Monday, February 17, 2014

அழகான ராக்ஷசியே!

அப்போது மெல்லிய கிண்கிணிச் சப்தம் கேட்டது.  கல் கல் என வளையல்கள் சப்திக்கும் ஒலியும் கூடவே கேட்க, ஆஹா, தன்னைக் கடத்தி வந்திருப்பது ஒரு பெண்ணா? திகைத்துப் போனான் சாத்யகி.  இதைவிட ஒரு மோசமான சூழ்நிலை வேறெதுவும் இல்லை.  கேலிக்கிடமாகவன்றோ ஆகிவிட்டான். அனைவரும் அவனைப் பார்த்து நகைப்பார்களே!  அவன் சாத்யகி, கிருஷ்ண வாசுதேவனின் படைகளின் ஒரு பகுதிக்குத் தளபதி, அதிரதர்களில் ஒருவன் ஒரு பெண்ணால் கடத்தப்பட்டுவிட்டான்.  இப்போது சாத்யகி படிகளுக்கு நேரே வந்து மேலே பார்த்தான்.  ஒரு சிவந்த அழகான பெண்ணின் முகம் கீழே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது.  இப்போது அவனைப் பார்த்தது.  அவனைக் கண்டதும் அவள் கண்களில் குறும்பு கொப்பளிக்கத் தன் கைவளைகள் குலுங்க, தோளில் போட்டிருந்த வங்கிகளிலிருந்து பிரகாசமான ஒளி வீச, தன் கைகளை அசைத்து அவனைக் கூப்பிட்டாள்.

மெல்லிய, இனிமையான குரலில் அவள் பேசினாள்: “சாத்யகரின் மகனே, மேலே வாரும்!  பெண்களைப் பார்த்தா பயப்படுகிறீர்? பயப்படாதேயும். எனக்கு உம் மேல் காதல் ஏதும் இல்லை.  ஆகவே  காதலினால் உங்களை இழுத்துக்கொண்டு நான் எங்கும் ஓடி விடப் போவதில்லை.”  சாத்யகிக்கு மயக்கமே வந்துவிடும் போல் ஆகிவிட்டது. ஆச்சரியம் அடைந்தான். இந்தக் குரலை, வேறெங்கோ எப்போதோ, எந்த சந்தர்ப்பத்திலோ கேட்டிருக்கிறானே! எப்போது? “யார் நீ?” என அவளைக் கேட்டான்.  அதே சமயம் அவன் உள்மனம் இவளை எங்கோ பார்த்திருக்கிறோமே, எங்கே என யோசித்துக் கொண்டிருந்தது.  “ஆஹா, அந்த இருட்டிலிருந்து வெளியே வாரும் சாத்யகரின் மகனே! வந்து என்னை நன்றாய்ப் பாரும்!” அதே குறும்புடன் கூடிய தொனியில் தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு பேசிய அந்தக் குரலின் இனிமை அந்த நிலையிலும் அவனைக் கவர்ந்தது.  சாத்யகி மேலே ஏறிச் சென்று அந்தப் பொறிக்கதவின் வழியாகத் தவழ்ந்து வெளியே சென்றான்.


திடீரென ஏற்பட்ட வெளிச்சத்தில் அவன் கண்கள் கூசின.  இவ்வளவு நேரம் குகைக்குள்ளே இருந்த கருமையான இருட்டில் பழகிய அவன் கண்கள் இப்போது பார்க்க முடியாமல் மூடிக் கொண்டன.  குகையின் மேல் பாகத்தில் தெரிந்த அந்த மெல்லிய ஒளியைக்கூட அவனால் பார்க்கமுடியாமல்  இருந்ததால் அந்தப் பெண் யார் என்பதையே அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை.  ஆனால் அவளுக்குப் பின்னால் இரு உயரமான பெண்கள் நின்றிருந்ததையும், அவர்கள் தள்ளி நின்றிருப்பதிலிருந்து சேடிப்பெண்களாக இருக்க வேண்டும் எனவும் நினைத்தான்.


பொறிக்கதவிலிருந்து வெளியே வந்தவன், தன் மேல் ஒட்டிக் கொண்டிருந்த சில பூச்சிகளைத் தள்ளி விட்டும் கைகளால் நசுக்கியும் கொன்றான்.   தன் கண்களைத் தேய்த்துக் கொண்டான்.  உடலைத் தட்டி விட்டுக் கொண்டான். அந்தப் பெண்ணைப் பார்த்து, “யார் நீ?  என்னை ஏன் இங்கே கொண்டு வந்தாய்?” என வினவினான்.  அந்தப் பெண்ணோ, “என்னைத் தொடர்ந்து வாருங்கள். முதலில் இந்த இடத்தை விட்டுச் செல்லலாம்.  அதன் பின்னர் நாம் பேசுவதற்குத் தேவையான நேரம் நிறையவே இருக்கிறது.” எனச் சிரிப்பு மாறாமலேயே சொன்னாள்.  அந்த வெளிச்சத்தில் சாத்யகி பார்த்தது ஒரு இளம்பெண்ணை. அவள்  சிவந்த மேனியுடன் சற்றே பருமனாகக் காணப்பட்டாள். அவள் உடல் எங்கும் தங்கமும், வைரமும் இழைக்கப் பட்டிருந்தது.  அவள் இடையில் கட்டி இருந்த மேகலையில் தங்கம் மட்டுமின்றி நவரத்தினங்களும் பதிக்கப்பட்டிருந்ததோடு, அதன் நுனியில் கட்டியிருந்த சிறு தங்க மணிகள் அவள் அசையும்போது அவையும் ஆடியதோடு அல்லாமல்  மெல்லிய சப்தத்தை எழுப்பியது.   சாத்யகிக்கு எதுவும் புரியவில்லை.  தான் கனவு காண்கிறோமா?  ஆம் என்றே அவன் நினைத்தான்.  இதோ, இப்போது இந்தப் பெண் மறைந்து போகப் போகிறாள். தான் மீண்டும் அந்தப் புழுக்களும், பூச்சிகளும் நிறைந்த இருட்டுக் குகைக்குள் தன்னந்தனியாக இருக்கப்போகிறோம்.  அது தான் உண்மை.

அல்லது….அல்லது….. இது அவனைக் கொல்ல ஒரு சதியோ? அல்லது இது ஏதோ பேய், பிசாசின் வேலையோ?  இந்தப் பெண் மனுஷியே இல்லையோ? மோகினிப் பிசாசோ? ஆனால் அவர்கள் இன்னும் மேலே சில படிகள் ஏறிச் சென்றனர். மேலுள்ள ஒரு அறைக்கு வந்து விட்டனர்.  அவ்வளவு மோசமான நிலையிலும் தன் முன்னே சென்ற அந்தப் பெண்ணின் ஒயிலான நடையழகு சாத்யகியைக் கவர்ந்தது.  என்ன நளினமான நடை.  சற்றே பருமன் தான் ஆனாலும், அவள் அழகும், நளினமான நடையழகும், உடலின் வடிவும், அழகான நீண்ட கழுத்தும் அதில் தெரிந்த ஆபரணங்கள் அவளுக்கு அளித்த சோபையும், தலையைத் தூக்கிக் கட்டி இருந்த விதமும், அதில் சூடி இருந்த மலர்களும், அந்த இடத்தையே தேவலோகமாகச் செய்து கொண்டிருந்தது.  இவள் நிச்சயம் மோகினிப் பிசாசு தான்.  மனுஷி அல்ல.   அவன் அந்தப் பிசாசுப் பெண்ணைத் தொடர்ந்து இன்னொரு மேலறைக்கு வந்துவிட்டான். அந்த அறை முழுவதும் சூரிய ஒளியால் பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஆனால் இந்தப் பிரகாசத்துக்கு அது மட்டுமா காரணம்?  இல்லை, இல்லை, அந்த அறையின்  சுவரிலும், மற்ற இடங்களிலும் விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.

கற்களால் ஆன ஜாடிகள், பெரிய பெரிய மட்பாண்டங்கள், அதில் தெரிந்த தங்கக்கட்டிகள், முத்துக்கள், வைரங்கள், மற்ற ரத்தினங்கள் காணப்பட்டன. அங்கிருந்த ஆசனங்கள் அனைத்தும் நன்றாகக் கரடியின் தோலால் செய்யப்பட்ட உறைகளைப் போட்டுச் சுற்றிலும் மூடப்பட்டு இருந்தன. சாய்ந்து கொள்ளத் தலையணைகளும் இருந்தன.  அங்கிருந்த ஒரு ஜாடியில் நல்ல பழைய மதுவும், அருகே ஒரு பீடத்தின் மேல் சுவையான உணவும் வைக்கப்பட்டிருந்தது.  சுவற்றில் இருந்த ஒரு மாடத்தில் தங்கத்தினால் ஆன விளக்கு ஒன்றில் நெய்யூற்றித் திரி போட்டு எரிந்து கொண்டிருந்தது.  அது அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த செல்வத்தின் தேவதையான மஹாலக்ஷ்மி படம் ஒன்றுக்கு எதிரே எரிந்து கொண்டிருந்தது. மஹாலக்ஷ்மியின் படத்துக்கு எதிரே ஒரு பெரிய ஆபரணம் வைக்கப்பட்டிருந்தது.  இதுவரை சாத்யகி அப்படிப்பட்ட ஆபரணத்தைப் பார்த்தது இல்லை.  வானவில்லின் அனைத்து வர்ணங்களையும் வாரி இறைத்துக் கொண்டிருந்தது அந்த ஒற்றை ஆபரணம்.

இது கனவா, நனவா?  தன்னுடைய மனம் இதை எல்லாம் கற்பனை செய்து கொள்கிறது என நினைத்தான் சாத்யகி.  அவனால் அந்த இருட்டான குகைக்குள்ளிருந்து  பசியிலும், தாகத்திலும் இறக்க இருந்த தான், இப்போது இந்த உயர்ந்த ரத்தினக்கற்கள் பதிக்கப்பட்டு தகதகாயமாய் ஜொலித்துக் கொண்டிருந்த அறைக்குள் வந்ததை நம்பமுடியவில்லை எனில், அங்கே உணவு வேறு வைக்கப்பட்டிருக்கிறது. அது இன்னமும் நம்ப முடியாததாய் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேல் ஓர் ஒற்றை ஆபரணம் இத்தனை ஒளியைக் கொட்டிப் பிரகாசிக்கிறதே.  அவன் கண்கள் அவனை ஏமாற்றுகின்றன.  இந்தப் பிசாசு, அழகான மோகினிப் பிசாசு தான் அவனை ஏமாற்றி இங்கே அழைத்து வந்திருக்கிறது.  ஆனால்  இந்த ஒற்றை ஆபரணத்தையும் காட்டி அவனை இன்னமும் ஏமாற்றுகிறதே.  இது என்ன ஆபரணம்?  ஆஹா!  இதுவும் என் விதியோ? என்ன  மோசமான விதி!  இப்படி எல்லாம் ஏமாந்து கஷ்டப்படவேண்டுமா நான்?

முன்னால் சென்று கொண்டிருந்த அந்தப் பெண் திடீரென அறை நடுவே வந்ததும் தன் சிரிப்பை அடக்கியவண்ணம் திரும்பினாள்.  “சாத்யகரின் மகனே, அமருங்கள். முதலில் உங்கள் உடலை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.  அதன் பின்னர்  உணவு  அருந்துங்கள்.  உங்களுக்குப் பிரியமானால் மதுவையும் அருந்தலாம்.  அதன் பின்னரே நம்மால் நடக்க இயலும்.”  மிகவும் நட்பு தொனிக்கும் குரலில் சொன்னவள் அங்கிருந்த ஒரு இருக்கையில் தன் அழகான உடலைக் கிடத்திக் கொண்டு அமர்ந்தாள்.



2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஓஹோ...! மதுவுடன் விருந்து சொல்லும் மாது...!

ஸ்ரீராம். said...

ஆஹா... பாமாவா? அதுதான் 'அந்த' ஆபரணமா?