Friday, January 31, 2014

பலராமன் சிந்திக்கிறான்!

பின்னர் தன்னுடைய இயல்பான நகைச்சுவை உணர்வு தலை தூக்க பலராமன், “ அது சரி, கண்ணன் அவன்மனைவியை விட்டு என்னைத் தொந்திரவு செய்து காலைத் தூக்கம் என்ற இனிய நேரத்திலிருந்து என்னை எழுப்ப வைப்பானேன்?  அதற்காகவே இந்த வாக்குறுதிகளைக் கொடுத்திருப்பானோ?” என்றான்.  ஆனால் அவனுடைய இந்த நகைச்சுவையை இருவருமே ரசிக்கவில்லை என்பதை அவர்கள் முகமே காட்டிக் கொடுத்தது.  சுதாரித்துக் கொண்ட பலராமன், கொஞ்சம் நிதானத்துக்கு வந்து,  விளையாட்டில்லாமல் பேச ஆரம்பித்தான்.  இன்னும் வேறு ஏதோ முக்கியமான விஷயம் இருக்கிறது;  தன்னுடைய இந்தப் பேச்சு அவர்களை அதைச் சொல்ல விடாமல் தடுக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட பலராமன், “இன்னும் என்ன சொன்னான்?” என்று கேட்டான்.  ருக்மிணி தாங்கள் மூவரைத் தவிர அங்கே ஒருவரும் இல்லை என்பதை மறுபடியும் நிச்சயப்படுத்திக் கொண்டாள்.  “அவர் உங்களிடம் ஒரு ரகசியத்தைக் கூறச் சொல்லிச் சென்றார்.  ஹஸ்தினாபுரத்தின் மாட்சிமை பொருந்திய மஹாராணி சத்யவதிக்கும் அவர் ஒரு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.  அது….அது……. ஐந்து சகோதரர்களும் சுயம்வரம் நடைபெறும்போது உயிருடன் தோன்றுவார்கள் என்பதே!”

தன் கண்களை ஆச்சரியத்தில் விரித்த பலராமன், “தன்னுடைய இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியா அவன் சென்றிருக்கிறான்?” என்று கேட்டான். “உங்களால் அவருக்கு உதவ முடியவில்லை; யாதவர்கள் எவராலும் இயலவில்லை.  யாருக்கும் மனம் இல்லை.  ஆனால் அவர் தான் மேற்கொண்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பின் வாங்குபவர் அல்ல. எப்படியேனும் நிறைவேற்றுவார்.” என்றாள் ருக்மிணி.  இதைச் சொல்கையில் அவள் கோபம் வெளிப்பட்டது.   “ஆக, அவன் தன்னைத் தானே மாய்த்துக்கொள்ளச் சென்றுவிட்டான்? அல்லவா?” பலராமன் கேட்டான்.

“அவர் நிரந்தரமாக நம்மை விட்டுச் சென்று விட்டார்.  எனக்கு அவரை நன்கு தெரியும்.” இதைச் சொல்கையில் நிராசையிலும் துக்கத்திலும் ஏற்பட்ட மனக்கசப்பில் ருக்மிணியின் குரல் தழுதழுத்தது.  “ஆனால் அவன் ஏன் நிரந்தரமாக நம்மை விட்டுப் பிரிய வேண்டும்?” பலராமனுக்கு இவை எல்லாவற்றையும் கேட்டதும் குழப்பமே அதிகரித்தது.  இவை எல்லாம் எதைக் குறிக்கிறது என்பதும் அவனுக்குப் புரியவில்லை.  ருக்மிணி,”அவர் கடைசியாக என்னிடம் என்ன சொன்னார் என்பது தெரியுமா?  அவர் சொன்னார்: “நான் யார் யாருக்கு வாக்குறுதி கொடுத்துள்ளேனோ அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை.  நான் சொன்னவை அனைத்தும் உண்மை என்றும் என் வாக்குறுதிகள் உண்மை என்றும் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.  அவை உண்மையாகவே நிலைபெற்றிருக்கும். “  மேலும் அவர் சொன்னார்,


 “ இவ்வளவு நாட்களாக நான் தர்மத்தை என் பக்கம் இழுக்க முயன்று கொண்டிருந்தேன்;  ஆனால் இன்று தர்மம் என் பக்கம் வந்துவிட்டது.  யாதவர்கள் தர்மத்தை ஏமாற்ற விரும்பினால், வஞ்சிக்க விரும்பினால், நான் தர்மத்தின் பக்கம் எவர் இருக்கிறார்களோ, அங்கே அவர்களைக் கண்டு கொண்டு சென்று விடுவேன். “ மூத்தவரே, இதைச் சொல்லிவிட்டு அவர் விரைந்து விட்டார்.  என் பிரபு, என் பிரபு, மீண்டும் இங்கே உங்களை எல்லாம் பார்க்க வரப் போவதில்லை.  அதிலும் நீர், மற்றவர்களை விட ஒரு படி மேலே போய் அவரைக் கஷ்டமான சூழ்நிலையில் தள்ளி விட்டீர்கள்.”  இதைச் சொன்ன ருக்மிணி அப்படியே சரிந்து அமர்ந்து அழத் தொடங்கினாள்.


“ஆஹா, என் பிரபு, என் பிரபு, அவருக்கு என்ன நடக்கப்போகிறதோ, தெரியவில்லையே!  அவர் திரும்ப உங்களிடம் எல்லாம் வந்து நிற்க மாட்டார் என்பதை நான் நன்கறிவேன்.  நீங்கள் அனைவருமாகச் சேர்ந்து கொண்டு அவரைத் தோற்கடிக்க வைத்துவிட்டீர்கள்.  அவரை ஏற்காமல் மறுத்து விட்டீர்கள். அதிலும் நீர், அவரின் மூத்த சகோதரர், உடன் பிறந்த சகோதரர் அவரை வெளியேற வைத்துவிட்டீர்கள்.” இந்த அதீதமான உணர்ச்சிப் பிரவாகம் தாங்க முடியாத ருக்மிணி அப்படியே மயங்கி விழுந்தாள்.


ரேவதி அவளை மயக்கத்திலிருந்து எழுப்ப முயன்றாள். பலராமன் எழுந்து ஒரு குவளை நிறையக் குளிர்ந்த தண்ணீரால் தன் முகம், தலையை நனைத்துக் கொண்டு முதல் நாளிரவு குடித்ததினால் இன்னும் மிச்சம் இருந்த குடி மயக்கத்தைத் தீர்த்துக் கொண்டான்.  சிங்கம் தன் பிடரி மயிரைச் சிலிர்த்துக் கொள்வது போல் சிலிர்த்துக் கொண்ட பலராமன் ஒழுங்கற்ற தன் தாடியையும் தன் கைகளால் தடவிக் கொடுத்தான்.  முள்ளம்பன்றியின் கூரிய முட்களைப் போலிருந்த அந்தத் தாடி குத்தியதோ என்னமோ, திடீரென ரேவதியைப் பார்த்து, “அந்த சாத்யகி எங்கே, எப்படி, ஏன் ஓடிப் போனான்? எனக்குப் புரியவே இல்லை!” என்றான்.


“பொறுங்கள் பிரபுவே.  ருக்மிணி சொல்வது தான் சரி.  சாத்யகி எங்கும் ஓடிப் போகவில்லை.  அவனைக் கொலை செய்திருக்க வேண்டும் அல்லது கடத்தப்பட்டிருக்க வேண்டும்.” என்றாள் ரேவதி.  “யாருக்கு அவ்வளவு தைரியம் இருக்கிறது?” என்றான் பலராமன்.  ஒரு இளைஞன்;  அதுவும் வீரம் மிகுந்த இளைஞன்;  யாதவ இளைஞர்களின் அன்பைப் பெற்றவன்;  ஒரு தலைவனாக உருவாக வேண்டிய குணாதிசயங்கள் நிரம்பியவன். உக்ரசேனருக்கும், வசுதேவருக்கும் அடுத்தபடியாகத் தலைவனாக வேண்டிய நிலையில் இருப்பவன். அப்படிப்பட்ட சாத்யகியைக் கொன்றுவிட்டார்கள் என்பதோ அல்லது கடத்திவிட்டார்கள் என்பதோ, அதுவும் துவாரகையில். யாதவர்களின் சொந்த பூமியில்!  நம்பக் கூடியதாக இல்லையே!  ஏதோ தெய்வக் குற்றமோ?  யாரேனும் தெய்வ நிந்தை செய்துவிட்டார்களோ? இல்லை எனில் இது எப்படி நடந்தது?

பின்னர் கோவிந்தனின் வெளியேற்றத்தின் பாதிப்பு எல்லாம் ஒருசேர பலராமனைத் தாக்கியது.  தன் கண்களை மூடிக் கொண்டான்.  பின்னர் கண்களைத் திறந்து பார்த்து, “ருக்மிணி நீ சொல்வது சரியே.  நான் தான், என்னால் தான் கோவிந்தன் வெளியேறிவிட்டான்.  நாங்கள் அனைவரும் சேர்ந்து அவனைத் தோற்கடித்துவிட்டோம்.  அவனைக் கைவிட்டு விட்டோம். அதனால் தான் அவன் வெளியேற நேர்ந்தது!’ என்றான்.  இதைச் சொல்கையில் அவன் தன்னைத் தானே நொந்து கொள்கிறான் என்பது அவன் கம்மிய குரலில் இருந்து தெரிந்தது.


3 comments:

ஸ்ரீராம். said...

பலராமன் மனைவி பெயர் ரேவதியா! பலராமன் பற்றிய வர்ணனை பலராமன் பற்றிய என் மன பிம்பத்தை உடைக்கிறது!

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றாக தாக்கட்டும்... தொடர்கிறேன் அம்மா...

sambasivam6geetha said...

ஶ்ரீராம், பலராமன் திருமணம் குறித்த பதிவுகள் இரண்டாம் பாகத்தில் இருக்கும், பாருங்க. :))))