Thursday, November 6, 2014

துரியோதனன் சாக விரும்புகிறான்!

கண்ணை விழிக்கும்போதே தன்னருகில் துரியோதனன் அமர்ந்திருக்கிறான் என்பதை திருதராஷ்டிரன் உணர்ந்தான்.  தன் மகனின் இந்த மோசமான நிலைக்குத் தான் தான் காரணம் என்னும் எண்ணம் அவனிடம் உண்டு.  ஆகையால் உள்ளூர அவனிடம் திருதராஷ்டிரனுக்கு அனுதாபம் மிகுந்தது.  ஹூம்!  தான் மட்டும் குருடாகப் பிறக்கவில்லை எனில்!!!  தன் தகப்பனின் அனுதாபத்தை துரியோதனனும் தனக்கு சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டான்.  அவனுடைய இப்போதைய நிலையையும், அவன் அடைந்த ஏமாற்றங்களையும் உருக்கமாகத் தன் தந்தையிடம் எடுத்து உரைத்தான்.  எல்லாவற்றையும் மகன் வாயிலாகக் கேட்ட திருதராஷ்டிரனுடைய குருட்டுக் கண்கள் கண்ணீரை மழையாக வர்ஷித்தன.


அவன் வாய் கோணிக்கொண்டது.  உதடுகள் மட்டுமின்றிக் கைகள், அவ்வளவு ஏன், மொத்த உடலும் நடுங்கியது.  அவன் மனம் முழுவதும் மகனின் இந்த மோசமான மனநிலையே ஆட்கொண்டது. ஆனாலும் அவனால் என்ன செய்ய இயலும்?  தன்னுடைய நலிந்த நிலையை அவன் உள்ளூர வெறுத்தான். பெயருக்குத் தான் அவன் அரசன்!  அவனால் செய்ய முடிந்ததெல்லாம் தன் மகனின் உச்சியை முகர்வதும், அவ்வப்போது ஆறுதல் வார்த்தைகள் சொல்வதும், தன் மகனைத் தடவிக் கொடுப்பதும் தான்.  “என்னால் என்ன செய்ய முடியும், மகனே?” என்று கடைசியாகக் கேட்டான் திருதராஷ்டிரன் மகனிடம். “ உனக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டங்களை நான் நன்கறிவேன்.  இப்போது நீ சொல்வதை எல்லாம் கேட்கக் கேட்க என் மனம் சுக்குச் சுக்காக நொறுங்கி விட்டது மகனே! ஆனால் என்ன செய்வது? “ தன் ஆற்றல் அற்ற தன்மையை நினைந்து நினைந்து மனம் வருந்தினான் திருதராஷ்டிரன்.  தட்டுத் தடுமாறி, வார்த்தைகளை உடைத்த வண்ணம் தன் வழக்கப்படி பேசியவன் மீண்டும் உதடுகள் கோணிக்கொள்ள துக்கத்துடன் தன் மகனைத் தடவிக் கொடுத்தான்.  அதன் மூலம் தன் மனநிலையைத் தன் மகனுக்குத் தெரிவிக்க முயற்சி செய்தான்.


“நீ சொல்வது சரியே மகனே!  நீ தான் இந்த நாட்டுக்கு யுவராஜா!  நீ அதற்கு முற்றிலும் தகுதியானவனே!  ஆனால் பிதாமகர் பீஷ்மரும் சரியாகவே சொல்கிறார்.  எல்லாம் வல்ல மஹாதேவன் அருளாலே பாண்டவ சகோதரர்கள் ஐவரும் உயிருடன் இருக்கின்றனர்.  இது மிகவும் நல்ல செய்தியன்றோ! நமக்கு ஏற்பட்டிருந்த மிகப் பெரிய களங்கத்தை இது நீக்கி விட்டது.  இந்நாட்டு மக்கள் அனைவரும் அவர்கள் ஐவரும் உன்னால் தான் கொல்லப்பட்டதாகவன்றோ சொல்லிக் கொண்டிருந்தனர்!  இப்போது அந்தக் கெட்ட பெயர் நீங்கி விட்டது.  மகனே!  நான் உனக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என உண்மையாக விரும்புகிறேன்.  என்னாலும் ஏதேனும் செய்ய முடியும் என நிரூபிக்க விரும்புகிறேன்.  ஆனால் என்னால் இயன்றது என்ன என்று தான் புரியவில்லை!” இயலாமையுடன் பேசினான் திருதராஷ்டிரன்.


“தந்தையே, தாங்கள் இந்த நாட்டின் மன்னர்!  உங்களால் எவ்வளவோ செய்ய முடியும்!” என்று சொன்ன வண்ணம் தந்தையின் கரங்களைப் பிடித்துத் தன் கைகளுக்குள் வைத்த துரியோதனன் அதன் மூலம் தன்னுடைய வேண்டுகோளைத் தந்தைக்குத் தெரிவித்தான்.


“துரியோதனா, என் அருமை மகனே!  பாண்டவர்களின் உரிமையை நாம் எப்படி மறுக்க முடியும்? அது அரச நீதிக்குப் புறம்பானது.  அதர்மமான ஒன்று.  மேலும் பாட்டனார் பீஷ்மரை எதிர்க்க என்னால் இயலாது.  நாம் அவர்களோடு போர் தொடுக்கவா முடியும்?  யோசித்துப் பார்  துரியோதனா!  நாம் இப்போது பாண்டவர்களோடு போர் தொடுத்தால், அது பாஞ்சாலத்துடனும் போர் தொடுப்பதற்குச் சமம் ஆகிவிடும்.  “


“அதுமட்டுமல்ல மகனே!  கிருஷ்ண வாசுதேவன் அவர்கள் பக்கம் துணையாக நிற்கின்றான்.  அவனுடைய யாதவப் படைகளும் அவர்களுக்கே உதவி செய்யும்.  உன்னுடைய தண்டாயுத குரு பலராமன், அரச குரு துரோணர், விராட அரசன், சுநீதன், அனைவரும் அவர்கள் பக்கம் நிற்கின்றனர். “ தன் குருட்டுக் கண்களை மகன் பக்கம் திருப்பிய திருதராஷ்டிரன் தன் தலையையும் ஆட்டி மறுப்புத் தெரிவித்தான்.  “விதுரன் சொல்வது போல் அது குரு வம்சத்தினரின் அழிவுக்கு வழி வகுக்கும்.” என்றும் கூறினான்.


“தந்தையே, என்னையும் என் சகோதரர்களையும் குறித்தும் தாங்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.  உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய இடத்தில் இப்போது யுதிஷ்டிரன் மீண்டும் யுவராஜா ஆகிவிட்டான் எனில்!! ஆஹா, குரு வம்சத்தின் இந்தப் புராதனமான பரதன் அமர்ந்த சிம்மாதனத்துக்கும் அவனே உரியவன் ஆகிவிடுவானே!  துருபதனின் மகள் அந்தக் கிருஷ்ணை இந்தச் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தினியாக அவன் அருகில் வீற்றிருப்பாள். “ துக்கம் தாங்க முடியாமல் துரியோதனன் குரல் தழுதழுத்தது.  தொண்டையை அடைத்துக் கொண்டது.  அவன் மனதின் கசப்பு முழுவதும் அவன் குரலில் தெரிந்தது.  எத்தனை மாதங்கள்!  ஆம், மாதக் கணக்காக அவன் திரௌபதியை வெல்வது குறித்துப் பல கனவுகள் கண்டான். வெற்றி அவனுக்கே என்பதில் உறுதியாக்க இருந்ததோடு இதன் மூலம் தன் அரசியல் வாழ்க்கையில் ஏற்படப் போகும் முன்னேற்றங்களையும் கௌரவத்தையும் குறித்துச் சிந்தித்துப் பெருமிதம் அடைந்திருந்தான்.


திரௌபதியை வெல்வதே தன் அரசியல் வாழ்க்கையில் தான் அடையப் போகும் முன்னேற்றங்களுக்கான முதல் படி எனக் கனவு கண்டான்.  இப்போது?? அவனால் மேலே சிந்திக்கவே முடியவில்லை.  தலையைக் குனிந்த வண்ணம் கண்ணீரை மௌனமாகப் பெருக்கினான்.  தழுதழுத்த குரலில், “தந்தையே, தந்தையே, நான் இன்னமும் ஏன் உயிருடன் இருக்க வேண்டும்?  நான் சாக விரும்புகிறேன்.” என்றான்.

1 comment:

ஸ்ரீராம். said...

பாசம்தானே 'துரி'க்காக 'திருதரா'வை தவறு செய்யத் தூண்டுகிறது!