Saturday, November 21, 2015

தவிக்கும் பாமா! ரகசிய வேலையில் சத்ராஜித்!

ஒரு வழியா சுபத்ரா சமாதானம் ஆனதும் சத்யபாமா அவளிடம், ஒரு வீரனுக்குப்போருக்குச் செல்லும்போது விடை கொடுக்கையில் மனைவியரால் பாடப்படும், “பிரியாவிடை”ப் பாடலின் சில வரிகள் அவளுக்கு நினைவில் இல்லை எனவும், சுபத்ராவுக்குத் தெரிந்தால் அதைப் பாடிக்காட்டும்படியும் வேண்டினாள். மறந்து போன வரிகளை அவள் நினைவில் கொள்ள வசதியாக இருக்கும் எனக் கெஞ்சினாள். அவள் மிகவும் வேண்டிக்கொண்டதின் பேரில் சுபத்ரா அந்தப் பாடலைப் பாடினாள். பாடுகையிலேயே பாமா அந்த வரிகளைத் தன் மனதுக்குள் சொல்லிப்பார்த்துக் கொண்டு மனப்பாடம் செய்து கொண்டாள்.

“என் தலைவா, என் பிரபுவே! போர்க்களம் உங்களை அழைக்கிறது!
தர்மத்தின் பெயரால் அழைக்கிறது! தர்மத்தை ரக்ஷிக்க அழைக்கிறது!
சென்று வாருங்கள்! நான் தடுக்க மாட்டேன்! உங்களை என்னருகில் இருக்கும்படி வற்புறுத்த மாட்டேன்! சென்று வாருங்கள் என் பிரபுவே!
என் சுயநலத்திற்காக உங்களை நான் என்னிடம் தக்க வைத்துக் கொண்டால்,
உங்கள் நண்பர்கள் எதிரில் நீங்கள் கேலிக்கு ஆளாவீர்கள்!
அதோடு மட்டுமா! உயர்குலத்துப் பெண்மணிகளின் ஏளனமான பார்வைக்கும், கேலிக்கும் ஆளாவீர்கள்! உங்களை ஏறெடுத்துக் கூடப்பார்க்க மாட்டார்கள்!
என் பிரபுவே, என் தலைவா! உங்கள் மனமெல்லாம் மகிழ்ச்சி நிலவி இருக்கட்டும்!
ஒரு க்ஷத்திரியனாக நீங்கள் வீரத்தின் விளைநிலமாக விளங்குகிறீர்கள்!
போர்க்களத்தின் முன்னணியில் நின்று பொருதுவதே உங்களுக்குத் தகும்! அதில் தான் உங்கள் புகழ் அடங்கி இருக்கிறது!
உன்னதமான உயர்குடிப்பிறப்பில் பிறந்த உங்கள் சகிப்புத் தன்மைக்குச் சோதனை வந்தால், என்றென்றும் அழியாத தர்மத்திற்குச் சோதனை வந்தால்
அதற்காகத் தாங்கள் போர்க்களம் சென்றே ஆகவேண்டும்.
ஒரு வேளை இப்படி ஒரு சமயம் வாய்க்கலாம். நீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் போர்க்களத்தில் எதிரிகள் கணக்கில்லாமல் இருக்கலாம். ஆனால் என் அன்பே, அதற்காகவெல்லாம் நீங்கள் அஞ்சாதீர்கள்!
ஏனெனில் சூரியன் ஒன்றே’:சந்திரன் ஒன்றே; ஆனால் கணக்கற்ற நக்ஷத்திரங்கள் உள்ளன!
நக்ஷத்திரங்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதாலா இருள் விலகுகிறது! இல்லை என் தலைவா! அந்த ஒரே ஒரு சூரியனாலோ, அல்லது சந்திரனாலோ அல்லவா இருள் அகல்கிறது! அதுவன்றோ வெளிச்சத்தைத் தருகிறது!
என் பிரபுவே! பெறற்கரிய பெருஞ்சிறப்புப் பெற்ற நீங்கள் வெற்றிகளையே கொண்டு வருவீர்கள்! விஜயலக்ஷ்மி உங்கள் பக்கம் தான் இருப்பாள்!
இத்தகைய பெரும் சிறப்புப் பெற்ற நீங்கள், வீராதி வீரரான நீங்கள் போர்க்களத்தில் துவண்டு போய்ப் பின் வாங்கவே மாட்டீர்கள்! முன் நின்று எதிர்த்துப் போராடுவீர்கள்! போர்க்களத்திலிருந்து தோற்றுப் பின் வாங்கி நீங்கள் ஓடி வருவதை நான் பார்த்ததும் இல்லை; இனியும் பார்க்க மாட்டேன்!
ஒருவேளை நம் கோட்டை, கொத்தளங்கள் எதிரிகளால் தகர்க்கப்பட்டு நம் மக்கள் அனைவரும் பூண்டோடு அழிய நேரலாம்!
உங்களை என்னால் திரும்பப் பார்க்க முடியாமலும் போகலாம்.
இறைவன் சித்தம் அப்படி இருந்தால், என் பிரபுவே! எனக்காக நீங்கள் ஒருசொட்டுக் கண்ணீர் கூட உகுக்காதீர்கள்!
உங்கள் எதிரிகள் உயிருடனும், கண்ணீருடனும் என்னைத் தூக்கிச் சென்று என் சுதந்திரத்தை, என் நாயகனை என்னிடமிருந்து பிரிக்க முடியாது! அப்படி அவர்களால் செய்ய இயலாது! என் பிரபுவே! அதற்குள்ளாகவே நான் உயிரிழந்து விட்டிருப்பேன்!
இதை மட்டும் நன்றாக நினைவு கூருங்கள் என் பிரபுவே!
இன்னொரு மனிதன் வீட்டில், அவன் நாட்டில் எவ்வளவு தான் பணக்காரனாக இருந்தாலும், அவனுடைய இருப்பிடத்தில் என்னால் வசிக்க இயலாது! அதை விட என் உயிரை விடுவேன்!
அவனுக்காக நான் எவ்விதத்திலும் உழைக்க மாட்டேன்! குடிநீர் கொண்டு வரும் வேலை கூடச் செய்ய மாட்டேன்!
நிச்சயமாக நான் அழுது கொண்டிருப்பேன்; அதில் சந்தேகமில்லை; ஆனால் அது எனக்காக அல்ல, என் தலைவா!
நீங்கள் என்னிடம் கடைசிவரை காட்டிய அன்பை நினைந்து நினைந்து அந்த அன்பில் உருகி என் உயிரை உங்களுக்காக ஆகுதி செலுத்த வேண்டி உருகி உருகி அழுது கொண்டிருப்பேன். அந்தக் கண்ணீராகிய தாரையில் என் அன்பை உங்களுக்காக அர்ப்பணம் செய்வேன்!
என் தலைவா! அப்படி ஒருவேளை போர்க்களத்தில் நீங்கள் வீர மரணம் எய்திவிட்டால்! இல்லை, இல்லை! ஆனால் அப்படியும் ஒருவேளை நடந்துவிட்டால்! அதை மற்றொருவர் சொல்லும் வரைக்கும் என்னால் காத்திருக்க இயலாது! இன்னொரு பெண் அதை எனக்குச் சொல்ல வேண்டாம்! ஆம், என் தலைவா! உன் கணவன் இறந்து பட்டான் என்பதை இன்னொரு பெண் மூலம் அறிவிக்க நான் காத்திருக்க மாட்டேன்!
உங்களுடைய சிதையே எனக்கு மலர்ப்படுக்கை! ஆம், என் தலைவா! உங்களுடன் எப்படி உங்கள் படுக்கையைப் பகிர்ந்து கொண்டேனோ அதே போல் சிதையையும் உங்களுடன் நான் பகிர்ந்து கொள்வேன்! உங்களால் கூட அதைத் தடுக்க இயலாது!
என் பிரபுவே! அப்போது உங்கள் கரத்தை என் கரங்களுக்குள்ளாக வைத்துப் பொத்திக் கொள்வேன். உங்கள் கரங்களைப்பிடித்தபடியே நாம் மேலுலகம் சென்று கடவுளரிடம் செல்வோம். இல்லை, இல்லை முதலில் யம தர்ம ராஜாவிடம் செல்வோம்! சந்தோஷமாகச் செல்வோம்! அதைப் பார்த்து யமன் கூட அதிர்ச்சியில் ஆழ்வான்! ஆஹா! இவர்கள் திருமணத்தில் நடந்த சப்தபதியின் போது ஏழு அடி எடுத்து வைக்க எப்படிச் சேர்ந்தே சென்றார்களோ அப்படியே இப்போதும் வந்திருக்கின்றனரே என ஆச்சரியத்துடன் பார்ப்பான்!
என் தலைவா! சென்று வாருங்கள்! வென்று வாருங்கள்!”

அங்கிருந்து கிளம்பிய சத்யபாமாவின் மனதில் உற்சாகமே இல்லை! விவரிக்க இயலா சோகம் அவளை அப்பிக் கொண்டிருந்தது! அவள் குடுமப்த்தின் உறுப்பினர்கள் அனைவரும் மௌனத்தையே கடைப்பிடித்தாலும் உள் மனதில் வியாகூலத்துடனே இருப்பதும், அனைவரும் ஏதோ ஒரு வகையில் தர்மசங்கடமான மனோநிலையில் இருப்பதும் தெரிந்தது. அவள் தந்தையோ வழிபாட்டு அறைக்குள்ளே புகுந்தவர் உள்பக்கம் தாழ்ப்பாளிட்டுக் கொண்டு வெளியே வரவே இல்லை! அன்றிரவு வீட்டின் பிரதான வாயிலில் காவல் அதிகரிக்கப்பட்டதோடு இல்லாமல் வீட்டைச் சுற்றிலும் பலத்த காவல் போடப்பட்டது! ஏதோ ஒன்று நடக்கப் போகிறது! ஏதோ ஒன்று! நல்லதோ, கெட்டதோ! அல்ல, அல்ல! கடவுளரின் கடுங்கோபம் இந்த வீட்டைத் தாக்கப் போகிறது! அந்த இரவு அனைவருக்கும் தூங்கா இரவாக இருந்தது.

உதயத்திற்குச் சற்றே முன்னர் சத்யா ஊரி அவளுடைய பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு கட்டிலில் இருந்து குதித்து இறங்குவதைக் கவனித்தாள். ஏதேனும் எலி இருப்பதை மோப்பம் பிடித்திருக்கிறதோ என பாமா நினைத்தாள். ஆனால் இந்தச் சமயம் அப்படி இல்லை என்பதை ஊரியின் நடவடிக்கையிலிருந்து பாமா புரிந்து கொண்டாள். ஊரி நேரே தாழ்வாரத்தின் பக்கம் சென்று மிகக்கோபத்துடன், குரலெடுத்து, “மியாவ், மியாவ்!” என்று கத்திக் கொண்டே இருந்தது. தாழ்வரையில் இருந்த எவரோ அதை விரட்டுவதும் பாமாவுக்கு இங்கிருந்தே கேட்டது. ஆனால் பாமாவின் மனதில் ஏதோ நடக்கக் கூடாத ஒரு விஷயம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது என்னும் உணர்வு ஏற்பட்டது. ஆகவே அவள் தன் கட்டிலில் இருந்து இறங்கினாள். மெல்ல மெல்லத் தன்னை ஒளித்துக் கொண்டு திருட்டுத் தனமாகத் தாழ்வாரத்தில் இருந்த ஒரு பெரிய தூணின் பின்னால் போய் நின்றாள். மறைந்து கொண்டிருந்த அஸ்தமனச் சந்திரனின் சோகையான வெளிச்சத்தில் அவளால் இரு நபர்களைக் காண முடிந்தது. அவர்களை பாமா உடனே அடையாளமும் கண்டு கொண்டாள். ஒருவர் அவள் தந்தை! இன்னொருவர் அவள் சிறிய தந்தை பிரசேனர்!

அங்கே ஒரு மட்டக்குதிரை பிரயாணத்துக்குத் தயாராகக் காத்திருந்தது. சற்று தூரத்தில் இன்னொரு மட்டக் குதிரையும் பிரயாணத்துக்குத் தயாராக இருப்பதை பாமா கவனித்தாள். அந்தக் குதிரையைத் தன் கையிலுள்ள கயிறுகளால் அடக்கிப் பிடித்த வண்ணம் குதிரை லாயத்தைச் சேர்ந்த ஒரு வீரன் நிற்பதையும் பாமாவால் பார்க்க முடிந்தது. இத்தனை அதிகாலையில் இவர்களுக்கு இங்கே என்ன வேலை! என்ன செய்கிறார்கள்? அல்லது செய்யப் போகிறார்கள்? சத்யபாமாவால் சிறிதும் ஊகிக்க முடியவில்லை. பொறுமையாகக் காத்திருந்தாள். என்ன தான் நடக்கிறது! கடைசிவரை பார்த்துவிடுவோம்!

அவள் தந்தையுடன் மெதுவாகக் கிசுகிசுவெனப் பேசிக் கொண்டிருந்தார் அவள் சிற்றப்பன் பிரசேனன். பின்னர் விடைபெற்றுக் கொண்டு குதிரையின் மேல் ஏறிக் கொண்டு அதை விரட்டினார். குதிரையும் வேகமாகக் கிளம்பியது! குதிரை லாயத்தைச் சேர்ந்த வீரனும் உடனே தன் கையிலிருந்த கயிற்றால் குதிரையை விரட்டிக் கொண்டு தானும் அந்தக் குதிரையின் மேல் ஏறி அமர்ந்தவண்ணம் பிரசேனனைத் தொடர்ந்தான். பின்னர் அவள் தந்தை தான் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குத் திரும்பியதை பாமா கவனித்துக் கொண்டாள். அவளுக்கு நன்றாக நினைவில் இருந்தது. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் அவள் தந்தை காட்டில் உள்ள ஏதோ ஓர் இடத்துக்குச் செல்வார் என்பதும் அந்த இடம் உஜ்யந்த மலைகளால் சூழப்பட்டது என்பதும், அங்கே தான் ச்யமந்தக மணி முதன் முதலாக அவள் தந்தைக்கு சூரிய பகவானால் அளிக்கப்பட்டது என்பதும், அதிலிருந்து ஒவ்வொரு பௌர்ணமிக்கும் அங்கே சென்று சூரிய பகவானுக்கு வழிபாடுகளை அவள் தந்தை செய்கிறார் என்பதும் நினைவில் வந்தது. ஆனால்! ஆனால்!

ஒரு போதும் சூரிய உதயத்துக்கு முன்னரோ, விடிகாலையிலே இத்தனை ரகசியமான முன்னேற்பாடுகளுடன் அவர் கிளம்பிச் சென்றதே இல்லை! இப்போது நடப்பது மிகவும் விசித்திரமாக இருக்கிறது! ஆனால் இதில் ஏதோ தப்பாகவும் ரகசியமாகவும் இருக்கிறது! அது நிச்சயம்! இரவு கழிந்து விடியும் முன்னரே அவள் சிற்றப்பன் இத்தனை ரகசியமாகக் காட்டுக்கு ஏன் கிளம்பிச் செல்ல வேண்டும்? பாமா திரும்பத் தன் படுக்கைக்குச் சென்று படுத்துக் கொண்டாள். ஆனால் அவளுக்குத் தூக்கம் வரவில்லை!

1 comment:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன். (பதிவை. பிரசேனரை அல்ல!)