரகசியமாக பூமிக்குக் கீழே சுரங்கப் பாதை கட்டி அதன் மூலம் பாண்டவர்களையும், குந்தியையும் காப்பாற்றி வெளியேற்றினார்.  தப்பிப் பிழைத்த பாண்டவர்கள் தங்கள் தாயுடன் துரியோதனனின் எல்லைக்கு வெளியே ராக்ஷச வர்த்தம் சென்று மறைந்து வாழ்ந்தனர்.  பாண்டவர்களை வெளியேற்றும்போதே அரை மனதாக அனுப்பி வைத்த பீஷ்மருக்கு அவர்கள் வாரணாவதத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்னும் செய்தி முதலில் கலக்கத்தையே கொடுத்தது.  ஆனால் பின்னர் அவர்கள் தப்பிய செய்தியும், ஆனால் ராக்ஷசவர்த்தத்தில் பல்வேறு இடையூறுகளுக்கிடையே வாழ நேர்ந்ததும் அவர் மனதை மிகவும் புண்ணாக்கி விட்டது.



மீண்டும் தன் அருமைப் பேரப் பிள்ளைகளைப் பார்ப்போமா என்றிருந்த பீஷ்மருக்கு பாண்டவர்கள் ராக்ஷசவர்த்தத்தை விட்டு வெளியேறி காம்பில்யம் வந்ததும், அங்கே அர்ஜுனன் சுயம்வரப் போட்டியில் கலந்து கொண்டு திரௌபதியை வென்றதும், பின்னர் ஐவரும் திரௌபதியை மணக்க நேரிட்ட செய்தியும் மிக்க மகிழ்வைத் தந்தது.  பாண்டவர்கள் கௌரவர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று குரு வம்சத்தினருக்கு அன்று வரை ஏற்பட்டிருந்த மாபெரும் களங்கம் மறைந்ததை எண்ணி மகிழ்ந்தார்.  அர்ஜுனன் ஆர்யவர்த்தத்தின் சிறந்த வில்லாளி, இந்தப் போட்டியில் வென்றதும் அவருக்கு மகிழ்வைத் தந்தது. இந்தச் செய்தி அவரை வந்தடைந்ததும், கர்வத்திலும் பெருமிதத்திலும் மூழ்கிப் போனார்.  தற்கால மரபுக்கு ஒவ்வாத போதிலும் திரௌபதி பழங்கால மரபை ஒட்டி ஐந்து சகோதரர்களையும் மணந்து கொண்டதிலும் அவருக்கு மகிழ்ச்சியே.



இதன்மூலம் குரு வம்சத்தினருக்கும் பாஞ்சால நாட்டுக்கும் நட்பு உருவாகும். அதோடு இல்லாமல் யாதவர்கள் இப்போது பணபலம், படைபலம் மிகுந்து காணப்படுகின்றனர்.  அவர்களின் ஒப்பற்ற தலைவன் ஆன ஶ்ரீகிருஷ்ணனோ பாண்டவர்களுக்கு நட்பு ரீதியிலும், அரசியல் ரீதியிலும் பல உதவிகள் புரிந்து வருகிறான். யாதவப் படைகளே பாண்டவர்கள் பின்னால் நிற்கின்றன.  ஆம், இது தான் தக்க தருணம்.  யுதிஷ்டிரனை இப்போது தான் ஹஸ்தினாபுரம் வரவழைத்தாக வேண்டும்.  அவனுக்கு அரச மகுடம் சூட்ட வேண்டும்.  இதை விட்டால் வேறு தருணம் இல்லை.  பீஷ்மர் முடிவெடுத்தார். இதன் மூலம் துரியோதனனின் யுவராஜப் பட்டத்தைப் பறிக்க வேண்டாம்.  அவன் அப்படியே யுவராஜாவாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அப்படி அவனுக்கும் ராஜ்யம் ஆளும் ஆசை இருந்தால் ஸ்வர்ணப்ரஸ்தமோ, பானிப்ரஸ்தமோ ஆளட்டும்.  அவனுடையை ஆசையையும் தீர்த்து விட்டாற்போல் ஆகும்.  யுதிஷ்டிரன் அமர வேண்டிய இடம் பரதனுக்குப் பின்னர் பரம்பரையாக குரு வம்சத்தினர் ஆண்டு வந்த இந்தச் சிம்மாதனமே.  அவனுக்கே இது உரியது.



இதன் மூலம் அரச நீதியும், தர்மமும் நிலை நிறுத்தப்படும்.  அதோடு இல்லாமல் துரியோதனனின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்க வேண்டும்.  யுதிஷ்டிரனிடம் பொறுப்பை ஒப்படைத்தாலோ அதன் பின்னர் நமக்கு வேறு கவலைகள் வேண்டாம்.  எல்லாவற்றையும் அவன் திறமையாகக் கையாளுவான்.  நமக்கும் வயதாகி விட்டது.  பொறுப்புக்களை இளம் தோளில் சுமத்திவிட்டு ஓய்வு எடுக்க வேண்டும்.  உடனே விதுரனை அழைத்த பீஷ்மர் அவரிடமும் கலந்து ஆலோசித்துவிட்டு விதுரரை உடனே காம்பில்யத்துக்கு அனுப்பி வைத்தார்.  சகோதரர்கள் ஐவரையும், குந்தியோடும், திரௌபதியோடும் ஹஸ்தினாபுரம் வரும்படி அழைப்பு விடுத்தார்.  இப்போது அவர்கள் ஐவரும் வருகின்றனர்.  வந்து கொண்டிருக்கின்றனர்.  யாதவப் படைவீரர்கள் தவிர கிருஷ்ணனும், பலராமனும் கூட அவர்களோடு வருகின்றனர்.  சுநீதனும், விராடனும் மற்றப் பல அரசர்களும், சிற்றரசர்களும் ஹஸ்தினாபுரத்தின் நட்பு நாடுகளின் அரசர்களும் அவர்களோடு வருகின்றனர்.  அவர்களை வரவேற்க வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து முடித்தாயிற்று.

Friday, November 14, 2014

பீஷ்மரின் நினைவோட்டம்!

இது ஒரு பயங்கரமான சபதம் என்பதை தேவ விரதன் நன்கறிவான். அவனைப் போன்ற துடிப்பும், இளமையும் நிறைந்த வாலிபர்களால் எளிதாக நிறைவேற்ற முடியாத ஒன்று என்பதையும் புரிந்து கொண்டான்.  ஆகவே அதற்காக அவன் தன்னுடைய வாழ்க்கைப் பாதையையே மாற்றிக் கொள்ள நேர்ந்தது.  வாழ்க்கையின் , இளமையின் அனைத்து இன்பங்களையும் துறந்தான். கிட்டத்தட்டத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டான்.  அவனைப் போன்ற இளைஞனுக்கு இயல்பாக இருக்கும் உணர்வுகளை அடக்கி ஆண்டான். தன்னலத்தையும் சிற்றின்ப வேட்கையையும் அடக்கி ஆண்டான்.  அந்த சாம்ராஜ்யத்துக்கே அசைக்க முடியாத ஒரு தூணாக மாறி உறுதியுடன் நின்றான்.  இதன் மூலம் அவனை அனைவரும், “பீஷ்மர்” பயங்கரமான சபதம் எடுத்தவன் என்னும் பொருளில் அழைக்கத் துவங்கினார்கள்.  அந்தப் பெயரே நிலைக்கவும் நிலைத்தது.


அவன் தந்தை ஷாந்தனுவுக்கு சத்யவதி மூலம் இரு பிள்ளைகள் பிறந்தனர்.  முறையே சித்திராங்கதன், விசித்திர வீர்யன் என்னும் பெயர் பெற்ற அந்த இளைஞர்கள் வளர்ந்து வருகையில் ஷாந்தனுவுக்கு முடிவு ஏற்பட பீஷ்மரே அரியணை ஏறாத அரசனாக அந்த சாம்ராஜ்யத்தைத் தன் தம்பிமாருக்குச் சரியான பருவம் வரும் வரை கட்டிக் காத்தார்.  பல போர்களைப் புரிந்தார். குருவம்சத்தின் அந்த சாம்ராஜ்யம் பீஷ்மரின் முயற்சிகளால் மேலும் மேலும் வளர்ந்து விரிவடைந்தது.  தன் தம்பிகளிடம் ஒரு தந்தையின் அன்பைக் காட்டினார்.  அவ்விதமே குரு வம்சத்து சாம்ராஜ்யத்திடமும் மாறா அன்பு கொண்டு சாம்ராஜ்யத்தைப் பல வகைகளிலும் விஸ்தரித்து வந்தார்.  தன் சிற்றன்னையின் மகன்களை நல்லதொரு குருகுலத்தில் சேர்த்து அவர்கள் அனைத்துக் கல்வியையும் கற்றுத் தேற வழி செய்தார்.  சித்திராங்கதன் இளவயதிலேயே நோயால் தாக்கப்பட்டு இறந்து போனான்.  விசித்திர வீரியனுக்கு ஏற்றதொரு அரசகுமாரியைத் தேட முடியாமல் பீஷ்மர் காசி அரசனின் இரு மகளைக் கடத்தி வந்தார்.  அவர்களைத் தன் தம்பி விசித்திர வீரியனுக்குத் திருமணம் செய்து கொடுக்க நினைத்தார்.  இதன் மூலம் விசித்திர வீரியனுக்கு வலுவும், பலமும் வாய்ந்த இளவரசர்கள் பிறந்து குரு வம்சத்தினரின் இந்த சாம்ராஜ்யம் மேலும் மேலும் வளர்ச்சி பெற்றுத் தழைத்தோங்கும் என்றும் எதிர்பார்த்தார்.  ஆனால் துரதிர்ஷ்டவசமாகக் குழந்தைகள் பிறக்காமலேயே விசித்திர வீரியனும் இறந்து போனான்.


இதன் மூலம் சாம்ராஜ்யத்தில் பல்வேறு பிரச்னைகள் தலை தூக்கின.  ஆனால் தன் கணவன் இறந்தாலும் ராஜ்யத்தில் தனக்குள்ள உரிமையை நிலைநாட்டிக் கொள்ள விரும்பிய சத்யவதி பீஷ்மரின் உதவியை நாடினாள்.  இருவருமே ஷாந்தனுவின் வம்சம் அவனோடு முடிந்து போக விடுவதில்லை என்னும் முடிவை எடுத்தனர்.   பீஷ்மரின் போற்றுதலுக்கும், வணக்கத்துக்கும் உரியவளாக இருந்த ராணிமாதா சத்யவதியும் இளமையில் அவளுக்குப் பராசர முனிவர் மூலம் பிறந்த பிள்ளையான க்ருஷ்ண த்வைபாயனர் என்னும் வேத வியாசரை அழைத்தாள்.  அவர் முனிவர்களுக்குள்ளே சிரேஷ்டராக ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தார். என்றாலும் தன்னைப் பெற்ற அன்னை அழைத்ததும் ஹஸ்தினாபுரம் வந்த அவர் தன் தாயின் இரண்டாவது மகனின் இரு விதவைகளுக்கும் அக்கால முறைப்படியான நியோகம் மூலம் விந்து தானம் செய்தார்.


இது ஒரு கஷ்டமான முடிவு.  ஆனால் இதை விட்டால் வேறு வழியும் இல்லை. சாஸ்திரங்களின் சம்மதமும் இதற்கு இருந்தது.  இதை ஒரு வழக்கமாக வைத்துக்கொள்ளாமல் பெண்ணுக்குக் கர்ப்பம் தரிக்கும் நேரம் மட்டுமே இருவரும் அனுமதிக்கப்படுவார்கள். இதை நடத்திக்காட்டுவதிலும் மிகவும் கஷ்டங்கள் இருந்தன.  பல்வேறு பிரச்னைகள் தோன்றின.  என்றாலும் குரு வம்சத்தினரின் அரச வம்சம் நூலறுந்து போகாமல் இதன் மூலம் காப்பாற்றப்பட்டது.  ஆனாலும் இது நல்லதொரு மக்களைத் தரவில்லை.  கிரஹங்களின் மோசமான நிலை தன் வேலையைக் காட்டி விட்டது.  அரண்மனையில்  பாவத்தின் ஆதிக்கம் மேலோங்கியது. விசித்திர வீரியனின் மூத்த மனைவியான அம்பிகா என்னும் ராணிக்குப் பிறவிக் குருடனாக திருதராஷ்டிரன் என்னும் பெயரில் ஓர் மகன் பிறந்தான்.  இரண்டாவது மனைவியான அம்பாலிகாவோ பிறவியிலேயே பாண்டு ரோகத்தால் பாதிக்கப்பட்ட ஆண் குழந்தையைப்பெற்றெடுத்தாள்.  



எதற்கும் மனம் தளராமல் பீஷ்மர் அந்தக் குழந்தைகளைப் பொறுமையுடனும், அன்புடனும் வளர்த்து ஆளாக்கினார்.  அவர்களுக்குச் சிறப்பான ஆசிரியர்கள் மூலம் தக்க பயிற்சிகள் அளித்தார்.  ஒரு அரசகுமாரர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய வித்தைகள் அனைத்தையும் கற்க வைத்தார்.  இதன் மூலம் குரு வம்சத்தினரின் அரசகுலத்தின் மேன்மையையும் பாரம்பரியத்தையும் காப்பாற்றினார்.  ஆரியர்களின் பழைமையான சட்டத்தின்படி பிறவிக் குருடன் ஆன திருதராஷ்டிரன் மூத்தவனாக இருந்த போதும் ராஜ்யம் ஏற முடியாது.  ஆகவே இளையவன் பாண்டுவை ஹஸ்தினாபுரத்தின் சிம்மாதனத்தில் ஏற்றினார்.  பாண்டுவுக்கு இயல்பாக இருந்த நற்குணங்களாலும், பெருந்தன்மையான போக்கினாலும் மக்களிடம் உள்ள அன்பினாலும் சாம்ராஜ்யத்தின் மக்களிடம் பேராதரவைப் பெற்றான்.  நல்லாட்சி நடத்தி வந்தான் பாண்டு.



பாண்டுவுக்குப் பிறவியில் ஏற்பட்டிருந்த ரோகம் காரணமாகவும் ரிஷி ஒருவரின் சாபம் காரணமாகவும் அவனால் மனைவியுடன் இணைந்து குழந்தை பெற முடியவில்லை.  அவன் மனைவி குந்தி வசுதேவரின் சொந்தச் சகோதரி, குந்திபோஜனால் வளர்க்கப்பட்டவள்.  அவளைத் தவிர மாத்ரி என்னும் இன்னொரு அரசகுமாரியையும் பாண்டு மணந்திருந்தான். இரு மனைவியர் இருந்தும் அவனால் தாம்பத்திய சுகத்தை நுகர முடியவில்லை.  அதனால் இருவருக்கும் குழந்தைகள் பிறக்கவே இல்லை.  ஆகவே அவன் மனம் வெறுத்து ராஜ்யத்தைத் துறந்து காட்டுக்கு ஏகினான்.  அங்கே அவனுடன் சென்ற அவன் மனைவி குந்தி பாண்டுவின் வேண்டுகோளின் பேரில் பழைய நியோக முறைப்படி மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள்.  அதன் பின்னர் அவள் மறுத்ததால் அவளிடமிருந்து அனுமதியைப் பெற்றுக் கொண்டு மாத்ரியும் இரு பிள்ளைகளை இரட்டையராகப் பெற்றெடுத்தாள்.  இவர்கள் ஐவரையும் பாண்டவர்கள் என்றும் ஐந்து சகோதரர்கள் என்றும் அனைவரும் அழைத்தனர்.  யார் பார்த்தாலும் கவரும் வண்ணம் இனிய சுபாவத்துடனும், கவர்ச்சியான அழகுடனும், புத்திசாலித்தனமும், தைரியமும் நிரம்பிப் பெற்றிருந்த பாண்டவர்கள் வளர்ந்து வந்தனர். அவர்களில் மூத்தவனே யுதிஷ்டிரன்.

Tuesday, November 11, 2014

பீஷ்மரின் எண்ணங்கள்!

பீஷ்மப் பிதாமகர் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தார்.  அவர் அமர்ந்திருந்த கோலம் அவர் மிக வருத்தமானதொரு மனோநிலையில் இருப்பதைக் காட்டியது.  ஒரு மாபெரும் பிரச்னை அவர் முன்னே தலை தூக்கிக் கொண்டிருந்தது.  எப்படி அதைத் தீர்ப்பது என்னும் தீர்க்கமான சிந்தனையில் அவர் ஆழ்ந்திருந்தார்.  நடக்கும் நிகழ்வுகளில் அவர் மனம் மகிழ்ச்சியுறவே இல்லை. துரியோதனனின் மனோபாவம் அவருக்குப் புரிந்தே இருந்தது.  அதே சமயம் தன்னுடைய வாழ்க்கையையும் பின்னோக்கிப் பார்க்க அவர் தயங்கவில்லை.


சிறு குழந்தைப் பருவத்திலேயே அவர் தாய் அவரை விட்டுச் சென்றுவிட்டாள்.  எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைத்த தாயன்பு அவருக்குக் கிட்டவே இல்லை.  புனிதமான அந்த கங்கையே மானுட வடிவெடுத்து அவருக்குத் தாயாக வந்ததாகவே அனைவரும் சொன்னார்கள்.  அவரும் அதை முழு மனதுடன் நம்பினார்.  அதனாலேயே அவரை அனைவரும் “காங்கேயன்” என அழைப்பதையும் தெரிந்து வைத்திருந்தார்.  அது முதற்கொண்டே கங்கை நதியிடம் அவருக்கு இனம் காணாத பாசம். கங்கையைப் பூரணமான அன்புடன் நேசித்து வந்தார்.  பூஜித்து வந்தார்.  தான் ஒரு தேவதைக்குப் பிறந்தவன் என்னும் எண்ணமே அவருக்கு மனதுக்குள்ளாக ஓர் பலத்தையும், வலிமையையும் கொடுத்தது.  மிகவும் பெருமிதம் அடைந்தார்.


சிறு வயதில் விபரம் புரியாமல் இருந்தபோதெல்லாம், “அம்மா எங்கே?” எனத் தன் தந்தையிடம் கேட்டிருக்கிறார்.  தந்தை பதில் சொல்ல முடியாமல் தவிப்பதையும், கண்களின் ஓரத்தில் எட்டிப் பார்க்கும் கண்ணீரையும் கண்டிருக்கிறார்.  தாய் இல்லாமல் தன்னைத் தாயின் பாசத்தையும் சேர்த்து அளித்து வளர்த்து வரும் தந்தையிடம் அபாரமான அன்பும், பாசமும் கொண்ட காங்கேயன் இனி தந்தையிடம் தன் தாயைக் குறித்த எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என உறுதி பூண்டான்.  எட்டு வயதுக்கு காங்கேயனாகிய அவர் குருகுலத்துக்கு அனுப்பப் பட்டார். அவர் குரு பராசர முனிவர்.  தன்னைச் சுற்றிலும் வியப்பும், ஆர்வமும், புதுமையும் நிறைந்த பலவிதமான கதைகளைக் கொண்டவர்.  அது ஏற்படுத்தி இருந்த பிரகாசமான ஒளிவெள்ளத்தில் காங்கேயனும் அமிழ்ந்து போனான்.  தளர்வே அடையாத அவர் குருவின் வலிமையை எண்ணி எண்ணி வியந்து போனான் காங்கேயன். அவருடைய மனோபலம் எவராலும் தவிர்க்க இயலா ஒன்று.  அத்தகைய மனோபலத்தை காங்கேயனுக்குள்ளும் உருவாக்க முயன்றார் பராசரர்.  அதில் வெற்றியும் கண்டார்.


ஆம், பதினெட்டு வயதில் வேத, சாஸ்திரங்களையும், அர்த்த சாஸ்திரம், ஆயுத சாஸ்திரம் போன்றவற்றையும் பரிபூர்ணமாகக் கற்று ஒரு அழகான அதே சமயம் உடல் வலிமையும், மனோ வலிமையும் கொண்டவனாக அவர் உருமாறி இருக்கையில் அவர் வாழ்க்கையின் மிகப் பெரிய மனோபீஷ்டம் பூர்த்தி ஆகிவிட்டதென்றே நினைத்தார். அப்போது தான் ஒரு நாள் அவர் தந்தையான ஷாந்தனு மிகவும் வருத்தமாக இருப்பதைக் கண்டார். சில நாட்களாகவே அவர் வருத்தத்தில் ஆழ்ந்திருப்பதையும் தெரிந்து கொண்டார்.  தன் தந்தையிடம் அவர் வருத்தத்தின் காரணத்தைக் கேட்டபோது அவர் தன் மகனைத் தான் மிகவும் நேசிப்பதாலும், அதன் காரணமாக ஏற்பட்ட நம்பிக்கையினாலும் மகனிடம் தன் ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டார்.


கங்கைக்கரையில் ஓர் நாள் உலாவிக் கொண்டிருந்த அவர் தந்தை ஷாந்தனு, ஓர் அழகிய பெண்ணை அங்கே கண்டதாகவும், அந்தப் பெண்ணின் பெயர் மத்சகந்தி என்றும், அவள் ஓர் மீனவப் பெண் என்றும் கூறினார். இவ்வுலகில் உள்ள பெண்களிலேயே இவள் தனித்தன்மை வாய்ந்தவளாகவும், மிகவும் அழகானவளாகவும், அதே சமயம் புத்திசாலித் தனத்தில் குறையில்லாமலும் இருந்தாள்.  அவள் அழகும், புத்திக்கூர்மையும் ஷாந்தனுவை ஆட்டிப் படைத்தன.  அவள் மேல் தீராக் காதல் கொண்டான் ஷாந்தனு.  அவளுக்கும் ஷாந்தனுவின் மேல் காதல் ஏற்பட்டது.  ஷாந்தனு அவளை மணக்கவும் விரும்பினான்.  அந்தப் பெண் தன் தந்தையிடம் பேசும்படி சொல்ல, அவள் தந்தையைக் கண்டு பேசினான் ஷாந்தனு.


ஆனால் அவள் தந்தை ஒரு கடுமையான நிபந்தனையைப் போட்டான்.  தன் மகள் வயிற்றில் பிறக்கும் பிள்ளையே சிம்மாதனம் ஏறவேண்டும் என்பதே அந்த நிபந்தனை.  இது ஒரு மோசமான, கொடூரமான நிபந்தனை என ஷாந்தனுவின் மனதில் தோன்றியது.  இதில் சற்றும் நீதி இல்லை என்பதும் அவனுக்குத் தெரிந்தது.  அவனுக்குப் பின்னர் சகல தகுதிகளும் வாய்ந்த அவன் மூத்த மகன் ஆன காங்கேயனே பட்டம் ஏற வேண்டும்.  அவனுக்கே இந்த அரியணை உரியது.  இதை எப்படி அவனிடமிருந்து பறிப்பது!  ஹூம், ஷாந்தனுவிற்கு இதில் சம்மதமே இல்லை.  அவன் காங்கேயனை மிகவும் நேசித்தான்.  அவனுக்கு துரோகம் செய்ய அவன் மனம் ஒப்பவில்லை.  அதே சமயம் மத்சகந்தியை அவனால் மறக்கவும் இயலவில்லை.  இரவும், பகலும், விழித்திருக்கையிலும், தூங்குகையிலும், அவள் அவன் முன்னே தோன்றிக் கொண்டே இருந்தாள்!  அவள் புன்னகையாலும் அவள் அழகிய வடிவினாலும் அவன் மன வேதனை அதிகமாயிற்றே தவிரக் குறையவில்லை.  அவளை மணந்து கொண்டு தனக்கு ராணியாக்கிக் கொள்ள மிகவும் விரும்பினான்.


தன் மகனுக்கு உரிய சிம்மாதனத்தைப் பறித்துக்கொள்ளவும் அவன் விரும்பவில்லை.  அதே சமயம் மத்சகந்தியை இழக்கவும் விரும்பவில்லை.  இந்த அசாதாரணமான நிலை அவனைத் துன்பத்தில் ஆழ்த்தியது.  இதை அனைத்தையும் கேட்ட காங்கேயனுக்கு உடனே முடிவெடுக்க ஒரு கணம் கூட ஆகவில்லை.  அவன் தந்தையிடம் தான் அரியணையை விட்டுக் கொடுப்பதாகவும், தந்தை, மீனவனைப் பார்த்து அவன் நிபந்தனையை ஏற்பதாகவும் கூறிவிட்டு மத்சகந்தியை மணக்கும்படியும் கேட்டுக் கொண்டான்.  இதற்கும் அந்த மீனவன் நம்பிக்கை கொள்ளாவிட்டால் தான் ஓர் சபதம் எடுத்துக் கொள்வதாகவும் கூறிய காங்கேயன்,  தான் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்நாள் முழுவதும் பிரமசாரியாகவே கழிக்கப் போவதாகவும் கூறினான்.  திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்பதோடு அரியணைக்கு உரிமையும் கோரப் போவதில்லை என்பதையும் உறுதிபடக் கூறினான்.


அவனுடைய ஒரே அபிலாஷை அந்த சிம்மாதனத்தில் யார் அமர்ந்தாலும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து சாம்ராஜ்யம் விரிவடையவும், எவ்விதத் தொல்லைகளும் இல்லாமல் மன்னன் ஆட்சி புரிய உதவுவதுமே ஆகும் எனவும் இதுவே தன் தலையாய கடமை எனவும் கூறினான்.  தன்னையோ, தன் வாழ்க்கையையோ குறித்து நினைக்காமல் சாம்ராஜ்யத்தைக் குறித்து மட்டுமே தான் இனி நினைக்கப் போவதாகவும் அதன் நலனுக்கெனவே பாடுபடப் போவதாகவும் கூறினான்.

Sunday, November 9, 2014

துஷ்சாசனன் உதவிக்கு வருகிறான்!

“என்ன சத்தியம் செய்து தரவேண்டும் மகனே?”


“என்ன நடந்தாலும் எதுவானாலும் ஹஸ்தினாபுரத்தை நான் தான் ஆட்சி புரிவேன்.  அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்.”


திருதராஷ்டிரனின் குருட்டு விழிகள் கூட ஒரு கணம் அசைந்தன.  பின்னர் தன் மகனிடம் அவன், “ஆம், இது நல்ல யோசனையாகத் தெரிகிறது மகனே!  நான் பிதாமகர் பீஷ்மரிடமும், ராணிமாதா சத்யவதியிடமும் இது குறித்துப் பேசுகிறேன்.  இருவரும் அநேகமாக இதற்கு ஒப்புதல் கொடுப்பார்கள் என எண்ணுகிறேன்.” தன் மகனின் உச்சந்தலையை மீண்டும் ஆசையுடனும், அன்புடனும் தடவிக் கொடுத்தான் திருதராஷ்டிரன்.  தன் தொண்டையில் வரவழைத்துக் கொண்ட விம்மலை அடக்கும் விதமாகத் தன் தந்தையின் பாதங்களில் முகத்தைப் புதைத்துக் கொண்டான் துரியோதனன்.  “தந்தையே, இந்தப் பரந்த உலகில் என்னை நேசிப்பார் எவரும் இல்லை.  தங்களைத் தவிர!  ஆம் தந்தையே தாங்கள் ஒருவரே என்னை மிக அதிகமா நேசிக்கிறீர்கள்.  தயங்காதீர்கள் தந்தையே. தங்கள் பவித்திரமான வாக்கை எனக்கு அளியுங்கள்.  உங்கள் மூத்த மகனாகிய நான், நான் மட்டுமே ஹஸ்தினாபுரத்தை ஆள வேண்டும் என்னும் வாக்குறுதியை எனக்கு அளியுங்கள்.”


“நல்லது மகனே, நல்லது.  உன் விருப்பம் போல் நடக்கும். நான் சத்தியம் செய்கிறேன். ஆனால் தாத்தா பீஷ்மர் என்ன நினைக்கிறார் என்பதும், என்ன செய்யப் போகிறார் என்பதும் எவர் அறிவார்கள்?”  சொன்னவண்ணம் தன் மகனுக்கு விடை கொடுத்து அனுப்பினான்.  துரியோதனனுக்குத் தான் பாண்டவர்களை எதிர்கொண்டு அழைக்க வேண்டும் என்னும் நினைப்பே மாளாத் துயரத்தைக் கொடுத்தது.  அவனால் இந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை.  அவன் மனதுக்குள் ஓர் போராட்டமே நிகழ்ந்தது.  தன் மாளிகைக்குச் சென்றவனை அங்கே அவன் வரவுக்குக் காத்திருந்த துஷ்சாசனன் வரவேற்றான்.  துரியோதனனைப் போல் தோற்றத்தில் பொலிவும், அழகும் இல்லாவிட்டாலும் துஷ்சாசனனும் வாட்டம், சாட்டமாக நல்ல உயரமும் பருமனுமாகவே காணப்பட்டான்.  அதோடு அவன் தீர்க்கமான அறிவும் அவன் முகத்தில் சுடர் விட்டது.  “தந்தை என்ன சொல்கிறார்?”என துரியோதனனைக் கேட்டான்.



“அவர் என்ன சொல்லப் போகிறார்! எப்போதும் போல் அவரால் எதுவும் இயலாமல் தான் இருக்கிறது.  கையால் ஆகாதவராகவே இருந்து வருகிறார்.  ஆனால் யுதிஷ்டிரனை ஹஸ்தினாபுரத்தின் சிம்மாதனத்தில் அமர்த்தாமலிருக்க வேண்டியவற்றைச் செய்வதாக எனக்கு உறுதி மொழி கொடுத்திருக்கிறார்.  அதே சமயம் ஹஸ்தினாபுரத்தின் சிம்மாதனத்தில் நான் அமர்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் கவனிப்பதாகச் சொல்கிறார்.  இதற்காகப் பாட்டனார் பீஷ்மரிடமும், ராணிமாதா சத்யவதியிடமும் பேசுவதாகச் சொல்லி இருக்கிறார்.  அவர்கள் சம்மதிப்பார்களா என்பது தான் புரியவில்லை.  எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. துஷ்சாசனா! தந்தை என்னை நகருக்கு வெளியே சென்று என் மனைவியுடன் பாண்டவர்களை எதிர்கொண்டு அழைக்கும்படி கேட்டுக் கொண்டார்.  அதற்கு நானும் உறுதிமொழி கொடுக்க வேண்டியதாகி விட்டது. “ தன் நிராதரவான நிலையை எண்ணி அப்படியே அமர்ந்து விட்டான் துரியோதனன்.  அவன் ஏமாற்றமும், வருத்தமும் குரலிலேயே தெரிந்தது.



தன் அண்ணனையே பொருள் பொதிந்த பார்வை பார்த்தான் துஷ்சாசனன்.  அவன் கண்கள் ஈட்டி போல் இருந்தன.  அவன் பார்வையாலேயே அவனைப் பார்த்துக் குத்துவது போல் இருந்தது துரியோதனனுக்கு. கொஞ்சம் எரிச்சலுடனேயே துஷ்சாசனன் மீண்டும் பேசினான்:”மீண்டும் சொல்லாதே!  நான் என்ன செய்வேன் என!” என்று கோபமாகக் கூறினான்.  நீ அவர்களை எதிர்கொண்டு அழைக்கச் செல்!  உன்னால் எவ்வளவு நல்லவனாக நடிக்க இயலுமோ அவ்வளவு நல்லவனாக மென்மையான, இனிமையான வார்த்தைகளால் அவர்களை நம்ப வை.  திரௌபதியைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய் என்பதையும் நான் நன்கறிவேன்.  அவள் பெயரைக் கேட்டாலே என் ரத்தம் கொதிக்கிறது.  இப்போது இங்கே நேரிலும் வரப் போகிறாள்.  நாம் இப்போது அடக்கி வாசிக்கவேண்டும்.  நாம் நல்லவர்களாக மாறிவிட வேண்டும்.  அனைவரும் நம்மை நம்ப வேண்டும். “



“தைரியத்தை இழக்காதே!  நாம் அவர்களுடன் தீர்க்க வேண்டிய கணக்குகள் இன்னும் முடிவடையவில்லை.  அவற்றை முடித்தாக வேண்டும்.  நாம் என்ன அவர்களைப் போல் ஐவரா?  நாம் நூற்றுவர்.  அவர்கள் ஐவர் தானே!  நம்மால் முடியாதது என்ன?  அவர்களை என்னிடம் விட்டு விடு.  நீ தந்தையை மட்டுமே கவனித்துக் கொள்.  அது போதும்.  உன்னால் அது சுலபமாக முடியும்.  ஏனெனில் அவர் உன்னை மிகவும் நேசிக்கிறார்.  எங்கள் அனைவரையும் விட உன்னைத் தான் அவருக்கு மிகவும் பிடிக்கும்.  உன்னைத் தான் அவர் விரும்புகிறார்.”



“நான் அறிவேன்;  நன்கறிவேன்.  அது ஒன்றே எனக்கு ஆறுதல்!”



“அது உனக்கு ஆறுதல் மட்டுமல்ல சகோதரா!  அதுவே உனக்கு பலம்!” என்று சொல்லிச் சிரித்தான் துஷ்சாசனன்.



“ஆனால் தந்தை மிகவும் இயலாதவராகவே இருக்கிறார்.  தாத்தா பீஷ்மரையோ, அந்தக் கிழவி ராணிமாதா சத்யவதியையோ ஆலோசனை கேட்காமல் சுயமாக அவரால் எந்தவித முடிவுக்கும் வர முடிவதில்லை.  அவராக எந்த முடிவும் எடுக்கத் தயங்குகிறார்.”



“நீ அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாதே!  தாத்தா பீஷ்மரை நான் கவனித்துக் கொள்கிறேன்.  பல நாட்களாக எனக்கு அவருக்கு ஒரு பாடம் கற்பிக்க ஆசை.  அவருக்குப் போதும், போதும் என்னும் அளவுக்கு நான் அவரைக் கவனித்துக் கொள்கிறேன்.”



“அது சரி அப்பா!  ஆசாரியர்?  அவர் என்ன ஆவார்? அல்லது என்ன ஆனார்?  அவருக்கும் பாண்டவர்கள் ஐவரிடம் தான் அன்பு மிகுதியாக உள்ளது.”



“அதை விடு சகோதரா!  அவருக்கும் அவர் மகன் அஸ்வத்தாமாவுக்குப் பின்னரே மற்றவர்கள்.  அவர் அஸ்வத்தாமாவை எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பதை நீ அறிய மாட்டாயா?  அஸ்வத்தாமா ஏற்கெனவே துரோணாசாரியாரிடம் கூறிவிட்டான்.  என்ன தெரியுமா? யுதிஷ்டிரன் மட்டும் ஹஸ்தினாபுரத்துக்கு அரசனாக முடி சூட்டப்பட்டால் அஸ்வத்தாமா ஹஸ்தினாபுரத்தை விட்டே சென்றுவிடுவான் எனத் தெரிவித்திருக்கிறான்.  தன் அருமை மகனைப் பிரிந்து ஆசாரியரால் எப்படி இருக்க முடியும்?  அவருக்கு இதில் மிகவும் வருத்தம்.”



“எனக்கு என்ன சொல்வது, என்ன செய்வது என்றே புரியவில்லை.”



தன் உதடுகளை அழுந்தக் கடித்துக் கொண்ட துஷ்சாசனன் மேலும் தொடர்ந்தான்:” நேற்றைய இரவில் நாங்கள் அனைவரும் கலந்து பேசினோம்.  யுதிஷ்டிரனை ஹஸ்தினாபுரத்துக்கு அரசனாக முடி சூட்டினால் அனைவரும் ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறுவோம்.  ஏற்கெனவே கர்ணன் அவனுடைய அங்க நாட்டுத் தலைநகருக்குச் செல்லவேண்டிய ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்துவிட்டான்.”



“என்ன?  நீங்கள் அனைவருமே ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்றுவிடுவீர்களா?  என்னைத் தனியாக விட்டுவிட்டா?  எப்படி மனம் வருகிறது உங்களுக்கு?” துரியோதனன் தன் நிராதரவான நிலையை ஒரு கணம் எண்ணிப் பார்த்துவிட்டுக் கத்த ஆரம்பித்தான். “ நீங்கள் அனைவரும் இல்லாமல் நான் மட்டும் இங்கே தனியாக என்ன செய்வது?  மஹாதேவா, மஹாதேவா, என்ன நடக்கப் போகிறது?  என்னை என்ன செய்ய உத்தேசித்திருக்கிறாய்?”



“எல்லாம் சரி சகோதரா.  இவை அனைத்திலிருந்து உன் மனைவியைக் கொஞ்சம் விலக்கியே வை!  அவளுக்கு மட்டும் தெரிந்துவிட்டால்!! ஆசாரியர் அவளைத் தன் அருமை மகளாகவே நினைக்கிறார்.  அந்தக் கிருஷ்ண வாசுதேவனோ தன் தங்கையாகவே நினைக்கிறான்.  இருவருக்கும் அவள் மூலம் நம் விஷயம் சென்றுவிடலாம்.  ஆகவே அவளிடம் எதையும் சொல்லிவிடாதே!  அவள் தலையிட்டு விட்டாளெனில் எல்லாமும் சர்வ நாசமாகி விடும்.”

Saturday, November 8, 2014

திருதராஷ்டிரன் கட்டளை! துரியோதனன் கேட்ட சத்தியம்!

மனம் நிறையப் பாசத்துடன் துரியோதனன் உச்சந்தலையைத் தடவிக் கொடுத்தான் திருதராஷ்டிரன்.  “மகனே, இறை சக்தியை எவரால் எதிர்த்து நிற்க முடியும்?  அந்த ஒப்பற்ற சக்தி இதை இப்படித் தான் நடக்கவிடவேண்டும் என நினைத்திருக்கிறது  துரியோதனா, யாருக்குத் தெரியும் ஐவரும் உயிருடன் இருந்திருப்பதும், திரௌபதியின் சுயம்வரச் செய்தி தெரிந்து அவர்கள் காம்பில்யம் செல்லப்போவதும் எவர் அறிந்திருந்தார்?  போனதோடு அல்லாமல் அவர்கள் அதிர்ஷ்டம் திரௌபதியை அர்ஜுனன் வென்றும் விட்டான்.  எல்லா கிரஹங்களும் அவர்களுக்கு அநுகூலமாகச் செயல்பட்டிருக்கின்றன.”


“தந்தையே, விண்ணகத்து கிரஹங்கள் மட்டுமில்லை; மண்ணகத்து மனிதர்களும் தான் அவர்களுக்கு உதவியாகச் செயல்பட்டிருக்கின்றனர்.  உங்கள் அனைவரின் போற்றுதலுக்கு உரிய உங்கள் அருமைப் பாட்டியார் மஹாமஹா ராணி சத்யவதி தேவியார், தாத்தா பீஷ்மர், விதுரச் சித்தப்பா மற்றும் ஹஸ்தினாபுரத்தின் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து அவர்களுக்காகப் பாடுபட்டிருக்கின்றனர்.  தந்தையே, தந்தையே, இந்நிலையில் கூட நீங்கள் என் பக்கம் உதவியாக எனக்குத் துணையாக நிற்காவிடில் நான் வாழ்வதில் தான் என்ன பயன்?  “மீண்டும் தன் விண்ணப்பத்தை, வேண்டுகோளைத் தெரிவிக்கும் வண்ணமாகத் தன் தந்தையின் கரங்களை இறுகப் பிடித்தான் துரியோதனன்.


“என்னால் என்ன முடியும், மகனே!  என்னால் முடிந்ததெல்லாம் எது சரியானதோ அதைச் செய்வது ஒன்றே!” திருதராஷ்டிரன் பதில் கொடுத்தான். கடுமையான கோபத்துடன் துரியோதனன், “சரி, சரி, அவர்கள் மட்டுமே எல்லாவற்றையும் சரியாகச் செய்கின்றனர்.  நான் செய்வதெல்லாம் தவறானது.  அது தானே நீங்கள் சொல்வது? அப்படியே இருக்கட்டும்.  உங்கள் மூத்த மகன் ஆன நான் எனக்கு உரிமையானதை அடைய விடாமல் அனைவரும் தடுப்பது சரியா?  அதற்கெதிராகச் சதி செய்வது சரியா? உங்கள் மூத்த மகன் ஆன நான் சக்கரவர்த்தி ஆவதற்கான முழுத் தகுதிகளும் பெற்றிருந்தும், அந்தப் பாண்டவர்கள் ஐவருக்கும் கீழ் ஓர் ஊழியனாகப் பணி புரிய வேண்டுமா?  ஏன்?  எதற்காக?  ஒவ்வொரு நாளும், அந்த பீமன், என்னை, “குருடனின் பிள்ளை” என அழைப்பான்;  அதை நான் என்னிரு காதுகளால் கேட்டுக் கொண்டு மனம் புண்ணாகித் தவிக்க வேண்டும்.  ஹூம், காம்பில்யத்தில் கூட திரௌபதியின் சுயம்வரத்திற்காகக் கூடி இருந்த அனைத்து அரசர்கள், இளவரசர்கள், மன்னாதி மன்னர்கள் கூடியிருந்த அந்த மாபெரும் சபையிலேயே பீமன் இதைத் தான் கூறினான்.  தந்தையே!  எனக்கு அப்போது எப்படி இருந்தது தெரியுமா?  அக்னியில் இறங்கி என்னை எரித்துக் கொள்ளலாமா அல்லது கங்கையில் மூழ்கி உயிரை விடுவோமா என நினைத்தேன். “ துரியோதனன் ஆக்ரோஷம் முழுதும் குரலில் வெளிப்படும்படிக் கூறினான்.


“அப்படி எல்லாம் பேசாதே மகனே!  தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தைக் கைவிடு.  வீரன் ஆன உனக்கு இது விவேகமான செயல் இல்லை.  ஆனால் நான் என்ன செய்ய முடியும்?இப்போது அதற்கெல்லாம் யோசிக்கும் அளவுக்கு நேரமில்லை.  நாளை மதியத்துக்குள்ளாக அவர்கள் அனைவரும் இங்கே வந்து சேர்ந்து விடுகின்றனர்.  யுவராஜாப் பொறுப்பில் இருக்கும் நீ தான் முன்னால் சென்று அவர்களை எதிர்கொண்டு அழைத்து வர வேண்டும்.  இல்லை எனில் தாத்தா பீஷ்மரும், பாட்டியார் மஹாராணி சத்யவதியும் கோபமும், வருத்தமும் அடைவார்கள்.  மேலும் நீயும் உன் மனைவியும் நேரில் சென்று அவர்களை அழைத்து வரும்படி பாட்டியார் சத்யவதி தனியான செய்தி ஒன்றும் அனுப்பி உள்ளார்கள்.  இப்படி ஒரு சூழ்நிலையில் நான் என்ன செய்ய முடியும்?  என்ன செய்யலாம் என்பதையும் நீயே சொல் மகனே!”


“தந்தையே,தந்தையே, ஏதானும் செய்யுங்கள்.  நீங்கள் உங்கள் மகனை உயிருடன் பார்க்க விரும்பினால் கட்டாயம் ஏதேனும் செய்ய வேண்டும்.  இவ்வுலகிலேயே உடனடியாக இறக்கத் தக்க தகுதி வாய்ந்தவர்களில் நான் முதன்மையானவன். என்னை விட துரதிர்ஷ்டசாலி எவருமில்லை.”


“அப்படி எல்லாம் சொல்லாதே என் அருமை மகனே! “ இதைச் சொல்லும்போதே துக்கம் தொண்டையை அடைக்க திருதராஷ்டிரனின் குருட்டுக் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.  தன் தந்தையின் கரங்களை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த துரியோதனன், “நான் இறக்க வேண்டியவன், ஆம், ஆம்!” என்று முனகியவண்ணம் மீண்டும் தந்தையின் முழங்கால்களில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.  “இல்லை மகனே!  நீ தான் உன் மனைவியோடு சென்று அவர்களை எதிர்கொண்டு அழைத்து வர வேண்டும்.  இல்லை எனில் இந்த ஹஸ்தினாபுரத்து மக்களுக்கே உன் மேல் கோபம் தாங்காது போய்விடும்.  உன் மேல் ஆத்திரம் அடைவார்கள். ஒரு மரியாதைக்காகவேனும் நீ இதைச் செய்ய வேண்டும்.  இல்லை எனில் குரு வம்சத்தினரின் சாம்ராஜ்யத்தின் குடிமக்களே உன்னை வெறுக்கத் தொடங்கி விடுவார்கள்.”


“ஓ, அப்படியா? மக்கள் என்னை வெறுப்பார்களா?  சரி, சரி, உங்கள் கட்டளை அப்படி எனில் அதை நான் நிறைவேற்றுகிறேன், தந்தையே!  ஆனால் ஒன்று!  இந்த ஹஸ்தினாபுரத்து மக்களை நானும் வெறுக்கிறேன்.” மிகுந்த மனக்கசப்போடு கூறினான் துரியோதனன்.  ஆனாலும்  துரியோதனன் தலையோடு கால் நடுங்கினான்.  அதிலும் சுயம்வர மண்டபத்தில் கேட்ட பீமனின் குரல் அவன் காதுகளில் இப்போது தான் கேட்பது போல் மீண்டும் எதிரொலிக்க, பீமனின் சிரிப்பையும் அவன் மீண்டும் கேட்பது போல் உணர, அப்போது திரௌபதியின் முகத்தில் தெரிந்த நிம்மதியையும், மகிழ்ச்சியையும் மீண்டும் தன் கண்களால் கண்டான் துரியோதனன்.  அவன் சுயம்வரப் போட்டியில் தோற்றது புரிந்ததுமே திரௌபதி சிரித்த சிரிப்பும், முழு மணமகள் அலங்காரத்தில் அவள் நின்ற கோலமும், அவளை அடைய முடியாத மனக்கசப்பும் சேர்ந்து கொள்ள துரியோதனன் உடலே பற்றி எரிவது போல் இருந்தது அவனுக்கு.  மிகுந்த முயற்சியுடன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான் அவன்.  “தந்தையே, நான் செத்தால் செத்துவிட்டுப் போகிறேன்.  ஆனால் அதற்கு முன்னால் உங்கள் கட்டளைப்படியே, பாண்டவர்கள் ஐவரையும், அவர்கள் மணந்து வந்திருக்கும் மணமகளையும் எதிர்கொண்டு அழைக்கச் செல்கிறேன்.  ஆனால் தாங்கள் எனக்கு ஒரு சத்தியம் செய்து தர வேண்டும்.”

Thursday, November 6, 2014

துரியோதனன் சாக விரும்புகிறான்!

கண்ணை விழிக்கும்போதே தன்னருகில் துரியோதனன் அமர்ந்திருக்கிறான் என்பதை திருதராஷ்டிரன் உணர்ந்தான்.  தன் மகனின் இந்த மோசமான நிலைக்குத் தான் தான் காரணம் என்னும் எண்ணம் அவனிடம் உண்டு.  ஆகையால் உள்ளூர அவனிடம் திருதராஷ்டிரனுக்கு அனுதாபம் மிகுந்தது.  ஹூம்!  தான் மட்டும் குருடாகப் பிறக்கவில்லை எனில்!!!  தன் தகப்பனின் அனுதாபத்தை துரியோதனனும் தனக்கு சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டான்.  அவனுடைய இப்போதைய நிலையையும், அவன் அடைந்த ஏமாற்றங்களையும் உருக்கமாகத் தன் தந்தையிடம் எடுத்து உரைத்தான்.  எல்லாவற்றையும் மகன் வாயிலாகக் கேட்ட திருதராஷ்டிரனுடைய குருட்டுக் கண்கள் கண்ணீரை மழையாக வர்ஷித்தன.


அவன் வாய் கோணிக்கொண்டது.  உதடுகள் மட்டுமின்றிக் கைகள், அவ்வளவு ஏன், மொத்த உடலும் நடுங்கியது.  அவன் மனம் முழுவதும் மகனின் இந்த மோசமான மனநிலையே ஆட்கொண்டது. ஆனாலும் அவனால் என்ன செய்ய இயலும்?  தன்னுடைய நலிந்த நிலையை அவன் உள்ளூர வெறுத்தான். பெயருக்குத் தான் அவன் அரசன்!  அவனால் செய்ய முடிந்ததெல்லாம் தன் மகனின் உச்சியை முகர்வதும், அவ்வப்போது ஆறுதல் வார்த்தைகள் சொல்வதும், தன் மகனைத் தடவிக் கொடுப்பதும் தான்.  “என்னால் என்ன செய்ய முடியும், மகனே?” என்று கடைசியாகக் கேட்டான் திருதராஷ்டிரன் மகனிடம். “ உனக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டங்களை நான் நன்கறிவேன்.  இப்போது நீ சொல்வதை எல்லாம் கேட்கக் கேட்க என் மனம் சுக்குச் சுக்காக நொறுங்கி விட்டது மகனே! ஆனால் என்ன செய்வது? “ தன் ஆற்றல் அற்ற தன்மையை நினைந்து நினைந்து மனம் வருந்தினான் திருதராஷ்டிரன்.  தட்டுத் தடுமாறி, வார்த்தைகளை உடைத்த வண்ணம் தன் வழக்கப்படி பேசியவன் மீண்டும் உதடுகள் கோணிக்கொள்ள துக்கத்துடன் தன் மகனைத் தடவிக் கொடுத்தான்.  அதன் மூலம் தன் மனநிலையைத் தன் மகனுக்குத் தெரிவிக்க முயற்சி செய்தான்.


“நீ சொல்வது சரியே மகனே!  நீ தான் இந்த நாட்டுக்கு யுவராஜா!  நீ அதற்கு முற்றிலும் தகுதியானவனே!  ஆனால் பிதாமகர் பீஷ்மரும் சரியாகவே சொல்கிறார்.  எல்லாம் வல்ல மஹாதேவன் அருளாலே பாண்டவ சகோதரர்கள் ஐவரும் உயிருடன் இருக்கின்றனர்.  இது மிகவும் நல்ல செய்தியன்றோ! நமக்கு ஏற்பட்டிருந்த மிகப் பெரிய களங்கத்தை இது நீக்கி விட்டது.  இந்நாட்டு மக்கள் அனைவரும் அவர்கள் ஐவரும் உன்னால் தான் கொல்லப்பட்டதாகவன்றோ சொல்லிக் கொண்டிருந்தனர்!  இப்போது அந்தக் கெட்ட பெயர் நீங்கி விட்டது.  மகனே!  நான் உனக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என உண்மையாக விரும்புகிறேன்.  என்னாலும் ஏதேனும் செய்ய முடியும் என நிரூபிக்க விரும்புகிறேன்.  ஆனால் என்னால் இயன்றது என்ன என்று தான் புரியவில்லை!” இயலாமையுடன் பேசினான் திருதராஷ்டிரன்.


“தந்தையே, தாங்கள் இந்த நாட்டின் மன்னர்!  உங்களால் எவ்வளவோ செய்ய முடியும்!” என்று சொன்ன வண்ணம் தந்தையின் கரங்களைப் பிடித்துத் தன் கைகளுக்குள் வைத்த துரியோதனன் அதன் மூலம் தன்னுடைய வேண்டுகோளைத் தந்தைக்குத் தெரிவித்தான்.


“துரியோதனா, என் அருமை மகனே!  பாண்டவர்களின் உரிமையை நாம் எப்படி மறுக்க முடியும்? அது அரச நீதிக்குப் புறம்பானது.  அதர்மமான ஒன்று.  மேலும் பாட்டனார் பீஷ்மரை எதிர்க்க என்னால் இயலாது.  நாம் அவர்களோடு போர் தொடுக்கவா முடியும்?  யோசித்துப் பார்  துரியோதனா!  நாம் இப்போது பாண்டவர்களோடு போர் தொடுத்தால், அது பாஞ்சாலத்துடனும் போர் தொடுப்பதற்குச் சமம் ஆகிவிடும்.  “


“அதுமட்டுமல்ல மகனே!  கிருஷ்ண வாசுதேவன் அவர்கள் பக்கம் துணையாக நிற்கின்றான்.  அவனுடைய யாதவப் படைகளும் அவர்களுக்கே உதவி செய்யும்.  உன்னுடைய தண்டாயுத குரு பலராமன், அரச குரு துரோணர், விராட அரசன், சுநீதன், அனைவரும் அவர்கள் பக்கம் நிற்கின்றனர். “ தன் குருட்டுக் கண்களை மகன் பக்கம் திருப்பிய திருதராஷ்டிரன் தன் தலையையும் ஆட்டி மறுப்புத் தெரிவித்தான்.  “விதுரன் சொல்வது போல் அது குரு வம்சத்தினரின் அழிவுக்கு வழி வகுக்கும்.” என்றும் கூறினான்.


“தந்தையே, என்னையும் என் சகோதரர்களையும் குறித்தும் தாங்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.  உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய இடத்தில் இப்போது யுதிஷ்டிரன் மீண்டும் யுவராஜா ஆகிவிட்டான் எனில்!! ஆஹா, குரு வம்சத்தின் இந்தப் புராதனமான பரதன் அமர்ந்த சிம்மாதனத்துக்கும் அவனே உரியவன் ஆகிவிடுவானே!  துருபதனின் மகள் அந்தக் கிருஷ்ணை இந்தச் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தினியாக அவன் அருகில் வீற்றிருப்பாள். “ துக்கம் தாங்க முடியாமல் துரியோதனன் குரல் தழுதழுத்தது.  தொண்டையை அடைத்துக் கொண்டது.  அவன் மனதின் கசப்பு முழுவதும் அவன் குரலில் தெரிந்தது.  எத்தனை மாதங்கள்!  ஆம், மாதக் கணக்காக அவன் திரௌபதியை வெல்வது குறித்துப் பல கனவுகள் கண்டான். வெற்றி அவனுக்கே என்பதில் உறுதியாக்க இருந்ததோடு இதன் மூலம் தன் அரசியல் வாழ்க்கையில் ஏற்படப் போகும் முன்னேற்றங்களையும் கௌரவத்தையும் குறித்துச் சிந்தித்துப் பெருமிதம் அடைந்திருந்தான்.


திரௌபதியை வெல்வதே தன் அரசியல் வாழ்க்கையில் தான் அடையப் போகும் முன்னேற்றங்களுக்கான முதல் படி எனக் கனவு கண்டான்.  இப்போது?? அவனால் மேலே சிந்திக்கவே முடியவில்லை.  தலையைக் குனிந்த வண்ணம் கண்ணீரை மௌனமாகப் பெருக்கினான்.  தழுதழுத்த குரலில், “தந்தையே, தந்தையே, நான் இன்னமும் ஏன் உயிருடன் இருக்க வேண்டும்?  நான் சாக விரும்புகிறேன்.” என்றான்.

Tuesday, November 4, 2014

துரியோதனன் போடும் கணக்கு!

ஆனாலும் அவன் தன் முயற்சிகளை விடவில்லை.  அதன் காரணமாக  அவன் தன் குரு துரோணாசாரியாரின் விருப்பத்துக்கு விரோதமாக பாஞ்சால இளவரசிக்காக நடத்தப்பட்ட சுயம்வரத்தில் கலந்துகொள்ள முடிவெடுத்ததைப் பெரியவர்கள் அங்கீகரித்தனர்.  அவனுள்ளும் தன்னம்பிக்கை ஊற்றாகச் சுரந்தது. திரௌபதியை வென்றுவிடலாம் என்றே அவன் திண்ணமாக நம்பினான். பாஞ்சாலத்தின் சக்தி வாய்ந்த சக்கரவர்த்தியான துருபதனுடன் இதன் மூலம் அவனுக்கு ஓர் பிணைப்பு ஏற்பட்டு இருவரும் அரசியல் ரீதியாகவும் ஒருவருக்கொருவர் துணையாக நிற்கமுடியும் என்னும் நம்பிக்கையில் இருந்தான்.  வலுவானதொரு சாம்ராஜ்யத்தின் இளவரசியைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் தன் அரசியல் வாழ்க்கையில் ஓர் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என எண்ணினான்.  ஆனாலும் அவனுடைய துரதிர்ஷ்டம் அவனைத் தொடர்ந்தது.


சுயம்வர மண்டபத்தில் அவன் முறை வந்து அவன் போட்டிக்குத் தயார் ஆனபோது மிக மோசமான முறையில் தோற்றுப் போனான்.அந்தத் தந்திரக்காரக் கண்ணன் எப்படியோ திட்டமிட்டு! ஹூம், அவன் எனக்கு உதவி செய்வதாகவன்றோ கூறி இருந்தான்.  ஆனால் அவன் செய்தது! துரோகம்! நம்பிக்கைத் துரோகம்! என்ன செய்து விட்டான்!  ஐவரையும் எப்படியோ உயிர்ப்பித்து விட்டான்! அவன் இவ்வுலகிலேயே மிகவும் வெறுக்கும் நபர்கள் இந்த ஐவர் தான்.  இவர்கள் இறந்துவிட்டனர் என்றல்லவோ அவன் நினைத்திருந்தான்! திடீரென சுயம்வர மண்டபத்தில் அவர்கள் ஐவரும் உயிருடன் வந்துவிட்டனர்!அது மட்டுமா?  சுயம்வரத்தில் அர்ஜுனன் போட்டியில் வென்று திரௌபதியை மணமகளாய்ப் பெற்றும்விட்டான்.  துரியோதனனின் வாழ்க்கையே அழிந்து விட்டது. அவன் முன்னர் ஒரு கோரமான, பயங்கரமானதொரு எதிர்காலம் தெரிகிறது.


மிகுந்த மனக்கசப்புடன் அவன் ஹஸ்தினாபுரம் திரும்பினான்.  அவமானம் அடைந்த உள்ளத்துடன் மனத் துடிப்புத் தாங்க முடியாமல், அனைவர் கண்ணெதிரேயும் நகைப்புக்கு இடமானவனாய், வெற்றிப் பாதையின் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு, நெஞ்சம்முழுக்கக் கசப்பைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு வந்து சேர்ந்தான்.  ஆனாலும் அவனுடைய ஐந்து விரோதிகளும் திரௌபதியை மணந்து கொண்டிருக்கும் செய்தியைக் கேட்டு வெந்த உள்ளத்துடன் அவர்கள் ஹஸ்தினாபுரம் வரும் முன்னரே அவர்களைக் காம்பில்யத்திலோ அல்லது வரும் வழியிலோ அழிக்கத் துடித்தான்.  ஆனால் அவன் நெருங்கிய நண்பர்களே அதை எதிர்த்துவிட்டனர். அப்படிச் செய்வது கூடாது என மறுத்துவிட்டனர்.  முடிவாகத் தாத்தா பீஷ்மர் ஐந்து சகோதரர்களையும் மிகவும் விமரிசையாக ஹஸ்தினாபுரத்துக்கு வரவேற்க முடிவு செய்துவிட்டார்.  அதோடு நிறுத்தாமல் யுதிஷ்டிரனை மீண்டும் யுவராஜாவாகவோ, அல்லது ராஜாவாகவோ முடிசூட்டவும் முடிவெடுத்து விட்டார்.  இதை அவன் அருமைத் தந்தை திருதராஷ்டிரரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.  காம்பில்யத்துக்கு விதுரச் சித்தப்பாவை அனுப்பி ஐவரையும் இங்கே பத்திரமாகக் கொண்டு சேர்க்க முடிவெடுத்து இருக்கின்றனர்.  பரிசுகளை வேறு கொடுத்து அனுப்பி இருக்கின்றனர். அவன் முன்னர் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு விட்டன.



கடைசியாக அவன் நம்பி இருந்தது ராணிமாதா சத்யவதியைத் தான்.  அவன் பாட்டியான அவரை அவன் மிகவும் நம்பி இருந்தான். அவளிடம் பாண்டவர்கள் ஐவரும் பாண்டுவுக்கு நேரிடையாகப் பிறந்தவர்கள் அல்ல என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தான்.  ஆகவே அவர்களுக்கு சட்டரீதியாகவோ, அல்லது வேறெந்த வழியிலோ ஹஸ்தினாபுரத்து சிம்மாதனத்தை, பரதன் ஆண்டு வந்த புராதனமான சிங்காதனத்தை அடைய அவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதைத் தெள்ளத் தெளிவாகச் சொன்னான்.  ஆனால் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக அந்தக் கிழவி, ஆனாலும் தன்னை வயதானதே தெரியவில்லை எனச் சொல்லிக் கொள்பவள், புதிதாக ஒரு கதையை அவிழ்த்துவிட்டாள்.  ஆனால் அது உண்மையாகவே இருந்து விட்டது என்பது அவன் துரதிர்ஷ்டம் தான்.



அவன் தந்தையும், பாண்டுவும் எப்படிப் பிறந்தனர் என்பதை அந்தக் கிழவி எடுத்துச் சொன்னாள்.  இதன் மூலம் பாண்டவர்கள் ஐவருக்கும் ஹஸ்தினாபுரத்திலோ குரு வம்சத்தின் சாம்ராஜ்யத்திலோ இடமில்லை என்றால் அப்படியே அவனுக்கும் அங்கே இடம் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டினாள்.  அவனுடைய இந்த அகம்பாவம் கொண்ட மனதுக்காக அவனைக் கண்டிக்கவும் செய்தாள்.  இதன் பின்னர் அவனுக்குத் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. அதிலும் யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுரம் வந்ததும் அவனை இதற்கு அரசன் ஆக்குவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பது என்பதை விட வேறு அவமானகரமான செயல் வேறில்லை.


மனம் மிகவும் வெறுத்த நிலையில்  தன் நெருங்கிய நண்பர்களான கர்ணன், அஸ்வத்தாமா, அவன் சொந்த சகோதரன் துஷ்சாசனன், அவன் தாய்மாமன் ஆன காந்தார இளவரசன் ஷகுனி ஆகியோருடன் ரகசியமாகக் கலந்து ஆலோசித்தான்.  அவன் ஆலோசகர்கள் அனைவருமே ஒரு மனதாக இப்போது எதிர்ப்பைக் காட்ட வேண்டிய சூழ்நிலை இல்லை என்றும், அது மிகவும் முட்டாள்தனமானது என்றும் எடுத்துரைத்தனர்.  மேலும் என்ன நடக்கிறதோ அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு அதை மகிழ்ச்சியுடன் வரவேற்பது போல் நடிக்கவும் சொன்னார்கள். அதற்குள்ளாக அவர்கள் அனைவரும் இந்தச் சூழ்நிலையில் இருந்து தப்பிக்கவோ, அல்லது இதை மாற்றி அவர்களுக்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கவோ ஏதேனும் ஒரு வழியைக் கண்டு பிடித்துவிடலாம்.


இப்போது அந்த ஐவரும் வெற்றி பெற்ற தலைவர்களைப் போல் ஹஸ்தினாபுரம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.  மக்கள் அனைவரும் இதைப் பெரும் விழாவாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.  அவன் தந்தையும் பிதாமகர் பீஷ்மரும் பாண்டவ சகோதரர்களை வரவேற்கத் தக்க ஏற்பாடுகளுடன் காத்திருக்கின்றனர்.  அவர்கள் தங்களுடன் ஒரு மாபெரும் படையையும் அன்றோ அழைத்து வருகின்றனர்!  வல்லமை பொருந்திய யாதவ குலத்தலைவன் ஆன கிருஷ்ணனும் அவர்களுடன் வருகிறானாம்.  துரியோதனனின் முதல் எதிரியே அந்த இடையன் கிருஷ்ணன் தான்.


ஹூம்! ஆனாலும் அவன் அண்ணன் பலராமன் துரியோதனனின் குருவாகப் போய்விட்டார்.  தண்டாயுதப் போரில் அவனைத் திறமை வாய்ந்தவனாகச் செய்தவர் அவர் தானே!  இவர்களோடு யாதவர்களில் திறமைசாலிகளான அதிரதர்களும் வருகின்றனராம்.  சுயம்வரத்துக்கு வந்திருந்த பெரும்பாலான இளவரசர்கள் இந்தச் சுயம்வரத்தையும் பாண்டவர்களுடனான திரௌபதியின் திருமணத்தையும் அங்கீகாரம் செய்தவர்களும் தத்தம் பரிவாரங்கள், படை வீரர்களோடு கூட வருகின்றனர்.  ஒரு மாபெரும் ஊர்வலம் ஹஸ்தினாபுரத்தை நோக்கி வருகிறது.


அதற்காகத் தான் அவனுடைய தந்திரக்கார மாமன் ஆன ஷகுனி அவனை இப்போது இங்கே திருதராஷ்டிரனைச் சந்திக்க அனுப்பி உள்ளான்.  திருதராஷ்டிரனுக்குத் தன் மூத்த மகன் துரியோதனனிடம் பாசம் அதிகம்.  தன் மகன் சிறந்த வீரன் என்றும் திறமைசாலி என்றும் மிகவும் அழகானவன் என்றும் திருதராஷ்டிரன் அறிவான்.  ஆனால் தன்னுடைய பிறவிக் குருட்டுத்தனத்தால் மகன் அடைய வேண்டிய அதிர்ஷ்டம் எல்லாம் அவன் கைமீறிச் சென்று விட்டது என்பதை அறிந்து வருந்தினான்.  இதனால் அவன் தன் மகனிடம் கொஞ்சம் அதிகமாகவே பிரியமும், சலுகையும் காட்டி வந்தான்.  மகன் என்ன சொன்னாலும் மறுப்புச் சொல்வதில்லை. இப்போது ஷகுனி திருதராஷ்டிரனின் இந்தப் பாசமும், பரிவும் பாண்டவர்களின் வருகையால் மங்கிவிடாமல் இருக்கவேண்டியே துரியோதனனைத் தன் தகப்பனைச் சென்று பார்க்க அனுப்பி வைத்திருந்தான்.  அவனுடைய ஆலோசனையினாலேயே துரியோதனன் இங்கே தந்தையிடம் வந்திருந்தான்.