Saturday, June 6, 2015

ராஜ சபையின் நிகழ்வுகள் (தொடர்ச்சி)!

நுழையும்போதே வேத பிராமணர்கள், துறவிகள், ரிஷிகள் என அமர்ந்திருக்க அவர்களுக்கென மான் தோல் ஆசனங்கள், தர்ப்பாசனங்கள் ஆகியனவும் ஆங்காங்கே போடப்பட்டிருந்தன. பின்னால் உள்ள பாகம் இரண்டு பகுதியாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு பாகத்தில் மக்களுக்குச் சேவைகள் செய்யும் புரோகிதர்களும், இன்னொரு பகுதியில் மற்ற நாடுகளிலிருந்து வந்திருந்த முக்கியப் பிரதிநிதிகளும் அமர்ந்திருந்தனர். சிங்காதனங்களுக்கு இடப்பக்கம் உள்ள இடத்தில் குரு வம்சத்து அரசகுலத்தைச் சேர்ந்த மற்ற முக்கியப் பிரதிநிதிகள், மற்ற க்ஷத்திரியத் தலைவர்கள் அமர்ந்திருந்தனர். அனைவரும் பூரண ஆயுதபாணியாகத் தங்கள் வீரத்தை எந்நேரமும் எடுத்துக் காட்டும்படியான வேகத்தை முகத்தில் காட்டி அமர்ந்திருந்தனர். கிராமத்தின் மஹாஜனங்கள், வியாபாரிகள், தலையில் தலைப்பாகை கட்டிக் கொண்டு விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்த வண்ணம் காட்சி அளித்தனர்.

இடப்பக்கம் கடைசியில் சிற்பிகள், கைத்தொழில் செய்பவர்கள், தொழில் வினைஞர்கள்,கொல்லர்கள், தச்சர்கள் ஆகியோர் அமர்ந்திருந்தனர். முக்கிய நுழைவாயிலில் வரும் பாதை கொஞ்ச தூரத்திலேயே அகலமாக அமைந்திருந்தது.  அது சதுர வடிவ மேடை ஒன்றின் அருகே அமைந்திருந்தது. அந்த மேடையின் நடுவே அக்னி வளர்க்கும் யாககுண்டம் ஒன்று காணப்பட்டது. இதில் தான் யாகங்கள், யக்ஞங்கள் செய்வார்கள். அதன் அருகே குரு வம்சத்துப் பாண்டவர்களின் வேதகுருவான தௌம்யரும், வியாசரின் பிரதம சீடர்களான வைஷம்பாயனர் மற்றும் பௌலரும் சுற்றி அமர்ந்து வேத மந்திரங்களைக் கோஷித்துக் கொண்டு அக்னியை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வைஸ்வதேவன் எனப்படும் அக்னியை அங்கே உருவாக்கிக் கொண்டிருந்தனர்.

அவர்களைத் தவிரவும் நூற்றுக்கணக்கான பிராமணர்கள் அமர்ந்து வேத மந்திரங்களைக் கோஷித்து அக்னியை அழைத்துக் கொண்டிருந்தனர். நான்கு கொம்புகளுடனும், மூன்று பாதங்களுடனும், ஏழு கைகளுடனும் காட்சி அளிக்கும் அக்னிக் கடவுளே! உனக்கு இரு முகங்கள்! கால புருஷனால் மும்முறை கட்டப்படுபவனே! மனிதர்களால் இருவேளையும் அக்னிஹோத்ரம் செய்யப்படுபவனே!

((இங்கே நான்கு கொம்புகள் எனச் சொல்லப்படுவது நான்குவிதமான யாகங்களைச் செய்து வைக்கும் பிராமணர்களைச் சொல்லப்படுகிறது. மூன்று பாதங்கள் என்பது ரிக், யஜுர், சாம வேதங்களைக் குறிக்கும். இரு முகங்கள் என்பது விழாக்கள், விசேஷங்கள் நடைபெறும் இரு விதங்களைக் குறிக்கும்.ஏழு கைகள் எனப்படுவது வேதத்தின் ஏழு விதமான சந்தஸ்,மற்றும் கால புருஷனால் கட்டப்படுவது என்பது ஒரு நாளின் மூன்று காலங்களான காலை, மதியம், இரவு ஆகியவற்றால் கட்டப்படுவதையும் குறிக்கும்.) {Vedicmetre= “சந்தஸ்” பொருள் உதவி: திருமூர்த்தி வாசுதேவன், நன்றி.}

சந்தனக்கட்டைகளை அக்னியில் இடும்போது வரும் மணமும், அக்னியில் சேர்க்கும் நெய்யின் மணமும் சேர்ந்து அந்த அறையே கலவையானதொரு மணத்தில் திகழ்ந்தது. அதோடு கிழக்கில் இருந்து வந்த சூரியக் கதிர்கள் தங்கமயமான ஒளியைப் பாய்ச்சி அந்த அறையையே ஒரு சொர்க்கபுரி போல் காட்டியது. அக்னி குண்டத்திலிருந்து வந்த புகை கருமேகம் போல் காட்சி அளித்தது. அக்னியிலிருந்து அரும் ஒளியும், சூரிய ஒளியும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டு பிரகாசித்தது. சிங்காதனங்களுக்கு அருகே வலப்பக்கமாகப் போடப்பட்டிருந்த மான் தோல் ஆசனத்தில் வியாசரின் மகனான சுக முனிவர் இடுப்பிலும் மான் தோலையே ஆடையாகத் தரித்துக் கொண்டு மழுங்க மொட்டை அடித்த தலையோடும், வபனம் செய்து கொண்ட முகத்தோடும் உடல் முழுக்க விபூதியைப் பட்டையாகப் பூசிக் கொண்டு காட்சி அளித்தார்.

சுகருக்கு அடுத்தபடியாக குரு வம்சத்தவரின் படைத்தளபதியும் ஆயுதப்  பயிற்சி அளிக்கும் குருவும் ஆன துரோணாசாரியார் அமர்ந்திருந்தார். அவர் அமர்ந்திருந்த தோரணையே அவருக்கு அங்கே இருக்கும் முக்கியத்துவத்தை உணர்த்தியது. ஒரு எச்சரிக்கை உணர்வோடு அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தவண்ணம் தன் கைகளில் நாண் இழுத்துக் கட்டப்படாத வில்லை ஏந்திய வண்ணம் காட்சி அளித்தார். அவரின் மைத்துனரும், குருவம்சத்தினரின் ஆதி குருவும் ஆன கிருபாசாரியாரும் துரோணரின் அருகே அமர்ந்திருந்தார். கிருபர் தன் கைகளில் அங்குசத்தை ஏந்தி இருந்தார். இவர்களுக்கு அடுத்தபடியாகப் பாண்டவர்களில் யுதிஷ்டிரனைத் தவிர மற்ற சகோதரர்கள் நால்வரும் தங்களுக்கென இடப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்திருந்தனர். இவர்கள் நால்வரில் பீமன் மட்டும் தன் தேக வலிமையாலும், பெரிய உருவத்தாலும் தனித்துக் காணப்பட்டான். அங்கிருந்த அனைவரையும் பார்த்துச் சிரித்தவண்ணம் அமர்ந்திருந்த பீமனுக்கு அருகே அர்ஜுனன் விலை உயர்ந்த பட்டுப் பீதாம்பரத்தை அணிந்த வண்ணம், சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு தனக்குத் தெரிந்தவர்களை அடையாளம் கண்டு கொண்டும், சிலரைப் பார்த்துச் சிரித்தும், சிலரைப்பார்த்துத் தலையை ஆட்டியும் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டிருந்தான். அவனுடைய புத்திசாலித்தனத்தை வெளிக்காட்டும் கண்களால் கூடி இருந்த கூட்டத்தினரின் மனோநிலையை அளவிட்டுக் கொண்டிருந்தான். அவன் அருகே அமர்ந்திருந்த நகுலனோ, தன் கண்களாலேயே கூடி இருந்த மக்களின் மனோநிலையை  அளப்பவன் போலப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அருகே இருந்த சஹாதேவனோ எந்த வித உணர்வையும் வெளிக்காட்டாமல் அமைதியாகவும்,சாந்தமாகவும் தரையைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான். அவர்களோடு உத்தவனும்,சாத்யகியும் அமர்ந்திருந்தனர்.

மேடையின் இடப்பக்கமாக இருந்த இருக்கைகளில் மந்திரிமார்களில் முக்கியமான குனிகர் அமர்ந்திருந்தார். இவர்களைத் தவிரவும் விதுரருக்கும், சஞ்சயனுக்கும் அங்கே இருக்கைகள் போடப்பட்டிருந்தன. இவர்களை எல்லாம் தாண்டி இருந்த இருக்கைகளில் ஒன்றில் ஷகுனி அமர்ந்திருந்தான். தந்திரக்காரன் ஆன ஷகுனி அப்போது என்ன தந்திரத்தை யோசித்தானோ! அவன் தந்திரங்களை வெளிப்படுத்தும்  அவன் கண்கள் அங்குள்ள மக்களையும் கூடி இருந்த மற்றோரையும் பார்த்தவண்ணம் அங்குமிங்கும் அலை பாய்ந்தன. அவர் அருகே இருந்த கர்ணன் அலையமாகவும், வெறுப்பாகவும் பாண்டவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனதின் குரோதம் கண்களில் தெரிந்தது. அவன் அருகிலிருந்த அஸ்வத்தாமாவும் மனதின் குரோதம் கண்களில் தெரியப் பாண்டவர்களைக் கடுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவர்களுக்குப் பின்னால் துஷ்சாசனன் தன் மற்ற சகோதரர்களோடு அமர்ந்திருந்தான். அனைவருமே தங்களுக்குப் பொருந்தாத சூழ்நிலையில் தங்களுக்கு இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதை ஒவ்வொரு அசைவிலும் வெளிக்காட்டிக் கொண்டிருந்தனர்.

சிங்காதனங்கள் போடப்பட்டிருந்த நடுமேடைக்கு நேர் பின்னால் இருந்த கதவு திறக்க அதன் வழியே இரு பிரதானிகள் நுழைந்து கைகளில் தங்கக் கோல்களை ஏந்திய வண்ணம் அறைக்கதவின் இருபக்கங்களிலும் பக்கத்துக்கு ஒருவராக நின்று கொண்டனர். அதன் வழியே கட்டியக்காரகள் கட்டியம் கூறி அறிவிக்க யுதிஷ்டிரனும், துரியோதனனும் நுழைந்தனர். அனைவரும் எழுந்து இளவரசர்களுக்கு வணக்கம் தெரிவிக்க, அங்கிருந்த பிராமணர்களும், மற்றும் துறவிகள், ரிஷிகள் ஆகியோர் மட்டும் தங்கள் கரங்களை உயர்த்தி ஆசிகளைத் தெரிவித்தனர்.

1 comment:

ஸ்ரீராம். said...

விளக்கம் அருமை.

//நான்கு கொம்புகளுடனும், மூன்று பாதங்களுடனும், ஏழு கைகளுடனும் காட்சி அளிக்கும் அக்னிக் கடவுளே!//

இந்த வரியை மட்டும் ஒரு ஓவியர் படிக்க நேர்ந்தால் எப்படி இந்தப் பகுதிக்குப் படம் போடுவார்?

:))))