Sunday, October 6, 2013

துரோணரையும் கவர்ந்த கண்ணன்!

தன்னுடைய இருப்பின் மூலமும், பார்வையின் மூலமும் கிருஷ்ணன் எப்படி ஒவ்வொரு மனிதரிடமும் இப்படியான தாக்கத்தை ஏற்படுத்துகிறான் என்பதை நினைத்து நினைத்து துரோணாசாரியாருக்கு ஆச்சரியம் மிகுந்தது.  ஆச்சரியத்தை அவரால் தவிர்க்க இயலவில்லை.  அந்த ஆச்சரியம் மாறாமலேயே, “ஆகவே நீ இறக்கவேண்டாம் என முடிவெடுத்தாய்?” என்று ஷிகண்டினிடம் கேட்டார்.

“இல்லை. நான் அவனிடம் அனைத்தையும் மறக்காமல் ஒன்றுவிடாமல் கூறிவிடவேண்டும் என்று முடிவெடுத்தேன்.   நான் வளர்ந்த விதம், என்னுடைய உணர்வுகள், என்னுடைய துன்பங்கள்,  அனுபவித்த துன்பங்கள் மட்டுமில்லாமல், தொடர்ந்து வரும் துன்பங்கள் என ஒன்றுவிடாமல்.  கிருஷ்ணனின் ஆசாரிய வழி சகோதரனும், நண்பனுமான ஷ்வேதகேதுவிடம் , “என்னைக் கிருஷ்ணனைப் பார்க்க அழைத்துச் செல் எனக் கெஞ்சினேன்.  அப்போது தான் நான் கிருஷ்ணனைப் பார்க்கப் போவது ஒருவரும் அறியாமல் இருக்கும்.”

“நீ அவனைப் பார்த்தாயா?”

“ஆம்,  அவன் தங்கி இருந்த மாளிகையிலிருந்து வெளியே வந்து அங்கிருந்த வெட்டவெளியில் என்னையும் அழைத்துக் கொண்டு இருவரும் சிறிது நேரம் நடந்தோம்.  ஆஹா, கிருஷ்ணனின் கருணையை என்னென்பது!   நான் என்னுடைய துரதிர்ஷ்டவசமான வாழ்க்கையைக் குறித்து அவனிடம் சொல்ல ஆரம்பித்தேன்.”  ஷிகண்டின் கிருஷ்ணனின் பெருமையைக் குறித்துச் சொல்வதில் அளவு கடந்த பெருமிதம்  அடைகிறான் என்பதை துரோணர் புரிந்ந்து கொண்டார். அவனைக் குறித்துப் புகழ்ந்து சொல்வதிலும் அவன் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறான் என்பதைக் கண்டார்.  ஷிகண்டின் தொடர்ந்தான்.

“அவன் பொறுமையுடன் என்னைச் சகித்துக் கொண்டதோடு நான் சொல்வதைக் கவனித்துப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டான். என்னுள்ளே நான் அன்றுவரை சொல்லமுடியாமல் வெளிக்காட்டிக் கொள்ள இயலா உணர்வுகளை என் மன ஆழத்திலிருந்து தோண்டிக் கண்டு பிடித்து அவனிடம் பகிர்ந்து கொள்ள வைத்தான்.   அவனிடம் என் மனதைத் திறந்து காட்டினேன்.  நான் எவ்வாறு சிறு வயதிலிருந்தே ஒரு ஆண்மகனாக வாழ நினைத்தேன் என்பதைச் சொன்னேன்.  அந்த முயற்சியில் படிப்படியாக நான் எப்படி என் மாறுபட்ட பாலினத்தால் திணறித் திக்குமுக்காடினேன் என்பதையும் கூறினேன்.   நான் வெறுப்பின் பலிக்கடாவாக எவ்வாறு ஆக்கப் பட்டேன் என்பதையும் எடுத்துக் கூறினேன்.  இத்தனைக்கும் நடுவே எனக்குத் திருமணம் ஆனதையும், என் மாமனார் என் மனைவியை என்னோடு வாழ அனுப்ப முயற்சி செய்து வருவதையும் அதன் காரணமாக நான் என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைத்ததையும் எல்லாவற்றையும் கண்ணனிடம் சொன்னேன்.”

“ம்ம்ம்ம், வாசுதேவன் அதற்கு என்ன மறுமொழி கூறினான்?”

“என்னுடைய துக்கம் நிறைந்த இந்தத் துயரமான வாழ்க்கையைக் குறித்து அவனிடம் சொல்லும்போதே என் கஷ்டங்கள் மறைந்து கொண்டு வருவதாக நான் உணர்ந்தேன்.  கிருஷ்ணன் அப்படி ஒரு தீவிர கவனத்துடனும், கருணையுடனும் நான் பேசுவதைக் கேட்டுக் கொண்டான்.  என் துன்பத்தைக் குறித்து நான் கூறிக் கதறியபோது அவன் என்னைப் பார்த்துக் கருணைபொங்கச் சிரித்தான்.  அந்தச் சிரிப்பும், அந்தக் கண்களின் பார்வையும்!  ஆசாரியரே, அவன் கண்களிலிருந்து பெருகிய அந்தக் கருணா சமுத்திரத்தில் நான் மூழ்கிப் போனேன்.  அத்தகையதொரு கருணையைக் கிருஷ்ணன் ஒருவனால் மட்டுமே தர முடியும்.  சிறு குழந்தையைப் பெற்ற தந்தை கன்னங்களைப் பிடித்துக் கொஞ்சுவதைப் போல் கண்ணன் என் கன்னங்களைத் தன்னிரு கரங்களால் பிடித்து அழுத்தி என் முகத்தைக் கூர்ந்து பார்த்தான்.  அதன் பிறகு அவன் பேசிய போது மழையே காணா வறண்ட பாலைவனத்தில் செல்லும் ஒருவனுக்கு அபூர்வமாகக் கிடைக்கும் மழைத்துளியைப் போன்று அவன் சொற்கள் என்னைக் குளிர வைத்தன.  என் மன தாகத்தைத் தீர்த்து வைத்தன.  “

“அப்படி என்னதான் சொன்னான் கிருஷ்ணன்?”

“ஆசாரியரே!  அவன் இந்த மாதிரி ஏதோ சொன்னான்: “என் குழந்தாய்,  தர்மத்தைக் கடைப்பிடித்துக் கொண்டு வாழும் வாழ்க்கையை வாழ முடிந்த வரை நீ வாழ்ந்தே தீரவேண்டும்.  அதற்குள்ளாக  உன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ள நினைக்காதே!   இன்றுவரையிலும் சோதனைகள் நிறைந்த உன் வாழ்க்கையை நீ தைரியமாக எதிர் கொண்டிருக்கிறாய்.  இப்போது போய் உன் தைரியத்தைக் கை விடலாமா? “ என்று கிருஷ்ணன் கேட்டான்.  நான் சொன்னேன், “கண்ணா, இனி என்னிடம் தைரியம் என்பது மருந்துக்குக்கூட இல்லை. “ என்றேன்.  அதற்கு அவன் சிரித்துவிட்டு, “கோழையாக, கோழைத்தனத்தோடு இறக்க விரும்புகிறாயா?” என்றான்.  நான் “இல்லை” என்றேன்.  அதற்கு அவன் சொன்னான்:”  இறப்பை தைரியமாக நீ எதிர்கொள்ள விரும்பினால்,   நீ தைரியமாக இறக்க நான் வழி சொல்கிறேன். “  அதை அவன் சொன்னது எவ்வளவு நம்பிக்கையுடன் இருந்தது என்பதை என்னால் விளக்க முடியவில்லை.  ஆனால் அதன் பின்னர் என்னுடைய கஷ்டங்களுக்கு விடிவு பிறந்துவிட்டது என்பதை என்னால் உணர முடிந்தது.”  துரோணாசாரியாருக்கு இந்த இளைஞனிடம் ஒரு புதிய ருசி பிறந்துவிட்டது.  இறக்கத் துணிந்த ஒருவனுக்கு வாழ்ந்து காட்டும் தைரியத்தைக் கொடுத்த அதிசய மனிதன் கிருஷ்ணன்.  அவனால் தைரியம் அடைந்த இந்தச் சிறுவன். துரோணர் அவனைப் புதிய கண்களால் பார்த்தார்.  “பின்னர் என்ன நடந்தது?” என்றார்.

“ஆசாரியரே, கிருஷ்ணன் என்னிடம், கேட்டான்:” ஷிகண்டின், நீ ஒரு ஆண்மகனாக ஆக விரும்புகிறாயா?  உண்மையான ஆணாக, ஒரு போர் வீரனாக, சிறந்த மேன்மையுள்ள மனிதனாக ஆக விரும்புகிறாயா?” “ஆம் வாசுதேவா!” என்றேன் நான்.  தன்னிரு கரங்களையும் என் தோள்பட்டையில் வைத்த வண்ணம் என் கண்களை நேருக்கு நேர் பார்த்தான் வாசுதேவன்; “  குரு துரோணாசாரியாரிடம் செல்வாயாக!   அவரிடம் மாணவனாகச் சேர்!  அவர் ஒருவரால் தான் உன்னுள்ளே மறைந்திருக்கும் மனிதனைக் கொண்டு வர முடியும்.  அவர் சிறந்ததொரு ஆசாரியர்.  இந்த பூவுலகு முழுதும் தேடினாலும் அவரைப் போன்றதொரு சிறப்புகள் வாய்ந்த ஆசாரியரைக் காணமுடியாது.  களிமண்ணைக் கூடத் தங்கமாக மாற்றும் சக்தி அவரிடம் உள்ளது.”

துரோணருக்கு ஷிகண்டின் தன்னிடம் சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்தன.  கிருஷ்ணனை முதன்முதல் பார்த்ததும் தன்னுள் எழுந்த உணர்ச்சிகளை ஷிகண்டின் விவரித்ததை நினைவு கூர்ந்தார்.  அவனுடைய உணர்வுகளை இப்போது அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.  விவரிக்க ஒண்ணாத மகிழ்ச்சியும், பெருமையும் அவர் மனதில் நிரம்பி வழிந்தது.  “அவன் அப்படியா சொன்னான்?  இதே வார்த்தைகளைச் சொன்னானா?” என்று கேட்டார்.


“ஆம் ஐயா, நான் ஒரு வார்த்தையைக் கூட விடவும் இல்லை;  மறக்கவும் இல்லை.  ஒவ்வொரு வார்த்தையும் எனக்குப் பூவின் தேனைச் சுவைக்கும் வண்டு எப்படி அந்தத் தேனின் சுவையில் மயங்குமோ அத்தகையதொரு உணர்வைத் தந்தது.  ஆனால் முதலில் அவன் இதைச் சொன்னதும் எனக்குத் திகைப்பே ஏற்பட்டது.  நான் கிருஷ்ணனிடம், என் தந்தைக்கு இந்த விஷயம் தெரிந்தால் ஒருக்காலும் என்னை துரோணரிடம் சென்று மாணவனாகச் சேர அனுமதிக்க மாட்டார்.  என் தந்தையின் பரம வைரி அவர்.” என்றேன். “

“நான் என்ன அவ்வளவு பொல்லாதவனா?” துரோணர் சிரித்தவண்ணம் கேட்டார்.   எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மனம் விட்டு அவர் சிரிப்பதும், அவர் மகிழ்வின் உச்சத்தில் இருப்பதும் புரிந்தது.

“உங்களுக்குக் காரணம் புரியும் என் ப்ரபுவே!” என்றான் ஷிகண்டின்.

“ஆம், எனக்குத் தெரியும்! வாசுதேவன் அதற்கு என்ன சொன்னான்?”

“அவன் சொன்னான்:”ஷிகண்டின், நீ உன் தந்தையைக் கேட்டுக் கொண்டா உன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள எண்ணினாய்?  அதைப் போலவே உன் தந்தையின் சம்மதம் இல்லாமலேயே நீ துரோணரிடம் மாணவனாகச் சேரலாம்.  அதற்கு வேண்டிய தைரியம் உன்னிடம் உள்ளது.  ஒரு பூரணமான ஆண்மகனாக ஆவதற்கு நீ உன் தந்தையைக் கேட்க வேண்டாம்.  இங்கிருந்து ஒரு பரிபூரணமான வீரம் நிறைந்த ஆண்மகனாக நீ திரும்பிச் செல்கையில் உன் தந்தை உன்னை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்பார்.”



3 comments:

இன்னம்பூரான் said...

அத்தகையதொரு கருணையைக் கிருஷ்ணன் ஒருவனால் மட்டுமே தர முடியும்.

~ இது சம்பிரதாயமான சொல் அல்ல. கிருஷ்ணாவதாரத்தின் சூக்ஷ்மத்தை இந்த சிறிய கட்டுரை அற்புதமாக கூறுகிறது.

இராஜராஜேஸ்வரி said...

ஆச்சரியத்தை தவிர்க்க இயலவில்லை..

அருமையான ப்கிர்வுகள்.. பாராட்டுக்கள்..!

ஸ்ரீராம். said...

1) புகழ்ச்சிக்கு மயங்குவதில் துரோணரும் விதிவிலக்கல்ல!

2) துரோணர் இவ்வளவு பொறுமையுடன், நம்பிக்கையில்லா ஒருவனி(ளி)டம் அதுவும் வைரியின் வாரிசிடம் உரையாடலைத் தொடர்வதற்கு கண்ணன் பற்றிய பேச்சே காரணமாக இருக்க முடியும்!