Sunday, November 9, 2014

துஷ்சாசனன் உதவிக்கு வருகிறான்!

“என்ன சத்தியம் செய்து தரவேண்டும் மகனே?”


“என்ன நடந்தாலும் எதுவானாலும் ஹஸ்தினாபுரத்தை நான் தான் ஆட்சி புரிவேன்.  அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்.”


திருதராஷ்டிரனின் குருட்டு விழிகள் கூட ஒரு கணம் அசைந்தன.  பின்னர் தன் மகனிடம் அவன், “ஆம், இது நல்ல யோசனையாகத் தெரிகிறது மகனே!  நான் பிதாமகர் பீஷ்மரிடமும், ராணிமாதா சத்யவதியிடமும் இது குறித்துப் பேசுகிறேன்.  இருவரும் அநேகமாக இதற்கு ஒப்புதல் கொடுப்பார்கள் என எண்ணுகிறேன்.” தன் மகனின் உச்சந்தலையை மீண்டும் ஆசையுடனும், அன்புடனும் தடவிக் கொடுத்தான் திருதராஷ்டிரன்.  தன் தொண்டையில் வரவழைத்துக் கொண்ட விம்மலை அடக்கும் விதமாகத் தன் தந்தையின் பாதங்களில் முகத்தைப் புதைத்துக் கொண்டான் துரியோதனன்.  “தந்தையே, இந்தப் பரந்த உலகில் என்னை நேசிப்பார் எவரும் இல்லை.  தங்களைத் தவிர!  ஆம் தந்தையே தாங்கள் ஒருவரே என்னை மிக அதிகமா நேசிக்கிறீர்கள்.  தயங்காதீர்கள் தந்தையே. தங்கள் பவித்திரமான வாக்கை எனக்கு அளியுங்கள்.  உங்கள் மூத்த மகனாகிய நான், நான் மட்டுமே ஹஸ்தினாபுரத்தை ஆள வேண்டும் என்னும் வாக்குறுதியை எனக்கு அளியுங்கள்.”


“நல்லது மகனே, நல்லது.  உன் விருப்பம் போல் நடக்கும். நான் சத்தியம் செய்கிறேன். ஆனால் தாத்தா பீஷ்மர் என்ன நினைக்கிறார் என்பதும், என்ன செய்யப் போகிறார் என்பதும் எவர் அறிவார்கள்?”  சொன்னவண்ணம் தன் மகனுக்கு விடை கொடுத்து அனுப்பினான்.  துரியோதனனுக்குத் தான் பாண்டவர்களை எதிர்கொண்டு அழைக்க வேண்டும் என்னும் நினைப்பே மாளாத் துயரத்தைக் கொடுத்தது.  அவனால் இந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை.  அவன் மனதுக்குள் ஓர் போராட்டமே நிகழ்ந்தது.  தன் மாளிகைக்குச் சென்றவனை அங்கே அவன் வரவுக்குக் காத்திருந்த துஷ்சாசனன் வரவேற்றான்.  துரியோதனனைப் போல் தோற்றத்தில் பொலிவும், அழகும் இல்லாவிட்டாலும் துஷ்சாசனனும் வாட்டம், சாட்டமாக நல்ல உயரமும் பருமனுமாகவே காணப்பட்டான்.  அதோடு அவன் தீர்க்கமான அறிவும் அவன் முகத்தில் சுடர் விட்டது.  “தந்தை என்ன சொல்கிறார்?”என துரியோதனனைக் கேட்டான்.



“அவர் என்ன சொல்லப் போகிறார்! எப்போதும் போல் அவரால் எதுவும் இயலாமல் தான் இருக்கிறது.  கையால் ஆகாதவராகவே இருந்து வருகிறார்.  ஆனால் யுதிஷ்டிரனை ஹஸ்தினாபுரத்தின் சிம்மாதனத்தில் அமர்த்தாமலிருக்க வேண்டியவற்றைச் செய்வதாக எனக்கு உறுதி மொழி கொடுத்திருக்கிறார்.  அதே சமயம் ஹஸ்தினாபுரத்தின் சிம்மாதனத்தில் நான் அமர்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் கவனிப்பதாகச் சொல்கிறார்.  இதற்காகப் பாட்டனார் பீஷ்மரிடமும், ராணிமாதா சத்யவதியிடமும் பேசுவதாகச் சொல்லி இருக்கிறார்.  அவர்கள் சம்மதிப்பார்களா என்பது தான் புரியவில்லை.  எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. துஷ்சாசனா! தந்தை என்னை நகருக்கு வெளியே சென்று என் மனைவியுடன் பாண்டவர்களை எதிர்கொண்டு அழைக்கும்படி கேட்டுக் கொண்டார்.  அதற்கு நானும் உறுதிமொழி கொடுக்க வேண்டியதாகி விட்டது. “ தன் நிராதரவான நிலையை எண்ணி அப்படியே அமர்ந்து விட்டான் துரியோதனன்.  அவன் ஏமாற்றமும், வருத்தமும் குரலிலேயே தெரிந்தது.



தன் அண்ணனையே பொருள் பொதிந்த பார்வை பார்த்தான் துஷ்சாசனன்.  அவன் கண்கள் ஈட்டி போல் இருந்தன.  அவன் பார்வையாலேயே அவனைப் பார்த்துக் குத்துவது போல் இருந்தது துரியோதனனுக்கு. கொஞ்சம் எரிச்சலுடனேயே துஷ்சாசனன் மீண்டும் பேசினான்:”மீண்டும் சொல்லாதே!  நான் என்ன செய்வேன் என!” என்று கோபமாகக் கூறினான்.  நீ அவர்களை எதிர்கொண்டு அழைக்கச் செல்!  உன்னால் எவ்வளவு நல்லவனாக நடிக்க இயலுமோ அவ்வளவு நல்லவனாக மென்மையான, இனிமையான வார்த்தைகளால் அவர்களை நம்ப வை.  திரௌபதியைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய் என்பதையும் நான் நன்கறிவேன்.  அவள் பெயரைக் கேட்டாலே என் ரத்தம் கொதிக்கிறது.  இப்போது இங்கே நேரிலும் வரப் போகிறாள்.  நாம் இப்போது அடக்கி வாசிக்கவேண்டும்.  நாம் நல்லவர்களாக மாறிவிட வேண்டும்.  அனைவரும் நம்மை நம்ப வேண்டும். “



“தைரியத்தை இழக்காதே!  நாம் அவர்களுடன் தீர்க்க வேண்டிய கணக்குகள் இன்னும் முடிவடையவில்லை.  அவற்றை முடித்தாக வேண்டும்.  நாம் என்ன அவர்களைப் போல் ஐவரா?  நாம் நூற்றுவர்.  அவர்கள் ஐவர் தானே!  நம்மால் முடியாதது என்ன?  அவர்களை என்னிடம் விட்டு விடு.  நீ தந்தையை மட்டுமே கவனித்துக் கொள்.  அது போதும்.  உன்னால் அது சுலபமாக முடியும்.  ஏனெனில் அவர் உன்னை மிகவும் நேசிக்கிறார்.  எங்கள் அனைவரையும் விட உன்னைத் தான் அவருக்கு மிகவும் பிடிக்கும்.  உன்னைத் தான் அவர் விரும்புகிறார்.”



“நான் அறிவேன்;  நன்கறிவேன்.  அது ஒன்றே எனக்கு ஆறுதல்!”



“அது உனக்கு ஆறுதல் மட்டுமல்ல சகோதரா!  அதுவே உனக்கு பலம்!” என்று சொல்லிச் சிரித்தான் துஷ்சாசனன்.



“ஆனால் தந்தை மிகவும் இயலாதவராகவே இருக்கிறார்.  தாத்தா பீஷ்மரையோ, அந்தக் கிழவி ராணிமாதா சத்யவதியையோ ஆலோசனை கேட்காமல் சுயமாக அவரால் எந்தவித முடிவுக்கும் வர முடிவதில்லை.  அவராக எந்த முடிவும் எடுக்கத் தயங்குகிறார்.”



“நீ அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாதே!  தாத்தா பீஷ்மரை நான் கவனித்துக் கொள்கிறேன்.  பல நாட்களாக எனக்கு அவருக்கு ஒரு பாடம் கற்பிக்க ஆசை.  அவருக்குப் போதும், போதும் என்னும் அளவுக்கு நான் அவரைக் கவனித்துக் கொள்கிறேன்.”



“அது சரி அப்பா!  ஆசாரியர்?  அவர் என்ன ஆவார்? அல்லது என்ன ஆனார்?  அவருக்கும் பாண்டவர்கள் ஐவரிடம் தான் அன்பு மிகுதியாக உள்ளது.”



“அதை விடு சகோதரா!  அவருக்கும் அவர் மகன் அஸ்வத்தாமாவுக்குப் பின்னரே மற்றவர்கள்.  அவர் அஸ்வத்தாமாவை எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பதை நீ அறிய மாட்டாயா?  அஸ்வத்தாமா ஏற்கெனவே துரோணாசாரியாரிடம் கூறிவிட்டான்.  என்ன தெரியுமா? யுதிஷ்டிரன் மட்டும் ஹஸ்தினாபுரத்துக்கு அரசனாக முடி சூட்டப்பட்டால் அஸ்வத்தாமா ஹஸ்தினாபுரத்தை விட்டே சென்றுவிடுவான் எனத் தெரிவித்திருக்கிறான்.  தன் அருமை மகனைப் பிரிந்து ஆசாரியரால் எப்படி இருக்க முடியும்?  அவருக்கு இதில் மிகவும் வருத்தம்.”



“எனக்கு என்ன சொல்வது, என்ன செய்வது என்றே புரியவில்லை.”



தன் உதடுகளை அழுந்தக் கடித்துக் கொண்ட துஷ்சாசனன் மேலும் தொடர்ந்தான்:” நேற்றைய இரவில் நாங்கள் அனைவரும் கலந்து பேசினோம்.  யுதிஷ்டிரனை ஹஸ்தினாபுரத்துக்கு அரசனாக முடி சூட்டினால் அனைவரும் ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறுவோம்.  ஏற்கெனவே கர்ணன் அவனுடைய அங்க நாட்டுத் தலைநகருக்குச் செல்லவேண்டிய ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்துவிட்டான்.”



“என்ன?  நீங்கள் அனைவருமே ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்றுவிடுவீர்களா?  என்னைத் தனியாக விட்டுவிட்டா?  எப்படி மனம் வருகிறது உங்களுக்கு?” துரியோதனன் தன் நிராதரவான நிலையை ஒரு கணம் எண்ணிப் பார்த்துவிட்டுக் கத்த ஆரம்பித்தான். “ நீங்கள் அனைவரும் இல்லாமல் நான் மட்டும் இங்கே தனியாக என்ன செய்வது?  மஹாதேவா, மஹாதேவா, என்ன நடக்கப் போகிறது?  என்னை என்ன செய்ய உத்தேசித்திருக்கிறாய்?”



“எல்லாம் சரி சகோதரா.  இவை அனைத்திலிருந்து உன் மனைவியைக் கொஞ்சம் விலக்கியே வை!  அவளுக்கு மட்டும் தெரிந்துவிட்டால்!! ஆசாரியர் அவளைத் தன் அருமை மகளாகவே நினைக்கிறார்.  அந்தக் கிருஷ்ண வாசுதேவனோ தன் தங்கையாகவே நினைக்கிறான்.  இருவருக்கும் அவள் மூலம் நம் விஷயம் சென்றுவிடலாம்.  ஆகவே அவளிடம் எதையும் சொல்லிவிடாதே!  அவள் தலையிட்டு விட்டாளெனில் எல்லாமும் சர்வ நாசமாகி விடும்.”

1 comment:

ஸ்ரீராம். said...

ஆஹா.... பானுமதி பற்றி அறிந்தே வைத்திருக்கிறார்கள்!