Monday, February 10, 2014

சாத்யகிக்கு நடந்தது என்ன?

முதல்நாள் இரவில் கண்ணனை விட்டுப் பிரிந்து வீட்டுக்குச் செல்கையில் சாத்யகி மிகவும் மன மகிழ்ச்சியோடு தான் இருந்தான்.  கண்ணனோடு செலவு செய்த இத்தனை வருடங்களில் அவனுக்குத் தான் பெருமளவு உதவிகள் செய்ய முடிந்ததில் மகிழ்வும், பெருமையையும் அடைந்திருந்தான். அவனுடைய பெரும்பாலான வீர, தீர சாகசங்களில் தன் பெரும்பங்கும் இருப்பதை நினைத்துப் பெருமிதம் கொண்டான்.  இப்போது ஒரு பொன்னான வாய்ப்புக் கண்ணெதிரே வந்துள்ளது.  போட்டிக்கு உத்தவன் இங்கே இல்லை. அவன் வடக்கே எங்கேயோ தூரத்தில் இருக்கிறான். இப்போது இந்தப் பொன்னான வாய்ப்பு அவனுக்கு மட்டுமே, சாத்யகிக்கு மட்டுமே வாய்த்துள்ளது.  ஆஹா, அவன் மட்டும் புஷ்கரத்தை மீண்டும் செகிதனாவுக்கு மீட்டுக் கொடுக்க முடிந்தால்!  இதைச் செய்ய வேண்டியது இப்போது அவன் முழுப் பொறுப்பில் உள்ளது.

ஆரம்ப நாட்களில் கண்ணனை சாத்யகிக்குப் பிடிக்கவில்லை தான். அவனுடைய தலைமைக்குக் கீழ் வேலை செய்வதையும் விரும்பினான் இல்லை தான்.   கண்ணனின் தலைமையை ஏற்பது மிகவும் கஷ்டமாகவே இருந்தது அவனுக்கு.  ஆனால் கண்ணனுடன் சேர்ந்து வேலைகளைச் செய்யச் செய்யத் தன்னுடைய தனித்தன்மையும், தன்னுடைய ஆளுமைத் திறனும் இன்னமும் அதிகமாய்ச் சுடர் விட்டுப் பிரகாசிப்பது நன்றாகவே புரிந்தது சாத்யகிக்கு.  கண்ணனுடைய வழிகாட்டுதலுக்குக் கீழே அவன் செய்த சாகசங்களால், விரைவில் ஒரு நம்பிக்கையான போர்த்தளபதியாக ஆகிவிட முடிந்தது அவனால்.  எல்லாவிதங்களிலும் கண்ணனுடைய முடிவுகளிலும், அவன் கொள்கைகளிலும் தன்னையும் அறியாமல் ஒத்தும் போனான். இயல்பாகவே உற்சாகம் நிறைந்த அந்த வாலிபன் எந்தவிதமான சூழ்நிலைகளுக்கும், வேலைகளுக்கும் ஒத்தும் போகும் குணம் உள்ளவனாக இருந்தான்.  ஆகவே எப்போதும் கண்ணனோடு நெருங்கி இருக்கும் உத்தவனிடம் அவனுக்குப் பொறாமையும் உண்டு.  அதே சமயம் உத்தவன் கிருஷ்ணன் சொல்லாத, ஆனால் அவன் மனதின் ஆழத்தில் புதைந்திருக்கும் ஆசைகளை, அவன் விருப்பங்களைத் தானாகவே புரிந்து கொண்டு நிறைவேற்றுபவன் என்பதையும் சாத்யகி புரிந்து வைத்திருந்தான்.

அதே சமயம் உத்தவன் விவேகமும், சூட்சுமமான புத்தி உள்ளவனாக இருந்ததோடு சுயக்கட்டுப்பாடு நிறைந்தும் இருந்தான்.  ஆனால் சாத்யகியோ? விரைவில் உணர்ச்சிவசப்படுபவனாக, அவசர புத்தி உள்ளவனாக, எதையும் வெளிப்படையாகப் பேசிவிடும் கபடற்றவனாக இருந்தான்.   ஆகவே இதனால் தான் கண்ணன் தன் சொந்த நலனை மட்டும் கருதாமல் சாத்யகியின் நலனையும் கருதியே அவனிடம் எல்லா விஷயங்களையும், எல்லா ரகசியங்களையும் பகிர்வதில்லை என்பதையும் உணர்ந்திருந்தான்.  ஆனால் அவனிடம் இந்தப் பொறுப்பு இப்போது ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு மறுநாள் காலை அவன் அக்ரவனம் செல்ல வேண்டும்.  அதை நினைத்து அவன் மகிழ்ந்தான்.   அங்கே சென்றதும் தான் சாத்யகி செய்யப்போவது என்னவென எல்லாருக்கும் தெரியப் போகிறது.  அங்கே சென்றதுமே அங்கிருக்கும் அனைத்து அரசர்களுக்கும் ஒரு ஆச்சரியத்தைக் கொடுக்கும் விதமாகப்  புஷ்கரத்தை திடீரெனத் தாக்கப் போகிறான்.  அவர்கள் அவனோடு சேர்ந்து கொள்ளப் போகும் தினத்திற்குப் பல நாட்கள் முன்னராக இது நடந்து முடிந்து விடும்.  வெற்றி விழா உண்மையில் புஷ்கரத்தை அவன் மீட்டுத் தன் வசம் கொண்டு வந்ததும்  அங்கே தான் நடைபெறப் போகிறது.

கிருஷ்ணன் புஷ்கரம் வந்தடைந்ததும், தாமதிக்காமல் அனைவரும் சுயம்வரத்திற்காகச் செல்ல வேண்டியது தான்.  அவனும் இந்த ரகசியமான செய்தியைக் கேட்டுவிட்டான்.  அவனுக்கும் சொல்லப்பட்டு விட்டது. வில் வித்தையோடு சம்பந்தப்பட்ட ஒரு போட்டியில் வெல்பவர்களுக்குத் தான் திரெளபதி மாலையிடுவாள்.  அவள் சுயம்வரத்தின் முக்கியமான விதியே இது தான்.  கிருஷ்ணன் சாத்யகியை விட வில் வித்தையில் சிறந்தவன் தான். ஆனால் அவன் இந்த சுயம்வரத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்து விட்டான்.  ஆகவே சாத்யகிக்கு இப்போது தடை ஏதும் இல்லை. திரெளபதியின் கரத்தைப் பிடிக்க அவனுக்கு ஓர் அரிய வாய்ப்புக் காத்திருக்கிறது.  கல்யாணம் செய்து கொண்டால் இப்படிப் பாரம்பரியமான ராஜ குலத்தில் பிறந்த ஒரு இளவரசியைத் தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்.  அதிலும் ஆர்யவர்த்தத்தின் சிறந்த ஒரு நாட்டின் இளவரசியைக் கல்யாணம் செய்து கொள்வது சாதாரண விஷயமா?  சாத்யகிக்குத் தன்னையும் அறியாமல் சிரிப்பு வந்தது.  தனக்குத் தானே புன்னகைத்துக் கொண்டான்.

தன் தாய் மாமன் வீட்டை அடைந்ததும், ரதத்தை வேண்டாம் என திரும்பிப் போகும்படி சொல்லி அனுப்பினான்.  ரத சாரதியை நடு இரவு சென்று பத்து கடிகைகளுக்குப் பின்னர் தன் மாளிகைக்கு நேரில் வரும்படியும் சொல்லி அனுப்பினான். பின்னர் தாய்மாமன் வீட்டிலேயே அன்றிரவு உணவையும் உண்டான் சாத்யகி. பின்னர் வீட்டுக்குத் திரும்பினான்.  தெருக்களில் ஜன நடமாட்டமே இல்லாமல் வெறிச்சென இருந்தது.  பொதுவாகவே சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் யாதவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி உடனடியாக இரவு போஜனம் முடித்துக் கொண்டு உடனே படுக்கவும் சென்றுவிடுவார்கள்.  பல காலமாக இது தான் அனைத்து யாதவர்களுக்கும் வழக்கமாக இருந்து வருகிறது.  ஒரு சில இளைஞர்கள் மட்டும், குடித்துக் கொண்டும், சூதாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டும், வித விதமான விருந்துகள், கேளிக்கைகளில் கலந்து கொண்டும் சுற்றிக் கொண்டிருந்து விட்டு விருந்தளிக்கும் யாதவத் தலைவர்கள் வீடுகளிலேயே இரவைக் கழிப்பதும் உண்டு.   இன்று அப்படியும் எவரையும் காணமுடியவில்லை.

நிலவொளி குளுமையாகப் பிரகாசித்தது.  மாளிகைகளின் நிழல்கள் கரும்பூதங்களைப் போல் ஒன்றன் மேல் ஒன்றாக விழுந்து இரவின் கருமையையும் நிலவொளியின் பிரகாசத்தையும் பறைசாற்றிக் கொண்டிருந்தன. சாத்யகியின் மாளிகை இருக்கும் தெருவிற்குச் செல்ல இன்னும் இரு தெருக்களே இருக்கும் சமயம்,   சாத்யகியை எவரோ அழைக்கும் குரல் கேட்டது. “மாட்சிமை பொருந்திய சாத்யகி, இந்த இரவில் இங்கே என்ன செய்கிறாய் அப்பனே? உன்னைப் போன்ற ஒரு சுத்தவீரனுக்கு இது அழகல்லவே!” என்றது அந்தக் குரல் கேலியாக.  குரலின் கேலியை நன்கு உணர்ந்தான் சாத்யகி.   அந்தக் குரல் ஜயசேனன் என்னும் இளம் வீரனுடையது என்றும் அவன் ஒரு போக்கிரி என்பதையும் அறிந்தான் சாத்யகி.  சில நாட்கள் முன்னர் தான் அவனுக்கும், சாத்யகிக்கும் ஒரு வாய்ச் சண்டை நடந்திருந்தது.

“நான் குடிக்கவோ, அல்லது சூதாடவோ இல்லை.  அதன் பொருட்டுத் தெருக்களில் சுற்றவும் இல்லை!” சாத்யகி கொஞ்சம் கோபத்தோடயே சொன்னான்.  ஜயசேனன் தன்னை அழைத்த விதம் அவனுக்குச் சற்றும் பிடிக்கவில்லை.  தன்னைக் கேவலமாக எண்ணி உள்ளூரச் சிரிக்கிறான் என்று நினைத்தான்.  “ஓஓஓஓ, உன் மாளிகைக்குச் செல்கிறாயா சாத்யகி?  நானும் அந்தப் பக்கம் தான் செல்கிறேன்.” என்று சொல்லிக் கொண்டே  அந்த திடகாத்திரமான வாலிபன் சாத்யகியுடன் நடந்தான்.  சாத்யகி பதில் ஏதும் பேசவில்லை.  ஜயசேனனுடன் செல்வதையும், அவனுடன் பேசுவதையும் சாத்யகி விரும்பவில்லை;  என்றாலும் அவன் தற்சமயம் மிகவும் சிநேகமாகப் பேசுகையில் அவனிடம் கோபமும் கொள்ள முடியவில்லை.  தர்ம சங்கடமான நிலையில் சாத்யகி வாய் பேசாமல் நடந்தான்.

“முட்டாள் தனமான வீர, தீர சாகசங்களைக் கண்ணனோடு சேர்ந்து செய்வதில் உனக்குத் தனிப்பட்ட பலன் என்ன கிடைத்திருக்கிறது சாத்யகி?  நீ இப்போது எங்கள் அனைவருக்கும் தலைவனாகி இருக்க வேண்டும்.  நல்ல சந்தர்ப்பத்தை இழந்துவிட்டாய்! “ என ஏளனமாகச் சொன்னான் ஜயசேனன்.

“என் இடம் எது, எனக்கு என்ன வேண்டுமென நான் நன்கறிவேன்.” சாத்யகி கொஞ்சம் பணிவாகவே சொன்னான்.  இப்போது அவர்கள் கொஞ்சம் இருட்டான ஒரு சந்திற்குள் நுழைந்திருந்தனர். “ஓ, உனக்கு உன் இடம் எதுவெனத் தெரியுமா?  அப்படியா சொல்கிறாய்?” என்று கேட்டவண்ணம் சத்தமாகச் சிரித்த ஜயசேனன் தன் கையை சாத்யகியின் தோள்பட்டையில் வைத்துக் கொண்டான்.  அவனை ஒரு நெருங்கிய நண்பனைப் போல் கட்டி அணைக்க முயன்றான்.  தன் தோளிலிருந்து அவன் கைகளைத் தட்டிவிட சாத்யகி முயன்றபோது திடீரெனத் தடுக்கியது அவனுக்கு.  தன் நண்பனாக மாறி இருக்கும் ஜயசேனனின் கால்கள் தன் கால்களிடையே புகுந்து தன்னைத் தடுப்பதை உணர்ந்தான் சாத்யகி.   கீழே விழுந்தான்.  தன்னை சுதாரித்துக் கொள்வதற்குள்ளாக அவன் வாயில் ஒரு துணி அடைக்கப்பட்டது. எங்கிருந்தோ பல கைகள் ஒன்று சேர்ந்து அவனைக் கட்டின.   அவன் தலை வழியாக ஒரு சாக்கு போடப்பட்டு அவன் அதற்குள் திணிக்கப்பட்டான். இம்முறையில் அவன் செய்யும் சிறு சப்தமும் வெளிவராமல் அடக்கப்பட்டது. அவன் வாளை எவரோ இடையிலிருந்து உருவினார்கள்.  அவன் கைகளும் கால்களும் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டன.  உடனே சில ஆட்கள் சாக்கு மூட்டைக்குள் இருந்த சாத்யகியைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு ஓட்டமும், நடையுமாக விரைந்தனர்.




3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒரே நிமிடத்தில் 'லபக்'...!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/blog-post_11.html) சென்று பார்க்கவும்... நன்றி...

ஸ்ரீராம். said...

//அவனுடைய தலைமைக்குக் கீழ் வேலை செய்வதையும் விரும்பினான் இல்லை தான்.//

விரும்பவில்லை என்றே வார்த்தையை அமைத்திருக்கலாம்!

டப்பென்று கடத்தி விட்டனரா....!