Sunday, November 13, 2016

குழப்பத்தில் யுதிஷ்டிரன்!

யுதிஷ்டிரனுக்கு மிகவும் சோர்வாகவும் மனதில் வருத்தமும் ஏற்பட்டது. நீண்ட மன அழுத்தத்தில் தவித்தான். ஒரு மாபெரும் யுத்தம் வரப் போகிறது என்பதும் அந்த யுத்தம் தங்கள் குரு வம்சத்தினரிடையேயே ஏற்படப் போகிறது என்றும் உணர்ந்தான். அந்த எண்ணமே அவனை நிலை கொள்ளாமல் தவிக்கச் செய்தது. தனக்குத் தானே பேசிக் கொண்டான். “ ஏ, கடவுளே! இது என்ன சோதனை! நான் எப்படி சமாதானத்தையும், அமைதியையும் நிலை நாட்டப் போகிறேன்! ராஜசூய யாகத்துக்கு வந்த முனிவர்கள் அனைவரும் சமாதானமும் அமைதியும் நிலவப் பிரார்த்தனைகள் செய்தனர். ஆனாலும் இங்கே சமாதானம் என்பதே இல்லையே! அமைதி எங்கே கிடைக்கும்? உண்மையில் பீமன் சொல்வது போல் ஒரு மாபெரும் யுத்தத்துக்கும் இன்னொரு மாபெரும் யுத்தத்துக்கும் இடையில் தான் அமைதியும் சமாதானமும் உறைந்திருக்கின்றன.”

யுதிஷ்டிரன் கண்கள் மேல் நோக்கிச் சென்றன. அங்கே ஏதேதோ காட்சிகளைக் காண்பவன் போல் அவன் முகம் மாறி மாறி உணர்வுகளைக் காட்டியது. அவன் ஒவ்வொருவராக நினைத்தான். சற்றும் கருணையோ, இரக்கமோ இல்லாமல் ஆரிய வர்த்தத்தையே எரித்துச் சாம்பலாக்கிய கார்த்தவீரியன், அவனுக்கு முன்னால் மஹரிஷி பரசுராமர், க்ஷத்திரியர்களிடம் கொண்ட கோபத்தால் க்ஷத்திரிய குலத்தையே அழிக்க வேண்டியும் அவர் எல்லைக்குள் நுழைந்தவர்களை எதிர்த்தும் செய்த போர்கள்! அதன் மூலம் அமைதியை நிலைநாட்ட முயன்றாரா? அது மட்டுமா? ஏன் நம், பரத குலத்தில் குரு வம்சத்தில் தோன்றிய நம் முப்பாட்டன் ஷாந்தனு! அவரும் தான் எத்தனை எத்தனை போர்களைச் சந்தித்திருக்கிறார்! எத்தனை அரசர்களைத் தனக்குக் கீழே கொண்டு வந்திருப்பார்! தன்னுடைய சக்கரவர்த்தி பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எத்தனை மக்களின் ரத்தம் ஆறாக ஓடி இருக்கிறது! மகதத்தின் ஜராசந்தன்! எத்தனை கொலைகளில் ஈடுபட்டிருக்கிறான்! எத்தனை அரசர்களைத் துரத்தித் துரத்திக் கொன்றிருக்கிறான்! தன்னுடைய ஆதிக்கத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்பதற்காக மதுராவையே எரித்துச் சாம்பாலாக்கி யாதவர்களை அங்கிருந்து துரத்தினான்! அவனுடைய ஆவல் பூர்த்தி அடையவேண்டும் என்பதற்காக நூறு அரசர்களைப் பிடித்து அக்னிக்கு இரையாக்கி யாகம் செய்ய நினைத்தான்!

ஆனால் எல்லோரும் நினைத்தது என்னவோ ஜராசந்தன் இறந்துவிட்டான் எனில் அதோடு தொல்லைகள் எல்லாம் ஒழிந்தன, இனி அமைதி தான்! சமாதானம் தான் என்றே நினைத்தனர். ஆனால் நடந்தது! அவன் நண்பன் சிசுபாலன் முழுதும் வெறுப்பைச் சுமந்து கொண்டு வந்து இங்கே காட்டியதில் இன்னொரு போர் வரும்போல் இருந்தது தடுக்கப்பட்டு சிசுபாலனைக் கொன்றதில் முடிந்தது. இப்போது!  ஜராசந்தனுக்கும், சிசுபாலனுக்கும் நெருங்கிய நண்பன் ஆன ஷால்வன் இதற்குப் பழி வாங்குகிறான். சௌராஷ்டிரத்தை முற்றுகை இட்டிருக்கிறான். எப்படியோ ஒற்றர்கள் அறியாமல் உள்ளே நுழைந்து கிராமப்புறங்களை எரித்து வருகிறான். எல்லாவற்றுக்கும் மேலாக கிருஷ்ண வாசுதேவனின் தந்தை வசுதேவரைக் கடத்திச் சென்றிருக்கிறான். கொன்றுவிடுவதாக மிரட்டுகிறான்; அல்லது கொன்றே விட்டானா என்பது தெரியவில்லை! நிச்சயமாக யாதவர்கள் அனைவருமாகச் சேர்ந்து அவனை நசுக்கிவிட, அழித்துவிடத் தான் முனைவார்கள். அவனைத் தோற்கடிப்பதோடு அவர்கள் திருப்தி அடைய மாட்டார்கள். ஷால்வன் முற்றிலும் அழிய வேண்டும்! அதுவரை ஓயப் போவதில்லை! ஆனால் ஒரு விதத்தில் அவர்கள் செய்ய இருப்பதும் சரியானது என்றே தோன்றுகிறது.

ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான் யுதிஷ்டிரன். ‘துரியோதனன் அழியும் வரை நமக்கு நிம்மதி இல்லை. ஆரியவர்த்தமும் சமாதானமும் அமைதியும் நிரம்பிய பகுதியாக இருக்காது என்று என் சகோதரர்கள் நால்வரும் நினைக்கின்றனர். அதை நம்புகின்றனர். அவனுடன் போர் நடத்த வேண்டும் என்றும் அவனைத் தோற்கடித்து வெற்றி பெற வேண்டும் என்றும் எண்ணுகின்றனர். ஆனால்!!! ம்ம்ம் இது ஒரு பக்கம் இருக்க ஆசாரியர் வேதவியாசரின் தீர்க்க தரிசனம்! திகைப்பை உண்டாக்குகிறது. மாபெரும் போர் நடக்கப் போவதாகவும் அந்தப் போரின் முக்கிய காரணகர்த்தாவாக நான் இருப்பேன் என்றும் சொல்கிறார்! என்ன தான் நடக்கப் போகிறது?” யுதிஷ்டிரன் மனதுக்குள் புலம்பினான். மீண்டும் அவன் யோசனைகள் தொடர்ந்தன. அவனால் துரியோதனனைப் பார்த்துப் பரிதாபப் பட முடிந்தது.

“பாவம் அந்த துரியோதனன்! அவன் வாழ்நாளில் நினைத்தது எதுவும் நடக்கவில்லை! அவன் எனக்கு முன்னாலேயே பிறந்திருக்க வேண்டும்! ஆனால் ஏதோ ஒரு விபத்தினால் எனக்குப் பின்னர் பிறந்தான். அதோடு முடிந்ததா? அவன் தந்தை பிறவிக்குருடாகப் போய்விட்டார். ஆகவே அவன் ஹஸ்தினாபுரத்தின் பாரம்பரிய அரியணைக்கு உரியவன் அல்ல என்று பெரியோர் முன் மரபுகளை ஒட்டி முடிவெடுத்து விட்டனர். பிறவிக்குருடனுக்குப் பிள்ளையாகப் பிறந்தது அவன் குற்றமா என்ன? இப்போது அவன் தனக்குரியவை என்று நினைக்கும் அந்தப் பரம்பரை அரச பதவியை நம்மிடமிருந்து அதாவது எங்கள் ஐவரிடமிருந்தும் பிடுங்க நினைக்கிறான். அவனுக்குத் தான் அந்த அரச பதவி உரியது என்று எண்ணுகிறான். இதில் தவறு சொல்ல முடியாது எனினும் பீமன், மிகவும் தைரியமும் புத்திசாலியும் ஆன பீமன், நாம் ஒரு மாபெரும் போருக்குத் தயார் ஆகவில்லை எனில் சமாதானம் என்பதே கிடைக்காது என்கிறான்.”

யுதிஷ்டிரன் மனதில் மேலும் மேலும் சிந்தனைகள் ஓடின. ஆனால் அவன் சிந்தனைகள் சுய பச்சாத்தாபத்திலேயே போய் முடிந்தன. தன்னைத் தானே வருத்திக் கொண்டான். மனதில் அவன் மேலேயே அவனுக்குக் கசப்பு உணர்வு தோன்றியது. தனக்குத் தானே மீண்டும் பேசிக் கொண்டான். “ஹூம், என்னிடம் இப்போது அமைதிக்கும், சமாதானத்துக்கும் மட்டுமின்றி போருக்கும் தைரியம் இல்லை; மனதில் வலு இல்லை! ஆகவே ஆசாரியர் கூறியபடி நான் இயற்கையாகவே ஒரு மாபெரும் போர் நடக்க அச்சாக இருக்கப் போகிறேன் போலும், ஆதாரமாக ஆகிவிடுவேன் போலும்! இதிலிருந்து எப்படியாவது வெளியேறியாக வேண்டும்! எப்படித் தப்புவது இதிலிருந்து? துரியோதனன் மனதில் இருக்கும் அந்த வெறுப்பு என்னும் எரிமலையை நான் எப்படி அணைப்பேன்! அவனை சமாதானமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்படி எப்படிச் சொல்லுவேன்? அவனை சமாதானத்திற்கு எப்படித் தூண்டி விடுவேன்? அவனோ தனக்கென உரிய பரம்பரை அரியணை, ஆட்சி உரிமை தன்னை விட்டுப்போனதற்கு நான் தான் காரணம் என நினைக்கிறான். அதனால் தான் தனக்கு மறுக்கப்பட்டு விட்டது என எண்ணுகிறான்.”

“என் சகோதரர்களோ என்னை ஒரு தந்தையைப் போல் மரியாதையும் அன்பும் செலுத்தி நடத்தி வருகின்றனர். அதோடு இல்லாமல் என்னிடம் அளவற்ற விசுவாசமும் காட்டுகின்றனர். எப்படி ஆனாலும் சரி, அவர்கள் இந்திரப் பிரஸ்தத்தை விட்டுக் கொடுக்கச் சம்மதிக்கவே மாட்டார்கள்!”

“என் சகோதரர்கள் நினைக்கிறதெல்லாம் துரியோதனன் அவர்களுக்கு என்று உரிய உரிமையைப் பறிக்க நினைக்கிறான் என்பதே! அவர்களுக்கு அந்த உரிமையை முற்றிலும் மறுக்கிறான் என்பதே! ஆம், அவர்கள் சொல்வதும் சரிதானே! ஹஸ்தினாபுரம் வேண்டுமானால் பரம்பரை வழி வந்ததாக இருக்கலாம். இந்திரப் பிரஸ்தம் அப்படி இல்லையே! இது எங்கள் சொந்த முயற்சியில் உருவான நகரம். இதை நாங்கள் ஐவரும் சேர்ந்தே உருவாக்கினோம்! இதை விட்டுக் கொடு என்று நான் எப்படி என் தம்பிகளிடம் சொல்ல முடியும்?”

“ஆஹா! அப்படி மட்டும் நான் சொல்லிவிட்டேன் எனில், என் தம்பிகள் மட்டுமல்ல, எங்கள் அருமைத் தாய் குந்திதேவியும், என் மனைவி திரௌபதியும் கூட என்னை விட்டு விலகி விடுவார்கள். கௌரவ சகோதரர்களுக்காக இந்திரப் பிரஸ்தத்தை விட்டுக் கொடுக்க அவர்கள் யாரும் ஒருக்காலும் சம்மதிக்க மாட்டார்கள். ஆனால் ஒரு மாபெரும் யுத்தம் வரப் போகிறது என்னும் கசப்பான நிச்சயமான உண்மையை அவர்களுக்கு எவ்வாறு புரிய வைப்பேன்? ம்ம்ம்ம், வேதங்கள் என்னவோ சொல்கின்றன! அமைதியும் சமாதானமும் தான் அனைத்தும் என்றும் அது தான் முக்கியம் என்றும் சொல்கின்றன! ஆனால் அவை எங்கே இருக்கின்றன?”

மக்களிடம் அதுவும் ஆண்களிடம் க்ஷத்திரிய ஆண்களிடம் இயல்பாகவே போர்க்குணம் நிரம்பித்தான் இருக்கிறது. இந்தப் போருக்காக அவர்கள் எத்தனை ஆயத்தங்கள் செய்கின்றனர்! குதிரைகள், ரதங்கள், ரத சாரதிகள், வில்லாளிகள், அவர்களுக்குத் தேவையான வில், அம்புகள், கோடரிகள், தண்டாயுதங்கள் என இத்தனை வகை ஒரு போரை வெல்லப் பயன்படுத்தப்படுகின்றன. இதிலே தெய்விகப் பண்புகள் வேறே இருப்பதாகச் சொல்கின்றனர். இதை ந்டைமுறையில் எப்படிக் கொண்டு வருவது? எப்படிக் கைவிடுவது?”

அமைதிக்கான பிரார்த்தனை மந்திரங்களை மெல்லிய குரலில் யுதிஷ்டிரன் முணுமுணுத்தான்.
“ சொர்க்கம் அமைதியாக இருக்கிறது: அது போல் ஆகாயமும்!
அந்த அமைதியும் சமாதானமும் நானாக இருக்கக் கூடாதா?
இந்த உலகம் அமைதியாக இருக்கிறது; மௌனமாக இருக்கிறது; புற்களின் மெல்லிய ஓசையும் நீரின் சலனமும் கூட இல்லாமல் அமைதி நிலவுகிறது.
இந்த அமைதி என்னுடையதாக இருக்கக் கூடாதா? அது நானாக இருக்கலாகாதா?
வேதங்கள் அமைதியைச் சொல்கின்றன! எங்கும் சாந்தி நிலவ வேண்டும் என்கின்றன!அதே போல் கடவுளரும் கூட அமைதியாகவே இருக்கின்றனர்.
அந்த அமைதி என்னுடையதாக இருக்கக் கூடாதா? அது நானாக இருக்கலாகாதா?
அந்த அமைதியும் சாந்தமும் என்னுடையதாக இருந்தால்; அந்த அமைதியை வைத்துக் கொண்டு நான் சும்மா இருக்க மாட்டேன்.
இவ்வுலகின் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அதைப் பகிர்ந்தளிப்பேன். மிருகங்களுக்கும் அந்த சாந்தியை அளிப்பேன்.
அந்த அமைதி மட்டும் என்னுடையதாக இருந்தால்
எங்கும் சாந்தி, சாந்தி சாந்தி நிலவட்டும். சாந்தி, சாந்தி, சாந்தி!
“ஹூம், எல்லாமே கேலிக்கூத்தாகிவிட்டதே!” என யுதிஷ்டிரன் நினைத்தான். “சாந்தி எப்படி என்னிடம் வரும்? அது எப்படி எனக்குச் சொந்தமாகும்? துரியோதனனின் வெறுப்பு மட்டுமின்றி அவனைக் குறித்த என் சகோதரர்களின் வெறுப்பும் கூடக்களையப்பட வேண்டும். அதை நான் வெற்றி கொள்ள வேண்டும். அப்போது தான் சாந்தி எனக்கு மட்டுமின்றி அனைவருக்கும் கிட்டும். ஆஹா! என்னால் மட்டும் ஆசாரியரின் தீர்க்க தரிசனத்தைப் பொய்யாக்க முடிந்தால்! அது கனவாகி விடுமோ! ஏ, கடவுளே! கடவுளே! இதிலிருந்து எப்படித் தப்புவேன்? இதிலிருந்து வெளியேறும் வழி என்ன?” யோசித்து யோசித்து அவனுக்குக் குழப்பம் ஏற்பட்டாலும், ஏதோ ஓர் எண்ணம் மின்னலைப் போல் தோன்றியது! “இந்தப் பிரச்னையின் ஆணிவேரே பரம்பரை வாரிசாக யார் இருக்க வேண்டும் என்பது தான்! ஆகவே நான் ஆசாரியரின் தீர்க்க தரிசனத்தைப் பொய்யாக்க வேண்டுமெனில் இந்த வாரிசு என்னும் முறையை அடியோடு அழித்து ஒழித்துவிட வேண்டும். வாரிசு நாங்கள் தான் என்றே சொல்லக் கூடாது! இந்த எண்ணத்தை என் தம்பிகள் மனதிலும் விதைக்க வேண்டும்!”

1 comment:

ஸ்ரீராம். said...

அந்தக்கால மோடி!