Thursday, May 14, 2015

கண்ணன் வரவு! துரியோதனன் கொதிப்பு!

பானுமதி இருந்த அந்தப்புர அறை நன்கு சுத்தம் செய்யப்பட்டது பானுமதியும் சுத்தம் செய்யப்பட்டாள். அவளை வேறொரு படுக்கையில் கிடத்தினார்கள். இவை எல்லாம் முடிந்ததும், காந்தாரி தன் மகன் துரியோதனனை அங்கே வந்து பானுமதியைப் பார்க்கும்படி அழைப்பு விடுத்தாள். கூடவே சுஷர்மாவையும் அழைத்து வரச் சொன்னாள். பானுமதி மிகவும் உடல் நலம் கெட்டு இருக்கிறாள். ஆகவே அவள் கணவனை அவள் சந்திக்கட்டும் என்பதே காந்தாரியின் எண்ணம். துரியோதனனும் படபடக்கும் இதயத்துடன் செய்தியைக் கேட்டதும் முன்னறைக்குள் வெகு வேகமாக நுழைந்தான். அங்கே ரேகா கண்களில் கண்ணீருடன் கையில் ஒரு துணி மூட்டையைச் சுமந்து கொண்டு அந்த மூட்டையையே ஏதோ காணக்கிடைக்காத பொக்கிஷம் போல் பார்த்துக் கொண்டு இருப்பதையும் கண்டான். அவளிடம் எதுவும் பேசவில்லை அவன்.

அடுத்த அறைக்குச் சென்றான். அங்கே பானுமதி ஒரு படுக்கையில் படுத்திருந்தாள். அவளைச் சுற்றியும் புனித விபூதியினால் கோடு வரையப்பட்டிருந்தது. எவரும் அந்தக் கோட்டைத் தாண்டி உள்ளே படுத்திருக்கும் பானுமதியின் அருகே செல்லக் கூடாது என்பதற்கான எச்சரிக்கை அது. அவர்கள் உள்ளே செல்வது சுத்தமாகக் கருதப்படவில்லை. அந்தக் காலங்களில் ஆரியர்கள் பிரசவித்த பெண்ணின் அருகே சென்றால் ஆசாரக் குறைவாக எண்ணினார்கள். பின்னர் அவர்களை அன்றாட நடைமுறைக்கு ஏற்பப்  புரோகிதர்களின் உதவியுடன் புனிதப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆகவே துரியோதனன் இந்தக் கோட்டைப் பார்த்ததுமே வெளியே நின்றுவிட்டான். பானுமதியையே நீர் நிறைந்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தான். வெளுத்துச் சோகையான முகத்துடன் மிகவும் பலவீனமாக மயக்க நிலையில் கிடந்தாள் பானுமதி. இவள் விதியோடு சேர்ந்து அவன் விதியும் பிணைக்கப்பட்டிருந்ததோடு அல்லாமல் இன்னும் என்னென்னமோ நடக்கப் போகிறது என்றே அவன் உள்ளுணர்வும் கூறியது.

அங்கே தன் தாய் மற்றும் பெரியவர்கள் பலரும் இருப்பதைக் கண்டபின்னரும் அதை லக்ஷியம் செய்யாமல் ஆதுரத்துடன் பானுமதியை “தேவி” என்று அழைத்தான் துரியோதனன். அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். என்றாலும் யாரும் எதுவும் பேசவில்லை. மயங்கிக் கிடந்த பானுமதிக்கு இந்த அழைப்பு எப்படித் தான் கேட்டதோ! அவள் தன் கண்களை மிகவும் சிரமப்பட்டுத் திறந்தாள். குரல் வந்தபக்கம் பார்த்தவளுக்கு துரியோதனன் தெரிய அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். மெல்ல மெல்ல அவளுக்குக் கொஞ்சம் சுய நினைவும் வந்தது. உடனே துரியோதனனைப் பார்த்து, “பிரபு! “ என அழைத்தாள். அவளால் தொடர்ந்து பேச முடியவில்லை. ஆனாலும் திக்கித் திணறி ஒவ்வொரு வார்த்தையாகப் பேசினாள். “என்னை……. மன்னியுங்கள்…….பிரபு! நான்………….நான்………..நான் என்னால் முடிந்தவரை…………..முயன்றேன். பிரபு!......... ஆனால்…………… என்னால்……… உங்களை மகிழ்ச்சியில் வைத்திருக்க………………. இயலவில்லை.”

அவள் நிறுத்தினாள். சற்று நேரம் மூச்சு வாங்கியது அவளுக்கு. அங்குமிங்கும் அலை பாய்ந்து கொண்டிருந்த தன் எண்ணங்களை எல்லாம் ஒன்று சேர்த்துத் திரட்டி நினைவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டாள். அதில் களைத்தும் போனாள். பின்னர் நினைவுக்கு வந்தவளாக, “பிரபுவே, நான் என்னுடைய கடமையை……… உங்களுக்கும்………….. உங்கள் முன்னோர்களுக்கும் செய்து விட்டேன். பிரபு!  இப்போது……………….. உங்களுக்கு நான் ஒரு மகனை …………….அளித்திருக்கிறேன். அவனைக்………………… குரு வம்சத்தின் அடுத்த …………………………..சாம்ராஜ்யச் சக்கரவர்த்தியாக ஆக்குங்கள்.” இதைக் கேட்ட அங்கிருந்த அனைவர்க்கும் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. சேடிப் பெண்கள் விம்மி அழ ஆரம்பித்தனர். பின்னர் அரச வம்சத்தினர் இருக்கையில் சப்தம் போட்டு அழக்கூடாது என்பது நினைவில் வந்தது போல் அனைவரும் வெளியே சென்று அழ ஆரம்பித்தனர்.

அப்போது காந்தாரி, தன் மருமகள் தன் மகனுடன் சிறிது நேரம் தனிமையில் பேசட்டும் என நினைத்துத் தன்னை அறைக்கு வெளியே அழைத்துச் செல்லச் சொன்னாள். அவள் கண்களில் கட்டி இருந்த துணி மடிப்பின் கீழே இருந்து அவள் கண்களில் கொட்டிய நீர் வந்து கொண்டிருந்தது. காந்தாரியோடு அந்த அறையில் இருந்த அனைவருமே வெளியே சென்றனர்.  மருத்துவரும் உதவிக்கு பானுமதியின் அருகே இருந்த மருத்துவப் பெண்மணியும், சுஷர்மாவும், துரியோதனனும் மட்டுமே இருந்தனர். துரியோதனனுக்கு தொண்டை அடைத்துக் கொண்டு பேச முடியாமல் தவித்தான்.  அப்போது பானுமதி மீண்டும் பேச ஆரம்பித்தாள். ஏதோ நினைவுக்குக் கொண்டு வந்தவள் போல யோசனையுடன் பேசினாள் அவள். “ஆர்ய புத்திரரே! ஆனால்…………… ஒரு விஷயத்தில்…………………. எனக்கு மகிழ்ச்சியே!...........ஜாலந்திரா……………….ஜாலந்திரா…………….. என்னை விட உங்களை அதிகம் சந்தோஷப்படுத்துவாள். அவள்…………..மிகவும் கெட்டிக்காரி…….. என்னைப் போல் இருக்க………………………மாட்டாள்………………………………….நான் உங்களை…………………. ஒரு போதும்…………….. சந்தோஷப்படுத்தவே இல்லை. நம் மகனைக் கூட…………………………. அவள் ஒரு நல்ல தாயாக…………………………… வளர்த்துத் தருவாள். ………………….தன் சொந்த மகனைப் போல்………………………….கண்ணும், கருத்துமாக……………………… வளர்ப்பாள்.”

துரியோதனன் உடலே நடுங்கியது. தன்னைச் சமாளித்துக்கொள்ள வேண்டி அருகே இருந்த சுவரில் தன் கையை வைத்துக் கொண்டு சாய்ந்து கொண்டான். “ஆம், காஷ்யா, ஆம்!” என துக்கம் நிரம்பிய குரலில் கூறினான். ஆனால் சுஷர்மாவுக்கு இதைக் கேட்டதும் தாங்க முடியவில்லை. பெரிய குரலில் அழுத வண்ணம் அந்த அறையை விட்டே சென்றான். மீண்டும் பானுமதியின் நினைவுகள் முன்னோக்கியும், பின்னோக்கியும் சென்றன. அவளால் எதையும் சரியாக நினைவு கூர முடியவில்லை. ஜன்னி வேகத்தில் தன் கண்களைத் திறந்து கொண்டு நிலையில்லாமல் எங்கேயோ பார்த்தவண்ணம் ஏதேதோ சொல்லிப் பிதற்றினாள். கோட்டுக்கு வெளியே நின்றிருந்த மருத்துவர் அங்கே இருந்த வண்ணமே ஏதோ மருந்தைக் கலந்து உள்ளே பானுமதியின் அருகே இருந்த மருத்துவப் பெண்ணிடம் கொடுக்க அவள் அதை வாங்கி பானுமதியின் வாயில் ஊற்றினாள். பானுமதிக்குக் கொஞ்சம் தெளிவு வந்தாற்போல் இருந்தது.

“நம் குழந்தையை, நம் ஒரே மகனைப் பார்த்துக் கொள்ளுங்கள் பிரபு!” என்று சேர்ந்த வண்ணம் பேசியவள் அது தாங்க முடியாமல் மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள் அவள் குரல் இப்போது ரகசியம் பேசுவது போல் மிகவும் மெலிதாக ஆகி விட்டது. மிகப் பலஹீனமாக அவள், “கோவிந்தா! கோவிந்தா! நீ இன்னும் வரவில்லையா? வா…..கோவிந்தா….வா! வந்து…… என்னைக் காப்பாற்று! நான் உன் கோபியரில் ஒருத்தி! உனக்காகக் காத்திருக்கிறேன். கோவிந்தா! எங்கே இருக்கிறாய் நீ?” என்று படுக்கையில் எழுந்து அமர்ந்த வண்ணம் கிறீச்சிட்டுக் கத்தினாள் பானுமதி. அவள் கண்கள் அங்குமிங்கும் அலை பாய்ந்தன. அவள் குரலைக் கேட்டதுமே வந்தது போல் அப்போது அந்த அறைக்கதவைத் தடாரெனத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் வாசுதேவக் கிருஷ்ணன். அவன் சாதாரண ஆடை அணிந்திருந்தான். அவன் தலையில் கிரீடமோ, மயில் பீலியோ காணப்படவில்லை. அவன் மாலைகளையும் அணியவில்லை. ஆயுதங்களையும் தரிக்கவில்லை. செய்தியைக் கேட்டதும் உடனே ஓடோடி வந்தவன் போல் காணப்பட்டான். அவன் பின்னே ஜாலந்திராவும் வந்தாள். அவளும் பதட்டத்துடன் காணப்பட்டாள். கண்ணன் அந்த அறைக்குள் நுழைவதைக் கண்டதுமே துரியோதனன் மனம் குரோதத்திலும் ,ஆங்காரத்திலும் கொதித்தது. அவனுக்குக் கத்த வேண்டும் போல் இருந்தது. ஆனால் இப்போது இருக்கும் துயரமான நிகழ்வின் போது கத்துவது சரியாக இருக்காது எனத் தன்னைத் தானே மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.

1 comment:

ஸ்ரீராம். said...

அடுத்த பகுதிக்காய் ஆவலுடன்...