Tuesday, November 29, 2016

பின் வருந்துயர்க்கே சிந்தனை உழல்வரோ!

பீஷ்மர் தன் ஊஞ்சல் படுக்கையில் படுத்துக் கொண்டு அப்படியும் இப்படியுமாகப் புரண்டு கொண்டிருந்தார்.. உள்ளூரத் தவித்துக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம். அவனுக்கு அப்போதைய சூழ்நிலை நன்றாகவே புரிந்திருந்தது. குரு வம்சத்தினரின் முக்கியஸ்தர்களில் பலரும் தலைவர்கள் பலரும் யுதிஷ்டிரனோடு இருக்கவே விரும்பி இந்திரப் பிரஸ்தம் வந்து விட்டனர். அங்கே தங்கள் வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக் கொண்டும் விட்டனர். இங்கே இருந்தவர்கள் அனைவரும் துரியோதனனுக்கு ஏதோ ஒரு வகையில் கட்டுப்பட்டவர்கள்; அவனிடம் விசுவாசம் காட்டுபவர்கள்; அவன் ஆணையை மீறாதவர்கள். ஹஸ்தினாபுரத்திலேயே தங்கள் வாழ்க்கையைக் கழிக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பதால் துரியோதனனுக்குக் கட்டுப்பட்டு நடப்பது தவிர வேறு வழி இல்லை அவர்களுக்கு. துரியோதனனின் நண்பர்கள் அனைவரும் பீமன் மட்டும் சூதாட்டத்தின் நடுவில் தலையிட்டான் ஆனால் அவனை எதிர்க்கவும், அவனிடமும் சவால் விடவும் அறை கூவல் விடுக்கவும் தயங்கவே மாட்டார்கள். அவர்கள் அதைத் தான் முடிவும் செய்திருக்கிறார்கள். அதை பீஷ்மர் நன்கறிவார். அவரையும் அறியாமல் ஓர் புன்னகை பிறந்தது. “ம்ம்ம்ம், என்னைச் சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல! என்ன செய்யப் போகிறார்கள், பார்க்கலாம்!” என்று தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார்.

அவர் அப்போது தான் படுக்கையில் படுத்து ஓய்வெடுக்கத் தொடங்கினார். அப்போது பார்த்து விதுரர் உள்ளே வரலாமா என்று அனுமதி கேட்டுக் கொண்டு நுழைந்து விட்டார். விதுரரை அந்த நேரத்தில் அங்கே கண்ட பீஷ்மர் ஆச்சரியம் அடைந்தார். விதுரரே நேரில் வர வேண்டுமானால் விஷயம் மிகவும் முக்கியம். இந்த நேரத்தில் விதுரர் வரக் காரணம் இருந்தால் ஒழிய அவர் வர மாட்டாரே! பீஷ்மர் தனக்குள்ளே நினைத்துக் கொண்டார். “உள்ளே வா! விதுரா!” என்று அவரை உள்ளே அழைத்தார். விதுரர் தனியாக வரவில்லை. அவருடன் யாரோ ஓர் மனிதன் தன் முகத்தைத் தன் மேல் துண்டால் மறைத்துக் கொண்டு வந்திருந்தான். “யார் இவன்?” என்று பீஷ்மர் கேட்டார். விதுரருடன் வந்தவன் தன்னுடைய முகத்தை மூடியிருந்த துணியை எடுத்தான். பின்னர் கீழே குனிந்து பிதாமஹரை நமஸ்கரித்தான்.

“யுதிஷ்டிரா, குழந்தாய்! நீயா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் பீஷ்மர். யுதிஷ்டிரன் தன் கைகளைக் கூப்பிய வண்ணம் எழுந்து நின்றான். “நீ, இந்த நேரத்தில் இங்கே எதற்கு வந்தாய்? என்ன இது விதுரா! என்ன விஷயம்?” என்று விதுரரிடமும் கேட்டார் பீஷ்மர். “மிக மிக முக்கியமானதொரு விஷயம், பிதாமஹரே! “ என்றார் விதுரர். யுதிஷ்டிரனிடம் திரும்பினார் விதுரர். “யுதிஷ்டிரா, நீ இப்போது தாத்தா அவர்களிடம் என்ன சொல்ல வேண்டுமென்று நினைக்கிறாயோ அதைச் சொல்லலாம்.” என்று கூறினார். “நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள், உதவி கேட்கப் போகிறேன்.” என்றான் யுதிஷ்டிரன். “அது இப்போது ஆடப் போகும் சூதாட்டத்துடன் சம்பந்தப்பட்டது.” என்றும் கூறினான்.

“குழந்தாய்! நீ ஏன் இந்தச் சவாலுக்கு ஒத்துக் கொண்டாய்? முட்டாளா நீ?” என்று கோபத்துடன் கேட்டார் பீஷ்மர். பின்னர் அதே கடுமையான குரலில், “ஹஸ்தினாபுரத்துக்கே வரமாட்டோம் என்று மறுப்பதற்கென்ன? நீ மட்டும் வருவதற்கு மறுத்திருந்தால், வராமல் இருந்திருந்தால், துரியோதனன் அதனால் எல்லாம் உங்களுடன் போர் தொடுக்க ஆயத்தம் ஆகி இருக்கப் போவதில்லை. அவனுக்கு அவ்வளவு தைரியம் எல்லாம் இல்லை. அப்படியே அவன் போரை அறிவித்திருந்தாலும், அதில் அவன் வெல்லப்போவதும் இல்லை!” என்றார் பீஷ்மர்.

“தாத்தா, நான் பேசலாமா?” யுதிஷ்டிரன் கேட்டான்.

“சொல், குழந்தாய், சொல். உன் மனதில் உள்ளதைச் சொல்! ஆனால் உன்னுடைய பலஹீனத்தினால் நீ நம் அனைவரையும் ஓர் பெரிய ஆபத்தில் மாட்டி விட்டாய்!” என்றார் பீஷ்மர். யுதிஷ்டிரன் கூப்பிய கரங்களுடன், “தாத்தா, நான் ஓர் முட்டாளாக இருக்கலாம். ஆனால் இப்போது நாங்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறோம். உங்களால் தான் எங்களைக் காப்பாற்ற முடியும். அதனால் தான் உங்கள் உதவியை வேண்டி இங்கே இந்த நேரத்தில் வந்திருக்கிறேன், தாத்தா!” என்றான் யுதிஷ்டிரன்.

“என்ன வேண்டும், உனக்கு?” பீஷ்மர் கேட்டார்.

“என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவெனில் சூதாட்டத்தின் போது நடுவில் என்ன நடந்தாலும் மதிப்புக்குரிய தாத்தா அவர்கள் குறுக்கிட வேண்டாம் என்பதே ஆகும்! அந்த ஆட்டம் மிக மோசமாக விதிமுறைகளை மீறி விளையாடப் பட்டாலும் நீங்கள் அதைக் குறித்து எதுவும் சொல்ல வேண்டாம்!” என்றான் யுதிஷ்டிரன்.

“என்ன?” தன் படுக்கையில் எழுந்து அமர்ந்து விட்டார் பீஷ்மர். தன் கண்களைத் தேய்த்துவிட்டுக் கொண்டு தான் காண்பது கனவல்லவே என உறுதி செய்து கொண்டார். பின்னர் வறண்ட சிரிப்புடன், “ நான் விழித்திருக்கிறேனா? தூங்குகிறேனா? தூக்கத்தில் கனவுகள் காண்கிறேனா?” என்று கேட்டுக் கொண்டார். “இல்லை தாத்தா, இல்லை! தாங்கள் தூங்கவெல்லாம் இல்லை! நினைவில் தான் இருக்கிறீர்கள். தூங்கவும் இல்லை. ஷகுனி எவ்வளவு மோசமாகச் சூழ்ச்சிகள் எல்லாம் செய்து இந்த விளையாட்டை ஆடினாலும் நீங்கள் நடுவே குறுக்கிட வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்ளவே நான் இங்கே வந்தேன்.” என்று மீண்டும் சொன்னான் யுதிஷ்டிரன். அதைக் கேட்ட பீஷ்மர் கண்கள் வியப்பில் விரிந்தன. விரிந்த கண்களுடன் அவர், “நீ ஏன் என் தலையீடு இருக்கக் கூடாது என்று விரும்புகிறாய்? என்ன காரணம்?” என்று கேட்டார்.

யுதிஷ்டிரன் சற்று நேரம் மௌனம் காத்தான். பின்னர் மெல்லிய குரலில், “மதிப்புக்குரிய தாத்தா அவர்களே! இந்திரப் பிரஸ்தத்தை விட்டு நாங்கள் கிளம்புவதற்குச் சில நாட்கள் முன்னர் ஆசாரியர் வேத வியாசர் ஓர் தீர்க்க தரிசனத்தைக் கண்டறிந்து என்னிடம் சொன்னார். அதன்படி ஓர் மாபெரும் யுத்தம் நடக்கப் போகிறது என்றும் அந்த யுத்தத்தில் க்ஷத்திரியர்கள் பலரும் உயிரிழப்பார்கள் என்றும் அந்த யுத்தத்தின் மையக்காரணமாக நான் இருப்பேன் என்றும் சொன்னார்.” என்றான் யுதிஷ்டிரன். குரு வம்சத்தின் இரு பெரிய கிளைகளான நீங்கள் இருவரும் ஆளுக்கொரு பக்கம் இன்னொருவரை அழிக்க முனைந்தால் அது மாபெரும் யுத்தத்தில் தான் கொண்டு விடும்!” என்றார் பீஷ்மர்.

1 comment:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.