Wednesday, September 3, 2014

அன்பெனும் ஊற்று!

“இதோ பார், பீமா!  நான் சொல்வதைச் சற்றுக் காது கொடுத்துக் கேள்!  நான் ஹஸ்தினாபுரம் வருவது இப்போதுள்ள நிலையில் சரியில்லை!  நான் வந்தால் என்ன நடக்கும் என்பதை நீ நன்கறிவாய்! மக்கள் அனைவரும் உங்கள் ஐவரையும் மறந்துவிட்டு என் பின்னாலேயே வரத் தொடங்குவார்கள்.  இது நல்லதல்ல. இத்தையதொரு சூழ்நிலையில் மக்களின் கவனம் உங்களிடம், உங்களிடம் மட்டுமே இருக்கவேண்டும் என்பது என் கருத்து.  மக்களின் அன்பும் உங்களுக்கு மட்டுமே கிடைக்கவேண்டும்.”


“என்னைப் பற்றிக் கவலைப்படாதே, கிருஷ்ணா!  நான் எப்போதுமே என்னை நன்கு கவனித்துக் கொள்ளுவேன். தேவைப்பட்டால் என்னுடைய யானையை ஏவி துரியோதனன் அதன் காலின் கீழ் மிதிபடும்படிப் பார்த்துக் கொள்ளுவேன். “ பின்னர் போலியானதொரு கம்பீரத்துடன், “ இல்லை, சகோதரா, இல்லை!  ஒருக்காலும் இல்லை! அது மட்டும் போதாது.  ராக்ஷச அரசன் வ்ருகோதரன் கட்டளை இது! நாங்கள் ஐவரும் எங்கெல்லாம் போகிறோமோ, அங்கெல்லாம் கிருஷ்ண வாசுதேவனாகிய நீயும் வருகிறாய்!  இது என் ஆணை!”


“அல்லது இப்படியும் சொல்லலாம்.  எங்கெல்லாம் வாசுதேவக் கிருஷ்ணன் இருக்கிறானோ அங்கே நாங்கள் இருப்போம்!” புன்னகையுடன் திரௌபதி சொன்னாள்.  அவள் முழு மனதுடன் சொல்வதும் புரிந்தது.  “நீ ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை;  நான் சொல்வதைத் தான் சொல்கிறாய்! ஆனால் வேறுவிதமாக!” என்ற வண்ணம் பீமன் திரௌபதியின் முதுகில் அவள் முகம் சுளிக்கும்வரை ஓங்கி அடித்தான்.  “அப்படிப் பார்க்காதே என்னை, துருபதன் மகளே!  நான் இன்னமும் என் மதியவேளை நித்யகர்மவை ஆரம்பிக்கக் கூட இல்லை!” என்றவன் கிருஷ்ணன் பக்கம் திரும்பி, “வாசுதேவா! இப்போது உனக்கு திரௌபதி ஒரு கீழ்ப்படிதலுள்ள மனைவி என்பது புரிந்திருக்கும்.  இல்லை என நீ மறுக்க நினைத்தால், நான் அவளை மீண்டும் கண்ணீர் விடச் சொல்லி ஆணையிடுவேன்.” என்றான்.


“ஹூம், நீங்கள் இருவரும் சேர்ந்து என்னை ஹஸ்தினாபுரம் இழுக்கச் சதி செய்கிறீர்கள் என்பது நன்கு புரிகிறது!” என்றான் கிருஷ்ணன்.  “ஹா, நீ வர மறுத்தாயானால் உன்னைக் கட்டி என் தோள்களில் சுமந்து கொண்டு சென்றுவிடுவேன்.” பீமன் கூறினான். கிருஷ்ணன் உள்ளார்ந்த அன்புடனும், கனிவுடனும், மிகவும் பக்திபூர்வமான உணர்வுடனும் இருவரையும் கொஞ்சநேரம் விடாமல் பார்த்தான்.  பின்னர், அவன் முகம் மெல்ல மெல்ல மென்மையாக மாறியதோடு அல்லாமல் அவன் வழக்கமான மந்திரச் சிரிப்பும் அதில் குடி கொண்டது.  “பீமா, நீ எங்கே இருக்கிறாயோ, அங்கே நானும் இருப்பேன்!” என்றான்.  பீமன் வெற்றி உணர்வோடு திரௌபதியைப் பார்த்தான்.


“நான் என்ன சொன்னேன் உன்னிடம்?  என் இந்தச் சின்னஞ்சிறு சிறுவனாகிய சகோதரன், பெரியண்ணனாகிய என்னைப் பார்த்து பயப்படுகிறான் எனச் சொல்லவில்லை?  அவனை நான் தோள்களில் சுமந்து செல்வேன் என்றதுமே பயந்துவிட்டான் பார்!” என்றான்.  “அதெல்லாம் சரி, ராக்ஷச ராஜா வ்ருகோதரரே, நான் உங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து விட்டேன். எனக்கு நீங்கள் ஓர் உதவி செய்ய வேண்டுமே!  என் பெரியண்ணன் பலராமனிடம் செல்லுங்கள்.  நீங்கள் ஒரு காலத்தில் அவருக்குப் பிரியமான சீடராக இருந்தீர்கள்.  அவரிடம் சென்று சொல்லுங்கள்.  அவர் வந்தால் தான் நானும் ஹஸ்தினாபுரம் வருவதாகச் சம்மதித்திருக்கிறேன் என்று சொல்லுங்கள்.  அவரையும் ஹஸ்தினாபுரம் அழையுங்கள். அவர் வந்தால் நானும் வருகிறேன்.”


“ஓஹோ, அப்படியா?  அப்படியே செய்தால் போயிற்று!  நான் அழைத்தால் அவர் கட்டாயம் வரச் சம்மதிப்பார். “ என்று பீமன் கூறினான்.  அப்போது கிருஷ்ணன், “பெரியண்ணன் சம்மதித்துவிட்டாரானால்----நிச்சயமாய்ச் சம்மதிப்பார் என்றே எண்ணுகிறேன் ----- யாதவ அதிரதிகளையும், மஹாரதிகளையும், மற்றும் அவரவர் ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருக்கும் அரசர்கள், சிற்றரசர்களையும் நம்முடன் வருமாறு அழைக்கச் சொல் அவரை.  அவர் அழைத்தால் அவர்களும் வருவார்கள்.”


“அப்படியே செய்கிறேன் கண்ணா!  முதலில் என் மாமனார் துருபதனைப் பார்த்துவிடுகிறேன்.  அவருக்கு என் வணக்கங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.  என் மனைவியை நான் சந்தோஷப்படுத்த வேண்டுமெனில் அவளுக்கு நேரே அவள் தந்தையை வேண்டிய மட்டும் முகஸ்துதி செய்ய வேண்டும்.  அவள் தந்தை  வேறு  பக்கம் திரும்பினால் எவ்வளவு சாபமும் கொடுத்துக்கொள்ளலாம். “ என்றான் பீமன்.


“சரி, இன்னொரு விஷயம் பீமா!  ஹஸ்தினாபுரம் செல்லும் வழியில் ஆயிரக்கணக்கான மக்கள் என்னைப் பார்க்க வேண்டிக் காத்திருப்பார்கள். சாத்யகியையும் மணிமானையும் முன்னால் போய் மக்களிடம் நான் வந்து கொண்டிருப்பதாகவும், அனைவரையும் சந்திப்பேன் என்றும் சொல்லச் சொல்.  மக்கள் அப்போது தான் பொறுமையுடன் காத்திருப்பார்கள்.”


“இந்த மக்களையெல்லாம் சந்தித்து நீ என்னதான் செய்யப்  போகிறாய் கிருஷ்ணா?  என் இவர்களைச் சந்திக்க இவ்வளவு விருப்பம் காட்டுகிறாய்?”  பீமன் கேட்டான்.


“உனக்குப் புரியாது பீமா!  அவர்கள் எனக்கு மிகவும் முக்கியமானவர்கள்.  அவர்கள் எனக்கு மிக வேண்டியவர்கள். “ கிருஷ்ணன் முகம் மங்கியது.  கண்கள் தொலைதூரப் பார்வையை மேற்கொண்டன.  கனவில் பேசுவது போல் அவன் பேசினான்:”  உனக்குத் தெரியுமா?  அவர்கள், அந்த அப்பாவி மக்கள் என்னைப் பார்க்க வருகையில் நம்பிக்கை ஒன்றையே சுமந்து வருவதை நீ அறிவாயா?  என்னைப் பார்க்க வேண்டும் என்பதே அவர்கள் அபிலாஷை!  அது நிறைவேறியதும் அவர்கள் அடைகின்ற சந்தோஷம் அளவிட முடியாதது.  அதோடு மட்டுமில்லை.  அவர்கள் என்னையும் மனதளவில் தேற்றுகின்றனர்.  வலுவூட்டுகின்றனர்.   என்னைப் போன்றதொரு மாட்டிடையனிடம் இந்த அப்பாவி மக்கள் காட்டும்  அன்பும், பாசமும்  என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது.  நான் வீணான ஒரு வாழ்க்கையை வாழவில்லை என்பது புரிகிறது. “ இதைப் பேசும்போது கிருஷ்ணன் குரலில் தெரிந்த வித்தியாசமானதொரு உணர்வு திரௌபதியின் நெஞ்சுக்குள்ளே ஊடுருவி அவள் கண்கள் வழியே மழையாகப்பொழிந்தது.  ஆனால் அவள் மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது. அன்பெனும் ஊற்று அவள் உள்ளத்திலிருந்து பெருகிப் பிரவாகமாகக் கண்கள் வழியே கொட்டியது.

1 comment:

ஸ்ரீராம். said...

கண்ணன் வரேன் என்று சொன்னதிலும் ஒரு விளையாட்டு இருக்குமோ..