Saturday, November 16, 2013

பானுமதி யோசிக்கிறாள்!

தனக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகிறதை குறித்த மகிழ்ச்சியை துரியோதனனால் அடக்க முடியவில்லை.  மிகவும் பெருமிதமும் அடைந்தான்.  மனம் பூரணமான திருப்தியில் திளைத்தது.  அவனுக்குப் பிறக்கப் போகும் முதல் குழந்தைக்கு பானுமதி தாயாகப் போகிறாள்.  இந்த எண்ணமே அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.  குரு வம்சத்தினர் வெகு காலமாக எதிர்பார்த்து வந்த ஒன்று நடக்கப் போகிறது.  இது ஒரு நல்ல சகுனமாகவே அவனுக்குத் தோன்றியது.  சக்கரவர்த்தி பரதன் அரசாண்ட அரியணையில் அவன் மகனும் ஒரு சக்கரவர்த்தியாக ஆளுவான்.  மிகவும் கனிவோடும், அன்போடும் பானுமதியின் கண்ணீரைத் தன் மேல் வேஷ்டியால் துடைத்து அவளை அணைத்து ஆறுதல் அளித்தான்.  உண்மையிலேயே குழந்தை மனம் கொண்ட பானுமதியின் மனமோ  தன் கணவனின் இந்த அன்பில் நெகிழ்ந்தது.  அவள் தனக்கு நேரப் போகும் ஆபத்தைக் கூட மறந்துவிட்டாள்.  அவளுக்கு இனி கண்ணனைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை;  அவனைச் சந்தித்தாலும், சந்திக்காவிட்டாலும் அவளுக்கு ஒன்று தான்.  அதே போல் அவள் பிறந்த நாட்டை விடப் பெரிய தேசத்தின் இளவரசியை இனி துரியோதனன் மணந்து வந்தாலும் அது குறித்து அவளுக்குக் கவலை இல்லை.  அவள் விரும்புவதெல்லாம் அவள் கணவன் அவளை அன்பாக நடத்த வேண்டும்; அவளிடம் என்றும் மாறா அன்பு பூண்டிருக்க வேண்டும் என்பதே.

அவன் தோள்களில் சாய்ந்து அவன் அணைப்பில் உறங்க வேண்டும். இதை விடவும் பெரிய சுகமோ, அல்லது பதவியோ, அதிகாரமோ இருக்குமா? வாய்ப்பே இல்லை.   சில நொடிகளிலேயே துரியோதனனின் அன்பான அணைப்பில் ஆழ்ந்து உறங்க ஆரம்பித்தாள் பானுமதி.  சிறிது நேரத்திலேயே அவள் உலுக்கி எழுப்பப்படுவதை உணர்ந்தாள்.  திடுக்கிட்டுக் கண் விழித்தவள் கனவல்ல; நனவே எனத் தெளிந்தாள்.  எழுந்து அமர்ந்திருந்த துரியோதனன் அவளைப் பார்த்து, “தேவி, நான் என் மனதை மாற்றிக் கொண்டு விட்டேன்;  நன்கு யோசித்துப் பார்த்தேன்.  நீ கிருஷ்ண வாசுதேவனைக் கட்டாயம் சந்திக்க வேண்டும்.” என்றான்.

பானுமதிக்கு இது கனவே என்று தோன்றியது.  ஆகவே திரும்பப் படுத்துக் கொண்டு மறுபக்கம் திரும்பிய வண்ணம் மீண்டும் உறங்க ஆரம்பித்தாள். ஆனால் துரியோதனன் விடவில்லை.  “தேவி, நீ கிருஷ்ணனைச் சந்தித்தே ஆக வேண்டும் என்று விரும்புகிறேன்.” என்றான்.  மீண்டும் எழுந்த பானுமதி தன் கண்களைத் தேய்த்துவிட்டுக் கொண்டு, தான்  காண்பது கனவல்ல;   நனவே எனத் தெளிந்தாள்.  அவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.  “நான் ஏன் அங்கே செல்லவேண்டும்?? எதற்காக?  நான் இப்போது சந்தோஷமாகவே இருக்கிறேன்.” என்று அவன் தோள்களைக் கட்டிக் கொண்டு கொஞ்சலாகக்க் கூறினாள்.  “ஓஹோ, தேவி, என்னை சந்தோஷமாய் வைத்திருப்பது தானே உனக்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடியது!  நீ கிருஷ்ணனிடம் செல்.  நீ அவனிடம் செல்ல வேண்டும் என நான் விரும்புகிறேன்.” என்றான். அவளை வற்புறுத்தினான்.

“ஆனால் என்ன காரணத்துக்காக நான் அவனிடம் செல்வேன்?”

“அவனிடம் சென்று என் அன்பான விசாரிப்பையும், என் வணக்கத்தையும் தெரிவி.  கூடவே ஒரு சகோதரியாக உன் வணக்கத்தையும் தெரிவிப்பாய்!” புன்முறுவலோடு கூறினான் துரியோதனன்.  “ம்ஹூம், நான் போக மாட்டேன்.  எனக்குப் போக வேண்டும் என்று மனதில் தோன்றவே இல்லை!” என்றவள் மேலே தொடர்ந்து, “அதோடு நான் அத்தனை தூரம் பிரயாணப் படுவதில் எவ்விதமான பலனும் இல்லை;  பொருளும் இல்லை. “ என்றாள்.

பானுமதியால் முதலில் ஆவேசமாகக் கத்திச் சண்டை போட்ட துரியோதனன் இப்போது ஏன் போகச் சொல்லுகிறான் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.  ஒருவேளை தான் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதற்காக இந்தச் சலுகையை அளிக்கிறானோ?  ஆனால் அவன் எவ்வளவு கடுமையாக நடந்து கொண்டாலும் பானுமதிக்குப் பொருட்டில்லை.  ஒரு புயல் வந்து தாக்குவது போல் அவனுடைய உணர்வுகள் வந்து செல்வதையும், வந்த வேகத்திலேயே மறைவதையும் அவள் கண்டிருக்க்கிறாள்.  அவனுக்கு மகிழ்வல்லாத எதையும் அவள் செய்யவும் விரும்பவில்லை.  அதோடு அவன் உள் மனதில் பானுமதி புஷ்கரம் செல்லக்  கூடாது என துரியோதனன் விரும்பினான் எனில்  அதை மீறிச் செல்லவேண்டும் என அவள் நினைக்கக் கூட மாட்டாள்.  அவள் திரும்பிக் கொண்டுவிட்டாள்.  தூங்குவது போல் நடித்த வண்ணம் தன் கண்களை மூடிக் கொண்டாள்.

“பிடிவாதக் காரி, முட்டாள் பெண்ணே!” துரியோதனன் முணுமுணுத்தவண்ணம், “நீ புஷ்கரம் செல்வதும், கிருஷ்ணனைச் சந்திப்பதும்  எத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதைத் தெரிந்து கொண்டிருக்கிறாயா?” என்று அவளைக் கேட்டான்.  பானுமதி பதிலே சொல்லவில்லை.  அசையவே இல்லை.

 “ஹூம், நான் நல்ல நேரத்தில் பிறக்கவே இல்லை;  என் அதிர்ஷ்டம் அவ்வளவு தான்.  ஹூம், காலையில் ராஜசபையில் ஆசாரியதேவர்! இரவோ இங்கே படுக்கை அறையில் சொந்த மனைவி!  எப்போதெல்லாம் நான் தலை எடுக்கலாம்;  அதற்கான நேரம் இது எனத் தோன்றி நான் அதற்கான முயற்சிகளைச் செய்கிறேனோ அப்போதெல்லாம் எனக்கு மிகவும் நெருங்கியவர்களே எனக்கு மாறாகச் செயல்படுகின்றனர்.  எனக்கு விரோதமாக நினைக்கின்றனர்.”  தன் நெற்றியில் கையை வைத்துத் தாங்கிய வண்ணம் ஏதேதோ நினைத்துக் கொண்டு மிகவும் சோகமாக வெகு நேரம் அமர்ந்திருந்தான் துரியோதனன்.  பிறகு ஏதோ நினைத்தவன் போல மீண்டும், “ ஏன் எனக்கென யாருமே இல்லை?  எனக்கு உதவவென்று எவருமே பிறக்கவில்லையா?  என் பக்கம் ஏன் யாருமே நிற்க மறுக்கின்றனர்?” என்று முணுமுணுப்பாகக் கூறிக் கொண்டான்.  ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவன் படுக்கையில் படுத்து, பானுமதிக்கு முதுகைக் காட்டிய வண்ணம் தூங்க ஆரம்பித்தான்.

ஆனால் பானுமதிக்கு அதன் பின்னர் தூக்கம் வரவில்லை.  அவள் கணவனின் பெருமூச்சுக்கள் அவள் நெஞ்சைக் கிழித்தன. அவளுக்கு அனுபவம் குறைவு என்றாலும் அவள் கணவன் செல்லும் பாதையில் நிறையத் தடங்கல்கள் இருப்பதை அவளால் உணர முடிந்தது.  கண்ணுக்குத் தெரியாத சில சக்திகள் அவள் கணவனின் வெற்றிப்பாதையில் குறுக்கிடுவதை அவளால் உணர முடிந்தது.  எப்படியானாலும், அவனும் அப்படித்தான் உணர்கின்றான்.  ஏனெனில் இம்மாதிரியான குறுக்கீடுகள் நேரிடுவதாக அவனுக்கு உணரும் சமயம் இப்படித் தான் அவன் குணமே மாறிப் போகிறது.  க்ரோதம் நிறைந்தவனாக, ஆவேசம் கொண்டவனாக, தன் குணங்களைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாதவனாக மாறிப் போகிறான். குரு வம்சத்தினரில் பெரியோர் சிலருக்கு துரியோதனனின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை தான்.  அவன் ஒரு சக்கரவர்த்தியாக வேண்டும் என்ற விருப்பத்தையும் கூட பெரியோர் சிலரால் பொறுக்க இயலவில்லை. அதையும் தடுக்கின்றனர்.  சொந்தக் குடும்பத்தினரே இதைச் செய்கின்றனர்.

அவன் மேல் எந்தவிதமான தப்புமே இல்லாதிருக்கையிலேயே யுதிஷ்டிரனை யுவராஜாவாகக் கொண்டு வந்து அவனுக்கு அநியாயத்தைச் செய்தார்கள்.  அது மாபெரும் தவறு என அவள் அப்போதே நினைத்தாள். ம்ம்ம்ம், அவள் மாமனாரும், துரியோதனனின் தந்தையுமான திருதராஷ்டிரன் குருடன் என்பதால் அவள் கணவனுக்கு தண்டனையைத் தருவதா?  இப்போது தான் என்ன தவறு செய்கிறான்?  அல்லது செய்து விட்டான்?  ஒரு பலமுள்ள சக்கரவர்த்தி என்னும் நிலையை அடையத் ஹஸ்தினாபுரத்தின் சாம்ராஜ்யத்தின் நிலையான தன்மைக்காகத் தானே அவன் திரெளபதியை மணமுடிக்க எண்ணுகிறான்.  குருதேவர் அதைத் தெளிவாக எதிர்க்கிறார் எனில் அவளும் தானே!  அவள் கணவனின் இந்தத் திட்டத்தைத் தடுக்கும் வகையில் அவள் குருதேவரையும் இந்தச் சதியில் சேர்த்துக் கொண்டுவிட்டாள்.  ம்ம்ம்ம்.. கிருஷ்ணனின் உதவியையும் பெற்றாக வேண்டும்.  அவள் கிருஷ்ணனின் உதவியைப் பெறுவது குறித்துச் சிந்திக்க ஆரம்பித்தாள்.  ஆம், அவள் கணவன் சொல்வதே சரி.  அவள் கணவன் இப்போது தனித்து விடப்பட்டுவிட்டான்.  நண்பர்கள் எவரும் இல்லை.  என்னதான் அவளை விட வயதில் பெரியவனாக இருந்தபோதிலும் இவனை இப்போது அவள் தான் கவனிக்க வேண்டும். அவனிடம் என்ன கெட்ட குணம் இருந்தாலும் அவளை எப்படி நடத்தினாலும் கடைசியில் அவளை நேசிக்கிறான்; பாதுகாத்து வருகிறான்.

ம்ம்ம் அவனுக்கும் நண்பர்கள் இருக்கின்றனர் தான்.  கர்ணன், அஸ்வத்தாமா இருவரும்.  அவனுடைய மனோநிலைக்குத் தக்கவாறே நடந்து கொண்டு அதற்கேற்ப அவனைத் தூண்டிவிடுவார்கள்.  அவனை எவ்விதத்திலும் தடுப்பவர்கள் இல்லை.  அதோடு ஷகுனி மாமாவும் இருக்கிறார்.  என்றாலும் அவன் அரிதாகவே அவனிடம் விரும்பத்தக்கவிதமாய் நடந்து கொள்வான். துரியோதனனின் தந்தையோ அவனிடம் மிகவும் அன்பை வைத்துவிட்டு, அதனால் முட்டாள்தனமாக நடந்து கொள்வான்.  அவன் தாயோ எனில் அவனிடம் அன்பிருந்தாலும், அவன் நிலையைக் கண்டு வருந்துபவள் அல்ல. ஆம், பானுமதி, துரியோதனனின் மனைவியான பானுமதியால் மட்டுமே அவனுக்குத் தேவையான அன்பையும், ஆதரவையும், கொடுக்க முடியும் என்பதோடு அவன் விதியோடு அவன் போராடுகையில் தேவையான உதவியையும் அவளால் தான் அளிக்க முடியும்.  பானுமதி மேலும் யோசித்தாள்.

4 comments:

ஸ்ரீராம். said...

என்ன முடிவெடுக்கப் போகிறாள் பானு? துரியோதனனை ஆதரிக்கும் வழக்குக்கு பதில் வரப்போகிறதோ!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//துரியோதனனின் மனைவியான பானுமதியால் மட்டுமே அவனுக்குத் தேவையான அன்பையும், ஆதரவையும், கொடுக்க முடியும் என்பதோடு அவன் விதியோடு அவன் போராடுகையில் தேவையான உதவியையும் அவளால் தான் அளிக்க முடியும். //

ஆம். உண்மை தான். ஒரு நல்ல மனைவியால் மட்டுமே, கணவனுக்கு பக்கபலமாக இருக்க முடியும்.

கதையில் பல்வேறு திடீர் மாற்றங்கள் இன்று.

ஸ்ரீகிருஷ்ணரை, பானுமதி சந்திக்கச்செல்வாள் எனத் தோன்றுகிறது.

sambasivam6geetha said...

ஶ்ரீராம், கணவனுக்கு ஆதரவாத்தான்! :)

sambasivam6geetha said...

வாங்க வைகோ சார், பொறுத்திருந்து பார்ப்போமே!