Friday, November 25, 2016

புவிக்காவலர் தம்மிற் சிறந்த நீர் இன்று கர்மம் பிழைத்திடுவீர் கொலோ?

“அப்படியா? அண்ணா, ஆசாரியர் எப்போது தமது தீர்க்கதரிசனத்தை உங்களிடம் தெரிவித்தார்?” பீமன் கேட்டான். “ராஜசூய யாகம் முடிந்ததும் என்னிடம் விடை பெற வந்திருந்தார் அல்லவா! அப்போது தான், அன்று தான்!” என்றான் யுதிஷ்டிரன். யுதிஷ்டிரன் மீண்டும் அந்த நாளை நினைத்து உணர்ச்சிவசப்பட்டதால் அவன் கைகள் நடுங்கின. விதுரரைப் பார்த்துத் திரும்பினவன் கூறினான்: “சித்தப்பா, நீங்கள் இப்போது கொண்டு வந்திருக்கும் அழைப்பு சாமானியமானதில்லை. இது தான் ஆசாரியரின் தீர்க்க தரிசனங்களை உண்மையாக்கப் போவதற்கான முதல் படி!” அவன் முகம் வேதனையைக் காட்டியது. அவனுடைய மிதமிஞ்சிய வேதனையைக் கண்ட அனைவரும் மனம் வருந்தினர். அவன் சொன்ன வார்த்தைகளின் உண்மையை நினைத்து எல்லோருடைய மனமும் வேதனையில் ஆழ்ந்தது.

மிகுந்த மனக்கசப்புடன் பீமன் சொன்னான்:”அண்ணா, நாங்கள் உன்னிடம் விசுவாசமாகவும் உண்மையாகவும் இருப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறோம். எங்களைக் கழுத்தை அறுக்கப் போகிறேன் என்கிறாய்! சரி, அப்படியே ஆகட்டுமே! உன்னுடைய முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்! இதை விட வேறு என்ன வேண்டும் உனக்கு?”

“உன்னுடைய விசுவாசத்தை வைத்து நான் வியாபாரம் செய்ய நினைக்கவில்லை.இந்தப் பிரச்னை நமக்கும் துரியோதனனுக்கும் இடையில் மட்டும் ஏற்படவில்லை! நம் அனைவரிடமும் இந்தப் பிரச்னை முளைத்துவிட்டது. க்ஷத்திரிய தர்மத்தைக் கைவிடுமாறு உன்னிடம் நான் சொல்ல மாட்டேன். சொல்லவும் முடியாது!”

“எதிர்காலம் என்பது இருட்டில் இருப்பதாக நினைக்காதீர் அண்ணாரே!” என்றான் அர்ஜுனன். “காலம் ஒரு நாள் மாறும், அப்போது அனைத்துமே மாறும். நல்லவையாகவே மாறும். இப்போது தேவை நம் ஒற்றுமை மட்டுமே. நாம் ஐவரும் ஒற்றுமையுடனே இருப்போம். பலமுறை, பல சமயங்களிலும் உம்முடைய முடிவுகளால் நான்க்அள் வருந்தி இருக்கிறோம். ஆனாலும் உம்மைக் கைவிட்டதில்லை. நீர் எடுக்கும் முடிவுகளை ஏற்றுக்கொள்ளவே செய்திருக்கிறோம்.” விதுரர் தன்னுடைய விசித்திரமானதொரு உணர்வால் யுதிஷ்டிரன் எடுத்திருக்கும் முடிவின் அடிப்படைக் காரணம் என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டு விட்டார். புனிதமான அக்னியில் தன்னைத் தானே ஆஹூதி கொடுத்துக் கொள்ள அவன் தயாராக இருக்கிறான் என்பதும் தெரிய வந்தது.

“இது மிகவும் மேன்மையானதொரு முடிவு, தீர்மானம், யுதிஷ்டிரா!” என்ற விதுரர் பீமனிடம் திரும்பி, “மூத்தவன் தன்னுடைய அரச தர்மத்தைக் கைவிடாமல் உறுதியாக அதில் இருக்க விரும்புகிறான். அதோடு அவன் விரும்புவதெல்லாம் சமாதானமே! பீமா, உன்னுடைய விருப்பத்தை மீறி அவன் தீர்மானத்தை நீ ஆதரிக்க வேண்டி இருந்தால், நடப்பது என்னவாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு அவனை ஆதரிப்பாயா? அவன் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பாயா?” என்று கேட்டார். அப்போது யுதிஷ்டிரன் சொன்னான்.

“சகோதரர்களே, நான் என்னை விட, திரௌபதியை விட உங்கள் நால்வரையும் அதிகமாக நேசிக்கிறேன். நாம் ஐவரும் ஒற்றுமையாக இருந்தால் தான் நாம் நம்முடைய ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைக்க முடியும். நம் ஒற்றுமையில் தான் அது அடங்கி இருக்கிறது. அதோடு அல்ல. நம் தாய் நமக்கு ஆரம்பத்திலிருந்து அளித்து வரும் உத்வேகம், பாஞ்சால இளவரசியின் ஊக்கம் அனைத்துமே இதற்குக் காரணம். ஆனால் தம்பிகளே, இப்போது நாம் எப்படி முடிவெடுத்தாலும் ஆபத்து நம்மைத் தாக்கக் காத்திருக்கிறது!” என்றான் யுதிஷ்டிரன். “அண்ணா, என்ன நடந்தாலும் சரி, நீங்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடந்து கொள்வோம்!” என்றான் அர்ஜுனன்.

குந்தி சொன்னாள்:”குழந்தைகளா, நீங்கள் ஐவரும் வாழ்நாள் முழுவதும் ஒற்றுமையாகவும் ஒன்றாகவும் இருப்பதாக முடிவெடுத்திருக்கிறீர்கள். இந்த ஒற்றுமையில் தான் உங்கள் பலம் முழுவதும் உள்ளது. படகை நங்கூரம் பாய்ச்சி அசையாமல் வைப்பதைப் போல் உங்கள் ஒற்றுமை தான் உங்களைக் குலைக்காமல் பாதுகாக்கும் கவசம். இதை அறிந்து கொண்டதால் தான் திரௌபதியும் உங்கள் ஐவரையும் மணக்கச் சம்மதித்தாள்.”

இப்போது திரௌபதி சொன்னாள்:” என் கண்ணெதிரே பலவித துர் சகுனங்கள் தெரிகின்றன. நடப்பவை எதுவும் நன்மையாக இருக்காது என்றே தோன்றுகிறது. நானும் உங்கள் ஐவரையும் ஒற்றுமையுடனே இருக்க வைப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன். உங்கள் ஒற்றுமை என்னால் குலையக் கூடாது. அப்படிக் குலைந்து விட்டால் என் வாழ்நாளே வீணாகிவிடும். அப்புறம் நான் இங்கே இருக்க மாட்டேன். காம்பில்யத்திற்கே திரும்பிச் சென்றுவிடுவேன்.” என்று உறுதியாகக் கூறினாள். பீமன் மனதில் கோபம் பொங்கியது. அதை அடக்கிக் கொண்டு அவன் பேசினான். “அண்ணா, எங்களை ஓர் கஷ்டமான நிலையில் நிறுத்திவிட்டாய்! மிக மோசமானதொரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்குமாறு எங்களைக் கொண்டு வந்திருக்கிறாய். அதை ஏற்கும்படி நாங்கள் கடமைப்பட்டு விட்டோம். என்ன செய்யலாம்? ஆசாரியர் முக்காலமும் உணர்ந்த முனிவர்! அவருக்குக் கடந்த காலமும் தெரியும். நிகழ்காலமும் தெரியும், எதிர்காலமும் அறிவார்! அவர் வாயாலேயே ஓர் மாபெரும் போர் வரப்போவதாகத் தெரிந்திருப்பதால் நீ என்னதான் அதைத் தடுக்க முயன்றாலும் அந்தப் போர் வந்தே தீரும்! ஆகவே நாம் போரை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்!” என்றான்.

“நீ யுதிஷ்டிரன் பக்கம் தானே இருப்பாய், பீமா? அதற்கு நீ தயாராகி விட்டாயா?” என்று கேட்டார் விதுரர். “எங்கள் விருப்பம் எல்லாம் ஏற்கெனவே முடிந்து போன ஒன்று. இனி நாங்கள் புதிதாக எதையும் தேர்ந்தெடுக்கப் போவதில்லை, அதுவும் இந்த முடிவு அம்மா குந்தி தேவி முதல்முறையாக எங்களை ஹஸ்தினாபுரம் அழைத்து வந்தபோது எங்களைக் கேட்டுக் கொண்டாள் அல்லவா? அப்போதே முடிந்து விட்டது. அப்போது அம்மா சொன்னாள்: எந்தக் காலத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் நால்வரும் மூத்தவன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று எங்கள் நால்வரிடமும் உறுதிமொழி வாங்கிக் கொண்டாள். அன்றிலிருந்து இன்றுவரை நாங்கள் மூத்தவர் சொல்லைத் தான் கேட்கிறோம். நாங்கள் அந்த வார்த்தையைக் கடைசிவரை காப்பாற்றவும் செய்வோம், அதன் மூலம் நீங்கள் எங்கள் தலையைக் கொய்தாலும் சரி! மூத்தவர் சொல்லே எங்களுக்கு இறுதி முடிவு!”

நகுலன் ஆமோதிப்பாகத் தலையை அசைத்தான். அப்போது யுதிஷ்டிரன், சஹாதேவனைப் பார்த்து, “நீ எல்லோரையும் விட புத்திசாலி, விவேகமானவன். நீ என்ன சொல்கிறாய் அப்பா இதற்கு?” என்று கேட்டான். அதற்கு சஹாதேவன் யோசனையுடன் தன் தலையைத் தடவிக் கொண்டான். “ நாங்கள் எங்களுடைய சத்தியத்தை உடைத்துவிட்டோமானல், தர்மத்தை ஏமாற்றியவர்கள் ஆவோம். தார்மீக ரீதியாகவும் இதுதான் சரி! இல்லை எனில் நாங்கள் தார்மிக பலத்தையும் இழந்தவர்களாவோம்.” அப்போது விதுரர் இடைமறித்தார். “மூத்தவனே, போதும், போதும் இனி இதைக் குறித்து நாம் விவாதிக்க வேண்டாம். இதோ பார், உன் தம்பிகள் நால்வரும் உனக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதி கூறிவிட்டார்கள்; உறுதியாகவும் இருப்பார்கள். இந்த விஷயத்தை அவர்கள் உன் கைகளிலேயே விட்டு விட்டார்கள்! நீ சொல்வதே இறுதி முடிவு!” என்றார். அப்போது திரௌபதி, “எனக்கு அதிர்ச்சியில் மிரட்சி ஏற்பட்டு விட்டது. ஆஹா, இப்போது மட்டும் வாசுதேவக் கிருஷ்ணன் இங்கிருந்தால்! அவனுடைய ஆலோசனைகளை ஏற்றால் அதுவே நமக்குச் சரியாக இருந்திருக்கும். நமக்கு அவன் வழிகாட்ட மாட்டானா என எண்ணுகிறேன்.நிலைமை ரொம்பவே மோசம் தான். ஆனாலும் வ்ருகோதர அரசர், தன்னுடைய சத்தியத்தை மறக்காமல் பெரியவருக்கு அதை நிறைவேற்றி கௌரவப்படுத்துவார் என்றே நம்புகிறேன்.” என்றாள்.

யுதிஷ்டிரன் கண்களில் கண்ணீருடன், தன் சகோதரர்கள் நால்வரையும் பார்த்தான். தன் தாயையும், மனைவியையும் மாறி மாறிப் பார்த்தான், தன் மனதுக்குள்ளாக அவர்கள் அனைவரும் தன்னிடம் காட்டும் மாறா விசுவாசத்துக்கு நன்றி சொன்னான். “சித்தப்பா, நான் ஓர் பயங்கரமான சபதம் எடுத்திருக்கிறேன். அதன்படி நான் எப்பாடுபட்டாவது ஆசாரியர் சொன்ன தீர்க்க தரிசனத்தைப் பொய்யாக்கியாக வேண்டும். இது என் வாழ்க்கையின் மிகப் பெரிய சவால். என்ன நடக்கப் போகிறது என்றோ எனக்காக என்ன காத்திருக்கிறது என்றோ நான் அறியேன். ஆனாலும் நான் என் தர்மத்தைக் கைவிட முடியாது. அது என்னை எப்படி நடக்கவேண்டும் என்று சொல்கிறதோ அதன்படி தான் நடப்பேன். பாண்டுவின் புதல்வர்கள் ஐவரும் க்ஷத்திரிய தர்மத்தையும் அரச தர்மத்தையும் மதிக்காமல் நடந்து கொண்டார்கள் என்றோ அதைச் சரிவரக் கடைப்பிடிக்கவில்லை என்றோ யாரும் சொல்லக் கூடாது! தர்மத்திற்கு எதிராகவும் அதற்கு முரணாகவும் உண்மையில்லாமலும் நான் நடந்து கொள்ளவும் மாட்டேன்.”

“உன்னுடைய முடிவு தான் என்ன?” என்று எரிச்சலுடன் கேட்டான் பீமன். “எங்கள் கழுத்தை நீ எப்போது அறுக்கப் போகிறாய் என்பதைச் சரியாகச் சொல்லிவிட்டே செய்!” என்று மேலும் கூறினான். அப்போது யுதிஷ்டிரன் பீமனின் கோபத்தை லட்சியம் செய்யாமல், “உங்கள் அனைவரின் அன்பாலும், பாசத்தாலும் நான் நெகிழ்ந்து விட்டேன். என்னிடம் நீங்கள், அம்மா குந்தி தேவி மற்றும் பாஞ்சால இளவரசி திரௌபதி ஆகியோர் வைத்திருக்கும் நம்பிக்கையும், பாசமும் பரிவும் என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது!” என்றவன் தன் தலையைக் குனிந்த வண்ணம் நடுங்கிய குரலில் மேலும் பேசலானான்.

“விதுரச் சித்தப்பா! இதோ என் முடிவு. பெரியப்பா திருதராஷ்டிரனிடம் சொல்லுங்கள். அவர் அழைப்பை ஏற்று நாங்கள் ஹஸ்தினாபுரம் வருகிறோம் என்று சொல்லுங்கள். அவருடைய விருப்பத்துக்கு நாங்கள் கட்டுப்பட வேண்டும். ஹஸ்தினாபுரம் வந்து அங்கே அவர் கட்டளை என்னவோ அதன்படி நடந்து கொள்கிறோம்.” என்றான். திரௌபதி மிகக் கடுமையாகவும் கோபத்துடனும் கூடிய கண்களுடன் யுதிஷ்டிரனைப் பார்த்தாள். அவள் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்தது.

“மூத்தவரே, நீர் எங்கள் அனைவரையும் துரியோதனனுக்கு விற்று விட்டீர்கள்!” என்றாள் திரௌபதி.