Monday, August 17, 2015

பட்டாபிஷேஹ ஏற்பாடுகளில் ஹஸ்தினாபுரம்!

பட்டாபிஷேஹ விழாவை முன்னிட்டு ஹஸ்தினாபுரத்தில் பல நிகழ்ச்சிகள் நடந்தன. யுதிஷ்டிரன் பட்டம் ஏற்கப் போகும் நாளுக்கு முன்னால் வந்த ஒன்பது நாட்களுக்கும் தொடர்ச்சியாக பட்டாபிஷேஹ சம்பந்தமாக நடைபெறும் சம்பிரதாயமான சடங்குகள் நடைபெற்றன. அவை அனைத்தும் பட்டாபிஷேஹம் நடைபெறும் மணிமண்டப அறைக்கு எதிரே இதற்கென நிர்மாணிக்கப்பட்டதொரு பெரிய மண்டபத்தில் நடைபெற்றன. வேத வியாசர் தலைமை தாங்கி அனைத்தையும் ரிஷிகள், முனிவர்கள், வேத பிராமணர்களின் உதவியோடு நடத்தி வைத்தார். மிக விமரிசையாகவும் விரிவாகவும் சாஸ்திர ரீதியான சடங்குகள் நடைபெற்றன. அக்னி தேவனை வழிபட்டுப் பற்பல ஆஹுதிகளும் வழங்கப்பட்டன. தெய்வீகத் தாவரம் ஆன சோமனை வழிபட்டனர். சோம ரசம் பிழியப்பட்டு அங்கிருந்த அதிகாரபூர்வமான மதகுருக்களாலும் மற்றும் வேதபிராமணர்களாலும், அருந்தப்பட்டு யுதிஷ்டிரனுக்கும் அளிக்கப்பட்டது.

மக்கள் கூட்டம் பெருமளவில் கூடி அனைத்து நிகழ்வுகளும் அவர்களால் பங்கெடுக்கப்பட்டது.  நற்குணங்களும், இனிமையான பேச்சுக்களும் நிறைந்த யுதிஷ்டிரன், தர்மத்திலிருந்து சிறிதும் வழுவாத யுதிஷ்டிரன் தங்கள் மன்னன் ஆகப் போவதை உணர்ந்து ஹஸ்தினாபுரத்து மக்கள் ஆனந்தத்தில் ஆழ்ந்திருந்தனர். அக்கம்பக்கம் உள்ள கிராமங்களிலிருந்தும், நகரங்களிலிருந்தும் மக்கள் கூடினர். ஆங்காங்கே இசைக்கச்சேரிகள் நடைபெற்றன. மேள வாத்தியங்கள் முழங்கின. எக்காளங்கள், சங்குகள் முழங்கின. ஆலாட்சி மணிகள் ஒலித்த வண்ணம் இருந்தன. வந்திருந்த அனைவருக்கும் சிறப்பான உணவு அளிக்கப்பட்டது. உணவு அருந்த மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடிய வண்ணம் இருந்தனர். ஏழை, பணக்காரர், வலியோர், எளியோர் என்ற வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் சரிசமமாக உணவு அளிக்கப்பட்டது. வேத மந்திரங்களின் கோஷம் சுற்று வட்டாரத்தையே நிறைத்தது. அனைவர் மனதிலும் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது.

ஹோம குண்டங்களிலிருந்து எழும்பிய புகை விண்ணைத் தொட்டது. விண்ணிலிருக்கும் கடவுளரிடம், பூமியில் தர்ம சாம்ராஜ்யம் எழும்பப் போகிறது. யுதிஷ்டிரன் தான் தர்மராஜாவாக ஆளப் போகிறான் என்னும் செய்தியை அந்தப் புகைமண்டலம் சொல்வது போல் இருந்தது. ஒவ்வொரு சடங்குகளாக நடைபெற்று கடைசியில் ஒன்பதாம் நாள் அவை முடிவுக்கு வந்தன. எல்லாம் முடிவடைந்ததும் யுதிஷ்டிரன் வேதவியாசர், பீஷ்ம பிதாமகர், குருவும் ஆசாரியர்களும் ஆன தௌம்யர் மற்றும் சோமதத்தர் புடைசூழ, தங்கள் குல தெய்வமும் தங்கள் முன்னோர்களில் ஒருவர் ஆன பிரதீப அரசனின் பெயரால் வழங்கப்படுபவரும் ஆன பிரதீபேசுவரரைச் சென்று குல வழக்கப்படி வழிபட்டான். ராஜ சபைக்கு வரக்கூடிய உரிமை படைத்தவர்கள் அனைவரும் சபையில் கூடி தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடங்களில் அமர்ந்து கொண்டனர்.

சபாமண்டபத்தின் நடுவில் இருந்த மேடையில் போடப்பட்டிருந்த சிங்காதனங்கள் இப்போது மாற்றி அமைக்கப்பட்டிருந்தன. மான் தோலால் மூடப் பட்டிருந்த வேத வியாசர் அமரும் ஆசனப் பலகை முன்னர் சிங்காதனங்களில் இரு வரிசைக்கும் நடுவில் அமைக்கப்பட்டிருந்தது. இப்போது வலப்பக்கமாகப் போடப்பட்டிருந்தது. நடுவில் உள்ள இடத்தில் இப்போது ஒரு அழகான அலங்கரிக்கப்பட்டிருந்த ரத்தினங்கள் பொதிந்த கிரீடம் வைக்கப்பட்டிருந்தது. புதிய அரசனைக் குறிப்பிடும் விதமாக கிரீடத்தின் நடுவில் ஒரு சிங்க முகம் வாய் திறந்து கர்ஜிக்கும் பாவனையில் செதுக்கப்பட்டு அதில் சிவப்பு நிறக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. கண்களுக்கு நீல நிறக் கற்கள், சுற்றிலும் சிவப்பு. கருமணிக்கண்களால் செக்கச் சிவந்த முகத்தோடு பார்த்து உறுமும் பாவனையில் சிங்கம் வடிக்கப்பட்டிருந்தது.

அரசனின் அரியணைக்கு வலப்பக்கமாக பீஷ்மபிதாமகர் அமரும் ஆசனம் போடப்பட்டிருந்தது. அரசனுக்குச் சரிசமமாக அவர் ஆசனமும் காணப்பட்டது. பீஷ்மரை அடுத்து பலராமன், விராடன், சுநீதன் என அனைவரும் அவரவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆசனங்களில் வந்து அமர்ந்தனர். அரியணையின் இடப்பக்கம் போடப்பட்டிருந்த ஆசனத்தில் திருதராஷ்டிரனை அழைத்து வந்து அமர வைத்தனர். திருதராஷ்டிரனுக்கு அடுத்துக் கிருஷ்ணனும், மணிமானும் அமர்ந்தனர். வலப்பக்கம் போடப்பட்டிருந்த வெள்ளியால் ஆன சிங்காதனத்தில் துரியோதனன் அமர்ந்திருந்தான். அவன் தன்னை யுவராஜாவாக அறிவிக்கப் போகும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.  இந்த நிகழ்ச்சி எப்படி நடந்து முடியப் போகிறது என்னும் எதிர்பார்ப்பிலும் அவன் காத்திருந்தான். ஏதோ நடக்கப் போகிறது என எதிர்பார்த்தான். யுதிஷ்டிரன் அரியணை ஏறினால்? கிருஷ்ணன் பானுமதிக்குச் செய்து கொடுத்திருக்கும் சத்தியத்தை எப்படிக் காப்பாற்றுவான்? என்ன செய்யப் போகிறான் கிருஷ்ணன்? துரியோதனனுக்கு யோசித்து யோசித்து மூளை குழம்பியது.  ஹூம், பானுமதி மட்டும் உயிரோடு இருந்தால்? இந்தக் கிருஷ்ணன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டாவது அவள் உயிரோடு இருந்திருக்கலாம். இந்த மாட்டிடையன் என்ன செய்யப் போகிறனோ? ஒன்றுமே புரியவில்லை!

இடப்பக்கம் கடைசியில் போடப்பட்டிருந்த வெள்ளிச் சிங்காதனம் பீமனால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. தன் கண்களில் தெரிந்த இனம் புரியாததொரு ஒளியோடு காணப்பட்ட பீமன் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு தன் நீண்ட மீசையை முறுக்கிக் கொண்டும் தடவிக் கொடுத்துக் கொண்டும் அமர்ந்திருந்தான். அவன் மனம் முழுதும் நிறைவாக இருந்தது. இங்குள்ள அனைவரும் அவன் கைப்பொம்மைகள். அவன் ஆட்டுவிக்கும்படி ஆடப் போகிறவர்கள். அவன் தான் தன் கைகளில் வைத்திருக்கும் கயிறுகளால் இந்தப் பொம்மைகளை பொம்மலாட்டம் ஆட வைக்கப் போகிறான். கயிறு அவன் கையில். இதழ்களில் புன்னகையுடனும், முகத்தில் தெரிந்த மன அமைதியுடனும் அங்கு அமர்ந்திருந்த வாசுதேவக் கிருஷ்ணனை அடிக்கொரு முறை பார்த்துக் கொண்டான் பீமன்.

 

1 comment:

ஸ்ரீராம். said...

படித்து விட்டேன்.