Tuesday, February 2, 2016

பாமா கிடைத்துவிட்டாள்!

இதற்குள்ளாகக் கிருஷ்ணன் ஊரியின் குரலோசைகளுக்கு உரிய பொருளைப் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டான். ஊரியின் சந்தோஷம் ஒரு “பிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்னும் கத்தலில் அடங்கிவிடும். ஊரிக்கு ஏதேனும் பிடிக்கவில்லை எனில் அது அங்கிருந்து வெளியேறிவிடும். தாங்க முடியாத மகிழ்ச்சி எனில் அவன் உடலின் மேல் உரசித் தன் மகிழ்வை வெளிப்படுத்தும். கோபம் எனில் மிகவும் ஆக்ரோஷமாக ஜொலிக்கும் கண்களோடு, ஒரு “மியாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்” என்னும் சப்தம். தன்னுடைய முடிவான முடிவைப் பிடிவாதமாக நிலை நிறுத்தும் சுபாவம். சோகம் எனில் பலவீனமானதொரு குரலில் கத்துவது, தனக்குப் பிடிக்காத அல்லது தன்னைப் பிடிக்காத மனிதர்கள் எனில் வாலை நேரே உயரத் தூக்கியவண்ணம் கம்பீரமாக அங்கிருந்து செல்வது! என ஒவ்வொரு உணர்வுகளையும் தனித்தனியே வெளிக்காட்டிவிடும் ஊரி. அதோடு இல்லாமல் மனிதர்கள் பேசுவதையும் புரிந்து கொள்ளும் சக்தியைப் பெற்றிருந்ததோடு அதற்குத் தக்க பதிலைத் தன் முறையில் வெளிக்காட்டும் திறனையும் பெற்றிருந்தது.

கிருஷ்ணனுக்குச் சொல்லவே வேண்டாம். கோகுலத்திலும், விருந்தாவனத்திலும் அவன் சிறுவனாயிருந்த காலங்களிலே பசுக்கள், காளைகள், கன்றுகள் போன்றவற்றின் உணர்வுகளையும் அவற்றின் குரலோசையின் மூலம் அவை தெரிவிக்கும் விஷயங்களைப் புரிந்து கொள்ளும் திறனையும் பெற்றிருந்தான். அதன் பின்னர் மத்ரா வந்த பின்னரோ குதிரைகளோடு அவன் பழகிப் பழகி அவற்றின் உணர்வுகளையும் அவை கனைப்பின் மூலம் சொல்வதையும் தெரிந்து கொள்ளும் திறனைப் பெற்றிருந்த கிருஷ்ணன் இதன் மூலம் பலரின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டிருந்தான். இப்போது இங்கே இந்தப் பூனை! கிருஷ்ணனுக்குக் கொஞ்சம் ஆச்சரியம் தான். அனைவராலும் துஷ்டாத்மா என வெறுப்புடன் பார்க்கப்படும் பூனை இப்படி மனிதர்களோடு சம்பாஷிக்கும் ஆற்றலை எங்கிருந்து பெற்றது?  ஏதோ பேசத் தெரிந்தாற்போல் அது கூறுவதும் அது தன்னால் புரிந்து கொள்ளப்பட்டதும் கிருஷ்ணனுக்கு இன்னமும் நம்பக் கூட முடியவில்லை. ஆனால் அவனுக்குத் தெரியாத ஒன்றும் உண்டல்லவா? ஊரியின் எஜமானியான சத்யபாமா ஊரி சின்னஞ்சிறு குட்டியாக இருந்த போதிலிருந்தே அதை எடுத்து வளர்த்ததோடு அல்லாமல் அதனோடு பேசிப் பேசி அதை எல்லாம் புரிந்து கொள்ளும் ஒரு ஜீவனாக மாற்றி இருந்தாள் என்பதைக் கிருஷ்ணன் அறியமாட்டானே!  ஆனால் இப்போது ஊரி சொல்வதைக் கிருஷ்ணன் நன்கு புரிந்து கொண்டான். ஊரி அவனை ஏதோ ஒரு வேலைக்கு அழைக்கிறது! ஏதோ செய்யச் சொல்கிறது! அதன் போக்கில் சென்று தான் பார்ப்போமே! கிருஷ்ணன் ஊரி அழைத்த பக்கம் நோக்கி நடந்தான். அது அங்கே அடர்த்தியாக இருந்த புதர்களுக்கு அப்பால் காணப்பட்ட ஓர் திறந்த வெளியை நோக்கிச் சென்றது. சற்றுத் தூரம் சென்ற அது பின்னர் திரும்பிப் பார்த்துக் கிருஷ்ணன் வரவுக்குக் காத்து நின்றது.

ஆனால் கிருஷ்ணனோ அது தன் போக்கில் செல்லட்டும், தான் தன்னுடைய வழியைப் பார்த்துக் கொண்டு செல்லலாம் என நினைத்தான். அந்தப் பிடிவாதமான பூனை இதற்கு இடம் கொடுக்கவே இல்லை. கிருஷ்ணன் இப்போது வந்த வேலையை விட்டுப் பூனை அழைக்கும் வேறு ஏதோ ஒரு வேலையைத் தான் கவனித்தாக வேண்டும். வேறு வழியே இல்லை! வேறு வழியில்லாமல் கிருஷ்ணனும் பூனையின் மனதை மாற்றும் வேலையை விட்டு விட்டான். பூனையின் பின்னேயே சென்றான். பூனைக்குத் தான் என்ன செய்கிறோம் என்பது தெரிந்திருக்கிறது என்பதையும் அதை அது முக்கியமான வேலையாகக் கருதுவதையும் கிருஷ்ணன் உணர்ந்து கொண்டான். அது அந்தத் திறந்தவெளியில் சற்றுத் தூரம் சென்று மறுபடியும் அடர்ந்த புதர்களைத் தாண்டி அந்தப் பக்கம் போய்க் கிருஷ்ணன் வரவுக்கு மீண்டும் காத்திருந்தது. பூனை காட்டிய வழியில் சென்ற கிருஷ்ணன் வழியில் சின்னச் சின்னத் துண்டுகளாக வண்ணத் துணிகளின் துண்டுகள் கிடப்பதைப் பார்த்தான். அந்த வழியாகச் சென்ற ஏதோ ஒரு பெண்ணின் ஆடையிலிருந்து கிழிக்கப்பட்டோ அல்லது கிழிந்தோ அது அங்கே கிடக்க வேண்டும். ம்ம்ம்ம் அப்படி எனில் சத்யபாமா இந்த வழியாகத் தான் சென்றிருக்கிறாளோ? கிருஷ்ணனுக்கு அப்படித் தான் இருக்க வேண்டும் எனத் தோன்றியது.

தன் அரிவாளால் அங்கிருந்த புதர்களை வெட்டித் தள்ளி முன்னேறிய கிருஷ்ணன் மெல்ல மெல்ல அந்தப் புதர்க்காட்டின் மறுபக்கத்துக்கு வந்துவிட்டான். அங்கிருந்த செங்குத்தான மலைப்பாறை ஒன்றின் மறுபக்கத்து முனைக்குக் கிருஷ்ணன் வந்து விட்டான். அந்த முனையில் வந்து நின்று கொண்டிருந்த ஊரி இப்போது மிகப் பரிதாபமாகக் கத்தியது. அதன் குரலில் கிருஷ்ணனை அது அங்கே அழைப்பது புரியவரக் கிருஷ்ணனும் வேகமாக ஊரியின் அருகே சென்றான். அந்த முனைக்குச் சில அடிகள் கீழே காணப்பட்ட ஒரு பள்ளத்தில் ஓர் உருவம் கிடந்தது. கிருஷ்ணன் மனதில் சுருக்கெனத் தைக்கக் கூர்ந்து பார்த்தான். ஆஹா! அது சத்யபாமாவே தான்! கிருஷ்ணன் இதயம் ஒரு கணம் துடிக்க மறந்தது! சத்ராஜித்தின் மகள் இங்கேயா கிடக்கிறாள்? அவளுக்கு என்ன ஆயிற்று? உயிருடன் இருக்கிறாளா இல்லையா? இப்போது கீழே இறங்கிப் பார்த்தால் தான் உண்மை நிலவரம் புரியும். கிருஷ்ணன் மெல்ல மெல்லக் கீழே இறங்க வழியை ஏற்படுத்தினான். பின்னர் வெகு கவனமாகக் கீழே இறங்கினான். சத்யபாமாவின் உடல் கிடந்த இடம் நோக்கிச் சென்றான். அந்த உடலைப் புரட்டி ஆராய்ந்தான்.

இல்லை; சாகவில்லை. சத்யபாமா மயக்கத்தில் கிடக்கிறாள். ஆழ்ந்த மயக்கத்தில் இருக்கிறாள். அவள் உடலில் அங்குமிங்கும் கிழிந்த துணிகளே ஆடையாகத் தாறுமாறாகத் தொங்கியது. அவள் உடலெங்கும் காயங்கள் காணப்பட்டன. முட்களால் அவள் உடல் மட்டுமின்றி உடையும் தாறுமாறாகக் கிழிக்கப்பட்டிருந்தது. அவள் தலையிலிருந்து ஏற்பட்டிருந்த ஒரு காயத்தில் இருந்து வழிந்து வந்த ரத்தம் அவள் முகத்தை முழுவதும் ரத்தமயமாக ஆக்கி இருந்ததோடு அது இப்போது காய்ந்து போய் விகாரமான தோற்றம் அளித்துக் கொண்டிருந்தது. கிருஷ்ணன் அவளை நோக்கிச் சென்றவன் தான் நினைத்தது போல் அவள் இறக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்டான். அவள் மெதுவாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். அந்தக் குன்றின் முனையிலிருந்து அவள் விழுந்திருக்க வேண்டும். தவறி விழுந்தாளா? வேண்டுமென்றே விழுந்தாளா என்பது தெரியவில்லை! ஆனால் அப்படி விழும்போது கீழுள்ள பாறையில் அவள் தலை மோதி அடிபட்டிருக்க வேண்டும். அதனால் அவள் நினைவிழந்திருக்கலாம். தன்னுடனேயே வந்த ஊரியைக் கிருஷ்ணன் அதன் எஜமானியின் பக்கம் நிறுத்தி வைத்தான். ஊரியின் குட்டி அப்போது பால் குடிக்க வேண்டி தீனமான குரலில் கத்தவும் தான் அணைத்திருந்த குட்டியை அதன் தாயிடம் விட்டு விட்டுக் கிருஷ்ணன் தன் தலையில் கட்டி இருந்த உருமாலில் இருந்து ஒரு பக்கமாகத் துணியைக் கிழித்து எடுத்தான்.

பாமாவின் தலையில் அந்தக் காயத்தை ஓரளவு துடைத்துச் சுத்தம் செய்து ரத்தப் போக்கை நிறுத்த அந்தத் துணியை மேலும் கிழித்துக் கட்டினான். மீதம் இருந்த துணியை அப்படியே பாமாவின் இடுப்பில் சுற்றிவிட்டான். அவள் உடலை மூடி இருந்த கிழிந்த துணிகளை முடிச்சுக்களைப் போட்டுச் சரி செய்து அவள் உடலையும் மூடிய கிருஷ்ணன் மனதில் அவள் எப்படிப்பட்ட காரியத்தில் இறங்கித் தன்னை எம்மாதிரியான நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறாள் என்பது புரிய வர மனம் வேதனைப் பட்டது. கடவுளே, கடவுளே, நான் என்ன செய்வேன் என மனதில் நினைத்துக் கொண்டான் கிருஷ்ணன். மேலும் அவள் முகத்தையும், அவள் கை விரல்களில் காணப்பட்ட உடைந்த நகங்களையும், எப்போதும் திருத்தமக இருக்கும் அவள் தலைக்கேசம் அங்குமிங்கும் அவிழ்ந்து தொங்கி முகத்தின் ரத்தத்தில் ஊறிப் போயிருப்பதையும் பார்த்த கிருஷ்ணனுக்கு மனம் இன்னமும் துக்கத்தில் ஆழ்ந்தது. அவன் உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து கருணைப் பிரவாகம் எடுத்தது. ஆஹா! இவள் எப்படிப் பட்ட பெண்!

முழுவதும் ஆடம்பர வாழ்க்கையிலும், பணம், பகட்டு, நகை, ஆடம்பரம், உல்லாசம் என வாழ்ந்து வந்த இந்தப் பெண் இன்று எத்தகையதொரு கடினமான வேலையில் ஈடுபட்டிருக்கிறாள்? அதுவும் தனக்காக! தன்னுடைய மனதை வெல்வதற்காக! தன் இதயத்தில் இடம்பிடிப்பதற்காக!  ஏற்கெனவே துவாரகையில் பெரும் பெயரும் புகழும் பெற்றிருக்கும் சாத்யகனின் மகனுக்காகப் பேசப்பட்ட இந்தப் பெண் அவனால் நிராகரிக்கப்பட்டவள்! நிராகரிக்கப்பட்ட இவள் அந்த சாத்யகனின் மகனான சாத்யகியோடு ஓடி வந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறாள். பேசப்படுகிறாள்! இது எத்தகையதொரு களங்கம் அவளுக்கு! இத்தனையும் எதற்காக? கிருஷ்ணன் தன் சபதத்தில் வெற்றி அடைவதற்காக! ச்யமந்தகம் அவனால் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதற்காக! கிருஷ்ணனை வேண்டுமானால் அவள் காப்பாற்றி இருக்கலாம்! ஆனால் இதன் மூலம் அவள் சபிக்கப்பட்டவளாகி விடுகிறாளே! தீராக்களங்கம் ஏற்பட்டு விட்டதே! இத்தனைக்கும் பின்னர் அவளை வேறு எந்த யாதவனும் திருமணம் செய்து கொள்ள முன்வருவானா என்ன? எவரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்! அவ்வளவு ஏன்? சத்யபாமாவின் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருந்த அவள் தந்தை சத்ராஜித் கூட அவளை மீண்டும் ஏற்றுக் கொள்ள மாட்டானே! வெறுத்து ஒதுக்குவானே!

பாமாவை ஓரளவுக்குத் தயார் செய்த கிருஷ்ணன் அவளைத் தூக்கித் தன் தோள்கள் மீது போட்டுக் கொண்டான். மீண்டும் அந்தக் குன்றின் மேல் வந்த வழியே ஏறினான். மேலே வந்ததும் அவளைக் கீழே கிடத்தினான். பின்னர் அவளைத் தூக்கிச் செல்ல வசதியாக அந்தப் புதர்க்காட்டை மேலும் வெட்டித் தேவையான இடைவெளியை ஏற்படுத்தினான். பாமாவையும் தூக்கிக் கொண்டு ஊற்றுக்குளம் இருந்த திக்கை நோக்கிச் சென்றான். ஊரியும் தன் குட்டியை வாயில் கவ்விக் கொண்டு கிருஷ்ணனைப் பின் தொடர்ந்தது.

1 comment:

ஸ்ரீராம். said...

பூனையின் பாஷை அபாரம்.