Saturday, April 26, 2014

துருபதனுக்கும் கோபம்!

“என்ன??? வாசுதேவன், துரியோதனனுக்காகப் பரிந்து பேசுகிறானா?  அவன் தகுதிகளை எடுத்து இயம்புவதற்காக துரியோதனன் மனைவியிடம் உறுதி மொழி கொடுத்துள்ளானா?  அவள் கேட்டுக் கொண்டதன் பேரில் கிருஷ்ண வாசுதேவன் இதற்கு இசைந்துள்ளானா?  என்னை என்னவென்று நினைத்தார்கள் அனைவரும்?  இன்றைய தினம் ஒரு முக்கியமான தினம். நன்மைகளை எல்லாம் அள்ளித்தரும் சுபதினம்.  இந்த தினத்தன்று யாரைப் பார்க்கக் கூடாதோ, அந்த மோசமான எதிரியை, திட்டம் போட்டுப் பாண்டவர்களை உயிருடன் எரித்த மோசக்காரனை, நய வஞ்சகனை நான் பார்க்க வேண்டுமா?  ஷகுனியை இன்றா நான் பார்த்தாகவேண்டும்??  அதுவும் இன்றைய தினம்?? அவன் தான் என்னை என்னவென்று நினைக்கிறான்?” கோபமாய்க் கேட்டாள் திரெளபதி.  “இதில் என்ன தப்பு இருக்கிறது திரெளபதி? எனக்கு எதுவும் புரியவில்லையே!  மேலும் கிருஷ்ணன் நீ ஷகுனியைச் சந்தித்தே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறான்.” திருஷ்டத்யும்னன் கூறினான்.

“அண்ணா, துரோணரின் முக்கியமான பிரியத்துக்கு உகந்த சீடனையா நான் மணக்கவேண்டும்?  கிருஷ்ண வாசுதேவன் ஏன் இப்படிச் செய்கிறான்?  அவன் நம்மிடமும், அவர்களிடமும் ஒவ்வொரு மாதிரியாக நடந்து கொண்டு இரட்டை வேடம் போடுகிறானோ?  என்ன ஆயிற்று கிருஷ்ணனுக்கு?  ம்ம்ம்ம்ம், அண்ணா, அண்ணா, தந்தையார் இந்த சுயம்வரத்தில் ஆயுதப்போட்டி உண்டென்று அறிவித்தாக வேண்டும்.  ஆம், நான் அதைத் தான் விரும்புகிறேன்.  அவர் அறிவிக்கப் போகும் செய்திக்காகக் காத்திருக்கிறேன்.   அது ஒன்றே இப்படி எல்லாம் தொல்லைகளை மாற்றி மாற்றி அளிக்கும் இந்த இடைத்தரகர்களுக்கு ஒரே பதிலாக அமையும்.” மிதமிஞ்சிய கோபத்தில் திரெளபதியின் முகம் மட்டுமில்லாமல் கழுத்து, கண்கள் என அனைத்தும் சிவந்து காணப்பட்டது.

“இவ்வளவு உணர்ச்சி வசப்படாதே, தங்காய்!  நிதானமாக இரு.  கிருஷ்ண வாசுதேவன்  உன்னை மணக்கப் போகும் வாலிபன் யாராக இருந்தாலும் இந்த சுயம்வரத்தில் கொடுக்கப் போகும் தேர்வில் வெற்றி அடையவேண்டும் என்பதை நன்கறிவான்.  ஆனாலும் மணமகன் உன் இஷ்டப்படி தான் தேர்ந்தெடுக்கப்படும் என்னும் மாயத்தோற்றத்தை எதற்காகவோ உருவாக்க விரும்புகிறான் என்றே எண்ணுகிறேன்.”

“ஆஹா, இவனைப் புரிந்து கொள்வதே மிகக் கடினமான ஒன்றாக இருக்கிறதே அண்ணா!  பல சமயங்களிலும் அவன் என்ன செய்யப் போகிறான்,  ஏன் இதைச் சொல்கிறான் என்பதே தெரிவதில்லை.  ஒவ்வொரு முறையும் ஒவ்வொருமாதிரியாக நடந்து கொள்கிறான்.  எல்லாவற்றையும் அவன் பொறுப்பில் விட்டுவிடும்படி சில சமயம் சொல்லுவான்.  தந்தையும் அப்படியே விட்டிருக்கிறார்.  நீயும், நானும் கூட அவன் சொன்னதற்குக் கீழ்ப்படிந்தோம். “ எரிச்சல் மீதூறப் பேசினாள் திரெளபதி.

“இதோ, இப்போது சுயம்வரம் நெருங்கி விட்டது.  இந்த சுயம்வரத்தில் போட்டியிட்டு வென்றவருக்குத் தான் நான் மணமாலை சூட்டுவேன் என்பதையும் அவன் நன்கறிவான்.  அப்படி இருந்தும்……..துரியோதனனைக் குறித்த புகழ்ச்சியான வார்த்தைகளைச் சொல்லக் காத்திருக்கும் ஷகுனியை நான் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறான்.  இது எனக்குத் தேவையா? இதைவிட வேறு அவமானம் ஏதுமில்லை எனக்கு.  நான் என்னமோ துரியோதனனுக்கு ஒருக்காலும் மாலையிடப் போவதில்லை.  அண்ணா, உனக்குத் தெரியுமா?  கிருஷ்ணன் என் பக்கமே நிற்பதாக எனக்கு வாக்குக் கொடுத்திருக்கிறான்.  அதை நீ அறிவாய் அல்லவா?   இது தான் அவன் வாக்குறுதியை நிறைவேற்றும் லக்ஷணமா?  தந்தை என்ன சொல்வார் இதைக் குறித்து? “ திரெளபதியின் கோபம், வெறுப்பு,மனக்கசப்பு ஆகிய அனைத்தும் அந்தப் பேச்சில் எதிரொலித்தது.

“தந்தையைக் குறித்து நீ அறிய மாட்டாயா என்ன?  அவர் மிகுந்த மனச் சோர்வுடன் இருக்கிறார்.  இம்மாதிரி எல்லாம் நடக்கும் என்பதை அவர் எதிர்பார்க்கவே இல்லை.  குரு வம்சத்தினருக்கு ஒரு மரியாதைக்காக அவர் அழைப்பு அனுப்பினாரே தவிர சுயம்வரத்தில் கலந்து கொள்ள குரு வம்சத்து இளவரசர்கள் வருவார்கள் என்பதை அவர் எதிர்பார்க்கவே இல்லை.  அவர் மிகப் பக்குவமான மன நிலையில் இருக்கிறபடியால் தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டு, மிக்க மரியாதையுடனும், கெளரவமான முறையிலும் குரு வம்சத்தினரை வரவேற்று உபசரித்தார்.  அவருக்கும் கிருஷ்ணன் இங்கொன்று அங்கொன்று எனச் சொல்லி இரட்டை வேடம் போடுகிறான் என்பதே சந்தேகமாய் இருக்கிறது.  அவரும் அப்படித் தான் நினைக்கிறார்.”

“சரி அண்ணா, இப்போது நாம் தந்தையிடம் சென்று இதைக் குறித்துக் கலந்து ஆலோசிப்போம்.”  உடனேயே திடீரென ஏற்பட்ட ஒரு உணர்ச்சி வசத்தில், “தன் சித்தப்பா மகன்கள் ஐவரையும், சித்தியையும் கொன்று, உயிருடன் எரித்த குருவம்சத்து இளவரசனை நான் மணந்தே ஆகவேண்டுமா அண்ணா!” என்று வேகமாய்க் கோபத்துடன் கத்தினாள்.

“அமைதி, அமைதி! அமைதியாக இருக்க வேண்டும் கிருஷ்ணையே! எனக்கென்னமோ கிருஷ்ண வாசுதேவனைச் சந்தேகிக்கத் தோன்றவில்லை. அவன் தவறாக ஏதும் செய்வான் என்றும் நினைக்கவில்லை.  ஷகுனியோடு பேசு!  அதுவும் தந்தை அநுமதித்தால் மட்டுமே பேசு.  இதில் என்ன வந்துவிடப் போகிறது!  அதன் பின்னர் வாசுதேவக் கிருஷ்ணனைத் தனிமையில் சந்தித்து உன் உணர்வுகளைக் கூறு.  அவ்வளவு ஏன்? அவனோடு சண்டையே போடு! யார் வேண்டாம் என்றது? “மெல்லப் புன்னகையோடு ஆரம்பித்த த்ருஷ்டத்யும்னன் பின்னர் பெரிய சிரிப்போடு முடித்தான். “அவன் மட்டும் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்திருந்தால்….. உன்னால் இப்படி எல்லாம் கத்தி இருக்க முடியாது.  அவன் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது.” என்ற வண்ணம் அவன் திரெளபதியோடு தந்தையைச் சந்திக்கச் சென்றான்.

கிட்டத்தட்ட அதே சமயம் அரண்மனையின் வேறொரு அறையில் வெளியே போடப்பட்டிருந்ததொரு ஊஞ்சலில் அமர்ந்த வண்ணம் நதியைப் பார்த்துக் கொண்டு யோசனையில் ஆழ்ந்திருந்தான் துருபதன்.  அவன் எண்ணங்கள் வேகமாகச் சென்றன என்பது ஊஞ்சல் ஆடிய விதத்தில் இருந்து புரிந்தது.  மிக வேகமாக அதி வேகமாக என்னும்படி ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தான் துருபதன்.  அவனுக்கு மிதமிஞ்சிய கோபம் வந்துவிட்டால் இப்படித் தான் தன்னைத் தானே சமாளித்துக் கொள்ளவும் நிதானத்துக்கு வரவும் இப்படி வேகமாய் ஊஞ்சலில் ஆடுவான்.  இப்போதும் அவன் கோபமாகத் தான் இருந்தான்.  கூண்டில் அடைபட்ட சிங்கத்தின் கோபம் அவனிடம் இருந்தது. புருவங்கள் நெரிந்து கண்கள் சுருங்கிக் காணப்பட்டாலும் அந்தக் கண்களில் தெரிந்த கொலை வெறி அந்த மத்தியான வெயிலில், அந்த வெளிச்சத்தில் அதிபயங்கரமாகக் காணப்பட்டது.  நதியில் விழுந்த சூரியக் கிரணங்களை அவன் பார்த்த பார்வையில் அந்த சூரியனே நேரில் வந்தால் நடுங்கிப் போயிருப்பானோ என்னும்படி ஆக்ரோஷமாகத் தெரிந்தது.  அவன் கைகளோ ஊஞ்சலின் பக்கத்தைப் பிடித்து நெரித்த வண்ணம் இருந்தது.

அரசனுக்குரிய கிரீடம் தலையில் காணப்படவில்லை;  கழட்டிப் பக்கத்தில் வைத்திருந்தான்.  அவன் தோளில் போடும் உத்தரீயமோ கீழே கிடந்தது.  வாளையும் இடுப்பில் இருந்து கழட்டிப் பக்கத்தில் வைத்திருந்தான்.  ஒரு அரசனாகவும், அரச பரம்பரையில் பிறந்து வளர்ந்தவனாகவும் அதன் பாரம்பரியங்களை விடாமல் கடைப்பிடிக்கும் ஒரு அரசனுக்கு இப்படி ஒரு மனோநிலை வந்திருக்க வேண்டுமெனில் அதன் மூல காரணம் என்னவாக இருக்கும்? அவன் உள்மனதுக்குள் நடக்கும் போராட்டங்களை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருக்கப் பெரும்பாடு படுகிறான் என்பதும் தெரிந்தது.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிதமிஞ்சிய கோபம் அழித்து விடுமே...

திண்டுக்கல் தனபாலன் said...

மிதமிஞ்சிய கோபம் அழித்து விடுமே...

ஸ்ரீராம். said...

விஷயங்கள் தெளிவாகும் நேரம் எல்லோருக்கும் சுகம்.