Monday, June 24, 2013

அக்னிப் பரிக்ஷையில் உத்தவன்!

நடுங்கி விட்டான் உத்தவன்.  யார் இது?  பிங்கலையா?  கபிலாவா? யாராக இருந்தாலும் இந்த நேரம் இங்கே ஏன் வந்தார்கள்? உடலே ஆடியது உத்தவனுக்கு. அன்று வரையிலும், அவன் தாய், சகோதரிகள், கிருஷ்ணனின் சின்னத் தங்கை சுபத்ரா ஆகியோரைத் தவிர வேறெவரும் அவனைத் தொட்டுக் கூடப் பேசியதில்லை.  பிற பெண்களின் தொடுதலைக் குறித்து எதுவும் அவன் அறிந்திருக்கவில்லை.  ஆம், சில வருடங்கள் முன்னர் கரவீரபுரத்தின் இளவரசியான ஷாயிபாவை மணந்து இல்வாழ்க்கை நடத்தக் கனவு கண்டவன் தான் உத்தவன்.  ஆனால் அது எத்தனை முட்டாள் தனம் என்பதை உணர்ந்துவிட்டான். அதோடு ஷாயிபாவோ கண்ணனை அல்லவோ விரும்பினாள்!  கண்ணன் உத்தவனின் உயிருக்கும் மேலானவன்.  அவனுக்குக் கொடுக்கக் கடைசியாக உத்தவனின் உயிர் என்றால் அதையும் அன்றோ அவன் கொடுக்கச் சித்தமாக இருக்கிறான். ஒருதலையாக அன்றோ அவன் ஷாயிபாவைக் காதலித்தான்!  கண்ணன் அல்லவோ அவன் கண்களைத் திறந்தான்!

அதன் பின்னரே அவன் ஷாய்பாவை ஒரு வணங்கத் தக்க பெண்ணாக நினைக்கத் தலைப்பட்டான்.  தூரத்தில் இருந்து வணங்கும் ஒரு பெண் தேவதை.  அதன் பின்னரே தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தொடங்கிய உத்தவன் அதில் வெற்றி கண்டதோடு அல்லாமல், இவ்வுலகத்துப் பெண்கள் மூலம் கிடைக்கும் இன்பத்தைக் குறித்துச் சிந்திப்பதும் இல்லை;  பெண்களோடான தன்னுடைய மனப்பாங்கையும் நடத்தையையும் மாற்றிக் கொண்டதோடு அல்லாமல் உறவுகளையும் அறவே துண்டித்துக் கொண்டுவிட்டான்.  அவனைப் பொறுத்தவரை எல்லாப் பெண்களுமே வணங்கத்தக்கவர்கள், தள்ளி நிறுத்திப் பார்த்து ஆராதிக்கப்படவேண்டியவர்கள்.  மேலும் கண்ணனிடம் இருந்த அவன் மாறா பக்தியானது, காமதேவனை அவனருகில் கூட நெருங்க விடாமல் தடுத்து வந்தது.  காமன் கணைகள் உத்தவனை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை.

உத்தவனுக்குத் தான் இப்போது ஒரு அக்னிப் பரிக்ஷையில் இருப்பதாகத் தோன்றியது.  இத்தனை நாட்களாகக் கண்ணன் முன்னிலையில் அடங்கிக் கிடந்த அவன் உணர்வுகளை இப்போது இங்கே இத்தனை தொலைவில் கண்ணனும் அருகில் இல்லாமல் தட்டி எழுப்பக் காமன் முயல்கிறான்.  அவன் வெல்வானா?  உத்தவன் வெல்வானா?  ஆர்யகன் குடும்பமே அவனை நல்முறையில் வரவேற்றுக் கவனித்து உபசரித்து வருகின்றனர்.  இரட்டைச் சகோதரிகளுமே அவனை நல்ல முறையில் தான் கவனிக்கின்றனர். அவர்கள் இருவரின் வெளிப்படையான பேச்சும், நடவடிக்கைகளும், அவன் பெண்களுக்கு எனத் தன் மனதில் எழுப்பி இருக்கும் உயர்ந்ததொரு பீடத்திலேயே அவர்களை வைத்தது.  அதில் மாற்றம் இல்லை.  ஆனால், ஆனால், இந்த இருவரில் ஒருவர் இப்போது நாங்கள் நீ வணங்கும் அந்தச் சிலையான பெண் தெய்வம் இல்லை;  உயிரும், சதையும் ரத்தமும் உள்ள பெண் எனச் சொல்ல வந்திருக்கிறாள்.  யார் இது?

"கிருஷ்ணா, கிருஷ்ணா, இது என்ன ஒரு அருவருப்பான சூழ்நிலையில் என்னைக் கொண்டு வந்து விட்டிருக்கிறாயே!  இவ்வுலகத்துப் பெண்கள் அனைவரின் மேலும் நான் வைத்திருக்கும் பக்தியும், அளப்பரிய மரியாதையும் இப்போது அதல பாதாளத்தில் வீழ்ந்துவிடும் போல் இருக்கிறதே.  என்னுடைய நன்னடத்தைக்குப் பாதகம் விளைந்துவிடுமோ?  கிருஷ்ணா, கிருஷ்ணா, நீ எங்கே இருக்கிறாய்?  என் இப்படி ஒரு சோதனை எனக்கு?  இம்மாதிரியான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு உதவ நீ இங்கே இருக்க வேண்டாமா?  நான் ஒரு நாககன்னியில் வளையங்களில் மாட்டிக் கொண்டு சிக்கித் தவிக்கிறேனே! "  சத்தமின்றி உத்தவன் கண்ணீர் விட்டு அழுதான்.  ஒரு நிமிஷம் அவனுக்குத் தான் காண்பது எல்லாம் கனவோ எனத் தோன்றியது.  ஆம்; ஆம்; இது கனவு தான்.  என்னுடைய பாட்டி வீட்டின் பெண்டிர் இத்தனை நாணமில்லாதவர்களாக இருக்கவே முடியாது. ஆஹா, இவை எல்லாம் கனவே.  நனவில்லை.

மறுபடியும் மெல்லிய கரங்கள் அணைக்க, "கிருஷ்ணா, இது கனவில்லை;  நனவே தான்.  உண்மையாகத் தான் நடக்கிறது.  நான் என்ன செய்வேன்!" தன் பற்களைக் கடித்துக் கொண்ட உத்தவன், என்ன நடந்தாலும் தான் நெகிழ்ந்து கொடுக்காமல் இருக்க வேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டான்.  மெல்லிய கரங்கள் மீண்டும் அவனை அணைத்தவண்ணம் அவன் முகத்தைத் தன் பக்கம் திருப்ப முயன்றது.  உத்தவன் அசைந்தே கொடுக்கவில்லை.  நேரம் சென்று கொண்டிருந்தது.  அந்த இளம்பெண் செய்த முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போயின.  நேரம் ஆக ஆக, அவளுக்கு வெறுப்புத் தான் மேலோங்கியது.  திடீரென அவள் விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்.  அதைக் கேட்ட உத்தவன் மனம் கரைந்தது.  அடுத்த ஒரு நொடியில் உத்தவன் மனம் நெகிழ்ந்து தன் கரங்களில் அவளை அள்ளி அணைக்க நினைத்தான்.  ஆனால் இமை கொட்டும் நேரத்தில் அவன் மனம் மீண்டும் கடினப்பட்டது.  அவன் அசையவே இல்லை.  எல்லாம் வல்ல ஈசனைத் தனக்கு மன உறுதியையும், சக்தியையும் கொடுக்கும்படி பிரார்த்தித்துக் கொண்டே இருந்தான்.  ஈசனும் அவன் பக்கம் இருந்தார்.  பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்தப் பெண் சற்று நேரத்தில் எழுந்து சென்றுவிட்டாள்.

ஆனாலும் உத்தவன் மனம் அமைதியடையவில்லை.  காமனை அண்டவிடாமல் அவன் தடுத்துவிட்டான் தான்.  ஆனாலும் அவன் மனதில் நிம்மதியில்லாமல் அப்படியே தூங்கிப் போனான்.  தூக்கத்தில் மீண்டும் அதே போல் கனவுகள்;  கனவுகள்! கனவிலிருந்து விழித்த உத்தவனுக்குத் தான் கண்டது கனவல்ல என்பது உடனேயே புரிந்துவிட்டது.  ஆஹா, மீண்டும் ஆபத்து!  இப்போது வந்திருப்பது இரட்டையரில் மற்றொருத்தி.  "ஈசனே, என் ஈசனே, எனக்கு நீ வைக்கும் அக்னிப் பரிக்ஷை இன்னமுமா முடிவடையவில்லை?  இன்றிரவு முழுதுமே இப்படியா?  இதற்கு ஒரு முடிவில்லையா?"  உத்தவன் தன் மனதிற்குள் புலம்பினான்.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உத்தமனுக்கு சிரமம் தான்...

ஸ்ரீராம். said...

சோதனை சீக்கிரம் நீங்கட்டும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எல்லாம் வல்ல ஈசனைத் தனக்கு மன உறுதியையும், சக்தியையும் கொடுக்கும்படி பிரார்த்தித்துக் கொண்டே இருந்தான். ஈசனும் அவன் பக்கம் இருந்தார்.//

//காமனை அண்டவிடாமல் அவன் தடுத்துவிட்டான் தான். //

சுவாரஸ்யமான கதையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.