Wednesday, February 19, 2014

என்ன நினைத்து என்னை அடைத்தாயோ!

சாத்யகி தன்  தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டான்.  நெற்றியை அமுக்கி விட்டுக் கொண்டான்.  நிச்சயமாய் அவனுக்குப் பைத்தியம் தான் பிடித்திருக்கிறது.  உற்சாகம்பொங்கும் அந்த வட்டவடிவமான அழகிய முகம், எழிலார்ந்த வடிவான மேனி, குறும்பாய்ச் சிரிக்கும் கண்கள், என்னதான் தூக்கிக் கட்டி இருந்தாலும், அந்தக் கட்டுக்குள் அகப்படாத அவள் சுருண்ட கூந்தல் அலை, அலையாக முன் நெற்றியில் விழுந்து கிடந்த கோலம், பூக்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்த கொண்டை, செக்கச்சிவந்த மருதாணி பூசிய உள்ளங்கைகள் குவிகையில் செந்தாமரைப் பூவைப் போல் தெரிந்த அழகு, இனிமையான கீதம் போல் இசைக்கும் குரல்….. இவை அனைத்தும் நினைவிலேயே காண்கிறேனா?  ம்ஹூம், இல்லை, இல்லை, இது நினைவே இல்லை.  ஏதோ கனவு.  இத்தனை மொத்த அழகும் கனவில் தான் காணலாம். அடுத்த கணமே ஏதோ ஒரு நினைவு அவனைத் தாக்க அவன் கண்கள் வியப்பில் விரிந்தன. அவளையே உற்றுப் பார்த்தான்.  ஆஹா, அப்படியும் இருக்குமா?  ம்ஹூம், முடியாது, முடியாது.

‘இவள் சத்ராஜித்தின் பெண்ணல்லவோ?  இல்லை, இல்லை அவளாய் இருக்க முடியாது.”  அங்கு அந்தப் பெண் அமர்ந்திருப்பதையும், தன்னைக் கவனித்துக் கொண்டிருப்பதையும் மறந்தவனாய் உரக்கத் தனக்குத் தானே கூறிக்கொண்டான் சாத்யகி.   ஆனால்,,,….ஆனால்,,,,….சந்தேகத்துக்கு இடமே இல்லை.  அதோ, அங்கே செல்வத்தின் தேவதை மஹாலக்ஷ்மிக்கு எதிரே வைக்கப்பட்டிருக்கும் அந்த ஆபரணம்…..அது சியமந்தக மணியாகத் தான் இருக்க வேண்டும்.  இதைத் தான் சத்ராஜித் சூரியனிடமிருந்து பெற்றதாய்ச் சொல்லுகிறார்.  அப்போது அந்தப் பெண்ணே பேச ஆரம்பித்தாள்.

‘சாத்யகி, என்ன இன்னமும் கனவுலகிலேயே இருக்கிறாயா?  நனவுலகுக்குத் திரும்ப வா.  சாத்யகி, நன்றாக விழித்துக் கொள்.  நான் வேறு எவரும் இல்லை.  நான் சத்யா.  சத்ராஜித்தின் ஒரே மகள்.   இதோ உன் முன்னால் உயிருடன் இருக்கிறேன்.  ஊனும், சதையுமாய் நீ காண்பது என்னைத் தான், என்னுடைய பூத உருவை அல்ல.  நான் பேயோ, பிசாசோ, மோகினியோ அல்ல.  நான் இன்னும் இறக்கவில்லை. உயிருடன் தான் இருக்கிறேன்.” என்று சொல்லிக் கொண்டே சாத்யகியின் குழப்பமான முகத்தைப் பார்த்து மேலும் சிரிக்க ஆரம்பித்தாள்.  சாத்யகிக்கு இப்போது தான் நிலைமை சரிவரப் புரிய ஆரம்பித்திருந்தது.  அவனைக் கடத்தியது என்னமோ சத்ராஜித் தான்.  சாத்யகிக்கு இப்போது தான் தனக்கு இந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து தருவதாக சத்ராஜித் தன்னையும், தன் தகப்பனையும் கேட்டதும், தான் நிராகரித்ததும் நினைவில் வந்தது.  அவனுக்கு அவமானம் தாங்க முடியவில்லை.  கடைசியில் இவளாலா தான் காப்பாற்றப்பட்டிருக்கிறோம். நினைக்க நினைக்க அவமானத்தினால் விளைந்த கோபம் தாங்க முடியாமல் போனது.

அவளைப் பார்த்து, “ஏன் சிரிக்கிறாய் இப்போது?  சிரிக்கும்படியாக என்ன நடந்துவிட்டது?” என்று ஆத்திரம் தாங்காமல் கேட்டான்.  “உன் தகப்பன் நான் கோவிந்தனோடு செல்லக் கூடாது எனத் திட்டம் போட்டு ஏமாற்றி விட்டான். கோவிந்தனுக்கு என் உதவி கிடைக்கக் கூடாது என்பது அவன் எண்ணம்! அப்படித் தானே!’ என்று கேட்டான்.  அவன் மனதின் கசப்பு உடலெல்லாம் வழிந்தாற்போன்ற உணர்ச்சி தோன்றியது அவனுக்கு.  அதே கசந்த குரலில், “ உன் தந்தையைப் போன்ற கொடூரமான புத்தி உள்ளவனைப் பார்த்ததே இல்லை.  நான் துவாரகையை விட்டுச் செல்வதைத் தடுத்துவிட்டான் உன் தந்தை.  ஒரு பெரிய சாகச, வீர தீரச் செயல் செய்ய இருந்ததில் இருந்து என்னைத் தடுத்து நிறுத்தி என் வீர வாழ்க்கையையே கெடுத்துக் குட்டிச் சுவர் பண்ணிவிட்டான்.  யாதவக் குலமே என்னைப் பார்த்துச் சிரிக்கும்படி பண்ணி விட்டான்.  என் வாழ்க்கையைக் கெடுத்துவிட்டான்.  இப்போது, நீ, அவன் மகள், ஒரே செல்ல மகள்,   என்னுடைய தோல்வியைக் கண்டு சிரிக்கிறாய்.  கேலி செய்கிறாய்!”

“சாத்யகி, சாத்யகி, போதும், போதும், ரொம்ப உணர்ச்சி வசப்படாதே!” அவள் புன்னகைத்தாள்.  அவனைப் பார்த்து, “முதலில் உட்கார்ந்து கொள்.  கொஞ்சம் தண்ணீர் அருந்து.  அது உன்னைக் கொஞ்சம் சாந்தப்படுத்தும்.” என்றாள் சத்யபாமா.  அவள் பேசியது வெட்டு ஒன்று துண்டு இரண்டாகத் தெள்ளத் தெளிவாக எதைக் குறித்தும் கவலைப்படாத சுபாவம் கொண்டவள் என்பதைக் காட்டும் வண்ணமாக இருந்தது.  சாத்யகியின் கோபத்தையும், அவன் கத்தியதையும் கூட அவள் சிறிதும் லக்ஷியம் செய்யவே இல்லை. சாத்யகிக்கும் தன் நிலைமை புரிந்து தான் இருந்தது.  தான் உள்ளூறக் கொதித்துக் கொண்டிருப்பதையும், இப்போது தன்னுடைய ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு செயலும் தனக்கு ஏற்றத்தைத் தரக்கூடியது அல்ல என்பதையும் உணர்ந்து கொண்டான்.  ஆகவே பதிலே பேசாமல் சத்யபாமா சொன்னபடி அங்கிருந்த ஓர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு கொஞ்சம் குளிர்ந்த நீரை அருந்தினான்.  அழுது அடம் பிடிக்கும் சின்னஞ்சிறு சிறுவனைக் கண்டிக்கும் தொனியில் பாமா மேலே பேச ஆரம்பித்தாள்.

“சாத்யகி!  என் தகப்பனார் அவ்வளவு ஒன்றும் மோசமானவரோ கொடூரமானவரோ அல்ல.  மிகவும் நல்லவரே, கருணையும் அன்பும் நிறைந்தவர்.”

“உன் தகப்பன் ஒரு பிசாசைவிடக் கொடியவன்.  நான் அவனை வெறுக்கிறேன்.  என் வாழ்க்கையையே கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிட்டான்.” பொரிந்தான் சாத்யகி.  அதே குறும்பு கண்களில் கொப்பளிக்க, பொங்கி வரும் சிரிப்பை அடக்கிய வண்ணம் சத்யபாமா தன் ஒரு கையை உயர்த்தி அவன் பேச்சைத் தடை செய்தாள்.  “ஆஹா, சாத்யகி, இப்படியா பேசுவது?  மிக அநியாயமாக இருக்கிறதே.  உம்மைக் கடத்தியது நான். என் தகப்பனார் இல்லை. “ இதைச் சொல்கையில் அவள் காட்டிய துணிவு உண்மையானதா, பொய்யானதா என சாத்யகிக்குப் புரியவில்லை.

“என்ன, நீயா என்னைக் கடத்தினாய்?  உண்மையாகவா?  ம்ஹூம், என்னால் இதை நம்ப முடியாது.”  சாத்யகியால் அவனுக்குள் எழுந்த ஆத்திரத்தை அடக்க முடியவில்லை.  தன்னெதிரே அமர்ந்திருந்த அந்த அழகிய இளம்பெண்ணை சாத்யகி முறைத்துப் பார்த்தான்.  இரக்கமே இல்லாமல் திமிருடன் நான் தான் உன்னைக் கடத்தினேன் என்று சொல்லும் இந்தப் பெண்ணின் துஷ்டத்தனத்தை எவ்வாறு பொறுத்துக் கொள்வது? எவ்வளவு திமிர் இருந்தால் அவள் தான் தான் அவனைக் கடத்தியதாக ஒப்புக் கொள்வாள்!

“என் தந்தைக்கு நீ இங்கே இருக்கிறாய் என்னும் விஷயமே தெரியாது.  தேர்ந்த வீரர்களின் துணையுடன் நான் இதை நிறைவேற்றினேன்.  “ கொஞ்சமும் கவலையின்றிச் சொன்னாள் அவள்.

“ஓஹோ, நான் உன்னை மணக்க மாட்டேன் எனச் சொன்னதற்காக இப்படி நீ என்னைப் பழி வாங்கி விட்டாய்!  இல்லையா?  “சாத்யகி அவளை இழிவுடன் பார்த்ததுமன்றி ஏளனம் பொங்க மேலும் பேசினான். “  என்னை இந்த குகைக்குள் அடைத்து வைத்து உன் வழிக்குக் கொண்டு வர நினைக்கிறாயா? அல்லது இங்கே உள்ள செல்வச் செழிப்பையும், ரத்தினங்கள், முத்துக்கள் தங்கக்கட்டிகள் ஆகியவற்றைப் பார்த்து இந்தச் செல்வத்தை அடைவதற்காக நான் மனம் மாறுவேன் என நினைத்தாயா?  அல்லது என்னை பயமுறுத்தும் எண்ணமா?  கிருஷ்ண வாசுதேவனுக்கு எதிராக என்னை மாற்ற எனக்கு லஞ்சம் கொடுக்க நினைக்கிறாயா?  இதோ பார் பெண்ணே, உன் அழகில், அலங்காரத்தில் ,செல்வச் செழிப்பில் மோகித்து உன்னை நான் திருமணம் செய்து கொள்வேன் என எண்ணாதே!  நான் செத்தாலும் சாவேன், உன்னை மட்டும் ஒரு போதும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.”  மூச்சு வாங்கப் பேசி முடித்தான் சாத்யகி.

ஆனால் இது என்ன?  அவனைப் பார்த்து ஆணவத்துடன் சிரித்தாள் பாமா. “முட்டாள் மனிதா!  நீ உன்னைக் குறித்து என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?? நீ ஏதோ மிக உயர்ந்த வீரன், கட்டழகன் என்றா எண்ணுகிறாய்?  உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள நான் தவம் கிடப்பதாக யார் சொன்னார்கள்?  நீ இல்லை எனில் நான் செத்தா போவேன்?  உன் தந்தை என் தந்தையின் வேண்டுகோளை நிராகரித்த பின்னால் உன் பெயரையே மறந்து விட்டேன். இதைப் புரிந்து கொள் முதலில்!”  இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு அவனை நேருக்கு நேர் பார்த்துக் கொண்டு கிண்டலாகச் சிரித்துக் கொண்டு பாமா பேசியது சாத்யகியின் உள்ளத்தை வருத்தியது.

“பொல்லாத பெண்ணே!  பின் ஏன் என்னை இங்கே கொண்டு வந்து அடைத்து வைத்தாய்? என்ன காரணம்?”


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அன்றைக்கு கூட லஞ்சமா...? தொடர்கிறேன் அம்மா...

இராஜராஜேஸ்வரி said...

வீரப்பெண்மணிதான்...

ஸ்ரீராம். said...

பாமாவுக்கு கண்ணன் மீது இன்னும் காதல் வராத கட்டமா?