Saturday, August 17, 2013

சஹாதேவன் முடிவெடுக்கிறான்!

இந்த கேலிப் பேச்சுக்களை யுதிஷ்டிரன் நிறுத்தவேண்டி சைகை காட்டினான்.  “நாம் என்ன செய்ய நினைக்கிறோமோ அதைச் செய்வதை விட, எது சரியானதோ அதைத் தான் செய்ய வேண்டும்.  நாம் ஆசாரியர் வியாசரிடமிருந்து இப்போது நாம்  செய்ய வேண்டியது என்ன என்பது குறித்த ஆலோசனைகள் அவருக்கு இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே என் அவா.”

“நாங்கள் ஆசாரியரைச் சந்தித்தபோது, கிருஷ்ணன் நீங்கள் உயிருடன் இருக்கிறீர்களா இல்லையா என்பதை மட்டுமே கண்டு பிடிக்கச் சொன்னான்.” உத்தவன் கூறினான்.

அர்ஜுனன் இடை மறித்து, “ஆசாரியருக்கு நாம் அனைவருமே குழந்தைகள்.  நம்மிடம் பெரிதும் அன்பு வைத்திருக்கிறார் என்பது உண்மையே. “அர்ஜுனன் தனக்குள் தானே ஏதோ யோசித்து முடிவெடுத்திருக்கிறான் என்பதைப் புலப்படுத்தும் வண்ணம் பரபரப்புடன் காணப்பட்டான். மேலும் தொடர்ந்து, “ அதே போல் சித்தப்பா விதுரரும், தாத்தா பீஷ்மரும் நம்முடன் பாசத்துடன் இருந்தாலும், அவர்களின் முதல் கவலை குரு வம்சம் அழியக் கூடாது என்பதும் ஹஸ்தினாபுரத்துக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதுமே. குரு வம்சத்தினரின் மேன்மை ஒன்றே அவர்களுக்கு முக்கியம்.  நாம் அந்த மேன்மை என்னும் நெருப்பை அணையாமல் பாதுகாக்கும் எண்ணெயாக இருக்க வேண்டும் என்பதுவே அவர்கள் எதிர்பார்ப்பு; விருப்பம் எல்லாமும்.  அதை ஜகஜ்ஜோதியாக எரிய வைக்கும் முயற்சியில் நாம் அனைவரும் எரிந்து சாம்பலாக ஆனால் கூட அவர்களுக்கு லட்சியமில்லை.”

“நீ கொஞ்சமும் நியாயமே இல்லாமல் அநியாயமாகப் பேசுகிறாய்.  ஆசாரியருக்கு நம்மிடம் அன்பில்லை என்பதை என்னால் ஏற்க முடியாது.  அதை என்னால் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை.” யுதிஷ்டிரன் கொஞ்சம் கடுமையான குரலில் சொன்னான்.  “ஆஹா, நான் பேசுவதில் நியாயம் இல்லையா?” அர்ஜுனன் உணர்ச்சித் துடிப்புடன் கேட்டான்.


 “ஆரியர்களுக்குள்ளேயே சிறந்த ஐந்து வீரர்கள் இங்கிருக்கிறோம்.  தாய்களுக்குள்ளேயே சிறந்த தாய், ஐந்து மக்களை வளர்த்த தாய் இதோ இந்தக் குந்தி தேவி! அனைத்திலும் நாம் சிறப்பான தகுதி உள்ளவர்களே!  எனினும் நாம் மகிழ்வோடு இருக்க முடியவில்லை. நாம் எவ்வகையிலாவது செல்வாக்குடன் இருக்க முடியுமா?  முடியாது.  நாம் அதற்கெல்லாம் தகுதி இல்லாதவர்களாக ஆக்கப்பட்டுவிட்டோம்.  அதிலும் இந்த மிக மோசமான காட்டில் நாம் கெட்டுக் குட்டிச்சுவராகத் தான் போகப் போகிறோம்.  ஆம், கெட்டுக் குட்டிச்சுவராக, குட்டிச்சுவராக!” அர்ஜுனனின் மன வேதனையும் கோபமும் ஒருங்கே எதிரொலித்தது. அவனுடைய அளவற்ற கோபத்தின் விளைவே மேற்கண்ட பேச்சுக்களைப் பேசுகிறான் என்றும் இணக்கம் இல்லாமலும்,  வேறு வழியில்லாமலும், இந்நிலையை அவன் ஏற்படுத்திக் கொண்டான் என்பதும் புரிந்தது.

நகுலன் அவனை மிக வேகமாக ஆமோதித்தான். பீமனோ எதற்கும் அசைந்து கொடுக்காமல் மிகப் பெரியதொரு நகைச்சுவையைக் கேட்டாற்போல் அர்ஜுனன் முதுகில் தட்டிக் கொடுத்துப் பாராட்டினான்.  பெரியதாகச் சிரிக்கவ்வும் செய்தான்.  சஹாதேவன் முகத்திலோ எவ்வித உணர்வுகளும் இல்லாமல் ஒரு பொம்மையைப் போல் அசையாமல் வீற்றிருந்தான். யுதிஷ்டிரன் கொஞ்சம் கருணையுடன் அர்ஜுனனைப் பார்த்துச் சிரித்தான்.  ஒரு பாசமுள்ள தந்தை தன் கோபக்காரப் பிடிவாத குணமுள்ள மகனைப் பார்ப்பது போல் பாசம் பொங்க அர்ஜுனனைப் பார்த்தான். “அர்ஜுனா, நாம் இப்போது நம்முடைய சுய விருப்பங்களைக் குறித்துப் பேசும் நேரம் இதுவல்ல. இதைக் குறித்து இப்போது நினைக்கும் நிலையில் நாம் இல்லை.  நாம் யோசிக்க வேண்டியது இப்போது நம்முடைய கடமை என்ன; அதாவது தர்மம் என்ன என்பது தான்!”  தன் பேச்சுத் திறமையில் நம்பிக்கை வைத்திருக்கும் யுதிஷ்டிரன் அர்ஜுனனின் இந்த உணர்ச்சிப் பிரவாகத்தில் மூழ்கிவிடாமல் அமைதி காத்ததோடு அல்லாமல் அவன் குரலிலும் அந்த அமைதி தெரிந்தது.


“கிருஷ்ணனை விடப் பெரிய தர்மாத்மாக்கள் இருக்கின்றனரா? அண்ணாரே, இந்த ஆர்ய வர்த்தம் முழுதும் தேடினாலும் தர்மத்தைக் கடைப்பிடிக்கவும், தர்மத்தைக் காக்கவும், கிருஷ்ணனை விட வேறு எவரும் எனக்குத் தெரியவில்லையே!  இப்போது அவன் தானே சொல்லி அனுப்பி இருக்கிறான்?  கிருஷ்ணனின் யோசனையை ஏற்க வேண்டிய கடமை, அதாவது உங்கள் மொழியில் தர்மம் நமக்கு இல்லையா? இவ்வுலகத்து மக்கள் அனைவரின் நன்மைக்காகவும், நியாயங்களுக்காகவும் போராடி வரும் கிருஷ்ணனுக்குத் துணை நின்று அவை அனைத்தையும் காக்க வேண்டியவர்கள் இல்லையா நாம்?  நாம் இப்போது இருக்க வேண்டிய இடம் கிருஷ்ணன் பக்கத்தில் அல்லவோ!”

“பொறுமை அர்ஜுனா, பொறுமை!  இப்போது நாம் அமைதியாகக் கொஞ்சம் பொறுமையுடன் இதைக் குறித்துச் சிந்திப்போம்.  எது உயர்ந்த தர்மம்?? நமக்கு நாமே முடிவெடுப்பதா?  அல்லது பெரியோர்களின் யோசனைக்குக் காத்திருந்து அதற்கேற்றாற்போல் முடிவெடுப்பதா? ஆசாரியர் வியாசர், தாத்தா பீஷ்மர், சித்தப்பா விதுரர் ஆகியோரின் யோசனைகள்…………”

“ஹூம், அவர்கள் இன்னுமா நம்மை நினைவில் வைத்திருக்கப் போகின்றனர்?? என்றோ மறந்திருப்பார்கள்!” நகுலன் அவர்கள் அனைவரும் எதிர்பாராவண்ணம் இடையில் புகுந்து சட்டென்று கோபமாகச் சொன்னான்.

“ஆஹா, நகுலா, நீயுமா?  அப்படி எல்லாம் பேசுவது தப்பு குழந்தாய்! நம் பெரியோரைக் குறித்து நாமே தவறாகப் பேசலாமா?  அதிலும் நம் மரியாதைக்குரிய ராணி, நம்  பாட்டியார் சத்யவதி அவர்கள் நேரிலே பேசிக் கிருஷ்ணனை இந்த வேலைக்கு, அதாவது நம்மைக் கண்டுபிடிக்கும் பெரியதொரு பணிக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.  இவை எல்லாம் தாத்தா பீஷ்மருக்கோ, அல்லது சித்தப்பா விதுரருக்கோ தெரியாதிருக்குமா என்ன? நிச்சயமாய்த் தெரிந்திருக்கும்.”

“அப்படியே இருக்கட்டும் அண்ணாரே,  இப்போது நாம் நம்மைக் குறித்து யோசித்து நாமே முடிவெடுப்பதன் மூலம் மேலும் அவர்களுக்கு உதவி செய்தவர்கள் ஆவோம்.  அப்படி நினையுங்களேன்.  நம்முடைய வாழ்க்கைக்கும், நம்முடைய உயிருக்கும் நாமே எஜமானர்களாக இருப்போம்;  இருக்க வேண்டும்.” அர்ஜுனன் மீண்டும் கூறினான்.

“அர்ஜுனா, நமக்கு நாமே சிந்தித்து முடிவெடுப்பது நம் கடமை தான்.  அதை நான் ஒத்துக்கொள்கிறேன்.  ஆனால் அதற்கான சமயம் இதுவல்ல என நினைக்கிறேன்.  இந்த நிமிஷம் அப்படி ஒரு முடிவெடுப்பது சரியானது என எனக்கு நானே சமாதானம் செய்து கொள்ள இயலவில்லை.  அது நம் கடமை என எனக்குத் தோன்றவே இல்லை.  ஆகவே உன்னுடன் இப்போது ஒத்துப் போக இயலவில்லை. “ பேசிக் கொண்டிருந்த யுதிஷ்டிரன் திடீரென ஏதோ நினைத்தவன் போல சஹாதேவன் பக்கம் திரும்பி, “நீ என்ன வாய் மூடி மெளனியாகவே இருக்கிறாய்?  இந்த விஷயத்தில் உன்னுடைய கருத்து என்ன என்பதைக் கொஞ்சம் சொல்லக் கூடாதா?  சொல், உன் அபிப்பிராயம் என்ன?” என்று கேட்டான்.

இரட்டையரில் சின்னவன் ஆன சஹாதேவன் அவ்வளவு நேரமும் வாய் மூடி மெளனியாகவே இருந்தான்.  அரைக்கண் மூடிய நிலையில் தரையைக் குத்திட்டுப் பார்த்த வண்ணம் அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்தான். தற்போது தன் கண்களை நன்றாகத் திறந்து யுதிஷ்டிரனையும், மற்ற அனைவரையும் பார்த்து ஒரு சின்னச் சிரிப்பைக் காட்டினான்.  பின்னர் மெதுவாகப் பேச ஆரம்பித்தான்.  ஒவ்வொரு வார்த்தைகளும் அழுத்தமாக உறுதியாகத் துல்லியமாக வந்து விழுந்தன.  அனைவருமே சஹாதேவன் பேச்சை உன்னிப்பாகக் கவனித்தனர்.  அவன் எப்போதுமே அதிகம் பேசக் கூடியவன் அல்ல.  பேசினால் அவன் பேச்சு ஒவ்வொன்றும் அக்ஷர லக்ஷம் பெறும் வார்த்தைகளாகவே அமையும்.  தேவையில்லாமல் பேச மாட்டான்.  பேசினால் அவற்றில் சரியான பொருள் காணப்படும்.  இப்போது அவன் பேச ஆரம்பிக்கவே அனைவருமே அவன் பக்கம் ஆவலுடன் பார்த்தனர். “ நான் விண்ணின் நக்ஷத்திரங்களின் போக்கை உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன்.  வெகு நாட்களாகக் கணித்ததில் ரோஹிணி நக்ஷத்திரத்தின் பாதங்களில் பிறந்த ஒருவர் மூலம் நமக்கு விடிவு பிறக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.  நம்மோடு சேர்ந்தவர்களில் ரோஹிணி நக்ஷத்திரப் பாதங்களில் பிறந்த ஒரே மனிதன் நம் வாசுதேவக் கிருஷ்ணன் மட்டுமே.  நம் சகோதரனும் ஆவான்.”

“அதான் உத்தவன் கிருஷ்ணனிடமிருந்து தானே வந்திருக்கிறான்?” அர்ஜுனன் இடைவெட்டினான்.
“அடேய், தந்திரக்காரா, இதை முன்னாடியே என்னிடம் சொல்வதற்கென்ன?” பீமன் கேட்டான்.
“நீ ஒன்றும் என்னிடம் இதை எல்லாம் கேட்கவே இல்லையே? கேட்டாயா?” சஹாதேவன் புன்முறுவலுடன் திருப்பிக் கொடுத்தான்.

“ஆஹா, இப்போது புரிகிறது எனக்கு, தினம் தினம் இரவுகளில் நீ விடிய விடிய விண்ணைப் பார்ப்பதும் கணக்குப் போடுவதும், பெருமூச்சு விடுவதுமாக இருந்ததன் காரணம்.” நகுலன் சொல்கையில், பீமன் இடைமறித்து, “ஆமாம், ஆமாம், அதான் தூக்கமிழந்து சரியான உணவில்லாமல் இளைத்துப் போயிருக்கிறானே, அதனால் தான் என்பதும் புரிகிறது” என்றான்.

 சஹாதேவனின் புத்திசாலித்தனத்திலும், அவன் எடுக்கும் முடிவுகளிலும் பெரும் நம்பிக்கையும், மரியாதையும் வைத்திருக்கும் யுதிஷ்டிரன் அவனைப் பார்த்து, “இப்போது உன் ஆலோசனை என்ன சஹாதேவா?” என்று கேட்டான்.  நிதானமான, அதே சமயம் உறுதியான குரலில் சஹாதேவன், “இப்போது உத்தவனைத் திரும்பக் கிருஷ்ணனிடம் அனுப்பி வைப்போம்.  அவன் என்ன சொல்கிறானோ அதற்கு நாம் கடமைப் பட்டவர்கள்.  கிருஷ்ண வாசுதேவன் நம்மை அவனுடன் வரச்சொன்னால் நாம் அவனோடு துவாரகை செல்வோம். அதற்குள் இந்த கிரஹங்களின் நிலைமையும் சரியாகி நம் அனைவருக்கும் அநுகூலமான நிலைக்கு வந்துவிடும்.”

“ஓ, சஹாதேவா, உனக்கு எப்படி நன்றி சொல்வது?  எப்போதும் போல் நீ மிக அழகாகச் சொல்லிவிட்டாய்!  நம்மைக் கடவுளர் அனைவரும் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனரோ அதை நீ அறிந்து சொல்கிறாய் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. “ யுதிஷ்டிரன் பெருமையுடன் பாராட்டினான்.

“பின்னர் அதற்கு அதிக நாட்கள் ஆகாது.” அர்ஜுனன் குரலில் நிம்மதி தெரிந்தது.  “உத்தவன் நாளைக்கே திரும்பப் போய்க் கிருஷ்ணனிடம் கேட்டுக் கொண்டு பதினைந்து நாட்கள்; அல்லது அதிகம் போனால் ஒரு மாதத்திற்குள் திரும்ப வந்து சொல்லட்டும்!” என்றான் உற்சாகம் கொப்பளிக்க. குந்தியும் அதை ஆமோதித்து உத்தவன் விரைவில் திரும்பிச் சென்று செய்தி கொண்டு வரட்டும் எனக் கூறினாள்.





2 comments:

ஸ்ரீராம். said...

'எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்' என்று சகாதேவன் வார்த்தையை யுதிஷ்டிரன் கேட்கத் தீர்மானிக்கிறான்! அதனை அவன்கண் அதற்குத் தகுதியானவன் என்பதால்தானே!

வை.கோபாலகிருஷ்ணன் said...

ரஸித்தேன். பகிர்வுக்கு நன்றிகள்.

உடனே ஓடியாங்கோ.

http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html#comment-form

அன்புடன் கோபு