Tuesday, December 29, 2015

போர்க்கோலத்தில் சத்ராஜித்!

அதற்குள்ளாக பங்ககரா தன் தகப்பனைச் சமாதானம் செய்துவிட்டு அவரைக் காலைக்கடன்கள் கழிக்கவும், நித்திய கர்மானுஷ்டானங்களைச் செய்யவும் அனுப்பி வைத்தான். அவற்றை முடித்த பின்னர் தேடிச் செல்லலாம் என்றும் கூறினான். சத்ராஜித் கத்திய கத்தலும் அதன் கடுமையும் மற்ற அனைவரையும் மிகவும் பாதித்து விட்டிருந்தது. ஊழியர்களும் சத்ராஜித்தின் இந்தக் கோப முகத்தின் பயங்கரத்தில் பயந்து விட்டிருந்தனர். அவர்கள் தன்னிச்சையாக மாளிகையை நோக்கிச் சிலரும் மைதானங்களையும், தோட்டங்களையும் நோக்கிச் சிலரும் சென்று திருடனின் கால்தடமோ அல்லது வேறு ஏதேனும் அடையாளமோ கிடைக்கப்பெறுமா என்று பார்ப்பவர்கள் போல் கிளம்பினார்கள். அதற்குள்ளாகத் தன் காலைக் கடன்களையும் நித்திய கர்மானுஷ்டானங்களையும் அவசரமாக முடித்துக் கொண்டு வந்த சத்ராஜித் தன் ரதத்தையும், நான்கு குதிரைகளையும் கொண்டு வரும்படி சத்தம் போட்டான்.

சத்யபாமாவுக்குக் குழப்பத்திற்கு மேல் குழப்பம். சந்தேக ரேகைகள் அவள் முகத்தில் ஓடின. அவள் சிந்தனையிலும் சந்தேகங்கள் பல ஏற்பட்டன. “அதிகாலை விடியும் முன்னரே சித்தப்பா ப்ரசேனரைத் தந்தை எங்கே அனுப்பி வைத்தார்? அதுவும் மிகவும் ரகசியமாக? என்ன காரணம்? இதை நினைக்க நினைக்க அவள் மனம் குழம்பியதோடல்லாமல், கிருஷ்ணன், தர்மத்தின் காவலன் எனப் போற்றப்படுபவன், இந்த ச்யமந்தகத்தைத் திருடி இருப்பானா என்பதிலும் அவளுக்குச் சந்தேகம் இருந்தது. ஒரு சாதாரணத் திருடனைப்போல் அவன் நடந்து கொள்வானா? தந்தை காட்டிய காதுக்குண்டலம் அவனுடையது தானா? ஆனால் தந்தை தன்னிடமிருந்து எதையோ கீழே போட்டுவிட்டுப் பின்னர் எடுத்தாரே? அது இந்தக் காதுக்குண்டலம் தானா? அல்லது வேறே ஏதேனுமா? என்னுடைய இந்த எண்ணம் அல்லது தோற்றம், நான் கண்டது சரியா? அல்லது நான் கனவு ஏதேனும் கண்டேனா?

சத்யபாமா தன் தந்தையை மிகவும் நேசித்தாள். ஆகவே அவரால் தவறு செய்ய முடியும் என்பதை அவளால் ஏற்கமுடியவில்லை. கிருஷ்ணனைத் தக்க காரணம் இன்றி அவர் திருட்டுப் பட்டம் கட்டிக் குற்றம் சுமத்த மாட்டார் என்றே அவள் நம்பினாள். அதற்கு ஏற்பத் தன் எண்ணங்களை அமைத்துக் கொண்டாள். ஆனாலும் அவள் தந்தையின் தந்திரங்களும் அவள் அறிந்தவையே! ஆகவே கிருஷ்ணனின் குணாதிசயங்கள் குறித்து அவள் தந்தையால் சொல்லப்பட்ட கதைகளையும் அவளால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அதன் நம்பகத் தன்மை குறித்தும் சந்தேகம் ஏற்பட்டது. திரும்பத் திரும்ப அவள் மனதில் சந்தேகம் எழுந்து கொண்டே இருந்தது. அதே சந்தேகம். கிருஷ்ணன், யாதவர்களின் காவலன்,  அவர்களின் கண்ணின் கருமணி போன்றவன், தன் சாமர்த்தியத்தால் சாம்ராஜ்யங்களை நிர்மாணிப்பவன், தர்மத்தின் பாதுகாவலன் என அனைவராலும் போற்றப்படுபவன் அப்படிப்பட்டவன் ஒரு சாமானியத் திருடனைப் போலவா நடந்து கொள்வான்? அதிலும் ஒரு நாள் முன்னர் தான் தன்னுடைய சுயக்கட்டுப்பாட்டை அவன் அவள் முன்னிலையிலும் சத்ராஜித் முன்னிலையிலும் காட்டி இருந்தான். தன்னைத் தாக்கிய சத்ராஜித்தைத் திரும்பத் தாக்காமல் தன்னைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டதன் மூலம் அவன் எவ்வளவு கட்டுப்பாடுகள் நிறைந்தவன், தன்னைத் தானே கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் என்பதைக் காட்டி இருந்தான்! வெகு எளிதில் அவனால் சத்ராஜித்தை வீழ்த்தி இருக்க முடியுமே! ஆனால் அதை அவன் செய்யவில்லை! அப்படிப்பட்டவனால் இப்படிஒரு திருட்டுச் செய்திருக்க முடியுமா? பாமாவுக்குக் குழப்பமே மிகுந்தது.

ஆனால் அவள் சந்தேகங்களை வீட்டில் மற்றவருடன் பகிர்ந்து கொள்ளவே முடியாது. எல்லோருமே கிருஷ்ணனால் தான் ச்யமந்தகம் திருடப்பட்டது என்றும், அவன் திருடிக்கொண்டு ஓடும்போது காதுக்குண்டலம் நழுவி விட்டது எனவும் நினைக்கத் தொடங்கி விட்டார்கள். அதை மாற்றும் சக்தி அவளிடம் இல்லை.

சத்ராஜித்தின் ரதம் தயாராகி விட்டது. மற்ற அதிரதர்களும், பங்ககரா, ஷததன்வாவுடன் தயாராகிக் காத்திருந்தனர். எல்லோரும் அவரவர் ரதத்தில் காத்திருந்தனர். மஹாரதர்களும் அவர்களுடன் கலந்து கொண்டனர். எல்லோரும் பூரண ஆயுதங்களையும் தரித்துக் கொண்டு தயாராகி இருந்தனர். சத்ராஜித் அவர்களிடம் கிருஷ்ணன் ச்யமந்தக மணியைத் திருடிச் சென்றதை மீண்டும் ஒரு முறை விவரித்தான். பின்னர் தன் ரதத்தை நோக்கிச் சென்றான். அப்போது பங்ககரா தன் தந்தைக்கு முன்னே வந்து நின்று கொண்டவன் அவர் கால்களில் விழுந்து வணங்கினான். பின்னர் தன் கைகளைக் கூப்பிய வண்ணம் பேச ஆரம்பித்தான்; “தந்தையே! உக்ரசேன மஹாராஜாவைப்பார்க்கச் செல்கையில் இப்படிப் பூரண ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு போர்க்கோலத்தில் ரதங்களோடு சென்று பார்க்க வேண்டுமா? இது இப்போது அவசியமா?” என்று மிகவும் விநயத்துடன் விண்ணப்பமாக வெளியிட்டான்.

ஆனால் சத்ராஜித் தன் மகனை முறைத்துப் பார்த்தான். “வாசுதேவக் கிருஷ்ணனுக்கு ச்யமந்தகத்தின் புனிதம் குறித்துத் தெரியவில்லை. அவன் அதை அவமதித்து விட்டான். எனக்கு ச்யமந்தகம் சூரிய பகவானால் நேரடியாக அளிக்கப்பட்டது. அதை அவன் திருடிச் சென்று விட்டான். அந்தக் கிருஷ்ணனை நான் என் கைகளால் கழுத்தை நெரித்துக் கொல்லப் போகிறேன். அல்லது அவன் என் ச்யமந்தகத்தை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். “ என்று தீர்மானமாகக் கூறினான்.

“தந்தையே, கொஞ்சம் யோசியுங்கள்! நிதானமாக முடிவு எடுங்கள். நான் மிகவும் உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இது மாபெரும் சிக்கலில் கொண்டு விட்டு விடும். நமக்குப் பெரிய பின் விளைவுகளை உண்டாக்கும். கிருஷ்ணன் மிகவும் அதிகாரம் படைத்தவன்; யாதவர்களின் அவன் செல்வாக்கு அளப்பரியது.” என்றான் பங்ககரா.

“முட்டாள், கோழை!” என்று சீறிய சத்ராஜித், ஒரு பெருமூச்சுடன் மேலும் தொடர்ந்தான். “இதோ பார்! நான் சொல்வதைக் கேள்! யாதவர்கள் எவரானாலும் அவர்களை நான் கொன்று விடுவேன். என் வழிக்குக் குறுக்கே எவர் வந்தாலும் அவர் என்னால் கொல்லப்படுவார்கள். இந்த துவாரகையையே நான் அழித்து விடுகிறேன். ஹூம்! நீ என் மகனா? ஒரு பெண்ணைப் போல் பயப்படுகிறாயே? நான் என் மகன் ஒரு பெண்ணைப் போல் அழுது புலம்புவான் என்று எதிர்பார்க்கவே இல்லை. உன் ரதத்துக்குப் போ! என்னைப் பின் தொடர்ந்து வா!” என்று உக்கிரமாக ஆணையிட்டான். சத்ராஜித் தன் ரதத்தை வேகமாகச் செலுத்தினான். மற்றவர்கள் தங்கள் தங்கள் ரதங்களில் அவனைப் பின் தொடர்ந்தனர். அவர்களைத் தொடர்ந்து காலாட்படையினர் காவலுக்கு வந்தனர். செல்லும்போதே அவர்கள் ஒரு மாபெரும் பிரளயம் யாதவர்களைத் தாக்கி விட்டது என்று கூவினார்கள். ச்யமந்தகம் கிருஷ்ணனால் திருடப்பட்டு விட்டது என்றும் கூறிக் கொண்டு சென்றனர்.

இந்த ஊர்வலம் நகரத்தினுள் சென்றது. உக்ரசேனரின் மாளிகைக்கு எதிரே நிறுத்தப்பட்டது. ஏனெனில் அங்கே ஏற்கெனவே ஒரு மாபெரும் கூட்டம் கூடி இருந்தது. சத்ராஜித் உக்ரசேனரின் மாளிகையை அடைந்தான். உக்ரசேனர் அப்போது ஓய்வில் இருந்தார். அவருடைய உடல் நலம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. ஆகவே ராஜ்யசபையின் வாதவிவாதங்கள் இல்லாத நாட்களில் தன் காலைக்கடன்களையும் நித்திய வழிபாடுகளையும் விரைவில் முடித்துக் கொண்டு தன் அறையில் படுத்து ஓய்வு எடுப்பார் உக்ரசேனர். சத்ராஜித் வற்புறுத்தியதன் மூலம் பிருஹத்பாலா, (உத்தவனின் சகோதரன்) உக்ரசேனரிடம் சென்று சத்ராஜித்தின் வரவைத் தெரியப்படுத்தினான். பிருஹத்பாலா தன் பாட்டனார் உக்ரசேனருடனே அவருக்கு உதவியாக இருந்து வந்தான். உக்ரசேனர் சத்ராஜித்தை அறைக்கு வரும்படி அழைத்தார். கூடவே அதிரதிகளும் வந்தனர். ஆனால் உக்ரசேனருக்கு வரவேற்பு அறைக்குச் சென்று அவர்களோடு சம்பாஷிக்கும் மனோநிலை இல்லை. ஆகவே இருந்த இடத்திலேயே வரவேற்றார்.

சத்ராஜித்துடன் பங்ககராவும் ஷததன்வாவும் சேர்ந்தே உக்ரசேனரைச் சந்திக்கச் சென்றனர். அவர்கள் விற்கள், அம்புகள், வாள் போன்றவற்றால் தங்களைப் பூரண ஆயுதபாணியாக ஆக்கிக் கொண்டிருந்தனர். ஓய்வில் இருக்கும் மன்னனைச் சந்திக்கச் செல்லும் நடைமுறை இப்படி இல்லை! ஆனாலும் அவர்கள் அப்படியே சென்றனர். மன்னனைச் சந்திக்கச் செல்கையில் ஒரே ஒரு வாள் மட்டும் தான் இருக்கலாம். அதுவும் மன்னனைப் பாதுகாக்கவேண்டி இருந்தால் பயன்படுத்துவதற்காக மட்டுமே. ஆனால் இங்கே! இவர்கள் பூரண ஆயுதபாணிகளாகச் சென்றனர்.

1 comment:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.