Tuesday, October 29, 2013

குனிகரின் யோசனையும், ஷகுனியின் கேலிகளும்!

தன்னிரு கரங்களையும் ஆசீர்வதிக்கும் பாவனையில் கூப்பியவண்ணம் பீஷ்மருக்கும், திருதராஷ்டிரனுக்கும் எதிரே நின்று துரோணர் அந்த சூழ்நிலைக்கு ஏற்ற மந்திரங்களை உச்சரித்த வண்ணம் குருவம்சத்தினருக்கு ஆசிகளை வழங்கினார்.  ம்ம்ம்ம்ம்ம் ஆனால், பாண்டவர்கள் மட்டும் இப்போது உயிருடன் இருந்திருந்தால்!  இப்படி ஒரு சூழ்நிலையில் ஒரு சபை கூட்டப்பட்டிருந்தால்? என்ன நடந்திருக்கும் என்ற எண்ணத்தை மட்டும் அவரால் தவிர்க்க முடியவில்லை.  பாண்டவர்கள் ஐவருமே அவரின் பிரியத்துக்கு உகந்த மாணாக்கர்கள் தான்.  ஆனால்!!!!!!!  அவர் மனதில் வருத்தம் சூழ்ந்தது.  முட்டாள் தனமாக யுதிஷ்டிரனை யுவராஜ்ய பதவியிலிருந்து அகற்றவேண்டி துரியோதனனுக்கு யோசனை சொன்னது அவரன்றோ!   ஆனால் அதற்கு ஒரு காரணமும் அப்போது இருந்தது.  ஆத்திரமும், ஆங்காரமும் நிறைந்த துரியோதனனைத் தன் வழிக்குக் கொண்டு வந்து ஹஸ்தினாபுரத்தையே நாம் மறைமுகமாக ஆட்சி செய்யலாம் என்றல்லவோ துரோணர் நினைத்தார்!  குருவம்சத்தினரும், ஹஸ்தினாபுரத்தின் அதிகாரமும் நம் கைகளில் என்றல்லவோ துரோணர் நினைத்திருந்தார்.  அவர் எண்ணம் பொய்த்துவிட்டது.   இன்று வரை அவர் போட்ட திட்டங்கள் பொய்த்ததில்லை.  இது தான் முதல்முறையாக இருக்கும்.  நேர்மையும், நற்குணமும் வாய்ந்ததொரு லக்ஷியவாதிக்கு வழிகாட்டுவது எளிது.  ஆனால்!!  ஆத்திரத்துடன் நடந்து கொண்டு அதிர்ச்சி உண்டாக்கும் வண்ணம் நடந்து கொள்ளும் ஒரு முட்டாளை எவ்விதம் கையாளுவது!

தன்னிடத்தில் போய் அமர்ந்து கொண்ட ஆசாரியர் துரோணரிடம் அதுவரை சபையில் நடந்து கொண்டிருந்த பேச்சுவார்த்தைகளின் சாரத்தை திருதராஷ்டிரன் தெரிவித்தான்.  “மரியாதைக்குரிய ஆசாரியரே, ஒரு முக்கியமான முடிவை இப்போது நாம் எடுத்தாக வேண்டும்.  துருபதனின் அழைப்பை ஏற்று நம் இளவரசர்களை திரெளபதியின் சுயம்வரத்தில் பங்கு கொள்ள அனுப்பி வைக்கலாமா?  அது சரியானதா?” என்று திருதராஷ்டிரன் கேட்டான்.   தன் குருட்டுக் கண்களை மகன் துரியோதனன் இருக்கும் பக்கம் திருப்பிய வண்ணம் திருதராஷ்டிரன் மேலும் கூறினான்:” இது ஒரு முக்கியமான விஷயம்.  நாமே கவனித்து முடிவு செய்ய வேண்டிய ஒன்று.  அவசரமாக எந்த முடிவுக்கும் வரக்கூடாது.  ஏனெனில் பாஞ்சால நாட்டு அரசன் நம் நண்பன் அல்ல; எதிரி.  அவன் மகளை நம் இளவரசர்களில் ஒருவருக்கு மணமுடித்து நம் அரண்மனைக்கும், நம் நாட்டுக்கும் அழைத்து வருவது முடிவில்லாத கிளர்ச்சிகளிலும், அதன் மூலம் பேராபத்துக்களையும் எதிர்கொள்ள நேரிடும். “  துரோணர் பீஷ்மபிதாமகரின்   அவரின் மன ஆழத்தை அளக்க விரும்புபவர் போல் அவர் முகத்தையே பார்த்த வண்ணம் இருந்தார்.  ஆனால் எதற்கும் கலங்காத பீஷ்மரோ  சற்றே அநிச்சையாகத் தன் முகத்துத் தாடியைத் தடவிக் கொடுத்தவண்ணம் எவர் அறிவுக்கும் எட்டாவண்ணம் எந்தவிதமான உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் அமர்ந்திருந்தார்.  அதற்குள் திருதராஷ்டிரன், குனிகனைப் பார்த்து, “குனிகா, நீ எங்களிடம் சொன்னதை அப்படியே ஆசாரியரிடம் சொல்வாயாக!” என உத்திரவிட்டான்.

தன் கைகளைக் கூப்பியவண்ணம் மிகவும் வயதான மூத்த மந்திரி குனிகன், முதுமையின் காரணத்தால் ஓயாது துடித்துக் கொண்டிருக்கும் கண்ணிமைகளோடு சிரமப்பட்டுப் பார்த்துக் கொண்டு பேசலானான். “அரசே, தங்கள் கட்டளைப்படியே!  பிதாமகர் பீஷ்மரின் உத்தரவும் அநுமதியும் பெற்றுக் கொண்டு நான் முன்னர் பேசியதைத் திரும்பச் சொல்கிறேன்.  பாஞ்சாலம் நம் பக்கம் ஒரு கூரிய முள்ளைப்போல் உள்ள நாடு.  கிழக்கே நாம் எந்தப் போரும் செய்ய முடியாமல் எங்கேயும் வெற்றி அடைய முடியாமல் தடுத்த வண்ணம் உள்ளது.  உறுதியான தீர்மானங்களை எடுக்கும் துருபதன் நீண்டநாட்களாக நம்முடன் போர் புரிய ஆயத்தங்கள் செய்து வருகிறான்.  இதோ, இங்கே வீற்றிருக்கும், நம் மரியாதைக்குரிய அரச குரு, நம் படைகளின் தலைவர் ஆசாரியர் துரோணரைத் தன் முக்கிய எதிரியாகக் கருதியும் வருகிறான்.  அவன் மகன் யுவராஜா த்ருஷ்டத்யும்னனின் வீரத்தைக் குறித்தோ, அவன் மேன்மேலும் உயர்வடைய விருப்பம் கொண்டவன் என்பதிலோ, எதையும் எளிதில் மன்னிக்கும் சுபாவம் இல்லாதவன் என்பதிலோ நமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.  இளவரசி கிருஷ்ணா என அழைக்கப்படும் திரெளபதியோ அசாத்திய மனோபலம் கொண்டவளாகவும் தன் தகப்பனின் அனைத்துக் குறைகளையும் ஏற்றுக் கொண்டு அவளும் அதே அளவு குறைகளை உடையவளாகவும் தகப்பனின் சபதத்தை முடிப்பதில் தீர்மானம் கொண்டவளாகவும் இருக்கிறாள் என ஒற்றர்கள் மூலம் விசாரித்து அறிந்ததில் தெரிய வருகிறது.”

“நம் பிதாமகர் பீஷ்மர் மிகவும் ஆர்வத்தோடும், கவனத்தோடு ஹஸ்தினாபுரத்தின் நிர்வாகத்தையும், குருவம்சத்தினரையும் பாதுகாத்து வருகிறார்.  இப்போது இந்தப் பாஞ்சால இளவரசி மட்டும் நம் இளவரசர்களில் ஒருவருக்கு மனைவியாக இந்த அரண்மனையிலும், ஹஸ்தினாபுரத்திலும் அடி எடுத்து வைத்தாளானால், இந்நிலையில் மாற்றங்கள் ஏற்படுவதோடு அல்லாமல் பெரும் ஆபத்துக்களும் நேரிடலாம்.   புனிதமான பரத அரசனின் நினைவைப் போற்றும் வண்ணம் உருவான குரு வம்சத்தினருக்குப் பெரிய விபத்து நேரிடலாம்.  பிதாமகரே, அரசே, ஆசாரியர்களே, இளவரசர்களே, சபையோர்களே, மனுநீதியில் சொல்லி இருப்பதை இங்கே நினைவு கூர விரும்புகிறேன்.  மனு நீதியில், “ஒரு பெண்ணை மணந்து கொள்ளும் முன்னர் அவள் பெற்றோர் வந்த வழியையும் கவனித்துப் பாருங்கள்.” என்று சொல்லி இருப்பதை நினைவூட்டுகிறேன்.  இதைத் தவிரவும் ஒரு முக்கியமான கறை அந்தக் குடும்பத்தில் உள்ளது.  திரெளபதியின் சகோதரர்களில் ஒருவன், துருபதனின் மகன்களில் ஒருவன், ஆணுமல்ல, பெண்ணுமல்ல என்று சொல்கின்றனர்.   மாட்சிமை பொருந்திய சபையோர்களே, அவனுக்கு தஷார்னாவின் இளவரசியை மணமுடித்திருக்கின்றனர்.  “

“ஆஹா, என்ன சொல்ல! அந்த இளவரசியை இந்த இளவரசனோடு வாழ வேண்டி காம்பில்யம் அழைத்து வரும் சமயம்--- இந்த இளவரசன் --- அல்லது இளவரசி—எப்படி வேண்டுமோ சொல்லிக் கொள்ளுங்கள்---- இவன் நாட்டை விட்டே ஓடி விட்டானாம்.  அதுவும் சக்கரவர்த்தி துருபதன் தான் இப்படிச் செய்துவிட்டான் என்கின்றனர்.  இவன் ஆணில்லை, பெண் என்பது அவனை மணமுடித்த அந்த இளவரசிக்குத் தெரிந்து விட்டால்?  அதன் மூலம் தனக்குத் தலைக்குனிவு ஏற்பட்டு விடும் என்பதால் துருபதனே அவனை நாட்டை விட்டு ஓடச் செய்துவிட்டான் எனப் பேசிக் கொள்கின்றனர்.  “  இத்தனையையும் பேசி முடித்த குனிகன் மீண்டும் தன்னிரு கரங்களையும் கூப்பிய வண்ணம் அனைவரையும் வணங்கினான். ஆசாரியர் துரோணருக்கு ஷிகண்டினின்  மறைவு குறித்து உலகத்தார் பேசிக் கொள்ளும் விதம் பற்றி ஆச்சரியமாகவும் வேடிக்கையாகவும் இருந்தது.  ம்ம்ம்ம்ம்… குனிகனுக்குத் தெரியாது.  ஆசாரியர் துரோணர் தான் ஷிகண்டினை ஒரு மாபெரும் வீரனாகவும், பூரண ஆண்மகனாகவும், ஒரு கதாநாயகனாகவும் மாற்றப் போகிறார் என்பதைக் குனிகன் அறிய மாட்டான்.  துரியோதனனுக்கு இவை எதுவும் பிடிக்கவில்லை.  அவன் கோபத்தோடு குனிகனைப் பார்த்தான்.  வெடுக்கென்று பேச ஆரம்பித்தான். “ குனிகரே, குரு வம்சத்து இளவரசர்களை என்னவென்று நினைத்தீர்கள்?  அவர்கள் அவ்வளவு பலஹீனமானவர்களா?  தங்கள் மனைவியரின் கைப்பாவைகளாக ஆடுவார்களென்றா நினைத்தீர்கள்?” என்று கோபமாய்க் கேட்டான்.
“யுவராஜாவின் மன்னிப்பைக் கோருகிறேன்.” வயது முதிர்ந்தவரானாலும் அரச குலத்தவருக்கு அளிக்கும் மரியாதையில் இருந்து சற்றும் தவறாத குனிகர் மேலும் தொடர்ந்து, “ வீட்டுக்கு வரும் மருமகளின் கைகளிலிருந்து எந்த மனிதனும், எந்தக் குடும்பமும் தப்ப இயலாது.  அதோடு சாந்தமான மருமகளாக இருந்தாலுமே, ஒரு கணவனுக்கு மனைவியானதுமே  எந்தப் பெண்ணுமே கடைசியில் அவனை ஒரு மந்தமானவனாக, முட்டாளாக மாற்றிவிடுவாள் என்று பழைய பழமொழி ஒன்று சொல்லும்.  ஆனால் யுவராஜா அவர்களே, இவளோ? மன உறுதிக்கும் திடத்துக்கும் பெயர் போன பெண்மணி.  இவளால் என்னதான் முடியாது?”

துரோணருக்கு துரியோதனன் மனதில் ஓடும் எண்ணங்கள் தெளிவாகப் புரிந்தன;  பானுமதி சரியாகத் தான் சொல்லி இருக்கிறாள். துரியோதனன் எவ்வாறேனும் திரெளபதியின் கரம் பிடிக்கத் துடிக்கிறான்.  அதில் சந்தேகமே இல்லை.  இப்போது அரசனின் கண்கள் ஷகுனி வீற்றிருந்த திசையில் திரும்பின. “காந்தார இளவரசே, தாங்கள் என்ன சொல்கிறீர்கள்? தங்கள் கருத்து என்ன?” என்று கேட்டான்.  இகழ்ச்சியான பார்வை ஒன்றை வீசினார் துரோணர். அவர் தன் எண்ணத்தைச் சற்றும் மறைக்கவில்லை.  தன் மாணாக்கனைக் கெடுத்து அவனுக்குக் கேடு விளைவிக்கும் எண்ணங்களை அவன் மனதில் புகுத்தும் இந்தப் போக்கிரியை அவர் வெறுத்தார்.  துரியோதனன் மேல் அவன் செலுத்தும் ஆதிக்கத்தையும் வெறுத்தார்.  இதன் மூலம் குரு வம்சத்தின் ராஜ சபைக்கும், அதன் நடவடிக்கைக்கும் அவன் கொடுக்கும் ஓயாத தொல்லைகளையும் அவரால் பொறுக்க இயலவில்லை.   எதற்கும் கவலைப் படாத ஷகுனி சிரித்தான். “ கற்றறிந்த, வயதில் மூத்தவரான, விவேகமுள்ள மந்திரி குனிகனின் கருத்தோடு என் கருத்து சற்றும் ஒத்துப் போகாது.  ஆனால் பெருமை மிகுந்த பரத வம்சத்தினரின் இந்த ராஜசபைக்கு உரிய நியாயத்தோடு அவர் நடந்து கொள்ளவில்லை.” ஒரு வெற்றிப் புன்முறுவலோடு துரியோதனனையும் துஷ்சாசனையும் பார்த்த ஷகுனி மேலும் தொடர்ந்து, “குரு வம்சத்தினரின் இளவரசர்கள் என்ன கோழைகளா? சிங்கங்கள், சிங்கக் குட்டிகள்.   பாஞ்சால நாட்டு இளவரசி இவர்களில் ஒருவனை மணந்தால் அவனுக்கு விசுவாசமுள்ள  மனைவியாக இருப்பதல்லாமல் அவளால் வேறென்ன செய்ய முடியும்? “ துரியோதனனைப் பார்த்துக் கண்ணடித்த வண்ணம் இதைச் சொன்ன ஷகுனி மேலும் அவனுடைய பாதி ஏளனமானதும், பாதி கேலியானதுமான தொனியில் தொடர்ந்து, “பிதாமகர் பீஷ்மர் அல்லவோ குரு வம்சத்தின் பாதுகாவலர்!   அவர் இருக்கையில் என்ன பிரச்னை!  துரியோதனன் யுவராஜா! மந்திரி குனிகனோ நல்லமுறையில் ஆலோசனைகள் சொல்வதில் வல்லவர், அதோடு நம் தளபதியான ஆசாரியர் துரோணர் இருக்கையில் என்ன கவலை நமக்கு?  போர்களை எல்லாம் ஜெயிப்பது தானே நம் வேலை?  ஒரு இளவரசனால் வேறென்னதான் செய்ய இயலும்?”



4 comments:

வல்லிசிம்ஹன் said...

காய்கள் எப்படியெல்லாம் நகர்கின்றன. ஷகுனியின் ரூபத்தில் விதி
எப்படித்தான் குரு வம்சத்தை அழிக்கப் பார்க்கிறது!!
எத்தனை தடவை பார்த்தாலும் கேட்டாலும் அலுக்காத கதை.அந்தப் புத்தகம் எழுதியவர் ''கண்ணனுக்காக ''படிக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.

ஸ்ரீராம். said...

ஷகுனியின் திட்டங்கள் எதுவும் பலிக்கப் போவதில்லை. ம்ம்....

இராஜராஜேஸ்வரி said...

நேர்மையும், நற்குணமும் வாய்ந்ததொரு லக்ஷியவாதிக்கு வழிகாட்டுவது எளிது. ஆனால்!! ஆத்திரத்துடன் நடந்து கொண்டு அதிர்ச்சி உண்டாக்கும் வண்ணம் நடந்து கொள்ளும் ஒரு முட்டாளை எவ்விதம் கையாளுவது!

துரோணரின் மன ஆதங்கம் ..!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//துரியோதனனைப் பார்த்துக் கண்ணடித்த வண்ணம் இதைச் சொன்ன ஷகுனி மேலும் அவனுடைய பாதி ஏளனமானதும், பாதி கேலியானதுமான தொனியில் தொடர்ந்து, “பிதாமகர் பீஷ்மர் அல்லவோ குரு வம்சத்தின் பாதுகாவலர்! அவர் இருக்கையில் என்ன பிரச்னை! துரியோதனன் யுவராஜா! மந்திரி குனிகனோ நல்லமுறையில் ஆலோசனைகள் சொல்வதில் வல்லவர், அதோடு நம் தளபதியான ஆசாரியர் துரோணர் இருக்கையில் என்ன கவலை நமக்கு? போர்களை எல்லாம் ஜெயிப்பது தானே நம் வேலை? //

சகுனி, சகுனி வேலைகளில் இறங்கிவிட்டரே! நல்லாப் போகுது கதை.;)