Wednesday, March 4, 2015

பலியா வாய் திறக்கிறான், தொடர்ச்சி!

அங்கே எவருமில்லை என்றாலும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான் பலியா. பின்னர் மெல்லிய குரலில் பீமனிடம் பேச ஆரம்பித்தான்:”துரியோதனன் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறான்.  ஏன் தெரியுமா? உன் அண்ணன் யுதிஷ்டிரன் இங்கு வந்து ஹஸ்தினாபுரத்துக்கு முடிசூட்டப்பட்ட பின்னர் அவருக்குக் கீழே யுவராஜாவாகத் தான் செயல்படமுடியாது என்றும், அல்லது வேறொரு சிறிய நாட்டின் ராஜாவாகக் கூடத் தன்னால் யுதிஷ்டிரனுக்குக் கீழ் அவனுக்குக் கட்டுப்பட்டு அரசாள விருப்பமில்லை என்றும் சொல்கிறான்.  அப்படிச் செய்யும்படி அவனைக் கூறினால், அவன் தற்கொலை செய்து கொண்டு விடுவானாம்!” இதைக் கேட்ட பீமனின் கண்கள் ஒரு சின்ன நாட்டியத்தையே ஆடிக் காட்டின. அவன் இதழ்களில் புன்னகை அரும்பியது.

“பலியா, அவன் ஒருக்காலும் தற்கொலை எல்லாம் செய்து கொள்ள மாட்டான். நான் உறுதியாகச் சொல்கிறேன், கேள்! அப்படியே அவன் தற்கொலை செய்து கொண்டானெனில் எனக்கு மகிழ்ச்சியே. அவனுக்கு நான் பட்டிருக்கும் கடனைத் திரும்பச் செலுத்த விரும்புகிறேன். எவ்விதத்திலாவது! வாரணாவதத்தில் நாங்கள் ஆறு பேரும் உயிருடன் எரிக்கப்பட்டபோது, அதைச் செய்தது அவன். எங்களை உயிருடன் கொல்ல முயற்சித்தான். அது சரி, தாத்தா பீஷ்மர் அவர்கள் இதைக் குறித்து என்ன சொல்கிறார்கள்?  அவர் என்ன நினைக்கிறார்?”

“தாத்தா பீஷ்மர் எப்போதும் போல் உங்கள் பக்கமே நிற்கிறார்.  உன் அண்ணனை அவர் இந்த ஹஸ்தினாபுரத்தின் சிம்மாதனத்தில் ஏற்றி வைக்க விரும்புகிறார்.  அவருடைய அந்த முடிவில் உறுதியாகவும் இருக்கிறார். சகோதரச் சண்டையைத் தவிர்க்க வேண்டியே உங்களை நாட்டை விட்டு வெளியேற்றினார்.  ஆனால் அவர் அதன் பின்னர் அதற்காக மிகவும் வருந்தினார். அவருக்கு அதில் மகிழ்ச்சியே இல்லை.  தாம் செய்த அந்த மாபெரும் தவறுக்கு அவர் பிராயச்சித்தமும் செய்ய விரும்புகிறார்.”

“ஓஹோ, பெரியப்பா திருதராஷ்டிரர்?  அவர் என்ன நினைக்கிறார்?”

“எப்போதும் போல் ஊசலாடும் மனதுடன், பலவீனமான மனதுடன் இருக்கிறார். பிரச்னைகள் வந்தால் கண்ணீரைப் பெருக்கி விடுகிறார். அதையே வழக்கமாக வைத்திருக்கிறார்.”

“ம்ம்ம், துஷ்சாசனன், கர்ணன், அஸ்வத்தாமா? இவர்கள் நிலைப்பாடு என்ன? வரவேற்பு வைபவத்தில் கூட அவர்கள் காணப்படவில்லை.”

“உன் சகோதரன் யுதிஷ்டிரன் இங்கே அரசனாக முடிசூட்டப்படும் அதே தருணம் கர்ணனும், அஸ்வத்தாமாவும் இங்கிருந்து வெளியேறி விடுவார்களாம். அது மட்டுமல்ல, குழந்தாய்!  துஷ்சாசனன், தாத்தா பீஷ்மரையும் மிரட்டுகிறான். என்னவென்று தெரியுமா?  உன் அண்ணனை மட்டும் ஹஸ்தினாபுரச் சிம்மாதனத்தில் ஏற்றிவிட்டால் அவனும் அவன் சகோதரர்கள் நூற்றுவரும் தங்கள் தாய்வழிப்பாட்டனின் நாடான காந்தாரத்துக்குச் சென்று விடுவார்களாம்.  இங்கே திரும்பவே மாட்டார்களாம்.”

“ஓ, அப்படியா? அப்போது அது மிகவும் நல்லது பலியா! இது மட்டும் நடக்குமென்றால்!  ஆஹா, நாம் அவர்கள் விரைவில் ஹஸ்தினாபுரம் விட்டு வெளியேற உதவி செய்து விடுவோம். ம்ம்ம்ம், பட்டாபிஷேஹ வைபவத்தை எதிர்க்கப் போகின்றனராமா?”

“எப்படி முடியும் அவர்களால்?” முகத்தில் சிரிப்பு அலைமோதக் கேட்டான் பலியா. “தாத்தா அவர்கள் நிச்சயம் செய்து விட்டார். அரசாணையும் பிறப்பித்துவிட்டார். ஹஸ்தினாபுரத்தில் யுதிஷ்டிரனை அரசனாக்கும் முன்னரோ, அதன் பின்னரோ நடக்கும் எவ்விதமான அசம்பாவிதங்களுக்கும் யார் பொறுப்போ அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்.”

“ம்ம்ம்ம்ம், சரி, குரு வம்சத்து அரசகுலப் படையினர்? தளபதிகள்? சேனாபதிகள்? வீரர்கள்? அவர்கள் நிலை என்ன?”

“தாத்தா அவர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்து விளக்கமாகப் பேசி அனைவரிடமும் உன் அண்ணனை அரசனாக்குவதற்கும், அவனுக்குக் கீழ் விசுவாசமாகப் பணி புரிவதற்கும் உறுதி மொழி வாங்கி விட்டார்.”

“ஆஹா, நல்லது, நல்லது!”

“ஆனால் சின்ன எஜமான், நீங்கள் அவர்கள் அனைவரையும் உங்கள் சாதுர்யத்தால் தோற்கடித்து விட்டீர்கள்!” பலியாவின் முகம் பெருமையால் ஜொலித்தது. “உங்களுடன் ஒரு வலிமை பொருந்திய படையை அழைத்து வந்திருக்கிறீர்கள். உங்கள் படைபலத்தைக் காட்டி விட்டீர்கள்.  அதிலும் அதற்குத் தலைவர்களாகக் கிருஷ்ண வாசுதேவனையும், பலராமனையும் அழைத்து வந்து விட்டீர்கள். இவர்களை எதிர்த்து எவர் நிற்பார்கள்? எவராலும் எதிர்க்க முடியாத இவர்களை நீங்கள் உங்களுடன் அழைத்து வந்தது உங்கள் சாதுர்யத்தையே காட்டுகிறது.”

“ஓ, அது நிச்சயம் என்னுடைய சாதுர்யம் தான்.  நான் தான் அதைச் செய்தேன்.” பீமன் தன்னுடைய முன் யோசனையை நினைத்துத் தனக்குள்ளே மகிழ்ந்தான்.  நான் தான் கிருஷ்ண வாசுதேவனை எங்களுடன் கிளம்பி வருவதற்கு வற்புறுத்தினேன்.  அதோடு மட்டும் இல்லை; எங்கள் மாமனார் ஆன துருபதனிடம் எவ்வளவு படை வீரர்களைத் தர முடியுமோ அவ்வளவு வீரர்களைத் தருமாறு கேட்டுக் கொண்டேன்.  ஏனெனில் இங்குள்ள எங்கள் எதிரிகள் எங்கள் மேல் அவர்கள் சுட்டு விரலைக் கூட வைக்கக் கூடாது.  அப்படி வைத்தார்கள் எனில்…………….நான் அவர்களை………….” தன் இரு கரங்களாலும் அவர்கள் தலைகளை உடைப்பது போல் பாவனை செய்தான் பீமன்.

1 comment:

ஸ்ரீராம். said...

பீமன் - உள்ளத்தால் குழந்தை!