Monday, August 31, 2015

தோன்றியது இந்திரப்ரஸ்தம்! நான்காம்பாகம் முடிவு!

சற்று நேரத்தில் அனைவரும் யமுனையில் நீராடிக் களித்த குதூகலத்தோடு மேலே நடந்தனர். காண்டவப்ரஸ்தம் கண்களில் பட்டது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்குக் காடு அடர்ந்து காணப்படவில்லை. ஏனெனில் கிருஷ்ணனின் முன்னேற்பாட்டின்படி நாகர்களின் தலைவன் ஆன மணிமான் தன் ஆட்களோடு அங்கே வந்து காட்டைத் திருத்தி ஓரளவுக்கு ஒழுங்கு செய்து அனைவரும் சில நாட்கள் தங்கும்படியாக மாற்றி அமைத்திருந்தான். ஆங்காங்கே சிறிய, பெரிய கூடாரங்கள் காணப்பட்டன. ஓலைகளால் வேய்ந்த குடில்களும் காணப்பட்டன. மண்ணால் எழுப்பட்ட குடிசைகளும் கூரையாகப் பச்சைப் புல்லால் வேய்ந்து காணக் கிடைத்தன. அசைந்து அசைந்து வந்த அந்த மாபெரும் நகரம் அங்கே தங்கித் தங்கள் வேலைகளை உடனே கவனிக்கும்படியாகக் காண்டவப்ரஸ்தம் தயார் நிலையில் காணப்பட்டது. வந்தவுடனேயே பீமனின் யானைகள் பெரிய பெரிய மரங்களை வேரோடு பெயர்த்து எடுத்து அவற்றை வழிநடத்திய இடத்திற்குக் கொண்டு சென்றன. தங்கள் தேவைக்கேற்ற குடிசைகள், குடில்கள், கூடாரங்களை வந்த மக்களின் குடும்பங்கள் எடுத்துக் கொண்டு அங்கே தங்குவதற்கான ஆயத்தங்கள் செய்ய ஆரம்பித்தனர். கோபு மிகுந்த உற்சாகத்தில் அங்குமிங்கும் ஓடி ஓடிச் சென்று வேலைகள் செய்தான்.

தெருக்கள் எங்கே அமைய வேண்டும், சதுக்கங்கள், மைதானங்கள், நிலாமுற்றங்கள், மாளிகைகள் அமைய வேண்டிய இடங்கள், கடைத்தெருக்கள் அமைய வேண்டிய இடம், அரச மாளிகைகள், மற்றத் தனி நபர்களுக்கான வீடுகள் என ஒவ்வொருவருக்கும் பொருந்தும்படியான இடங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை அமைக்க வேண்டிய மாபெரும் திட்டத்தை வரைய ஆரம்பித்தான். கைவினைக்கலைஞர்களையும், தச்சர்கள், கொல்லர்கள், ஆசாரிகள், கொத்துவேலை செய்வோர் போன்றோருக்குத் தக்க ஆணைகள் பிறப்பித்து அவர்களை மேற்பார்வை செய்யும் வேலையையும் கோபு தன்னுடன் வைத்துக் கொண்டு தன் நண்பர்களையும் அதில் இணைத்துக் கொண்டான்.

நகுலன் குதிரைகளைக் கவனிக்க ஆரம்பித்தான். குதிரைகளுக்கான லாயங்கள், உணவு, மருத்துவம் போன்றவற்றைக் கவனித்ததோடு அவற்றைத் தனித்தனியாக மேற்பார்வை பார்க்கத் தக்க ஆட்களையும் நியமித்தான். பிராமணர்கள் அவரவர் படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்பத் தங்கள் மாணாக்கர்களைத் தேர்ந்தெடுத்துத் தக்க பாடங்களைப் போதிக்க ஆரம்பித்தனர். தௌம்யர் அனைத்து பிராமணர்கள் மற்றும் அவர்களின் சீடர்கள் போன்றோரை மேற்பார்வை பார்த்துத் தக்கபடி கட்டளைகளைக் கொடுத்து வந்தார். இத்தகைய சாகசமான அனுபவங்கள் அனைவருக்கும் புதியவை என்பதால் எல்லோரும் பேரார்வத்தோடு இதில் பங்கு கொண்டனர். சில நாட்களில் பருவ மழை தொடங்கியது. அதற்குள்ளாக அங்கே வந்திருந்த அனைவருக்கும் தங்குமிடம் கிடைத்து விட்டது. யாரும் மழையில் கஷ்டப்படவில்லை.


நிலம் இல்லை என்றோ போதவில்லை என்னும்படியாகவோ யாரும் சொல்லவில்லை. அவரவருக்குத் தேவைப்பட்ட நிலத்தை அவர்களே ஆர்ஜிதம் செய்து கொண்டு தங்களுக்குத் தேவைக்கேற்ப அதைப் பயன் படுத்திக் கொண்டனர். இந்திரனுக்காக அங்கே சிறப்பு வழிபாடு ஒன்று செய்யப்பட்டது. அடிக்கடி பெருமழையும் புயலும் வந்து புதிய நகர நிர்மாணத்தைச் சீரழிக்காமல் இருக்கப் பிரார்த்தனைகள் செய்து கொள்ளப்பட்டன. இந்த யாகத்தை வியாசரே தலைமை தாங்கி நடத்திக் கொடுத்தார். அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டுக் கொண்டது போல் அந்த வருஷம் பருவ மழை தப்பாமல் பெய்தாலும் பெரிய அளவில் வெள்ளமொ, புயலோ இல்லாமல் தப்பினர்.

கிருஷ்ணன் மனம் நெகிழ்ந்தது. இந்திரனுக்குச் செலுத்தும் நன்றிக்கடனாக நகரின் பெயரைக் காண்டவப்ரஸ்தம் என்பதில் இருந்து இந்திரப்ரஸ்தம் என்று மாற்றும்படி யுதிஷ்டிரனுக்குக் கிருஷ்ணன் ஆலோசனை கூறினான். (இப்போதைய டெல்லியும் அதன் சுற்றுப்புறங்களும் இந்திரப்ரஸ்தம் ஆகும்.) இந்த பூவுலகிலேயே இது மிக அழகான அற்புதமான ஓர் இடமாக மாறும் என்றும் கிருஷ்ணன் கூறினான். அவன் தீர்க்கதரிசனம் சீக்கிரம் உண்மையாயிற்று. தேவர்களின் தச்சன் ஆன விஸ்வகர்மாவை வேண்டிக் கொண்டு அவரின் ஆசிகளோடும் துணையோடும் கோபு விரைவில் தன்னுடன் வந்திருந்த தொழிலாளிகளோடு நகர் நிர்மாணக்கட்டுமான வேலையை ஆரம்பித்தான்.

மெல்ல மெல்ல அற்புத நகரம் உருவாயிற்று. தூர, தூரங்களில் உள்ள மக்களுக்கெல்லாம் இந்தச் செய்தி போய்ச் சேர்ந்து அனைவரும் இந்த அதிசய நகரைப் பார்க்க வேண்டிக் கூட்டம் கூட்டமாக வந்தனர். மழை நின்று குளிர்காலம் ஆரம்பம் ஆயிற்று. உத்தவனும் துவாரகையிலிருந்து பாண்டவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பரிசுகளை எல்லாம் சுமந்து கொண்டு வந்து சேர்ந்தான். வியாசர் ஓரளவு நிலைமை சீராகிவிட்டதால் தானும் விடைபெறுவதாகக் கூறிக் குருக்ஷேத்திரத்தில் உள்ள தன்னுடைய ஆசிரமத்திற்குச் சீடர்களோடு பயணம் ஆனார். மெல்ல மெல்ல நகரம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டு அனைவரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப ஆரம்பித்தார். கிருஷ்ணன்  தானும் பலராமனும் துவாரகைக்குத் திரும்புவதாகக் கூறினான். யுதிஷ்டிரன் மிகவும் வருத்தம் அடைந்தான். கிருஷ்ணனைப் பிரிய வேண்டும் என்பது மிகவும் கஷ்டமான ஒன்றாக இருந்தது அவனுக்கு.

“கிருஷ்ணா! எங்களை நீ மிகவும் ஆதரித்துக்காத்து வருகிறாய். எங்கள் குலதெய்வம் நீயே தான்! எங்கள் தந்தையை விட நீயே எங்களை நன்றாகக் காப்பாற்றி வருகிறாய். தந்தையை விட நீ மேலானவனாக இருக்கிறாய். நீ இல்லை எனில் நாங்கள் பாஞ்சால இளவரசியைக் கைப்பிடித்திருக்க இயலாது. அது நடந்திருக்கவே நடந்திருக்காது. அதே போல் நீ  இல்லை எனில் இந்த இந்திரப்ரஸ்தம் எங்கே! உன்னால் அல்லவோ இந்த நேர்மையும், தூய்மையும் உருவெடுத்த அற்புத நகரம் உருவாயிற்று!” என்று தழதழத்த குரலில் கூறினான்.

“வருந்தாதே யுதிஷ்டிரா! நான் எங்கே இருந்தாலும், உங்கள் ஐவரைக்குறித்துத் தான் சிந்திப்பேன். உங்கள் நலனுக்காகவே வாழ்கிறேன். நீ தர்ம சாம்ராஜ்யத்தின் அரசன், இளவரசன் அனைத்தும் ஆவாய்! உனக்கு எப்போது என் உதவி தேவைப்படுமோ அப்போதெல்லாம் நான் நிச்சயமாய் வந்துவிடுவேன். சுழிக்காற்றை விட வேகமாகப் பயணப்பட்டு உன்னை வந்தடைவேன்! இது நிச்சயம்!” என்றான். அடுத்து அர்ஜுனன் கிருஷ்ணனுக்குப் பிரியாவிடை கொடுக்க அவனை அணைத்துக் கொண்ட போது அவனால் தன் விம்மலை அடக்க முடியவில்லை. அவனுடைய உள்ளார்ந்த சோகத்தைப் புரிந்து கொண்டான் கிருஷ்ணன். அவன் முதுகில் தட்டிக் கொடுத்துச் சமாதானம் செய்தான். “துவாரகைக்கு வா! என் சார்பாக அன்பின் அடையாளத்தை உனக்குக் காட்டுகிறேன்.” என்றான். கிருஷ்ணனும், பலராமனும் அதன் பின்னர் குந்தி தேவி, திரௌபதி மற்றப் பாண்டவ சகோதரர்கள் ஆகியோரிடமும் பிரியாவிடை பெற்றனர்.

அனைவரும் சேர்ந்து கலங்கிய மனதுடனும், கண்ணீர் பொங்கும் விழிகளுடனும் கிருஷ்ணனுக்கு விடை கொடுத்து அனுப்பியதும் கிருஷ்ணன் தன் ரதத்தில் ஏறிக் கொண்டான். சாரதியிடமிருந்து குதிரைகளின் கயிற்றைத் தன்னிடம் வாங்கிக் கொண்டவன் பாண்டவர்கள் பக்கம் திரும்பினான். அனைவரும் கண்களில் கண்ணீருடன் காட்சி அளித்தனர்.  கண்ணன் அனைவரையும் திரும்பத் திரும்பப்பார்த்து சூரியனின் கதிர்களைப் போன்ற பிரகாசமானதொரு புன்சிரிப்பை அவர்களுக்குப் பரிசாகத் தந்தான். ஆம், அவன் போக வேண்டும்! அவனுடைய நகரத்துக்கு, அவனுடைய சொந்த மக்களிடையே போக வேண்டும்; அனைவரையும் பார்க்க வேண்டும். ஆனால் அவன் மனம் என்னமோ இந்த ஐந்து சகோதரர்களிடம் தான் இருந்தது. தர்ம சாம்ராஜ்யம் அமைக்கப்பாடுபடும் இந்த தைரியமான, துணிச்சல் மிகுந்த சகோதரர்கள் ஐவருக்கும் அவன் உதவி தேவை தான். ஆனாலும் அவன் போயாக வேண்டும். உடனேயே திரும்பிய கிருஷ்ணன் தன் கைகளிலிருந்த கயிற்றைச் சுண்டி விட்டுக் குதிரைகளை விரட்டினான். தேவலோகத்திலிருந்து வந்த இந்திரன் கருமேகங்களுக்கிடையே மறைவது போல் தன் பின்னே பெரும் புழுதிப் புயலைக்கிளப்பி விட்டுவிட்டுக் கிருஷ்ணனின் குதிரையும் ஓடி மறைந்தது.

நான்காம் பாகம் முடிந்தது. இனி ஐந்தாம் பாகம் தொடரும். படித்து ஆதரவு காட்டும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

1 comment:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.