Tuesday, November 8, 2016

சிசுபாலனின் சீற்றம்!

இனி தொடர்ந்து நாம் படிக்கப் போகும் அத்தியாயங்கள் மனதுக்கு வருத்தம் தரக் கூடியவை! மனது கனத்துப் போகும்படி செய்யக் கூடியவை! எனினும் அதுவும் கடந்து தானே ஆக வேண்டும். அடுத்துப் பார்ப்போம்!

சிசுபாலன் கத்தியதும் மொத்தக் கூட்டமுமே அதிர்ச்சியில் உறைந்தது. சிசுபாலனையோ பார்க்கவே அனைவருக்கும் பயமாக இருந்தது. அவன் குரோதத்திலும் கோபத்திலும் உடல் முழுவதும் சிவந்து ரத்தத்தைப் பூசிக் கொண்டாற்போல் காணப்பட்டான். கண்கள் இரண்டும் சிவந்திருந்ததைப் பார்த்தால் ரத்தம் கொட்டுவதைப் போல் இருந்தது. உடல் நடுங்கியது. கைகள் ஓர் நிலையில் நிற்கவில்லை. அவன் மெல்ல மெல்லத் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முயன்றான். அப்படி முயன்றவண்ணமே பீஷ்ம பிதாமஹரைப் பார்த்தான். சற்றும் இணக்கமற்ற குரலில், பீஷ்மரின் வயதுக்கும் அனுபவத்துக்கும் உரிய மரியாதையையும் கொடுக்காமல், “ஷாந்தனுவின் புத்திரனே! கங்கை மைந்தனே! இது என்ன வேலை? ராஜசூய யாகத்தின் அக்ரபூஜைக்கு வழிபடுவதற்கு உங்களுக்கு ஓர் மாட்டிடையனா கிடைத்தான்? இந்த இடையனை அக்ரபூஜைக்கு நியமித்ததன் மூலம் நீங்கள் பாண்டவர்களை மட்டும் அவமதிக்கவில்லை. அவர்களை மிகத் தாழ்வான நிலைக்குக் கொண்டும் போய்விட்டீர்கள். அது மட்டுமல்ல இங்கே வந்திருக்கும் அனைத்து அரச குலத்தவரையும் அவமதித்திருக்கிறீர்கள். ரிஷி, முனிவர்களை அவமானம் செய்து விட்டீர்கள். ஓர் சுயநலமான முடிவிற்காக நேர்மையான வழியில் செல்வதைக் கைவிட்டு விட்டீர்கள்!” என்றான்.

சற்று நிறுத்தித் தான் பேசுவதை அனைவரும் கேட்கிறார்களா என்று பார்த்துக் கொண்டான். பின் மேலும் தொடர்ந்து, “ யார் இந்தக் கிருஷ்ணன்? இவன் என்ன ஒரு மாபெரும் அரசனா? எந்த நாட்டுக்கு இவன் அரசன்?அப்படி உங்களுக்கு யதுகுலத்தவருக்குத் தான் அக்ரபூஜை போய்ச் சேர வேண்டும் என்னும் எண்ணம் இருந்திருந்தால் இந்த இடையனைப் பெற்றதாகச் சொல்லிக் கொள்ளும் வசுதேவனை அழைத்திருக்கலாமே! இவனை விட அவர் தகுதி வாய்ந்தவர் அல்லவா? அல்லது வயதிலும் அனுபவத்திலும் மூத்த ஓர் சக்கரவர்த்தியோ, பேரரசரோ தேவை எனில், இதோ பாஞ்சால நாட்டு அரசன் துருபதன் இருக்கின்றானே! அவரை அழைத்திருக்கலாமே! அல்லது இப்படி யாரும் தேவை இல்லை. சாஸ்திர சம்பிரதாயங்களை அறிந்தவராகவும் இருக்க வேண்டும். முனிவர்களைப் போலவும் இருக்க வேண்டும். அதே சமயம் ஆயுதப் பயிற்சிகளிலும் தேர்ந்தவராக இருக்க வேண்டும்! என்று நினைத்திருந்தீர்களானால்! இதோ அஸ்வத்தாமா! குரு துரோணரின் மகன்! சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தவன்! முனிபுத்திரன்! ஆயுதப் பயிற்சிகளிலும் சிறந்தவன்! பிரம்மாஸ்திரத்தை ஏவத் தெரிந்தவன்! இதுவும் வேண்டாம். முனிவர்களே போதும் எனில் அதற்கு வேத வியாசர், க்ருஷ்ண த்வைபாயனரை விடச் சிறந்தவர் யார் இருக்கிறார்கள்? அவரை அழைத்திருக்கலாமே!”

இதைச் சொன்ன சிசுபாலன் கிருஷ்ணன் பக்கம் திரும்பினான். “வாசுதேவக் கிருஷ்ணா! நீ பேராசைக்காரன்! மோசமானவன், சூழ்ச்சிக்காரன், நயவஞ்சகன்! கபடம் நிரம்பியவன், உன்னை உயர்வாக எண்ணிக் கொள்பவன்! இதோ என் தாய்வழிச் சகோதரர்கள் ஆன இந்தப் பாண்டவர்கள் ஐவரும் கோழைகள்! கோழைத்தனத்தால் உனக்கு ஓர் உயரிய இடம் கொடுத்துவிட்டார்கள். உனக்கு ஓர் வேண்டாத கௌரவத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இது உனக்குத் தேவையே அல்ல! ஏ, கிருஷ்ணா, நீ மட்டும் ஓர் கௌரவமான, மேன்மையான மனிதனாக இருந்தாயானால், உனக்குச் சிறிதும் பொருத்தமில்லாத இந்த உயர்ந்த கௌரவத்தை ஏற்க மறுத்திருப்பாய்!” இதைச் சொல்லிக் கொண்டே சிசுபாலன் தன்னுடைய ஆசனத்திலிருந்து எழுந்தான். அவன் நண்பர்களும் கூடவே எழுந்தனர்.

சிசுபாலன் எழுந்ததைக் கண்ட யுதிஷ்டிரன் உடனே அவன் அருகே சென்றான். தன்னுடைய இனிமையான வயப்படுத்தும் குரலில் பேச ஆரம்பித்தான். “சகோதரா, தாமகோஷரின் சக்தி வாய்ந்த புத்திரனே! அமைதி! அமைதி! என்ன இருந்தாலும் நீ பீஷ்மரை கௌரவமிக்க பிதாமஹரை இப்படி எல்லாம் பேசலாமா? அவர் எவ்வளவு மேன்மை வாய்ந்தவர்! சக்தி வாய்ந்தவர்! இன்றைக்கு க்ஷத்திரியர்கள் அனைவரும் தங்களுடைய க்ஷத்திரிய தேஜஸே அவரால் மேன்மையும் கௌரவமும் பெற்றிருக்கிறது என்று பேசிக் கொள்கிறார்கள் அல்லவோ! அப்படிப் பட்டவரை இப்படி எல்லாம் பேசலாமா?” என்று மிகவும் தயையுடன் கேட்டான்.

தன்னுடைய ஒரு கை அசைவால் யுதிஷ்டிரனைப் பேச்சை நிறுத்தும்படி கூறினார் பீஷ்ம பிதாமஹர். யுதிஷ்டிரனைப் பேசுவதை நிறுத்தும்படி சொன்ன பீஷமர் சிசுபாலனைத் தந்திரமாகக் கையாண்டால் அவன் தொடர்ந்து மேலே யாகம் தடைப்படாமல் தொடர உதவுவான் என்று எதிர்பார்த்தார். ஆகவே இதைத் தானே சரி செய்யலாம் என்னும் எண்ணத்துடன் மேலே பேசினார். “தாமகோஷனின் புத்திரனே! ஆரியர்களுக்குள் மேன்மையானவனே! கோபம் உன் கண்களை மறைக்கிறது. உன்னுடைய பார்வையை கோபமேகம் மறைக்காமல் பார்த்துக் கொள்! ஒரு நிமிடம் நிதானமாகச் சிந்தித்துப் பார்! நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்று யோசி! சரியாகவே செய்திருக்கிறோம் என்பது புலப்படும். நாங்கள் அனைவருமே வாசுதேவக் கிருஷ்ணனை வயது வித்தியாசம் பாராமல் பக்தியுடனும், அன்புடனும் வணங்கி வழிபடுகிறோம். அவன் அத்தகைய தெய்விகத் தன்மை பொருந்தியவன். ஆரியர்களின் தர்மங்களையும் கோட்பாடுகளையும் அவன் ஒவ்வொரு பிரச்னைகளிலிருந்தும் காப்பாற்றி முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறான். இன்று க்ஷத்திரிய தர்மம், பிரம தேஜஸ், ஆரியர்களின் அரச தர்மம் அனைத்தும் காப்பாற்றப்பட்டிருக்கிறது எனில் அது அவன் ஒருவனால் மட்டுமே! ஆனாலும் உனக்கு இதில் சம்மதமில்லை என்றால், நாங்கள் செய்தது சரி இல்லை என உனக்குத் தோன்றினால், உன்னைச் சேர்ந்தவர்களுக்கும் அப்படித் தோன்றினால் நீங்கள் அனைவரும் உங்கள் வழியில் சென்று கொள்ளலாம். எங்களை எங்கள் வழியில் செல்ல விடுங்கள்! நாங்கள் எங்களுக்குச் சரியென்று பட்டதைச் செய்து கொண்டு போகிறோம்.” என்றார்.

ஆனால் இந்தப் பேச்சைக் கேட்ட அங்கிருந்த அரசகுலத்தினர் அனைவருக்கும் ஏதோ விபரீதமாக நடக்கப் போகிறது என்பது புலப்பட்டு விட்டது. அனைவரும் பதற்றம் அடைந்தனர். அனைவரும் அவரவர் ஆசனங்களிலிருந்து எழுந்து பாண்டவர்களுக்கு ஆதரவானவர்கள் பீஷ்மர் மற்றும் யுதிஷ்டிரன் அவன் சகோதரர்களைச் சூழ்ந்து கொண்டும், சிசுபாலனின் ஆதரவாளர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டும் தங்கள் வாள்களை உருவிக் கொண்டு ஆயத்த நிலையில் நின்றனர். யாதவர்களும் மற்றும் பாண்டவ, யாதவ ஆதரவு அரசர்களும் கிருஷ்ணனையும் மற்ற யாதவர்களையும் சூழ்ந்து கொண்டனர். அப்போது அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் எந்த நிலையிலும் வாயே திறவாத பாண்டவ சகோதரர்களில் மிகவும் இளையவன் ஆன சஹாதேவன் பேசத் தொடங்கினான்.

“சேதி நாட்டு மன்னா! என்னால் மேற்கொள்ளப் பட்ட அக்ரபூஜையை ஏற்காதவர்கள் எவராக இருந்தாலும் ஒரு பக்கமாக ஓரமாக ஒதுங்கி இருங்கள் அல்லது வெளியேறுங்கள். எங்களுக்கு ராஜசூய யாகத்தை மேற்கொண்டு செய்து முடிக்கவேண்டிய கடமை உள்ளது. அதை நாங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். அது பிடிக்காதவர்கள் வெளியேறலாம். ஸ்ரோத்திரியர்களாக இருந்தாலும் சரி, அரசர்களாக இருந்தாலும் சரி. இங்கே இருக்கும் மற்ற ஸ்ரோத்திரியர்களை வைத்து முடித்துக் கொள்கிறோம்.” என்றான் சஹாதேவன். தனக்கு ஆதரவாகத் தன்னைச் சுற்றிக் கூடி இருக்கும் மற்ற அரசர்களைப் பார்த்தான் சிசுபாலன். “நன்றி, அரசர்களே, பேரரசர்களே! இந்த ராஜசூய யாகம் நடைபெற விடாமல் நாம் தடுப்போம். இதோ இந்த என் தாய்வழிச் சகோதரன், பாண்டவ புத்திரன், யுதிஷ்டிரனைச் சக்கரவர்த்தியாக அங்கீகரித்து அபிஷேஹம் செய்ததை ரத்து செய்து அறிவிப்போம். அந்தப் பட்டம் அவனுக்குப் பொருந்தாது, செல்லத் தகாதது என்று அறிவிப்புச் செய்வோம். இதோ இந்த மாட்டிடையனுக்குச் செய்த அக்ரபூஜையை நாம் செல்லாது என்று சொல்வோம். ஒப்புக்கொள்ள மறுப்போம்!” என்று அறைகூவல் விடுத்தான். அனைவரும் அதற்குச் சம்மதம் கூறி ஆஹாகாரம் செய்தனர்.

சிசுபாலன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருந்தான். ஆகவே அவன் வாயிலிருந்து சொல்மாரி பொழிந்தது. நிறுத்தாமல் பேசினான். பீஷ்மரைச் சுட்டிக் காட்டியபடி அவன் சொன்னது:” நீர், கங்கை புத்திரரே, மனிதர்களில் கண்மூடித்தனமாகச் செயல்படுபவரே, உங்கள் வார்த்தைகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை! ஹாஹாஹா, உங்கள் வாழ்க்கையையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்! பிதாமஹரே! உம்முடைய வாழ்க்கையுமே தவறானதே! வீணானதே!” என்றவண்ணம் ஹாஹாவெனச் சிரித்தான். தொடர்ந்து அலட்சியமும் இகழ்ச்சியும் தொனிக்கச் சொன்னான். “நீர் நினைத்துக் கொள்ளலாம். உம்முடைய இந்த பிரமசரியம் மிகப் புனிதமானது! தூய்மையானது என! ஆனால் இந்த பிரமசரியத்தின் மூலம் அதைக் கடைப்பிடிப்பதாக நீர் சொல்லுவதின் மூலம் உங்கள் முக்கியத்துவம் தான் மறைக்கப்பட்டு வருகிறது! அதை நீர் அறிவீரா? இன்றைக்கு உமக்கு ஒரு முடிவு சொல்லொணாத் துயர முடிவு கிடைக்கப் போகிறது. உம் நம்பிக்கைகள் அனைத்தையும் இழந்து ஓர் முடிவை,  உமக்குத் தக்கதென நான் கருதும் ஓர் முடிவை அளிக்கப் போகிறேன்.”

கிருஷ்ணன் யுதிஷ்டிரன் அருகே நின்று கொண்டிருந்தவன் மெல்ல மெல்ல பீஷ்மரின் பக்கம் வந்தான். அவர் பின்னால் நின்று கொண்டான். அதைக் கண்ட சிசுபாலன் அவனிடம், “உன் மாமனும் புரவலனும் ஆன கம்சனைக் கொன்றாய்! அதே போல் இதோ இந்த ராக்ஷசனைக் கசாப்புக் கடைக்காரனைத் தூண்டி விட்டு ஜராசந்தனைத் தந்திரமாகக் கொன்றாய்! கொல்ல வைத்தாய்! உன்னை இங்கே யார் அழைத்தனர்? நீ ஏன் இங்கே வந்தாய்? உன்னைப் போன்ற துராத்மாக்களுக்கு இங்கே இடமில்லை. இந்தப் பெரிய ராஜசபையில் இடம்பெறத் தகுதி இல்லை!” என்றான் சிசுபாலன். அதைக் கேட்ட பீமன் கோபத்தால் நடுங்கும் உடலுடன் சிசுபாலனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தான். பீஷ்மர் தடுத்தார். “வேண்டாம், பீமா! நில்! அங்கேயே நில்! இப்போது தான் நாம் மாட்சிமை பொருந்திய வாசுதேவக் கிருஷ்ணனுக்கு அக்ரபூஜையைச் செய்து முடித்திருக்கிறோம். இந்த ராஜசூய யாகத்தை மேலே நடத்திச் செல்லும் பொறுப்பும் அதைப் பாதுகாக்கும் பொறுப்பும் கிருஷ்ணனைச் சார்ந்தது! இதை அவனிடம் விட்டு விடுவோம். மனிதர்களுள் சிறந்தவன் ஆன வாசுதேவக் கிருஷ்ணன் எப்போது எதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை அறிந்தவன்! இந்த சூழ்நிலைக்கு ஏற்ற தக்கதொரு முடிவை அவன் சரியாக எடுப்பான். இந்தச் சூழ்நிலையைக் கையாளும் பொறுப்பு அவனுடையது!” என்றார்.

No comments: