Sunday, January 25, 2015

ஜாலந்திரா வந்துவிட்டாள்!

பானுமதியின் நெஞ்சை துக்கம் அமுக்கியது.  தன் நெஞ்சை அமுக்கிப் பிடித்துக் கொண்டாள்.  அடைபட்ட துக்கம் பொங்குமாகடலெனக் கண்கள் வழியாகப் பெருகியது. கூடவே அலை ஓசை போல் அவள் விம்மல்களும் தொடர்ந்தன. தாங்கொணாத்துயரில் தத்தளித்தாள். அவளுடைய தாதியான ரேகா தன் கையில் பிடித்திருந்த வெயிலுக்கான மறைப்புக் குடையை மற்றொரு கையில் மாற்றிக் கொண்டே தன் வலக்கையால் பானுமதியைத் தன் நெஞ்சோடு ஆரத் தழுவிக் கொண்டாள். தான் வளர்த்த குழந்தை துயரில் துடிப்பதைக் கண்டு மனம் பொறுக்காத அவள் கண்களும் கண்ணீரால் நிரம்பின.  எவ்வளவு அருமையாக வளர்ந்த பெண்!  இங்கே இவ்வளவு குரூரமாக அவள் கணவனாலேயே நடத்தப் படுகிறாளே!  மனம் நொந்து வாய் விட்டு அழுதாள் ரேகாவும்.

அப்போது அவளுடன் தங்கி இருந்து சிசுருஷை செய்வதற்காக வந்திருந்த ஜாலந்திராவுக்குக்  கலவரமான பேச்சுக்குரல் கேட்கவே ஓடோடியும் அங்கே வந்தாள்.  தன் சகோதரி அழுவதைக் கண்டு பொறுக்காமல் ஓடி வந்தவள் ரேகாவைத் தள்ளிவிட்டு விட்டுத் தன் கைகளால் பானுமதியைத் தழுவிக் கொண்டாள். அவளைத் தட்டிக் கொடுத்து சமாதானம் செய்தாள். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தவண்ணம் அங்கே நின்றிருந்த துரியோதனனைக் கடுமையாகப் பார்த்தாள். “என்ன இது யுவராஜா?  இப்படி நடந்து கொள்வது உங்களுக்குத் தகுமா?  அவள் நிலைமையைப் புரிந்து கொண்டீர்களா நீங்கள்? இம்மாதிரி நிலையில் அவளை இப்படி நடத்துவது சரியா? பானுமதியின் உடல்நிலை குறித்து உங்களுக்குச் சிறிதும் அக்கறையே இல்லை!” என்று கோபமாகக் கூறிய வண்ணம் பானுமதி பக்கம் திரும்பி, “இதோ பார், பானுமதி!  முதலில் அழுகையை நிறுத்து!” என்றாள்.

ஒரு கணம் துரியோதனன் அவளை மிகக் கடுமையாகப் பார்த்தான்.  பின்னர் அவளை அடித்தே விடுவான் போல் அவள் மேல் பாய இருந்தவன், திடீரென நின்றான்.  அவளையே பார்த்தான்.  இத்தனை கோபத்திலும் அவள் முகத்தின் அழகும், அதன் ஜொலிப்பும் அவனைக் கவர்ந்தது.  கோபத்தில் கூட இத்தனை அழகைக் கொட்டுகிறாளே இந்தப் பெண்!  ஆஹா, அவள் கறுத்த கண்மணிகள் வைரம் போல் அல்லவோ ஒளிவீசுகின்றன!  அவள் அழகில் மயங்கினான் துரியோதனன். ஆனால் ஜாலந்திரா எதையும் லட்சியம் செய்யவில்லை.  அவனை தைரியமாக நிமிர்ந்து பார்த்தாள்.  அலட்சியமாக, “இதோ பாருங்கள் இளவரசே! உங்கள் கரங்கள் என்னைத் தொடட்டும்!  கைகளை வெட்டி விடுகிறேன்.” என்றாள். துரியோதனனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவமானம் தாங்காமல்  அவளைக் கோபம் பொங்கப் பார்த்த வண்ணம் அந்த அறையை விட்டு வெளியேறினான்.  பானுமதியின் உடலே நடுங்கிக் கொண்டிருந்தது.

ஜாலந்திரா தன் சகோதரியைச் சமாதானப் படுத்திய வண்ணம், “என்ன விஷயம் பானு? என்ன நடந்தது?  ஏன் அழுகிறாய்?” என அன்பாகக் கேட்டாள்.  அவள் தன் கைகளால் அவளைச் சமாதானம் செய்வதை நிறுத்தவில்லை. “இப்படி அழுதாயானால் உன் உடல்நிலை மோசமாகக் கெட்டுவிடும்.  உன் குழந்தைக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும்.  தைரியமாக இரு பானு!” என்றாள். ஆனால் பானுமதியோ அவளைப் பார்த்து, “ஓ, ஜாலா, ஜாலா, என்ன செய்துவிட்டாய்? ஆர்யபுத்திரரை மிரட்டியதன் மூலம் நீ அவரை அவமதித்து விட்டாய்!  பெருந்தவறு செய்துவிட்டாய்!” என்றாள்.  “இல்லை, பானு! இல்லை.  நான் சரியாகத் தான் சொல்லி இருக்கிறேன்.  நீ உன் கணவனை மிகவும் கெடுத்துவிட்டாய்!  நானாக இருந்தால் இப்படி எல்லாம் அவர் நடந்து கொள்ளும்படி விட மாட்டேன்.  என் கட்டுப்பாட்டில் வைத்திருப்பேன்.  நல்லமுறையில் நடந்து கொள்ளும்படி ஆக்கி இருப்பேன்.”

இத்தனை அமர்க்களத்திற்கும் விடாமல் தொடர்ந்து கிளி, “பானுமதி, எழுந்திரு!” எனக் கீச்சிட்டுக் கொண்டிருந்தது.  அவ்வளவு நேரமும் கூரை மேல் அமர்ந்த வண்ணம் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த மயிலோ தன் பெரிய இறக்கை படபடக்க அங்கிருந்து இறங்கித் தன் எஜமானியிடம் அழகு நடை நடந்து வந்தது.  பானுமதி தன் தங்கையைப் பார்த்தாள்.  இவள் தைரியம் நமக்கில்லையே என ஒரு கணம் நினைத்தாள்.  உடனே அவளைப் பார்த்து, “ஜாலா, ஜாலா, நான் ஒரு துரதிர்ஷ்டம் பிடித்த பெண்! நானும் வருடக் கணக்கில் முயன்று பார்த்துவிட்டேன்;  ஆர்யபுத்திரருக்கு எது எல்லாம் பிடிக்கும் எனத் தெரிந்து வைத்துக் கொண்டு அனைத்தையும் செய்து பார்த்துவிட்டேன்.  எனக்குத் தெரிந்த அனைத்தையும் செய்து பார்த்து விட்டேன்.  ஆனால், ஆனால், நான் தோற்றுப் போய்விட்டேன், ஜாலா!” மிகப் பரிதாபமான குரலில் கூறினாள் பானுமதி.

“ஹூம் ஆர்யபுத்திரர்!  உன் ஆர்யபுத்திரர் ஒரு மோசமான குரூரமான மனிதன்!  நீ இப்படி நிறை கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் உன்னை எவ்வளவு மோசமாக நடத்துகிறான்! என்ன மனிதன் அவன்!”

“உனக்குத் தெரியாது ஜாலா!  அவர் மிக நல்லவர்.  மிக மிக நல்லவர்.  ஆனால் திரௌபதியை வெல்ல முடியவில்லை என்று ஆனதில் இருந்து அவர் மனம் சுக்குச் சுக்காக உடைந்து விட்டது.  அதிலும் இங்கு ஹஸ்தினாபுரத்தில் உள்ள பெரியோர்கள் அனைவருமே அவருக்கு எதிராகவே இருக்கின்றனர்.  அவருடைய அடக்கப்பட்ட உணர்ச்சிகள் அனைத்தும் என்னைக் கண்டதும் சீறிப் பாய்கின்றன.  என்னிடம் வெளியிடுகிறார்.  வேறு எவரிடம் செல்ல முடியும் சொல்!” என்றாள் பானுமதி மிக இரக்கமாக.

“அது சரி!  நீ எப்போதும் எல்லாத் தவறும் உன்னுடையது என்பது போல் பேசி விடுகிறாய்.  செய்யாத தவறுகளுக்குப் பொறுப்பேற்கிறாய்! அதனால் தான் அந்த துரியோதனன் கண்களுக்கு நீ ஓர் அடிமை போல் தெரிகிறாய்.  சரி, போகட்டும், விடு!  இப்போது இத்தகையதொரு கோபத்துக்கும், ஆத்திரத்துக்கும் என்ன காரணம்?” என்று கேட்டாள் ஜாலந்திரா.

“ஒன்றுமில்லை.  பாண்டவர்கள் ஐவரும் ஹஸ்தினாபுரம் வருகின்றனர் அல்லவா? ஆர்யபுத்திரர் தன்னை ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேற்றிவிடுவார்களோ என அஞ்சுகிறார்.  ஆர்யபுத்திரருக்கும் அதிர்ஷ்டம் என்பதே இல்லை ஜாலா!  இதில்  அவர் தவறு ஏதும் இல்லை;  ஒரு பிறவிக்குருடருக்கு மகனாய்ப் பிறந்தது அவர் தவறா? எனக்கு அவர் மனோநிலை புரிகிறது ஜாலா!  நன்றாகப் புரிகிறது.  ஆனால் இதற்கு என்னால் என்ன செய்யமுடியும்?  நான் என்ன செய்யலாம் என்பது தான் புரியவில்லை.  எவ்விதம் நான் இதைச் சரி செய்ய முடியும்?”

“ஆஹா, இவை எல்லாம் பழங்கதை, பானுமதி!  அவற்றை விட்டுவிடு! இப்போது புதிதாக என்ன வந்திருக்கிறது?  இந்தக் கோபத்துக்கு என்ன காரணம்?”

“அவர் இந்தக் கஷ்டங்களில் இருந்து எப்படி வெளியேறுவது என என்னிடம் வழி கேட்டார்.  நான் நினைப்பதை அவரிடம் சொன்னேன்;  கோவிந்தனிடம் உதவி கேளுங்கள் என்றேன்.  அது தான் அவரை மிகவும் கோபப் படுத்திவிட்டது.  என்னை ஒரு தாசி போல் நினைத்து மிகக் கேவலமாகப் பேசிவிட்டார். “ பானுமதியின் குரல் உடைந்தது.”கோவிந்தன் இங்கே வரும்போது அவன் என்னைப் பார்க்க வருவதோ, நான் அவனைப் பார்ப்பதோ கூடாது என உறுதியாகச் சொல்லிவிட்டார்!”பானுமதி மீண்டும் உடைந்து போனாள்.

1 comment:

ஸ்ரீராம். said...

பானுமதியிடம் இல்லாத கம்பீரம் ஜாலந்திராவிடம் இருக்கிறது!