Tuesday, March 26, 2013

கண்ணனின் யோசனையும் துருபதனின் கவலையும்!


மறுநாள் துருபதன் தன் குடும்பத்து சோகத்தைக் கொஞ்சம் அடக்கிக் கொண்டவனாய்க் காணப்பட்டான்.  கிருஷ்ணனை அழைத்துத் தன் மகளுடன் சந்தித்துப் பேசிய பின்னர் அவன் என்ன முடிவுக்கு வந்தான் எனக் கேட்டான்.  கண்ணன், மன்னனைப் பார்த்து, “மாட்சிமை பொருந்திய மன்னா, தங்கள் அழகிய மகளைச் சந்தித்துப் பேசினேன்.  நீங்கள் சம்மதித்தால், உங்களுக்கு உதவத் தயாராக இருப்பதாய் அவளிடம் வாக்குறுதி கொடுத்துள்ளேன்.” என்றான்.

துருபதனின் முகம் மலர்ந்தது.  “வாசுதேவா, நான் நினைத்தேன்.  திரெளபதியைச் சந்தித்த பின்னர் நீ அவள் பேச்சைத் தட்ட முடியாமல் எங்கள் உதவிக்கு வருவாய் என எதிர்பார்த்தேன். அற்புதமான பெண் அவள். என் மகளாய்க் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம்!”

“மன்னா, நான் ஒளிவு, மறைவின்றிப் பேசி விடுகிறேன்.  சற்றுப் பொறுமையாய்க் கேளுங்கள்.  உங்கள் சபதம் நிறைவேற எவ்விதத்தில் உதவ வேண்டுமோ அதற்கெல்லாம் நான் தயாராகவே இருக்கிறேன்.  என்னை உங்கள் நண்பனாக நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்கள் பக்கமே எப்போதும், என்றும் துணை நிற்பேன் என வாக்கும் கொடுக்கிறேன்.  ஆனால், மன்னரே, தயவு செய்து இந்தத் திருமணப் பேச்சை மட்டும் விட்டுவிடுங்கள்.  எனக்கு திரெளபதியைத் திருமணம் செய்து கொள்ளும் நோக்கம் இல்லை.”

“ஏன் வாசுதேவா ஏன்?  என் மகள் அதற்குத் தகுதியுடையவள் இல்லையா?  அவளும் சம்மதிக்கிறாள் அல்லவா?  நீ எங்கள் பக்கம் நின்று எங்களுக்கு உதவச் சம்மதித்தால் அவளை மணக்கத் தடை என்னவோ?” துருபதன் முகம் வாடியது.

“ஓஹோ, மன்னரே, உங்கள் மகளை நான் குறை கூறவில்லை.  அவளுக்குத் தகுதி இல்லை என்றும் சொல்லவில்லை.  இந்த ஆர்யவர்த்தத்தின் இளவரசிகளில் அவள் ஒரு ரத்தினம்.  இவளைப் போன்ற இளவரசிகள் இந்த ஆர்ய வர்த்தம் மட்டுமின்றி இந்தப் பரந்த பரத கண்டம் முழுவதும் கிடைப்பது அரிது.  அவள் விரும்பினால் எந்த நாட்டு இளவரசனையும் மணக்கலாம்.  ஆனால் மன்னரே, அந்த இளவரசனும் அவளை மணக்கச் சம்மதிக்க வேண்டும் அல்லவா?”  கண்ணனின் புன்னகை புதிராக இருந்தது.

“ம்ம்ம்ம், அப்போது நீ அவளை உன் மனைவியாக ஏற்கத் தயாராக இல்லை? அல்லவா?”துருபதனின் கேள்வியில் அவன் வருத்தம் தெரிந்தது.  தன் மகளைக் குறித்து அவன் கொண்டிருந்த கர்வம் பங்கமடைந்து போனது போல் மனம் வருந்திக் காணப்பட்டான்.  “என்னைத் தவறாய் நினைக்க வேண்டாம், பிரபுவே..  எந்த வீரனையும் கல்யாணம் செய்து கொண்டு போவதற்கு அவள் ஒரு சாதாரணப் பெண்ணல்ல!  அதை நானும் அநுமதிக்க மாட்டேன்.  அவளே தன் மனப்போக்குப் படி ஒரு முடிவு எடுத்திருக்கிறாள்.ன்  இந்த ஆர்யவர்த்தத்திலேயே சிறந்ததொரு வீரனை மணக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறாள். அதற்குத் தான் நாம் உதவ வேண்டும்.  நான் என்னாலான உதவி செய்து அவள் விரும்பிய வண்ணமே தக்கதொரு சுத்த வீரனை மணக்க உதவப் போகிறேன்.”

கண்ணன் ஏதேதோ பேசித் தன்னை ஏமாற்ற முயல்கிறானோ என்ற சந்தேகம் துருபதனுக்கு வந்துவிட்டது.  புருவங்களை நெரித்துக் கொண்டு, “பின் நீ அவளை மணக்க மறுக்கிறாய்?  அப்போது உன் உதவியும் எங்களுக்குக் கிட்டாதல்லவா?”  என்றான்.   “இல்லை, மன்னா, நான் எப்போதுமே உங்கள் பக்கம் தான் இருப்பேன்.  உங்களுக்கு என் பூரண ஒத்துழைப்புக் கிட்டும்.  உங்கள் மகள் எவரை மணந்தாலும் அதற்காக நான் மாற மாட்டேன்.”

“அப்படியா, வாசுதேவா, ஜராசந்தனின் பேரனை அவள் மணந்தாலுமா?” துருபதன் இகழ்ச்சியுடன் கேட்டான்.

“மன்னரே, நீங்கள் தான் அதைக் குறித்து முடிவு செய்ய வேண்டியவர்.  ஆனால் உங்கள் இடத்தில் நான் இருந்தால், “  சற்றே தயங்கிய கண்ணன், மேலே தொடர்ந்தான்;  “உங்கள் இடத்தில் நான் இருந்தால், என்னுடைய பழிவாங்கும் எண்ணங்களை ஒத்திப் போட்டுவிட்டு, அவளுடைய முழுத் தகுதிக்கு ஏற்றதொரு நல்ல இளவரசனைத் தேர்ந்தெடுப்பேன். “

துருபதன் மனம் கண்ணன் கூறியவற்றில் லயிக்கவில்லை.  இந்த வேறுபாடுகளைக் குறித்து யோசிக்கும் நிலையில் அவன் இல்லை.  “அவள் உன்னை மணக்க ஆசைப்பட்டால் என்ன செய்வது வாசுதேவா?” என மீண்டும் வினவினான்.

“மாட்சிமை பொருந்திய மன்னரே, அவள் தன் மனதை எப்படிப் பக்குவம் செய்து உறுதி கொண்டிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா?  துரோணரையும் அவருடைய சீடர்களையும் யுத்தத்தில் தோற்கடித்துச் சரணடைய வைக்கும் வல்லமை கொண்டதொரு வீரனைத் தான் மணக்கவேண்டும் என்ற உறுதி கொண்டிருக்கிறாள்.  அவளுக்கு அப்படி ஒரு மணமகன் தான் தேவை.  வேறு எவருடனும் அவள் சந்தோஷமாக இருக்க மாட்டாள்.”

“அது உண்மைதான்!” என ஒத்துக் கொண்டான் துருபதன்.  கண்ணன் தன் ஆலோசனையைச் சொல்ல ஆரம்பித்தான்.  “பின்னர் அவளுக்குத் தன் மணமகனைத் தேர்ந்தெடுக்க நீங்கள் ஏன் ஒரு சுயம்வரம் நடத்தக்கூடாது?”

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கண்ணனின் பதில்கள் புதிராகத்தான் உள்ளது...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//“ஓஹோ, மன்னரே, உங்கள் மகளை நான் குறை கூறவில்லை. அவளுக்குத் தகுதி இல்லை என்றும் சொல்லவில்லை. இந்த ஆர்யவர்த்தத்தின் இளவரசிகளில் அவள் ஒரு ரத்தினம். இவளைப் போன்ற இளவரசிகள் இந்த ஆர்ய வர்த்தம் மட்டுமின்றி இந்தப் பரந்த பரத கண்டம் முழுவதும் கிடைப்பது அரிது. அவள் விரும்பினால் எந்த நாட்டு இளவரசனையும் மணக்கலாம். ஆனால் மன்னரே, அந்த இளவரசனும் அவளை மணக்கச் சம்மதிக்க வேண்டும் அல்லவா?” கண்ணனின் புன்னகை புதிராக இருந்தது.//

புதிர் போடும் கண்ணன். ;))))

கதையை அருமையாகவும் பொறுமையாகவும் கொண்டு செல்கிறீர்கள்.

பாராட்டுக்கள்.

sambasivam6geetha said...

வாங்க டிடி, புதிரெல்லாம் இல்லை. கண்ணன் மெல்ல மெல்ல விஷயத்துக்கு வருகிறான்.:)

sambasivam6geetha said...

நன்றி ஐயா, என்னுடைய எண்ணங்கள் பதிவில் எழுதி வரும் கல்யாணங்கள் குறித்த பதிவையும் படித்துத் தங்கள் கருத்தையும் பகிரவும். மிக்க நன்றி.

ஸ்ரீராம். said...

ம்....கண்ணன் மெல்ல விஷயத்துக்கு வருகிறான்..! ஸாரி.. வருகிறார்!

sambasivam6geetha said...

வாங்க ஸ்ரீராம், கண்ணனை எப்படி வேணா அழைக்கலாம். தப்பில்லை. :)))