Tuesday, April 21, 2015

பீமனும் துஷ்சாசனனும் நேருக்கு நேர் மோதல்!

முற்றத்தில் கூடி இருந்த மக்கள் ஏதோ விபரீதமாய் நிகழ்ந்திருப்பதைப் புரிந்து கொண்டார்கள். அனைவரும் ஓடி வந்து பீமனையும், மல்லர்களையும் சூழ்ந்து கொண்டனர். பீமனைப் பார்த்ததும் அவனுக்கு முறையாகச் செய்ய வேண்டிய மரியாதைகளைக் கூடச் செய்யாமல் அந்த மல்லர்கள் இருவரும் மூச்சு விடுவதற்குக் கூட முடியாமல் தவித்தனர். பெரிய பெரிய மூச்சுக்களாக விட்டுக் கொண்டிருந்தனர். மிகக் கஷ்டப்பட்டு ஒருவன் வாயைத் திறந்து, “பிரபுவே, எங்களில் ஒருவன் கொல்லப்பட்டான். பலருக்கு மிக மோசமான அளவில் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவை அனைத்தையும் துஷ்சாசனன் தலைமை தாங்கி நடத்தி இருக்கிறான். அவனும் அவன் சகோதரர்கள் சிலருமாகச் சேர்ந்த இந்தக் கொடூரத்தை நடத்தி இருக்கின்றனர்.” என்றான்.

மிக மோசமாகக் காயம் அடைந்திருந்ததாலும் மல்யுத்தக் களத்திலிருந்து இங்கே வந்ததில் ரத்தம் சேதமடைந்திருந்ததாலும் அந்த மல்லனால் நிற்க முடியவில்லை. அப்படியே தரையில் அமர்ந்தான். அவன் காயத்திலிருந்து ஒழுகிக் கொண்டிருந்த ரத்தப்போக்கை நிறுத்த கோபு துணியினால் கட்டுப் போட்டுக் கொண்டிருந்தான். அப்போது இன்னொரு மல்லன் பேச ஆரம்பித்தான். “பிரபுவே, நாங்கள் இன்று அதிகாலையில் துஷ்சாசனன் மாளிகைக்கு எங்கள் வண்டிகளை ஓட்டி வரும்படி ஆணையிடப்பட்டோம். துஷ்சாசனனும் அவன் சகோதரர்களும் காந்தாரம் போவதாகவும், அதற்காக அவர்களுடைய சாமான்களையும் மற்ற உடைமைகளையும் எடுத்துச் செல்ல வேண்டி வண்டிகள் தேவைப்படுவதாகவும் அறிந்தோம். அதற்காகவே எங்கள் வண்டிகள் அங்கே கொண்டு செல்லப்பட்டன. ஆனால் நாங்கள் அங்கே சென்றபோது அவர்கள் அனைவரும் எங்களை மிகவும் மோசமாகத் திட்டினார்கள். மேலும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு எங்களைத் தாக்க முயன்றனர். அதில் எங்களில் ஒருவன் கொல்லப்பட்டான். பலருக்கும் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சில மாடுகளும் கொல்லப்பட்டன. சில மாடுகள் காயம் பட்டுத் தவிக்கின்றன. எங்கள் வண்டிகளை அவர்கள் தங்கள் ஆதிக்கத்தில் எடுத்துக்கொண்டதோடு அல்லாமல் அவற்றில் சிலவற்றைச் சுக்கு நூறாக உடைத்தும் விட்டனர்.”

“ஏன்?”

“அவர்கள் சொல்கின்றனர். நாங்கள் அவர்களை அவமானப்படுத்தி விட்டோமாம். எங்களுக்குக் கிடைத்த கட்டளையின்படி தான் நாங்கள் நடந்து கொண்டோம்; மற்றபடி எங்களுக்கு வேறு எந்தக் கெட்ட எண்ணமும் இல்லை. மேலும் நாங்கள் எளிய குடிமக்கள். அரசரின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர வேறெதுவும் அறிய மாட்டோம். நாங்கள் இவற்றை எல்லாம் எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்பதாக இல்லை. எங்களைக் கூண்டோடு அழிக்கும் எண்ணத்தில் இருக்கின்றனர். எங்களைக் கொல்லாமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது.” என்றான்.

“சரி, எங்களுடன் வாருங்கள்!” என்றபடி அவர்களை அழைத்துக் கொண்டு பீமன் கிளம்பினான். அவன் முகம் மிகக் கடுமையாக மாறி விட்டது. “என்ன தைரியம் இருந்தால் ஏழை, எளிய மக்களை அவர்களைத் தாக்குவார்கள்? அவர்களைப் பயமுறுத்துவார்கள்! கோபு, உடனே என் மாளிகைக்குச் சென்று என் தண்டாயுதத்தை எடுத்து வா!” என்று கோபுவுக்குக் கட்டளையிட்டான். சோமேஸ்வர் பலியாவின் வண்டியைத் தள்ளியபடி பீமனைத் தொடர்ந்தான். பீமன் துஷ்சாசனனின் மாளிகையை நோக்கி விரைந்து நடந்தான்.  நடப்பதன் முழு விபரமும் புரியாத கூட்டமும் அவர்களைத் தொடர்ந்து சென்றது. பீமன் துஷ்சாசனன் மற்றும் அவன் சகோதரர்கள் தங்கி இருந்த மாளிகைகளை அடைந்ததுமே பல வண்டிகள் உடைக்கப்பட்டுக் கிடந்ததைப் பார்த்தான். மாடுகள் சில இறந்து கிடந்தன. சில காயம்பட்டுக் கிடந்தன. ஒரு மாடு இறக்கும் தருவாயில் பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. இரு மல்லர்கள் தங்கள் நினைவே இல்லாமல் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.  பொறுமையை இழந்த பீமன் துஷ்சாசனன் வீட்டு வாயிலை அடைந்து கதவை மிக வேகமாகத் தட்டினான்.  கூட்டம் இப்போது என்ன நடந்தது என்பதை முழுதும் அறிந்திருந்தது. இதன் விளைவு என்ன என்பதையும் மேலே என்ன நடக்கப் போகிறது என்பதையும் அறிய வேண்டி மிகவும் பதட்டத்துடன் காத்திருந்தது. ஒவ்வொரு நிமிடமும் அங்கே மிகவும் பதட்டமாகவே கழிந்தது.

பீமன் பல முறை தட்டியும் கதவு திறக்கப்படவே இல்லை. தன் உரத்த குரலில் பீமன், “துஷ்சாசனா! உடனே கதவைத் திறக்கப்போகிறாயா இல்லையா! இல்லை எனில் நான் கதவை உடைத்துத் திறப்பேன்! மூடிய கதவுகளுக்கு உள்ளே இருந்து கொண்டு வித்தையா காட்டுகிறாய்? உடனே கதவைத் திற! “ என்று கத்தினான். அதற்குள்ளாக பீமனின் தண்டாயுதத்தை எடுத்துக் கொண்டு கோபு அங்கே வந்து விட்டான். அதைக் கையில் வாங்கிய பீமன் அந்தக் கதவில் தண்டாயுதத்தால் வேகமாக மோதினான். அவன் மோதிய மோதலில் அரண்மனைக் கட்டிடம் முழுதும் ஆடியது.

“கதவைத் திற, துஷ்சாசனா! இல்லை எனில், நான் உடைத்துத் திறப்பேன்!” என்ற வண்ணம் பீமன் தண்டாயுதத்தினால் கதவை உடைத்தான். மொத்தக் கட்டிடமும் மீண்டும் மீண்டும் ஆடியது. சற்று நேரத்தில் கதவு திறக்கப்பட்டது. நிலையை அடைத்த வண்ணம் தன்னிரு கரங்களால் உள்ளே வருவதைத் தடுத்துக் கொண்டு துஷ்சாசனன் நின்றிருந்தான். அவன் பீமனை துவேஷம் நிறைந்த பார்வையால் பார்த்துக் கொண்டிருந்தான். “என்ன வேண்டும் உனக்கு? இது என்ன ராக்ஷசர்களின் நாடு என நினைத்துக் கொண்டாயா? ராக்ஷசா!” என்று பீமனைப்பார்த்துக் கேட்டான்.

“அப்படி இருந்திருக்கக் கூடாதா என எண்ணுகிறேன்.” என்றான் பீமன். மேலும் தொடர்ந்து, “ஆனால் ஹஸ்தினாபுரம் ராக்ஷசர்களை விட மோசமான பிசாசுகளிடமும், பேய்களிடமும் மாட்டிக் கொண்டு திண்டாடுகிறது என்பது இப்போது தான் புரிகிறது. கோழைகள்! கோழைகள்! நேரிடையாக மோதத் தெரியாத கோழைகள்! ஏழை, எளிய மக்களைத் தாக்கிவிட்டுப் பின் தங்கள் வீட்டுக்குள் சென்று ஒளிந்து கொள்ளும் கோழைகள்!” என்று பற்களைக் கடித்த வண்ணம் உறுமினான்.


துஷ்சாசனனின் இரு சகோதரர்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம் அங்கே வந்து துஷ்சாசனன் பின்னால் நின்று கொண்டனர். அவர்களைத் தாண்டியும் எவரும் உள்ளே செல்ல முடியாமல் பார்த்துக் கொண்டனர். பீமன் அதை லக்ஷியம் செய்யாமல் மேலே பேசினான்:” பலியாவுக்கு நீ இப்போது பதில் சொல்! அவன் குலத்து மக்களை நீங்கள் அநாவசியமாகத் தாக்கிக் காயப்படுத்தியதோடு இல்லாமல் ஒருவனைக் கொல்லவும் கொன்றிருக்கிறீர்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும். அதோடு இல்லாமல் இந்த ஏழைகளின் மாட்டு வண்டிகளும், மாடுகளும் செய்த பாவம் தான் என்ன? அவற்றையும் போட்டு உடைத்ததோடு அல்லாமல் மாடுகளையும் கொன்று காயப்படுத்தி இருக்கிறீர்கள். நீ கொன்ற, காயப்படுத்திய மாடுகளுக்குப் பதிலாக மாடுகளைக் கொடுத்துவிடு. அதே போல் உடைத்த வண்டிகளுக்கு ஈடான வண்டிகளையும் கொடுக்க வேண்டும்.”

“பலியா? அவன் யார் இதை எல்லாம் கேட்பதற்கு?” என்று துச்சமாகக் கேட்டான் துஷ்சாசனன். “அவன் எங்களை எல்லாம் அதிகாரம் செய்வானா? அதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருப்போமா?” என்றான் மேலும்.

“துஷ்சாசனா! நீ தேவையில்லாமல் இந்த ஏழை மல்லர்களைத் துன்புறுத்தி இருக்கிறாய். இவற்றுக்கு நீ பதில் சொல்லியே ஆகவேண்டும்.”

“இந்தக் கேடு கெட்ட மல்லர்கள் எங்களைப்பார்த்துச் சிரிக்கின்றனர். நாங்கள் காந்தாரம் செல்லப் போகிறோமாம். அதற்கு எங்கள் சாமான்களை எடுத்துச் செல்ல இவர்கள் வண்டிகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இது எங்களை அவமானம் செய்வதாக இல்லையா?”

“ஒருவேளை நீயே அவர்களை வண்டிகள் கொண்டு வருமாறு ஆணையிட்டிருந்தால்?” சற்றும் தயக்கமின்றிச் சொன்னான் பீமன்.

1 comment:

ஸ்ரீராம். said...

பீமன் இப்படி அவசரப்படுவதை மூத்தவர் விரும்புவாரா?